Wednesday, May 31, 2006

அள்ளல் - 5

ஸ்ரீரங்கன் மீண்டும் பதிவிட்டிருப்பதால், அலைஞனின் அலைகள் மீளப் பதிவு கொள்கிறது.



வாலில்லாக் குரங்குக்குக் கவிதை எழுதக் கற்றுத்தருவதில்
அவர்களுக்கு ஒன்றும் அதிகச் சிரமம் இல்லை;
முதலில் அவர்கள் குரங்கை நாற்காலியோடு பிணைத்தார்கள்
பின் பென்சிலை அதன் கையைச் சுற்றிக் கட்டினார்கள்
(காகிதம் ஏற்கனவே ஆணியடித்து மாட்டப்பட்டிருந்தது)
அதன்பின் டாக்டர் ப்ரூபியர் அதன் தோளோடு சாய்ந்து நின்று
காதுகளில் குசுகுசுத்தார்:
"ஒரு கடவுள்போல் அமர்ந்திருக்கிறாய்.
ஏன் நீ ஏதேனும் எழுத முயலக்கூடாது?""

ஜேம்ஸ் தற்றே
தமிழில்: பசுவய்யா எ. சுந்தரராமசாமி
காலச்சுவடு, இதழ் 30, ஜூலை-ஆகஸ்ட் 2000

Tuesday, May 30, 2006

இடைநிறுத்தம்

ஸ்ரீரங்கன் தன்மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதுகாரணமாகப் பதிவு இடமுடியாதிருக்கின்றதென்பதாகச் சொல்லி தன் பதிவினை நிறுத்தியிருக்கின்றார். அவரின் கருத்துச்சுதந்திரத்திற்கும் உயிருக்கும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் இடரினையும் தடையினையும் கண்டித்து அவருக்குத் தார்மீக ஆதரவு காட்டுமுகமாக ஸ்ரீரங்கனுக்கு மீண்டும் பதிவு எழுதத்தொடங்கும் களமும் காலமும் உளநிலையும் ஏற்பட்டுப் பதிவேறும்வரை அலைஞனின் அலைகள் பதிவுகள் எழுதப்படா.

-/பெயரிலி. இது தவிர சொந்தமாக வேறேதும் பதிவு எழுதிக்கொண்டிருக்கவோ, தொடங்கவோ மாட்டான் என்பதையும் இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

விழியிலே கூட்டுப்பதிவிலிடும் படங்கள் மட்டும் தொடரும்.

"I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it."
Quoting Voltaire for the umpteenth time.

Monday, May 29, 2006

தொடுப்பு - 5

<= விழியிலே விழுந்தது =>














குவியம் - 28

சொல்வதெளிது; தெளிந்து சொல்லல் மிகவரிது

புலம்பெயர்நாட்டிலே கால்விரல் பாவியபொழுதிலே புலி ஆதரவாளர்களாகவும் (புலம்பெயர்ஈழப்போராளிகளென்று வாசிக்கவும்) சர்வகாலசர்வதேச மனித உரிமைக்காவலர்களாகவும் (புலி எதிர்ப்பாளர்கள் என வாசிக்கவும்) உருவாகின நிறையப் பேரைக் கண்டாகிவிட்டது. அதேநேரத்திலே, ஊரிலே பெரும் போராடிக் களைத்து ஒதுங்கிப் புலம்பெயர்ந்து ஓசையின்றி வாழும் நண்பர்களையும் காண்கிறோம். இரண்டாம்வகை நண்பர்கள் எனக்கு வாழ்விலே நிதானத்தினையும் நெறிப்பாட்டினையும் கற்றுத் தருகின்றனர். அவர்களிடமிருந்து எப்போதாவது ஊசித்துளையூடாகப் பீய்ச்சியடித்துப்போகும் சாம்பல்பூத்தணல் தெறி பழம்பொறி முதலாம்வகையினர் குறித்து வெட்கம் கொள்ளவைக்கின்றது. இவ்வெட்கம் காரணமாகி, ஈழநிலை குறித்து எதுவுமே அண்மையிலே உணர்வோடு பதிய முடிவதில்லை. சொல்வதைச் சொல்லும் சுழிக்குள்ளே ஆழ்வதும் ஆட்போர்புரிவதுமே முடிவாகிப்போகிறது; ஒரு விடலைப்பையனின் சுயதிருப்திமட்டுமே படுக்கைக்கு மிச்சமாகிறது. இவ்வயதுக்கு அஃது அநாவசியம்.

