Tuesday, September 15, 2015

"போர்க்களத்திலே ஒரு பூ" மேலான காதுல பூ



இசைப்பிரியா தொடர்பான "போர்க்களத்திலே ஒரு பூ" படத்துக்கு எஸ். வி. சேகர், "கைய புடிச்சி இழுத்ததை பார்த்தியா?" என்பதுக்கும்மேலாக, வன்புணர்ச்சி நிகழ்ந்ததுக்கு விழிய ஆதாரம் கேட்டிருந்தார் என்றும் அதன்படியே அவர் உள்ளடக்கிய தணிக்கைக்குழு படத்தினைத் தடை செய்துவிட்டது என்றும் சொல்லப்பட்டது.

இதன் பின்னால், தான் சொன்னதைத் திரித்து எழுதியதாகவும் பேஸ்புக்கிலே தன்னைக் கிண்டல் செய்வதாகவும் தொலைபேசி செய்து பயமுறுத்தியதாகவும் எஸ். வி. சேகர் தமிழ்நாட்டு நகர்காவலர் நிலையத்திலே முறையிட்டிருக்கின்றார்.


எஸ். வி. சேகர், " பெண்களைஇழிவுபடுத்தியோ, பெண்களை பாலியல் வன்கொடுமைக்குஆளாக்குவது போலவோ, கூட்டாக பாலியல்வன்கொடுமையில் ஈடுபடுவது போலவோ காட்சிகளை அனுமதிக்கக்கூடாது என்று அந்தச் சட்டத்தில்உள்ளது. இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பைஏற்படுத்துவது, நட்பு நாடுகள் மற்றும்அண்டை நாடுகளுடனான உறவுகளைப் பாதிக்கும்படி காட்சிகள் இருக்கக் கூடாது என்றும் அந்தச்சட்டம் சொல்கிறது. ஆனால், இவை எல்லாமே‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்றபடத்தில் உள்ளன. சட்டமன்றத்தில் தமிழகமுதல்வர் பேசியதை வியாபார நோக்கில்வெளியில் கொண்டுவரும்போது, அதற்கு தமிழக அரசின்அனுமதி வேண்டும். அதை அவர்கள் தரவில்லை.அந்தப் படத்தை எடுத்துள்ள கணேசன்என்பவர், குயுக்தியாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமைகள் சரிஎன்று நான் சொன்னதைப்போல சித்திரிக்கிறார்கள்.இசைப்பிரியாவுக்கு நடந்ததைப் போன்ற கொடுமை எந்தப்பெண்ணுக்கு ஏற்பட்டாலும் அது கண்டனத்துக்கு உரியது.அதை யாரும் சரியென்று சொல்லவில்லை.ஆனால், தேவையில்லாமல் முகநூலில் என்னைத் திட்டுவதும், தொலைபேசியில்மிரட்டுவதும் நாகரிகமான செயல்கள் இல்லை. இதுதொடர்பாக போலீஸ்கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.


தொலைபேசியிலே மிரட்டும் செயல் நாகரீகமானதில்லை என்பதை எவரும் ஒத்துக்கொள்வார்கள் (கட்சி அரசியல்வாதிகளும் தொண்டர்களும் குண்டர்களும் ஒத்துக்கொள்வார்களா என்பதைமட்டும் நாம் நாகரீகமாக ஒரு பக்கம் விட்டுவிடலாம்). இப்படியாக உண்மையிலே யாரேனும் மிரட்டியிருந்தால், அது கண்டிக்கமட்டும் தக்கதல்ல, தண்டிப்புக்குமுரியது; கூடவே, அவர்கள் எக்காரணத்துக்காக வெஞ்சினம் கொண்டு மிரட்டிக் கண்டிக்கின்றார்களோ அதன் நோக்கத்துக்கும் எதிரானதாகவே இம்மிரட்டல் தொழிற்படும் என்பதையும் இப்படியானவர்கள் உணரவேண்டும். அதேநேரத்திலே தொலைபேசியிலே மிரட்டும் செயலே நாகரீகமில்லை என்று கருதும் எஸ். வி. சேகர் என்ற தணிக்கைக்குழு உறுப்பினர் எப்படியாக ஒரு பெண்ணினைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது போலவோ, கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதையோ எல்லாம் பேசாமலே போவதுதான் தன்நாட்டினதும் அந்நாட்டிலே உருவாகும் கலைப்படைப்பினதும் நாகரீகம் என்று சட்டத்தின்கீழே ஒளித்துவிளையாடுகின்றவர் போல எண்ணுகின்றாரோ தெரியவில்லை.

