Thursday, December 15, 2011

பிரித்தானியப்பிரதமரின் பிரிவுபசார வைபவம் பற்றிப் பிரபலதமிழெழுத்தாளரின் பெருங்கருத்து

தமிழகத்திலிருந்து அமெரிக்கத்தலைவர்களைவிமர்சிக்கும் பிரபல எழுத்தாளக்கொம்பரெல்லாம் மிகவும் கவனமாக 2009 இலே ஸ்ரீலங்கா அரசின் பங்காளிகளான இந்திய அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையோ 2011 இலே மலையாளிகளின் செயற்பாட்டையோ பற்றிப் பேசுவதில்லை என்பது பேஸ்புக் "விரும்பும்" வாசகர்களாலே கவனிக்கப்படுவதேயில்லை என்பதைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்றளவிலே இக்குறிப்பு.

தமிழ் எழுத்தினை வாசிக்காமலே விட்டுப்போன வெறுப்புக்கு நிகழ்நிலையை மாற்றத் துரும்பெடுக்கவும் வக்கிலாது வாசித்தும் எழுதியும் என்ன கிழித்தோமென்ற விட்டுப்போன உளநிலை முதன்மையான காரணம்; அடுத்த காரணம், இத்தகு/காத் தமிழகப்பிரபல எழுத்தாளர்களின் கண்ணுக்குப் புள்ளியாகமட்டுமே தொலைவானிலே தெரியக்கூடிய சின்னக்கருடனைக்கூடக் கண்டவுடனே இச்சையின்றித் தூண்டப்படும் கோழிக்குஞ்சுப்பதுங்குதனம்; ஆனால், இவ்வெழுத்தாளர்கள் மறுபக்கத்திலே எதிர்கொள்ளத் தேவையற்ற குழுமங்களின் நெறிகளையும் விழுமியங்களையும் மட்டுமே கவனமாகத் தேர்ந்தெடுத்து “சமூக அக்கறையுடன் விசிறும் இரு வரிகளும் ஓரிரு பதிவுகளும்" பின்னர் தேர்ச்சியாகத் தொகுக்கப்பட்டு வர்த்தகவழிமுறைகள், விளம்பரத்தந்திரங்களோடு விற்பனைக்கு வந்துவிடுகின்றன. இவர்கள், களத்திலே இறங்கி நடந்து குரலெழுப்பும் ஓர் எளியமனிதனைவிட, -அதிகம் வேண்டாம், இவர்கள் நோகாமலே காற்றிலே சாடும் ஒருவேளை உணவைத் துறந்த அரசியல்வாதிகளினைவிடக்கூட- அதிக சமூக அக்கறைகொண்ட தார்மீகப்போராளிகளாக, அத்தகு நோகாமல் நுங்கு தின்னும் அமைப்பின் வசதியிலே தன் சமூக அக்கறையையும் “விருப்புவாக்குகளாலே/ இரட்டைச்சொற்கிளவிகளிலே” வெளியாக்கித் முழுமை காணும் வாசகரிடையே ஏற்றப்பட்டுவிடுகின்றார்கள்.

பெரும்பாலான தமிழக+ சில இலங்கை எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய ||தமிழக||வாசகர்களுக்கும் இடையேயான உறவு எப்போதுமே அடியொட்டி ஆண்டவன்_ஆண்டாள் உளநிலையிலோ நாதன்_நாயகி உளநிலையிலோ நிகழ்வதானது. இப்படியான நிலை தற்போது, இலங்கையடியான தமிழ்வாசகர்களுக்கும் பரம்பிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையிலே, எளியகூற்றொன்றுகூட, இப்படியான எழுத்தாளர்கள் பேஸ்புக்கிலோ எழுத்தாளர்_வாசகக்கலந்துரையாடலிலோ உதிர்க்கப்படும்போது, “விரும்பப்பட்டு” “வேதவாக்காகி” விடுகின்றது; பங்கிடப்படுகின்றது.

இந்தியதிரைப்படநாயகர்கள், கிரிக்கெட்விளையாட்டுவீரர்கள் போன்றோருக்கும் அவர்களின் விசிறிகளுக்கும் இடையே இருக்கும் உறவுநிலைபோன்று தோன்றினாலுங்கூட, இங்கே நெருக்கம் மற்றைய இருவட்டங்களைவிட அதிகமானது. இதற்கு மூன்று காரணங்கள்; ஒன்று, எழுத்தாளர் : அவர்களுடன் தோளுரசக்கூடிய வாசகர்கள் விகிதம் மற்றைய இரு வட்டங்களிலேயிருப்பதைவிட அதிகமானது; இரண்டாவது, இங்கே அணுகக்கூடிய, உரையாடக்கூடிய வாய்ப்புகளும் – கண்காட்சி, கூட்டங்கள், இணையச்சமூக இணைவு- மற்றைய இருவட்டங்களைவிட அதிகமானது; மூன்றாவது, மற்றைய இரு வட்டங்களைப்போலல்லாது, இவ்வட்டத்திலே எழுத்தாளன்|வாசகன் என்ற வெளுப்பு|கறுப்பு இருநிலை தெளிவற்றுத் தேய்ந்து சாம்பற்களம் விரிந்திருக்கின்றது. வாசகன் தானும் இலகுவாக எதுவிதமான “சிறப்புத்தகுதியும் தேர்வுமின்றி” எழுத்தாளநிலையை, தொடர்ந்து எதையாவது “எழுதுவதாலும்” அதற்கு வாசகனைநாடும் எழுத்தாளனிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதாலும் அதன் விளைவாக சக வாசக-எழுத்தாளர்களிடத்தே நிலை உயர்த்தப்படுவதாலும் பெற்றுக்கொள்கிறான்.

இவற்றை அறிந்து விமர்சனமின்றி, அப்படியான எழுத்தாளர்களை “ஆமா சார், கரெக்டா சொன்னீங்க” என்று வழிபடும் வாசக உபாசகர்களிலிருந்து எட்டி நிற்க விரும்புகிறேன். ஏனெனில், இப்படியாக ஐந்தாண்டுகளின் முன்னாலே கண்ட வாசக உபாசகர்கள், இப்படியான எழுத்தாள,பதிப்பாள,விமர்சகத்தொடுமுளைகளைக் கொழுகொம்புகளாக்கி “வளர்ந்து”, இன்று அதேவழியிலே தாமும் “சமூக அக்கறையுடன் விசிறும் இரு வரிகளும் ஓரிரு பதிவுகளும்" தொகுத்துப் ‘பிரபல’ பதிவராகிப் பின் பதிப்பவர்களாகி, அடுத்துவரப்போகும் பிரபலங்களின் “விருப்பு”வாக்குகளாலே நிறைந்துகொண்டிருக்கின்றார்கள். இங்கே உதாரணங்களுக்கு எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்வதிலேதும் தயக்கமோ அச்சமோ இல்லை; ஆனால், அவற்றைத் தொடரும் வாதங்களிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கத் தெம்பில்லை.

வாசிக்கும் புத்தகங்களும் பார்க்கும் திரைப்படங்களும் –பூமியின் வான் வெளியைக் கடந்துகொண்டிருக்கும் வால்வெள்ளியின் நேரத்துடனான இருப்புப்புள்ளிநிலை போல தொடர்ந்து அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்காது- ஒருவனின் உள்ளாடைகள்போல அவனுக்குரியதேயான அந்தரங்கமானவை என்ற நினைப்பு இன்னமும் இருக்கின்றவன் என்றளவிலே இப்படித்தான் என்னாலே தமிழ் எழுத்தினையும் எழுத்தாளர்களையும் வாசகவட்டங்களியும் விருப்புவாக்குகளினையும் பார்க்கமுடிகின்றதோ தெரியவில்லை.

Wednesday, November 23, 2011

Tuesday, November 22, 2011

ஆறு புலி ஆட்டம்

பண்டைத்தமிழர்களின் காதைகளை இலக்கியமூடு பார்ப்போமானால், அவர்கள் எத்துணை விளையாட்டுகளிலே ஈடுபாடுகொண்டிருந்தார்களென்பது தெளிவாகும். காலத்தோடு தமிழர் எவராட்சிக்குட்பட்டிருந்தாலுங்கூட, இந்தவிளையாட்டுகளுக்குக் குறைவிருக்கவில்லையென்றே சொல்லலாம் – விளையாட்டுகள் வேறாகிப் போனாலுங்கூட. ஆடு புலி ஆட்டம் என்பது தமிழர்களால் தமிழகக்கிராமப்புறங்களிலே விளையாடப்படும் பாரம்பரியவிளையாட்டாகச் சொல்லப்படுகின்றது. இதன் ஆரம்பகாலம் எதுவென்று தெரியவில்லை. ஆனால், விளையாடத்தொடங்கினால், சளைக்காமல், சுவைகுன்றாமல் விளையாடிக்கொண்டேபோகலாமென்று தமிழக நண்பரொருவர் கூறினார்.

இதன் வழியிலே ஈடான ஒரு விளையாட்டு ஈழத்தமிழருக்கில்லையே என்ற ஆதங்கம் எனக்கு நெடுங்காலமிருந்து வந்தது; ஆனால், உலகெங்கும் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் புகுநாட்டுநல்லாட்டவிதிகளையெல்லாம் உள்வாங்கித் தம் பண்டைய ஆட்டப்பண்போடு சேர்த்துருவாக்கிய ஆறுபுலியாட்டம் என்ற விளையாட்டு இக்கவலையைப் போக்கிவிட்டது.

‘ஆறு புலி ஆட்டம்’ மிகவும் எளிமையான விளையாட்டு; ஆடுபுலியாட்டம்போல, இருவரேதான் விளையாடவேண்டுமென்பதில்லை; இவ்விளையாட்டின் சிறப்பே ஒரே நேரத்திலே எத்தனை பேர்களும் விளையாடமென்பதாகும். இதனாலேயே இணையவிளையாட்டுகளிலே தமிழர்களாலே அதிகம் விளையாடப்படுவதாகக் காணப்படுகிறது.. விதிகளென்று எதுவுமேயில்லை என்பதோ விதிகளை எந்நேரத்திலும் மாற்றலாமென்பதுவோ இவ்விளையாட்டின் ஈர்ப்புக்கொரு காரணமென்றாலும் மிகையாகாது.

ஆனால், விளையாட்டு என்று விளக்கவேண்டி வந்ததாலே, ஓரிரு விதிகளைப் பார்க்கலாம். ஈழத்தமிழரின் பண்பாட்டிலிருந்து புலி என்ற விலங்கு வன்னெதிரியின் விலங்குத்தன்மையின் அடையாளமாகச் சேர்க்கப்படுகின்றது; மிகுதிப்படிக்கு, மேற்கிலே சொல்லப்படும் ‘Six Degrees of Separation” என்ற நம்பிக்கை – “உலகிலுள்ள எந்த ஓர் ஆளையும் இன்னோர் ஆளுடன் இடையே இவருக்குத் தெரிந்த அவருக்குத் தெரிந்த உவருக்குத் தெரிந்த….. என்ற வகையிலே ஆறாட்களிடையேயான தொடர்பூடாக இணைத்துவிடலாம்”- அடிப்படையிலே இவ்வாட்டம் ஆடப்படுகின்றது. ஆனால், இங்கே ஆட்களுக்குப் பதிலாக, நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்படுகின்றன.

ஆக, நீங்கள் இருவர் விளையாடிக்கொண்டிருக்கின்றீர்களென்று வைத்துக்கொள்ளுங்கள்; “ஸ்பெயினிலே பழமைவாதக்கட்சியினர் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர்”; இதுதான் விளையாட்டின் குறியான முடிவு. இப்போது நீங்களும் உங்கள் போட்டியாளரும் செய்யவேண்டியதெல்லாம், “பட்டாம்பூச்சி செட்டையடிப்பதும் பூகம்பம் உருவாகுவதும்”போன்ற தொடர்விளைவான –அதிகபட்சம் ஆறு தொடர்புகளூடாக- இதற்கு விடுதலைப்புலிகளின் அராஜகம் காரணமாகியிருக்கின்றதென்று காட்டுவதே; நீங்கள் ஐந்து தொடர்புகளூடாகக் காட்டுகின்றபோது, உங்கள் போட்டியாளர் மூன்று தொடர்புகளூடாக விடுதலைப்புலிகளின் அராஜகமே ஸ்பெயினிலே பழமைவாதக்கட்சியினர் ஆட்சிக்கு வரக் காரணமென்று காட்டிவிட்டால் (“விடுதலைப்புலிகள் வலதுசாரிகள்-->விடுதலைப்புலிகளை அழித்த ஸ்ரீலங்காவினை ஸ்பெயினின் இடதுசாரி ஆட்சியாளர் ஐநா மனிதவுரிமைமன்றிலே ஆதரித்தார்-->அதனாலே அவர் தோன்றார்”), உங்கள் போட்டியாளர் வென்றவராகின்றார்; இடையிலே புகும் மூன்றாவது ஆட்டக்காரர், சுருக்கமாக, (“விடுதலைப்புலியினர் வலதுசாரியினர்=ஸ்பெயின் பழமைவாதக்கட்சியினர் வலதுசாரியினர்-->ஸ்பெயின் பழமைவாதக்கட்சியினர் வென்றனர்”) என்று நேரடித்தொடர்பாகவே காட்டிவிட்டால், அவரே ஆறுபுலியாட்ட வெற்றியாளர்.

இதைவிளையாடப் பெரும் பட்டறிவெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை; நீங்கள் தமிழிலே வந்த ஆடுபுலி ஆட்டம் திரைப்படத்தினையும் ஆங்கிலத்திலே வந்த “Six degrees of separation” திரைப்படத்தினையும் பார்த்திருந்தாலே போதுமானது. Six degrees of separation விளையாட்டினை அறிந்திருந்தீர்களெனில், அஃது உங்களை வெற்றியின் திக்கிலே மிகவும் வேகமாகக் குறுக்குவழியிலே கொண்டு செல்லும் தந்திரங்களைக் கற்றுத்தரும். ஆறு புலி ஆட்டத்தினைத் தேர்ந்தவராக விளையாடவெல்லாம் நீங்கள் பெரிய மாற்றுக்கருத்து இலக்கியவாதியாகவோ தத்துவவாதியாகவோவெல்லாம் மானுடநேயராகவோவெல்லாம் இருக்கவேண்டிய அவசியமில்லை; உங்களுக்கு வேண்டியதெல்லாம், விளையாடும் எதிராளி உங்களைக் கொல்ல வரும் புலி என்ற கற்பிதமும் உங்கள் ஐந்தாம் வகுப்புத்தமிழ்க்கட்டுரையிலே “புற்கள்” என்பது பற்றி எழுதியபோது, ‘புலிகள்’ என்பதைப் பற்றி எழுதியபின்னால், கடைசிவரியாக, “இப்படியான புலிகள் பசித்தபோது புற்களைப் புசித்தும் பசியாறவில்லை” என்று எழுதிய வல்லமையுமே.

இப்போது, இவ்விளையாட்டு, ஈழத்தமிழர், புலம்பெயர்தமிழர் இவர்களிலிருந்து தமிழகத்தமிழர், இந்தியர், ஸ்ரீலங்கர் எல்லோருக்குமே பிடித்த விளையாட்டாகப் பரவிக்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கத்து; பரபரப்பான பத்திரிகைகள், தாளிகைகள், தொலைக்காட்சியூடகங்களெல்லாம் விற்பனையை அதிகரிப்பதற்காக இவ்விளையாட்டினை உள்வாங்கிக்கொண்டுவருவதும் கண்கூடு; உதாரணத்துக்கு, இங்கே தினமலர் விளையாடியிருப்பதைக் காணலாம்; “புலிகள்-சீக்கிய பயங்கரவாதிகள் மூலம் சதிதிட்டம் லஷ்கர் இ ‌தொய்பா ஒப்பந்தம்-போலீஸ் உஷார்

சுவராசியமான விளையாட்டாகத் தோன்றவில்லையா? நீங்களும் பொழுதுபோகாவிட்டாலென்ன, பொழுதுபோதாவிட்டாற்கூட, இணையத்திலோ, புத்தகவெளியீடுவிமர்சக்கூட்டங்களிலோ இவ்விளையாட்டினை உங்கள் நண்பர்களுடனோ எதிரிகளுடனோ விளையாடலாமே! இதன்மூலம், நீங்கள் இலக்கியவாதியாகவோ, மானுடத்தின் நேசனாகவோகூட ஆக வாய்ப்பிருக்கின்றதென்பது கூடுதலான வரவு.

Sunday, November 13, 2011

திருடித் தீந்தை சேர்த்தவை

உடன்பிறப்பிடம் திருடித் தீந்தை சேர்த்த இலங்கைக்காட்சிகள் ;-)

Thursday, November 10, 2011

இழத்தல்

Warning: This is purely a self-serving narcissist post
நிலைத்த அணுக்களிடையேயான பிணைப்பிலும்விட, மூலக்கூறுகளிடையேயான நிலையற்ற ஐதரசன் பிணைப்பே நீருக்கான தனித்தன்மையைத் தருகின்றது; வாழ்க்கையிலும் அடிப்படையாக வாழச் சில கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் கொள்கின்ற போதிலும் சின்னத்தனமான சந்தோஷங்களே அன்றன்றைக்கு நாளை நகர்த்த உதவுகின்றது; இனிதானதாக உணந்துகொண்ட காலகட்டத்தின் எச்சங்களைப் பிடித்துக்கொண்டிருந்தல் சின்னச்சந்தோஷங்களின் ஒரு வகை; இன்னொரு வகை அடுத்தவருக்குக் குரூரமானது; அறிந்த ஒருவருக்கு இடர்வரும்போது, நாம் வருந்துகிறோம்; அதேநேரத்திலே அவ்விடர் நமக்கில்லையே என்ற ஒப்பீட்டளவின் திருப்தி தருவதும் ஒரு சின்னச்சந்தோஷம்.

