Showing posts with label கரைவு. Show all posts
Showing posts with label கரைவு. Show all posts

Saturday, July 28, 2007

கரைவு - 10




கல்யாணசுந்தரத்தின் தமிழ் மின்னுரைச்சுவடிகள் பக்கம்

@ உலூசன் பல்கலைக்கழகம் '96 (ஆரம்பம் 23 மே 1995)



முன்னைய பகுதி
அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - காப்பு (பகுதி 0)
==========

முஎன்னுரையும் இன்ன பிறவும் - அ

இந்தப்பகுதியிலே மாலனுக்கான பதிலிலே பேசப்படவேண்டிய கருக்களுக்கு முக்கியமற்றபோதுங்கூட, தம்மளவிலே முக்கியமான சில உதிரிக்கூற்றுகள்மீதான எனது விளக்கங்களைத் தரவிரும்புகின்றேன்.

கூற்று 1: இணையத்தமிழினைத் தொழில்நுட்பத்திலே முன்னேற்றாது இணையத்தமிழ் வரலாற்றினைப் பேசும்போது என்பது வெற்றுவிவாதங்களாகி அயர்ச்சியே மிஞ்சுகின்றது என்று எண்ணங்களின் குரல் கூறியிருப்பதன்மீது

கூற்று 2: தன்னதை ஒத்த கருத்தினைச் சொன்ன எத்தனையோ பேரிருக்க மாலன் தன்னை மட்டும் நான் கேள்விகளைக் கேட்டது காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே என்று கூறியிருப்பதன்மேல்

கூற்று 3: இணையபிதா, டாக்டர், பேராசிரியர் என்று பதங்கள் சொல்லப்பட்டது குறித்து எதற்காக நான் 'அதிகம் அலட்டிக்கொள்கின்றேன்' என்பது பற்றி

கூற்று 4: "சீன அரசின் சார்புநிலைப்பாட்டோடு திபெத்தின் சுதந்திரத்தேவையினைத் தாக்கியெழுதும் இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிக்கின்றார்" என்ற அர்த்தத்திலே நான் சந்திப்புக்குப் பதிலாகச் செல்வநாயகியின் பதிவிலே சுட்டிக்காட்டியது, மாலனுக்குத் தனிமனிதத்தாக்குதலும் எள்ளலுமாகிப்போனது பற்றி

கூற்று 5: தகுந்த ஆதாரங்கள் என்று முன்வைக்கும்போது, கருத்திலே கொள்ளப்படவேண்டிய குறைந்த பட்ச நம்பிக்கை & தராதரம் பற்றி

இவை தவிரவும் பேசப்படவேண்டிய வேறு உதிரிக்கருத்துகளிருக்கலாம். இத்தொடரை முடிக்கும்போது, அவை ஞாபகத்துக்கு வந்தால், மீண்டும் ஒரு பதிவாக்கி அதனையிடுவேன்.

மேற்கூறிய ஐந்திற்கான விளக்கங்களையும் ஒரேயடியாக இவ்விடுகையிலே விரித்துத் தருதலுக்கான சாத்தியமில்லையென்பதாலே, முதலிரு கூற்றுக்களின் மீதான எனது விளக்கங்களை இங்கே தருகிறேன். மற்றைய மூன்றும் அடுத்த இடுகையிலே தொடரும். அதனைத் தொடர்ந்து கோவிந்தசாமி-இணையத்தமிழ் குறித்த மாலனின் ஆதாரங்களின் தம்மைத்தாமே சுட்டுக்கொல்லும் தன்மையையும் மேலதிக ஆதாரங்களையும் பார்க்கலாம். இயன்றவரை இணைப்புகளை இங்கே தரமுயன்றிருக்கின்றேன். மேலதிக ஆதார இணைப்புகள் தொடர்ந்து கிடைக்கும்போதெல்லாம் தகுந்தவிடங்களிலே ஏற்றப்படும்.


கூற்று 1: இணையத்தமிழினைத் தொழில்நுட்பத்திலே முன்னேற்றாது இணையத்தமிழ் வரலாற்றினைப் பேசும்போது என்பது வெற்றுவிவாதங்களாகி அயர்ச்சியே மிஞ்சுகின்றது என்று எண்ணங்களின் குரல் கூறியிருப்பதன்மீது

'இன்று தமிழர்களுக்கு இணையத்தமிழின் வரலாறா, தமிழ்க்கணித்தொழில்நுட்பமா முக்கியமானது?' என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்தேர்தல் வருமானால், தொழில்நுட்பத்தேவைக்கே என் வாக்கு; இணையத்தமிழின் வரலாற்றினைப் பற்றி நான் ஏதும் பேசமாட்டேன். ஆனால், இங்கே அப்படியான கட்டாயத்துக்கான தேவையேதும் எழவில்லை. அதனால், இணையத்தமிழின் வரலாற்றினைப் பற்றி நான் நீட்டிப் பேசுவதற்கான காரணங்கள் எனக்குத் தெளியத் தெரிந்து, இரண்டு.

காரணம் 1: என் முன்னைய இடுகை ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, "யார், எதை, எப்போது, எங்கே செய்தார்" என்பதற்கான சரியான தரவுக்கோவை முறையான வரலாறாகத் தொகுக்கப்பட்டுப் பதிவாகுவதுகூட அவசியமில்லை. ஆனால், தவறான, திரிந்த, உறுதியற்ற, மழுங்கிய முன்வைப்புகள் வரலாற்றுத்தரவுகளாகத் தரப்படும்போது, "யார், எதை, எங்கே, எப்போது, எங்கே செய்யவில்லை" என்பதற்கான எதிர்த்தரவுக்கோவை முறையாக முன்வைக்கப்பட்டேயாகவேண்டும். அவ்வகையிலே மாலனும் அருணாவும் கூறிய கருத்துகளின், முன் வைத்த ஆதாரங்களின் எதிர்வினையாகவே நான் இணையத்தமிழின் வரலாற்றினை - என் கைக்கெட்டிய ஆதாரங்களுடன் - முன்வைக்கவிரும்புகிறேன். இஃது எவ்விதத்திலும் கணித்தொழில்நுட்பத்தின் முக்கியத்தை மறுப்பதாகக் கருதப்படக்கூடாது. இது போன்ற நோக்குடனேதான், கணித்துறையிலே திறந்தமூலமென்நிரல்களிலே, அவற்றுக்குப் பங்களித்தவர்களின் பெயர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; அவர்களின் பங்களிப்புகள் காலவரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன. இப்படியான பதிதல்களும் சுருக்கமான வரலாற்றுப்பதிதலே; அதன் தேவையும் இங்கே நாம் பேசிக்கொள்ளும் நிரல்களின் வளர்ச்சி, பங்களிப்பினைப் பற்றிய சரியான தகவல்களை ஆவணப்படுத்தும் நோக்காகும்.

காரணம் 2: மேலே கூறிய காரணத்தினைவிடவும் எனக்கு - ஈழத்தமிழனென்ற அளவிலே- முக்கியமாகும் இன்னொரு காரணமுண்டு. ஒரு சமூகம் தன் வரலாற்றினை இயன்றவரை தொடர்ச்சியாகவும் கோவையாகவும் (அது மிகத்திருத்தமாகக்கூட அமைய வேண்டியதில்லை) பதிந்துகொள்வதன் தேவையை ஈழத்தமிழரின் இன்றைய (வரலாற்று)நிலை உணர்த்தியிருக்கின்றது.

அண்மையிலே பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பர் சொன்னார், "எவருமே நம்ப முடியாத வகையிலே ஆண்சிங்கத்துக்கும் மனிதப்பெண்ணுக்கும் பிறந்து வந்த சந்ததியே சிங்கள (ஹெல) இனம் என்று எழுதிவைத்திருந்தாலுங்கூட, சிங்களவர்களுக்கு, அவர்களின் வரலாறென்பதைக் காலவரையறைப்படி எடுத்துச் சொல்லும் வகையிலே மகாவம்சம், சூளவம்சம் என்ற ஆவணப்படுத்துதல் தொடர்ந்திருக்கின்றது;" இது நாம் மிகவும் கூர்ந்து காணவேண்டிய கோணம். ஈழத்தமிழருக்கென்று இவ்விடத்தின் இன்னார்தான் என நிறுவமுடியாத ஈழத்துப்பூதத்தேவனாரின் கவிதையிலிருந்து வரலாற்றினைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளவேண்டிய அவலமே இன்னமும் இருக்கின்றது. அவரின் பெயரிலேயிருக்கும் ஈழம் என்பது இப்போது நாங்கள் குறிப்பிடும் ஈழமா, வேறிடமா, அச்சொல்லுக்கான வேறேதும் கருத்திலே ('பொன்' என்பது போல) வந்ததா என்றுகூட எங்களால் அறுதியிட்டுச் சொல்லமுடிவதில்லை. அதன் பின்னால், குளக்கோட்டன், குத்தன் - சேனன், எல்லாளன், யாழ்ப்பாடி, திருஞானசம்பந்தர் + சுந்தரர் தேவாரங்கள், பல்லவ_சோழ_பாண்டிய வரலாறுகள், அருணகிரிநாதர் திருப்புகழ் என்று வழிவந்த கதைகளும் பாடல்களும் அடுத்தார் வரலாறுகளும் பேசப்பட்டபோதுங்கூட, இவற்றில் எதுவுமே ஈழத்திலே தமிழர் வரலாற்றினை, அவர்களின் இருப்பின் தொடர்ச்சியினை முறையாக ஆவணப்படுத்தியதாக, ஆவணப்படுத்த உதவியதாக அமையவில்லை. தமிழ்ப்பாடல்களிலிருந்து தரவுகளை உய்த்தறிந்து வடிகட்டி, வரலாற்றினை உருக்கி வடிவமைத்துக்கொள்ளும் இரண்டாம்நிலை ஆதாரத்தினைப் பிடித்துக்கொள்ளும் அவலமே தொடர்ந்திருக்கின்றது. இதன் அவவிளைவே, பரணவிதாரண போன்றோரின் கைகளிலே இலங்கையின் 'தொல்பொருளியலாய்வும் அகழ்வும்' சென்றதும், அதன்பின்னான 'கண்டுபிடிப்புகள்' சிங்களக்குடியேற்றங்கள் முதல் இன்னோரன்ன மொழிசார் இனவமைப்பு ஒடுக்குமுறைகளுக்கு, தமிழ்பேசும் சமூகங்கள் ஈழத்திலே உள்ளாகவும் காலாயிருந்திருக்கிறன; காலாயிருக்கின்றன. தமிழ்ப்பௌத்தர்கள் இருந்திருக்கலாமென்ற வாதத்தைக்கூட முன்வைத்து, சிங்களப்பேரினவாதத்தின் வரலாற்றாக்கத்தை மறுத்துப்பேசமுடியாத நிலையிலே கந்தரோடை, வல்லிபுரம், நயினாதீவு, திரியாய் ஆகிய இடங்கள் 'பௌத்தர்கள்=சிங்களவர்கள்' என்ற சமன்பாட்டினாலே எழுதிவைக்கப்படுகின்றன. இங்கேதான் ஈழத்தமிழர்கள் சந்த்யானாவின் 'தமது கடந்த காலத்தினை நினைவுகூரமுடியாதவர்கள் எதிர்காலத்திலே அதை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்படுவார்கள்' என்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றோம். இந்நிலையிலேதான் வரலாற்றினைப் பதிவுசெய்தலென்பது வாழ்தலின் இருத்தலின் தொடர்ச்சியாக ஒரு சமூகத்துக்கு ஓர் அவசியமான அத்திவாரக்கூறாகின்றது. இன்னமும், வரலாற்றின் தேவைதான் - கடந்த காலத்திலிருந்து எமது இன்றைய நிலையைச் சரிபார்த்துக்கொள்தலும் போகும் பாதைக்குக் கடந்தகாலத்தின் தவறுகளைத் தவிர்த்தலுமே - கற்றுக்கொள்ளவைக்கின்றது; இதன் அடிப்படையிலேயே பொதுவரலாறு ஒரு பாடமாக பாடசாலைகளிலே கற்பிக்கப்படுவதும், இராணுவ,போர்வரலாறு இராணுவக்கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுவதும் அமைகிறன. வரலாற்றின் பதிவின்றி உடோல்ஸ்டோயின் பாதையிலே மோஹன்தாஸ் காந்தியும் அதன் தொடர்ச்சியாக மார்டின் உலூதர் கிங்கும் அடியொற்றி நடக்க முயன்றிருக்கமாட்டார்கள்.


ஒரு சமூகத்தின் விடுதலையென்பதும் சுதந்திரமென்பதும் இருநிலைத்தளங்களிலே நிகழலாமென்பது என் பார்வை. ஒன்று உறைவிடம்சார் பௌதீகதளத்திலே (அச்சமூகத்தின் ஒடுக்கப்படுதலுக்கெதிராக) நிகழ்வது; இன்றைக்கு இலங்கைத்தீவிலே தேடப்படும் விடுதலையென்பதும் இவ்வகை உறைவிடம்சார் இனவிடுதலையாகவே கருதப்படலாம். ('மொழிசார்ந்த' என்று சொல்லவில்லை.... சிங்களவரிடமிருந்து தமிழர்களும் தமிழர்களிடமிருந்து முஸ்லீம்களும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இங்கே 'இனம் சார்ந்த' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்கின்றேன்.) இந்த புவிசார் அரசியல் விடுதலை எய்தப்படும்போது, அதன் விளைவாக, அவ்வடிமைத்தனம் சங்கிலித்தொடராகக் கட்டிவைத்திருந்த எல்லைப்படுத்தல்களும் முறிந்து, அதன் வழிப்பட்ட எமது மற்றைய மனிதசுதந்திரங்களும் வந்துசேரும். .

அடுத்தது, உளம்சார், சிந்தைசார்தளத்திலே நிகழும் விடுதலையென்பது; இதற்குப் பௌதீக, புவியமை எல்லையில்லை. இவ்விடுதலையென்பது புவிகட்டுப்படுத்தும் வரையறைகளுள்ளே அவற்றினை முறித்துத் தனித்துவம் காண்பதற்காக நிகழ்வதல்ல. கருத்துத்தளத்திலே தன்மீதான அடக்குமுறைகளிலிருந்து தம்மை உடைத்துக்கொண்டு, விட்டுவிலகிச் சிட்டுக்குருவியாகப் பறக்கும் நோக்கிலே பிறப்பது; தமிழர் என்ற கருத்துநிலையிலே ஈழத்தமிழர், மற்றும் அவர்கள்போன்ற நிலையிலுள்ள ஏனைய உட்கூற்றுத்தமிழர்களின் தம்மடையாளங்களை, 'தமிழினை மேம்படுத்தியவர்கள் நாம்' என்ற கருத்துநிலை மேலாதிக்கத்தாக்குதலின்மூலம், கருத்துநிலை அரசியல்மூலம் இதுவரைநாள் நிலைநிறுத்தி நிற்கின்றவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு காணும் சுதந்திரம் இவ்வகைப்படும்.

