Thursday, December 21, 2017

ஈழச்சிவசேனைப்பயிர்ச்செய்கை


நான் கீழே எழுதியிருப்பது நடராஜனின் இரு  இடுகைகளுக்கும் அதற்கான பின்னூட்டங்களுக்கும் பின்னாலான என் கருத்து.
==========================


அன்பின் நடராசன் அவர்களுக்கு,
அகரமுதல்வன்- அரவிந்தன் நீலகண்டன் சம்பந்தமாக, 'ஈழத்தின் எல்லாத் தமிழ்த்தேசியர்களுக்கும் ஒரே வகையினர் அல்லர். அவர்களிலே பெரும்பாலோர் தமிழகத்தமிழரை நோக்கித் தமக்கு வசதிப்பட எவை அந்நேரத்திலே தேவைப்படுகிறன என்பதாக ஒட்டியும் வெட்டியும் காண்பவர்களுமல்ல' என்பதை உங்களுக்குச் சொல்லவே இச்சிறுகுறிப்பு.

என்னளவிலே அகரமுதல்வன் முதலிலே கிழக்கு பதிப்பகத்தைத் தன்னூலை வெளியிட அணுகியதே பொருத்தமற்றது. தனிப்பட்ட எழுத்தாளர் என்றளவிலே அவருக்கு எவரையும் அணுக உரிமையுண்டு. ஆனால், தமிழ்த்தேசியராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, கிழக்கு பதிப்பகத்தை அணுகும்போது அவர் தன் அரசியலையும் தன் தனிப்பட்ட எழுத்தினைப் பதிப்பதற்கான தேவையையும் ஒன்றாகக் கலந்து கரைக்காமலிருந்திருக்கவேண்டும். கிழக்கின் பத்ரி பதித்த இந்துத்துவாநூலின் ராஜீவ் மல்ஹோத்ராவின் சகஎழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் இதனுள்ளே வசதியாக அழைக்கப்பட்டுத் தலையைப் புகுத்தியிருப்பது புரியத்தக்கதும் வியப்புக்குரியதுமல்ல. பெரும்பாலான பதிப்பகங்களைப்போல (இந்துயாவை விமர்சிக்காமவரைக்கும்) விற்பனை ஒன்றே குறியானது கிழக்கு; வீரப்பன் செத்தால், சுடச்-சுட வீரப்பன்; பிரபாகரன் செத்தால், பிரபாகரன் (காந்தி கண்ணதாசன் கண்காட்சியிலேவைக்கவேண்டாமென்று வெருட்டினால்மட்டும், "கிழக்கு அலுவலகத்திலே புத்தகம்பெறுங்கள்" என்பார்கள்); இப்போது, அகரமுதல்வன் போன்ற நாடி நிற்கும் ஈழத்தமிழர்.

அதனால், ஈழதேசியம் பேசும் ஈழத்தினை அடியாகக் கொண்ட எல்லோருமே அகரமுதல்வனின் நிலைப்பாட்டினை, இக்கூட்டணியை ஆதரிக்கின்றார்கள் என்பதாகக் கொள்ளக்கூடாது. என்னைப் போன்றவர்கள் கடிந்தேயிருக்கின்றோம். ஆனால், அஃது அவரின் நூல்; எங்குப் பதிப்பதென்பது அவரின் விருப்பம். ஆனால், ஈழத்தின் அடையாளமாகவும் பிரதிநிதியாகவும் அவர் தன்னைக் காட்டும்போது அதற்கான விமர்சனத்தினையும் கொள்ள ஆயத்தமாகவிருக்கவேண்டும். அவர் அந்நிலையைப் பலரிலும்விட, துணிவாகவே ஆயத்தமாயிருந்து எதிர்கொண்டிருக்கின்றார் என்பதை அவரின் விழாவின் பேச்சு காட்டுகின்றது என்பேன், அவரின் செயற்பாடோடு இப்போதும் கிஞ்சித்தும் ஒப்புதலில்லாதபோதுங்கூட.

அதே நேரத்திலே, 'இந்துத்துவா = ஈழத்தின் சைவம்' என்ற ஒரு சூத்திரச்சமப்படுத்தலை தமிழகத்தின் ஈழத்தோழர்கள் அப்படியே ஈழத்திலேயிருக்கும் சைவத்திலே காசி ஆனந்தன், காந்தளகம் சச்சிதானந்தம், அகரமுதல்வன் இவர்களை வைத்துக்கொண்டு நோக்கித் தள்ளுவது பொருத்தமற்றது. இலங்கையின் நாவலரின் சாதியப்பார்வையும் விழுந்து செறிந்த சைவத்தில் சமூகக்குறைகள் நிறைய உண்டு என்பதை மறுக்கக்கூடாது; ஆனால், அதனை அப்படியே இந்துத்துவா என்பது தமிழ்த்தேசியத்துக்கு எதிரான ஆதவன் தீட்சண்யா போன்றோரின் இலங்கைவழிகாட்டி நட்பாளர்களின் திட்டமிட்ட திரிந்த வாதத்துக்கு ஒப்பானதாகும்.