கடந்த வாரத்திலே இப்படியான சின்னச்சந்தோஷங்கள் இரண்டினை இழக்க - ஒன்றைத் தற்காலிகமாக, அடுத்ததை ஓரளவுக்கு நிரந்திரமாக- வேண்டியதாயிற்று. வாசிக்கின்றவர்கள் சிரிக்கக்கூடும்; ஆனால், என்னைப்போல, எழுபதுகளின் இறுதியிலே பத்தாம் வகுப்பினைமுடித்துக்கொண்டு, எண்பதுகளின் ஆரம்பத்திலே பல்கலைக்கழகங்களுக்குப் போனவர்களுக்குத்தான் தெரியும் தலைமயிரின் அருமை. (இதை பதினொராண்டுகட்குமுன்னாலே சிகைசிரைப்பிலே குறித்திருந்தேன்). ஐதீக சாம்ஸன்போல, எம் பலமே கொத்துமுடியினிலே தக்கித்திருப்பதாக... தொடர்ந்து கடந்த இருபத்தெட்டாண்டுகளாக என் வாழ்க்கை பல்கலைக்கழகங்களிலேயே தங்கிவிட்டது; நண்பர்கள் சொல்வதுபோல, நான் இன்னும் முதிர்ச்சியடையாமல், காலத்திலே எண்ணங்களும் சிந்தனையும் உறைந்திருப்பவனாகவே இருக்கின்றேனோ தெரியவில்லை. ஆனால், "குருவி தலையிலே வைக்கப்பட்ட பனங்காய்முடியை"க் கொண்டிருப்பது, அற்ப மகிழ்ச்சியாகவே தொடர்கின்றது. அற்ப மகிழ்ச்சியை நினைவூட்டும்விதமாக, பல்கலைக்கழகத்துறைத்தலைவர், மாணவர்களிடம் பகிடிக்கு, "டொக்டர் கந்தையாவுக்குத் தலைமயிர்வெட்டும் நிதி திரட்டுகிறேன்; ஒரு டொலர் போடுங்கள்" என்று கேட்பதிலிருந்து, பக்கத்துவீட்டு தென்னாபிரிக்க நண்பர், 'எங்கள் புல்லுவெட்டி பயன்படுத்தாமலேதான் வீட்டுக்குள்ளே கிடக்கின்றது; கொண்டு வந்து உங்களிடம் தரவோ?" என்று மனைவியிடம் கேட்பது ஊடாக, வெட்டியபின்னால், நடைபாதையிலே கடக்கும் -கண்ட ஆனால், என்னிடம் கற்காத- மாணவர்கள், சக பேராசிரியர்கள், "ஹா! கடைசியிலே முடி சிரைத்திருக்கிறீர்கள்; கடவுளுக்குத் தோத்திரம் " என்று நக்கலடிக்கும் வரைக்கும் நிகழ்வுகள் தொடரும். போனவாரம், மூன்று மாதங்களுக்குப் பின்னாலே குறைக்கவேண்டியதாயிற்ரு; இன்னும் இரண்டு மாதங்களுக்கு நெடுங்கால நண்பனை(!) இழந்த பிரிவுத்துயர் வாட்டப்போகிறது. மீண்டு(ம்) தொடங்கு(ம்) மிடுக்கு!!

அடுத்தது, என் கண்பார்வையிலே எனக்கு என்றைக்குமே ஒரு நம்பிக்கை. போனகிழமைவரை அதிலெதும் பங்கமில்லை. கண்ணாடி என்பது, அழகுக்காக அணியும் ஒரு சங்கதி என்பதாகமட்டுமே எண்ணம்; அவ்வப்போது, படங்களுக்கு பக்கத்திலே நிற்பவன்/ள் கண்ணாடியை வாங்கிப் போட்டுக்கொண்டு நிற்பதுமட்டுமே அதிகம். மிகுதிப்படி, சின்னத்தலையிடி, காய்ச்சலுக்கு -தானே மாறட்டுமென்று- மருந்துக்குளிகைகளை இயன்றளவு தவிர்ப்பதுபோல, வலுச்சேர்க்காத சாதாரணக்குளிர்க்கண்ணாடிகளையும் இயன்றளவு தவிர்த்து கொள்வேன்; நடுவெயிற்பாலைவனப்புழுதியிலே, வண்டியோடுகையிலே தெறிக்கும் வெயிலிலே தவிர மிகுதிப்படி, அவசியமற்றதென்பதென் வாதம். சில கிழமைகட்குமுன்னால், மகனுக்குக் கண்பார்வைக்காகக் கண்ணாடி எடுத்தாகவேண்டிய அவசியம் வந்தது; மனைவி ஏற்கனவே ஆண்டுக்கணக்கிலே கண்ணாடி அணிபவள்; மகனைப் பார்த்து, உங்கள் அம்மா பரம்பரையின் மரபணு உன்னைக் கெடுத்தது என்று ஒரு கிழமை நக்கலடித்துக்கொண்டிருந்தேன். "கண்ணுக்கான காப்புறுதிதான் இருக்கிறதே, இந்த தொலைக்காட்சி மருந்து விளம்பரங்களின்பின்னாலே, பயன்படுத்துவதாலே வரும் வினைகள் இவையென்றோ, படவிழியவுறைகளின் வெளியே எடுத்த ஆண்டு, ஓடும் நிமிடங்கள் போன்ற விபரங்கள் தெளிவின்றிக்கிடப்பதாலே, ஆண்டு முடியமுன்னால், காட்டித் தொலைக்கலாமே!" என்று வீட்டிலே வாக்கெடுப்பிலே தீர்வானபடியாலே காட்டித்தொலைத்தேன். நேற்றையிலிருந்து, இப்படியாக, வயிற்றுப்போக்கு வரலாம்; 1937 ஆம் ஆண்டு என்றெழுதப்படும் குட்டியெழுத்துகளைக் கண்டுபிடிக்கமட்டும் கண்மேலே கவசம் மாட்டவேண்டியதாகிறது. இப்போது, கண்ணாடியைத் தவிர்ப்பதற்காகவே, 'வயிற்றுப்போக்கு வருமா', '1937 ஆ? 1987 ஆ?' என்ற மிக அவசியமான புள்ளிவிபரங்களைத் தவிர்ப்பதாகவிருக்கின்றேன். ஆனாலும், அடுத்தவர் கண்ணோடு ஒப்பிட்டு, என் கண் இன்னும் 20/20 என இயங்குகின்றதென்று பெற்ற குரூரசந்தோஷக்குமிழ் வெடித்துச்சிதறிப்போனதுபோனதுதான். சென்றதினி மீளாது!

காலம் ஓடும் பின்னங்காலை இடறக் கௌவிப் பிடிக்கத் தொடர்கின்றது.....

Tuesday, November 08, 2011

உதிர்கால இருக்கை

உதிர்கால இருக்கை வில்பர்ஃபோஸ், ஒஹாயோ

Sunday, November 06, 2011

உதிரும் இலை - 2011


உதிரும் இலை -2011 வில்பர்ஃபோர்ஸ், ஒஹாயோ

Saturday, November 05, 2011

இஃது இன்னொருவித முதலைக்கண்ணீரன்றி வேறில்லை!

சிபிஐ(எம்) ஆட்களெல்லாம் எப்போதோ நிகழ்ந்த யாழ் நூலக எரிப்பினைப் பற்றி இப்போது கவலைப்பட்டு எழுதுவதுபோல பொய்மைத்தன்மையின் உச்சத்தை சில நிகழ்வுகள்மட்டுமே பிடிக்கமுடியும்.

ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் செய்கைகளுக்கு, வன்கொடுமைக்கு, "மார்க்ஸிய' ஜேவிபி இயக்கத்தின் சகோதரத்துவத்துக்கு நியாயம் கட்டி நிருத்தியம் பழகியவர்கள் சிபிஎம் ஆட்கள்; இன்னமும் இக்கட்சியின் கதைஞர்கள், கவிஞர்கள், தாளிகைக்காரர்கள், இன்னோரன்ன ஓர ஓரங்க கலைகவின்நாட்டியதாரகைகள் வால்வெள்ளிகள் சுயதம்பட்டச்சீமாட்டிகள் சீமான்கள் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளின் வலதுசாரித்தோலை உப்பிட உரிப்பதற்கே இலங்கைநிகழ்வுகளையும் நிகழ்ந்தவையையும் தேடிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையிலே வேறெவரேனும் எதுகாரணங்கொண்டும் மலையையும் மடுவையும் சமானப்படுத்துவதுபோல, யாழ் நூல்நிலைய எரிப்பினையும் அண்ணாநூற்றாண்டுநூலகத்தேவை மாற்றுதலையும் கருத்து மேவி ஒரு தட்டிலேற்றி விளையாடப்போவதையுங்கூட, பார்க்காததுபோலப் பார்த்துக்கொண்டிருக்க எனக்கேதும் பெருவருத்தமில்லை; ஆனால், இக்கள்ளமௌன சிபிஎம் ஆசாமிகள், அசுரர்கள், அணங்குகள், ஆடகசௌந்தரிகள் உதிர்க்கும் ஒவ்வொரு முதலைக்கண்ணீர்த்துளியும் மெழுகுருக்கிச் சுடச்சொட்டும் தீக்கங்காகவே தெரிகின்றது.

என்னைக் கேட்டால், வளைந்து நெளிந்து நெகிழ்ந்தோடும் அரசியலுக்கு அப்பாலும், காங்கிரஸ், பாரதியஜனதா, திமுக, அதிமுக, தேதாதூதீதைமுக எதையும் அதனதன் கூத்துகளோடுங்கூட இலங்கைத்தமிழர் அணுவதிலே சிக்கலில்லை; ஆனால், இப்பொல்லாத சிபிஎம் பொய்யர்களிடமிருந்து எட்டிநிற்றல்வேண்டும்.

"அமைப்பின் கோப்பினைச் சிதைக்கோம் என்ற பெயரிலே தலைமையைக் கேள்வி கேட்காத இயக்கம்; மேலிடத்தின் உத்தரவை அப்படியே செயற்படுத்தும் அடிமட்டம்; மாறும் அரசியல்சூழலையும் கருத்துகளையும் உள்ளெடுத்து விவாதித்துத் தத்துவார்ந்த அளவிலே வளராமல், முப்பதாண்டுகளுக்கு முன்னாலான 'அவர்கள்.எதிர்.நாங்கள்' பிடிமந்திரத்தையே உருப்போட்டுப்போட்டு உருவேற்றும் தன்மை. சுயசிந்தனையை மறுத்து மண்ணுக்குள்ளே தலையை நுழைக்கும் தீக்கோழித்தன்மை; இயக்கநோக்கின் பேரிலே வெகுவாக அறிந்த தவறுகளையுங்கூட நியாயப்படுத்தும் எதிர்க்கருத்துகளை எம்மட்டத்திலும் மறுத்துமூடும் அடாவடித்தனம்."

- விடுதலைப்புலிகளிலே இத்துணைக்குற்றங்களையும் முன்வைக்கின்ற முற்போக்குத்தோழர்கள், மாற்றுக்கருத்துமகான்கள், இவற்றையே சிபிஎம்மிலே வைக்காமல், அதன் கலை இலக்கிய கட்சி கருத்துகளை நியாயப்படுத்த நாவற்கிளை நாட்டுவது நகைச்சுவை.

ஸ்ரீலங்காவின் சமசமாஜக்கட்சியிலும்விட ஸ்ரீலங்கா அரசின் சிறந்த எடுபிடிகளானவர்கள் இவர்கள்;கட்சிக்கோப்பென்ற போர்வைக்குள்ளே மேலிடத்தின் அத்துணை ஸ்ரீலங்கா அரசின் கொடுமைகளின் வெள்ளையடிப்புக்கும் தீந்தை ஏந்தி நிற்கும் அடியாட்கள் சிபிஎம் தொண்டர்த்தோழர்கள்; இவர்களின் ஒற்றைவரிக்கண்ணீர்த்துளிக்குக் காத்திருப்பதிலும்விட, ஸ்ரீலங்கா அரசின் காலடியிலே விழுவது எனக்கு உளச்சுத்தியுடனான தார்மீகநியாயமாகத் தோன்றுகின்றது.

Thursday, October 20, 2011

செய்தி: கடாபி இறந்திருக்கலாம்

எழுபதுகளின் மத்தியிலே இலங்கையிலே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசின்போது நிகழ்ந்த அணிசேராநாடுகளின்(?) உச்சிமகாநாட்டுக்கு கடாபி வந்தபோதே முதலிலே அவர் பற்றிய எனது பதிதல்; அந்நேரத்திலே பிடல் காஸ்ரோவினைப்போல இவரும் வெகுகாலம் வல்லரசுகளுக்கு அடிபணியாத போராளியாக என்னுள்ளே ஒரு படம். ஆனால், கடைசிக்காலத்திலே ஸ்ரீலங்கா அரசின் எதேச்சதிகார அரசின் செயற்பாடுகளுக்கு விமர்சனமின்றி, "பயங்கரவாதத்தினை ஒழிப்பதாக/ஒழித்ததாக" அறிக்கைவிட்டபோது, காஸ்ட்ரோ, சவாஷ் போன்றோருடன் இவர் குறித்த மரியாதையும் மண்ணாகிப்போனது. ஆனாலும், இலிபியாவின் உள்நாட்டுப்போரிலே மேற்குநாடுகள்மட்டும் நேர்மையானவையாக நடந்துகொள்ளவில்லை.இலிபியாவுக்கும் பஹ்ரேயினுக்கும் அரசுகளைப் பார்த்தால் என்னளவிலே பெருமளவிலே வேறுபாடிருந்ததாகத் தெரியவில்லை; ஆனால், மேற்குநாடுகள், பஹ்ரேன் அரசின் வன்கைகளைக் கண்டுகொள்ளாமல், இலிபியாவிலேமட்டும் "மக்கள்குரல்" எழட்டுமென்பது, தமக்கான இரட்டை அரசியல்நிலைப்பாடுமட்டுமே

Monday, October 17, 2011

தூரிகை அழுகின்றபோது

2011

ஒன்று

ஒன்றைச் சொன்னேன்
ஒன்றுமில்லை என்றார்
ஒன்றும் சொல்லாதிருந்தேன்
ஒன்று வேறாய்ச் சொல்வார்

-/.
20:36 கிகநே

கழிந்தகோடை

பீவர்க்ரீக், ஒஹாயோ

Sunday, October 16, 2011

பழைய வலைப்பக்கங்கள்

1996 இலிருந்து வைத்திருந்த வலைப்பக்கங்கள் பெருமளவிலே சேமிக்கப்படாது கரைந்துபோய்விட்டன. சேமிப்பதற்கென்று உள்ளடங்கு விடயப்பெறுதியாக ஏதுமில்லையென்றாலுங்கூட, கடந்த காலத்தின் குறுக்குவெட்டுகளாதலாலே - ஒரு பழைய நண்பனோ நடிகனோ இறக்கும்போது, அவருடனான எம் மீளாக்காலத்தை நினைவூட்டுவதுபோல - அக்காலப்பெறுதிமட்டும் பதிந்துவிடுகின்றது. அவ்வகையிலே என் வலைப்பக்கங்கள் சிலவற்றின் குறுக்குவெட்டுகளை webarchive களஞ்சியத்திலே பெறக்கூடியதாயிருந்தது. 1996/1997/1998 இலே நெட்ஸ்காப்பிலே மயிலை/முரசு அஞ்சல் எழுத்துருக்களிலே geocities, angelfire, tripod இலவசத்தளங்களிலே செய்யப்புகுந்தவை. வலைப்பதிவு மீயுரை மொழியினை நான் படித்ததில்லை. அதனாலே மிகவும் அசிங்கமான பக்கங்களாகவே வடிவமைக்கமுடிந்தது. இதிலே ஒரு பக்கத்திற்கு அமெரிக்காவின் இடைநிலைப்பாடசாலைமாணவர்களிடமிருந்து வந்திருந்த அஞ்சல், "இன்று இப்பக்கத்தினை எப்படி வலைப்பக்கத்தை வடிவமைக்கக்கூடாதெனக் கற்பிக்க எங்கள் ஆசிரியை உதாரணத்துக்குப் பயன்படுத்தினார். அதற்கு நன்றி" என்றிருந்தது.

Rizi's Personal Tamil Galaxy
Eelam Related Web Photo Album
TRINCOMALEE, THE NATURAL HARBOUR TOWN

An Ezhaththu Wandering Acrobat's Daily Scribbles
tmizfcfciBkAt ugfkAq nlfvrEvbfki[fbT (சிறுகதை??ப்பக்கம்)
WATERWORLD

"Poem of the day" வலைப்பக்கம் 1996-1997 வரை மயிலை எழுத்துருவிலே angelfire இலே போட்டிருந்தது, அகப்படவில்லை. அதன் முகவரியும் ஞாபகமில்லை. தமிழிலே தட்டச்சிடத்தொடங்கியதற்கு, கல்யாணசுந்தரத்துக்கும் முத்து நெடுமாறனுக்கும் பாலாபிள்ளைக்கும் என்றும் கடன்பட்டுள்ளேன்; 1995-1998 ஆண்டுக்காலங்களை வெறுமையின்றிக் கடத்த இவர்கள் தந்த வசதிகள்தான் -எழுதவும் பகிரவும் தமிழிலே ஈடுபாடுள்ள நண்பர்களை அகிலம் பரவப் பெறவும்- வழியமைத்தன.