மேற்கின் குடியேற்றவாதிகளை எமது சொந்தநாடுகளிலிருந்து வெளியேற்றுவதென்பது உறைவிடம்சார் சுதந்திரப்படுத்துதலென்று கொண்டால், அவர்களின் கருத்தாக்கங்களும் வரலாற்றுப்படுத்துதலுமே முற்றுமுழுதாகச் சரியென்ற கருத்துநிலையிலிருந்து எம்மை விடுவிடுத்துக்கொள்வதிலான சுதந்திரம் கருத்துநிலைச்சுதந்திரமாகும். இதே கண்ணோட்டத்திலேயே ஈழத்தமிழரின் சிந்தை மீதான மேலாதிக்கவாதிகளின் சிறைப்படுத்துதலிலிருந்து விடுதலை பெறும் நிலையையும் நான் காண்கின்றேன். இவ்விரு உறைவிடம்சார் விடுதலைப்போராட்டத்தினை ஈழக்களத்திலும், கருத்துநிலைசார் விடுதலைப்போராட்டத்தினை பல்வேறு தகவலூடகக்களங்களிலும் சமகாலத்திலேயே நிகழ்த்தவேண்டிய அவநிலைக்கு நாம் உள்ளாகியிருக்கின்றோம்.

இப்போராட்டங்களிலே எம் சுயத்தினையும் தேவைகளையும் அடையாளம் காணவேண்டும்; எம் காலம் சார்ந்த இருப்பின் தொடர்ச்சியினையும் பங்களிப்பினையும் நிறுவவேண்டும்; நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது புவிநிலை, கருத்துநிலைசார் விடுதலைகளை, ஈழத்தமிழரென்று கொண்டிருக்க நாம் ஆரம்பித்துச் செய்யவேண்டியது இதுதான்: "ஈழத்தமிழரின் சிங்களம் அண்டிய புவிசார் வரலாற்றோடு, கருத்துநிலைசார் அகிலத்தமிழர் என்ற பெருங்கூட்டத்தினுள்ளேயும் எம் தொடர்ச்சியான இருப்பும் பங்களிப்பும் குறித்த வரலாற்றினையும் ஆவணப்படுத்தவேண்டும்." எதிர்கால வரலாறு எம்மை விடுதலை செய்யவேண்டுமானால், எம் கடந்த கால வரலாற்றினை நாம் விடுதலை செய்தாகவேண்டும்; தங்கிநிற்கும் மோழைத்தனமும் இரண்டாம்நிலைச்சமூகமென்ற தாழ்வுணர்வும் நீங்கும்படியாக, மற்றவர்களுக்கீடான எமது சாதனைகள், பங்களிப்புகள் பதியப்பட்டாக வேண்டும்.

இப்படியாக, எதிர்கால இருத்தலை, சமூகத்திலே எமக்கான பங்கை நிச்சயப்படுத்தும் நோக்குடனேயே, நாம் இங்கே தமிழரின் வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழிணையவரலாற்றினையும் காணவேண்டும். மகாவம்சமும் பரணவிதாரணவும் அடித்துப்போட்டுப் போட்டு நிலையற்று அலையும் ஈழத்தமிழரின் கடந்த புவிசார்வாழ்வுக்கு ஈடான ஓர் இரண்டாம்நிலை(இணைய)த்தமிழ்வாழ்வினையே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' என்ற சொல்லாடல், இச்'சுதேசமித்திரன் பாரம்பரிய'த்தை, அதைச் சார்ந்திருக்கின்றவர்களின் கதைகளுக்கு அப்பாலான எத்தமிழருக்கும் வழங்கும். மாலன் + லேனா தமிழ்வாணன் போன்றோரின் "வெறும் ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் என்பதைக் கொடுத்தவர்கள் நாம்" என்ற சொற்றொடர் வெறுமனே எஸ். பொன்னுத்துரை என்னும் ஒருவரின் நாவடக்கமுடியாத எதேச்சைப்பேச்சுக்கான எதிர்வினையென மட்டுமே கருதிவிட்டுப்போகமுடியாது. அக்கூற்றின் அடியிலேயிருக்கும் குமுதம்+கல்கண்டு ஆசிரியர்களின் நுண்ணரசியல், எம் சிந்தைத்தளத்தினை, அவர்கள் தருவதே வரலாறு என்ற கருத்துநிலைத்தளத்திலே அடக்கி ஒடுக்கும் தன்மையிலேயே எள்ளலாக வெளியிட்டுக் கக்குகின்றது.

இன்றைய காலகட்டத்திலே அச்சு ஊடகங்கள், கேள்காண் ஊடகங்கள் இவற்றினை வளைத்துப்போட்டு அவற்றின் 'ஆசிரியரிடமிருந்து --> வாசகர்களுக்கு' என்ற ஒற்றைத்திசைச்செயற்பாடுகளைத் தம் விருப்பப்படி இயக்கும், தோற்றம் தரச்செய்யும் விதமாக கைகளிலே வைத்துக்கொண்டிருக்கின்றவர்கள், இணையத்தின்பால் மிகவும் அவதானமாக அடுத்த நிலைக்கு நகர்கின்றார்கள்; இதன் வழிப்பட்டதே, தமிழ் பேசும் இணையமும் அவர்தம் இயக்கத்தின்படி பொம்மலாட்டமிட வைக்கும் நோக்குடன், இவர்கள் நகரும் திசைதான், "தலையும் முண்ட அவயவங்களும் உங்களிடமேயிருக்கட்டும்; கழுத்தின் கட்டுப்பாட்டைமட்டும் எம் கைகளிற் கொடுங்கள்" என்பதற்கொப்பாக, வலைப்பதிவுகள் எப்படியாக நெறிப்படுத்தப்படவேண்டும், இயக்கப்படவேண்டும் என்பவற்றின் மீது தம் கருத்துகளைச் சாணக்கியத்தனமாக வரையறுத்து மாலன் போன்றோர் முன்வைக்கும் கருத்துகள். இவற்றுக்கு ஆதரவாக, தம் ஆள்தலுக்கு, நெறிப்படுத்துதலுக்கு வசதிசெய்யும் இருக்கைகளை இணையத்திலே அமைத்துக்கொள்ள, தமக்குச் சாதகமான 'நீண்டகாலப்பாரம்பரிய'த்தினை வடிவமைக்கின்றனர்; சாதுரியமாக, இணையத்திலே தமிழுக்கான தம் பங்கினை 'இன்னாருக்கு இணையத்திலே தமிழ்ப்பொறி' படச்செய்தோமெனத் தம்மை முற்படுத்தும் பண்பும், 'வலைப்பதிவுவரை தொடரும் சுதேசமித்திரன் பாரம்பரியம்' போன்ற கருத்தாடல்களும் வாசிப்போரின் உளத்தளத்திலே நுணுக்கிப் பதிந்துகொள்ள இடமாகின்றது. (மாலன் போன்றோரின் பிரபலம், அவரின் கருத்துகளை ஆராய்ந்து சரிபிழை பார்க்காமலே, எத்தனை வாசகர்களை நம்பவைத்திருக்கின்றதென்பதை அவரின் இணையம் பற்றிய கருத்துப்பதிவுகளுக்கு, மற்றும், எனக்கான எதிர்வினை இடுகைகளுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களே தெரியப்படுத்துகின்றன.)

இப்பின்புலத்திலேயே மாலன் கூறிய தரவுக்கருத்துகளுக்கான எமது மாற்றுத்தரவுகளை முன்வைத்து, இன்னொரு திருத்தமான கண்ணோட்டத்திலே வரலாற்றினைக் கூறி எம் கருத்துநிலைத்தமிழர் விடுதலையைப் பெற வேண்டியிருக்கின்றது. ஆறுமுகத்துக்கு புகழ் அவருக்கு ஆதீனம் கொடுத்த நாவலர் பட்டத்தினாலல்ல. அவரைப் போன்றவர்களின் செயற்பாடுகளே அப்படியான ஒரு பட்டத்திற்கான தேவையினை, இருப்பினை உருவாக்கியிருக்கின்றதென்ற மறுதலைநிலைதான் உண்மை; நாவலர் என்ற பட்டமின்றியிருப்பதால், ஆறுமுகத்தின் திறமையிலே ஏது பங்கமும் ஏற்பட்டிருக்காது; ஆனால், ஆறுமுகம் போன்ற திறனாளர்களில்லாவிட்டால், 'நாவலர்' என்ற பட்டம் தக்கித்திருக்குமா? அங்கே உண்மையிலே பேசப்படவேண்டியது, நாவலர் என்ற பட்டத்துக்கு இருப்பை நாவலர் கொடுத்ததேயொழிய, ஆறுமுகத்துக்குப் பின்னால் நாவலர் ஒட்டிக்கொண்டதல்ல. ஆனால், அந்த தொப்புட்கொடியாக, சேயாக அங்கிகாரத்தினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கருத்துநிலைத்தமிழ்க்கைதிகளான ஈழத்தமிழரிடையேயேனும், மாலன் போன்றோர் "நாவலர் என்ற பட்டத்தைத் தந்தோம்" என்று ஏற்படுத்தும் மயக்கத்தினைத் தெளியவைத்து, அங்கீகார எதிர்பார்த்தலிலிருந்து கருத்துவிடுதலை செய்ய நாம் வரலாற்றினை மீண்டும் சொல்லவேண்டியதாகவிருக்கின்றது.

தமிழக-ஈழத்தமிழரிடையே தொப்புட்கொடி உறவிருக்கவில்லை என்பதை நான் அவ்வகையிலேயே மாலனுடன் சேர்ந்து ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அப்படியாக ஒத்துக்கொள்வதற்கான என் காரணம், அவருடையதற்கொப்பானதல்ல; தாய்-சேய் உறவென்பதிலும்விட, ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளே ஈழம்-தமிழகம் ஆகியவற்றின் தமிழ்ச்சமூகங்களென்ற எடுகோளின்பாற்பட்டதாகும். இரு தொப்புட்கொடிகளைக் கொண்டு சமகாலத்திலே ஒரு தாயிடமிருந்து பிறந்த குழந்தைகளென்பதே சரியானதாகும். ஆறுமுகத்துக்கு நாவலர் என்பதிலும், பரிதிமாக்கலைஞர் கொடுத்த 'வசனநடைகைவந்த வல்லாளர்'1 என்பதிலும் சிலிர்த்து மகிழ்ச்சியடையும் ஈழத்தமிழர்கள், இராமலிங்கவள்ளலாரோடு ஆறுமுகம் காட்டிய நாவன்மையையினையோ, தமிழிலே முதன்முதலாக -பரிதிமாக்கலைஞர் சுட்டிக்காட்டிய,"பொருட்டெளிவும் விரைவுணர்ச்சியும்' தரத்தக்க- நிறுத்தற்குறிகளை அறிமுகப்படுத்திய திறனையோ மறந்துவிடுகின்றோம்.

சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பிய தமிழகம்போலவேதான், வீரகேசரிக்கு வந்த வரா உம், இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு வந்த இசை கற்பித்த மஹாராஜபுரம் சந்தானமும் பின்னாளிலே தமிழகத்திலே பெயர் பெறும்வரை வாழ இலங்கையும் வழிசெய்ததென்பதை 'சுதேசமித்திரன் பாரம்பரியக்காரர்கள்' மறை/றந்துவிடுகின்றார்கள். (ஒரு வலைப்பதிவு நண்பர், தாம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கர்நாடக இசைச்செல்வி ஒருவரிடம் ஈழத்தின் பிரபலமான சில இசைக்கலைஞர்களின் பெயர்களைச் சுட்டிப்பேசியபோது, "யார் அவர்கள்?" அச்செல்வி கேட்டதாகச் சொன்னார்) தமிழக ஆதீனங்களுக்கு ஆறுமுகத்தம்பிரான்களையும் ஈழம் தந்திருக்கின்றது (திருவண்ணாமலை ஆதீனம்)2; அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துக்கு விபுலாநந்தரைத் தந்திருக்கின்றது; கனகசுந்தரம்பிள்ளை, தமிழ் அகராதி கண்ட கதிரவேற்பிள்ளை ஆகியோரைத் தந்திருக்கின்றது; வி. கல்யாணசுந்தரம் சொல்வதுபோல "சுவாமிநாதையர் கூரைபோட உதவிய தமிழ்ப்பதிப்புலகுக்கு, அடிக்கல்லிட்ட ஆறுமுகத்தையும் சுவர்கட்டியெழுப்பிய தாமோதரம்பிள்ளையும்" தந்திருக்கின்றது. தமிழாராய்ச்சி மகாநாட்டினைத் தொடங்க, உழைக்க தனிநாயகத்தினைத் தந்திருக்கின்றது. (அதன் தொடர்ச்சியான தமிழாராய்ச்சி மகாநாட்டிலே சிதம்பரத்திலே ஆறுமுகநாவலரின் சிலை எழுப்பப்படும் என்று அன்றைய தமிழக அரசுத்தலைமைச்செயலர் சொல்லியும் அது தவறிப்போயிருக்கின்றது.2 தொடர்ச்சியாக, ஜெயலலிதா முதல்வராகவிருந்தபோது, ஈழத்திலிருந்து தமிழாராய்ச்சி மகாநாட்டுக்குப் போன தமிழறிஞர்களைச் சிறைவைத்த சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றது. இஃதெல்லாம் எப்பாரம்பரியத்தின் வழிப்பட்டது? சுஜாதா ரங்கராஜன்கூட "சிங்களத்தீவுக்கோர் பாலமமைப்போம்" எழுதினார். அந்நேரத்திலே மாலன் என்ன செய்தார்? கற்கண்டு இலெட்சுமணன் என்ன செய்தார்?) தமிழிலக்கியவிமர்சனத்துறையிலே மார்க்ஸிய அணுகுமுறைக்கு கைலாசபதியையும் சிவத்தம்பியையும் காலத்தே முந்தியதாக ஈழம் தந்திருக்கின்றது; தலித் எழுத்து முன்னோடியாக, 'பஞ்சமர்' டானியலைத் தந்திருக்கின்றது; கவிப்படிமத்துக்கும் ஒரு பிரமிளை, அவரைத் தமிழகத்தவரென்றே மயங்கிக்கொள்ளுமளவுக்குத் தந்திருக்கின்றது.

1882 இலே தொடங்கிய சுதேசமித்திரனுக்கு ஏறக்குறைய நாற்பதாண்டுகள் முன்னமே இலங்கை உதயதாரகையைத் தந்திருக்கின்றது. சென்னையிலே பீற்றர் பார்சிவல் தான் நடத்திய 1855 இலே நடத்திய தினவர்த்தமானி வாரப்பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த உதயதாரகையின் ஓர் ஆசிரியரான கரோல் விசுவநாதபிள்ளையையும் சி. வை. தாமோதரம்பிள்ளையையும் கூப்பிட்டழைத்து சேவைக்குள்ளாக்கியிருக்கின்றார். இப்படியே பட்டியலை வளர்த்துக்கொண்டுபோனால், தமிழ்ப்பத்திரிகை, படைப்புலகிலே "எல்லாமே சுதேசமித்திரன் பாரம்பரியம் என்பதன் தொடர்ச்சி" என்பது சுக்குநூறாகிப்போகும். இத்துணைக்கும் இங்கே என் இக்குறிப்புகளின் எல்லை ஆக ஈழத்தின் தமிழுக்கான வழங்கலை முன்வைத்துமட்டுமே; தமிழகத்திலேயே சுதேசமித்திரன் பாரம்பரியத்துக்கு மாற்றுப்பாரம்பரியமென்பவை ஒன்றுக்கு மேலாகவிருக்கின்றன. அவற்றினை அவற்றின் நீட்சியும் விரிவும், என் அறிதலின் போதாமை கருதி இங்கே தவிர்த்துக்கொள்கிறேன். இவற்றினை அறிந்து தம்மைத் தாமே இரண்டாம் தள நிலையிலிருந்து, சேய்நிலை 'தரப்படுவதை'யே பெரிதெனக் கருதிப் புளகாங்கிதம் எய்தும் கருத்துச்சிறையிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுவித்துக்கொள்ள, நாம் வரலாற்றினைப் பற்றி, அவசியப்பட்ட போதெல்லாம் மீள மீளப் பேச வேண்டியதாகவேயிருக்கின்றது.

