Friday, February 26, 2016

நுழைப்பு

இலங்கையிலே தமிழர்களிடையே இதுவரை நாள் பறை என்பது தமிழர்களின் அடையாளமாக இல்லாத நிலையிலே, அதுவேதான் தமிழர்களின் அடையாளமாக இறக்குமதி செய்யப்படுவதின் பின்னணி என்ன? இருநூறு ஆண்டுகளின் முன்னாலே பறை வடகிழக்கிலேயிருந்ததா? இதனைக் கொணர்கின்றவர்களும் கொணரப் பின்னாலிருந்து இயக்குவிக்கின்றவர்களினதும் நோக்கமென்ன? இஃது எதேச்சையாக நிகழ்வதாகத் தெரியவில்லை.


இலங்கையிலே யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்தியத்துணைத்தூதராலயம் ஹிந்தி படிப்பிக்கச் செய்வதற்கும் வடகிழக்கிலே வைஷ்ணவக்கோயில்கள் பெரிதாக எழுவதற்கும் அனுமான், ஐயப்பன் நுழைக்கப்பட்டு "இந்து" என்ற மதம் சார்ந்த பதமும் அடையாளமும் சைவத்தமிழர்களிலே திணிக்கப்படுவதற்கும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திலே ஒற்றைப்படைச்சைவ அடையாளம் வற்புறுத்தப்படுவது அதன் பின்னாலே, இந்தியாவின் மேட்டுக்குடி ஆட்சியாளர்களின் தமிழர் என்ற அடையாளத்தினை நீக்கி, இந்து(/கிறீஸ்துவம் (காண்க: கொழும்புரெலிக்ராப்பிலே ஹூலின் நிலைகுலைந்த அரட்டல்)/ இஸ்லாம் என்ற பெருமுரணைக் கொணரக்கூடிய) என்ற பேரிந்தியம் சார்ந்த அடையாளத்தினை ஏற்படுத்தும் நோக்கிருப்பதுபோல, பறை + தமிழ்ப்பௌத்தம் என்பதை நுழைப்பவர்களின் பின்னாலும், தமிழர் என்ற அடையாளத்தினை அழித்து சாதி சார்ந்து அடையாளத்தினை நுழைக்கும் சிங்களபௌத்தஒத்தோடிகளின் பின்புலமிருப்பதாக ஐயப்படுகின்றேன்.
தமிழகத்தின் ஒடுக்கப்பட்டமக்களின் பறையினை முன்வைத்த (அம்பேத்காரினை/தமிழ்ப்பௌத்தத்தினை மையப்படுத்தும்) அடையாளப்போராட்டத்திற்கும் ஈழத்திலே இதனை ஒடுக்கும் பெரும்பான்மைச்சமூகமே பௌத்தத்தின் ஒரு வன்னாயுதமாகப் பயன்படுத்தும்வேளையிலே நுழைப்பற்கும் இடையிலான வேறுபாடின் பின்னான நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும். சார்ந்த பிரதேசம், பெண்ணியம் இவைகூட, இப்படியான ஶ்ரீலங்கா அரசின் அரசியலுக்குக் காவல்விளக்குகளாக ஏந்தப்படுகின்றன.