ஆனால், கடந்த இப்பக்கங்களையோ இதற்கு முன்னாலான 95 இலான soc.cuture.tamil பயனர்குழுப்பங்கங்களையோ பின்னான தமிழ்நெற், மையமன்று, யாஹூ குழுமங்கள் இடுகைகளையோ பார்க்கும்போது, பன்றி குட்டிகள் போட்டதுதான் தெரிகின்றது. எத்தனை மணிநேரத்துளிகள்! எத்தனை உள்ளீடுகள்! ஆனால், கருத்தைக் குவியப்படுத்திப் போட்டிருக்கலாமென்ற உணர்வுதான் மிஞ்சுகின்றது. ஆனாலும், அக்கடந்தகாலத்திலே அவற்றுக்கான பெறுதி கணிசமானது; அழுத்தங்கள், குற்றவுணர்வுகள் இவற்றினைத் தவிர்க்க வடிகால்களாக இருந்திருக்கின்றன, நல்ல நண்பர்களைப் பெற்றுத்தந்திருக்கின்றன என்றளவிலே அவற்றுக்கான பெறுதி தங்குகின்றது. திரும்பிப்பார்க்கையிலே ஒரு குறித்த காலகட்டத்துடன் ஒவ்வொருவரும் தம்மைப் பொருத்திப் பார்க்க, மற்றோருக்கு எடுத்துச் சொல்ல, பொதுவிலே பகிர்ந்துகொண்ட புலனாலுணரக்கூடிய கணியங்கள் தேவைப்படுகின்றன - ஒரு காலகட்டத்திலே வந்த திரைப்படப்பாடலைப்போல, நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களைப்போல, எழுதியனுப்பிய அஞ்சல்களைப்போல, உடன்பிறந்தாரோடு பகிர்ந்துகொண்ட வீட்டின் அறைகளிலே இருக்கும் காரைபெயர்ந்த சிறுசுவர்வெடிப்பினைப்போல. அப்புலனறியும் சிறிய மரக்கீறல்களும் இடப்பெறுதியையும் காலக்குறியினையும் பெற்றுக்கொள்கின்றன. வாழ்க்கையின் அமைப்பிலே இறுதியிலே மிஞ்சிப்போவது இப்படியான குறுக்குவெட்டுப்படிமங்களே.

Saturday, October 15, 2011

பூமியைத் தோண்டுதல் பூண்டு நாட்டலுக்காய்...

வால்களும் குதிகளும்

குரங்கின் வாலும் நாயின் வாலும்
குழைத்துப் புனைந்ததென் கூர்ப்பு வால்.
எரிகின்ற முனையும் குழைகின்ற திசையும்
எப்போது முளைக்கும் எனக்கே தெரியாது.

விலங்கும் பூப்பூக்கும் தாவரமும் ஊனுண்ணும்
விந்தைப்பூமியிலே உலவுன்றதென் குதிகள்.
கண்கள் அறுந்த காலக்குமிழிற் கிளர்ந்து
குதித்துக் குதித்துக் குதிர்ந்தெல்லாம் பெருங்குதிகள்.

அடுத்த விலங்கின் ஆதர்சம் காண் கண் துடித்து விளையாது
அந்தக விலங்கின் வால் விரிவின் செவ்வெரிவும் தண்குழைவும்.

ஊன்றிக் குதி நடக்கின்ற நிலம் குறித்து வால் முளைக்கின்ற
குருட்டுவிலங்கொன்றின் நீள்மூக்கிற் துளிர்ப்பது புறப்பார்வை.

விழியறு விந்தைப்பூமிக்குள் வில்லெடுப்பார் வேண்டாதார்.

'05 Feb., 14 03:23 EST
~~~~~

படுக்கவிடுவாயா பாம்பை?

நாட்டுப்பட்டறைக்கு அப்பாலே படர்வது என் தாவரம்;
வைத்திருக்கும் கையுளியால் உனக்குப் பட்டதை, கொத்து, கொந்து;
உன் உளி; உன் வழி; உன் இஷ்டம்; ஆனால்,
விட்டுவிடு படாத அடர்வனத்தை பரந்து படர்ந்திருக்க.
பட்டறை, சிந்தைக்குட்படு செத்த கட்டைச் சிலும்பாச் சிலைக்குதவும்;
எதேச்சை ஒரு சுயேட்சை இலை வெடிக்க என்றேனும் இயலுமா?

உளி செதுக்கிக் காய் காயமரப்பட்டறைக்கப்பாலே
கால் தன்னிச்சைப்படி ஏறிப் படர்வதென் பெருவனம்.

ஓய வனம் படுக்கும் பாம்புவால் மிதிப்பாயா,
இல்லை, பையத் திரும்பி,
பாதம் வந்த திசை நோக்கி மெல்ல நடப்பாயா,
நீ?

'05 Feb., 14 02:54 EST
~~~~~

ஒரு நாய்க்கவிதை

நாயைப் பற்றிய கவிதைக்குட்
பாம்புகளும் பைய வரலாம்.

வால் தோன்று வரிகளுக்கு முன்
ஊரலாம் வழுக்கிக்கொண்டு வயிறு.

ஆதிக்கவிநாய் மெல்லத் திரியும்
பாம்பெனத் தோல் பளபளத்து.

கவிக்கணக்கிற்கு, வெறு
வாலால் வனைந்தது இவ்வையகம்.

'05 பெப்., 25 வெள். 07:39 கிநிநே.
~~~~~

முறுக்காமற் கிட

போகின்ற பாதையிலே புடுங்கிப்போடுகிறாய் புதர்முள்;
ஒரு சொல் பேசாமற் போகிறேன்; சுற்றி முன் போய், விடாது
போகக்கூடிய வெளிப்புல்லிற்கூட முள்ளைத் தழைக்கிறாய்.

உனக்குத் தெரிந்ததெல்லாம் வகிடெடுத்து வகுத்த தெருவில்,
வரைந்த வயல்வரம்பில், திசை கிடத்திக் கிழித்த நீர் வாய்க்காலில்
தேரும் ஏரும் படகும் ஆள் காட்ட வழி நகர்த்துதல்.

வெளியில் அடுத்தான் விதை கிள்ளி அள்ளிப்போட்டுக்கொண்டு
பெருமரம் முளைப்பார் பாவனையில் முயங்கக் கிடக்கிறது முழுத்தேசமும்.
முழுத்தேசமென்றால், உன் பூச்சித்தேகமும் அடங்கும் பார் அதனுள்ளே.

"எனக்கென்ன? கிடக்கட்டும் விடு" என்றிருக்க நான், சொல்,
தன்பாட்டில் விரல் முடக்கிக் கிடப்பான் குறியை முறுக்குவானேன் நீ?

'05 Feb., 14 04:22 EST
~~~~~

ஒதுக்கம்

நிழல் தேய்ந்த நேரத்திலே
கல்லெறிவார் கூட்டத்திலிருந்து காணாமற்போனேன்.
ஒடித்த ஒரு விலாவென்பை உள்ளொளித்துக்கொண்டு
இல்லாச் சடத்தை இதுவென்றே
உருக்கொடுக்க அலைந்தேன் ஊரூராய்.
மீன்பிடிகுளங்களிலே தேங்கிய வலைகாரர் முகங்களை
மெய் சோர்ந்த பொழுதுகளில் கடந்து நடந்தேன்.
பறித்ததைப் பறிவிட்டுக் கால்கீழ்க்குட்டை சேந்திப் பின் பறிக்கும்
காலச்சேதத்தைக் கண்டும் காணேனாய்ப்
பாதைக்கல் விலக்கிப் போந்தேன் மேலும் கால்.
பார்த்த ஆறெல்லாம் பகுக்க இத்தனையாய் வகைமச்சம்;
அள்ளும் வலையெல்லாம் சொல்லடங்கிப்போன எண்கள்.
அகத்தில் மழைக்காட்சி துளி முளைக்க பயிர் முளைக்க
அடுத்தவர் கவியோரத்து வேலிக்கப்பால் மட்டும்
காலாற நடக்கின்றேன் காற்றுவெளியில் நான்.
காற்சட்டைப் பைகளுள்ளே என்புக் கணக்குப் போடும் கைகள்.
நடத்தலுமாகும் நாளைக்கான தவம்;
தேவத்துவம்.

26, ஜனவரி 2003 - ஞாயிறு 00:39 மநிநே.

ஓடிக்கொண்டே படம் எடுக்கலாம்

நி(ல்)லாத்தெரு
பீவர்க்ரீக், ஒஹாயோ

கடவுள்

அவர்கள் கடவுளைத் தேடித்திரிந்தபோது, அவர் தன்னவரின் 'சிச்ருஷைக்கும் சில்மிசத்துக்கும்' பேரஞ்சி ஓர் இடிந்த கருங்கல் மண்டப இருட்டுக்குளிருக்குள்ளே தனியே விறைத்திருந்தார். கடைசியாக, அவர் ஓடத்தொடங்க முதற்கணம் தன்னைச் சூழ அவர்கள் இருந்ததைக் கண்டிருந்தார். தன் இருத்தலுக்கு அவர்களை முழுக்க முழுக்க நம்பியிருந்ததற்குக்கூட தன்னிற்றானே கழிவிரக்கம் கொள்ளவும்கூட முடியாத அந்நேரத்தில், அவரை ஆழ்பயம் பிடித்தாட்டியது.

கடவுளுக்கு, தனது குழந்தைப்பருவம் நினைவுக்கு வந்தது. நினைவாற் தொட்டாலே பொடிப்பொடியாகி உதிர்ந்து காற்றாகிப் போகக்கூடும் மிகவும் புராதனமான காலம். எல்லோரும் அவரை அவரின் அழகுக்காக மட்டும் நேசித்த ஆரம்ப அவத்தைப்பொழுது அது; சொந்தமேயற்ற கொழுக்குமொழுக்குக் குண்டுக்குழந்தையை தமது சொந்தம் என்று சொல்லித் தூக்கிக் கொண்டாட, உலகமே வரிசையிலே நின்ற வேளை. கடவுளுக்கும்கூட அப்போது, தன் வசதியை நிறைவேற்றக்கூடிய சொந்தங்களின் மணிக்கட்டுகளிலே தன் குழந்தைக்குண்டிச்சதையினை அழுத்திக் குந்தி, கன்னத்தோடு கன்னம் வைத்து அழுத்தித் தேய்த்து, முத்தத்துக்கொரு மோதகமோ முறுக்கோ பெறுவதிலே அதீத ஆனந்தம்; ஆதிமுதலே, வாய்க்கப்பெற்றதெல்லாம் கழிக்காமலே முழுக்கப் புசிக்கின்றவர்தான் ஆண்டவன்! அனர்த்தனமே இல்லாத அந்தக்காலம்.... பெருமூச்செறிந்துகொண்டவருக்கு தனக்கு வாழ்க்கை சலிப்படையத்தொடங்கியது எப்போது என்று முன்னைய ஞாபகத்திலே வராகக்கொம்பு கொண்டு கிளறித் தேடத்தேடவும் தேவைப்பட்ட விடை தெரியவில்லை. இருளுக்கப்பால், எழுந்த இடிந்த சுவரின் ஒவ்வோர் ஒலியதிர்விற்கும் காரையுதிர்வுக்கும் அஞ்சிக் குறுகினார்.

மூஞ்சூறொன்று தன் மூஞ்சி மீசைமேல் மூசி அவரை முகர்ந்து விட்டு, வாலாற் தட்டியபடி விலகிப்போனது. அலட்சியம்!! காலத்தினைத் தன் கையை விட்டு கட்டவிழ்த்துவிட்ட கணத்தினை நொந்துகொண்டார். தனது செல்வாக்கினை அஞ்சுதலுக்கு இழந்தாரா அல்லது கெஞ்சுதலுக்கு இழந்தாரா என்றுகூட இன்றைக்கு அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. உள்ளதையெல்லாம் கண்டவர்க்கும் கேட்டவர்க்கும் கையள்ளி வாரிக்கொடுத்துக்கொண்டு, வரட்டுத்தான்தோன்றித்தனத்திலே எதேச்சதிகாரமும் செய்து திரிந்த இளமையை எண்ணிக்கொண்டார். அந்த ஊதாரிப்பருவத்தை திரும்ப வாழப்பெற்றால், தான் காலத்தினை மீளத் தன் கைக்குள்ளே கொண்டு வரமுடியுமென்றும் இன்றைக்குக் கோணலாகத் தெரியும் எத்தனையோ நிகழ்வுகளினை நீட்டி நேராக்கமுடியுமென்றும் மெல்லியதாக வாய்விட்டு அரற்றியதனைக் கேட்டு யாருமிங்கு சிரித்தார்களோ? துணுக்குற்றவர், ஓடிய ஊத்தைச்சாக்கடையில் பாத்திரம் புண்டொழுகிய பாலுக்கேங்கியதை மறந்தார்; சுற்றும்முற்றும் திரும்பாமலே, இருட்டிலும் பொருட்கள் ஏற்றிய வெளிவர்ணத்தைப் பார்க்கக்கூடிய சக்தி படைத்தவர் இறைவன்; அந்த முகர்ந்த மூஞ்சூறைத் தவிர எதையும் அடர்ந்த இருள் அவருக்கு உணர்த்தவில்லை. மூஞ்சூறுகளைச் சிரிக்கும்தன்மையுடைத்ததாய் -அதுவும் தன்னைப்பார்த்து- இறைவன் படைத்ததில்லை. பெருவிரலழுத்தப் பிய்ந்து நீர்ச்சதை பீறிடும் நுங்கின் நொய்கண்ணொத்த தன் ஞானவிழியின் ஊற்றுமுனையிலே தனக்காகாக் கொடுந்தீமையேதும் கருவண்டாய் உருமாறி உட்கார்ந்து அடைத்ததோ என்று அதிர்ந்தார். இறுதியிலே, "ஒன்றாகியும் பலவாகியும் ஒரே நேரத்திலே இருப்பதே நான்" என்று சொல்லிக்கொண்டு, தன் சுயவிமர்சனத்துக்குத் தானே நகைத்திருக்கக்கூடுமென்று தனக்கொரு சமாதானம் தேடிக் கொண்டார்.

தொந்தரவான மனிதர்கள் அற்ற விளையாட்டு மூஞ்சூறுகளுடான கர்ப்பக்கிரக இருட்பொழுதுகள் கடவுளுக்குப் புதிதானதல்ல என்றபோதும், இத்தகைய அஞ்ஞாதவாசத்தின்கீழ் எதுதான் புதிராக இராது? அவருக்கு மனிதர்கள்மீது பொறாமை வந்தது; அது, வழியவழியக் கொட்டும் மகிழ்ச்சியினை மற்றவன் கேட்டுவிடப்போகின்றானோவென்று வதவதவென்று அள்ளி வாய்க்குள்ளே கொட்டிக்கொள்கின்றவர்கள், சின்னச்சிராயன்று சிகை சிலும்பிச் சீண்டும் துன்பத்தினையும்கூட அவர்மீது அப்படியே குற்றச்சாட்டோடு, -தாம் சுவைக்கத் தின்று யாரோ வேண்டியள்ளத் தள்ளுவதாய் தம் மூக்குகளைப் பொத்தி பொதுவிடத்திற் கழித்த மலமாய்- தள்ளிவிட்டுப் போய்விடுகின்றார்களே என்ற பொறாத தன்மையல்ல; கடவுள் மற்றவர்களின் தற்சிந்தைச்செயலுக்கு முற்றாய் வழிவிட்டுவிடுகின்ற வழிவகையின் சூத்ரதாரி; அதனால், தன்மீது சுமத்தப்படும் குற்றத்தையும் துன்பத்தையும் மீள்தன்மையில்லாத்தளமாய் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று தார்மீகப்பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றவர். ஆனால், தனது சொந்தத்துன்பத்தினையும் வேதனையினையும் சொல்லித் தள்ளி அடுத்த வாழ்கணத்திலே ஆழக் கை நனைக்கவென்றொரு இறைசுவர் இல்லாதது ஏக்கத்தையும் பொறாமையையும் தந்தது.... கொடுத்துவைத்தவர்கள் இந்த மனிதர்கள். ஹ¥ம்!!

சுற்றுமுற்றும் அதிர்வுகளும் உதிர்வுகளும் சட்டென்று நின்றனவாய் உணர்ந்தார்; சட்டென நிற்கும் இயற்கையின் இயக்கங்கள் நல்லதற்கல்ல. எண்ணவிழையை அரையிற் தொங்கவறுத்து இருப்புச்சூழலுக்குச் சுதாரித்துக்கொள்ளமுன், மண்டபக்கதவுகள் மாரடித்துத் திறந்துகொண்டன; ஒன்றின்மேலாய் இன்னொன்றாய் படிந்தும் பிளந்தும் பரவி நகரும் நிழல்களின் அசைவுகளின் பின்னாலிருந்து அங்குமிங்குமாய் வந்த ஒளிக்கீற்றுகள் கடவுளின் கண்மணிகளுக்கு ஊசிகளைச் சொரிந்தன:- "ஒளியும் மறந்து வெறுக்கும்வண்ணம் அதிககாலம் இருட்டுக்குள் இருந்துகொண்டேன்." கூசிய கண்களூடு இருட்பொந்திலே பதுங்கும் மூஞ்சூறுகளையும் எலிகளையும்கூடக் காணமுடியவில்லை. இறுதிப்புலனும் எரிந்தறுந்த முழுத்தீவு.

எவரோ "இங்கே இன்னொருவன்" என்று வெளிவாயிலை நோக்கித் திரும்பியும் திரும்பாமலும் அலறியது, குரல் சுருங்கிய அறைச்சுவர்களிலே முட்டிக்கீறி அங்குமிங்கும் எகிறிப் பந்தடித்து அணைகின்ற விதத்திலே புரியக்கூடியதாக இருந்தது;

வெறுஞ்சுவரோடு சுவராக உருவம் தெரியாமல் உறைந்திருந்தவரை ஒருவன் கண்டு கொண்டான் போலும்; "அதோ! அங்கேயிருக்கின்றான்"; அவன் தன்னைக் கண்டுதான் கத்தினானா, அல்லது கூட்டத்தினரின் குழப்பத்திலே தான் கோலோச்சக் கத்தினானா என்பது கடவுளுக்குத் தெரியவில்லை. நிறமற்ற நீரின் நிறமும் நிறமில்லாநிறமெனப் பெயர்கொண்டதுபோல, தன் உருவமின்மையும் தனக்கோர் உருக்காட்டியானது சூக்குமசரீரனுக்குச் சோர்வைத் தந்தது. கத்தியவன் பின்னாலிருந்து பாய்ந்தவர்கள், கடவுளைச் சுவரிலிருந்து - இரத்தம் உறுஞ்சும் தேயிலைத்தோட்ட அட்டையைப்போல்- பிய்த்து நிலத்திலே போட்டார்கள்; அடையாளம் கண்டதாய்க் காட்டிக்கொண்டவன் முகத்தைப் பார்த்தார்கள்; நெடுக்கிய நிலைக்குத்துநிலை பெயர்த்துக் கிடைப்போட்ட சிலையான கடவுளும்கூட கத்தியவன் முகத்தைப் பார்த்தார்; அவன்தான்; அவரின் நெருக்கத்துக்கும் விசுவாசத்துக்குமுரியவனான தரகன்தான்; அவரது ஐம்புலனும் அறிநிலையும் மறைதிரையுமானவன். அவரின் தொழில்நுட்பங்களின் முதற்சீடன்; கடின உழைப்பாளி; அவனிலே தன் வளர்ச்சிக்காலத்தெறிப்பைக் கண்டே முதலடிப்பொடியாக அவர் தத்தெடுத்திருந்தார்.