மாலனைப் போன்றவர்கள் சுதேசமித்திரனுக்கு முன்/பின், பாரதிக்கு முன்/பின் (இன்னமும் ஈழ-இந்திய அரசியல்நிலைகளிலே இராஜீவ் காந்தி கொலைக்கு முன்/பின்) என்று காலப்பகுதிகளைப் பிரிக்க அமைகோடு போடும் புள்ளிகளும் இதே மாதிரியாக மிகவும் அவதானமாகக் கேட்கும், வாசிக்கும்போதெல்லாம் 'இவையே/இன்னார்களே மூலாதாரங்கள், மீதியெல்லாம் சார்ந்ததெழுந்தவை' என்பதான உணர்வினை உளத்தளத்திலே மறைமுகமாகத் தூண்டிப் பதிக்கும் வகையிலே அமைபவை. (கிரகோரியன் நாட்காட்டி & கிறீஸ்து ஆண்டுக்கணக்குக்கு மாற்றாக தமிழர் நாட்காட்டி & திருவள்ளுவர் ஆண்டு, இந்து, இஸ்லாமிய ஆண்டுகள் நாட்காட்டிகள் இவை பிறந்ததற்கான காரணமும் இப்படியான மாற்றுக்கண்ணோட்டத்தினையும் எதிர்நிலைகளையும் உணர்த்தவே. எமக்கும் அதுவே அத்தியாவசியமாகின்றது). எதற்காக, தமிழகத்தின் அறியப்பட்ட முதலாவது தமிழிதழிலிருந்து தமிழகத்தின் தாளிகைப்பாரம்பரியம் காலநீட்சி கருதிச் சுட்டப்படமுடியாது?

இதே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' இணையத்தளத்திலே கடை விரிக்கப்படும்போது, மீண்டும் கணிசமான பங்களிப்பினை ஆற்றிய தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரும் ஈழ, மலேசிய, சிங்கப்பூர், புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் அது வைக்கப்படும் பாங்கிலே தம் சுய அடையாளமிழப்பார்கள்; தமிழ்மறுமலர்ச்சி அடையாளத்தினை முன்வைத்துச் சங்கத்தமிழ்க்குடிநிலையை மீளக்கண்டெடுத்து, திராவிடப்பாரம்பரியம் கட்டமைக்கும் மறுமலர்ச்சித்திசையிலே சென்றதால், தமது மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாரம்பரியத்தைச் சுவாமிநாதைய்யர் பாரம்பரியமாகத் தாரைவார்த்துக்கொடுத்தவர்கள் செய்த தவற்றிலிருந்து இந்த "தமிழிலே முதல்" வரையறை செய்யப்படும் வரலாற்றுத்தவறு ஆரம்பிக்கின்றது. அச்சூடகங்களிலும் கேள்காணூடகங்களிலே தமது கிடுக்கிப்பிடியை வைத்திருக்கும் மாலன் போன்றோரின் 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' இணையத்துக்கு விரிகின்றபோது, -முதற்படையெடுப்பிலே தோற்றாலும் அடுத்தடுத்த படையெடுப்புகளிலே- இணையத்திலே "தமிழில் முதல்" என்று அவராலே கண்டுபிடிக்கப்படுகின்றவர்களின் வரலாறு தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும்வகையிலே அமைக்கப்பட்டு வந்துகொண்டேயிருக்கும்; இதனைத் தகுதியான தரவுகளோடு நாம் எதிர்கொள்ளப்படவேண்டும். தமிழினை முதலிலே இணையத்திலே ஏற்றியவர்கள், தமிழிலே முதற்தேடுபொறிசெய்தவர்கள், தமிழிலே முதல் இணையவுரையாடி அமைத்தவர்கள், தமிழிலே முதற்சஞ்சிகை அமைத்தவர்கள் இப்படியான *சரியான தரவுகளுடனான* வரலாறு -எம்முடையது உட்பட- எல்லோரினதும் சான்றுடனான மொழிப்பங்களிப்பினை உறுதிப்படுத்தி, கருத்துநிலைதமிழ்ச்சுதந்திரத்தினை எமக்கும் எல்லோருக்கும் உணர்த்துவதாக அமையவேண்டும்.

இப்படியாகவே, கருத்துநிலையிலே தமது சொந்த(த் தமிழ்)ச் சமூகத்துள்ளேயே இரண்டாம்நிலைக்குடிமக்களாக உணராதிருக்கும் சுதந்திரம்வேண்டியே எவ்வரலாற்றினையும் - தமிழர் நிகழ்நிலை வரலாற்றையோ, மெய்நிகர் இணைய வரலாற்றினையோ - நாம் திருப்பியும் திருந்தவும் சரியான தரவுகளைத் தாங்கி எழுத வேண்டிய அவசியமேற்படுகின்றது. எம் மொழி,குடி, பண்பு வரலாற்றை நாம் மாலன் போன்றவர்களின் கைகளிலிருந்து விடுதலை செய்யவேண்டியதாகின்றது. வாய்ஸ் ஆப் விங்க்ஸ் போன்ற நண்பர்களுக்கு (மீள) வரலாற்றினையெழுதலின் தேவையின்மையும் அதன் முக்கியம் உணர்வதற்கு முடியாததாக வெறும் உணர்வின் அடிப்படைப்பட்ட வெற்றுக்கூச்சலாகவும் படலாம். ஆனால், எனக்கு அப்படியாகத் தோன்றவில்லை. இணையத்தமிழ்வரலாற்றைப் பேசுவது மாலனுடன் வாதத்தினை வெல்வதற்குமப்பால், தனக்கென்றே ஒரு வரலாற்றுத்தேவை அமைந்தாயுள்ளது.

[இம்மீட்டெடுத்தலைத் தம்மளவிற் செய்தவர்கள், தம் அடுத்த செயற்பாடாக, இன்றைய நிலையிலே தம் சுயத்தினைக் காக்க, காந்தி, வ.உ.சிதம்பரம் இவர்களின் வரலாற்றினைப் பாடமாக்கிக்கொள்ளலாம்; தாமே உப்பினைக் காய்ச்சுவதும் இராட்டையிலே கதர் இழைப்பதும் கப்பல்விடுவதும் முயற்சி செய்யமுடிந்தால், பதிப்பகங்களும் ஊடகமும் தம் நிலத்திலேயே வளர்க்கும் நோக்கும் தவறானதல்ல என்பது புரியும். ஆனால், இவை தனியே பேசப்படவேண்டிய விடயம். இப்பதிலுக்குப் பெருமளவிலே சம்பந்தமில்லாததால், இங்கே தவிர்க்கின்றேன்.]



கூற்று 2: தன்னதை ஒத்த கருத்தினைச் சொன்ன எத்தனையோ பேரிருக்க மாலன் தன்னை மட்டும் நான் (-/பெயரிலி.) கேள்விகளைக் கேட்டது காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே என்று கூறியிருப்பதன்மேல்

இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுண்டு.

காரணம் 1: தமிழ்க்கணிமை தொடர்பாக தமிழ் விக்கிபீடியாவினை நான் என்றைக்குமே தேடலுக்கு அணுகியதில்லை. அதனால், அங்கே இட்டிருக்கும் தகவல்களைத் திருத்தவேண்டுமென்ற எண்ணமேற்படவே வாய்ப்பில்லை

காரணம் 2: மாலன் ஆதாரமாகக் காட்டியிருக்கும் கோவிந்தசாமியின் கட்டுரையிலே ஏதேனும் வரலாற்றுச்சந்தேகத்தினைக் கேட்பதானால், நான் யாரிடம் கேட்பது? சொல்லப்போனால், பரஸ்பர நட்பு என்பதை ஓரமாக ஒதுக்கி விட்டுவிட்டு, அக்குறித்த கட்டுரை வாசிக்கப்பட்ட கருத்தரங்கிலேயிருந்த ஏனைய கணித்தமிழுக்குப் பங்காற்றியவர்களே கோவிந்தசாமியிடம் கேட்டிருக்கவேண்டும். அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள் (என்றுதான் இதுவரை வாசித்ததை வைத்துத் தோன்றுகின்றது; வேண்டுமானால், அது வாசிக்கப்பட்டது, ஆரம்பகாலக்கருத்தரங்கொன்று என்பதாலே, இணைநிலையிலே அல்லது முதலிலே ஆங்காங்குத் தனித்தனியே செய்யப்பட்ட முயற்சிகள் கோவிந்தசாமிக்குத் தெரிந்திருக்கமுடியாததுபோலவே, மற்றைய கருத்தரங்கின் பங்காளிகளுக்கும் தெரியாதிருந்திருக்கலாம் என்றும் நாம் கொள்ளலாம்)

காரணம் 3: மாலன்(, அருணா) போன்ற ஊடகத்துறைப்பின்புலமும் பலமும் கொண்டு வருகின்றவர்கள் சொல்லும் கருத்துகள், தமிழூடகங்கள் தரும் தகவல்களை அப்படியே கேள்வியின்றிக் கேட்டுக் கடத்துகின்றவர்களின் தொகை எத்துணையென்பதற்கு மாலனின் பதிவுகளின் பின்னூட்டங்களே சான்று. (இதுபோலவே சுஜாதாவின் அம்பலம் வலையுடையாடலுக்கு வாராவாரம் தீர்த்தயாத்திரைபோலச் சென்று வந்து வலையிலே அவர் தமக்கான வரிப்பதிலிட்டதையும் பேசிப்பெருமிதப்பட்டவர்களையும் கண்டிருக்கின்றேன்)

இப்போதைக்கு உதாரணத்துக்கு மாலனின் பிரபலத்தினை நம்பி அவர் சொன்னவற்றினை அப்படியே எடுத்துக்கொண்டு போகும் வாசகர்களினால் தவறவிட்டவற்றிலே சிலவற்றினைக் காண்போம்:

நேரடியாகத் தெரியும் உதாரணங்கள் சில: -

உ+ம் 1 : கோவிந்தசாமியின் கட்டுரையிலேயே 'தமிழ் முன்னமே இணையத்திலே எழுத்துருவாக ஏறியிருந்தாலும், கோவிந்தசாமியே அதை "செழுமைப்படுத்தி" வெளியிட்டவர்' என்ற அர்த்தத்திலே சொல்லப்படும்போது, "அப்படியானால், இணையத்தின் தமிழ்பிதா என்று எப்படியாக கோவிந்தசாமியைச் சொல்வது எப்படி?" என்று ஒருவரும் அருணாவினைக் கேள்வி கேட்டதாகத் தெரியவில்லை; ஏற்கனவேயிருந்ததாகச் சொல்லும் கோவிந்தசாமிக்கு மாலன் எப்படி 'இணையத்திலே தமிழேற்றப் பொறிதட்ட'ச் செய்திருக்கலாம் என்பதைப்பற்றியும் இவ்வாசகர்கள் கேட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்நேஷன் தளத்திலிருந்து கோவிந்தசாமியின் கட்டுரையிலிருந்து தேவையான பகுதி (தடித்த எழுத்தாக்கம் நான் செய்திருப்பது)
/Tamil Eelam Page (http://www.eelam.com) was and is still very active in this direction. Tamil Nadu Home Page, and Tamil Electronic Library . (http://www.geocities.com/Athens/5180/index.html) are other popular Tamil Web Sites on Internet at that time. Tamil Electronic Library was using (and is still using) a mono 7bit font (Mylai) for the Tamil display on the Web.However, Mylai font cannot support native emailing at that time.
So there was a need to develop a Tamil Internet System which should go beyond Web display.
In May 1995, I met Dr Tan at the Technet Unit, National University of Singapore, soon to become the Internet Research and Development Unit (IRDU) (now upgraded to Centre for Internet Research). We identified the potential solutions and agreed for a possible research collaboration between NUS and my institution, NIE, NTU, the two instititutions of higher learning in Singapore at that time. /
நிலை இப்படியிருக்க, இன்றைக்கு ஆங்கில விக்கிபீடியாவரைக்கும் 'தமிழிணையத்தந்தை கோவிந்தசாமி' என்று எழுதப்பட இப்படியான கேள்வியெழுப்பாததும் விமர்சனத்தன்மையற்ற பிரபலமானவர்களின் சொற்களை அப்படியே நம்பி மலட்டுவாசிப்புச் செய்து அசைபோட்டு மீட்டும் மந்தைத்தன்மையுமே வழியமைத்திருக்கின்றன.

உ+ம் 2: மாலன் தந்திருக்கும் ஐந்து ஆதாரத்தரவுகளிலே, குறைந்தது மூன்று ஆதாரங்கள், ஒன்றிலிருந்து மற்றொன்று வருவிக்கப்பட்டதாக வெளிப்படையாகத் தெரிகின்றன. ஆனால், இவ்வெள்ளிடைமலையை ஏன் அவரின் "ஆமாம் சார்" வாசகர்கள் காணமுடியவில்லை? கோவிந்தசாமியின் கட்டுரையிலிருந்து ஆல்பேர்ட்டும் அதிலிருந்து விக்கிபீடியாவும் எடுத்துப்போட்டிருப்பதை மாலனின் "அன்புள்ள பெயரிலிக்கு" இடுகையைத் தொடர்ந்து வாசிக்கும் எவருமே உணர்ந்துகொண்டிருந்திருக்கலாம்.

உ+ம் 3: வருவிக்கப்பட்ட விக்கிபீடியாவின் தரவினை யாராவது முதலாவது ஆதாரமாகத் தரமுடியுமா என்று யோசித்துப்பார்த்தார்களா?

உ+ம் 4: இணையத்திலே உடனடியாகத் தமிழினை ஏற்றிவிடத் துடிக்கும் வகையிலே சிங்கப்பூரிலே தன்னிடம் இணையம் பற்றிப் பொறிபடச் சொன்ன மாலனைப் பற்றி, இணையத்திலே தமிழ் ஏற்றிய தன் மகாநாட்டுக்கட்டுரையிலே ஏன் கோவிந்தசாமி சொல்லவில்லை என்பதும் எவருக்கும் கேள்விக்குரியதாகத் தோன்றவில்லை.


கொஞ்சம் தேடி முயன்றிருந்தால், (மாலனும் தன் தவறினை ஒப்புக்கொள்ளும்படி) அவரின் இணையவரலாற்றினைப் பாராட்டும் வாசகர்கள் கண்டிருக்கக்கூடிய உதாரணங்கள் சில: -

உ+ம் 5: கணியன்/தமிழ்நெட் என்பன கோவிந்தசாமியின் விசைப்பலகை/எழுத்துரு இணை; அதற்கும் கணியன் இதழுக்கும் கணியன் பூங்குன்றனாரின் கவிதைக்கும் வித்தியாசங்கள் உண்டென்பது எனக்குத் தெரியாமலில்லை. அதேபோலவே, தமிழ்நெட் என்ற பாலா பிள்ளையின் மின்னஞ்சற்குழுவிலே 96 இன் பின்னரையிலிருந்து இருந்தேன் என்பதால், அதற்கும் (அது பயன்படுத்திய முரசு-அஞ்சல்/இணைமதி எழுத்துருவிணைக்கும்) தமிழ்நெட் எழுத்துருவுக்கும் உள்ள வித்தியாசம் எனக்கும் தெரியும். கோவிந்தசாமியின் நண்பரும் உத்தமம் அங்கத்தவருமான மாலனுக்கு கோவிந்தசாமியின் எழுத்துரு தமிழ்நெட் என்பதைக்கூடத் தெரியவில்லையென்பது சோகமான விடயம்.