தமிழ்நாட்டிலே தமிழ்ப்பவுத்தர்களும் பறையும் முன்வைக்கப்படுவதற்கும் இலங்கையின் வடகிழக்கிலே இவை முன்வைக்கப்படுவதற்கும் பெரிய வேறுபாடுண்டு. இலங்கையிலே ஶ்ரீலங்கா அரசே ஒடுக்கும் ஆயுதமாகப் பௌத்தத்தை வைத்திருக்கின்றது. இதனை ஆயுதமாக முன்வைக்கின்ற புலம்பெயர்தமிழ்க்குழுக்கள் ஶ்ரீலங்கா அரசின் செல்லப்பிள்ளைகள். இவற்றின் இளைய பட்டங்கள் சில நாட்டுள்ளே வளர்க்கப்படுகின்றனவோ என்று சந்தேகமுண்டு. தவிர, இந்திய அரசே இந்தியத்துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்திலே வைத்துக்கொண்டு அதன் பொறுப்பதிகாரி ஊடாக, ஹிந்தியும் "இந்து"வும் வளர்க்கின்றன என்று படுகின்றது. நம்பமுடியாத பிரமாண்ட விஷ்ணு ஆலயங்கள் வடகிழக்கிலே கட்டப்பட்டிருக்கின்றன. வைஷ்ணவமே இல்லாத ஒரு நாட்டிலே நுழைக்கப்பட்ட கொடுமை இது. அண்மையிலே ஒரு நண்பர், இக்கோவில்களுக்குப் பூசை செய்ய "அசல் ஐயங்கார்களை இந்தியாவிலேயிருந்து வரவழைக்கவேண்டும்" என்று விஷ்ணு ஆலயங்களின் தேவகர்த்தா சபை(!) தீர்மானித்திருப்பதாக யாரோ சொன்னதாகச் சொன்னார். ஆமைபுகுந்த வீடுதான்! விஷ்ணு தெய்யோக்கள் இலகுவிலே சிங்களபௌத்தர்களைக் கவரலாம் வாழ வழியின்றி உட்கிராமங்களிலே மக்கள் தடுமாறுகையிலே அங்கம் இழந்து கிடக்கையிலே என்ன இழவுக்கு இந்தப்பெரிய ஆடம்பரக்கோவில்கள். அனுமார், ஐயப்பன் என்று வேறு வானரங்கள், குந்தியிருப்பவை வந்து சேர்ந்திருக்கின்றன. சகிப்போடிருந்த சைவம் (சாதியம் உள்ளடக்கியதுதான் என்பதை மறுக்கமுடியாது) என்ற நிலை மாறி ஆர் எஸ் எஸ் கூட ஊடுருவி இந்துவாக உருமாற்றம் வந்திருக்கின்றது. தமிழ்த்திரைப்பட இறக்குமதி படைப்புகளிலும் நாளாந்தப் பேச்சு, செயற்பாடுகளிலும் நுழைந்திருக்கின்றது. தமிழ்ப்பேசும் மக்களைச் சமயத்தின் (மதத்தின்) பேரிலே உடைப்பதற்கான அடுத்த கட்டம் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றது. மொத்தத்திலே இலங்கை அரசும் இராணுவமும் நிலமும் அரசியலும் தமிழர்களுக்குத் தோற்கச் செய்திருக்கின்றன; இந்திய அரசின் தட்டிக்கொடுப்புடனான பின்வீட்டு ஊடுருவல், பண்பாட்டளவிலே முற்றாக இன்னொரு தமிழகமாநிலமாக வடகிழக்கைக் கொண்டுவந்து நிற்பதிலே வெற்றிடைந்துவிடுமோ என்ற அச்சம் மிஞ்சியிருக்கின்றது

தமிழ்நாட்டிலிருக்கும் "பறை"யடிக்கும் குழுக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான அறைதலும் அம்பேத்காரியமும் பௌத்தமும் முற்றிலும் தேவையானதும் அவசியமானதுமாகும். ஆனால், இலங்கையிலே இவர்களை அழைக்கின்றவர்களைப் பின்புறமிருந்து இயக்குகின்றவர்கள் அரசுடன் சார்ந்த "தலித்"தியத்தினை முன்வைத்து தமிழ்த்தேசியப்போராட்டத்தைப் பிளக்க முயலும் புலம்பெயர்ந்த சிலராக இருப்பார்களோ என்ற ஐயமுண்டு. ஒரு புறம் இக்குழுக்கள் பிரதேசவாதம், சாதியம் என்பவற்றினைத் தமிழ்த்தேசியத்த்திலே கஷ்டப்பட்டு இழுத்துக்கட்டி ஶ்ரீலங்கா அரசினைத் தீர்வாக முன்வைக்கின்றன. மறுபுறம் யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்தியத்தூதரகமும் இந்தியாவின் ஹிந்துதுவாகும்பலும் தமிழர் பண்பாடு என்ற பேரிலே இந்துத்துவாவைத் திணித்து, தமிழர்களை இந்துக்கள்.எதிர். கிறிஸ்தவர்கள் என்று பிரிக்க அலைகின்றன. ஏற்கனவே முஸ்லீம்கள் அந்நியப்பட்டுப் பிரிந்துபோயிருக்கும் நிலையிலே இஃது இன்னமும் சிதறடித்துத் தமிழ்ப்பேசும் மக்களின் போராட்டத்தைச் சிதறடிக்கும் நுணுக்கமான முறையே. தமிழ்நாட்டிலிருந்து ஈழத்துக்கு வரும் பறையறையும் தமிழ்த்தேசிய ஆதரவுக்குழுக்கள், அழைப்பவர்களின் பின்னணி எதுவெனத் தெரிந்து கொண்டு வருவது/செல்வது எல்லோருக்கும் நலம் பயக்குமல்லவா?