இப்பதிவு, ப. வி. ஸ்ரீரங்கன் குறித்தது. அவருக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தல் கொடுத்திருப்பதாகச் சுட்டியிருக்கின்றார். "ஸ்ரீரங்கனின் மனைவிக்கும் மக்களுக்கும் எவ்விதமாக ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை" என்பதை மட்டுமே சொல்லத் தெரிகின்றது. அவர் குறித்துச் சொன்ன விபரங்கள் மட்டுமே தெரிந்த நிலையிலே, நடைமுறைக்கு நம்பமுடியாதபோதுங்கூட (அவர் உருப்பெருத்த பயமும் தவறான புரிதலும் நிகழ்ந்த எதையேனும் குறித்துக் கொண்டிருக்கின்றாரோ என்று தோன்றினாலுங்கூட) நிதர்சனம் போன்ற அரைவேக்காட்டுத்தனமான செய்தித்தளங்களிலே வரும் செய்தித்தன்மையையொட்டிக் கண்டவற்றிலிருந்து, நம்பாமலுமிருக்க விருப்பமில்லை. தலையுணராது வாலாடும் நிலை இருக்குமானால், அது தலை செல்லும் திசைக்கே பங்கஞ்செய்துவிடும். நிதர்சனத்தின் முட்டாற்றனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான ஆனந்தசங்கரி குறித்த செய்திகளும் கேலியொட்டுப்படங்களும் மனிதவுரிமைக்கண்காணிப்பியின் பக்கங்சார் கோணலறிக்கைக்குப் பலம் தருவதாகப் போய்விட்ட அவலத்தினைக் காண்கிறோம்.

அதனால், ஸ்ரீரங்கனுக்கு மெய்யாகவே அச்சுறுத்தல் விடப்பட்டிருப்பின், அவரின் ஈழதேசிய அரசியல் குறித்த பார்வையோடு பெரிதும் முரண்பட்டிருந்தபோதுங்கூட, அவருக்கான அச்சுறுத்தலை - இணையத்திலே எங்கோ இருக்கை அசையாமலிருந்து கொண்டு தட்டும் என் எதிர்ப்பு எதனைப் பண்ணிவிடக்கூடுமென்ற நிலையிலுங்கூட- வன்மையாகவும் உரப்பாகவும் கண்டிக்கிறேன். அந்நிலையிலே, அவரின் இருப்பினை அவர் வாழும் நாட்டின் அரசு உறுதி செய்யும் என்பது மிகவும் வெளிப்படையானதென்றபோதுங்கூட, தமிழ்மக்கள் சமூகமும் அவருக்குத் தன் பக்கபலத்தினை உரத்து அறிவிக்கவேண்டுமெனத் தோன்றுகிறது. தமிழ்மக்களுக்கான போராளிகளென்று தம்மை அடையாளம் காட்டும் விடுதலைப்புலிகளும் மிகவும் தெளிவாக இது குறித்து விளக்கத்தினைத் தரவேண்டும்; அவர்களின் ஆதரவாளர்களின் செயற்பாடுதானெனில், அது குறித்து மிகவும் காத்திரமான நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்காலத்திலே அப்படியேதும் அவருக்கு ஊறு அவர்கள் சார்ந்தோரினாலே நடக்காதவாறு கண்டுகொள்ளவும் வேண்டும். அல்லாமலிருப்பது, புலிகளுக்கோ ஈழவிடுதலைக்கோ எதுவிதமான நன்மையினையும் புரியக்கூடிய நிலைமையல்ல. அப்படியான விளக்கத்தின் பின்னால், ஸ்ரீரங்கன் தனது கருத்தினை -அஃது எதுவாகவிருப்பினுங்கூட - தெளிவாகச் சுட்டும் நிலை ஏற்பட வேண்டும். குறிப்பாக, இஃது அவரினது தவறான புரிந்துணர்வின் வெளிப்பாடெனில், அவர் அதை வெளிப்படையாகச் சொல்லும் பாங்குள்ளவரென்பதை நான் அவரைத் தொடர்ந்து வாசித்து வருகின்றவனென்ற அளவிலே எண்ணுகிறேன்.

அதுவரை அவர் பகிரங்கமாக எழுதாதவிடத்தும், அவரின் பாதுகாப்பினை உறுதிசெய்யுமுகமாக, நண்பர்களோடும் பாதுகாப்புத்தரக்கூடியவர்களோடும் தொடர்புகளைத் தனிப்படப்பேணுவாரென நம்புகிறேன்.