உ+ம் 6: ஆல்பேர்ட் சிங்கப்பூரின் தமிழிணையக்கருத்தரங்கிலே கோவிந்தசாமி குறித்த தன் கட்டுரையை வாசித்ததாக மாலன் சொல்கின்றார். மாலன்கூட கலந்து கொண்ட அக்கருத்தரங்கிலே ஆர்பேர்ட் அக்கட்டுரையை வாசித்தாரா? ஆல்பேர்ட் தன் கட்டுரையை எழுதியது, உத்தமத்தின் மின்மஞ்சரியிலே தோன்றி, பின்னால், அவர் தான் நடத்திய ஈ-சங்கமம் என்ற இணையவிதழின் ஏழாம் இணையத்தமிழ்ச்சிறப்பிதழுக்காக மட்டுமே இடப்பட்டதென ஞாபகம். அதே இதழிலேயே மாலனும் இராம. கி உம் கட்டுரைகள் எழுதியிருந்தார்கள் என்பது மேலதிகத்தகவல். Tamil Nation தளத்திலே ஓரிடத்திலே தவறாகச் சொல்லப்பட்டிருப்பதை அப்படியே எடுத்துப் போட்டதால் ஏற்பட்ட பிழை இஃதில்லையென்றால், ஏழாவது தமிழிணையக்கருத்தரங்கிலே சிங்கப்பூரிலே வாசிக்கப்பட்டதாவென மாலன் உறுதிப்படுத்தலாம்.

இதுபோல, இலகுவிலே தகர்ந்துவிடக்கூடிய, ஓட்டை நிறைந்த பாத்திரங்களிலே (பின்னைய இடுகைகளிலே இவை பற்றியும் மேலதிகமான புது ஆதாரங்கள் பற்றியும் மேலும் விபரமாக எழுதுவேன்) நீர் நிரம்பியிருப்பதாக "சார், நல்ல விளக்கம்!", "இ-தமிழின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி" என்று வாசகர்களை எண்ண வைத்துக்கொண்டு நகரவைப்பது, மாலனுக்குச் சாத்தியப்படுகின்றதென்றால், அதற்கு அவரின் புன்புலம் தந்த பிரபலமே காரணம். இப்பிரபலம் வாசகர்களிடையே பரப்பக்கூடும் வரலாற்றுப்பிறழ்வுகளை, மாலன் நான் ஏன் கேள்வி கேட்டிருக்கக்கூடாதென வினாவிச் சுட்டும் மற்றவர்கள் (இணையத்தமிழ் குறித்த விடயங்களிலே தமிழ்விக்கிபீடியா நண்பர்கள், ஆல்பேர்ட் போன்றோர்) விட்டிருந்தால், தப்பித்துப்போகமுடியாது; சொல்லப்போனால், அவர்கள் சரியாகச் சொன்னாலுங்கூட, மாற்றுக்கருத்துகள், முரண்படும் தரவுகள் தென்படுகின்றதா எனத் தேடுகின்றவர்களே அதிகமாகவிருப்பார்கள். அதுவும் மாலன் போன்றவர்களின் வரலாற்றினைத் திருத்த முயற்சிக்கும்போது, "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது", "காய்த்த மரத்தில் கல்லெறிவது நல்லதுதான் போலும்; இல்லையெனில் இத்தனை 'கனிகள்' விழுமா என்ன ..?", என்று கண்ணைமூடிக்கொண்டு வருகின்ற நிலைதான் எம்மிடையேயிருக்கின்றது.

சுஜாதா குறித்து வெங்கட் எழுதியிருக்கும் பதிவும் இரவிசங்கர் சொன்ன கருத்தும் 'பிரபல்யம் தரும் இப்படியான வரலாற்றுப்பிறழ்வுப்பிரச்சனை' பற்றிய என் கருத்தினை மேலும் பலப்படுத்தும்.

ஆக, மாலன் என்பவர் பேசும்போது, அவரிடம்மட்டும் நான் கேள்விகளைப் போட்டதற்கான மூன்றாவது காரணம், இப்படியான வரலாற்றுப்பிறழ்வே வரலாறென வாசகரிடையே வாசகரால், மாலனின் வசனங்களாலே இறுகிப்பதிந்துபோகும் இலகுத்தன்மையை ஆரம்பத்திலேயே தகர்த்து சரியான அத்திவாரமிட்டு நேரே நிமிர்த்தவேண்டுமென்பதாலேதான்.

காரணம் 4: இந்த நான்காவது காரணம் எனக்கு - ஈழத்தமிழனென்றளவிலே - மிகவும் அவசியமானது. மாலன் என்ற பத்திரிகையாளரை, சஞ்சிகையாசிரியரை, தொலைக்காட்சிச்செய்தியாளரை அவரைக் காசு கொடுத்து அச்சுவடிவமாக, ஓரளவுக்குச் காண்கேள் செய்தியாக நான் வாசித்திருக்கும் கடந்த இருபத்தெட்டு ஆண்டுக்காலத்திலே முதன் முறையாக நான் கேள்விகளைக் கேட்டு அவர் உலகலாவிய பல இலட்சம் வாசகர்களிலே ஓர் ஈழவாசகனாக எண்ணிக்கொண்டு, தப்பிப்போகமுடியாத சூழலை இந்த இணையம் ஏற்படுத்தித்தர, எனக்குக் கேள்விகள் கேட்கவேண்டியிருந்த புள்ளிகளிலே அவரே தன் கருத்துகளைச் சொல்லி முடுக்கிவிட்டு வாய்ப்பினைத் தந்திருப்பது. மாலனின் ஈழம்-இந்தியா தொடர்பான நிலைப்பாடு, அரசியல், எனது ஈழம்-இந்தியா தொடர்பான நிலைப்பாடு, அரசியல் என்பவற்றினையும் கடந்து, ஓர் ஊடகவியலாளரை அவரின் சேவைக்கு இருபத்தெட்டாண்டுகள் ஏதோ விதத்திலே அப்போதும் இப்போதுமாக சொந்தப்பணம் தந்து பெற்றுக்கொண்டிருக்கும் (ஒரு தமிழ்ச்சமூகத்தின்) ஒரு வாசகன், பயனாளி அவர் பதில் சொல்லாமல் தப்பிக்கமுடியாத தளத்திலே, வகையிலே கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் இது. இப்படியான தேவை எனக்கு விக்கிபீடியாவினரிடமோ ஆல்பேர்ட்டிடமோ கோவிந்தசாமியிடமோ இல்லை; இராமிடமிருக்கின்றது, சோவிடமிருக்கின்றது, ஜெயக்காந்தனிடமிருக்கின்றது; மாலனிடமிருக்கின்றது. மாலனிடம் இணையத்தமிழுக்கு அப்பாலும் கேட்கவேண்டிய கேள்விகளிருக்கின்றன; அதற்கான களத்தினை அவர் செல்வநாயகியின் பதிவிலும் தமிழ்சசி போன்றோரின் முன்னைய பதிவுகளிலும் எனக்கான எதிர்வினையாகவும் ஏற்படுத்தியிருக்கின்றார். அதனாலேயே தேர்ந்தெடுத்தேன்.

அவருக்கான அரசியற்கேள்விகளை இங்கே இவ்விடுகையிலே எழுப்பவில்லை; இத்தொடரிலே பிறகு வரும் இடுகைகளிலே பார்த்துக்கொள்ளலாம். ஆனால், நான் மேலிருக்கும் பந்தியிலே அவரிடம் கேள்வி கேட்பதற்கான காரணமாகச் சொன்னதன் பின்புலத்தினையும் தேவையையும் மேலும் விரிவாக்கி, நிகழ்வுகளின் சுருக்கமாகச் சொல்லவிரும்புகிறேன்.

கொஞ்சம் பின்னோக்கி எழுபதுக்குப் போவோம். ஊரிலே எனது வீட்டினைச் சுற்றிய பகுதியிலே அப்பகுதியினரிடம் மாதாமாதம் சேகரிக்கப்படும் தொகையை வைத்துக்கொண்டு, தினசரி, சஞ்சிகைகள், நூல்கள் வாங்கி நடத்தப்படும் நூலகம். இதுபோலவே பத்துப்பன்னிரெண்டென ஊருக்குள்ளே நூலகங்கள்; தவிர, தனியவே தத்தமது வாசிப்புக்காக, வீடுகளிலே வாங்கும் சஞ்சிகைகள்; எழுபதுகளின் ஆரம்பத்திலே அம்புலிமாமாவோடும் கட்டப்பட்ட கண்ணன் தொகுப்புகளோடும் சிறுவர் உலகம் எனக்கும் என் வயதொத்தவர்களுக்கும் விரிந்தது. அம்புலிமாமா வகையிலே வந்த இலங்கையின் நட்சத்திரமாமாவினை ஒதுக்கினோம். பின்னர், எழுபதுகளின் பின்னரையிலிருந்து, மிஸ்டர் வேதாந்தம், துப்பறியும் சாம்பு, தில்லானாமோகனாம்பாள், பொன்னியின் செல்வன் தொடக்கம், வரும் அத்தனை தமிழ் குடும்ப, 'பெண்', சினிமா, சிறுவர் இதழ்களோடு, பெமினா, இலஸ்ரரேட் வீக்கிலி, பிலிமாலயா ஈறாக அடங்கும் உலகமாக விரிந்தது. இதயம் பேசுகிறது, மயன், குங்குமம், சாவி, திசைகள், வண்ணத்திரை, மங்கையர்மலர், ராணி, அலிபாபா, ராணிமுத்து, கல்பனா, மாலைமதி, கல்கண்டு, துக்ளக், முத்து & வாசு காமிக்ஸ்கள் உட்பட்ட திரிசியம் தெறிக்கும் வானவில்வகை தமிழக, இந்தியப்பதிப்புகளையும் உற்பத்திகளையும் காசைவிட்டு வாங்கித்தள்ளினோம்; 'இதயம் பேசுகிறது' வேங்கடசுப்பிரமணியன் இலங்கை வந்துபோனபோது, எங்கே நம்மூரைப் பற்றியும் ஏதேனும் குறிப்பு இவ்வாரமேனும் வருமா என்று காத்திருந்தோம். .. காத்திருந்தோம்.... காத்திருந்தோம்.... அவர் எழுதாமல் ஏமாற்றியபோதுங்க்ட, அவர் ஆனந்தவிகடனிலிருந்து லட்சுமி சுப்பிரமணியம், மாயாவுடன் சென்று நடத்திய அந்த இதயம் பேசுகின்றது இதழினையும், அவர் பதிப்பித்துத்தள்ளிய அத்தனையையும் வாங்கினோம். ஆனால், ஈழக்கவிஞர்கள், படைப்பாளிகளை இன்னாரெனச் சிலர் அறிந்திருந்தாலுங்கூட, பெரிதளவு ஊக்குவிக்கவில்லை. அதன் பின்னால், எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரே, பிரமிள் என்னும் ஒரு கவிஞர் தமிழகத்திலேயிருக்கின்றார் என்று தெரிந்தது, அதற்குப் பின்னும் மூன்றாண்டுக்குப் பின்னர்தான் அவர் எம் தெருக்காரராகப் பிறந்து வளர்ந்திருந்து தமிழகத்துக்குப் பெயர்ந்தவர் என்பதும் தெரிந்தது. ஆனாலும், அதைப் பற்றியேதும் அச்சமும் நாணமுமுறாமல் இந்திய இராணுவக்காலத்தின் செயற்பாடுகளின்போதும் அதன் பின்னும் எம்மைத் திட்டித் தள்ளிய, இந்திய இராணுவத்தின், அரசின், இந்தியத்தூதுவரின் அத்துமீறல்களைப் பற்றி ஒரு குண்டூசிச்சத்தமோ சொல்லோ எழுப்பாதும் அழகிகள் வண்ணப்படங்களுடம் மினுமினுங்கி வந்த தமிழகத்தின் புதுபுதுச்சஞ்சிகைகள் பத்திரிகைகளையும் வாங்கினோம். எண்பத்தேழிலிருந்து (என்று ஞாபகம்; சரியாகத் தெரியவில்லை) தொண்ணூற்றி இரண்டு வரைக்கும் உழைக்கத்தொடங்கிக் காசு கை கண்டபோது, சொந்தக்காசைவிட்டே இந்தியா ருடே, துக்ளக்(, சரிநிகர்) இவற்றினை எங்கள் அயல் நூலகத்துக்கு நானே எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.

இந்திய இராணுவம் குறித்து எவ்விதமான விமர்சனத்துக்கும் உட்படுத்தாது, ஈழத்தமிழருக்கு எது வேண்டுமென்று தாமே தீர்மானித்துக்கொண்ட துக்ளக் போன்ற சஞ்சிகைகளை இறக்குமதி செய்து சொந்தக்காசினை விட்டு வாங்கிக்கொண்டபொழுதிலேதான், இந்திய இராணுவம் ஈழத்தமிழரின் நலனுக்காக வந்திருப்பதாக, இந்திய இராணுவ ஆதரவுச்செய்தியூடகங்களிலே ஜெயக்காந்தன் என்பவரும் மாபொ சிவஞானகிராமணியாரும் எங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதுதான் முரண்நகை; ஜெயக்காந்தனையும் சிவஞானத்தினையும் விட்டு ஈழத்தமிழருக்குச் சொல்லக் காரணம், அவர்கள்மீதான ஈழத்தமிழருக்கான இலக்கியப்பரிச்சயம் என்பதுதான். காசை விட்டு அவர்களின் படைப்புகளையும் உரைகளினையும் கேட்ட் ஈழத்தவர்களை அவர்களுக்குப் பரிச்சயமிருந்திருக்குமா என்பது இன்றைக்கும் எனக்குள்ளே கேள்விக்குறியே. இப்படியாக, ஜெயக்காந்தன் சொல்லிக்கொண்டிருந்த வேளையிலேதான் அவரை ஆண்டாண்டுக்குப் புண்ணியயாத்திரையாகப் போய்த் தரிசித்து வந்த டொமினிக் ஜீவா பாடசாலையிலே பிள்ளைகள் பயன்படுத்தும் தாள்களைப் போன்ற கடதாசியிலேனும், தன் மல்லிகையைப் பிழைக்க வைக்கமுடியுமா என்று வழி பார்த்துக்கொண்டிருந்தார். ஜெயக்காந்தன் அதைப் பற்றி எதையும் வானொலியிலே எங்களுக்குச் சொல்லவில்லை. எல்லாம் முடிந்து பதினைந்து ஆண்டுகளின்பின்னால், "இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளோடு மோதாமல் திரும்பி வந்திருக்கவேண்டும்" என்ற விதத்திலே ஐங்கரநேசனுக்குச் செவ்வி கொடுக்கின்றார்.3

ஆனால், இப்படியான காலத்திலெல்லாம், குமுதம், இந்தியா ருடே, அவுட்லுக், புரொண்ட் லைன் முதல் எங்களை(யும்) வாசகர்களாகக் கொண்ட சஞ்சிகைகளோ இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைப் பற்றி ஒரு வசனமேதும் உதிர்க்கவில்லை; புத்தகவாசனைக்காற்றிலேகூட விசனிக்கக்கூட இல்லை. மீள மீள தம் அரசின் நிலைப்பாட்டினையே பாடிக்கொண்டிருந்தன; எங்களின் தவறுகளாக தமது செயற்பாடுகளைச் சுமத்தி அவ்வப்போது தேவைக்கேற்ப நியாயப்படுத்திக்கொண்டிருந்தன; அல்லது, பேச்சேயில்லாமலிருந்தன. நாங்கள் தொடர்ந்து குமுதம், இந்தியா ருடே, துக்ளக், கல்கண்டு, கல்கி ஆகியவற்றைச் சலிக்காமல் அகதிக்காசு வந்தபோதும் விட்டு வாங்கிக்கொண்டேயிருந்தோம். ஆக, எம் நிலையைப் பேசியவர்கள் நாங்கள் ஒருபோதும் வாங்கவே எண்ணியிருக்க வாய்ப்பில்லாத, அறிந்திருக்காத ஓரிரு இந்தியச்சிறுபத்திரிகையாளர்களும் பதிப்பாளர்களுமே.