இருட்டிலே தேவமாறாட்டம் கொண்டவன், வெளிச்சத்திலே தன்னை அடையாளம் கண்டு தூக்கித் தோளிலே போட்டு ஊர்வலம் போகப்போகின்றான் என்ற எண்ணம் அவருக்கு நிம்மதியைத் தந்தது; சனம் கேட்கக்கேட்க, கொடுத்துக்கொண்டே இருந்ததால் தன் மீது அவர்களுக்கு மதிப்பு மங்கி, 'கேட்பது எம் உரிமை; தரவேண்டியது உம் கடமை' என்ற நிலைமை மேலோங்கியதாலே தன் அருமையை நிலைநாட்ட ஓடியது தான் எண்ணியதுபோல அருமையாகவே வேலை செய்திருப்பதை எண்ணித் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு எழுந்திருக்க முயன்றார்; "தெய்வத்தை இன்றாவது தேடியலைந்தீர்களா, குஞ்சுமானுடங்களே? உப்பில்லாவிட்டாற்றான் தெரியும் உப்பின் அருமை; அப்பன் இல்லாவிட்டாற்றான் தெரியும் அப்பனின் அருமை"; கேலிப்புன்னகை, மண்டபமண்ணைத் தொட்ட, கோபுரத்தைப் பார்த்த, மற்றெல்லா.... அவரது அத்தனை முகக்கடைவாய்களிலும் அரும்பியது. கொஞ்சநேரம் மனிதமுகங்களின் நவரசங்களுக்குப் பயந்தோடி ஒளிந்திருந்தாலும், இறுதியிலே இப்படியாகத் தான் எவ்வளவு உயர்ந்தவன் என்று தன் சட்டத்திட்டங்களின்கீழ் நிரூபித்தறிந்து கொள்ளும் கணங்கள் இன்பகரமானவை; திருப்தியைத் தருகின்றவை...... பெருமிதம் அகத்துள்ளே முற்றி தேஜஸ் தன்னைச் சுற்றிப் பெருகிப் பரவுவதை அவரால், அறிகிடைநிலையிலும் அறியக்கூடியதாகவிருந்தது.

சுற்றிய ஒளியிலேதான் கண்டார்: அவரின் அடிப்பொடியின் முகம் மிகவும் விகாரமானது. "மண்டபத்துக்கு வெளியே இழுத்துப்போங்கள்" - கத்தினான்; "அங்கும் போலி! இங்கும் போலி!! எங்கெங்கும்...." தன்னுள் உளச்சோர்வும் கூட்டத்திற் பரிதாபமும் கடவுளிலே காட்டமும் கொண்டதை ஒருமித்துச் சொல்லும் குரலிலே அவனுக்குக் கத்தத்தெரிந்திருந்தது. "அடிப்பொடி! நன்றாய்ப் பாரடா என்னை; இருட்டிலே அழுக்குச்சுவரிலே அரூபனாயிருந்தவனையும் அடையாளம் கண்ட உனக்கு, இந்த ஒளிக்குழம்புள் இத்தனைநாள் நீ கைகட்டிக் கால் சிரசேற்றிச் சேவகம் செய்த என்னைத் தெரியவில்லையா? அடே! ஒரு நாளிலே மறக்கும்விதமாகவா யுகம் கண்டு பார்த்த என்முகமும் கோலமும் ஆகிப்போனதுனக்கு?" அதட்டினார்.

"எல்லாப்போலிகளின் நாடகங்களும் அபிநயங்களும் ஏன் இப்படி பாவபேதமின்றி ஒற்றைவார்ப்பிலே செய்தவையாக இருக்கின்றன?! இவனுக்கு முன்னாலே பார்த்த போலிகள் நடத்தைகளுக்கும் இவனதுக்கும் ஏதேனும் வித்தியாசமிருக்காது என்று அப்போதே சொன்னேனே, பார்த்தீர்களா? அதே வெல்ல அச்சு" - அடிப்பொடி சனத்தைப் பார்த்துக் கொக்கரித்துவிட்டு, இவரின் இடுப்பிலே உதைந்தான். கடவுளுக்கு நிலை ஏனோ விபரீதமாக மாறியிருப்பது மெல்லப் புரிய ஆரம்பித்தது.

இன்னமும் கூட்டம் பின்னால் வருவது தெரிகின்றது. கூட்டம்கூட்டமாக நகர்ந்து தம்மிலிருந்து வேறாய், ஒளிந்திருக்கும் மனிதர்களினையோ தம்பாட்டிற்கலையும் மிருகங்களையோ அடையாளம், தோல் சுரண்டிச்சுரண்டித் தேடுவதற்குப் பெயர், வேட்டை; கடவுளுக்குத் தெரியும். கடவுளும் வேட்டை ஆடியதுண்டு; அவர்பேரிலும் ஆடப்படுவதையும் ஆட்டப்படுவதையும் அவர் அறிந்ததுண்டு. அப்போதெல்லாம், வேட்டைக்குறியிலும்விட, அதைக் காட்டிக்கொடுக்கின்றவர்களினை அடையாளம் கண்டுகொள்கின்றதையே கடவுள் குறியாகக் கொண்டிருந்தார்; பலிகளைப் பிடித்துத் தருகின்றவர்களைக் கொலுப்படியிலே மேல்நோக்கி விரைவாக நகர்த்தியவருக்கு, அவர்களின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதை உணர்த்த அதுவொன்றுதான் அடையாளம் என்ற அபிப்பிராயம் இருந்தது.

'என் ஏவலாளர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற கணத்திலே என்னைத் தம் ஏவலாளன் ஆக்கிக்கொள்கின்றவர்களிலே அண்டத்தினை நான் முற்றாகப் பாரம்கொடுத்துவிட்டுச் சுமையின்றி மிதக்கத்தொடங்கும் நேரச்சொட்டின் போதையை நான் நுகரத்தொடங்கிய கணத்துக்கு முன்னர்....' - கடவுள் தனக்கினிதான சூழலுக்குத் தற்காலிகமாகவேனும் மீள முயன்றார். நிலவரம் ஏதாக இருந்தாலும், 'சாவுக்குத் தான் பயந்தவனில்லை' என்று ஒருவித அர்த்தமற்ற தன்னம்பிக்கையை அடிக்கடி உதடு பிரித்து முணுமுணுத்துக்கொண்டார். தனக்கும்கூடச் சாவு வரும் என்று ஏற்கனவே தெரியாதவரில்லைத்தான் என்றாலும், இத்தகைய ஒரு சூழ்நிலையிலே அ·தமைவதை அவர் முற்றாக விரும்பவில்லை.

"மண்டபத்துக்கு வெளியே முற்றத்துக்குக் கொண்டு போவோம்; வாருங்கள்" -கத்தியவன், வேறு யாருந்தான் அந்த இழுத்துப்போகும் செயலைச் செய்யவேண்டும் என்பதிலும் உறுதியானவனாக நின்றான். கூட்டத்திலிருந்து சில ஆர்வமுள்ள இளைஞர்கள் பாய்ந்து வந்தார்கள்; "அடிப்பொடிக்கும் அடிப்பொடிகள்" -கடவுளுக்குச் சிரிப்பும் வெறுப்பும் அச்சமும் ஒன்றையன்று முட்டியடித்தன. நிலம் முட்டிய முகமும் முதுகும் சிராயச்சிராய இழுத்துப்போனார்கள்; அடிப்பொடி முன்னால், ஒரு குழந்தையைப் பலிபீடத்திலிடவோ, ஒரு குற்றவாளியைக் கழுவேற்றவோ இட்டுச்செல்லும் சிறுதானைத்தலைவன்போல, விலகி வழிவிடும் கூட்டத்திலே தனக்கான அங்கீகாரத்தை விழியாலே தேடிக்கொண்டு, கிடைத்தபோதிலே சாய்தலையால் ஏற்றுக்கொண்டும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தான்.

மண்டபத்தின் வெளியிலே ஒரு தாயக்கூட்டமாக நிரையிலும் நிரலிலும் நிறையச் சிலுவைகள்; உடல்கள் தூக்கியறையப்பட்டும் காத்துக்கொண்டதுமான சிலுவைகள்; ஆடையணிகள் மாறுபட்டுக்கிடந்தாலும், தூக்கி அறையப்பட்ட உருவங்களெல்லாம் அவருடையதாகவிருந்தன. வெற்றுச்சிலுவையன்றின் முன்னர் நிறுத்தப்பட்ட கடவுளுக்குக் கண்கள் இருட்டின; இத்தனைநாள் அள்ளி அள்ளித் திகட்டத்திகட்டக்கொடுக்கையிலே பருக்கையிலே மறுத்து ஏற்காமலே பெரியமனிதத்தனம் காட்டிக்கிடந்தவர், முதன்முதலிலே பசியை, தாகத்தை உணர்ந்தார். கவளச்சோறும் கிண்ணநீரும் அடிப்பொடியிடம் கேட்டார்.

"நீதான் கடவுளென்றால், எங்களுக்குத் தரவேண்டியவன் நீ" - அவரிடம் கொக்கரித்துவிட்டு மக்களைப் பார்த்து பார்வையிலே ஆமோதிப்புக் கேட்டுக் கேள்வி தொடுத்தான், அடிப்பொடி.

"அதுதானே? நீதான் கடவுளென்றால், எங்களுக்குத் தரவேண்டியவள் நீயேதான்" - அடிப்பொடியின் இளைய அடிப்பொடியருவன் கைச்சாட்டையைக் காற்றிலே சொடுக்கி ஒரு யுகப்பிறழ்ச்சிக்கு நியாயம் கேட்பவன் என்ற பாவத்திலே சொற்களை அடிக்கண்டத்து நரம்புகள் அதிரக்கக்கினான்.

"அப்படித்தான்; பசியையும் தாகத்தையும் போக்கும் கடவுளைத் தேடித்தானே எங்கள் அலைச்சலெல்லாம்; எங்கள் தோற்றத்தைக் கண்டுமா வாய்த்தீனியும் துளிநீரும் கேட்கிறாய்?" - வியர்வைநாற்றம் கடவுளின் எல்லாச்செவிப்பறைகளிலும் அறைந்து எதிரொலித்து அடங்கியது.

இப்போதுதான் கடவுள் சுற்றுமுற்றும் பார்த்தார். அடிப்பொடியைத் தவிர்த்துவிட்டால், மிகுதியெல்லாம் சுருங்கிய தோல் துருத்தித்தொங்கும் எலும்புகள் பிளந்து நிலம் விழாது அடக்கிக் காத்திருக்க மூச்சுக்காற்றிலே உலாவும் உருக்கள்.... சிறிதும் பெரிதுமாக...ஒன்றையன்று தாங்கிய அதேநேரத்திலே ஒன்றோடொன்று போட்டியிட்டுக்கொண்டு..... இத்தனை கால அவரது கோலோச்சுகையிலே, அவரின் திரைக்கப்பாலிருந்து கால இடைவெளியில்லாமல் நெருக்கி நார் கோர்த்த சரமாக அடிப்பொடி அழைத்துவந்த மனிதர்கள் இவ்வகைப்பட்டவர்களல்ல; அவர்களின் தேவைகளைப் போலவே அவருடைய வாயிலும் வரமும் அவர்களுக்குப் போதுமாயிருக்கவில்லை; "இவர்களிலே ஒருவரையும் நான் காணவில்லையே? அடிப்பொடி இப்படியான மனிதர்களைப் பற்றியேதும் என்னிடம் சொல் சொட்டவில்லையே??" கடவுளின் வினாக்களும் திகைப்பும் அனுபவமும் தன்விளக்கமும் விரிந்துகொண்டே போக, அடிப்பொடியைப் பார்த்தார்.

அவன் கண்டும் காணாதவனாய் தன் கண்ணசைவுக்காகக் காத்திருந்த சின்ன அடிப்பொடிகளை நோக்கினான். ஆண்டாண்டு பழக்கப்பட்ட தொழிலொன்றின் நாளாந்தக்கிரியையன்றைப் புரிகின்ற கடைநிலை ஊழியராய் முள்முடிதாங்கிய கையுடனொருவனும் வலக்கை ஆணிகளும் இடக்கை சிறுசுத்தியலும் கொண்டு இன்னொருவனும் கடவுளை நோக்கி நகர்ந்தனர். ஒரு கணத்துக்கு அவருக்குத் தான் வரலாற்றிலே காலபேதப்பட்ட உணர்வு வெடித்து, பின் வடிந்தது; "இப்போது நான் தக்கிக்கவேண்டும்." - தற்காலத்துக்குச் சிலிர்த்துக்கொண்டார்.

"எதற்கு?" கடவுளின் குரல் அதிர்ந்து, ஆணி, முடியுடன் நகர்ந்தவர்கள் தொடங்கி, அடிப்பொடி, கூட்டம் என நிலைப்படுதல் அலையாகச் செல்லத் தொடர்ந்தது, "நான் போலியென்றால், என் மீதான குற்றங்கள் எவை? இங்கு எவரேனும் ஒருவர் என்னாலே பாதிக்கப்பட்டதாக சொன்னாலுங்கூட எனக்கான எந்தத் தண்டனையும் ஏற்றுக்கொள்வேன்" - தான் என்றைக்குமே சந்திக்காத இவர்கள் தன்னிலே என்ன குற்றம் சுமத்தமுடியும் என்ற திடமான நம்பிக்கை அவருக்குப் பிறந்திருந்தது.

அடிப்பொடி, நிமிட இடைவெளியும் விடவில்லை...."பார்த்தீர்களா?... திரும்பவும்.... தங்களைக் கடவுள் என்று பகிரங்கப்படுத்திக்கொள்ளும் போலிகளின் செய்கைகள் ஒரே சிற்பி செதுக்கிய சிலைகள்போல...ஒரே குற்றப்பத்திரிகையை ஆள் தூங்கும் ஒவ்வொரு சிலுவையின்முன்னும் சுமத்திச்சுமத்தி ஓர் இயந்திரமாகிப்போனேன். இயந்திரமாக உருவானவனா நான்??" - அடிப்பொடியின் குரல் இவ்விடத்திலே உடைந்து தடங்க, "இல்லையில்லை; போலிகளைப் பற்றிய பிம்பங்களை உடைத்தெறிந்த நீங்கள் எமது விமோசனத்துக்கான வழிகாட்டி போன்றவர்" என்று அடிப்பொடியின் அடிப்பொடிகள் ஒத்த குரலிலே உரத்துக்கூறினார்கள்... மீண்டும் அதே ஒத்தூதும்கிரியை.... சிறிது தயக்கத்தின்பின்னர், மெல்லியகுரலிலே சனங்களின் ஆமோதிப்புப்பரவியது.

தன் இடுப்புக்கச்சையின் அடியிலிருந்து ஒரு கசங்கிய சுருளை எடுத்து அடிப்பொடி விரிக்க, தேவப்பிரசங்கம் கேட்கும் பாவனைக்குக் கூட்டம் தன்னைத் தயார்ப்படுத்தியது. "இந்தக்குற்ற ஆவணம், போலி இலக்கதாரி இத்தனையாவதானவன் மேலே சமர்ப்பிக்கப்படுகின்றது; இவன் மீதான குற்றங்கள் பின்வருகின்ற இரண்டிலே ஏதாவதொன்றாகலாம்; முதலாவது, தன்னைக் கடவுள் என்று பொய்யாகக் கூறிப் பித்தலாட்டம் செய்வது; கடவுளுக்குப் பசிப்பதில்லை; பசித்தாலும்கூட, அவர் பருகத் தண்ணீரும் புசிக்க வெற்றிலையும் மனிதரிடம் யாசிக்கக்கூடியவரல்லர். அதனால், இவன் கடவுளாக இருக்கமுடியாது....."

இந்த இடத்திலே கடவுள் குறுக்கிட்டுப் பாய்ந்தார்; "கடவுளுக்குப் பசிப்பதில்லை; தாகமேற்படாது என்பதற்கான ஆதாரமென்ன?"......"நான் கடவுளின் அடிப்பொடியாக நூற்றாண்டுகள் இருந்திருக்கின்றேன். கடவுள் பசித்து, தனக்குப் பிடித்ததென்று எதையும் மொறுமொறுக்கத் தின்றோ, தாகமேற்பட்டதென்று சலசலக்கும் எதையும் அருந்தியோ நான் கண்டதில்லை." - அடித்துச் சொன்னான் அடிப்பொடி.

"அடே அடிப்பொடி! கண்ணிலே வஞ்சகத்தை நழுவவிட்டுக்கொண்டு பேசாதே" -கடவுள் பொறுமையிழந்தார்.

"..... இவர் கடவுள்தான் என்றிருந்தால், இவர் இழைத்த குற்றம் பொய்யாகத் தன்னை அடையாளப்படுத்துவதிலும்விடப் பெரிது; படைத்த கடவுளின் கடமை என்ன?" -அடிப்பொடி தொடர்ந்தான்.

"படைத்த மக்களைக் காத்தலும் அவர்களைத் தான் கவனிக்கின்றேனென்பதை அவர்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கை அடிக்கடி காட்சி தந்து உணர்த்திக்கொள்ளுதல்" - அடிப்பொடியின் பொடியர்கள் கத்தினார்கள்...

...."இவனை மண்டபத்துச் சுவரிலே உருவமில்லாமல் திசைப்பட்டுக் கிடக்கமுன்னர் பார்த்தவர்கள் எவராவது இங்கே இருக்கின்றீர்களா?"

"இல்லை! இல்லவேயில்லை!!" - கூட்டம்.

