Saturday, May 21, 2005

துத்தம் - 4

சந்தனமேடை எம் இதயத்திலே... - 1

இரண்டு கிழமைகளுக்கு முன்னோர் இரவு, ஒரு கலிப்ஸோ இசைவட்டினைக் கேட்டுக்கொண்டிருந்தேன்; மீண்டுமொரு முறை "அப்பனில்லாவிட்டால் தெரியும் அப்பன் அருமை; உப்பில்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை" என்பது போல ஈழத்துப்பாடல்களின் தவனம் பிடரியிலே அடித்தது; அந்தக்காலத்திலே (1983 க்கு முன்னால்), இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலே ஆசியசேவையை விட்டால், தமிழ்ச்சேவைகள் இரண்டு; சேவை ஒன்று, கர்நாடக சங்கீதம், சமயநிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்ச் போன்றவற்றினை நிரப்பிக்கொள்ளூம். சேவை இரண்டான வர்த்தகசேவையை பொதுவாகத் தமிழ்த்திரைப்படப்பாடல்களே ஏதோ விதத்திலே அடைத்துக்கொண்டிருக்கும்; சொல்லப்போனால், வார நாட்களிலே மத்தியானம், அரை மணிநேரம், ஹிந்திப்பாடல்கள் வேறு வர்த்தகசேவையிலுண்டு. இலங்கைப்பாடல்களென துள்ளிசைப்பாடல்கள் (இவை பைலாப்பாடல்களென்றும் பொப்பிசைப்பாடல்களென்றும் சுட்டப்பட்டன; Pop உம் Baila உம் வேவ்வேறு வகையென உணர்ந்தறியும் தன்மை எங்களிடம் இருக்கவில்லை) கிழமைக்கு ஓரிரு தடவைகள் கால்மணிநேரம் ஒலிபரப்பாகும். ஆனால், இவற்றினை ஒரு நாளும் நாங்கள் ஈழத்துப்பாடல்கள் என்ற உணர்வோடு பார்த்ததில்லை; இன்றைய காலகட்டத்தில், ஈழத்துப்பாடல்களென்றால், ஈழவிடுதலைப்பாடல்கள் என்ற அர்த்தத்திலே நோக்கப்படலாமென்றாலுங்கூட, ஈழத்துப்பாடல்களென்று எந்த முப்பத்தைந்து வயது தாண்டிய இலங்கையரையும் கேட்டாலும், 83 இற்கு முற்பட்ட காலகட்டத்திலே, காலை செய்தியறிக்கைக்குப் பின்னாலும், பொங்கும் பூம்புனலுக்கு முன்னாலும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வர்த்தகசேவையிலே ஒலிபரப்பான, இலங்கையிலே இசையமைக்கப்பட்டு, இலங்கையராலே பாடப்பட்ட துள்ளிசையல்லாத தமிழ்மெல்லிசைப்பாடல்கள் என்றுதான் சொல்லக்கூடும். இரண்டு கிழமைகளுக்கு முன்னான இரவிலே இல்லாத என் அப்பனும் உப்புமானவை இவ்வகைப்பாடல்களே.

முன் & மத்திய எழுபதுகளின் ஸ்ரீமாவின் அரசு, அன்றைய சீன அரசினை அடியொற்றி நடக்க முயன்ற அரசு; சுய உற்பத்தி முன்னிலைப்படுத்தப்பட்டு, இறக்குமதி கிட்டத்தட்ட இல்லாத நிலை என்றே சொல்லலாம்; பிள்ளைக்குப் பால்மா தொடக்கம், பார்ப்பதற்குப் படம்வரைக்கும் உள்ளூரிலேயே பண்ணிக்கொள் என்பதான சூழல். தமிழ்நாட்டுப்பத்திரிகை தொடக்கம் படம் வரைக்கும் இந்த இறக்குமதித்தடை இருந்தது. (இந்தப்புத்தகத்தடையைத்தான் ஜெயமோகன் சில மாதங்களுக்கு முன்னால், வ. அ. இராசரத்தினம் பற்றிய பதிவுகள் தளக்குறிப்பினை ஒட்டி எழுதிய உயிர்மைக்குறிப்பிலே, ஒரு திரிபு திரித்து, "தமிழ்நாட்டு இலக்கியங்களை வேண்டுமென்றே தடை செய்தார்கள்" என்பதான தொனி விழ எழுதினார். அப்படியாக இந்தியாவினைக் குறிவைத்தேதும் தடை செய்யவில்லை என்று பதிவுகள் விவாதக்களத்திலே, எழுதியதை அவர் ஏற்றுக்கொள்ளாமல், "நான் உன்னோடு பேசவிரும்பவில்லை" என்று முகத்திலே அடித்துச்சொல்லிவிட்டுப்போனார். "இந்தியாவிலே அச்சடிக்கப்படும் வேற்றுநாட்டவரின் புத்தகங்கள் அல்லாத, இலங்கைத்தமிழ்ப்புத்தகங்களையோ அல்லது வேறு நாட்டிலே அச்சடிக்கப்பட்ட எந்த மொழிப்புத்தகத்தினையோ இன்றைக்கும் இறக்குமதி செய்ய அரசு சம்மதிக்குமா?" என்று அவரிடம் கேட்கவேண்டுமென்பதென் அவா.). இப்படியான நேரத்திலே, தன்னிறைவு நோக்கி, தமிழ்நூல்கள், தமிழ்ச்சஞ்சிகைகள், தமிழ்ப்பாடல்கள், தமிழ்த்திரைப்படங்கள் ஆகியன வெளிவர முயற்சித்தன.

