Thursday, June 15, 2017

வெம்மையின் நிறம் சிவப்பு


மூதூரின் இரு பாடசாலைச்சிறுமிகளின்மீதான பாலியல்வன்முறை, The Daily Mirror இன் யாழ்ப்பாணசமூகத்தின் மீதான சாதியக்குற்றச்சாட்டு, வடமாகாண நீர்ப்பங்கீடும் பிரிப்பிலே கடுப்பும். விக்கினேஸ்வரன்  - ஐங்கரநேசன் சொக்கட்டானாட்டம் என்பவற்றிலே, மையமான குற்றச்சாட்டுகளிலும்விட அவற்றினை வைத்து பல சாராரும் நடத்தும் அவரவர் தேர்ந்த அரசியல் (அரு)வெறுப்பினை ஏற்படுத்தி நாம் சார்ந்த சமூகம் தொடர்பான அவநம்பிக்கையைப் பெருக்குகின்றது.

அண்மையிலே The Daily Mirror யாழ்ப்பாண வைத்தியசாலையிலே இரத்தம் சேமிப்பிலே அதிகமில்லாததற்கு யாழ்ப்பாணத்திலே நிலவும் சாதியமே காரணமென்றும், உயர்சாதியினர் என்று தம்மை அழைத்துக்கொள்கின்றவர்கள் தமது இரத்தம் மற்றவர்களுக்குக் கொடையாகக் கிட்ட விரும்பவில்லை என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சத்தியமூர்த்தி சொன்னதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. கூடவே, இரத்தம் அனுராதபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தேவைப்பட்டவர்களுக்கு உதவியாகக் கிட்டுகின்றது என்றும் சொல்லப்பட்டது.

இச்செய்தி The Daily Mirror இலே வந்தவுடன் எதுவித ஆய்வுமின்றி, உடனடியாகத் தங்கள் சொந்தக்கருத்தினையும் சேர்த்துக்கொண்டு, “"இப்ப எல்லாம் யாரு சாதி பாக்குறாங்க..." தலித்துகளுக்கு இரத்த தானம் செய்ய ஆதிக்க சாதியினர் தயாரில்லையாம். இது யாழ்ப்பாணத்தில்.... மூன்று தசாப்த யுத்தத்தில் இரத்தக் குளியலுக்கு உள்ளான ஊரா இப்படி கேட்கிறது...” என்ற குரலோடு எழுதியவர்கள், இத்தனைக்கும் தொடர்ச்சியாக 90 இலிருந்து பத்திரிகைத்துறையிலே இருக்கின்றதாகச் சொல்லிக்கொள்கின்றவர்கள். பத்திரிகையாளர்கள் என்றளவிலேனும் இவர்கள் கொஞ்சமேனும் செய்தியினைச் சரி பிழை பார்த்து ஆய்ந்து வெளியிட்டிருக்கவேண்டாமா?

இக்குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு, யாழ்ப்பாண சைவவேளாளமேலாதிக்கத்தின் சாதியவெறியைப் பற்றி மட்டுமே விடாது பேசுகின்றவர்கள்,

1.    பழைய ஆயுதம் தாங்கிய தமிழ் விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தற்சமயம் ஶ்ரீலங்கா அரசின் தார்மீகத்திலே நம்பிக்கை வைத்திருப்பவர்கள்

2.    பாலஸ்தீனமும் காஷ்மீரமும் அடுத்தார் தளைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும்-ஆனால், ஈழம் என்பது தனக்குத் தானே ஒரு சமூகம் தேர்ந்துகொண்ட தளை என்று ஓராடியாக நிற்பவர்கள்


3.    இலங்கையின் மற்றைய பிரதேசங்களிலும் சமூகங்களிலும் சாதியமோ மதப்பிணக்குகளோ இல்லையென்று கவனமாகப் பாசாங்கு பண்ணுகின்றவர்கள்

4.    உலகளாவிய மக்கள் புரட்சியைக் கொணர உழைக்கும்போது, ஈழம் என்ற கருத்தாக்கமே சாதியமென்றும் அமெரிக்க, உயூத சதியென்றும் வலைப்பக்கங்களினை நிரப்புகின்றவர்கள்