"அப்படியானால், இவன் கடவுளாக இருந்து தான் பெற்ற மக்களுக்கான கடமையைச் செய்தானா? அப்படிச் செய்யவில்லை என்பது மிகத்தெளிவு; அப்படிச் செய்யாதவிடத்திலே இவன் தன் கடமையிலேயிருந்து வழுவியவனாகவும் தன்புத்திரர்களின் கஷ்டங்களையே மறைந்திருந்து பார்த்து இரசிக்கும் கொடூரத்தன்மை கொண்டவன் அல்லவா?"....

கடவுளுக்கு அடிப்பொடி எப்படி வலையை விரித்துத் தன்னைத் தள்ளிச் சுருக்கை இழுக்கத்தொடங்கியிருக்கின்றான் என்று தெரியத்தொடங்கியது..... "பாவி, இவன் இத்தனை நாளாக பொருளும் உடலும் விளைந்து கிடந்தவர்களைக் கொண்டு வந்து 'அதுவும்கூடப் போதாமை' என்ற பொருமல் மட்டும் புழுத்துப்போயிருந்தவர்களுக்கு விழற்றிசையிலே நீர் பாய்ச்சவிட்டுவிட்டு, திரைக்கப்பால், இவர்களைத் தடுத்து வைத்திருக்கின்றான் என்று எனக்கெப்படி தெரியும்? திரைக்கப்பாலும், இவர்களைப் பார்க்க நான்தான் மறுக்கின்றேன் என்று காரணம் சொல்லியிருக்கக்கூடிய ஆள்"....கடவுள் விக்கித்துப்போய் முகமும் மூளையும் விறைத்து நிற்க,

கூட்டம், "அடிப்பொடி, நீ சொல்வது சரிதான்" என்று கத்தியது....

கடவுள் தனக்குத்தானே சட்டத்தரணியானார்; இயலுமானவரை குரலை உயர்த்தினார்.

"அடிப்பொடி; துரோகி. காலகாலங்களுக்கு முன்னர், என்னைப் படைத்த ஒவ்வொரு மனிதனையும் நானே சென்று கண்டு குற்றம்குறை கேட்டு, அவலம் போக்கினேன். அப்போதெல்லாம், மனிதர்கள் இவர்களைப் போலவே நொய்யெலும்பும் மேற்போர்த்திய மென்றோலாகவும் இருந்தார்கள். உனக்கே தெரியும். அன்னையின் சுருங்கிய மார்பை பாலுக்காய் இழுத்து வதைத்துக்கொண்டிருந்த உன்னைக்கூட நான் அங்கேதான் கண்டுபிடித்து எடுத்துப்போனேன். உன்னை என் எடுபிடியாக்க, காலத்தோடு ஒருமிக்க ஒரு முழுமாட்டூன் தின்ற புழுவாய் உடல் கொழுத்துக்கொண்டு வந்தாய்.என் உடலின் பெருப்பம் உயிருக்காகாதென்று சொல்லி, என் வெண்ணையையும் வெத்திலையையும் கண்டம் கையழுத்தி நிறுத்தியவன் நீ. பின்னர், என் பவனிப்பல்லக்குக்கும் உலகுக்குமிடையே அரசுப்பெண்டிர் அந்தப்புரங்கள்போல மூடுதிரை போட்டவன் நீ. கேட்க, தீரா என் தொழிலிருந்து எனக்கு சிறிது ஓய்வெடுத்துக்கொள்ள வழி செய்கின்றதாகச் சொன்னாய். என் மீதிருக்கும் இரக்கத்திலே, உன்னை ஓயாமற் சுற்றி என் நலம் பார்க்கின்றாய் என்று எண்ணிப் பெருமிதமடைந்து சொன்னபோதெல்லாம், புன்சிரிப்புச் சிந்தினாய். பின்னர், என்னைக் காண வந்தோரெல்லாம் பலிக்கிட விளைத்த ஆட்டுக்குட்டிகளாக இருந்தார்கள்; மக்களின் வாழ்க்கை நிலை வளம் பெற்றதாக எண்ணிக்கொண்டு மகிழ்ந்தேன்..." - கடவுள் மூச்சுக்குக் கணம் தரிக்க, அடிப்பொடி உள்ளே பாய்ந்தான்...

"பார்த்தீர்களா? இவன் கடவுளாக இருந்தாற்கூட, எவர்களின் சகவாசத்தை இவன் எப்போதும் பெற்று அருள் பாலித்திருக்கின்றான் என்று...அவர்களினது.... சேற்றுப்பன்றிகளாய்க் கொழுத்த அவர்களினது... உங்களை ஏன் கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் இவன் கண்டு கொள்ளாததற்குக் காரணம், தினமும் கிடார நெய்யும் பெட்டி ரொட்டிகளுக்கும் தேவைக்கதிமாகத் திணித்துக்கொள்ளும் முள்ளுப்பலாப்பழங்கள் அவர்களாம்..."

"இவற்றைச் சொல்லும் இவன்தான் கடவுளென்றால், இரண்டு முறை கொல்லு அவனை" -கூட்டத்திலேயிருந்து ஒரு நோஞ்சான் ஒரு கூழாங்கல்லை எடுத்து தன்னால் ஆகுமென்ற தொலைவுக்குக் கடவுளை நோக்கி எறிந்தான். அவரின் காலடியிலே வந்து வீழ்ந்தது.

"நில்லுங்கள்; நில்லுங்கள்; இதையும் கேளுங்கள்; என்னைப் பற்றிய முழுவிபரம் தெரியும் தெளிவாகும். பின்னால், நீங்கள் என்னைத் தேடி வந்தபோது என்னை ஏன் காணமுடியவில்லை என்பதையும் கேளுங்கள். அந்தப் பன்றிக்குட்டிகளின் தொல்லை தாங்கமுடியவில்லை; எப்போதும் 'இதைத்தா அதைத்தா' என்ற ஓயா நச்சரிப்பு. தேவைக்கதிகமான நச்சரிப்பு. கிடையாதவிடத்து, வசை. இவனிடம் நிறுத்து என்று சொன்னால், கேட்பவருக்குக் கொடுப்பதே கடவுளின் கடமையென்றான். அதனால், எனது உண்மையான இருப்பின் நோக்கையும் அவர்களுக்கு நியாயமான தேவைகள் எவையென்று தெரிவதற்குமாகவே ஒளிவிடம் தேடி ஓடினேன். இல்லாவிடத்துத்தான், என் அருமை தெரியும் என்று ஓடினேன்.."

சிலுவைகளடுத்த மலைத்தொடரெல்லாம் அதிர்ந்து எதிரொலிக்க உரக்கச்சிரித்தான் அடிப்பொடி; நிறுத்தமுடியாமலே, சிரித்தானாம்; ஆத்திரமும் பொசுக்கிப்பொசுக்கிச் சிரித்தானாம். மக்கள் கற்களை எடுத்துக் கடவுளின் கண், கன்னம், கழுத்து, முகம், முண்டம், மூக்கு, எல்லாவிடமும் எறிகணைத்தடம் பதிக்கப்பதிக்க எறிய எறிய, எரிந்து சிரித்தானாம் ஆண்டவன் அடிப்பொடி.....

..." எவ்வளவுதான் உமக்குச் சலிப்பானாலும், தேவைகளைக் கேட்டு வரும்போது நிறைவேற்றக் கிடக்கிறன்றவன்தான் ஆண்டவன். இவர்கள் உம்மைப் படைத்தது தம் தலைக்கு மேலே ஓர் அந்தரத்தை ஆக்கி இருத்தியதே தம் தேவைகளைத் தலையுயர்த்தி உம்மிடம் சொல்லதான் என்றபோது, நீர் உமது கடமையை விட்டு ஒளிந்தோடினால், எப்படி? இப்படி ஓடியவர், இன்றைக்குக் கல்லடிக்கும் சிலுவைக்கும் பயந்து நீர்தான் கடவுளென்று உம்மிருப்பினையும் பதவியையும் நிலைப்படுத்த விழைவதும்கூட வெட்கமும் அருவருப்பும் நிறைந்தது"....

"அவனோடு என்ன பேச்சு? தூக்கிக்கட்டு அவனை; ஆணி நெற்றிமத்தியடித்து அவனைக் கொல்ல ஆணையிடு"

....."உமது வெண்ணையிலே ஊறிய அந்த விருந்தினர்கள்கூட உம்மைக் கைவிட்டார்கள் என்பதை அறியீரா? நீர் காணாமற்போனால், உமக்குப் பாதிப்பேயழிய அவர்களுக்கில்லை என்பதையும்தான் அறியீரோ?வெண்ணெய்க்கும் வெத்திலைக்கும் நீர்தான் நீர் சொல்லும் கடவுளென்றாலும், நீர் மட்டுமல்ல ஏக மொத்த விற்பனையாளன்....உமது மூடுபல்லக்குப் போகாத சேரித்தெருமூலைகளில் உம்முடையதுபோல எத்தனையோ கீரைக்கடைக்கடைகளிருந்ததை அறியாத நீரெல்லாம் கடவுளாயிருந்தீர் என்று சொல்லிக்கொள்வது வெற்றியான வரம் கொடுக்கும் வியாபாரம் நடத்தும் தெய்வங்கள் பெயர்களுக்கு இழுக்காகும்"..... மிகைநக்கல், நா மிதக்கச் சொன்னான் அடிப்பொடி...

கடவுளுக்குக் கல்லாயோ வெள்ளைச்சுவராயோ மட்டும் இருப்பதிலே தொக்கி நின்ற நட்டம் மெள்ளமெள்ள விரியத்தொடங்குகையிலே, கூட்டம் பொறுமையிழந்து ஆர்ப்பரித்து ஆவேசத்துடன் கத்தியது;

"முடிவாகச் சொல்கின்றோம்: விளக்கமும் விவரிப்பும் இத்துடன் நிற்கட்டும்...... இவன் பொய்யனோ, பொருந்தாதவனோ, அதற்கான குற்றத்தண்டனையைப் பற்றிமட்டும் இனிப் பேசு."

"சரி; மக்கள் விருப்பம் அப்படியானால், உங்களிலொருவனும் உங்கள் சேவகனுமான எனக்கேதும் ஆட்சேபணையிருக்கப்போவதில்லை; ஆனால், எந்தக்குற்றத்துக்கும் பகிரங்கவிசாரணை நடத்தியபின்னரே தீர்ப்பு வழங்குவது, ஜனநாயகம்; இந்நீதி தெய்வநிந்தை, நிந்தைத்தெய்வத்துக்கும் சேர்ந்ததே; அதன் வழியே செயற்பட்டேன். ஆக, மற்றச்சிலுவைப்போலிகள் போலவே இவன் குற்றமும் நிரூபணமாகிறது; இத்தகு குற்றங்களுக்கு நான் மூன்று விதமான தீர்ப்புகளை வைத்திருக்கின்றேன். அதிலே, இவனின் குற்றத்தின் ஆழத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, மக்கள் நீங்கள்தான் நடுவர்களாகத் தீர்ப்புச் சொல்லவேண்டும். உங்களைப் பாதித்தவனுக்கான தீர்ப்பு உங்களிடமிருந்தே வரவேண்டும்" - கூட்டத்தைப் பார்த்து அடிப்பொடி இடது ஆட்காட்டி விரலை உயர்த்திக் காற்றிலே அடித்தடித்துப் பேச, கூட்டம், "அப்படியே செய்தாற்போயிற்று; மாற்றுத்தீர்ப்புகளைக் கூறு; தீர்ப்புகளைக் கூறுஉஉ" என்று உயர்மீடிறனிலே அலறியது.

"ஒன்று, இவன் தான் படைத்த மக்களின் நலத்தினைச் சிந்தை வைக்காத கடவுளென்றால், தன் குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமிடத்து, கூட்டத்தோடு இன்னொரு ஆளாக ஏற்றுக்கொள்வோம். தான், இனித் தனியே திரைபோட்டு வாழாது கூட்டத்தோடு கூட்டமாகவிருந்து தனது கடமையைச் செய்யலாம்; அல்லது, கூட்டம் அவன் தனது மேம்பட்ட தன்மையை விலக்க, கூட்டம் போலவே தனது வாழ்க்கையினையும் சமநிலையிலேயிருந்து நடத்தவேண்டும்; இல்லையேல், இவன் கடவுள் இல்லை என்றால், இந்தப்பெரும்பொய்மைத்தனமும் தெய்வமாறாட்டமும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை; சிலுவையிலே அறையப்பட்டேயாகவேண்டும்."

"இதிலே நீ எந்தக்குற்றத்தை உனதென்று இறுதியாகச் சொல்கின்றாய்?" -கடவுளைப் பார்த்துக் கத்தினான்.

கடவுள் வாய்விட்டு அலறினார்; "பாவி, இவர்களைத் திரைக்குப் பின்னால் மறைத்தவன் நீயில்லையா? இப்போது, என் தலையிலே கருங்கல், நெற்றியில் இரும்பாணியா?"

"பார்த்தீர்களா? உண்மையைச் சொன்னதற்காகக் கடைசியிலே என் தலையிலே தன்னோர் அம்பெய்கிறான்" -அடிப்பொடி மனம் பொடிபட்டானாம் என்று சொன்னது அவன் முகம்.

"சிலுவையிலே அறை" என்றது கூட்டம்.

கடவுள் அடுத்த வசனம் பேசமுன் வாயமுக்கி, வலுக்கட்டாயமாகத் தூக்கப்பட்டார்; அலறமுன் ஆணி அவர் நெத்தியிலே தைத்தது

காட்சி முடிந்த கூட்டம் விலகமுன்னர் அடிப்பொடி கேட்டான்;
"எமது முதலாவது போலிகளை இனங்கண்டு களை கில்லும் பணி இனிதே முடிந்தது; அடுத்ததாக, உண்மைக்கடவுள் எங்கோ தொலைந்துபோனதால், அவர் வரும்வரை தற்காலிகமாகவேனும், எமது வருங்காலத்துக்காக ஒரு கடவுளை உருவாக்கவேண்டும். அந்தக்கடவுள் காணாமற்போன கடவுள் போல, இருக்கும்போது காக்கும்பொறுப்பைக் காட்டாமலும் தொலையும்போதும் பொறுப்பாகச் சொல்லிப்போகாமலும் அமைபவனாகவிருக்கக்கூடாது. என்ன சொல்கின்றீர்கள்?"

கூட்டம், "நீயே இரு! உனக்குத்தான் காணாமற்போன கடவுளுடன் இருந்து கடவுளாகவிருத்தல் பற்றிய அனுபவம் நிறையவுண்டு" என்று முடிவாகச் சொல்லி, "எல்லாம் அறிந்து எம்மைக் காக்கும் மனமும் வல்லமையும் வாய்ந்த எமது புதுக்கடவுள் வாழ்க" என்று கோஷமிட்டது.

பழைய கடவுள் இந்தக்கோரிக்கையும் குழுமுடிவும் கோஷமும் கேட்காமலே நெத்தியிலும் உள்ளங்கையிரண்டு இரத்தம் ஒழுக ஒழுக தனது இருப்பிடத்திசையும் இறுதியில் நோக்கவும் முடியாமல், தலை தொங்கச் செத்துப்போனார். இறக்கும்போது, தன்னால் இறக்கடிப்பட்டவர்களையும் தான் அடிப்பொடியாக இருக்கையிலே பதவிக்கு வரக் கொன்ற கடவுளையும் நினைத்துக்கொண்டார்;

"எந்த சிலுவையிலே அந்தக்கடவுளை ஏற்றினேன்?? இங்கே சிலுவைகளிலே ஏற்றப்பட்டிருக்கின்றவர்களிலே நான் ஏற்றியவர்கள் எத்தனைபேர்??"

கூட்டம், "செத்த போலி வீழ்க! புதிய கடவுள் வாழ்க!!" என்று புதுக்கடவுளுடன் தீவட்டி வெளிச்சத்திலே பஜனை பாடிக்கொண்டு சாமரம் வீசிக்கொண்டு நகர்ந்தது; புதுக்கடவுள் தனது புது கையுதவி அடிப்பொடியிடம் தின்ன வெத்திலை மடிக்கவும் பருகப் பால் காய்ச்சவும் மறக்காமற் சொல்லிக்கொண்டு பல்லக்கு மூடுதிரைக்குள்ளே முகத்தை மூடிக்கொண்டு போனார். புதுப்பொடிக்கையாள், குழைவுடன் ஆமோதித்தபடி தனக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டு திரைக்கு உள்ளும் புறமும் தலையை மாற்றி மாற்றி மர ஓணான் விளையாட்டுக்காட்டிக்கொண்டு அவர் கூடவே போனான். கடவுள் கூட்டத்தின் கோஷத்துக்குப் புன்னகைத்து,கைகாட்டி, தலையசைத்தாலும், தன் வேலைக்காரனின் தொட்டாட்டு வேலைகளின்போதான ஒவ்வொரு அசைவையும்கூடத் துல்லியமாக அவதானித்துக்கொள்வதே குறியானார்.

உருவாக்கம்: ~01, மார்ச் '01 - ~03, மார்ச் '02
இறுதித்திருத்தம்: ~07, மார்ச் ‘02

சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்

தமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதிலும்விட அதிகமே கலந்திருக்கும். இலங்கையிலே தமிழ்.எதிர்.வடமொழி முரண், தமிழ்நாட்டிலிருந்ததுபோல, என்றுமே மேலோங்கியிருக்கவில்லை. உள்நாட்டிலே வடமொழி ஆதிக்கத்தினதோ அடக்குமுறையினதோ கூறாகக் காணப்பட வேண்டியதல்லாத அரசியல்நெருக்குநிலை. அதனாலே, பெரும்தலைமுறைக்கு யாழ்ப்பாணத்தமிழிலே கலந்திருக்கும் திசைச்சொற்கள் தமிழில்லையென உறுத்தவில்லை. அவற்றின் நெருடலை உணர்ந்து கொள்ள நேரமில்லாது வேறு சிக்கல்கள். இந்நிலையிலே சாந்தி, சமாதானம், சுபீட்சம் போன்ற சொற்கள் வடமொழியின் தமிழ்ப்படுத்தலென்று தெரிந்திருக்கவில்லை. கூகுலிலே, “சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும்” தேடினால், அரசியல்வாதிமுதல், ஆண்டவர்சந்நிதி ஊடாகக் காதலின் பக்தர்கள்வரை நாட்டிலே இம்முக்கூட்டணிக்கொம்புத்தேனுக்கு அலைவது தெரியவரும். ஆனால், நாளாந்தப்பேச்சிலும் ஊடகங்களிலும் விழுந்துகொண்டேயிருப்பதைக் காண்போம். புத்தாண்டு பிறந்தால், அத்தனை கொடுமைகளும் செய்யும் அரசியல்வாதிகள் எதுவித சங்கடமுமின்றி, “இப்புத்தாண்டு நாட்டிலே சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் கூடியிருக்க” வாழ்த்துவதோடு தொடங்கக் கேட்டு, மறுநாள் குண்டுகளும் உடலங்களூம் விழ, இத்தொடர் ஒரு நக்கலான தொடராக எம்மிலே பலருக்கும் பதிந்துபோயிற்று. நாளுக்கு நாலுமுறை காதலர்க்கிடையே பிணக்கோ, தம்பதியரிடையே சண்டையோ வந்தாலும், நக்கலாக, அவர்தம் நாட்டிலே சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் கூடியிருக்க” “வாழ்த்துவது” சலித்துப்போன வழமையாகிய நிலை இக்காலகட்டம்.