சொல்லப்போனால், வட இலங்கையின் நாவலரின் 'நல்லூர்'ச்சைவத்துக்கும் வன்னியின், கிழக்கின், தென்கிழக்கின் சைவம் என்று அடையாளம் காணப்பட்ட நெகிழ்ச்சியான சைவவடிவங்களுக்கும் இடையேயான ஒப்பீட்டு ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று. ஆனால், இவை எதுவும் அடிப்படையிலே அரசியல் முடுக்கம் கொண்ட இந்துத்துவா அல்ல. இந்துத்துவா என்பது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகாக, இந்திய நலனைக் கொண்டு உள்ளே கேரளகஞ்சாபோல வெளித்தூதர்களாலும் உட்தரகர்களாலும் 'ஈழச்சைவம்=இந்தியத்துவா" செய்யும்படியாக வெளிப்படையாகவும் நுணுக்கமாகவும் நுழைக்கப்படுகின்றது என்பேன்.  சொல்லப்போனால், ஈழத்தின் முற்போக்குத்தமிழ்த்தேசியர்கள் இன்று எதிர்க்கவேண்டிய இந்தியமயமாக்குதலிலே இந்துத்துவாவினை வேர்விடாமலே தடுத்தல் ஒரு முதன்மையான செயற்பாடாகவிருக்கவேண்டும். நம்மிலே பலர் அப்படியே கருதுகின்றோம் என்றும் சொல்வேன். இதனை ஈழதேசியத்தின் தமிழக நண்பர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பது என் விழைவு.

மதநம்பிக்கை அற்ற எனக்கு ஈழத்தின் சைவம் குறித்துப் பல விடயங்களில் விமர்சனம் உண்டு; ஆனால், தொடர்ச்சியாக ஈழச்சைவத்தினை இந்துத்துவா என  அடையாளப்படுத்திக்கொண்டு, மீதி மதங்களின் குறைகளை (சைவத்தின் சாதியம், சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவாவின் அடிப்படைவாதம் உட்பட்ட பண்புகளையும் தம்மளவிலே சமாந்திரமாய் உள்ளடக்கிய) விமர்சிக்க மறுத்தும், சொல்லப்போனால், இன்னமும் ஓரடிமேலே சென்று, அவற்றினை இந்துத்துவாவினை எதிர்க்கின்றோம் என்ற பேரிலே விமர்சனமின்றி இந்திய நண்பர்கள் ஆதரிப்பதும், இன்னமும் ஈழம் சார்ந்த சைவர்களை இந்துத்துவா நோக்கித் தள்ளச் செய்யும் அபாயத்தினையே பெருக்கும்.  இக்கெடுநிலைதனையே இலங்கையிலே இந்தியத்துணைத்தூதரகம் முதல், சுவரொட்டி, ‘தமிழ்ச்சைவம்’ என்று ‘சிங்களபௌத்தம்’ என்பதுக்கு ஈடாகச் சுவரொட்டும் நுழைந்த சிவசேனாவரை விரும்புகின்றன என்று சொல்வேன்.