5.    பரபரப்புக்கும் சமூகவலைத்தளங்களிலே புரட்சியாளர்களாக உலாவவும் வசதியான கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக்கொள்ளக்கூடிய போராட்டங்களை நிகழ்த்தும் புனைகதை|பத்தி எழுத்தாளர்கள், உலகமகாநடிகர்கள்

இச்செய்தியின் தொடர்ச்சியாக, The Daily Mirror இன் ஆசிரியருக்கு வைத்தியர் சத்தியமூர்த்தியின் மறுப்புக்கடிதம் இணையத்திலே வெளிவந்து பகிரப்பட்டது; தான் அப்படியாகச் சொல்லவில்லையென்றும் யாழ்ப்பாண வைத்தியசாலையிலே போதியளவு இரத்தம் உண்டென்றும் கூறியிருந்ந்தார். கூடவே, தன்னோடு தொடர்பு கொண்ட The Daily Mirror இன் செய்தியாளரே தன்னிடம் “சாதிப்பிரச்சனை காரணமாக, இரத்தத்தட்டுப்பாடு இருக்கின்றதா?” என்று கேட்டதாகவும் தான் அதை அப்போதே மறுத்துச் சொன்னதாகவும் சொல்லியிருந்ந்தார். வேறு சிலர் சத்தியமூர்த்தியோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு இச்செய்தியின்பின்னாலே நிகழ்ந்ததின் திட்டமிட்ட பொய்க்கட்டமைத்தல் மீதான மறுதலிப்பு விளக்கத்தைப் பெற்று இணையத்திலே போட்டார்கள்; ஏன், The Daily Mirror கூட மன்னிப்பினை உடனடியாகக் கோராமல், வெறுமனை செய்தி தவறு என்று (போட்டாலும், விழுந்தும் தாடியிலே மண்ணொட்டவில்லை என்றபோல, “இரத்தக்கொடை தடைப்படுமளவுக்குச் சாதியம் இல்லை” என்ற வரிகளோடு) ஒரு குறிப்பு வெளியிட்டிருந்தது. குறித்த பத்திரிகைக்கும் அதைச் சேர்ந்த வாசகர்களுக்கும் அது வெளிவரும் பிரதேசத்துக்குமான பேரின அரசியலுண்டு. ஶ்ரீலங்காவின் இராணுவவீர்ர்களின் இரத்தம் அவர்களின் கொடையினாலே தமிழ்மக்களிடமும் ஓடுகின்றது என்று இப்படியான பத்திரிகைகளே செய்தி வெளியிட்டு வெகுகாலமில்லை. அதன் அடுத்த கட்டச்செயற்பாடாக, யாழ்ப்பாணத்திலேகூட (சாதிவெறியினாலே) இரத்தம் கொடுக்கப்படவில்லை என்பதைக் கட்டமைக்கும் தேவை அவர்களுக்குண்டு என்பதை அறியப் பெரிய ஆய்வு தேவையில்லை. பொறுப்பு வைத்தியரைச் செவ்வி கண்ட The Daily Mirror இன் செய்தியாளரோ தானேதானா அக்கேள்வியினைக் கேட்டார் என்பதைக்கூடச் சொல்லாமல், தான் கண்ட செவ்வியினை The Daily Mirror இன் சீர்படுத்து உதவியாசிரியர்கள் தவறாக மாற்றிப் பிரசுரித்துவிட்டார்கள் என்கிறார். பத்திரிகையோ மன்னிப்பினைக் கேட்காமலே, பழைய செய்தியினைக் கழற்றிவிட்டு, ஆனால், இன்னமும் சாதிப்பிரச்சனை இருந்தாலும் இரத்தச்சேமிப்புக்குப் பங்கமில்லை என்றவாறு வைத்தியரின் மறுப்புக்கருத்தினைச் சட்டை செய்யாமல், செய்தி வெளியிடுகின்றது.  