இரண்டு பயங்கரநாட்களின் முன், ஒரு பயங்கரப்பதிவிலே, கொதித்துப்போன ஒரு பயங்கரத்தமிழ்ப்பதிவருக்கு, ஒரு பயங்கரமான பதிலாக “சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்…. கூல்டவுன். இரத்தக்கொதிப்பு ஏறப்போகிறது” என்று பயங்கரமாகவே சொல்லி பயங்கரமாகவே விட்டேன். இன்றைக்குப் பார்த்தால், ஓரன்பரின் அஞ்சல்; அஞ்சலினை விபரிக்க நெறி இடம்கொடாது. ஆனால், உள்ளூரச்சொல்லப்பட்டிருந்தது இது:

--உள்ளடக்கத்தின் குறிப்பு-------
முஸ்லிம்கள் சார்பாக அஞ்சல் அனுப்புவதாகவும் நான் குறிப்பிட்ட ///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்/// வார்த்தைகள் தம் கவனத்துக்கு வந்ததாகவும் இது தாம் கூறும் முகமனை கேலி செய்வதாகவும் கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளதாகவும். இதற்கு நான் எவரையேனும் பிரதிநிதிப்படுத்தினால், அவர்கள் விளக்கம் தரவேண்டும் என்பதாகவும் அந்த அஞ்சல் குறிப்பிட்ட குமுகத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கும் "காணாப்படி"யாக (Bcc) அனுப்பப்பட்டிருப்பதாகவும்.
------ முடிவு--------------------

ஜனநாயகமதப்பேச்சுச்சுதந்திரத்தை மறுக்கின்றீர்கள் என்று குற்றம் சுமத்தியவர் நாற்பத்தைந்தாண்டுகளாக எனது மொழியாகப் பழகியதினை, நாளாந்தம் நக்கலாக நான் சொல்லிய சொல்லும் வார்த்தைத்தொடரைத் தனக்குரியதென்று உரிமை கொண்டாடும் அராஜகத்தை, என் பேச்சுச்சுதந்திரமறுப்பை என்னவென்று சொல்வது! “அவர்கூறும் முகமனைக் கேலி செய்கின்றேன்” என்ற அவரது கற்பனையை அவரோடும் அவருடன் உடன்படுகின்றவர்களோடும் விட்டுவிடுகிறேன். நான் இரத்தக்கொதிப்புப்பதிவருக்குப் பகிடியாகத்தான் சொன்னேன் என்பது எத்துணை உண்மையோ அத்துணை ஈடான உண்மை, -நான் "கூல்டவுன்; இரத்தக்கொதிப்பு ஏறிவிடும்" பதில் சொல்லியபோது- இவரின் முகமன் இதுவாயிருக்கலாமென்பதும் என் மண்டைக்குள்ளே புகுந்து வரவில்லையென்பதும்.

கூகுலிலே அவர் தேடிப்பார்த்தால், முஸ்லீம்கள்மட்டுமல்ல, அகிலாண்டேஸ்வரி அம்மையாரின் பக்தர்களும் தலதா மாளிகைப்புத்தரின் புத்தாக்களும் காதலர்களும் இனமதபேதமின்றி ஒவ்வோர் இலங்கை அரசியல்வாதியுங்கூட சாந்திசமாதானி வார்த்தைக்காக என்மீது கோபம் கொள்ளவேண்டுமானால், கொள்ளலாம் என்பதாகத் தெரியவரும்.

அவரது இறைநம்பிக்கை எதுவென நான் அக்கறைப்பட அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவரின் இறைநம்பிக்கையைக் கேள்விசெய்வதோ நக்கல்செய்வதோ என் தேவைப்பைக்குள்ளோ கரிசனத்தொடுவான்எல்லைக்குள்ளோ இல்லாத மற்றும் தோன்றாத எண்ணங்கள்.

அவருக்கு(ம் அவரது நண்பர்களுக்கும்) ஏன் என்மீது இப்படியாக பொறிகொள்ளவேண்டுமென்று தோன்றுகின்றதென்பதற்கு ஒரு காரணத்தை ஊகிக்கமுடிகின்றது. விதிகளின்படி பதிவுகளை அனுமதிப்பது என்ற அடிப்படையிலே நான் செயற்பட்டதின் விளைவை இன்னமும் ஏற்றுக்கொள்ளமுடியாத படிவாகாத மனநிலையே அது. அதன் எதிர்வினையாகவே இது கிளம்பியிருக்கின்றதென்பது என் ஊகம். ஆனால், அதற்கு நானொன்றும் செய்யமுடியாது.

இப்படியாக “நீ பேசும் தாய்வட்டாரமொழிக்குச் சொந்தக்காரர் நாமே; அதை நீ இப்படித்தான் பயன்படுத்தவேண்டும்” என்றெல்லாம் சலசலப்பது முறையல்ல. நான் சொன்ன “சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்” அவர்களாலே சட்டப்படி பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் அனுமதி பெற்றே நான் பயன்படுத்தவேண்டிய சொற்றொடரென்றால், அறியத்தரட்டும். தவறென ஒத்துக்கொண்டு திருத்திக்கொள்வேன். மிகுதிப்படி நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நானறியாதவர்களை எனக்குத் தோன்றாத காரணங்களுக்காக நோக்கி நோகச் செய்யுமே என்று எப்படியாகப் பேசமுடியும்! என் நண்பர் ஒருவர் ஆய்வுகூடத்திலே வடிகட்டிய மதுசாரத்தைப் பரிசுத்த ஆவி என்பார். இதை "பரிசுத்த ஆவி" என்பதற்கு மதச்சடங்குகளின் அடிப்படையிலே இன்னோர் கருத்தும் இருக்கென்று அறிந்துகொண்டே மீளமீளச் சொல்வார். எவரும் வாதாடவில்லை. இங்கே வெறுமனே இரண்டு சொற்களைத் தேடி வைத்துக்கொண்டு மதத்தைப் புண்படுத்தியதாகப் பேசுகின்றார்கள்.

ஆனால், அவர் அவருடைய முகமன் இதுவென்றால், “சாந்தியையும் சமாதானத்தையும் கூடவே சுபீட்சத்தையும்” தமிழுக்குத் திசைப்படுத்திய சமஸ்கிருதக்காரர்கள் அடுத்ததாக தங்கள் மொழியை நான் கேலி செய்வதாகக் குற்றஞ் சாட்டலாம். அதிலும் எனக்கு உடன்பாடில்லை.

சாந்தியையும் சமாதானத்தையும் நான் அறிந்த காலத்திலே பயன்படுத்தியதுபோல, மொழிப்பதங்களாக நான் எவ்வாறும் பயன்படுத்தலாம். வேண்டுமானால், அப்படியாகச் சொல்லும்போது, அவர்களைக் கேலிசெய்கிறேனென உணர்ந்தால், சுட்டிக்காட்டி "இவ்வாறுமிருக்கின்றது எங்களைக் கேலியா செய்கிறீர்கள்?" என்றாவது கேட்டிருக்கலாம். என்னை நோகடிக்காத எவரையும் நோகச் செய்யக்கூடாதென்று "அப்படியா! சரி இனி அப்படியாக நடக்காது" என்று சொல்லிவிட்டு நகர்ந்திருப்பேன். ஆனால், அவரின் அஞ்சலின் உட்தொனி மிரட்டுதலன்றி அப்படியாகவும் செய்யவில்லை. கேட்டிருந்தால், இக்கோணமுமிருக்கிறதேயென்பதற்காகமட்டும் சகமனிதனின் நம்பிக்கையை நோகடிப்பதாக இருக்கக்கூடாதெனச் சொல்லாமலே தவிர்த்துவிடலாம். ஆனால், இது நான் வழங்கிய வழங்கும் திசைச்சொல் உள்வாங்கிய தமிழின் கூறானதாலே, அவரின் 'பெரும்பாலான முஸ்லீம்களுக்குப் போட்டிருக்கிறேன், உலகமக்களெல்லோருக்கும் அறிவித்திருக்கிறேன்' அறிவிப்பெல்லாம் எனக்கு அநாவசியமும் அராஜகமுமாகவே தோன்றுகின்றது. செய்யாத தவறுக்கு ஒருவன் ஆயிரம்பேர் தவறு தவறு என்று அடிநுனியைப் பகுத்துப் பார்க்காமலே குற்றம் சாட்டுகின்றார்களென்பதற்காகமட்டும் மன்னிப்பினைக் கேட்கமுடியாது. அவ்வாறு கேட்பதுதான் அக்குற்றத்தை அவன் இழைத்தான் என்பதுபோல ஆக்கிக்காட்டும். அதைவிட்டுவிட்டு வேறெங்கோ வந்த புண்ணுக்காக இங்கே நெறியை மற்றவர்களுக்கும் கிளப்பிக்கொண்டிருப்பதைக் குறைந்தபட்சம் மற்றவர்களாவது புரியாமலே குற்றம் சாட்டமுன்னால், உணரக்கூடாதா?

Just don't pick on me only because you want to pick on me and your glasses are tinted.

எடுக்க அகப்பட்ட படம்

மஞ்சள் வெயில் மாலையிலே
க்ளீவ்லாண்ட், ஒஹாயோ

Friday, October 14, 2011

காகங்கள்

காகங்கள்

காகங்களை நான் உன்னிப்பாகக் கவனிப்பதுண்டு. காகங்கள் என்று நான் சொல்லும்போது, நீங்கள், பசித்தவுடன் பறந்தும் சிறகு களைத்தவுடன், மரம் கண்ட இடங்களிலே உட்கார்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின்னர், மீண்டும் இரைக்காகப் பறக்கும் சனிபகவானின் கண்பார்வைக்கு உட்பட்ட எல்லாவற்றையும் எண்ணிக்கொள்ளவேண்டும். காகங்களை ஏன் அத்துணை உன்னிப்பாகக் கவனிக்கும் ஆவல் எனக்கு ஏற்பட்டதென்றும்கூட உங்களிலே ஒரு சிலர் புருவத்தினை உயர்த்தக்கூடும். காகங்களை நான் முதன்முதலிலே கூர்ந்து அவதானிக்க முனைந்தது, என்னை நானே நுழைந்து பார்க்க முயன்ற அன்றைக்குத்தான்.

இதன் காரணமாகத்தான், மனிதன் பறவைகளைப் பார்த்து விமானத்தினை அமைக்கமுயன்றான் என்று அந்தக்காலத்திலே எண்ணிக்கொள்வேன். இங்கே, அந்தக்காலம் என்பது, நான் திரைப்படப்பாடல்களிலே இந்தக்கருத்தைக் கேட்ட காலமோ, டாவின்சியின் ஓவியங்களைப் பற்றிப் பள்ளிக்கூடத்திலே படித்த காலமோ அல்ல. அவை எனக்கு, வெறுமனே செவிக்கான பாடலும் பரீட்சைப்புள்ளிக்கான பாடமும் என்றளவுக்குமட்டுமேதான். இங்கே நான் சொல்ல வருகின்றது, அதற்குப்பின்னால் -அதற்கு வெகுகாலத்துக்கும் பின்னால்- எனது கடவுட்சீட்டிலே இன்னொரு நாட்டு உத்தரவுமுத்திரையின் எச்சிலிட்ட மை காய்ந்துகொண்டிருந்த மதியப்பொழுது ஒன்றை. இன்னோர் எச்சில் என்று சொன்னதற்காக நாங்கள் எவருமே எச்சிலிட்டுக்கொண்டிருக்கும்போது, அருவருப்பு அடைவதில்லை; முத்தங்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள் நாங்கள். காகங்கள்கூட மற்றக்காகங்களின் எச்சில்களுக்காக வெட்கப்பட்டுக்கொள்கின்றதில்லை; உரொட்டித்துண்டு முக்கியமா, அல்லது எச்சில் ஒட்டிக்கொள்ளாதது முக்கியமா என்று விவாதித்து முடிவுக்கு வரும் விடயமல்ல இ·து என்பது காகங்களுக்கு மிகநன்றாகத் தெரியும்; விவாதிக்கமுயல்கின்றவர்கள் (விவாதித்தும்கூட முடிவுக்கு வராதவர்கள்), உண்மையான காகங்கள் இல்லை என்பது காகங்களின் மாற்றமுடியாத அபிப்பிராயம். இதனால், விவாதிக்கும் கலை, தம் சொந்தப்பிறப்பிலேயே காகங்களாக உருவெடுக்காதவர்களைக் கண்டு கலையெடுத்துக் கொள்ளத் தாம் பயன்படுத்தும் ஓர் உபாயம் என்று ஓர் உண்மையான காகம் எனக்கு ஒருமுறை தனிப்பட, வெறுப்பு உமிழச் சொல்லியிருக்கின்றது. அதற்கு, நான் காகவியலைக் கவனிப்பின்மூலம் கற்றுக்கொண்டிருக்கின்றேன் என்பது மிகத்தெளிவாகத் தெரியும். தமது தொழிலின் நெளிவுசுழிவுகளை மாற்று உயிரினம் ஒன்று கற்றுத்தெளிவதை மானுடர்கள்போலவே காகங்களும்கூட விரும்புவதில்லை. கூடுவிட்டுக்கூடு பாய்ந்தோ, மான் வடிவிலே மயங்கிப்புணர்வதோ மட்டும்தான் மானிடரின் மாயக்கலை என்று எண்ணிக்கொள்ளும் மந்தகாசமான உலகு காகங்களினது. அதனால், அவை வெறுப்புமிழத்தான் செய்யும் என்று எனக்குத் தெரியும். ஆனால், வெறுப்பைக் கண்டு ஒதுங்கிக்கொண்டால், தொழிற்கல்வி என்னவாகின்றது? அழுக்குமூட்டையைச் சுமந்தாற்றான் வெளுக்கமுடிகின்றது; அழுக்குநீரை வடித்தாற்றான், துலக்கமுடின்றது. இப்படியாக, எதிலும், எவருக்காவது ஏதோ பயன் இருந்துதான் ஆகின்றது என்று எண்னிக்கொண்டு, சில பிறப்புக்காக்கைக்கள், அகத்திலே வெறுப்புநெருப்பைக் கனலக் கனலக் காலிக் கக்கவும், விடாப்பிடியாக காகத்துவத்தினைக் கற்றுக்கொண்டிருந்தேன் நான்.

காகங்களைப் பற்றிப் பல விடயங்கள், மிகவும் வெளிப்படையானவையும் அடித்துத் தீர்மானமாகச் சொல்லிவிடப்படக்கூடியவையுமாகும். இரையை எங்கே தேடும், தேடுவதற்கு என்றைக்கு எந்த உத்தியைக் கையாளும், எந்தத்திசையில் எத்தனை காகங்கள் ஓர் ஒற்றைக்கூட்டத்தை உணவு பற்றும் வியூகமாக்கிப் பறக்கும் என்பதெல்லாம் எனக்கு அத்துப்படி; இவற்றையெல்லாம். இத்தனை வருடக் கல்வியின் தரவுகளைக் கொண்டு ஏரணத்தின் அடிப்படையிலே கண்டு என் நாட்குறிப்பிலே பதிந்துவைத்திருக்கின்றேன்.

ஆனால், சில விடயங்கள் குழப்பத்துக்குரியன; ஒருமுடிவுக்கு வரமுடியாதன; பறந்து கொண்டிருக்கையிலே, அறுந்த காத்தாடியன்று, பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதுபோல, அங்கும் இங்கும் அனுமானிக்கமுடியாத ஒயிலாட்டம் ஆடுகின்றவை; உதாரணமாக, காகங்கள் இரைக்காகப் பறக்கின்றனவா, அல்லது பறக்கின்ற சுகத்திற்காக, இரையை, ஓர் எய்-இலக்காக எண்ணிக் குறிக்கின்றனவா என்பது இத்தனை கால எனது கவனிப்பின்பிறகும் அத்துணை வெளிச்சப்படாத மூலையிடுக்கு இருள். வெறுப்பை உமிழாத காகங்களும் இருக்கின்றன எனபதைச் சொன்னேனா? அவற்றினைத் தேடிக் கண்டு கொள்கின்றவை மிகக் கடினமேயழிய, ஆங்காங்கு அப்படியும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்றை என் ஆராய்ச்சியின் உச்சத்து ஆயாசக்கட்ட நாளொன்றின் மதியப்பொழுதிலே, எதேச்சையாக ஒரு பட்ட மொட்டை மரத்திலே, தனியே கண்டுகொள்ள நேர்ந்தது. நீங்கள் எண்ணுவது உண்மை; அப்படிப்பட்ட ஒற்றை இலக்கத்துக் காகவுயிரிகள், தனிப்படவே ஒதுக்கப்பட்டு வாழ்வது வழக்கமாம். எனது கேள்வியை ஏதோ ஒரு பெரிய வேள்வி அவிர்ப்பாகமாய், மெல்ல மெல்ல முணுமுணுத்தபடி அதன் முன் வைத்தேன். காகங்கள் பெருமூச்சு விடுக்கூடியவை என்பதைக் கூடக் கற்றுக்கொள்ளமுடிந்தது. தலையைச் சாய்த்தபடி, ஓரக்கண்ணால், ஒரு செத்தபுழுவினை அலகு சொட்டிச் சிதிலப்படுத்திக்கொண்டிருந்து. சத்தம்போடாமல், ஒற்றைச்செயலிலே ஒருங்கே கருத்தூன்றிச் சித்தம் செலுத்தியிருப்பதோர் சித்துவித்தை என்று அர்த்தப்படுமானால், அக்காகம் ஒரு புறச்சுத்தம் செத்ததோர், உட்புனிதயோகி. ஆரம்பத்திலே, அவ்வசிரத்தைத்தோரணை காகத்தின் ஒரு மெத்தத்தனத்தின் மீயுந்தற்பரவுகை என்றே எனக்குப் பட்டது. திட்டிகொண்டு திரும்பி, வெயிலுக்கு நேராக நடக்கத்தொடங்கியபோது, அ·தென்னை அழைத்தது.