பதிப்புலகில், அம்புலிமாமாவினை ஒற்றாத குறையாக நட்சத்திரமாமா சிறுவர்க்கு வெளிவந்தது; வீரகேசரிப்பதிப்பகம் மண்ணின் மணம் வீசும் நூல்களை வெளியிட்டது. அருள்சுப்பிரமணியம் (பின்னாலே, ஆனந்தவிகடன் மர்மநாவல் போட்டியிலே வென்று போட்டிவிதிகளை மீறியதற்காக, விலத்தப்பட்ட "அக்கரைகள் பச்சையில்லை"), அருளர் என்ற அருட்பிரகாசம் (M.I.A. வின் தந்தை; விடுதலைப்புலிகளை முன்னிறுத்தாத, விடுதலைப்புரட்சியாளர்களை முன்னிறுத்த விரும்பிய ஈழவிடுதலையின் அவசியத்தினைச் சுட்டும் "லங்காராணி"), ஞானசேகரன் ("குருதிமலை"),நந்தி, ஜோன் ராஜன் ("போடியார் மாப்பிள்ளை"), செங்கை ஆழியான் ("வாடைக்காற்று", "காட்டாறு"), பாலமனோகரன் ("நிலக்கிளி", "குமாரபுரம்"), தெளிவத்தை ஜோஸப் ஆகியோர் உட்பட பலரின் நூல்கள் வெளிவந்தன. மறுபுறம் வீரகேசரியின் பதிப்பாளர், தனது பரபரப்புப்பத்திரிகையான மித்திரனின் சார்பான 'ஜனமித்திரன்' பதிப்பகமூடாக, "பட்லி" (அதே சம்பல் பள்ளத்தாக்குக்கொள்ளைக்காரி - பாராளுமன்ற உறுப்பினர்-சூடு-சா அவரேதான்), "ஜமேலா", கோவூரின் "கோர இரவுகள்" போன்ற நூல்களையும் வெளியிட்டது; 'சிரித்திரன்' சஞ்சிகை நகைச்சுவைக்கென்றே MAD சஞ்சிகை வகையிலே வெளிவந்தாலுங்கூட, நல்ல ஆழமான படைப்புகளைத் தந்திருக்கின்றது. வாழ்க்கைநடைமுறையினைப் பகிடியாக யாழ்ப்பாணச்சுடலைப்பேய்ச்சமூகத்தினை உருவாக்கிச் செங்கை ஆழியான் எழுதிய "கொத்தியின் காதல்" அருமையான எள்ளற்படைப்பு. சின்னக்குட்டி, மிஸஸ். டாமோடிரன், மெயில்வாகனத்தார், ஸ்ரீமான் செல்லக்கிளி போன்ற அருமையான கேலிச்சித்திரப்பாத்திரங்களை சிவஞானசுந்தரம் தந்தார். இடதுசாரி எழுத்தாளர்கள், செ. யோகநாதன், செ, கணேசலிங்கன் ஆகியோரும் எழுதினார்கள். (கணேசலிங்கனின் குமரன் பதிப்பகம் இவற்றினை வெளியிட்டதா என்று ஞாபகமில்லை). தவிர, டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை', அ. யேசுராசா, மு. புஸ்பராஜன் ஆகியோரின் ' அலை' போன்ற இதழ்களும் வந்துகொண்டிருந்தன.