இவற்றிடையே ஒரு நொடிந்த போராளியின் வறுமை/உடற்குறைபாட்டுப்படத்தைப் போட்டுவிட்டு அனைத்தும் தமிழ்த்தேசியம் என்பதாலே வந்தது என்பதுபோலவும் "காசைச் சுருட்டியவர்களே நீங்கள் எங்கே?" என்பது போலவும் குரலையெழுப்புகின்றவர்களின் பின்நிற்கும் அரசியல் எது? குரலையெழுப்புகின்றவர்கள், இந்நொடிந்த போராளிக்கு இச்செய்திப்பகிர்வுக்கு அப்பாலே செய்ததுதான் என்ன? சத்தமின்றிச் செய்துவிட்டுக் கேள்விகள் எவரையுமே கேட்காதிருப்பவர்கள் இருக்கக்கூடும் என்ற இடைவெளியைக்கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. அண்மையிலே இப்படியாகப் படத்தைப் போட்டுவிட்டுக் கேள்வியை எழுப்பிய புலம்பெயர்ந்தார் ஒருவர், 2009 இலே வன்னியிலே கொத்துக்கொலைகள் நடந்தமுடிந்தபின்னாலே,பறந்து வந்து மகிந்தவுடன் நின்று குழுப்படம் பிடித்துக்கொண்டவர். காசைச்சுருட்டுவது பற்றிக் கேட்கும் இவர்களிலே பலருக்கு இப்படியாக அங்குமிங்கும் பறப்பதற்கும் தரை தட்டுவதற்கும் எங்கிருந்து காசு வருகின்றதென்று கேட்கமுடியாது. வரியும் வாலும் சுட்டுவதுதான் அவர்களுக்குத் தெரிந்த பதில்வழி.

இவர்களின் வழிமுறைகள் இலகுவாகச் சொன்னால் மூன்று:

1. இவர்களின் செயற்பாடுகளிலே, ஶ்ரீலங்கா/இந்திய அரசுகளின் தமிழ்ப்பேசும் மக்கள் சார்ந்த செயற்பாடுகளிலே கேள்வி வைப்பவர்களை "பாசிஸ்டுகள்", "புலிவால்கள்", "பினாமிகள்", "சாதியம் பேணுகின்றவர்கள்", "போர்விரும்பிகள்", "பெண்ணொடுக்குவாதிகள்" என்று மீண்டும் மீண்டும் ஆதாரமின்றி சொல்லி, பகிர்ந்து கேள்விகேட்பவர்களின் ஆளுமைகளைச் சிதைப்பது.

2. தொடர்ச்சியாக அரசியல்/இராணுவ ரீதியிலே ஶ்ரீலங்காவின் "நல்லாட்சி" ஒடுக்குமுறையிலும் பண்பாட்டு ரீதியிலே "இந்தியாவின் அத்தனை அமைப்பு" பின்வழி ஊடுருவல்களிலும் கேள்வி எழுப்புகின்றவர்களை ஈழத்திலே போரினைக் கொணரவும் இருப்புகளைக் கெடுக்கவும் முயல்கின்றவர்களாகவும் பரப்புரை செய்வது. தமிழ்த்தேசியத்தினை ஒற்றைப்படையாகவும் தட்டையாகவும் காட்டுவது. சமூகத்திலே நிலவும் அனைத்துக்கெடுதல்களுக்கும் தமிழ்த்தேசியமும் அதன் நோக்கான சுயநிர்ணயக்குரலெழுப்பலுமே காரணம் என்று மாட்டை மரத்திலே கட்டிமுடிக்கும் அழுக்குச்செயற்பாடு.

3. மதின்மேற்பூனைகளைத் தொடர்ந்து நைச்சியப்பேச்சாலும் திரைபாவிய பயமுறுத்தலாலும் அடையாளப்படுத்தலாலும் உள்ளிழுத்துக்கொண்டு, அவற்றை வைத்தே திரும்ப அவை சூழ்ந்த சமூகத்தினை கலைஇலக்கியத்தாலும் அதன்பின்னான அரசியலாலும் அடிப்பது. இலங்கைத்தமிழ் -புலம்பெயர்ந்த/நிலம்வாழ்கின்ற- எழுத்தாளர்களிடையே ஒப்பீட்டினைச் செய்கின்றவர்கள் இலங்கையிலிருப்பினும் இந்தியாவிலேயிருப்பினும் புலம்பெயர்நாடுகளிலேயிருப்பினும் ஈழநிலத்தைக் காயப்படுத்திக்கொண்டேயிருக்கின்ற சுயதேவை, சுயதேசியங்கள் கொண்டவர்கள்தாம். இவர்களைவிட மோசமானவர்கள் இவர்கள் இருவரையும் வேறிருவருடன் ஒப்பிட்டு, அடித்து அடுத்த இருவர்களின் காவியங்களைப் பேசாதவர்களையெல்லாம் மோசமானவர்களென்று முடிக்கின்றவர்கள்.

இப்படியாகவே ஒரு குழப்பகரமான சூழலைத் தொடர்ந்து வடகிழக்கிலங்கையிலே தக்கவைத்திருப்பவர்களின் செயற்பாடுகள் எதேச்சையானவையோ சுயமானவையோ அல்ல; உள்ளூர் வெளியூர்ப்பெரியண்ணர்சின்னக்காக்களின் கக்காவிளையாட்டுகளின் திட்டமிட்ட நகர்வே.