அதன்பிறகு, சில நேரம், நானும் அதுவும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இருப்பையும் பறப்பையும் இரைப்பையும் இரைப்பையையும் இரையையும் இறையையும் பற்றி கரையிலே வந்தடிக்கும் ஆற்றடைசல்போல அலைந்தலைந்து நோக்கின்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அதனால், மேலே குறிப்பிட்ட காக்கையுடனான எனது உரையாடலைச் சொல்லும்முகமாக, அந்தக்காக்கையை, "அக்காக்கை" என்று இனிமேல் குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.

சொற்சந்தங்கள்போலவே, இருப்பும் பறப்பும் இரைப்பையும் இரைப்பும் இரையும் இறையும் தம்முள் மிகவும் நெருங்கியனவாகவும் ஓரிரு நாக்கொட்டல்களிலேயே ஒத்தமை பிறழ்ந்தனவாகவும் உள்ளதென்று ஒருமுறை அது சொல்லிற்று. ஆரம்பத்திலே, பறப்பின் தூரத்தை முன்வைத்து, நானும் அதுவும் இரைக்கும் இருப்புக்குமான முக்கியத்துவத்தினை விவாதித்துகொண்டோம். (காகங்கள் தமக்குப் பெயரிட்டுக்கொள்கின்றவை இல்லை; மூன்று காகங்கள், ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் பட்சத்திலே, அருகிலிருக்கும் காகம் "கா" என்றும், அதற்கடுத்த காகம், "காகா" என்று சொல்லிக்கொள்ளப்படும், அந்தக்காகங்கள் அடுத்த கணத்திலே ஒரு சிறுவனின் கல்லெறிக்குப் பயந்து, கிளையிலே இடம்மாறிக்கொள்ளும் கணத்திலே, "கா" எனப்பட்ட காகம், "காகா" எனவும், மற்றது, "கா" எனவும் அழைக்கப்படலாம் என்பது எனது ஆராய்ச்சியின் ஆரம்பகாலத்திலேயே அறியவந்திருந்தது. இதிலிருந்து எனக்கு இரண்டு விடயங்கள் தெளிவாகியிருந்தன. ஒன்று, காகங்கள், அருகருகே இல்லாத பட்சத்திலே, அடுத்ததன் இருப்பையும் இல்லாமையையும் பற்றி ஏதும் குறைவாகவோ நிறைவாகவோ பேசிக்கொள்வதில்லை. இரண்டாவது, எப்போதும் நிகழ்காலத்தை மட்டுமே பேசிக்கொள்கின்றன என்கின்றதால், தம் இருப்பிற்கான ஏற்பாடுகளை மட்டுமே பேசிக்கொள்கின்றன. கல்லெறிந்த சிறுவன் யார் என்பதைக் கவனிப்பதிலும் விட, கல்லெறிந்தபின்னர், குந்துவதற்கான தமது இருப்பிடங்கள் எவ்வாறு இடம்பெயர்ந்துவிட்டன என்பதை உணர்ந்து கொள்வதிலும்விட, இந்தக்கணத்திலே கல்லெறியப்படுகின்றதா என்பதும், இரைக்கான இசைக்கச்சேரிகளுமே எண்ணத்திலே இருத்தி வைக்கப்படுகின்றன.)

பறப்புக்கும் இருப்புக்குமான தூரம் பற்றி எனக்கும் அக்காக்கைக்கும் இடையிலே நடந்த கதையாடலைச் சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா? என்னைப் பொறுத்தமட்டிலே, பறப்பு என்பது இளைப்பும் இயலாமையும் ஏற்படாமல் நடந்து கடந்துமுடிக்கக்கூடிய தூரத்துக்கு அப்பாலே செல்வதற்காக, சிறகுகளை அடித்துக் கொள்ளும் செயல். அக்காக்கையோ, பறப்பும் நடப்பும் ஒரே காரியத்தினை செய்து முடிப்பதற்கான வெவ்வேறு செயலூடகங்கள் என்றதொரு கருத்தினை முன்னுக்கு வைத்தது. அதாவது, அதன் சிந்தைப்பிரகாரம், ஒரு காக்கைக்குத் தத்திச் சென்று இரை கவ்வும் செயல்முடிப்பது இலகுவானால், இன்னொன்றுக்கு இறகெத்தி, இறங்கி, கொத்திக்கொண்டோடுவது சுலபமாகின்றது. இதிலே, எத்துணை இலகுவாக இரையைக் கௌவிக்கொள்கின்றதுதான் முக்கியமேயழிய, வேறொன்றும் அர்த்தமாவதில்லை என்றது. அதாவது, “இரைதான் அந்தக்கணத்துக்கான இறை" என்பது அக்காக்கையின் முத்தாய்ப்பு.

எனது வாதம் எந்த மனிதரும் எதிர்பார்க்கக்கூடியதுபோலவே, "இதைச் செய்ய இது; அதைச் செய்ய அது" என்ற போக்கிலே, தத்தும்தூரத்தைக் கடக்கப் பறக்க அவசியமில்லை என்றும், பறந்துபோய் புதிய தேடல்களுக்குத் தன்னை உள்ளாக்கிக் கடினப்படுத்திக்கொள்கின்றதிலும், பழக்கப்பட்ட சூழலிலேயே, புதிதான தேடலுக்குப் பக்குவப்படுத்தும் முறைமைகளை ஆய்ந்து தேர்த்தல் வேண்டும் என்ற தொனியிலும் இருந்தன. அக்காக்கை சிரித்தது; அந்த நேரத்திலும் கால் கொத்திய புழுவைக் கிளை நழுவவிடவில்லை.

"இருப்பிடத்துக்காக நீயா, அல்லது, இருப்பிடம் உனக்காகவா?"

நேரடியாகப் பதிலேதும் சொல்லாமல், "காகங்களின் உலகு, இரையைச் சுற்றி உலகிலே நகரும் ஒரு வட்டத்தட்டுப்போலும்" என்று கிண்டல் குரல் தெறிக்க, நழுவினேன்.

"இருப்பிலிருந்து வேர்பற்றிப் பிறந்தது இருப்பிடம்; இருப்பு என்பதுவோ இன்றைப் பொறுத்தது; இந்நியதி, காகத்துக்கு வேறு, மானுடர்க்கு வேறல்லவே?" -காகங்களுக்கும் கிண்டல் தொனிக்க வார்த்தை துளிர்க்கத் தெரிகின்றது. பதில்கூறித்தான் ஆகவேண்டும்; காகங்களைவிட மேலானோன் மனிதன்.

"இருப்பிடம் உயிரிகட்காகவே என்பதுகூட, காகத்துக்கும் மனிதனுக்கும் வேறில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மையே; இதனை உணர்ந்துகொண்டவர்கள் ஒருசிலர்தான் என்று எண்ணிக்கொள்வது அறியாமை," -'எல்லோரும்', 'ஒருசிலர்' என்கின்ற பதங்களிலே அழுத்தம் படியக்கூறினேன்.

அக்காக்கை அவ்வழுத்தத்தைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை; "அப்படியானால், எந்த இடமும் வாழ்வசதிகூடினால், தேவைப்படின், எந்த உயிரியினதும் இருப்பிடமாகக் கூடும்; அதிலே, பறப்பினைச் சிறகடிக்கும் பரப்பின் விளிம்பினை வைத்து வரையறுப்பது முட்டாற்றனம்."

நான் பதில் கூற எத்தனித்தேன். அ·து என் குரலை எழமுன் அழுத்தித் தொடர்ந்தது.

"இரைக்காகப் பறத்தல் எந்த வகையிலே கேவலமான செயலாகும்? இரையைக் குறியாக வைக்காத ஒருத்தனைக் கூறு; அதனையட்டி, கேவலத்தை நீயும் நானும் நிர்ணயிப்போம்."

இந்த இடத்திலே இத்தனை கால ஆராய்ச்சிகளின்பின்னால், என்னையும் ஒரு காகமாக நான் உணர்ந்து கொள்ளத்தொடங்கியிருந்த கற்பிதம், தோல் சிதம்பிச் சிதம்பி உதிர்ந்து போகத்தொடங்கியது - கிட்டத்தட்ட, ஒரு பழைய வீட்டின் சுவரிலே படிந்து வேரேறிப் பரவி, வீட்டின் ஒரு கட்டுமான அங்கம்போல ஆகிக்கொண்டிருந்த, காட்டுச் செடியின் ஓரேறியைப் பற்றி, கீழேயிழுத்துச் சொடுக்கிச்சொடுக்கி உரித்து விழுத்தும் உயரிய தொழில்நுட்பம், அதன் சொற்களுக்குட் தொக்கி, கொக்கி நின்றது.

காகத்தின் கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லையா, அல்லது எத்துணை தன்னை மற்றதாக மாற்றிக்கொள்ளமுயன்றாலும் காகமும் மனிதனும் தத்தமளவிலே தமக்கென மட்டுமே நியாயப்படுத்தக்கூடிய நியதிக்கோட்பாடுகளினால் வகுக்கப்பட்ட வெவ்வேறு உணர்வுச்சிந்தை உடைத்த உயிரிகளா, நியதி என்பது ஒன்றுக்கு மேற்பட்டதும் முரண்பட்டதும் அதேசமயத்தில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றுகொன்று கொண்டிருப்பவை அல்லாதவையுமா என்பது போல குழப்பங்கள் ஒவ்வொன்றாக - நீர் நிலைத்துத் தூங்கிய குளத்திலிட்ட ஒற்றைக்கூழாங்கல் எழுப்பிப் பரப்பும் ஒரு தொகுதிச்சலனவட்டங்கள்போல- எனக்குள் அகன்று, கரைதேடி அலைந்து கொண்டிருந்தன.

ஒன்றுமட்டும் தெளிவாகப் புரிந்தது. கற்றுக்கொண்டு ஒன்றை வேறொன்றாக மாற்றிக் கொள்ளுதல் என்பதும் இயற்கையிலேயே ஒன்றாக இருத்தல் என்பதும் முற்றிலும் வெவ்வேறான விடயங்கள்.

அண்டங்காக்கையாக உருமாறியதாகக் காட்டிக்கொள்வதிலும், எண்ணுகின்றதையும் செய்கின்றதையும் ஒத்தோடவைக்கமுடியாத, எய்கையிற் தோற்ற மனிதனாக வாழ்கின்றதிலேகூட ஏதோ துளி உண்மையும் சொட்டு வெற்றியும் இருக்கின்றதாகத் தெரிந்தன.

"போய்வருகின்றேன்" என்று அக்காக்கையிடம் சொன்னேன்; குரல் மதித்து, என் கூற்றுக்குப் பதில் அது சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை; அந்தப்பொழுதிலே, அதற்கு நான் ஒரு கடந்த காலத்தின் "கா" அரிசிக்காக்கை; முற்கணம் அழிக்கப்பட்ட புதுக்கரும்பலகை அதன் இக்கணப்புத்தி; அதிலே ஒரு செத்த மண்புழுவின், சிதிலச்சதைமட்டும் "வாவா" என்றரற்றிச் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கலாம்.

அன்றையிலிருந்து காகங்களைப் பற்றி உன்னித்துக் குறிப்பெழுதிக் கற்றுக்கொள்வதை விட்டுவிட்டேன். ஆனாலும், பொழுதுபோக்காக, போகின்றபோக்கிலே பொதுப்படையாகக் கவனிப்பதை விட்டுவிடமுடியவில்லை. இருப்பதிலே பற்றும் இல்லாதவற்றை அறிந்துகொள்ளும் உளக்குறுகுறுப்பும் இருப்பவனே பிறப்பிலேயே மனிதன் ஆவான் என்பது அனுபவம்.

'00, ஓகஸ்ட் 25

தோண்டிக்கொண்டிருக்கின்றபோதே நோண்டிக்கொண்டிருக்கிற தொழிலாகி...

அவரவர் தொழில்கள்

ஆடுவது நான்;
சலங்கையைக் கட்டிக்கொள்வேன்;
காலை விடு.

ஊதுவது நான்;
சங்கைத் தூக்கிக்கொள்வேன்;
கையை எடு.

தோண்டி மருதாணி
தோய்த்துப் பூச ஆசையில்லை;
காயக் கைப் பொறுதி இல்லை.
அரைத்து அள்ளிய சாயம் அனைத்தும்
உனக்கே; விரியக் கை பதுக்கிக்கொள்.

இனி என்ன செய்வதென்று என்னைக் கேளாதே.
திருப்பு உன் முகத்தை; கண்டாயா, கதவும் தெருவும்?
முதுகு குறுக்கிப் போ; மெல்ல முனகாதே உனக்குள்.
வெளிப் பார்ப்பாய்: - விரிந்திருக்கும் விண்;
நட நெடுக்கே; தந்திக்கம்பம் கண்டால் தரி கணம்.
கால் தூக்கிச் சர் என்றடி சலம்; பட்டமரம் ஒன்றுதான்
சுனைப்பட்டுத் திரும்பச் சுர்ரென்று பேசாதென்றறி.

சிறுபிள்ளைத்தமிழ் சொன்னால்,
உன் பருத்த தலைக்குள்ளும் முளை
சுரக்கும் என்றாயா, சொன்னேன்.

புரிந்ததுக்குப் பெருநன்றி.

இனி, உன்னித் திரும்பாதே;
ஓயாமல் நிழல் தொடர நட;
இன்னும் இருக்குமாம் வழி
எண்ணில்லாத் தந்திமரம்.

அடுத்த முறை சக மனுஷனாய் வா;
அமர்ந்திருந்து கதைப்போம் ஆறி.

'05 மார்ச் 15, 18:33 கிநிநே.

~~~~~

தளையுறாததும் தலைப்புறாததும் X

ஒவ்வொரு குள்ள வௌவால் மனிதனுக்கும்
வழிசொல்லிப்போகிற நவகாலம்
கௌவிக்கொண்ட தென் காலை.
நகராது நிலம். நசிக்கும் பாதம்.

அவி இணையச் சந்தெங்கிருந்தும்
வெப்பேற்றி விரிந்தலையும் வெறி அந்து,
யானை நினைவும் நாகக்கண்ணும்
தேளின் கொடுக்கும் நண்டின் நடையுமென.

கேள்வி கன நுங்குக்குலையாக்கிச்
சீவிச் சீவிக் கொட்டு மென் சிறுதலை.
தோல் அரித்து அரிந்து உரித்துக்
கொடுக்கச் நொடிப்பி கழியத் தின்று
வீசும் திரள்குலைக் கேள்வித்தொடர்.

அலை விந்துவால் வினாக்கெல்லாம்
விடை சொல்லிக் கழியுமென் விநாடி.

june 5, 2004

~~~~~

சமீபத்திற் படுத்தியவை

விற்பவன் கண்களை வெறுமனே வைத்துக்கொண்டு
பிடித்ததென்றும் பிடிக்காததென்றும்
காய் பிரிப்பதும் வெகுசுலபம்.

விற்பவன் கைகளை விடாமற் பிடித்துக்கொண்டு
பிடித்ததைப் பிரித்துக்காட்டென்று
வலி புழிவதும் வெகுசுலபம்.

விற்பவன் வாயை வேர்நிமிண்டிக் கிண்டி
பிரித்ததைப் பகுத்திரென்று
மயிர் பிளப்பதும் வெகுசுலபம்.

எங்கும் நுள்ளிக்கொண்டவன் வெல்கிறான்.
நுள்ளலுக்கும் மேலாம்,
பிரிப்பதும் புழிவதும் பிளப்பதும்.

விதிவிலக்கின்றி
விற்பவர் வெளியில் வழியில்
விக்கித்திருக்கும் காலம்,
அகாலம்.

~19 May 2004 Wed. 21:06 CST

~~~~~

வளர்ச்சி

முடிந்த கொண்டைக்குள் ஊரும் ஈராக, கிழமைக்கு
கழியும் அஞ்சலுக்குள் ஒன்றேனும் கண்டன அஞ்சல்.

முறைப்பாட்டுக்கடிதங்கள் மட்டும் முன்பல் முளைத்துத்
தாளிற் தழைக்கின்ற காலமாம் இது.

இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைந்தார் உடைந்த பல் பேரிலொன்று
இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைத்தார் உடைத்ததன் பேரிலொன்று
இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைந்தார் உடைந்த பல் பேரிலொன்றான
கண்டனம் பேரில் சிங்கப்பல் உடைத்தார் உடைத்துப் புடைத்த கைபேரிலொன்று.

இலக்கியம் பேரில் ஏதோமடத்தாரை எழுத்தடித்ததன் பேரிலொன்று
இலக்கியம் பேரில் எழுந்த மடத்தாரை எடுத்தடித்தவர் பேரிலொன்று
இலக்கியம் பேரில் மடத்தார் எதிர்த்ததை இழுத்துப் பகைத்தார் பேரில்
தடித்தவர் அடித்தவர் அவரைப் படித்தவர் விறைத்தததின் பேரிலொன்று.

எண்ணொணாக் கவலை என்னோடு இருந்தாலும்
இலக்கியக்கவலையன்று இறந்தது காண் இன்று.

வருந்தமிழ் எப்படி வரண்டாலும், பரம்பும் பார், பையப் பைய
கடித இலக்கியச்சுரையேனும் தமிழ்க் காய்ந்து.

~10, ஜூலை '03 02:30 மநிநே.