இந்நிலையிலே, நெறியான பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள், உலகமகாபுரட்சி மார்க்ஸியர்கள் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்? குறைந்தளவு தங்கள் அவரச் அவசரக்குறிப்புகளுக்கு மன்னிப்பினைக் கேட்டுக்கொண்டு, செய்தி வெளியிட்ட பத்திரிகையின் அரசியலைக் கடிந்திருக்கவேண்டும் இவர்களிலே ஒருவர்கூட அதைச் செய்யவில்லை. அப்படியான தங்களின் தவறான செயற்பாடுக்குத் தார்மீகப்பொறுப்பெடுக்கும் நேர்மைத்திறனின் சொட்டுகூட இவர்கள் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மாற்றாக, இவர்கள் செய்வதென்ன? தொடர்ச்சியாக, யாழ்ப்பாணத்திலே சாதியம் இருக்கின்றதை நிறுவுவதினையே இப்பொய்யான செய்தி சுட்டுவதாகச் சொல்லிக்கொண்டு மேலே யாழ்ப்பாணத்தினைச் சாடுவதிலேயே மாற்றுக்கருத்தும் நெற்றிக்கண்ணாகவும் நிற்கின்றார்கள்; சிலர், இன்னமும் மேற்படி போய்,,சத்தியமூர்த்தி அப்படி ஒரு சாதி உள்ளிட்ட இரத்தம் வழங்குவதிலே தடையேற்படும் பிரச்சனை இல்லை என்று தன் மறுப்புக்கடிதத்திலே சொன்னதைப் புறம் தள்ள, மீண்டும் முதலிலே பொய்யான செய்தியைச் சொன்ன The Daily Mirror இன் “இன்னமும் சாதிப்பிரச்சனை இருந்தாலும் இரத்தச்சேமிப்புக்குப் பங்கமில்லை” என்ற இரண்டாம் செய்தியினை வைத்தே வைத்தியரின் நேர்மையினைக் கேள்வி கேட்டுக்கொண்டும் யாழ்ப்பாணத்தின் சாதியத்தினைப் பிடித்துக்கொண்டும் நிற்கின்றன.

இச்செய்தியின் பின்னணியிலேயான இந்நிகழ்விலே, இங்குப் பிரச்சனை யாழ்ப்பாணத்திலே சாதியம் இருக்கின்றதா இல்லையா என்பதல்ல, ஆனால், பத்திரிகைத்துறைக்கு இருக்கவேண்டிய வழுவா நேர்மையினதும் துறைசார்நெறியினதும் மீதான கேள்வியும் அவை சறுகியவிடத்து அவைமீதான கண்டனத்தின்மீதாக மெய்யை மீட்டலுமாகவிருக்கவேண்டும். இஃது எவ்வகையிலும் யாழ்ப்பாணத்திலே சாதியமே இல்லை என்பதை மறுப்பதாகக் கருதப்படக்கூடாது. சாதியமென்பது, அடித்தலுக்கு ஒளிந்து 2009 வரை தலையை வெளித்தெரியாவாறு வேரோடிமட்டும் காட்டிக்கொண்டிருந்தாலுங்கூட, 2009 இன் பின்னாலே வெளிப்படையாகக் கோரமுகத்தை யாழ்ப்பாணத்திலும் காட்டுகின்றது; காவி வந்து புலம்பெயர்பூமியிலும் காட்டுகின்றது; அதே சாதியம், கிழக்கிலும்  நிலவுகின்றது; மலையகத்திலும் நிலவுகின்றது; சிங்களபௌத்தவர்களிடமும் நிலத்திலே கீழே வேர்விட்டு நிற்கின்றது; தமிழ்க்கிறீஸ்தவர்களிடமும் சமயத்துக்கு அப்பாலும் கடந்து காவப்பட்டுக்கிடக்கின்றது. இருப்பினும்கூட, தனியே யாழ்ப்பாண சைவ வேளாளவெறியினை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சாடுவது வழமைபோல, உங்களின் அரசியல்|பிரதேச|சமூக வசதிக்கானால், அதைத் தொடர்வது உங்களின் விருப்பம். ஆனால், இவ்விடத்திலே முதன்மையானது, குறிப்பிட்ட பத்திரிகையின் மெய்மை பற்றிய கேள்வியும் கண்டனமும்; அடுத்தது, யாழ்ப்பாணத்தின் சாதியம் எத்துணை கொடிதாகவிருப்பதாகக் கொண்டாலுங்கூட, இரத்தம் பகிர்ந்தளிக்கமாட்டாதவளவுக்குக் கேடு கெட்டதாகவிருக்க ஆதாரமில்லை என்பதுமேயாகும். யாழ்ப்பாணத்தின் சாதியத்தினைக் கேள்வி கேட்கவும் அதைச் சாடவும் வேறொரு சந்தர்ப்பத்தினைக் கொள்ளலாம்; இவ்விடத்திலே முதலாம் குற்றவாளியும் ஒரே குற்றவாளியும் குறிப்பிட்ட பத்திரிகை; ஆதாரமற்ற இச்செய்தியினைச் சாட்டிக்கொண்டு, யாழ்ப்பாணச்சாதியத்தினைத் தாம் சார்ந்த அரசியல்களின்பொருட்டு சாட ஒரு சந்தர்ப்பத்தினைத் தேடுகின்றவர்கள் தாமே இரண்டாம் குற்றவாளிகள் வரிசையிலே வந்து நிற்பார்கள். நேர்மைத்திறனற்ற, சொந்த அரசியலுக்காக, பொய்யைக்கூட ஆதாரமாகக் கொள்ளும் நீங்களெல்லாம் வாராவாரம் பத்தி எழுத்துக்கட்டுரைக்கும் பத்திரிகையாளர்களாகவும் குறிப்பிட்ட சமுதாயத்திலேமட்டும் சாதிமறுப்பாளர்களாகவும் தேவைப்பட்ட புள்ளிகளிலேமட்டும் மார்க்ஸியக்கட்டுடைப்புப்புரட்சியாளரும் இருந்து என்ன பயன்?