தொண்ணூறுகளின் பின்னால், புலம்பெயர்ந்த ஈழத்தவரினைக் குறி வைத்த பெருவணிகச்சஞ்சிகைகள் அவதானமாக ஈழத்தவர்கள் என்ற பெயரிலே அரசியல் சாராத அல்லது அரசியற்சோரம்போன அல்லது விடுதலைப்புலிகளுக்கெதிரான நிலைப்பாடுள்ள அல்லது இந்திய ஆதரவுநிலைப்பாடுள்ள புலம்பெயர்ந்தவர்களை ஈழத்தவர்கள் என்ற பெயரிலும் ஈழத்தவரின் பன்முகத்தலைமைகள் என்ற பெயரிலும் முன்னிலைப்படுத்தின. குமுதம், யாழ்மணம் என்பதினை வெளியிட்டபோது, கேட்காமலே அள்ளிப்போட்டவற்றினை விட்டால் [எப்படி எனக்குத் தெரியுமென்றால், நான் உயிர்நிழலிலே எழுதிய ஒரு கோழிமுட்டைத்துக்கடாவை அள்ளிக் கவிதை என்று வகை பிரித்துப்போட்டதனாலேதான்], மிகவும் கவனமாக, ஈழத்திலே அப்போதும் வாழும் தமிழர்களின் படைப்புகளைத் தவிர்த்துக்கொண்டன. அரசியலை மிகவும் இலகுவாக இராஜீவ் காந்தி கொலைக்கு முன்னால்/பின்னால் என்பதாக மட்டுமே நிலைப்படுத்திக்கொண்டு செயற்பட்டன. அப்போதுங்கூட, புலம்பெயர்ந்தும் பெயராதிருந்தும் குமுதம், இந்தியா ருடே, துக்ளக் இவற்றினை வாங்கிக்கொண்டு மேலதிகமாக சன் தொலைக்காட்சிக்கும் செய்மதியுணர்தி பொருத்திப் பார்த்துக்கொள்ளத் தொடங்கினோம் - எல்லாமே எம் சொந்தக்கையிருப்பினை விட்டுத்தான்.

அதேநேரத்திலே, எங்களுக்கு, சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலருக்குப் பட்டம் கொடுக்கப்பட்டதை இதே சஞ்சிகைகளின் ஆசிரியர்களே எடுத்துச் சொன்னார்கள். அதன் பின்னால், பத்தாண்டுகளிலே பார்த்தால், அதே லேனா தமிழ்வாணனின் அண்ணன் ரவி தமிழ்வாணன் ஈழம், புலம் அனைத்திலும் அலைந்து பதிக்க, "சோளங்கதிர் ஐந்து வாங்கினால், ஒன்று இலவசம்" என்ற வகையிலே படைப்பாளிகளைத் தேடிப்பிடித்தார். இந்திய பதிப்பகங்களோ, பத்திரிகை+சஞ்சிகைகள், திரைப்படங்கள் பெரிதான பொருளாதார அளவிலே ஈழத்தமிழரையோ புலம்பெயர்ந்தவர்களையோ நம்பியில்லை என்பதை அறிவேன். ஆனால், ஆனந்தவிகடன் தொடங்கிய காலத்திலிருந்து எமது கைப்பொருளைவிட்டு வாங்கிய இச்சஞ்சிகைகளோ ஊடகசேவைகளோ தம் நாட்டின் மீதான குற்றங்களை முற்றாக மறைத்துவிட்டும் ஈழத்திலான தம் நோக்கத்தினைத் தம் நாட்டின் அதேமொழிபேசும் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தாமலுமிருந்துவிட்டு (திரித்ததையும் சேர்த்துக்கொள்ளலாம்), தொடர்ந்தும் எம்மை வாடிக்கையாளராகக் கொண்டிருப்பது, எம்மைப் பற்றிய இவர்களின் உட்கருத்தினை மிகவும் தெளிவாகக் காட்டிவிடுகின்றது.

எமது கருத்துகள் இந்திய இராணுவத்தின் இலங்கைக்கான வருகையின் பின்னால், ஒருபோதும் இச்சஞ்சிகைகளிலே, ஊடகங்களிலே தெரியப்படுத்தப்பட்டதில்லை. கிட்டத்தட்ட ஈராக்குக்குப் படையினரோடு சென்ற அமெரிக்கப்பத்திரிகையாளர்கள்போலவே தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்கள் செயற்பட்டுக்கொண்டார்கள். இராம், மாலன், சோ போன்ற இதழாசிரியர்கள் இன்னமும் ஒரு படி மேலே சென்று இந்த அரசியலிலே தமக்கான ஒரு நிலைப்பாட்டினைக்கூட எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு அப்படி எடுக்க இருக்கும் உரிமையை எவ்வகையிலும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர்களாகவிருக்கும் ஊடகங்கள், சஞ்சிகைகள், செய்திநிறுவனங்களிலே பணம் விட்டு வாங்கிக் காணும் எல்லா வாசகர்களுக்கும் பேதமின்றிக் கருத்தினைச் சொல்லும் சந்தர்ப்பத்தினையும் செய்திகளைச் சரியான தரவுகளோடு எவருக்குச் சாதகம்-பாதகம் என்றில்லாமலே தந்திருக்கவேண்டும். ஆனால், ஒருபோதும் செய்யவில்லை. எங்கள் குரலைக் கேட்கவிடவில்லை.

இப்படியான பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர்களுக்கு பிரபல இந்திய ஊடகவியலாளர் ஒருவர் காஷ்மீரை முன்னிலைப்படுத்தி இந்தியா-பாக்கிஸ்தான் மக்களைக் குறித்து ஊடகங்களின் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்திச் சொன்னதை இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்; "...before talking of any political solutions, misgivings have to be cleared. An average Indian especially from the south sees Kashmir only on TV or in the paper and perceives Kashmiris to be unpatriotic or ungrateful. Perhaps the media is responsible for this portraiture. This has to be rectified. Possibly a similar situation prevails with reference to Pakistan. There is a very colonial mindset with a series of biased perceptions against each other. Without clearing the air, it is not possible to put forward a solution. There is a very large constituency for peace and this has to be strengthened before moving towards any solution. And, yes, there is definitely a need for more interaction with Kashmiri journalists..." இத்தகைய களநிலையை, உண்மைநடப்பினை, தமிழ்நாட்டின், இந்தியாவின் பத்திரிகையாளர்கள் தம் உற்பத்தியினைத் தொடர்ந்து வாங்கும் ஒரே மொழி பேசும் ஈழத்தமிழருக்காக, அவர்களின் குரல்களையும் கேட்டு, தமது சொந்தநாட்டிலிருக்கும் வாசகர்களுக்கும் அடுத்த பக்கத்தினைச் சொல்லியிருக்கச் செய்திருக்கவேண்டிய அவசியமும் வாய்ப்புமுள்ள பத்திரிகைநெறியும் வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தவேண்டிய கடப்பாட்டு வியாபாரநெறியுமிருந்திருக்கின்றன. ஆனால், மாலன், லேனா போன்ற ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள் செய்யவில்லை. எங்கோ ஆங்கிலம் பேசும் அமெரிக்கா அரபு பேசும் ஈராக்குள்ளே நுழைவதற்காக யுத்தத்தினை எதிர்த்துக் குரல் எழுப்பி தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும் ஆர்ப்பாட்டம் பண்ணுவதிலே மும்முரமாகவிருந்திருக்கின்றார்கள். யாரோ ஆங்கிலம் பேசும் அமெரிக்க ஊடகவியலாளர்களிலே ஓரிருவரேனும் விழித்துக்கொண்டு, அரபுத்தேசத்திலே அபு கிராப் பற்றியோ, அமெரிக்க இராணுவத்தினர் சிலரின் ஈராக்கியப்படுகொலைகள், பாலியல்வன்புணர்வுகள் பற்றிப் பேசும்போதும், அந்த அழுத்தத்திலே அமெரிக்க அரசு சம்பந்தப்பட்டவர்களிலே விசாரணை நடத்தும்போதும் நியாயம் நிகழ்ந்ததென இப்பத்திரிகையாசிரியர்கள் வரவேற்கின்றார்கள். ஆனால், இன்றைய நாள்வரை அதேபோன்ற இந்திய இராணுவத்தின் ஈழச்செயற்பாடுகள் குறித்து ஏன் விசாரணை எழுப்பப்படவில்லையென்றோ என்ன நடந்ததென்றோ ஒரே மொழி பேசும், ஈழத்தமிழருக்கு இன்னமும் பதிப்புற்பத்தி ஏற்றுமதி செய்யும் தமிழகப்பத்திரிகையாளர்களோ, செய்தியாசிரியர்களோ அதைப் பற்றி ஒரு சொட்டுச்சத்தமுமெழுப்பவில்லை. நாங்கள் தொடர்ந்தும் குமுதம், கல்கி, துக்ளக், இந்தியா ருடே, புரொண்ட் லைன் வாங்கிக்கொண்டு, சிவாஜி படத்திலே "யாழ்ப்பாணப்பெண்ணெடுப்பது" குறித்து ஒரு வரி சொன்னது எமக்கான அங்கீகாரமெனப் புளகாங்கிதம் அடைந்துகொள்கிறோம். (இங்கேதான் என் முதற்கூற்றிலே சொல்லப்பட்ட கருத்துநிலைவிடுதலை அவசியமாகின்றது. எவரது அங்கீகாரமும் எமக்குத் தேவையில்லை; ஆக, நாம் எதிர்பார்ப்பது, சமதட்டிலிருக்கும் சக நண்பர்களையே)
இத்தனைக்குப் பிறகு, இப்படியான அவலச்சூழலிலே அவம்சுமக்கும் தன் ஊடகவியலாளர் முகத்தினை இன்னமும் இணையத்திலே(யும்) காவி வந்து "விடுதலைப்புலிகளையா இந்துவையா உலகம் நம்பும்?" என்று மாலன் வெட்கமின்றி எம்மிடம் கேட்கும்போது, இத்தனை ஆண்டுகளாக குமுதத்துக்கும் இந்தியா ருடேக்கும் நான் விட்டழித்த காசின் பெயரினாலே, தமிழகச்சஞ்சிகைகளில் இழந்த நம்பிக்கையின் பேரால், ஒரு வாசகனாக, ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளனாக, அவரிடம், அவரது பத்திரிகாதர்மம் மேலே, இங்கே -அவர் தப்பித்துப்போகமுடியாத,என் குரலும் அமுக்கமுடியாது கேட்கும் இணையத்திலே- கேள்வி கேட்காமல், வேறெங்கே, வேறு யாரிடம், வேறெப்போது, வேறெதைப்பற்றி நான் கேட்பது? இதைக் காழ்ப்புணர்விலே கேட்கின்றேன் என்று அவர் கருதினால், "இத்தனை நாள் உங்கள் உற்பத்திகளைத் தரம், குணம், மணம் பற்றியேதும் கேட்காமல் வாங்கிக்கொண்டேயிருந்த எங்களின் அவலங்கள் பற்றி ஒரு சொல் உங்கள் சஞ்சிகைகளிலே, செய்திகளிலே உங்கள் நாட்டுக்கோ, இராணுவத்துக்கோ மாற்றானதாக விடாத உங்களின் உணர்விலே எம்மைப் பற்றிக் காழ்ப்பிருந்திருக்கவில்லையா? ஓர் இரண்டாம்நிலைத்தமிழர்களென்ற கீழ்நோக்கிய பார்வையிருக்கவில்லையா? " என்று நான் எதிர்க்கேள்வி கேட்கலாமா?


இத்தனைக்கும் பின்னால், "விடுதலைப்புலிகளையா இந்துவையா உலகம் நம்பும்?" என்று இங்கே இணையத்திலே எள்ளலாகக் கேட்பவர், "...before talking of any political solutions, misgivings have to be cleared. An average Indian especially from the south sees Kashmir only on TV or in the paper and perceives Kashmiris to be unpatriotic or ungrateful. Perhaps the media is responsible for this portraiture. This has to be rectified. Possibly a similar situation prevails with reference to Pakistan. There is a very colonial mindset with a series of biased perceptions against each other. Without clearing the air, it is not possible to put forward a solution. There is a very large constituency for peace and this has to be strengthened before moving towards any solution. And, yes, there is definitely a need for more interaction with Kashmiri journalists..." என்று இலங்கையிலே பெந்தோட்டவிலே நடந்த இந்திய-பாக்கிஸ்தான் உறவுநிலை குறித்த ஊடகவியலாளர்கூடலிலே காஷ்மீரிகள் & பத்திரிகையாளர்கள் பற்றி -கொழும்பிலே சக தமிழ்ப்பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் அதே காலகட்டத்திலே அது பற்றி எங்குமே பதிவு செய்யாமல்- பேச முடிமுடியுமானால், அது பாசாங்குத்தனமில்லாமல் வேறென்னவென்றே தோன்றுகின்றது.


இப்போது, சொல்லுங்கள், மாலன், உங்களைப் போன்ற ஒரு தமிழ்ப்பத்திரிகையாளரிடம், வாய்ப்பாகிப்போன எனது-உங்களது என இருபக்கக்குரல்களும் கேட்கக்கூடிய இணையத்திலே, கேட்காமல், வேறு யாரிடம் நான் இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே என் ஈழம்-இந்தியா பற்றிய கேள்விகளையும் உங்களின் பத்திரிகாதர்மங்களின் இரட்டை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிலைப்பாடுகளைப் பற்றியும் கேட்பதாம்?

உசாத்துணை (அச்சு நூல்கள்)
1 ஆ. இரா. வேங்கடாசலபதி (2002) நாவலும் வாசிப்பும்; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
2 இரா. வை. கனகரத்தினம் (2001) ஆறுமுகநாவலர் வரலாறு: ஒரு புதிய பார்வையும் பதிவும்; பூரணம் வெளியீடு, கொழும்பு
3 பொ. ஐங்கரநேசன் (2006) வேர்முகங்கள்: நேர்காணல்களின் தொகுப்பு; சாளரம் வெளியீடு, சென்னை

-/இரமணிதரன், க.
'07 ஜூலை 27 வெள்ளி 17:28 கிநிநே.



கரைவு~

Saturday, July 21, 2007

கரைவு - 9



ஜெயச்சந்திரன் கோபிநாத்தின் வலைப்பக்கம் 1995



சிறுபொறியும் நொய்புள்ளியொன்றில் நெகிழ்ந்த கணத்திலே தெறிக்க, பரவிச் சுற்றெல்லாம் பற்றிக்கொள்கிறது. மாலனின் "விட்டுப்போன எட்டு" என்ற வலைப்பதிவு இடுகையிலே சொல்லப்பட்ட தமிழிணையம் பற்றிய கருத்துகள், பெருமளவிலே இக்குறிப்புத்தொடருக்குப் பொறியாகியிருக்கின்றது.