ராஜ்பாபர், பத்மினி கோலாபூரி நடித்த ‘Insaaf Ka Tarazu‘ வெளிவந்த 1980 இற்கு முன்னான காலத்திலேகூட, ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதுபோன்ற காட்சிகளை நிறையப் படங்களிலே பட மையக்கருத்துக்கும் காட்சிக்கும் சம்பந்தப்படாமலே காட்டியபோதே ஏற்றுக்கொண்டோமே! இப்போதுங்கூட, பாலியற்சொன்வன்முறைக்கு நாயகர்களும் அவர்களின் நண்பர்களும் உள்ளாக்கும்போதுகூட அவற்றையெல்லாம் நாயககுணாம்சயமென்றோ 'நகைச்சு-வை' -பண்பாடு என்றோ ஏற்றுக்கொண்டோமே அப்போதெல்லாம் இப்பெண்மீதான வன்முறை எவ்வகையிலும் பிரச்சனையாகவில்லை; "போர்க்களத்திலே ஒரு பூ" என்ற இப்படத்தின் மையப்புள்ளியே இசைப்பிரியா என்ற பெண் இராணுவவன்முறையின் பாற்பட்ட துயரையும் அவர் பெற்ற துன்பமுடிவினையும் சொல்லி அதனூடாக ஒரு மொழிபேசும் இனம் கண்ட அவக்காலத்தைச் சொல்லவருவதே; இதிலே எவ்வண்ணம் பாலியலின் துன்புறுத்தலுக்கு அப்பெண் உள்ளாகவேயில்லை என்று காட்டிப்போவது? வேண்டுமானால், இந்தியப்படங்களிலே மது அருந்தும், புகை பிடிக்கும் காட்சிகள் வரும்போது கூடவே கீழே "செய்யாதீர்கள்" என்றோ "கேடாகலாம்" என்றோ வேண்டுகோளோடு தோன்றுவதுபோல வன்புணர்ச்சி நிகழ்வதாக மறைமுகமாகச் சுட்டும் காட்சி வரும்போது, “" பெண்களை இழிவுபடுத்தியோ, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது போலவோ, கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவததுபோலவோ காட்டுவது நாட்டின் இறையாண்மைக்கும் உள ஒழுக்கத்துக்கும் உகந்ததல்லஎன்று துணையெழுத்தோடவிட்டால், பாராளுமன்றத்திலேயே உட்கார்ந்திருந்து வரவுசெலவுத்திட்டவிவாதத்தின்போது தூங்காத வேளையிலே செல்பேசியிலேபிட்படக்காட்சி கண்டு களிக்கும் நாடாளுமன்ற.உறுப்பினர்கள் சரி என்று சொல்லிவிடமாட்டார்களா என்ன?

ஒரு நிராயுதபாணியான பெண்ணை இராணுவம் கூட்டுவன்புணர்ந்து கொன்றதை -அது தொடர்பான ஆடைகளற்ற அப்பெண்ணின் சீர்குலைந்த படங்களைத்தீவிர தமிழ்த்தேசியம்" பேசுகின்ற சிலரும் வலைத்தளங்களுமேகூட, அப்பெண்ணின் உற்றாரின் "வேண்டாமே!" என்ற வேண்டுகோட்களுக்கும் செவிமடுக்காது சமூகவலைத்தளங்களிலேயும் பரப்பிய, பரப்பும் துர்நிலையிலே,நேரடியானதற்றதாகச் சிலாகிக்கும் காட்சியாகச் சொல்வதை எப்படியாகச் சதையை வைத்துத் தர்ப்பைப்புல்யாகஹோமம் வளர்க்கும் அவநிலையை ஒவ்வொரு பாடற்காட்சியிலும் படுக்கைக்காட்சியிலும் காட்டும் திரைப்படங்களைத் தமிழ்|பாரதப்பண்பாட்டின்பேரிலே அனுமதிக்கும் ஒரு நாட்டின் தணிக்கைக்குழு தடை செய்கிறது?

எல்லாவற்றுக்கும்மேலாக, ஒரு பெண்ணை இராணுவவீரர்கள் வன்புணர்ந்துகொல்வதாகக் காட்டும் காட்சி எவ்வகையிலே இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதும், நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளைப் பாதிக்கும்படியுமான காட்சியாக ஆகிவிடுகின்றதெனப் புரியவில்லை. குறைந்தளவு இப்படம் 'இந்திய அமேதிகாக்கும் படையும் பிரம்படி ஒழுங்கையும்' பற்றிப் பேசும் படங்கூடயில்லையே! இதன்மூலம் என்ன உன்னத கருத்தினைச் சேகர் அங்கம் வகிக்கும் தணிக்கைக்குழு எல்லோருக்கும் சொல்லவருகின்றது? இல்லை, இங்குக் குறிப்பிடப்படும் ஒவ்வாத திரைக்காட்சிகள் -வன்புணராத,- இந்தியாவினையோ ஶ்ரீலங்காவினையோ விமர்சனம் செய்யும் வேறு காட்சிகள்தாமென்றாலுங்கூட, இதன் மூலம் சொந்த நாட்டின் மற்றைய படைப்பாளிகளுக்கும் கருத்தாளர்களுக்கும் இத்தணிக்கைக்குழு சொல்ல வருவது என்ன? “சொந்தநாட்டையோ அதன் நட்புநாட்டினையோ விமர்சிக்கும் எக்கருத்தும் அனுமதிக்கப்படாது; அனுமதிப்பது நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் குந்தகமானதுஎன்ற வரிகள்தானா? பருப்புமூட்டைக்குள் மூட்டைப்பூச்சியை விட்ட பாக்கிஸ்தான் தீவிரவாதியைத் தேடும் விஜயகாந்த், அர்ஜுன் வகையறாக்கள்கூட இத்தகாவரிகளைப் பேசியதில்லையே! எவ்விதமான மிஸா(ரி) சமுதாயநீதி இது? (இங்கு எப்படியாக 'ரெரரிஸ்ட்', 'மட்ராஸ் கபே' போன்ற படங்கள் அனுமதிக்கப்பட்டன என்பது வியப்புக்குரியதல்லவே!)