பொய்யை ஆதாரமாக்கி, நேர்மையான போராட்டங்களை நடத்தி நியாயமான இலக்குகளை எட்டமுடியாது; கூகைகளோடும் சாத்தான்களோடும் கூட நடந்தும் கோட்டையைப் பிடித்து ஏதும் பயனில்லை. 

இவர்கள் எல்லோரையும்விட, இப்படியாக ஒன்று சறுக்கியது என்றே காட்டிக்கொள்ளாமல், விக்கினேஸ்வரன் - ஐங்கரநேசன் என்று தாயம் விளையாடிக்கொண்டிருப்பவர்களுக்குப் பார்வையாளர்களாகவிருக்கின்றவர்கள் பரிசுத்த யோக்கியவான்களென்று கருதுவோமாக!

Saturday, June 03, 2017

க்

அவுஸ்ரேலியாவிலே தமிழ்க்காவலாளி ஒருவர் ஏதிலியாக விண்ணப்பித்திருக்கும் ஒரு பெண்ணை அனுமதியின்றி முத்தமிட்டது தொடர்பாகப் பீத்திக்கிழிப்பவர்களிலே பாதிப்பேர் மூதூரிலே பாடசாலைப்பிள்ளைகளுக்கு நடந்ததைப் பற்றி மூச்சே விடமாட்டார்கள் என்கிறார்கள். மூதூரிலே நிகழ்ந்ததுக்குத் தாம்தூமென்று துள்ளுகின்றவர்கள், முத்தமிட்ட எச்சிலைத் துடைத்துவிடாமற்கூடப் போகின்றார்கள்.

எவரும் பிறாண்டமுன்னால், இவ்விரு நிகழ்வுகளையும் காணாமற்போங்களென்பதாக நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், கண்டிப்பதிலும் இருக்கின்ற அரசியலையும் பேசவேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காற்பாதித்தமிழ்த்தேசியத்தைத் தாங்கவும் தாக்கவும் ஒரு சாராரும் முஸ்லீம்கள் என்பதாலே தாக்கவும் தாங்கவும் மறு சாராரும் தேர்ந்தெடுத்து அடுத்தாரையும் அடுக்காரையும் குறித்து இரண்டு வரிகள் எழுதிவிட்டுப்போகிறார்கள்.
எல்லோருக்கும் நல்லாரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்துணைதான் பிடிபடாமல் நெளிந்து நழுவிப்போகத் திறனுடைத்தார் இவர்கள்!