இந்தக்காலத்திலே வந்த இலங்கைத்திரைப்படங்கள் வெவ்வேறு தரங்களிலேயிருந்தன. வானொலி நாடகங்களாக வந்த கோமாளிகள், ஏமாளிகள் போன்ற "carry on boys" வகையான நகைச்சு-வை-ப்படங்களைவிட்டால், மலையகத் தொழிற்சங்க அரசியல்வாதி கணேசன் (இவருடைய மகன் தற்போதைய கொழும்பு அரசியல்வாதி மனோ கணேசன்), எம்ஜிஆர் படங்களினை அப்படியே ஆடல், பாடல், கதை, காட்சியமைப்பு ஆகியவற்றிலே ஒற்றியெடுத்து, "நான் உங்கள் தோழன்", "நாடு போற்ற வாழ்க" ஆகிய படங்களை எடுத்தார். "யார் அவள்" போன்ற படங்கள் ஒரு புறம். கொஞ்சம் மாற்றத்தினைக் கொண்டு வர, பொன்மணி, தென்றலும் புயலும், வாடைக்காற்று ஆகிய படங்கள் வந்தன. பொன்மணி, சிங்கள இயக்குநர், தர்மசேன பத்திராஜாவின் இயத்திலே வந்தது; பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி நடித்துமிருந்தார். தென்றலும் புயலும் முழுக்க முழுக்க, திருகோணமலையிலேயே வேதநாயகம் என்பவராலே, வங்கியிலே வேலைசெய்த சிவபாதவிருதயர், அமரசிங்கம் நடிக்கத் தயாரிக்கப்பட்டது. வாடைக்காற்று, நெடுந்தீவு மீனவர்களின், அங்கு காற்றுக்காலத்துக்கேற்ப வந்துபோகும் மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட, செங்கை ஆழியானின் கதையை முன்வைத்து,ஏ. ஈ. மனோகரன், சந்திரகலா முதன்மைப்பாத்திரங்களிலும் இந்திரகுமார், தற்போது, இலண்டனிலே கணவர் பாலேந்திராவோடு அவைக்காற்றுக்கழகம் நாடக அமைப்பினை நடத்தும் ஆனந்தராணி, இப்போது கனடாவிலே நாடகங்கள்போடும் கே. எஸ். பாலச்சந்திரன், ஜவஹர் ஆகியோரைத் துணைப்பாத்திரங்களிலே கொண்டு வெளிவந்த படம். இலங்கைத்தமிழ்த்திரைப்படங்கள் குறித்து, தம்பிஐயா தேவதாஸின் நூல் ஒன்று வெளிவந்திருப்பதாக அறிகிறேன். இணையத்திலும் தமிழ்ப்லிம் மன்றிலே ஓவியர் மூனா இலங்கைத்தமிழ்த்திரைப்படங்கள் குறித்து நல்லதொரு வரலாற்றுப்பதிவொன்றைத் தந்திருக்கின்றார்.

05 மே, 21 சனி. 07:06 கிநிநே.

20 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல பதிவு. நிறைய விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். ஒவ்வொரு வரியில் சொல்லிப்போனதும், தனித் தனிப் பதிவுகளாக எழுதினால், எங்களுக்கும் விஷயங்கள் தெரியவரும் இல்லையா?

====

இன்னொரு விஷயம்.

'அருமை'/'எருமை' பட்டையை சேருங்கள். மற்றும்படி தளம் நன்றாக இருக்கிறது.

-மதி

ஈழநாதன்(Eelanathan) said...

மல்லிகை வெளியிட்ட சிரித்திரன் சுந்தர் நூலை எழுதவேண்டுமென்று நினைத்து குறையிலை நிற்குது.சிரித்திரனை வாசிக்க ஆரம்பித்த நாள் முதல் வாசித்திருக்கிறேன்.சவாரித்தம்பரை விட்டுவிட்டீர்கள்.
கதம்பமாக எழுதாமல் தனித்தனியாக எழுதினீங்களெண்டால் பெறுமதி மிக்க கட்டுரைகள்.இதுகூட பரவாயில்லை பஞ்சாமிர்தம் மாதிரி.