பேஸ்புக்கிலோ ட்வீற்றரிலோ அல்லது வேறெந்த சமூகவலைத்தளத்திலோ விமர்சனமே வரக்கூடாது, தொடர்ச்சியாகப் பாராட்டுகளே வரவேண்டுமென்று விரும்பும் முதலாவது தமிழ்நாட்டுத்திரையுலகப்பிரபலம் சேகரில்லை; சின்மயி, சுகாசினி, விஜயகாந்த் போன்ற சிலர் ஏற்கனவே சென்னை இணையக்குற்றத்தடுப்புநகர்காவலரிடம் முறையிட்டோ வெளிப்படையாகத் தம் செயல்களையோ தம் படைப்புகளையோ கிண்டல் செய்யக்கூடாதென்றோ காராசாரமாகச் சொல்லியிருந்தார்கள். கிண்டல்கள் வரையறைமீறிய இடங்களுமில்லாமலில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். ஆனால், முறையீடுகள் மிகத்தேர்ந்தெடுத்தே கவனத்திலே முறையீடு பெறுவோரிடமிருந்தும் பெறப்படுவதாகத் தோன்றுகின்றது. (இங்கே, டி. ராஜேந்தர், பவர் ஸ்டார், விஜய் போன்றவர்களின் உன்னதம் நம்மவர்களுக்குத் தெரியவேண்டும். எத்தகைய அடிகளையும் தாங்கிக்கொண்டு, நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டு போகின்றவர்கள் அவர்கள்; சொல்லப்போனால், "கலக்கப்போவது யாரு?" முதல் எத்தனையோ தொலைக்காட்சிநிகழ்ச்சிகளுக்கு வராமலே வாழவைத்துக்கொண்டிருக்கும் தெய்வங்கள் அவர்கள். இவர்களைக் கிண்டல் செய்யும் 'நகைச்சுவையாளர்களை' எவர்களும் சட்டத்தின்கீழே கொணர்வதில்லை; 'கறுப்பு', 'குண்டு', 'மனைவி', 'கணவன்' என்று நகைச்சுவையின்பேரிலே இழிவுபடுத்துகின்றவர்களும் கைதட்டையும் காசைத் தட்டிலும் வாங்கிப்போய்விடுகின்றார்கள்.)

அரசியல்வாதிகளினையும் திரைப்படமுகங்களையும் அவர்களின் செயற்பாட்டுக்காக விமர்சனம் சமூகவலைத்தளத்திலே செய்தாலுங்கூட, கிண்டல் செய்வதாகவோ சட்டத்தின் துணையோடு உள்ளே தூக்கிப்போட்டு மிரட்டிக் கருத்தை அமுக்குவதாலேமட்டும் இறைமையினையும் நேர்மையினையும் நிலைக்குத்தாக நிறுத்திச் சூரியநமஸ்காரம் செய்ய வைத்துக்கொள்ளமுடியுமா, சுதந்திரதினத்திலே தேசியக்கொடியினை ஏற்றுமிடத்திலேயே செருப்பாலே தமக்குள்ளே அடிபட்டுச் சமூகவலைத்தளங்களிலே துண்டவிழியமாகக் கட்சிப்பிரமுகர்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டிலே?

ஆனால், முதலிலே ஈழம் தொடர்பான படத்துக்கு இப்படியான குதர்க்கம் செய்து தடை செய்த தனியாளோ குழுவோ எஸ். வி. சேகரோ, அவர் அங்கம் வகிக்கும் தணிக்கைசபையோ அல்ல(ர்). இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புகழேந்தி தங்கராஜின் "காற்றுக்கென்ன வேலி?" இனைத் தணிக்கைக்குழு தடைசெய்திருந்தது. (அதன்பின்னாலே, தணிக்கையதிகாரி ராஜுவுக்கும் புகழேந்திக்குமான விவகாரம் விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுபடம் எடுத்தார் என்று புகழேந்தியைப் பற்றி ராஜு சொல்லி அவதூறு வழக்கானது இன்னொரு கிளைக்கதை.) இதேநேரத்திலே, சந்தோஷ் சிவனின்ட்ரெரரிஸ்ட்’, ‘மல்லி’, ‘இனம்’, ஜான் ஆப்ரஹாமின்மெட்ராஸ் கபேபோன்ற படங்கள் இவை போன்ற எத்தொற்றுவியாதியும் கொண்ட படங்களாகக் காணப்படாது, தேசபக்தியையும் சுண்டுவிரல் இறையாண்மையையும் விண்டுகொண்டு பிறந்தபொன்னாட்டுக்குப் பிளட்டினவாடை போர்த்தும் படங்களாக விளம்பரமாக்கித் தணிக்கைக்குழுவின் தாராளவாதத்தினாலே ஓடவிடப்பட்டன என்பதையும் கவனிக்கவேண்டும்.

முடிவாக, தொடர்ச்சியான வன்புணர்வுகளைப் பெண்கள் எதிர்கொள்ளும் நாட்டிலே, பெண்களின் தனிப்பட்ட ஆடையணி, உணவு விருப்புவெறுப்புகளை, யாருடன் எப்போது எங்கே நடமாடுவது என்பதை அவர்கள் அறியாத தாமேதோன்று மதக்கல்சுரல்கமிசார்களும் கட்சித்தொண்டர்களும் நாட்டின் புராதனப்பண்பாட்டின் அடிப்படையிலே தீர்மானித்துத் தண்டனை வழங்கும் நாட்டிலே, பெண்களுக்கு நிகழும் வன்புணர்வு பற்றிய வெளிநாட்டுவிவரணங்கள் நாட்டினை இழிவுபடுத்துகின்றன, இறையாண்மையைக் குத்திக் குதறுகின்றன என்பதன்பேரிலே தடை செய்யப்படும் பொதுச்சிந்தைப்போக்கிலே, “ஈழம் தொடர்பான இந்திய ஆதரவுப்பதிப்பாளர்களின் பரபரப்புப்புத்தகங்களை விற்பதைக்கூட நாட்டின் இறையாண்மைக்கு எதிராகக் கருதும் சகபதிப்பாளர்கள், சங்கங்கள்தம் செயற்பாடுகள் சரியேதான் என்று அடுத்த புத்தகக்கடைக்கு வீரப்பன்வதம் பற்றிய புத்தகம் வாங்க நகர்ந்துபோகும் மக்களின்மனப்பாங்கிலே எஸ். வி. சேகரின் கருத்தினைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. பாமினி எழுத்துரு சம்பந்தமாகப் பேசும்போதுகூட தமிழ்-பார்ப்பனர் என்று தொடர்பின்றி நகைச்சுவையை அசர்ப்பந்தமாக நுழைக்க முடிகின்றவர்கள், அவர்களின் நகைச்சுவைக்குச் சிரிக்கின்றவர்கள்கூட தொடர்ச்சியாகவே இப்படியான சந்தர்ப்பங்களிலே கருத்தினைச் சொல்லாமலே சுயதணிக்கை செய்துகொள்கின்றபோது தாம் சொல்லாது விலகியிருப்பதிலேயே தம் கருத்தினை வெளிப்படையாகச் சொல்லிவிடுகின்றார்கள் என்று சொல்லமுடிகின்றது.