இலக்கியத்துக்கும் உண்டு இலக்கிட இலக்கணம்!

94

எண்பதுகளிலே ஒரு பலமான தமிழ்நாட்டு எல்லைக்குமப்பாலுமான தமிழ்த்தலைவராகக் கண்டபோதும், இன்றைய கருணாநிதியிலே எனக்கு எதுவித கருணையுமில்லை. 2009 இலே அவர் காட்டிய பாதிநாள் தின்னாநோன்பு நாடகம் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பாலிருப்பவர்களுக்குமானதுமல்ல.



2009 இன் முள்ளிவாய்க்கால் முடிவுக்குக் காரணம் கருணாநிதியுமல்ல; பிரபாகரனுமல்ல; இவர்களுக்குமப்பாலுமான பெருங்காரணிகளும் காரணர்களுமிருந்தார்களென்றே நம்புகிறேன். 1989 இலிருந்து 2009 வரை தமிழ்த்தேசியம் பேரிலே அந்தப்புறம் இந்தியாவும் இந்தப்புறம் ஶ்ரீலங்காவும் என்ற அமுக்கும் இரு பாண்துண்டுகளிடையே வதக்கிய இறைச்சியாய் ஓரமைப்பு நின்று இருபதாண்டு நின்று பிடித்ததற்கு அதன் அடித்தளத்தினைத் தமிழ்நாட்டின் அரசியல்மாற்றங்களோடு அப்படியே தங்கவிட்டுப்போகவிடாததிலேதான். இவ்விடத்திலே 2009 இன் வாய்க்கால்முடிவுக்குக் கருணாநிதியினைத் திட்டித் தொலைப்பதும் பிரபாகரனை பேசித் தள்ளுவதும் அவரவர் அகவெப்பத்தைக் கொட்டித்தள்ள வழிப்படுத்துமேயொழிய நிதானமான கருத்தாகா.

எத்துணை மோசமான தேச இராணுவத்தினை அனுப்பி வைத்தாளென்றாலுங்கூட, அவ்விராணுவத்தின் செயற்பாடுகளுக்காக நேர்மையான தலைவராகப் பொறுப்பெடுக்க மறுத்தாலுங்கூட, அரசியல்வாதி ராஜீவ் காந்தியின் கொலை எவ்வகையிலே பார்க்கும்போதும் அநாவசியமானது; அதனாலே, கருணாநிதியும் பிரபாகரனும் பாதிக்கப்பட்டார்கள் என்றே நம்புகிறேன். ஆனால், கருணாநிதி தமிழ்த்தலைவரென்ற தட்டிலிருந்து வீழ்ந்ததுக்கும் பிரபாகரன் முள்ளிவாய்க்காலிலே முடிவினைக் கண்டதுக்கும் ராஜீவ் காந்தியின் முடிவு எவ்வகையிலும் காரணமில்லை. அதன் பிறகும் இவ்விருவரும் ஆட்சியிலே இருந்த காலமுண்டு. கருணாநிதிக்கும் காங்கிரஸோடும் பாஜகவோடும் கூட்டணி கொள்ளவும் முடிந்ததும் ஆண்டதும் இப்பிற்காலத்திலேதான். அதனாலே, இராஜீவ் கொலையாலேதான் கருணாநிதியின் அரசியல் பாதிக்கப்பட்டது என்று திமுக இணைய உடன்பிறப்புகள் -வைகோ, சீமான், நெடுமாறன் தொண்டர்கள் மேலான கோபத்திலே- புலம்புவது ஒவ்வாது. அதுபோலவே, கருணாநிதியின் தின்னாநோன்புதான் முள்ளிவாய்க்காலுக்கு முடிவு என்பதுபோல, கருணாநிதியினை ஈழத்தமிழர்களிலே சிலர் இன்று அவரின் பிறந்த நாளிலுங்கூட தரக்குறைவாகத் திட்டுவதும் ஏற்புடைத்ததல்ல.