. மார்க்ஸின் முழுத்தமிழ்த்தேசியத்தின் எதிர்ப்பு அடிப்படைவாத இஸ்லாமியக்கூறினை விமர்சனமின்றி அரவணைத்தது.  கூல் போன்றவர்களின் "கிறிஸ்தவர்கள் இலங்கையில் தமிழர்களிலே ஒடுக்கப்படும் சிறுபான்மையோர் ஆகின்றார்கள்; யாழ்ப்பல்கலைக்கழகத்தில் யார் யார் என்னென்ன சாதி என்று எழுதுகிறேன்" போன்ற சிவசேனைக்குச் சமாந்திரமான  கெடுதல்மதப்பார்வை ஒருவரும் விமர்சிக்கத் துணியாமலும் குறிப்பிட்ட சில தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களாலே தமிழ்த்தேசியத்துக்கு எதிரான வாதமாகத் தமிழகத்துள்ளே அவர்களின் கூட்டாளிகளூடாகப் பரப்பவும்படுகிறன.  சிங்களபௌத்தத்தின் பேரினவாதக்கூறினை (சகோதர இடதுசாரிக்கட்சியாக ஜேவிபி காணப்படுவது உட்பட) விமர்சிக்க மறுத்து அரவணைக்கின்றவர்கள் தமிழ்த்தேசிய எதிர்ப்பினை முழுமையாக ஆதரிக்கும் சிபிஎம் அரசியல், கலைப்பிரிவுகள், ஒரு பகுதித்தமிழ்நாட்டுத்தலித்தியர்கள்.  இவர்களின் மீது விமர்சனமற்றுத் தப்பவிடும் தமிழக இடதுசாரிகளின் போக்கும் நடராஜன் அவர்களின் பின்னூட்டத்திலே கோபத்தினைக் காட்டும் ஈழத்தமிழ்த்தேசியர்களின் நிலைக்குக் காரணமோ என்ற ஐயமும் எனக்கு உண்டு. அ. மார்க்ஸ், கூல் போன்றோரின் போக்குகள்  இந்துத்துவா ஈழத்திலே விரலூன்ற ஏதுவாகவிருக்கும் (மதமாற்றம், மதம் சார்ந்த நிலம்|தொழில்மீதான ஒடுக்கல் போன்ற) உள்ளூர்க்காரணிகளாலே வெறுத்திருக்கின்ற சில பகுதிச்சைவர்களை இன்னமும் இந்துத்துவாவை நோக்கித் தள்ளுகிறதா என  ஆய்வு நடத்தப்படவேண்டும்.  வெறுமனே, சிவசேனை ஊக்கிகளையும் அகரமுதல்வன் விளைவுகளையும் மட்டும் நொந்து பயனில்லை;  மதம் சார்ந்த கெடுதலே தொடர்ந்து வளரும் அவலநிலையைத்தாம் காணமுடிகின்றது. இப்படியான மதம் சார்ந்து இயங்கும் | இயங்கவெளிக்கிடும் தமிழ்த்தேசியவாதிகளை எப்படியாக எதிர்கொள்வது, மதத்தைப் பின்தள்ளி தமிழ்த்தேசியத்தின் தேவை மதவடையாளத்தினதும்விட வலிமையானதும் நியாயப்படுத்தக்கூடியதுமான இணைப்புச்சரம் என்பதை உணர்த்துவது என்பதையும் காண நாம் முயலவேண்டும். தமிழத்திலுங்கூட, திராவிடக்கட்சிகளினதும், சிபிஎம் போன்ற இடதுசாரிக்கட்சிகளினதும் தமிழ்நாட்டின் நலன் குறித்த தெளிவின்மையும் அலட்சியமும் தமிழ்த்தேசியத்தின் ஒருபகுதியினை மிகவும் பாசிசத்தன்மையுள்ளதாக, சாதியம், இந்து அடையாளங்களூடே தள்ளுவதைக் கண்டுகொண்டிருக்கின்றோம். (பிரபாகரன் படத்தைப் போட்டுக்கொண்டே, சாதியப்பெருமை பேசுகின்றவர்கள் வியப்பும் வெறுப்பும் ஒருங்கே கக்கவைக்கின்றார்கள்)  

அதனால், ஈழதேசியத்தின் தமிழக நண்பர்கள், அகரமுதல்வன், காசி ஆனந்தன், சச்சிதானந்தன் போன்ற தமிழ்த்தேசியர்களை விமர்சிக்கும்போது, அவர்களை ஈழத்தமிழ்த்தேசியத்தின் முழு அடையாளமாகக் காண்பதினைத் தவிர்க்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதுபோலவே, ‘ஈழத்தின் சைவம் = இந்துத்துவா என்று இவர்களை வைத்து அடையாளப்படுத்துவதையும் ஒப்பீட்டுப் பார்த்து ஆய்ந்து தவிர்க்கவேண்டும். எல்லாவற்றுக்கும்மேலாக, இப்படியாக ஈழத்தின் நாளாந்த வாழ்நிலைச்சைவத்தினை மட்டும் அதற்கான பயன்பாட்டு ஒழுகுவெளியைக் கொடுக்காது, அரசியல் இந்துத்துவாவாக விமர்சனப்படுத்திக்கொண்டு, இலங்கையின் மற்றைய மதங்களுக்கு தமிழ்நாட்டின் நிலையை எண்ணிக்கொண்டு,சிறுபான்மையார் என்ற வகையிலே விமர்சனமற்ற முழு ஆதரவினைத் தருவது இந்துத்துவாவினை வெற்றி பெற வைக்கும் நிலைக்கே இலங்கையிலே தள்ள உதவும்; இது நீண்டகால நோக்கிலே  நாடுகடந்த முற்போக்குத்தமிழ்த்தேசியத்தினையும் நசிக்கவே நாடுகடந்தும் உதவும்.

அதனால், அகரமுதல்வனைக் கண்டிக்கும்போது, ஈழத்தமிழ்த்தேசியத்தின் முழு அடையாளமாக அவரையும் அவரின் ஈழ ஆதரவாளர்களையும் கொண்டு உங்களின் கருத்துகளை வைக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். அதுவும் இடதுசாரிநிலையிலிருந்து- அதே நேரத்திலே தமிழகத்தின் ஆதவன் தீட்சண்யா, தமிழ்ச்செல்வன், இந்து ராம் இவர்களைபோன்ற கட்சிசார் சிபிஎம் இடதுசாரிகளை முற்றாக நிராகரிக்கும் ஒருவனாகவும் உங்களைப் போன்ற இடதுசாரிகளைப் புரிந்துகொண்டவனாகவுமே வைக்கின்றேன் என்பதைப் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன்.