இவ்வகையிலே பார்த்தால் . ஆர். ரஹ்மானுக்கும் மஜீதிக்கும் மதத்தினை முன்னிறுத்திப் படத்தினை எடுத்ததற்காகப் பத்வா விதித்த மும்பாய் அமைப்புக்கும் எஸ் வி சேகரின் தணிக்கைக்குழுவுக்கும் எந்த வேறுபாட்டினையும் காணமுடியவில்லை. எல்லாம் தமக்கான திருப்திக்கான விதிகளைக் கண்டுபிடித்து நூலாலே தலையையும் வாலையும் கட்டித் தொடர்பு கண்டு கருத்துத்தடைசெய்யும் வன்மமே மிஞ்சுகின்றது.

ஆனால், ஒன்று; இத்தகைய நாட்டின் கூட்டுமனப்பாங்கு இறையாண்மை வரைவிலக்கணத்தின்வழியிலே நீண்டகாலப்போக்கிலே பாதிக்கப்படுவது, இறந்துபோன இசைப்பிரியா இல்லை; இன்னமும் வாழப்போகும் இந்தியப்பெண்கள்தாம்; இறையாண்மையின் பேரிலே நட்புநாட்டின் கூட்டின்பேரிலே அத்தனை கொடுமைகளையும் அமுக்ககேட்பதினாலே நொருங்கிப்போவது, ஏற்கனவே நொருக்கப்பட்ட கூட்டுநாட்டின் ஒடுக்கப்பட்ட சமூகமல்ல; ஒருங்கிக்கொண்டிருக்கும் உள்நாட்டின் கருத்துவெளிப்பாடுதாம். துணுக்குத்தோரணங்களே நகைச்சுவையான நாட்டிலே ஸ்ராண்ட் அப் கொமெடியன்களே தேசிய கொடிகாத்த குமரர்களாகட்டும்.

வந்தே.. ஹும்.. வரவே வேண்டாம்! ஆசீர் எமக்கு! வாதம் உமக்கு!

Monday, September 07, 2015

பதி/தைப்பு

சுன்னாகச்சந்தை வாழைக்குலை மாதிரியாய் அள்ளிக்கொட்டி ஏனோ தானோவென்று பதிக்கும் இந்தியப்பதிப்பகங்களுக்கு பதிகூலி, விளம்பரக்கூலி, பண்டக்குதக்கூலி, பத்திரமாய்த்திருப்பியனுப்புகூலி என்பதாக அனைத்துக்கறப்புகளிலும் அப்பணம் போய்ச்சேருமென்றால், புத்தகத்துக்குக் காசுவிடாச்சிக்கனம் அவசியமே!

அந்நிலையில் தமிழ்நாட்டுப்பதிப்பகங்களிலே தன் விலாசவிசாலத்துக்குப் புத்தகம் போடும் பணத்தினை வன்னி, வாகரை, அம்பன், விடத்தல்தீவு, இறக்கக்கண்டி, குமுளமுனை, கோளாவில் கொட்டில்களுக்குள் எப்படியாகவேனும் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்று எண்ணுவது மேல். 

அக்கரையிலே சனம் சாகும்போது காந்தி கண்ணதாசன் என்று உள்ளூர் உளூந்துகளுக்கே பயந்து இக்கரைப்பொந்துக்குட் பதுங்கிக்கொண்டு தம்நாட்டுத்தேசியக்கொடிகளைக் கோவணவிடுக்குகளால் வீசிக் கோடி காட்டியவர்கள் வெள்ளம் செத்து ஆறு வற்றி செத்த கதைகளை செத்தவீட்டு எட்டுச்செலவிலேயே சீமான்களும் சீமாட்டிகளும் டிகாஸன் காப்பியோடு வாசிக்கப்போடு இலக்கியநயம் கண்டு நொய்ந்துருகிக் கண்ணீர்வடிக்கும் மாய்மாலத்துக்குக் காசை விட்டு என்ன பயன்?

சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பிய லேனா, மாவன்னா கும்பலின் காலிலேயே சாகமுன்னால், உலக இலக்கியத்தின்பேரிலே எஸ்பொவும் விழுந்த அழுக்கையும் கண்டோம். வெக்கங்கெட்ட மனுசன்! எவரின் திமிர்ச்சட்டைக்கோ இன்னொரு மெடல் குத்தக்குடுத்துப்போட்டுப் போய்ச்சேர்ந்தது.
 