ஈழத்தமிழரைப் பொறுத்தமட்டிலே இன்றைக்கும் ஜெயலலிதாவைவிடக் கருணாநிதி கவனத்தினை வைத்தவர் என்றே திடமாக நம்புகிறேன். கருணாநிதியினைத் திட்டுகின்றவர்கள் ஜெயலலிதாவைத் திட்டாததற்குக் காரணங்கூட, அவர்களுள்ளே கருணாநிதியிடமிருந்த தமிழர்நலன் குறித்த எதிர்பார்ப்பு ஜெயலலிதாவிடமிருக்குமென்று எண்ணாததுதான் என்றுதான் படுகின்றது. ஆனால், அவரின் - சொல்லப்போனால், அவரின் பிள்ளைகளின் - அரசியல் இருப்பும் தக்கவைத்துக்கொள்ளலும் அகவை நொய்யவைத்தவருக்குத் தேவையாகிப் போனதென எண்ணுகிறேன். என்றாலும், 2009 வைகாசி வீழ்ச்சியினை சுற்றிய காலத்திலும் அதற்குப் பின்னாலான காலத்திலும் முத்துக்குமரன் மரணம், மகிந்த ராஜபக்‌ஷவைச் சந்திக்கக் கனிமொழி+பாலுவை அனுப்பியது, இழப்பின் ஈரம் காயமுன்னாலே உலகத்தமிழ்மகாநாட்டிலே தனக்குத் தமிழ்த்தலைவனாக (||மீண்டும்||) முடிசூடிக்கொண்டது இவை அவர்மீதிருந்த எஞ்சிய மரியாதையையும் நிதானமான தமிழ்ப்பார்வையாளர்களுக்கும் துடைத்தெறிந்துவிட்டது.
அவரவர் தனியாள் அரசியலைப் பொறுத்தவரையிலே கருணாநிதிக்கும் பிரபாகரனுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடுண்டு. பிள்ளைகளாலே கருணாநிதி முடிந்துபோனார். பிரபாகரனாலே பிள்ளைகள் முடிந்துபோயினர்.

போராட்டத்தின் தேவையையும் வந்த, நில், செல் திசைகளையும் முறைகளையும் கவனம் கொள்ளாது பிரபாகரனுக்குத் தம்மரசியலுக்காகப் (சாணிச்சுவர், இணையச்சுவர்) போஸ்ரர் அடித்துப் பிறந்தநாள் கொண்டாடுகின்றதுமட்டுமே போராட்டமென்பதானவர்களிலிருந்து விலகி நிற்கத்தான் முடிகிறது. அதுபோலவே, கிஞ்சித்த அக்கறையும் இன்றைக்கு எனக்கில்லாத கருணாநிதியின் பிறந்தநாளன்றின்போது, அவரின் மீது தரக்குறைவாகக் கருத்துகளை நிதானம் தவறிக் கொட்டுகின்றவர்கள்மீது, அவர்கள் தமிழ்த்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவர்களாகவிருக்கின்றபோதுங்கூட, எட்டி நிற்கவே விழைவுகொள்கிறேன். குறைந்தளவு கருணாநிதியின் அரசியல், அவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருப்புகளைக் கவனத்திலே கொண்டு தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட விளைவுகளை மையப்படுத்தியது என்பதை இப்படியாகத் திட்டித்தொலைக்கின்றவர்கள் புரிந்தால் தெளியும். வாழ்த்த விருப்பமில்லாவிட்டாலுங்கூட, திட்டாமலிருப்பதுதான் பண்பு.


கடைசியாக, கருணாநிதியை திட்டுவதாலோ பிரபாகரனைத் திட்டுவதாலோ நிகழ்|செல்லரசியலிலே ஏதும் நமக்காக மாற்றம் நிகழ்ந்துவிடாது என்பதை எரிச்சலைத் தீர்த்துக்கொள்தலுக்குமப்பால் நாம் புரிந்து கொள்ளாதவரையிலே ஈடேற்றம் நமக்காக ஒரு நனோமீற்றர் நகர்வையும் காணாது.