முன்நிகழ்வுகளின் சுருக்கம்

மாலன் தன் "எட்டியவரைக்கும் ஒரு எட்டு" பதிவின் பின்னூட்டத்தில் சுதேசமித்திரன் பாரம்பரியம், "விட்டுப்போன எட்டு" என்ற பதிவிலேயும் இணையத்திலே தமிழினை ஏற்றியது, கோவிந்தசாமி, கணிச்சொல்லகராதி, தமிழின் முதல் யூனிக்கோட் எழுத்துரு இதழ், வலைப்பதிவின் வரலாறும் வளர்ச்சியும் ஆகியவை குறித்த இரு குறிப்புகளினையும் உள்ளடக்கியிருந்தார். அதற்கு "இணையபிதா கோவிந்தசாமி" என்ற அர்த்தத்திலே அருணா ஸ்ரீனிவாசனும் பின்னூட்டியிருந்தார். இவர்களின் கருத்துகளிலே, தரவுகளிலே காணப்படும் வழுக்களையும் அவ்வரலாற்றுத்தரவுகளுக்கு மாற்றுகளிருப்பதற்கான சாத்தியத்தைச் சுட்டாத முழுமையின்மையும் பற்றி எழுத எண்ணியிருந்தேன். அதே நேரத்திலே, செல்வநாயகியின் "மக்கள் பங்குபெறாத புரட்சியிலே பயனில்லை" பதிவிலே வெளியான மாலனது, எனது எதிர்வினை, தெறிவினைகளின் காரணமாக, இவ்(வி(தண்டா))வாதம் ஈழம், இந்தியா, விடுதலைப்புலிகள், தி இந்து ராம், எள்ளல்/ஏகடியம் ஆகியவை குறித்தும் நீட்சியடைந்து, பேச்சு தடித்து விரிந்தது; இவற்றினைத் தொட்டு, மாலன், தொட்டுப்போனவர்களுக்கு நன்றி" என்ற இடுகையையும் நான் "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" என்ற இடுகையினையும் இட்டோம்.

இவ்விடுகையிலே, நாவலர், உதயதாரகை, மற்றும் கணித்தமிழ், பாரம்பரியம் இவை பற்றி மாலனினாலே சொல்லப்படாத மாற்று வரலாறுகளுக்கான சாத்தியங்களையும் சான்றுகளையும் ஓரளவுக்கு இணைத்திருந்தேன். இதற்கான எதிர்வினைகளாக, என் இடுகைகளிலே 'பாஸ்டன்' பாலாஜி, டிசே, 'மூக்கு' சுந்தர், தீவு, இரவிசங்கர், தங்கமணி, கொழுவி, குளக்காட்டான், குழப்பி உட்பட சிலர் பின்னூட்டியிருந்தனர். பதிலுக்கு, அருணா ஸ்ரீனிவாசன் மூன்று இடுகைகளைத் தந்திருந்தார்; தலைப்பற்ற இடுகை (சுட்டும் காரணம் நோக்கி அவ்விடுகையினை அதன் முன்மூன்று சொற்கூட்டால் "பெயரிலி என்ற ரமணீதரனுக்கு" என்று இனிக் காட்டுவேன்), TamillNet 97 and 2000, Tamil on Web. இவ்விடுகைகள், கு. கல்யாணசுந்தரம், 'முரசு' நெடுமாறன், நா. கோவிந்தசாமி ஆகியோரினை அவர் கண்ட செவ்விகளைத் தந்திருந்தன. இவற்றிலே மாலன், 'அச்சுப்பதிப்பிலிருந்து இணையத்தின் ஏறிய முதலாவது தமிழ்ச்சஞ்சிகை' என்று குறிப்பிடுதலுடன் மாலனின் கருத்தும் இடம் பெற்றிருந்தது. இதன் பின்னால், மாலன், அன்புள்ள பெயரிலிக்கு என்ற இடுகையைத் தந்திருந்தார். இவரின் இவ்விடுகை விடுதலைப்புலிகள், வலைப்பதிவுகளின் எதிர்காலம், எதிர்வினைகளில் எள்ளல், தமிழ்ப்பாரம்பரியம், கோவிந்தசாமி- இணையத்தில் தமிழ் ஆகியவற்றுக்கான அவரின் ஆதாரங்கள் அடக்கியவை.

இவற்றுக்கான எதிர்வினைகளை அவ்வப்போது என்னுடைய முன்னே சுட்டிய "விட்டதன் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" இடுகையிலே இட்டுவந்தேன். விடுதலைப்புலிகள் தொடர்பான மாலனின் ஒரு கருத்துக்கு, கொழுவி தனது, "கள நிலவரங்களும் மக்கள் ஆதரவும்" இடுகையினை எதிர்வினையாக்கியிருந்தார். வலைப்பதிவுகளின் அமைப்பு, தொழிற்பாடு குறித்த எதிர்வினைகளை ஓசை செல்லா, "இப்படிச் சொல்லீட்டிங்களே மாலன்?" எனவும், மாயன் "மாலன் Vs. செல்லா - சில கருத்துக்கள்" எனவும் தந்திருந்தனர். மேலும், செல்வநாயகி, "அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்" என்று ஈழத்தமிழர் குறித்த மாலனின் இடுகைக்குத் தொடர்பான இடுகையைத் தந்திருந்தார். இவற்றோடு வாய்ஸ் ஆன் விங்க்ஸ், இவ்விவாதங்களின் போக்கினைச் சுட்டி, "வெற்றுவிவாதங்கள் தரும் அயர்ச்சி" என்ற இடுகையினை இட்டிருந்தார்.

இவ்விடுகைகளின் பட்டியலை வாசிப்பவர்களின் வசதிக்காக, கீழே தந்திருக்கின்றேன்.

1. எட்டியவரைக்கும் ஒரு எட்டு - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post.html


2. விட்டுப்போன எட்டு - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post_05.html


3. மக்கள் பங்குபெறாத புரட்சியிலே பயனில்லை - செல்வநாயகி
http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_05.html


4. விட்டதன் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல் - -/பெயரிலி.
http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html


5. பெயரிலி என்ற ரமணீதரனுக்கு - அருணா ஸ்ரீனிவாசன்
http://aruna52.blogspot.com/2007/07/blog-post_12.html


6. TamillNet 97 and 2000 - அருணா ஸ்ரீனிவாசன்
http://arunasarchive.blogspot.com/2007/07/tamil-net-97.html


7. Tamil on Web - அருணா ஸ்ரீனிவாசன்
http://arunasarchive.blogspot.com/2007/07/naa.html


8. தொட்டுப்போனவர்களுக்கு நன்றி - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post_2256.html


9. அன்புள்ள பெயரிலிக்கு - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html


10. இப்படிச் சொல்லீட்டிங்களே மாலன் ? - ஓசை செல்லா
http://osaichella.blogspot.com/2007/07/blog-post_08.html


11. மாலன் Vs. செல்லா - சில கருத்துக்கள் - மாயன்
http://www.pkblogs.com/maayanpaarvai/2007/07/vs.html


12. கள நிலவரங்களும் மக்கள் ஆதரவும் - கொழுவி
http://koluvithaluvi.blogspot.com/2007/07/blog-post_16.html


13. அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் - செல்வநாயகி
http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_18.html


14. வெற்றுவிவாதங்கள் தரும் அயர்ச்சி - வாய்ஸ் ஆன் விங்க்ஸ்
http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post_15.html




இத்தொடர் மீதான என் எதிர்பார்ப்பு

இவ்வாதங்கள்மீதான தொடர்ச்சியான என் சிறுகுறிப்புகளை வாசிக்க முன்னால், மேலே தந்திருக்கும் இடுகைகளை மிகவும் அவதானமாக வாசிக்கும்படி ஈடுபாடுடையோரைக் கேட்டுக்கொள்கிறேன். அவரசமான எதிர்வினையாற்றல், குழப்பத்தைத் தந்து எதிர்வினைகளைத் திசை திருப்புவதோடு நேர, சக்திவிரயங்களையும் எல்லோருக்கும் ஏற்படுத்தும். இதுவரை இவ்விடயத்திலே நான் அவதானித்ததன்படி, அருணா, மாலன் போன்ற சம்பந்தப்பட்டவர்கள்கூட என் இடுகை, பதில்களின் கருத்துகள், இணைப்புகள் ஆகியவற்றினைக் கவனிக்காமல், மீண்டும் எனக்கே அவ்விணைப்புகளை வாசிக்கும்படி சுட்டுவதும் (கோவிந்தசாமியின் தமிழ்நேஷன் தொடர்பான சுட்டி, Casting their Net) தமக்கு வாய்ப்பான ஆதாரத்தரவுகளைக்கூடத் தவறவிடுவதும் (நா. கோவிந்தசாமியின் 1995 ஆண்டின் இணையமேறிய தமிழ்க்கவிதைப்பக்கத்தினையும் அவர் 1995 செப்ரெம்பரிலே தொடங்கியதாகச் சொல்லி, 27 ஒக்ரோபர் 1995 இலே தமிழ்பொயம்ஸ் ஏறியதாகக் குறித்த அவரின் இணையப்பக்கத்தினையும் சுட்டிக்காட்டியும் மாலன் அதற்குப் பின்னாலான இரண்டாம்நிலைத்தரவுகளை முன்வைக்கின்றார்) அவலமான நிலை. இதற்கு என் இடுகையின் எழுத்துநடை ஏதேனும் காரணமாகவிருந்திருந்தால், அவர்கள் மன்னிக்கவேண்டும்.

பொதுவாக என் வலைப்பதிவுக்கு எவரையும் வரவேண்டுமென்ற எண்ணத்தினைத் தமிழ்மணத்திலே சேர்த்தலுக்கப்பால், நான் பின்னூட்டக்கயமையினாலோ வேறேதோ வகையினாலோ முயற்சிப்பதில்லை. ஆனால், இச்சிறுதொடரை வாசிக்கும் நண்பர்கள், இயன்றவரை தம் நண்பர்களிடம் (-பல்லைக்கடித்துக்கொண்டு) வாசிக்கும்படி கேட்க வேண்டுகோள் விடுக்கின்றேன். இஃது என் பதிவு கவனம் பெறுவதற்காகவல்ல; ஆனால், "சார், நல்ல விளக்கம்!", "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது","காய்த்த மரத்தில் கல்லெறிவது நல்லதுதான் போலும்; இல்லையெனில் இத்தனை 'கனிகள்' விழுமா என்ன ..?", "இ-தமிழின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி" என வெளிப்படையான வழுக்களும் பலமில்லாத ஆதாரங்களும் பரவிக் கிளைத்திருக்கும் மாலனின் இடுகைக்கு விழுந்திருக்கும் பின்னூட்டங்கள் தமிழ் இணையம், தமிழ்க்கணிமை குறித்த நிகழ்வுகள் எதிர்காலத்திலே எப்படியாக எழுதிவைக்கப்படப்போகின்றதென்ற பயத்தினை ஏற்படுத்துகின்றன. 'முப்பதாண்டு பத்திரிகையனுபவம் மிக்க' மாலனின் பிரபலமோ, 'இணைய ரவுடி' -/பெயரிலி. மீதான தனிப்பட்ட வெறுப்புணர்வோ தமிழ்மொழி சார்ந்த வரலாற்றினைத் திரிபுற்றுப் புரிந்துகொள்ளக்காரணமாகிவிடக்கூடாது. அதற்காகத்தான் இவ்வேண்டுகோளை முன்வைக்கின்றேன் - -/பெயரிலி. குறித்த அபிப்பிராயத்தினை மாற்றவல்ல. மாலன், அருணா ஆகியோர் முன்வைத்திருக்கும் ஆதாரங்கள், தரவுகள், கருத்துகளை, இத்தொடரிலே இனி வரும் இடுகைகளிலே ஒவ்வொன்றாக எதிர்கொண்டு பதிலளிப்பேன்.

வரலாறென்பது விமர்சனத்தோடு அணுகப்படவேண்டியது. நிகழ்வுகளை வரலாறு என்ற பெயரிலே பதியும்போது, பதிகின்றவனின் பார்வை நிகழ்வின்மீது தொடர்ந்தும் தன் எச்சத்தை இட்டுப்போவதைத் தவிர்க்கமுடியாது; ஆனால், நேர்மையான வரலாற்றுப்பதிதல் என்பது, வரப்போகும் விமர்சனத்தன்மையுள்ள வாசகன் சொல்லப்பட்ட வரலாற்றிலிருந்து எழுதியவனின் பார்வையைப் பிரித்து தரவுகளை உள்வாங்கவும் இன்னொரு வரலாற்றுக்குறிப்பாளன் அத்தரவுகளை நம்பிக்கையுடன் மேற்கோள்காட்டி விட்டுப்போன பகுதியைப் பொருத்தமான வகையிலே மீளாய்ந்து இட்டுநிரப்பவும் கிட்டும் புதிய தரவுகளை தகுந்த இடங்களிலே இடைச்சேர்க்கவும் வசதியை வழங்குவதாகவும் இருக்கவேண்டும். அறியாத காலம் பற்றிய வரலாற்றினை, தன் கைவசமிருக்கும் அல்லது தான் நம்பும் தரவுகள் போதுமானவையும் அறுதியானவையும் என்ற தீர்மானத்துடன் எவரும் முழுமையாகப் பதிவு செய்யமுடியாது; பதிவு செய்யக்கூடாது. தமக்கு அறியப்படாத மாற்றுநிலைகளும் நிகழ்வுகளும் இருக்குமென்பதை ஏற்றுக்கொண்டு அவற்றின் சாத்தியத்தைத் தன் வாசகருக்கு உணர்த்தி, தன் பார்வையிலே தரவுகளைத் தருகின்றபோதே அவ்வரலாறும் அதன் ஆசிரியரும் தன்னுடைய இன்றைய நாளைய வாசகர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் சரியானதைச் செய்கின்றவராகின்றார்; நேர்மையுடைத்தவராகின்றார்.

வரலாறு என்பது ஒற்றைப்புல்லுமில்லாத வெட்டவெளியிலே ஒற்றைத்தடமாக மணற்கோடு கீறுவதாகாது; நிகழ்வுகளாக உறுதிப்படுத்தப்பட்ட பல புள்ளிகளூடாகச் செல்லக்கூடிய அனைத்து நெளிகோடுகளினதும் தொகுப்பாகவே இருக்கமுடியும். இவற்றிலே எக்கோடு பொருத்தமானதென்பதை இனிவரும் நாட்களிலே தோண்டியெடுத்துச் சரிபார்த்த புதிய தரவுகளே தீர்மானிக்கமுடியும். சாதாரணமாக வாசகர்களுக்குப் போகின்றபோக்கிலே கதை சொல்கின்றபோதுங்கூட, இக்கவனம் பிறழாமல் ஒருவர் செய்யவேண்டும். இதன் அடிப்படையிலேயே என் இக்குறிப்புகள் தொடர்கின்றன. நான் எத்தரவினையும் ஆதாரத்துடன் முன்வைக்கும்போதும், கருதுகோள்களை அவற்றுக்குரிய போதும்-போதாமை உணர்ந்து எடுத்துக்கொள்வதிலும், முடிவான நிறுவல்களை, தரவுகள் போதாத வெளிகளிலே இருக்கும் தரவு, கருதுகோள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி ஏரணத்தின் அடிப்படையிலும் இயன்றவரை தர முயற்சிக்கின்றேன் என்பதை வாசகர்களுக்குத் தெளிவுபடத் தெரியப்படுகிறேன்.


எனது இச்சிறுதொடரின் நோக்கம், எவரையும் எதிலும் வெல்வதல்ல; நாவற்கிளையேதும் நான் நாட்டித்தொடங்கவில்லை. ஆக, நிகழ்ந்ததை, திருத்தமான ஆதாரத்தரவூடாக மேலும் தெளிவாக்கியும் நேராக்கியும் காட்டுதலும் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் என் தனியான புரிதல்களையும் பார்வைகளையும் தருதலுமேயாம்.

தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களிலே எழுதச் சந்தர்ப்பம் வாய்க்காது; ஆனால், ஓகஸ்டு 2007 இற்கு முன்னால் இச்சிறுதொடரை -இடையிலே வரும் எதிர்வினைகளுக்கும் இயன்றவரை பதிலளித்து- முடித்துவிடுவேன்.


இச்சிறுதொடரிலே கீழ்க்கண்ட இடுகைகளை இப்போதைக்கு இடுவதாக இருக்கின்றேன்

பகுதி 1 - மு(எ)ன்னுரையும் இன்ன பிறவும்
மாலன், அருணா, வாய்ஸ் ஆன் விங்க்ஸ் ஆகியோரின் மையக்கருத்துகளிலிருந்து விலகியோ முக்கியமற்றோ துகள்போலக் காணப்படும் சில உதிரி விடயங்கள் பற்றிய பதிவு இது. இணையபிதா, டாக்டர்/பேராசிரியர், வரலாற்றை உரைப்பதில் பிரபலங்களின் தாக்கம், எள்ளலும் மாலனைக் கேள்வி கேட்பதற்குமான காரணங்கள், ஆதாரங்களை முன்வைக்கும் முறையிலிருக்கும் பிரச்சனைகள், வலைப்பதிவுகளை நோக்குதல், இணையத்தமிழ் வரலாற்றினைப் பதிவு செய்யும் நோக்கு

பகுதி 2 - இணையத்தமிழ் ஆரம்பம்
soc.culture.tamil, gif தமிழ், இணையபிதா?, இணையத்திலே தமிழ் மீதான பொதுக்கருத்து, கோவிந்தசாமி, தமிழ்நெற் எழுத்துரு.எதிர்.தமிழ்நெற் இணையக்குழு, கணியன்+தமிழ்நெற் விசைப்பலகை+எழுத்துரு .எதிர்.கணியன் இதழ்.எதிர்.பூங்குன்றனார் கவிதை, மாலனின் ஆதாரங்களின் ஓட்டைகளும் துருக்களும் களிம்பேற்றமும், கல்யாணசுந்தரம் (மயிலை)/மின்னூலகம், ஜெயச்சந்திரன் கோபிநாத்+சைரஸ் தமிழினை எழுத்துருவினால் இணையமேற்று முயற்சி (ஓகஸ்ட்/செப் 1995)

பகுதி 3 - தமிழில் முதல் சஞ்சிகை, யூனிகோட் சஞ்சிகை, இன்ன பிற 'முதல்'
இணையம் கண்ட முதல் தமிழச்சுச்சஞ்சிகை 'குமுதம்' ஆ?, முதல் யூனிகோட் தமிழிதழ் 'திசைகள்' ஆ? முதல் தமிழ்ப்பக்கங்கள் தேடி, முதல் தமிழிணைய உரையாடி, இன்ன பிற

பகுதி 4 - தமிழில் கணிச்சொற்கோவை அமைத்தலும் தன்னாவத்தொண்டுகளும்
தமிழிலே கணிச்சொற்கோவை இணையத்திலே ஆகிவரும் முறை, தன்னார்வத்தொண்டுகளும் செயற்பாடுகளுக்கான பங்களிப்புகளும் பங்குபிரித்தல்களும்

பகுதி 5 - தமிழில் வலைப்பதிவு
தமிழில் வலைப்பதிவு.. எங்கிருந்து, எங்கே, எவரால், இனி எப்படி

பகுதி 6 - தமிழ் இலக்கியப்பாரம்பரியம்
யாருடையது, தமிழகத்தின் சுதேசமித்திரன் பாரம்பரியம் அடக்குவன இவை என்ற பிம்பக்கட்டுமானம், கட்டுமானம் உருவாகும் முறை, தமிழுக்கு சுதேசமித்திரன் சுட்டாதனவற்றின் பங்களிப்பு பேசும் தேவைக்கேற்ப, மொழிவளர்ச்சியில் ஈழத்தின் பங்களிப்பு

பகுதி 7 - ஈழம், இந்தியா, இந்து ராம், மாலன், விடுதலைப்புலிகள்
ஈழம், இந்தியா, இந்து ராம், மாலன், விடுதலைப்புலிகள், தரவின்றித் தன் மையத்துக்காய்க் கருத்துக் கட்டமைத்தல்


இயன்றவரை கைக்கெட்டிய இணையம், கையிருப்பு நூல்கள் ஆகியவையே என் ஆதாரங்களாகும். ஆனால், அவற்றினை முன்வைத்தே பேசுவேன். இக்கட்டுரைக்கான மேலதிகமான ஆதாரங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தித் தந்த (& தரப்போகும்) நண்பர்களுக்கும் நேரமெடுத்து என் பதிவுக்குப் பதில் தரும் விதத்திலே பதிவிட்ட மாலன், அருணா ஆகியோருக்கும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

'07 ஜூலை 21, சனி 00:35 கிநிநே.


கரைவு~

Wednesday, May 02, 2007

கரைவு - 8



1. பிரேம்-ரமேஷின் கட்டுரையை "அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள்" டிசே எடுத்துப் போட்டிருக்கிறார். இரண்டு தடவைகள் வாசிக்க, ஓரளவு புரிந்தது (என நினைக்கிறேன்). கருத்தளவிலே ஆண்மை-பெண்மை இரண்டு கருத்தாக்கங்களும்/களையும் அழிவது/அழிப்பது நன்றாகத்தான் இருக்கின்றது - ரயாகரனின் உலக அரசியல் & பொருளாதாரம் குறித்த கட்டுரைகள்மூலம் உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைத் தருவதுபோல. ஆனால், நடைமுறையிலே கருத்தாக்கிகளின் பிரச்சனைகளுக்கான கருத்தளவிலான தீர்வுகளும் தீர்ப்புகளும் நடைமுறைக்கு எப்படியாகப் பயனுள்ளதாகப் போகின்றன என்பது காலத்துக்குமான சிக்கல். தூயகணிதத்தினைப் பிரயோககணிதத்துக்குப் பயன்படுத்துவதுபோன்ற தொடர்பளவிலே இலகுவான நிலை சமூகப்பிரச்சனைகளுக்கில்லை. பிரேம்-ரமேஷின் கருத்தாக்கத்துக்கும் இந்த அவநிலைதானிருக்கின்றது. ஆண்மை-பெண்மை என்ற இரட்டைக்கருத்துகளும் அழியவேண்டுமென்பதிலே மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதெப்படி? பிக்குணி எரியும் திரியை எண்ணெய்க்குள்ளே அழுத்தி அணைப்பதினால் கிடைக்கும் "உள்ளார்ந்த முழுமை" எவ்வகையிலே இக்கருத்தழிப்புக்கான நடைமுறை? கருத்தளவிலே ஆண்-பெண் என்றில்லாது எல்லோருக்குள்ளும் உட்கார்ந்திருக்கும் சொற்களைக் கட்டுடைத்தலும் அழித்தலும் புதுக்கலும் உருவாக்குதலும் முன்னோக்கிய சிறுநடைக்கு உதவலாம். ஆனால், அடிப்படையிலேயே (எதிர்ப்)பால் அளவிலான சந்தேகத்தினை "பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல" என்று எடுகோளாக முன்வைக்க வற்புறுத்தும் இக்கட்டுரை எப்படியாக இந்த கருத்தமைப்பின் அழிப்பினைப் பால்வேறுபாடின்றிச் செய்ய உதவப்போகின்றது?


2. டிசேயின் பிரேம்-ரமேஷின் இடுகைக்கு வந்திருக்கும் கறுப்பியின் பின்னூட்டம், "என்ன செய்வது இது ஆண் அதிகார உலகம். எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகின்றது. சின்ன விடையங்களுக்குக் கூட போராட வேண்டிய நிலையில்தான் இன்றும் என்றும் பெண்கள் இருக்கப் போகின்றார்கள்." பின்னூட்டம் இடமுன்னால், டிசே போட்ட இடுகையை வாசித்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஆண்மை-பெண்மை கருத்தமைப்பினை முழுதாய் அழித்தல் என்பது குறித்ததான இடுகை இது - இதிலே வந்து 'ஆண் அதிகாரம் & கெடுதல்' பற்றி ஒரு முத்திரை; முடிந்தது காரியம். எந்த நோய்க்கும் ஒரே மருந்து போலவும் ஐன்ஸ்டைன் கண்டுபிடிக்க முக்கின முழுமைக்குமான விதியைப் போலவும் தத்துவவாதியின் கல் போலவும் "அனைத்துக்கெடுதலுக்கும் ஆணதிகாரம்" என்பதான ஒரு தட்டையான கோஷம். அதற்கப்பால், இத்தனை நாள் ஆண் அதிகார உலகினைக் கெல்லவும் கிழிக்கவும் எத்தனையோ செய்கிறாரே, எதுவுமேதான் இதுவரை நாள் பயன்தரவில்லையா, அல்லது அவர் அப்படியான அதிகார உலகமாகவிருப்பது அவரைப் பெண்ணிலைவாதியாக முன்னெடுக்க வசதி செய்துகொடுப்பதுமட்டுமே போதுமென்றிருக்கிறாரா? எப்போதுமே இப்படித்தான் இருக்கப்போகிறதையிட்டு கவலைப்படுகின்றாரா அல்லது அப்படியே அது இருப்பதுதான் அவரைப் பெண்ணிலைக்காகப் பேசவைக்க வசதியென்றிருக்கின்றாரா? அவர் சொல்லப்போவதில்லையென்றே நினைக்கிறேன்; இன்னும், இருபது ஆண்டுகள் கழித்து வந்து பதிவுகளை இதே தலைப்பின்கீழேயிட்டாலும் அவர் வந்து போடப்போகும் முதலாவது பின்னூட்டம், "இது ஆண் அதிகார உலகம். எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகின்றது. சின்ன விடையங்களுக்குக் கூட போராட வேண்டிய நிலையில்தான் இன்றும் என்றும் பெண்கள் இருக்கப் போகின்றார்கள்." இதற்கு அப்பால், அவர் சிந்தனை நகரப்போவதில்லை, முன்னால் இருப்பவன் ஆணென்றால், "நீ ஆணாதிக்கவாதி; உன் மனைவிக்காகப் பரிதாபப்படுகிறேன்." என்ற வரிகள் தொடர்ந்தாலல்லால். பக்கத்துவீட்டிலே பத்தாண்டுகளிருந்து அவனும் அவளும் வாழ்ந்ததைப் பார்த்ததுபோல ஒரு கருத்து. பெண் தான் என்பதை முன்னிலைப்படுத்தி ஒருவர் சொன்னால், ஓர் ஆண் பரிதாபப்படும் நிலையிலிருக்கும் மனைவியைக் கொண்ட ஓர் ஆணாதிக்கவாதியாக மட்டுமேயிருக்கமுடியும்.

இவரின் இச்செய்கை என்னை அம்பை என்ற சி.எஸ். லக்ஷ்மியின் ஒரு செய்கையை ஞாபகப்படுத்துகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால், நா. கண்ணன் நடத்தும் ஈ-சுவடியிலே நடந்தது. தமிழிலே முதலிலே எழுதிய முஸ்லீம் பெண் எழுத்தாளர், சித்தி ஜுனைதா பேகம் குறித்த விபரங்கள் குறிப்புகளை நாகூர் ரூமி மூலம் நா. கண்ணன் தன்னுடைய முதுசம் திட்டத்துக்குப் பெற்றுக் கொண்டதை ஈ-சுவடி யாஹூ குழுவிலே அறிவிக்கின்றார். அம்பையிடமிருந்து ஓர் அஞ்சல்; அக்குறிப்புகள் தன்னுடைய SPARROW குழுவுக்கே நியாயப்படி சேரவேண்டுமென்கிறார். அதற்காக அவர் சொல்லும் காரணம்,"சித்தி ஜுனைதா பேகம் ஒரு பெண்." அவர் தமிழ் எழுத்தாளர் என்று தமிழிலக்கியக்களஞ்சியத்திலே தேடிக்கண்டுபிடித்தவர் சேர்க்கமுடியாது; அவர் பெண் என்பதுதான் முன்னிலையாகவேண்டும். இந்த "வந்தால் என் வழி; இல்லாவிட்டால், Disclosure Demi Moore Declaration" வகை வாதம் தனியாள் ஒளிவட்டத்துக்கு ஆட்சேர்க்க உதவலாம். அதற்குமேலே பொதுவாக, -பெண்களுக்கோ ஆண்களுக்கோ- சமூகத்துக்கோ என்ன பயனைத் தரப்போகிறது?


3. பாலபாரதியின் பழைய பதிவிடுகை ஒன்று, "இது அன்னையர் தேசமா..." இஃது இன்னொரு வகையான வேலியிலே போகும் ஓணானைத் தன் மடியிலே போடும் பதிவு. பின்னூட்டங்கள் வருவது தொடர்பான அவருடைய கருத்துகளோடு ஒத்துக்கொள்ளமுடிகின்றது. ஆனால், "எனது "ஆதலினால்..." இடுகையில் ஏமாறாதவன் என்பவர் பெண்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்ற ரீதியில் கருத்து சொல்லி விட்டுப்போனார். ஆனால்.. ஆண்களின் உலகம் தான் சூழ்ச்சிகள் நிறைந்ததாக இருக்கிறது என்பதை வேதனையோடு இங்கு பதிவு செய்ய கடமை பட்டிருக்கிறேன்" என்பது ஒன்று அவர் தமிழ்மணத்தினைச் சரியாகக் கவனிப்பதில்லையா அல்லது கவனித்தும் கவனிக்காததுபோல இருக்கின்றாரா என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. ஏமாறாதவன் என்பவர் 'இயிங்க்' என்றால், இவர் 'இயாங்' என்ற விதத்திலே பதில் எழுதியிருக்கின்றார். "ஏனெனில் ஆண்களின் சிந்தனை போலில்லாமல்.. பெண்களின் சிந்தனை பல புதிய கோணங்களை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது" என்றவர் சொல்கிறதிலே இன்னும் அறியாத இச்சூழ்ச்சிகள் பற்றிய கோணங்களும் இவருக்கு இருக்கின்றதோ தெரியவில்லை. இக்கோணங்களும் உத்திகளும் சொல்லப்பட்டிருந்தால், தமிழ்மணத்தினைக் கொஞ்சம் கவனித்திருந்தால், இந்த ஆண்சூழ்ச்சி - பெண்சூழ்ச்சி நிகழ்த்தப்படும் நுண்ணிய தளங்களும் நூலூடிப்பாவும் நுண்வழிமுறைகளும் இவருக்குப் பிடிபட்டிருக்கும்.