சிதம்பரம்பிள்ளை மட்டும் சுயராஜ்யத்துக்கென்றொரு கப்பல் கட்டலாம்; ஆனால், நாங்கள் இன்னமும் அங்கேதான் போய் அச்சுப் போடப் பிச்சுப்போட்டுக் கொட்டக்கிடக்கு. இப்பிடி வரும் இலக்கியம் இருந்தென்ன? இறந்தென்ன? ஆண்டைகளின் வீட்டுக்கூழுக்கான உள்ளீடு மாண்டாரும் மறந்தாரும்? தாயை வைச்சுக் காப்பாதமுடியாதவனெல்லாம் செத்தவீட்டுக்கு ஸ்பீக்கர்கட்டிச் செலவழிக்கிற விளையாட்டுத்தான் சிக்கனம் விட்டுத் தமிழ்நாட்டுப்பதிப்பகங்கள் போடும் புத்தகங்களுக்கு விடும் காசு!
இப்படியாகப் புத்தகம் போடும் காசை ரெண்டு கான் பியருக்கு விடலாம், வாழ இடத்தைக் குடுத்த நாட்டுக்கு வரியாச்சும் போகுதெண்டு - புரட்சிகரமாய் பேஸ்புக்போட்டோவுக்குப் போஸ்குடுத்தபடி குடிக்கிறவை; குடிச்சால் இலக்கியம் பிறக்கும். குடிக்காத எங்களைப்போல ஆக்கள்,,,,, அதுதான் இலக்கியம் படைக்கிறேல்லை; படைக்கிறாக்களிலை பொறாமையிலை இப்படியா எப்பவும் எதிர்மறையாத் திட்டுறது , காசை விடோம்! காசாலேசா!

------------------------------------------

 தமிழகத்திலே ஈழத்தவர் பதிக்கும் விடயத்திலே நான் சொல்வது/சொல்லவருவது பற்றித் தவறான புரிதல் சிலவற்றினை நண்பர்களிடையே காண்கிறேன். அவற்றினைத் தனியே விளக்கமுயல்வேன்.

1. என் கருத்து எவ்விடத்திலும் தமிழ்நாடு.எதிர்.ஈழம் என்ற வைத்தலிலிருந்து புறப்படுவதுமில்லை; புறப்படவுமில்லை.

2. இது தமிழ்நாட்டின் பதிப்பகங்கள் ||அனைத்தினையும்|| போட்டுத் தாக்குவதும் தமிழ்நாட்டிலே பதிக்கும் ஈழத்தவரைப் போட்டடிப்பதுமாகக் கொள்ளக்கூடாது.

3. ஈழப்பதிப்பகங்களின் குறைகள் தனியே பார்க்கப்படவேண்டியவை.

பதித்தல் தொடர்பாக என் அடிப்படையான கருத்துகள் மூன்று:

1. தாயும் சேயுமானாலும் வாயும் வயிறும் வேறு; நமக்கென்ற தொழில்நுட்பத்தினையும் கருவிகளையும் நாம் கொண்டிருக்கவேண்டும் (ஜெயமோகன், வ. அ. இராசரத்தினம் இறந்தபோது, அவரை நினைவுகூர்கிறேன் பேர்வழி என்று இலங்கையிலே ஶ்ரீமாவோ காலத்திலே இந்தியப்பதிப்புகளை இறக்குவதிலிருந்த தடையினைத் திட்டித்தள்ளினார்; ஆனால், இதுவரை, ஈழத்திலோ பிறநாட்டிலே பதிக்கும் தமிழ்நூல்களிலே எத்தனையை இந்திய/தமிழ்நாட்டின் கண்காட்சிகளிலே, கடைகளிலே இறக்குமதி செய்து விற்பனையாக்க இந்திய அரசும் தமிழக நூலங்காடிவியாபாரிகளூம் முறையே அனுமதி தரவும் விற்கவும் தயாராக இருக்கிறார்கள் என்று தமிழகத்திலிருந்து எவரும் பேசி நான் காணவில்லை. (தாம்போட்ட ஈழம் தொடர்பான நூல்களையே காந்தி கண்ணதாசன் என்ற ஆள் "பயங்கரவாதச்சட்டம்" என்ற கோலைக் காட்டக் கண்காட்சியிலே ஒளித்த வீரப்பத்ரிகையாளர்கள் பதிப்பாளர்கள் இவர்கள்))

2. பதிப்பாளர்கள் எழுதுகிறவருக்கும் வாசிக்கின்றவர்களுக்குமிடையேயான "அமேசன்" இடைத்தரகர்களாகத் தம்மைக் கருதாமல், படைப்புகளின் தரம், உள்ளடக்கம், அதை வெளிக்கொணரும் வகை என்பவற்றிலே மெய்யான கரிசனை எடுக்கவேண்டும். எழுத்துரு, மெய்ப்புப்பார்ப்பு, சீர்படுத்தல், பதிகாகிதம், அச்சுக்கோர்ப்பு இவையெல்லாவற்றினையும் சிறப்பாகப் பொறுப்பெடுத்து மேற்பார்வை செய்ய வேண்டிய கடன் அவர்களது. அத்தகுநிலை பிறந்து, புத்தகம் போடுதலை ஒரு கழிந்தபண்டத்துக்கான தர்ப்பைப்பிண்டம்போலக் கருதுதல் எரிச்சலூட்டுவது.

3. சமூகம் குறித்த ஒரு கரிசனையுள்ள பதிப்பாளரை ஈழம் குறித்த எழுத்தாளர்கள் அணுகவேண்டுமென்பதை இன்றைக்கும் விரும்புகிறேன். துயர்நிகழும்போது குரலையே எழுப்பாது பதுங்கிவிட்டு, எல்லாம் முடிந்தபின்னர், அத்துயரை எழுத்தாக்கி விற்றால், சந்தைப்படுத்தலாம் என்ற அளவிலே அலையும் உலுத்தர்களைப் புறம் தள்ளவேண்டும்; அவர்கள் ஈழத்திலிருந்து இவ்விற்பனையைக் கண்கொண்டு புறப்பட்ட புதுப்பதிப்பாளர்களாகவிருந்தாலுங்கூட.