தமிழ்பிலிம்கூட நன்றாக ஆரம்பித்து நிறுத்திவிட்டார்கள் தொடர்ந்தும் செய்யும்படி நீங்கள் மூனா எல்லொரும்தான் கேட்கவேணும்

-/பெயரிலி. said...

மதி & ஈழநாதன், தனித்தனியே எழுதாமல் வைத்திருப்பதற்கு மூன்று காரணங்கள்;-)
1. ஒழுங்காக எழுத நேரம்
2. தகவல்கள் வழுவின்றித் தரப்படவேண்டுமேயென்ற பயம் (இந்தப்பதிவும் அடுத்ததும் நினைவிலேயிருந்து மட்டும் எழுதப்படுகின்றது)
3. என்றைக்காவது ஒருநாள் நினைவுப்படிவங்களைப் புனைகதைக்குள்ளே சொருகலாமேயென்ற நப்பாசை :-(

அருமை/சிறுமை பட்டையை மீண்டும் சேர்ப்பது பற்றி இன்னும் யோசனையிலே இருக்கிறேன். இயன்றவரை குவியத்துக்கான பின்விளைவுக்கருத்தாக மட்டும் இருக்குமாறும் சற்றே வேறானதுமான ஒரு மாற்றுப்பட்டையை ஆக்கலாமா என்பது குறித்த எண்ணமுண்டு. அது அமைக்கச் சாத்தியம் வராதபோது, அருமை/சிறுமை பட்டையைச் செருகப்போகிறேன்.

Jayaprakash Sampath said...

//தமிழ்ப்லிம் மன்றிலே ஓவியர் மூனா இலங்கைத்தமிழ்த்திரைப்படங்கள் குறித்து நல்லதொரு வரலாற்றுப்பதிவொன்றைத் தந்திருக்கின்றார்.//

அரிய தகவல்கள். சுட்டிக்கு மிக்க நன்றி.

Jayaprakash Sampath said...

1951 ஆம் வருடம் துவங்கி தற்போதைய காலகட்டம் வரையிலும், மொத்தமாகவே இத்தனைக் குறைவாகத்தான், தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டனவா? ஏன்? இந்தியத் தமிழ் திரைப்படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததோ? சிவாஜிகணேசனுக்கு மிக அதிகமான இரசிகர்கள் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சிலோன் மனோகரைத் தெரொயும், ஆனால், வி.சி.குகநாதனும், இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவரா? அட... மனோகரனைப் போலவே, சிலோன் விஜயேந்திரனும் ( சமீபத்தில் துர்மரணம் அடைந்த) , இந்தியத்தமிழ் திரைப்படங்களிலே துண்டு துக்கடா வேடங்களில் நடித்தார். அவரும், இலங்கைத் தமிழ் சினிமா நடிகர்தானா? சிங்களத் திரைப்படங்கள் எப்படி? தொடர்ந்து எடுக்கப்படுகின்றனவா? விசயகுமார ரணதுங்க கூட ஒரு பிரபல சிங்கள ஹீரோ என்று கேள்விப்பட்டிருக்கிறேனே? நிசமா?

முந்தைய பதிவில் சொல்ல விட்டுப் போனது, மற்ற சுட்டிகளையும் நோண்டிக் கொண்டிருக்கிறேன். அருமையான இணைப்புக்கள். நன்றி. என் பேரைச் சொல்லி ரெண்டு விரல்கடை, ஜாஸ்தி போட்டுக்கோங்கோ

ஈழநாதன்(Eelanathan) said...

பெயரிலி எப்படி எப்படி இந்தச் சம்பவங்களை அவ்வப்போது புனைகதைக்குள் சொருகும் எண்ணமிருக்கிறதா எப்படி சக்தியார் செய்ததுமாதிரி அங்கினைக்கை இங்கினைக்கை நடந்தவற்றை கொரில்லா ஆக்கினமாதிரியா? அல்லது.முத்தர் செய்ததுமாதிரி கேணல் கிட்டுவின் குரங்கு போல ஒரு கதையா?

-/பெயரிலி. said...

/சக்தியார் செய்ததுமாதிரி அங்கினைக்கை இங்கினைக்கை நடந்தவற்றை கொரில்லா ஆக்கினமாதிரியா? அல்லது.முத்தர் செய்ததுமாதிரி கேணல் கிட்டுவின் குரங்கு போல ஒரு கதையா?/
இது பற்றித்தான் "உறுத்தல் -2" என்று உறுத்தல் -1 எழுதியபோது, தீர்மானித்திருக்கிறேன்.;-)

-/பெயரிலி. said...