~~~~~

மதிப்பீட்டைக் கேட்டுப்பெறுதல் பற்றிய மதிப்பீடு


எதையும் தவறாகச் சொன்னதாய் ஞாபகமில்லை;
"மாடுதான் என்றாலும் நான் வண்டில் மாடில்லை"
என்று மட்டும் மேய்வழியிற் சொன்னதாய்,
சின்ன நிழலாட்டம் உள்ளே.

நிரைக்களத்தில் வயல்மாட்டைப் பற்றி
வரி பத்துச் சொல்லக் கேட்டார் போலும்;
"மாடுகள் பற்றிய என் மதிப்பீடுகள்,
திரைப்பட விளம்பரங்கள் அல்ல
காணும் தெருமூலைக்கெங்கும்
சாறி, சாணிச்சுதை சேர்க்க"
என்றிருப்பேனாக்கும்; வேறில்லை.
இதிற்கூட, கேட்டவர் மூலத்தில்
ஆழக் கெளுத்தி செருகியதாய்
எனக்கேதும் தோற்றமில்லை.

உன்னைப்போல், அவனைப்போல்
நானும் உணர்கொம்புள்ள மாடுதான்.
விலகிப்போகாது வேண்டுமென்றிடித்தால்
வேறென்ன செய்ய?

முட்டிய தெருவில், முதுகில், முனை
இலேசாய் இடறக் குத்துதல் தவிர
வேறேதும் புரியவில்லை; வேறேதும் தெரியவில்லை.

இனியாவது தெரிந்துகொள்; உன்னைப்போல்
இவ்வூரில் எந்தத் தெரு மாட்டுக்கும்
உண்டு ஏதேனும் உட்கருத்து.
ஆனாலும், மாட்டுக்கு மாடு
வால் தூக்கி மாறாது மூத்திரமணம்.

01, ஜனவரி 2003, புதன் 23:35


~~~~~

வழுப்படு தலைப்பிலி - VI

காவற்காரர்கள் தெருக்குதிரைகளிலே போவதைக் கண்டேன்;
குளத்திலே படகிலே முதலை தேடிக்கொண்டிருந்தார்கள்;
வானத்திலே பறவைக்கு வலைகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆமாம், நான் கண்டேன்தான்.

திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.

காவற்காரர்கள் கடந்துபோனார்கள்.
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
திருடர்களுக்குத் திருவோடு பிடிப்போரைத் தேட
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
காவலின் கூறு கவனமும் காதும்
கூறெனக்கேட்பதும் கூற்றுவனாகுமோ?
அலைகின்ற நாய்களில் வெறியெது அறியாது.

"திருடர்கள் திரியலாம் திகம்பரர் உருவிலே
திருடர்கள் புரியலாம் தெரிந்தவர் வடிவிலே
திருடர்கள் உறையலாம் தீங்கிலார் மனையிலே"
-திரும்பத் திரும்பச் சொன்னார்கள் காவலர்.

திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.

திருடரும் காவலரும் ஒருமித்த ஜாதி.
வருவார் புரிவார் அகல்வார்
ஆனால், அறியார் எனைப்போல் அரைவௌவால் ஜாதி
திருடர்கள் உருவாய் காவலர் கண்ணில்
காவலர் நாயாய் திருடிகள் முன்னில்
எனக்கென இருப்பது ஏதுமில்லை வடிவு
எனக்கென இருக்கலாது கருத்து.....

"நீ திருடர்கள் தெருவா? காவலர் பிரிவா? எது??"
எனக் கேட்டால், மனை எதுவெனச் சொல்வேன்??
இடையினமேதும் இருக்கலாகாதென்றால்,
இரு வல்லினம் நடுவே மிதிபடு மெல்லினப்புல் நான்.

30, ஒக்ரோபர், '01 23:59 மநிநே

~~~~~

கிளிப்போர்வீரன்

காலைத்தூக்கத்தின் கடைசியிலே
தனிக்கிளிப்போர்வீரன் கழிசுற்றி
வழிபோகக் கண்டேன் நான்;
அகல விழி கொண்டேன் பின் விரைந்து.

மெல்லாமலே மிரட்டுஞ்சொற்களை,
கூவித்தின்றும் கூட்டித்துப்பியும்
குறுக்கும் நெடுக்கும்
கொண்டுபோனான்;
கொட்டிக் கொட்டிக்
குதறிக்கொண்டும்கூட.

தனக்கு வெந்ததையே மீளமீள வெக்கைப்படுத்திப்போனான்;
சொல் மாளச் சொல் மாள, பையெடுத்துச்
சொன்னதையே வன்கதியிற் சுற்றிப்போனான்.

இல்லாத கேள்விகளுக்கும் இந்தா பதிலென்று
எடுத்தெறிந்தான் இங்குமங்கும்.
எதற்கு இதுவென்றால், அதற்குமோர்
அந்தரத்தே தான் தங்கும் அசிங்கப்பதில் தந்தான்.

வந்ததுவும் போனதும் தன்னடைக்கே தெளிவு என்றான்;
என்னதுவும் உன்னதுவும் எல்லாமே பொய்யென்றான்.
கண்ணைத் திறந்தால் கூர்க்காற்கைகொண்டு பொத்தினான்;
நான் நிலவைக் காணத்தானே தான்
கண்ணைக் கொண்டு பறத்தலென்றான்.

தத்தித்திரிந்தான் முன்னுக்கும் பின்னுக்கும்;
முடுக்கத்தில் முக்கிக் கழித்தான் சொட்டெச்சம்;
முரமுரவென்று மூக்குள் மூச்சோடு முனகினான்.

எந்த வினைக்கும் எதிர்ப்பட்டாரைக் குறை சொன்னான்;
தன் வினைக்கு முன்வினையைத் தானே முன்வைத்தான்.
கழுத்தைச் சுழித்தான்; சரித்தான்; வட்டக்கண்ணைப் படபடத்தான்;
அடர்ந்த அலகைமட்டும் அவதியிலே கொறிக்க வைத்தான்.

இறக்கை தறித்த கிளிப்போர்வீரன் தத்தலுக்கு,
ஏட்டுச்சுவடியினை இழுத்துக் கதை சொல்வதற்கு,
என்னத்தைப் பதிலாக இங்கே எழுதிவைக்க?

"அவதி அலகை மூடிக்கொள்; அறுந்த சிறகை முளைக்கச்சொல்;
விரைந்து பறக்கக்கல்; வெளியை மிதிக்கச்செல்.
கொறித்துக் கொறித்துக் குறை கொட்டித் திரிதலுக்கு,
கொவ்வை ஒன்றை ஒழுங்காய் எடுத்துருட்டி,
உண்டலகு மென்று தின்று மூடிக்கொள் நா"
என்றால் கேட்குமா இறகறுந்த அலகுக்கிளி?

தனிக்கிளிப்போர்வீரனின் போர்வையெல்லாம்
கேட்டலும் கிழித்தலும் பிதற்றலும் பீய்ச்சலுந்தான்.

"கழிசுழற்றும் கிளியெல்லாம்
கிண்ணிக்களி கண்டால்,
தண்ணீர்சுனை கண்டால்
என்ன செய்யும்?
என்னைப்போல்,
தின்னுமா, குளிக்குமா,
தினவெடுத்துத் திரியுமா?
என்ன சொல்வாய்?"
என்று கேட்டேன்.

பதிலொன்றும் சொல்லாமல்
காலைத்தூக்கத்தின் தனிக்கிளிப்போர்வீரன்
கழிசுற்றி கடந்துவழிபோகக் கண்டேன் நான்;
அசரும் விழி மூடிக்கொண்டேன்.
மோனத்தில் என்னைமட்டும்
மோகித்து மொத்தமாயொரு
வட்ட முடிச்சிட்டிருந்தேன்
மிச்சவிடிநேரத்துக்கு.


'01, ஜூன் 22, வெள்ளி 20:05 மநிநே.

~~~~~

அம்பறாத்தூணியுடன் அலைதல்

வாழ்க்கைக்கு
வேட்டுவப்பிழைப்பில்லையென்றாலும்,
அங்குமிங்கும் அம்பறாத்தூணியுடன்
அலைந்துகொண்டிருத்தல்
ஆகவேண்டியதாயிற்று.


கீச்சிட்ட குருவிகள் எக்கிக்
கக்கிப் பீச்சிட்ட துளியெச்சம்.

உள்ளங்காற்சருகுக்குள்
அருகுதடவி நகரும் அவதிச்சாரை.

சுண்டுவிரற்றுண்டு வெண்தேங்காய்ச்சொட்டுக்குக்
கிளை தொங்கித் தலைதாக்கும் இளமந்தி.

கடக்குமொரு பாட்டையின் உதைத்து நகரும் ஓயாப்புரவி.

குறியிட்ட பார்வைச் சுனைத்தலை மட்டும்
விரித்த பின்முதுகே ஒளிர்த்து முனைப்படுத்தி
ஒளிந்துலவும் மரத்தறை இருள் நிழல்.


இவற்றிடையே கால்மிதி வசப்படும்
சச்சரவுக்குறி சொல்
நாத்தடித்த பல்லியிரண்டைப்
பல்குத்திச்சிராயுச்சிப் புட்டு நடந்தாலும்
வெற்றுவெருட்டலுக்கேனும்,
வீண்வேடிக்கையாய்
அம்பறாத்தூணியுடன்
அலைந்தாகவேண்டியதாயிற்று.

June 07, 2001 Thurs 4:54 CST

~~~~~
இவை பற்றி ஏழு கருத்துகள்

1. இவை பற்றி ஏழு கருத்துகள் எனக்குண்டு.
2. இவை பற்றி ஏழு கருத்துகள் உனக்குண்டு.
3. இவை பற்றிச் சொல்லாத கருத்திரண்டும் இவற்றுள் அடக்கம்.
4. இவை பற்றி ஒளிந்து, இன்னும் கிடைக்கலாம் கருத்திரண்டு.
5. என் ஏழு கருத்துகளும் என் சொந்தக்கருத்துகள் என்பதற்கில்லை.
6. உன் ஏழு கருத்துகளும் உன் சொந்தக்கருத்துகள் என்பதற்கில்லை.
7. எதைப் பற்றியும் ஏழு கருத்துகள் எவர்க்குமுண்டு
- சொல்லாத இரண்டு, ஒளியும் இரண்டு, சொந்தமில்லாதவை என்றும் உள்ளடங்க, அடங்காதிருக்க.

'07 ஏப்ரல் 27, வெள்ளி 13:40 கிநிநே
=====

Thursday, October 06, 2011

இதுவும் கடந்துபோம்..


தொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....

Thursday, September 15, 2011

தேசியம்/சாதியம்/ ஈயுமியம்

எல்லாத்தமிழ்த்தேசியர்களுக்காவும் நான் பேசமுடியாதென்பதை முற்சொல்லிக்கொண்டு: தமிழ்த்தேசியமென்பது, தமிழென்ற அடையாளத்தைவைத்து ஒடுக்கும் அதைவிடப்பெரிதான இந்திய, சிங்களத்தேசியங்களை எதிர்கொள்வது என்பதாக |மட்டுமே| காண்பதும் செயற்படுவதும் அவலத்துக்குரியதும் கண்டிப்புக்குரியதுமாகும். அதனுள்ளான சாதிசார்ந்த அடையாளங்களைக் களைவதும் ஒடுக்குமுறையை எதிர்ப்பதிலும் தன்னைவிடச் சிறிதான மொழி/இனஞ்சார் அடையாளங்களை ஒடுக்காமலிருப்பதிலும் அங்கீகரிப்பதிலும் வகிபாகம் கொண்டுள்ளது. இத்தகுவுளநிலையில்லாதபொழுதிலே தமிழ்த்தேசியமோ எத்தேசியமோ வெற்றிகொள்ளமுடியாது; சொல்லப்போனால், தன்னை நியாயப்படுத்தும் காரணங்களையும் அவற்றுக்கான ஏரணங்களையும் இழந்துபோகின்றது; பிரித்தானியாவிலே பாக்கி என்று மொத்தமாகத் திட்டிப்புடைக்கப்படும்போது, நான் தமிழனென்றோ, இந்தியனென்றோகூட அடையாளப்படுத்தி விலகுவது அர்த்தமற்றது. எத்தேசியமோ இனவிடுதலையோ மனித உரிமையின் அடிப்படையிலேயே அதனை ஒடுக்குவோருக்குச் சமனாகக் கொள்ளும் தேவையின்பாற்பட்டோ எழவேண்டுமேயொழிய 'நான் இன்னார்' என்று தானொடுக்க எழக்கூடாது. சாதி ஒடுக்குமுறையை எதிர்க்காத தமிழ்த்தேசியம் வெற்றிபெறவாய்ப்பேயில்லை. அதேநேரத்திலே, தமிழ்த்தேசியத்தைத் திட்டமிட்டே சாதியமே என்று சாத்தியப்படுத்த நேர்கோட்டை வட்டமென மீளமீளச் சொல்வதாலே மட்டும் நிறுவத்துடிக்கும் வல்லுநர்களின் மறைகாரணங்களையும் நோக்குகளையும் சுட்டிக்காட்டுவதும் அவசியமானதாகிறது.



/இன்று தமிழ்நாட்டில் கோலோச்சும் தொலைக்காட்சி ’சேனல்’ எதுவும் பிராமணர்களின் வசம் இல்லை. அவர்கள் அவற்றின் ஆசிரியப் பொறுப்பிலும்கூட இல்லை. எனவே இந்த ஊடகத் தீண்டாமைக்கு அவர்களை யாரும் குற்றம் சொல்ல முடியாது. அச்சு ஊடகத்தை எடுத்துக்கொண்டால் நிலைமை இன்னும் மோசம்...இந்து நாளேடு மட்டும்தான். இதுகுறித்து அதுவொரு தலையங்கத்தை வெளியிட்டிருக்கிறது.அதற்காக இந்து நாளேட்டின் ஆசிரியருக்கு நாம் நன்றி சொல்வோம்/

http://nirappirikai.blogspot.com/2011/09/blog-post.html?spref=tw

என்று பாதிப்பொய்யை முன்வைக்கும், பெரியாரைக் காலச்சுவட்டிலே கிழித்தெறிந்த ரவிக்குமாரினைப் பஞ்சமருக்கெதிரான ஒடுக்குமுறைக்கெதிராக மட்டும் குரல் கொடுக்கிறார் என்பதற்காகமட்டும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ்த்தேசியம் என்பதிலே நம்பிக்கையுள்ள நிலையிலே இங்கே அவரை நான் இக்கூற்றுகளுக்காகக் கண்டிக்கிறேன்; இதைக்கூட, தமிழ்த்தேசியர்கள் சாதியத்தை ஏற்றுக்கொண்டார்களெனத் திசைதிருப்பவேண்டாம்.



தொல். திருமாவளவன் குறித்து, அருள் எழில் ஒரு குறிப்பிட்டிருந்தார்:

http://www.facebook.com/note.php?note_id=287206397963453

/...இன்றைக்கு திருமாவளவன் தலித்தே என்றாலும் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதையும்../

தமிழ்நாட்டிலே திருமாவளவன், தலித் என்பதற்காகவேமட்டுமே தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டாரா என்றெனக்குத் தெரியாது; கடைசியாக செங்கொடியின் இறுதிச்சடங்குகளின்போது, இதர தமிழ்த்தேசியர்களுடனேயே இருந்ததை -இணையமூடு- கண்டேன்; பேசியதைக் கேட்டேன். (சீமான் தேவர்களைக் கொண்டாடுவதும் நெடுமாறன் சாதிமான்களைக் கொண்டாடுவதும் நிகழ்கின்றதென்கிறார்கள்; உண்மையானால், கண்டித்தே ஆகவேண்டிய நிலைப்பாடுகள் அவை) ஆனால், 2009 இலே ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதமிருந்த திருமாவளவன், அன்னை சோனியா அடிப்பொடியாகி, கருணாநிதிக்கு ரவிக்குமார் சகிதம் கைகட்டி நின்று, 2010 இலே அண்ணல் ராஜபக்சேயினைச் சென்று கூழைச்சிரிப்புடன் சந்தித்துவந்து, 2011 இலே சென்னையிலே ஸ்ரீலங்கா தூதரகம் முன்றலிலே ஸ்ரீலங்கா அரசினைக் கொல்லரசென்று ஆர்ப்பாட்டம் நடத்தும்போது, அவரை எங்கே தமிழ்த்தேசியர்கள் நிலையான இடம்கொடுத்து வைப்பதென்பதை அவரின் ஆதரவாளர்களே சொல்லட்டும். இவை எல்லாவற்றினையும் தமிழ்த்தேசியர்களின் சாதியமென்று திசைதிருப்பமுடியாது.



இதே சுழிப்புத்தான் இலங்கையிலும் சிறிலங்கா அரசுசார்தமிழ்க்குழுக்களாலே உலகம்பூராகத் திட்டமிடப்பட்டு நிறுத்தப்படுவது; சாதிப்பிரச்சனையை முன்வைப்பது தமிழ்த்தேசியர்களே என்றவகையிலே. சாதி என்ற அமைப்புநிலையிலே ஒடுக்கப்படுவது, எவ்வகையிலும் கண்டிக்கப்படவேண்டியது; இதைத் தமிழ்த்தேசியர்கள் செய்தால் அது கண்டிக்கப்படவேண்டியதுதான்; ஆனால், தமிழ்த்தேசிய அமைப்புகளேதான் இதைச் செய்வதாக ஆதாரமின்றியும் திசைதிருப்பும் நோக்கிலும் நிறுத்துவதுமட்டுமே மற்றவர்களின் நோக்கமென்றால், அஃது எவருக்கும் அச்சப்படாமலும் அடங்காமலும் எதிர்க்கப்படவேண்டியதாகும். அதேநேரத்திலே தமிழ்த்தேசியத்துள்ளே சாதியமென்பதற்கான இடம் அறவேயில்லை என்பதைத் தமிழ்த்தேசியர்களென்று தம்மைத்தாமே அடையாளப்படுத்துகின்றவர்கள் வெளிப்படையாக, ஆணித்தரமாக, தெளிவாக அறிவித்துக்கொள்வது மிக மிக அவசியம்.