நான் அடிப்படையிலே படைப்பாளியுமல்லன்; பதிப்பாளனுமல்லன்; வாசிப்பானுமல்லன்; வாங்குவோமல்லன். ஆனாலும், படைப்புலக அரசியலை, படைப்பாளி-பதிப்பாளி-வாசிப்பாள்-விமர்சகர்-விருதாளி Pentagon விளையாட்டினைச் சுவராசியமாகப் பொழுதுபோகப் பார்த்துக்கொண்டிருப்பவன். அவ்வளவுக்குள் கண்டதை அடிப்படையாகக் கொண்டு சொன்னதே என் கருத்து. தவறிருக்கலாம்


தவறாகச் சொல்லியிருப்பின், அல்லது எவரதும் உள்ளத்தைப் புண்படுத்தியிருப்பின் மன்னிக்கவேண்டும். அதுவல்ல என் நோக்கம்.

Thursday, September 03, 2015

பாமினிப்பா(ர்)வை

காசு கண்: பாமினி என்றொரு எழுத்துருவை பயன்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட பால் பொடி , இடி ஆப்பம் அளவுக்கு அவர்கள் அடையாளமாக உள்ளது என்றால் மிகை இல்லை. 1995 முதலே அவர்கள் எங்களைக் கொடுமைப்படுத்துவதில் பாமினிக்கு முக்கிய இடம் உண்டு. அடங்காப்பிடரி. எந்த எழுத்துரு மாற்றிக்கும் முழுமையாக இணங்காது . கண்டாலே எனக்கு ரத்த அழுத்தம் கூடும். இன்று தமிழ் உலகம் unicode க்கு நகர்ந்துவிட்டது. அவர்கள் பாமினியை விட்டு நகர்வார்களா? நான் தமிழ் இன சர்வாதிகாரியானால் முதல் நடவடிக்கை பாமினி ஒழிப்புதான். அதற்குப் பின்தான் தனி நாடு.

புளிபக்ஷி: மறுபடியும் பார்ப்பனச் சூழ்ச்சியா? உங்களை விரட்டியடிக்கத்தானே நாங்கள் தமிழ் இனம் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்கிறோம்? பாமினியின் பெயரில் பார்ப்பான் நுழைவதை பார் புகழும் தமிழன் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்!


இயாப்பு, எழுத்துப்பிழை இவையேதுமே கண்டுகொள்ளாமல், கோழிக்கிறுக்கலாய்ப் பிரபல எய்தாழிகள் சலவைக்குறிப்புக்கடதாசியிலே எய்திக்கடாசியதையெல்லாம் அப்படியே அள்ளிப்போட்டு, அவித்தது ஆறமுன்னரே கண்காட்சிக்கு -எய்தியது பிரபலமில்லாவிட்டால் போட்டாள் செலவிலேயே விளம்பரம்போட்டு, "விற்கப்படாததை நீயே வாங்கி என்னவாச்சும் செய்து கொள்" என்று அந்தாளிடமேயே திரும்பவும் வைத்திருந்த இடக்கூலியும் சேர்த்து அடாவிலையிலே விற்றுக்கட்டி மினிவான் கொண்டக்டர் ஏற்றி இறக்குவதைப்போல- வைப்பதைவிடவா பாமினியிலே தமிழடிப்பது மோசமாக இருக்கப்போகிறது?

இன்னமும் "அவைகள்" என்று அ(ஃ)து என்பதற்குப் பன்மை இடுகின்றவர்களும் 'விருவிருப்பு', 'சுருசுருப்பு' என்று ங்கொய்யால தமிழ் எழுதுகின்றவர்களும் 'கொண்டு வர வேண்டி இருக்கும்' என்று கோடாலிமுறிப்புவிறகுத்தமிழ் விதைக்கின்றவர்களும் "பின்னாலேப் போனான்" என்று ஒட்டுண்ணித்தமிழ் வளர்க்கின்றவர்களும் கேள்வியின்றி அங்கீகரிக்கப்பட்டு, அவ்வழுக்கள் திருத்தப்படாமலே அச்சேற விடுகின்ற பதிப்பாளர்கள், பாமினிப்பாவையிலே துகிலுரிவது நியாயமில்லை. தமிழக அரசுத்தமிழிலே இன்னும் முருங்கைமரவேதாளங்களாய், தலைகீழாய்த் தூங்கும் தாப்பு, தாம்புக்கயிற்று எழுத்துருக்களுக்கு இப்படி ஓர் இடியப்பச்சிக்கல் இவர்களிடமிருந்து ஏன் வருவதில்லை?

ஒரே நாளிலே "தகுதரமே முழுக்க வேண்டாம்; சென்னை கி(கா)ங்மேக்கர்களின் தாப்ஸ்/தாம்ஸ் இனையும் டவுட் இன்றி ஏற்றுக்கொள்ளவும்" என்று அரசனை தமிழ்நெட் 99 மேடையிலே ஏற்றி அழுத்தித் தலைகீழாகக் கொட்டினபின்னால், "பாமினி-->தப்பு/தாமு என்று மாற்றி அனுப்பு" என்று பாமினியின் பாண்டவர்களிடம் கேட்கும்போது, இந்த உரோமம் சிலிர்க்கும் உரோஷம் தப்பு/தாமுவிலேயும் வந்திருக்கவேண்டும்; வரவில்லை. ஆங்கே அரசியலிலும் வியாபாரத்திலும் புட்டுக்கொள்ளும். எழுதியவர் கேட்டாரே என்று நட்புக்காக நாமே தகுதரமாற்றியிலே ஆற்றி பாமினியிலே அனுப்பிக்கொண்டிருந்தபோதும் "நன்றி" என்று ஒரு வார்த்தை மாற்றியனுப்பியவர்களிடம் வெளிப்படையாகக் எதிரொலிக்கச் செய்யவில்லை.