இளவாலை விஜயேந்திரன் இறந்தது குறித்து இப்போதுதான் அறிகிறேன். அவர் ஆரம்பத்திலே, இலங்கை-இந்தியக்கூட்டுத்தயாரிப்பாக, சிவாஜி, மாலினி பொன்சேகா நடித்து வந்த பைலட் ப்ரேம்நாத்திலே விமானத்தினைக் கடத்தப்போகிறேன் என்று ஆர்ப்பாடம் செய்கின்றவராக நடித்திருந்தார்.

ஆனால், அவரை அதற்கு முன்னால், பாடசாலையிலே தனியாள் நடிப்பிலே நவரசத்தினைத் தரும் ஒன்பது பாத்திரங்கள் நடித்துப் பார்த்திருக்கிறேன். ஆனால், கே. பாலசந்தர் & கமல்ஹாஸன் என்ற இரு புண்ணியாத்மாக்களும் தமிழ்நாட்டிலே இருக்கும் இலங்கை அகதிகளின் முதுகிலே இளிச்சவாயர்கள் பட்டமொட்டிய புன்னகைம்மன்னனிலே கமல்ஹாஸன் பெருந்தகையிடம் "குற்றங்களுக்கு" மன்னிப்புக் கேட்கும் இலங்கை அகதி எச்சிற்றுண்டுப் பாத்திரத்திலே பார்த்ததோடு இருந்த மரியாதை போய்விட்டது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியிலே மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார் என எங்கோ வாசித்திருந்தேன்.

வி. சி. குகநாதன் இலங்கையைச் சேர்ந்தவர்தான். வனமோகினி தவமணிதேவி தொடக்கம் ரோஜாவனம் ஆகாஷ் வரைக்கும் அங்குமிங்குமாக (மூன்றுமுடிச்சு மனச்சாட்சி (+வள்ளி) நடராஜன் உள்ளிட) இலங்கையைச் சேர்ந்த சிலர் தமிழ்ப்படவுலகோடு சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். (இந்தப்பட்டியல், இலங்கையோடு சம்பந்தப்பட்ட சந்திரபாபு, எஸ். எஸ். சந்திரன், நடிகை சுஜாதா , ராதிகா, நிரோஷா ஆகியோரையும் உள்ளடக்கலாம்)

விஜய குமாரணதுங்க சிங்களநாயகரே. ஆனால், சிங்களப்படங்கள் குறித்துக் கருத்தினைச் சொல்லுமளவுக்குத் தெரியாது. :-(

-/பெயரிலி. said...

ஈழத்தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி செல்வநாயத்தின் மகனான சுப்பிரமணியசுவாமியின் அருந்தோழர் சந்திரஹாஸனின் மகள் வானம் வசப்படும் நடிகை பூங்கோதை இன்னொரு இலங்கை நடிகை என்றும் சொல்லலாம். புதிதாக, இலங்கை பாதி-கர்நாடகா மீதி என்று பூஜா உமாசங்கர் பெயரும் அடிபடுகிறது.

வசந்தன்(Vasanthan) said...

//ஈழத்தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி செல்வநாயத்தின் மகனான சுப்பிரமணியசுவாமியின் அருந்தோழர் சந்திரஹாஸனின்//

:-))))

Jayaprakash Sampath said...

//ஈழத்தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி செல்வநாயத்தின் மகனான சுப்பிரமணியசுவாமியின் அருந்தோழர் சந்திரஹாஸனின் மகள் வானம் வசப்படும் நடிகை பூங்கோதை//

அந்தப் பெண், ஈழத்தந்தை செல்வாவின் பேத்தி என்று இங்கே பத்திரிக்கை செய்திகளில் படித்தேன். வழக்கம் போலவே குழப்பிவிட்டார்கள் போலிருக்கிறது.

-/பெயரிலி. said...

குழப்பியது நான் ;-)
"செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசனின் மகள்தான் பூங்கோதை. சந்திரஹாஸன்; சுப்பிரமணியசுவாமியின் உற்ற நண்பரும் அவ்வப்போது, தன் நண்பரைப்போலவே ரோ, சிஐஏ ஆளெனும் குற்றங்களைச் சுமப்பவருமாவார்" என்பதே நான் சொல்ல வந்தததின் சாரம் ;-)

இளங்கோ-டிசே said...