மேலும், ஏற்றுக்கொள்ளமுடியாத சொற்களோடு அநாமதேய பின்னூட்டங்களும் பெண்பதிவர்களுக்கு மட்டுமல்ல, ஆண்பதிவர்களுக்குமேதான் வருகின்றது. பெண் என்பதைத் தவிர, சாதி, மதம், மொழி எல்லாவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதலோடுதான் எல்லாத்திசைகளிருந்தும் வருகின்றன. "பள்ளனோடு உங்கம்மா படுத்தாளா?" என்றும் வருகின்றது; "பார்ப்பானோடு உங்கக்கா படுத்தாளா?" என்றும் வருகிறது; 'தீரா'விட'ன்' என்றும் வருகின்றது; 'ஆரியன்' என்றும் திட்டி வருகின்றது. அவற்றையெல்லாம், 'அம்மா' & 'அக்கா' என்று பார்ப்பான் வீட்டுப்பெண்களையோ பள்ளன்வீட்டுப்பெண்களையோ திட்டுகின்றபோதிலுங்கூட, நாம் பெண்களெனக் கவனிப்பதில்லை. திட்டும் திசை நமதா எதிரியினதா என்றுமட்டும் பார்த்துவிட்டு, ஒதுங்கிக்கொள்கிறோம். ஆனால், அறிந்த பெண்பதிவர்களிலே தாக்கும்போதுமட்டும் எல்லாப்பதிவர்களும் அக்கறை கொள்கிறோம். நம் நண்பர்களைத் தாக்கும்போது, எதிர்வினை செய்வது வழக்கமே. அவசியமானதும் கட்டாயமானதுமானதுமே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், எந்தவொரு பதிவரும் ஆண்-பெண் என்பதாக மட்டுமே அடையாளப்படுவதில்லை. வலைப்பதிவிலே சாதி, இனம், நாடு, மொழி, மதம் சேரவுமேதான் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இவை எல்லாக்கூறுகளையும் முன்னிறுத்தியே தாக்குதல்கள் நிகழ்கின்றன. ஆண் பதிவர்கள் பெயர்களிலே எழுதிய அத்தனை வக்கரிப்புகளையுமேதான் பெண்களின் பெயர்களிலும் எல்லாப்பக்கத்து கோடாலிப்பாம்புகளும் போட்டுத்தள்ளுகின்றன. பிரபு ராஜதுரையின் "சுஜாதா, சுப்பிரமணியசுவாமி, சூத்திரர்... " இடுகையிலே சுட்டியதன்படி நாம் கொஞ்சம் இப்படியான நிலைமையைப் பார்த்தால், இழிவு படுத்துதல் என்பது எல்லாவகைகளிலுமேதான் நடந்திருக்கின்றன. ஆனால், பெண்களின் பெயர்களிலே வரும்போதுமட்டும் பெண்களை இழிவு செய்துவிட்டார்கள் என்ற பாவனை வருகின்றது. இஃது எதனால்? [நான் சொல்லவருவதை முழுவதும் தவறாகவே புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கின்றது. என்றாலும், முயற்சிக்கின்றேன்] ஆனால், இது பெண் என்பதாலே தாக்கப்பட்டுவிட்டார் என்பதாகவும் பெண்களைப் பாதுகாப்பது ஆண்களின் கடமை என்பது போன்ற (ஒரு தனியுடைமைச்சொத்தினை, வீடு, வங்கிநிலுவை, வாகனம் இவற்றைக்) காக்கும் போக்கோடுதான் இருப்பதாக எனக்குப் படுகின்றது. "பெண்களும் குழந்தைகளும் முன்னே" என்று தாழும் டைட்டானிக்கிலேயிருந்து படகுகளிலே குதித்துத் தப்பிக்கமுன்னால், அறிவிப்பு விட்டதுபோலவல்லோ இருக்கின்றது? இதுதான் பெண்களைச் சரிநிகராகக் கருதுவதா?


4. நிவேதாவின் கட்டுரை, "காலனித்துவ இலங்கை அரசியல் சமூகத்தில் தமிழ்ப் பெண்களும் பெண்களின் அரசியலும்" இலே ஒரு பகுதி;

"இது மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமெனினும, சுருக்கமாகக் கூறுவதாயின்..., சமீபத்தில் நண்பரொருவருடனான உரையாடலின்போது, 'ஆண்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும்போது சாடுகிறீர்களே.. சிறிமாவோ, சந்திரிக்கா, ஜெயலலிதா, ஏன் இந்திரா காந்தியென பெண்கள் பலரதும் ஆட்சியைப் பார்த்தவர்கள் நாம் .. இவர்கள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் நிலைமை முன்னேற்றமடைந்திருந்ததா..?' எனக் கேட்டார்.


பெண்களின் அரசியலென்ற கருத்தாக்கம் இவ்விடத்தே தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தக் குறிப்பிட்ட பெண் தலைவர்களனைவரும் ஆண்களின் பிரதிநிதிகளாய், ஆண் மேலாதிக்க சமூகம் உருவாக்கி வைத்திருந்த சமூக, அரசியல் சூழ்நிலைகளுக்குள் நின்றுகொண்டு ஆட்சி புரிந்தார்களேயொழிய எவரும் பெண்ணென்ற தமது சுய அடையாளத்தினை வலியுறுத்த முயன்றனரெனக் கூறமுடியாது. ஒருவகையில் தமது அத்தகைய அடையாளங் குறித்து வெட்கி ஆண் தலைவர்களை அப்படியே பிரதியெடுக்க முனைந்ததன் விளைவுதான் இதெனலாம். "


சோவியத்து உடைப்பின்பின்னால், நஷனல் ஜியோக்ரபிக் பத்திரிகையாளரொருவர் ஜோர்ஜியாவிலே செவ்வி கண்டுகொண்டிருக்கின்றார். ஜோர்ஜியர் பலர் ரஷிய, மற்றும் சோவியத்தின் பொதுவுடமைக்கட்சிக்கெதிராகக் கருத்துக் கூறுகின்றார்கள். ஆனால், எவருமே ஸ்டாலினைக் குறைத்துச் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகையாளர் இதனை மிகவும் அழகாகச் சொல்கிறார், "ஜோர்ஜிய மக்களின் கருத்தானது, 'ஸ்டாலின் ஒரு பயங்கரனாகவிருக்கலாம்; ஆனால், எங்களது பயங்கரன்" என்பதாகவே தோன்றுகின்றது." நிவேதாவின் சிறிமாவோ, சந்திரிகா, ஜெயலலிதா போன்றோரது நடத்தைகளுக்கான உள்ளார்ந்தநிலைவிளக்கமும் இதனை ஒப்பவேயிருக்கின்றது. இந்த வாதத்தின்படி பார்த்தால், சமூகத்தின் எந்த நிலையிலேயும் எந்தப்பெண்ணின் செயற்பாட்டினையும் ஆண்சமுதாயத்தின் அமைப்பின் விளைவென்றே சுட்டிவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம். இந்த "சமுதாயம் அவளை வாழவிடவில்லை" வசனத்தை Aileen Wuornos இற்குமட்டுமல்ல, சந்திரிகா, ஜெயலலிதாவுக்கும் சொல்லலாம். இது ஒன்றில் சிறுபிள்ளைவாதம் அல்லது மிகவும் சாதுரியமான தப்பிப்புவாதம்.

சந்திரிகாவின் காலத்திலேதான் (சிறிமா அம்மையார் அந்நேரப்பகுதியிலே தலைமையமைச்சராகவும் இருந்தார்) கிருஷாந்தி, கோணேஸ்வரி, சாரதாம்பாள், ஹேமலதா இவர்கள் வன்புணரப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். சந்திரிகா நிச்சயமாக தானறிந்து இவற்றினைச் செய்யவில்லை. ஆனால், இப்படியான செயற்பாடுகளுக்குப் பின்னான வேளையிலே, அவரது படையினரைத் தண்டிப்பிலிருந்து தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளை அறிந்தும் நடந்துகொண்டாரென்பதுதான் நடைமுறை. ஸ்ரீமாவின் காலத்திலேதான் மன்னம்பேரி வன்புணர்தலும் சேகுவேரா - 72 வன்னடக்குமுறையும் இந்திராகாந்தி ஆட்சியின் உதவியோடு நிகழ்ந்தன; இந்திராகாந்திதான் முன்னெப்போதுமில்லாதவாறு, இந்தியாவிலே மிஸா அரசியலடக்குமுறையைக் கொணர்ந்தார்; ஜெயலலிதா காலத்துக்கு முன்னால், வீட்டுக்கு முச்சில்லுவண்டி விட்டு காலையுடைக்கும் 'பண்பாடு' தமிழக அரசியலிலேயிருந்ததாகத் தெரியவில்லை. இவை எதுவுமே இங்கே "ஆண்மேலாதிக்க சமூகம், சூழல்" என்ற வாதத்தினைக் கொண்டு இப்பெண்ணாட்சியாளர்களை ஆண்சமூகச்சூழ்நிலைக்கைதியாக்கித் தப்பிக்கச் செய்யும் முடக்குவாதமொழிய வேறெதுவுமாகவிருக்கமுடியாது. இதன் மோசமான விளைவு என்னவென்றால், இப்படியான ஆண்கள் உருவாக்கிய சமூக, அரசியல் சூழ்நிலையைச் சுட்டிக்கொண்டு தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறையைக்கூட பெண் ஆட்சியாளர்கள் அதிகாரத்தின் பேரிலே அனுமதித்துக்கொண்டுபோவதாகவிருக்கும். இந்நிலையிலே சொல்லப்போனால், ஆண் ஆட்சியாளர்களைவிடப் பெண்ணாட்சியாளர்களுக்குப் பெண்ணியலை முன்னெடுக்கும் ஒரு பகுதியினர் வன்முறைக்கு வாய்ப்பும் தப்பிக்கும் வழியும் ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள் என்றே சொல்லலாம். ஒரு Countess Erzsébet Báthory இன் செயற்பாடுகளை Count Vlad Drăculea மீது போடுவதுபோலத்தான் ஆகும். அதிகாரத்துக்கு, பால், சாதி, மொழி, இனம், மதம் என்று ஐம்பொறிகளில்லை. அதிகாரம் தன் வசமானது; தன்னை நிறுத்திக்கொள்ள அத்தனை உத்திகளையும் பயன்படுத்தும். சந்திரிகா பெண் என்பதும் இவ்வகையிலே ஓருத்திதான். இப்படியான உத்திகளை அறிந்தும் அவர் பெண்ணென்பதாலே அவரை நியாயப்படுத்துகின்றவர்கள், இவ்வதிகாரத்தின் கீற்றுகளைத் தாமும் கவர்ந்துகொள்கின்றவர்களேயாவார்.

பெண்களைப் புனிதப்பாலிலே நீராட்டி வைத்துக்கொண்டு, ஆண்களைப் பீயுழலும் பன்றிகளாக நிறுத்தி வைத்துக்கொண்டுதான் பேரம் பேசுதலும் வாதம் பேசுதலும் நிகழ்கின்றதாகத் தோன்றுகின்றது. பெண்களின் செயற்பாடுகள் குறித்த விமர்சனத்தினை எழுப்ப எவருக்கும் விருப்பமிருப்பதில்லை; ஆண்களானால், முத்திரை குத்தப்படுவோமோ என்ற தயக்கமிருக்கின்றது. இதே விமர்சனத்தயக்கங்கள், ஈழவிடுதலைப்போர் குறித்தும் இந்தியத்தேசியம் குறித்தும் பலருக்கும் இருக்கின்றன. தர்க்கத்துட்பட விமர்சனத்தினை முன்வைக்காத எந்தக்கொள்கையுமே நடைமுறையிலே வெற்றி பெற்றதாகவோ நிலைத்து முன்னோக்கி நகர்ந்ததாகவோ வரலாற்றுநிகழ்வுகள் காட்டவில்லை. ஒருவரைப் பற்றிய கருத்தினைத் தெரிவிக்கும்போது, அவரின் பொது அடையாளங்களுக்கான குணங்கள் (பால், மொழி, இனம், மதம், சாதி), தனியடையாளங்களுக்கான குணங்கள் (ஒவ்வொரு குழுவுள்ளும் தனித்தன்மை) இவற்றினைச் சேர்த்துப் பார்க்க ஏன் எம்மால் முடிவதில்லை?

இப்படியான ஆணாதிக்கசமூகத்தின் சூழ்நிலைக்கைதித்தனமும் பிரேம்-ரமேஷ் கூறும் ஆண்மை-பெண்மை இரட்டைமொழி அழியும் நிலையும் எப்போது ஏற்படுகின்றதென ஒரு முடிவான நிலைக்கு எவருமே ஒருபோதும் வரப்போவதில்லை. இந்நிலையிலே, அவரவர் அவரவர் வசதிக்கும் தேவைக்குமேற்ப, தூக்குதலும் தூற்றுதலும் செய்துகொண்டிருக்கப்போவதுதான் நடக்கும்.பாலுக்கு எதிர்ப்பால் குறைந்தளவேனும் புரிதலும் நம்பிக்கையும் கொள்ளாதவரையிலே எல்லாம் சூழ்ச்சியாகவும் பெண்ணாட்சியிலே வன்முறை நிகழும்போது, ஆணாதிக்கசமுதாயத்திலே பழியைப் போடுவதும் எந்த இலக்கைக் கொண்டு ஒரு சமுதாயத்தை நடக்கவைக்குமென்று என்னால், சொல்லமுடியவில்லை.


கடைசியாக, விக்கிரமாதித்தனை வேதாளம் கேட்டதுபோல, தலைசுக்குநூறாகிப் போக ஒரு கேள்வி.

'யாரோ ஓர் ஔவை "தையல் சொல் கேளேல்" என்று சொல்லிவிட்டுப்போய்விட்டாள்.'

இவ்வரியை எப்படியாக விடுவித்துக் கருத்தைக் கொள்வது?

1. ஔவை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்; பெண்கள் சொல்வதைக் கேட்காதே.
2. ஔவையே ஒரு பெண்; அவரே பெண்கள் சொல்வதைக் கேட்காதே என்று சொன்னால், அது கேளென்று அர்த்தப்படும். ஔவை பெண்களுக்குப் பூடகமாகத் தன் செய்தியை உணர்த்தியிருக்கின்றாள்
3. ஔவை என்பது முதிர்ந்த பருவம்; தையல் என்பது அல்ல; ஆகவே, தையல்_பருவத்திலேயிருக்கும் பெண் சொல்வதைக் கேளாதே.
4. ஔவை வாழ்ந்த காலம் ஆணாதிக்கம் பெண்களின் கழுத்தை இறுக்கிய காலம்; ஔவை அப்படியாகத்தான் சொல்ல வாய்ப்புண்டு.
5. ஔவை சொன்னாளா? தெரியாது. யாராவது ஓர் ஆண் இடையிலே எழுதிச் செருகியதாகவும் இருக்கலாம்.
6. இக்கேள்வியைக் கேட்டதால், நீ ஆணாதிக்கவாதி - உன் மனைவியைக் காலைச்சாப்பாட்டுக்கு முன்னால் இரண்டு தரமும் மாலைச்சாப்பாடுக்குப்பின்னால், நான்கு தரமும் கன்னத்தைப் பொத்தி அறைகின்றவன்


[இவ்விடுகையைக்கூட, ஓர் ஆணாதிக்கத்திசைதிருப்பலாகவோ கலைந்துளறும் கருத்துகளாகவோ எவரும் எடுத்துக்கொண்டு போகலாம். அதைப் பற்றி "நீ ஆண் - நான் பெண்" என்ற "ஆயுதமற்ற நீ - கேடயத்துடன் நான்" என்பதற்கு மேலே ஒழுங்கான வாதமென்று எதுவுமில்லையென்றால், எனக்கும் சொல்ல எதுவுமில்லை.
ஆனால்,
இங்கே தூக்கிப்பிடித்த எத்தனை பேர் இங்கே தூக்கியடிக்கிறார்கள் என்று ஒரு கணக்கை மட்டும் வைத்துக்கொள்வேன் :-)]

[நன்றி: அடியாள் (I mean, அடியான், What I mean is, அடியார்) இரவுக்கழுகுக்கு, என் வலைப்போதிக்கும் பூரணநிலவுக்குமாய்] :-)

கரைவு~