அதுதான் கிடக்கட்டும்; எழுதுவதுதான் எழுத்தாளன் முதல், கடன் & ஈடுபாடு; அதைச் சீர்படுத்தி, எழுத்துக்கோ(ர்)த்து, அச்சேற்றுவது பெற்றுக்கொள்ளும் பதிப்பாளர் கடனில்லையா? இதிலே எழுதுகின்றவரே இந்த எழுத்துருவிலேதான் எழுதவேண்டுமென்று அடம்பிடித்தால், பதிப்பாளர் தன் பங்குக்குச் செய்வதுதான் என்ன? கண்காட்சியிலே கல்லாப்பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு, வரும் விசிலடிச்சான் குஞ்சுகளின் பேஸ்புக் செல்ஃபிகளுக்கு 'போஸ்' கொடுப்பதுமட்டுமேதானா?

மிகவும் ஆத்திரம் மிஞ்சுவது புலம்பெயர்ந்த சில "எல்லோருக்கும் நல்லோம் நாம்" குஞ்சுகளிலே! இதெல்லாம் ஒரு பிழைப்பு! சொந்தக்காசிலேதானே புத்தகம் விடுகிறீர்கள்; இதற்குப்பின்னும் எதுக்கப்பர்களே நெடுஞ்சாண்கிடையாக உடலின் எட்டவயவங்களும் நிலம்படக் கிடந்து பாததூசி கேட்கும் வெட்கமின்மை? அந்தக்காலத்து ஆனந்தவிகடன் காலத்திலிருந்தே, பண்ணைக்கடற்கரையிலே எறியவளைவாக ஒண்ணுக்கடிச்சாலும், மெரீனாபீச்சிலே ப்ரொஜெக்ஸனில் பிஸ்ஸினேன் என்று எழுதித்தான் அவர்கள் கதை அவாளுக்கும் விளங்கவேண்டுமேயென்று அவதானமாகக் கதை அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்! இப்படி அசந்த சந்திலே பாமினியின் முந்தானையை கௌரவசபையிலே கண்ணனே புடிச்சி இயுத்துவுடுவாரு! இதெல்லாம் இப்ப முக்கியமா என்ன? ஜெண்டில்மேன் இயமமோளமோ புளிநகைகொள்ளை பூணூல் அண்டர் த ப்ரொபஸர்சிப்போ ஒரு ரவுண்டு ஈயூரோப்போ கனடாவோ வர்றதுக்கு டிக்கெட்டைக்கூடப் போடுங்கப்பா! வந்து நீங்களெல்லாம் எழுதுறது சரியில்லை என்று மோதிரக்குட்டு வைத்துவிட்டுப்போகவேண்டாமா? மோதிரம் மோதிரமேதான்! மூத்திரம் மூத்திரமேதான்.... கோமியமா இல்லாதபட்சத்தே! "ஈழக்கூத்தா(ட்)டினாலும் தாண்டவக்கோனே, ஆரியகூட்டுவேணுமடா தாண்டவக்கோனே!"

எனக்கு பாமினியிலே அடிக்கத்தெரியாது; முரசு அஞ்சலிலே தொடங்கி, தகுதரம், ஒருங்(கு)குறி என்றுதான் மாறிக்கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக, ஓர் அடிப்படையிலான குறியீடேயிருக்கவேண்டுமென்பதிலே மாற்றுக்கருத்தில்லை. ஆனால், நம் கொல்லைக்குள்ளேயே எத்தனையோ எழுத்துருப்பத்திரிகைகள், சஞ்சிகைகளென ஓடிக்கொண்டிருக்கையிலே, மொத்தமாக, யூனிகோட் அமைப்பார்களிடத்திலே எம் தேவைகளை வலியுறுத்தமுடியாதவர்களான நாமெல்லாம் தொடர்ச்சியாக, பாமினி அடிக்கின்ற புலம்பெயர்தமிழர்களிடம் அட்டைக்கத்தியாலே வெண்ணெய் வெட்டி, இட்லியும் சாம்பாரும் இல்லாமல், பாற்சொதியும் இடியாப்பமும் சாப்பிட்டுக்கொண்டேயிருந்தால் எப்படியென்று வீரம்  காட்டிக்கொண்டிருப்பது வியப்புக்குரியதல்ல. சுஜ்மா மேம்சாப் நிச்சயமாக ஐநாவிலே இண்டி குண்டி தேய்க்க டாலர் அயிம்பத்து அஞ்சு மில்லியனிலே பேல்பூரி படைக்கத்தான்போறாங்க. அதுக்கு இவுங்க வரி வட்டி கிஸ்தி எல்லாம் மாமனா மச்சானா மஞ்சள் அரைச்சுக்கொட்டிக்கொண்டேதான் இருக்கப்போறாங்கோ! அப்பப்ப, ஆசைக்கு பாமினியோட எலிவால் கோபுரகலசப்பின்னலைப் பிடித்துக் கோகுலத்திலே இழுத்துக்கொண்டிருந்தா மட்டும் உம் மாயமெல்லாம் நாமறியோமா, என்ன?