அவசரமாய் ஒரு குறிப்பு...
//இளவாலை விஜயேந்திரன் இறந்தது குறித்து இப்போதுதான் அறிகிறேன்//
பெயரிலி, இறந்துபோன, நடிகர் (சிலோன்) விஜயேந்திரனும் இளவாலையைச் சேர்ந்தவரா? எனெனில் இளவாலை விஜயேந்திரன் என்ற கவிஞரும் இருக்கின்றார் (நிறமற்றுப்போன கனவுகள்). கிட்டத்தட்ட ஒரே பெயராய் இரண்டுபேருக்கும் இருக்கின்றதே!!! சிலோன் விஜயேந்திரன், ஒரு தீவிபத்தொன்றில் தமிழகத்தில் இறந்தார் என்றுதான் நினைவு. சரியாயென்று யாரேனும் உறுதிப்படுத்தினால் நல்லது.

-/பெயரிலி. said...

டிஜே,
சுட்டியதற்கு நன்றி. தவறு என் பக்கமே. இளவாலை விஜயேந்திரன் என்று எழுதியதிலே ஏற்பட்ட தவற்றினைத் திருத்தி பிரகாசுக்கான என் பின்னூட்டத்தின் பின்னாக இன்னொரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதை பின்னால், தவறுதலாக இன்னொரு அழிக்கவேண்டியிருந்த பின்னூட்டத்துடன் முழுக்க அழித்து விட்டேன். :-(

ஈழநாதன்(Eelanathan) said...

ட்ரம்ஸ் கலைஞர் ஆனந்தன் சிவமணி இலங்கையர் என்று கேள்வி.பெயரிலிக்குத் தெரியுமா.அருண்பாண்டியன் என்று ஒருத்தர் இருக்கிறாரே அவரை விட்டிட்டீங்களே.

டிஜே எனக்கும் அந்தக் குழப்பம்தான்.இளவாலை விஜயேந்திரன் ஈழத்துக் கவிதைகனிகள் என்றொரு தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

Jayaprakash Sampath said...

இலங்கையில் இருந்து ஹேமதாசா என்று ஒரு இசையமைப்பாளர், ராமராஜன், சரண்யா நடித்த படம் ஒன்றுக்கு இசை அமைத்திருக்கிறார்.

-/பெயரிலி. said...

பிரகாஷ், ஹேமதாஸ பற்றி எனக்குத் தெரியவில்லை.

தம்பி ஐயா தேவதாஸின் இலங்கைத் திரையுலக முன்னோடிகள் நூல் குறித்த கே. எஸ். சிவகுமாரனின் குறிப்பு இங்கே. இலங்கையிலே 1951 இலிருந்து அதிகம் படம் வர முடியாத காரணத்திற்கும் தமிழ்ச்சஞ்சிகைகள் வரமுடியாத அதே காரணங்களைத்தான் சொல்லமுடியும். சிவாஜி-எம்ஜிஆர், விகடன் - குமுதம் ஆகியவற்றிலிருந்த ஈடுபாடு இலங்கை மக்களுக்கு அதிகமாக இருந்தது; மாற்றாக, இலங்கையிலே செயல் முடுக்க, பண முதலீடு இருக்கவில்லை. பின்னால், வெளிநாட்டுப்படைப்புகள் முடக்கப்பட்ட காலத்திலே, கொஞ்சம் துளிர்க்க முயற்சித்தது.

கறுப்பி said...

அய்யையோ இளவாலை விஜேந்திரன் அண்மையில்தான் கனடா வந்துவிட்டுப் போனார். நான் சந்தித்தேன். அவருடைய சகோதரர் கனடாவில் வசிக்கின்றார் அவரையும் நேற்றுச் சந்தித்தேன். இளவாலை விஜேந்திரன் நிச்சயமாக நலமாகத்தான் உள்ளார்.

முல்லை அமுதன் said...

சிலோன் விஜயேந்திரன் நம்மிடையே வாழ்ந்து மறைந்த கலைஞன்.அவர் காலமான தினம் தெரியுமாயின் தரமுடிந்தவர்கள் தந்தால் உதவியாக இருக்கும்.கட்டுரை எழுதுவதற்கு

Anonymous said...

I like get chilon vijayendran's last day for my article about him
http://kaatruveli-ithazh.blogspot.co.uk/