நமக்குப் புரவலரும் வேண்டாம்; புழுதி வீசுகின்றவர்களும் வேண்டாம். இந்த மயிருக்குத்தான் பதித்தால், தமிழ்நாடு தவிர்த்தவிடத்திலேயே பதிப்பதென்றிருப்பதும் இன்னும் & இனியும் கணணி என்றே எழுதிக்கொண்டிருப்பதும் இருக்கப்போவதும். There should always be a Primitive Last man or monkey to Shun, Stand and Stunt.

நிற்க; தனிநாடு கேட்பதென்பது என்ன வல்லிக்கேணி தம்ப்ராம்ஸ் கிளப் மந்த்லி மீட்டிங்கா என்ன? ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லிவிடப்போகிறேன்.

(இம்மடல் அவர்களால் அவாளுக்கு அடைப்பக்காரமடிப்பாக எழுதப்.......பட்டது)


பிகு1:

சில பிரபல தமிழ் எழுத்தாளர்களின் தளத்தினை இவ்விடுகையை இடும்போது பார்த்தபோது:

ஜெயமோகன்:
 http://www.jeyamohan.in/77745


வெண்முகில்நகரம் செம்பதிப்புக்கான முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது கெட்டி அட்டை பதிப்பு. ஓவியங்கள் இல்லை. கிழக்கு பதிப்பகத்தின் தளத்துக்குச் சென்று பதிவுசெய்துகொள்ளலாம்

'இது கெட்டி அட்டை பதிப்பு. ஓவியங்கள் இல்லை' ??

இதிலே குறைந்தது மூன்று குற்றங்கள்; ஓர் அச்சுக்கோப்பாளர் எப்படியாகத் திருத்திப்போடவேண்டும் என்பதை யாரும் தமிழ் தெரிந்தவர்கள் எழுதவேண்டும். "இது கெட்டியட்டைப்பதிப்பு. ஓவியம் இல்லை" என்றிருக்கக்கூடாதோ?

சாருநிவேதிதா
http://charuonline.com/blog/?p=3053

எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர்.  ஒரு புத்தகத் திருவிழாவில் ஒரு பிரபலமான அகராதியை வாங்கிக் கொண்டிருந்தார்.  இது உங்களிடம் இல்லையா என்று கேட்டேன்.  சிரித்து விட்டு இருபதாவது தடவையாக இதை வாங்குகிறேன் என்றார்.  எழுத்தாளர்களின் விபரீத குணாதிசயங்களில் இது ஒன்றோ என எனக்கு சம்சயம்.  அப்படி இல்லை.  அவருக்குக் கடும் கோபம் வரும் போதெல்லாம் அகராதியை எடுத்துக் கிழித்துப் போட்டு விடுவாராம்.

"ஒரு புத்தகத் திருவிழாவில் ஒரு பிரபலமான அகராதியை.."  அதாவது ஒரேயொரு புத்தகத்தை வைத்திருக்கும் புத்தகத்திருவிழாவிலே ... இல்லையில்லை!... புத்தகத் திருவிழாவிலே  (விற்கும்) ஒரு பிரபலமான அகராதியை வாங்கிக்      கொண்டிருந்தார்.  அதாகப்பட்டது, அப்புத்தகத்திருவிழாவே, பிரபல அகராதியைமட்டும் விற்கவைக்கப்பட்டிருந்தது. இதை, 'புத்தகத்திருவிழாவொன்றிலே பிரபலமான அகராதியொன்றை வாங்கிக்கொண்டிருந்தார்.' என்று எழுதியிருக்கக்கூடாதோ? இல்லை; ஒருயொரு புத்தகமென்றதாலே, தனித்துவமான அகராதியென்றே எழுதியிருக்கலாம்; மீதி வரிகளிலே போகவே வேண்டாம். எனக்கு நேரமில்லை.

எஸ். (இ)ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com/?p=4381
(பேரிலேயே ''இ'ராதாய், 'ரா'வாய்த் தொடங்கும் அண்ணன்)

அன்னை வயல்
விகடன் எம்.டி. திரு. பாலசுப்ரமணியம், இயக்குனர் கே.பாலசந்தர் என இரண்டு நிகரற்ற ஆளுமைகளின் மறைவு என்னைத் தாளாத மனத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
இருவருடன் நெருங்கிப்பழகியவன் நான். என் மீதான அவர்களின் அன்பும் அக்கறையும் தீராத நன்றிக் கடனுக்குரியது.

'அன்னை வயல்' என்ன பெயரெழுத்துகள் இரண்டு ஓடிப்பிடித்துவிளையாடும் இடமா, என்ன? 'அன்னைவயல்' என்று எழுதுமேன். 'இரண்டு நிகரற்ற ஆளுமைகளின் மறைவு'? தமிழிலே எண்ணுக்கும் எழுத்துக்கும் போட்டிவைத்து நிகர் உரசிப்பார்த்த முதலாமாள் நம்மாளில்லையென்றபோதுங்கூட, 'நிகரற்ற இரு ஆளுமைகள்' என்றோ 'நிகரற்ற ஆளுமைகள் இருவரின்' என்றோ வழுத்தேய எழுதியிருக்கலாமே எனத் தோன்றுகிறது. 'என் மீதான', 'நன்றிக் கடனுக்குரியது' ஆகிய சொற்களெல்லாம் முதற்பல்லுவிழுந்த பையனுடைய முரசுபோல ஓரோட்டையுடன் தெரியவேண்டுமா என்ன?

பிகு 2:
இவர்கள் பாமினியையும் பார்ப்பானையும் பகிடியென்று முடிச்சுப்போட்டால்,  உவர்கள் அவர்களையும் அவாளையும் பகிடியென்று முடிச்சவிழ்ப்பதாகத்தானே முடியும்? :-)