Sunday, May 21, 2006

பழசு - 3

ஊர் (குறை)

* ஒன்பதாண்டுகளுக்கு முன்னால், அரைகுறையாக எழுதியது. திருத்தம் தேவை. (இன்னும் விழைவு நிமிண்டிக்கொண்டிருப்பதன் விளைவாக) இப்போது எழுதியிருந்தால், அமைப்பிலிருந்து நடைவரை நிறைய மாற்றங்களைச் செய்வேன். பார்ப்போம்.

மெலிந்த, சற்றுக் கூனிய உடல்; (பின் மழைக்கால வயல் நாற்று-'அங்கொன்று இங்கொன்று'- தலையை அழுத்திக் கிடக்கும் மயிர் அமுக்கி இரப்பர் வளையம் ஓட்டும்) ஐம்பதாம் ஆண்டுகளின் மூக்குக்கண்ணாடியின் கீழ் உள்ளே எங்கோ கிடந்தும் காண்பதெல்லாம் குத்திக் கிளறும் கண்கள், "செல்லத்தம்பி வாத்தி மாதிரி நோட்டம்போடுதுகள்' என்று 'வயசு போனதுகள்' தம் மூன்றாம் தலைமுறையினைப் பாராட்டும்/வையும் அளவிற்கு; பழைய வெள்ளை 'நஷனல்' சட்டை பக்கவாட்டுப் பைகள் இரண்டும் நுழைக்கும் இடங்களில் மார்க்கண்டேயத்தன மூக்குப்பொடிக் கரைக் கறையுடன்; 'ஷெல்லடி,ரவுண்ட் அப், கனடாவிலே இருந்து மகன் அனுப்பிய படங்கள், அரச வைத்தியசாலை வியாழக்கிழமை 'சீனி வருத்தக் கிளினிக்', அம்மாளாச்சியின் திருவிழாக்கதை' தவிர்ந்தும் நேரம் மிஞ்சிய தருணங்களில், அருள்மிகு துர்க்கையம்மன் கோவில் வீதி எழுந்தருளு 'பெஞ்சனியர்'களின் (அல்லது 'மடையர்சங்கம்', இளந்தலைமுறையின் சமானப் பெயரிடல்) பேச்சுக்குச் சுவை கூட்டும் சூடான சங்கதி ஒன்று இருக்கவேண்டுமானால், இந்தளவு நாட்டுப்பிரச்சனையுள்ளும் எங்கே மாஸ்டர் பொடி வாங்குகிறார் என்பதுதான்.

வேட்டிக் கரை, மாஸ்டருக்கு வெறும் கறுப்பு வெள்ளையாக இருக்கவேண்டும். "தங்கக் கரை வேட்டி அநியாய ஆடம்பரம்; காந்தியினைப் பாருங்கள், மிக எளிமையாக வாழ்ந்துபோன மகான்" என்பார், எங்களின் 1972ம் ஆண்டு நான்காம் வகுப்பு தமிழ்ப்பாட வகுப்பில்; அம்மாவின் அப்பா, அப்போது சிரித்து வைத்தார், "பிறகேன் செல்லத்தம்பியான் பத்துச் சத வட்டிக்குக் குடுக்கிறான்? வேட்டிக்கரையில வெள்ளை பிடிக்கிறவன், வெள்ளை சுத்திப் பிடிக்கிற காலத்திற்கு, சித்திரகுப்தன் கணக்கிலை வைக்கிறதெல்லாம் வேண்டாத கறுப்புக் கறை."

மூன்றாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி எடுக்கும் வரையும் வகுப்பு நேரசூசி ஆண்டு முதற் தவணை முதலாம் நாள் தந்தவுடன், நானோ நண்பர்களோ பார்த்து வைப்பது, தமிழ்ப்பாடத்திற்கும் சைவத்திற்கும் மாஸ்டரா, ரீச்சரா என்பதே. ராசையா ரீச்சர் அல்லது ஒளவையார் எனப்படும் பூமணி ஆசிரியை என்றால்,தேவாரம் பாடமாக்காவிட்டால், கைகளின் பின் மொழியில் 'வ்`உட் ரூலருடன்' (foot ruler) அடி அளந்து போய்விடும். மிஞ்சினால், அடுத்தநாள் வில்லூன்றி முருகன் கோவிற் காலைப்பூசையில், மூலஸ்தானப்பூசையில் இருந்து வசந்தமண்டபப் பூசைக்கு ஒரு காற் செவ்வகத்தூரம் நடக்கும் போது, 'கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகத்திற்கும்' 'குன்றுருக வேல் வாங்கி நிற்கும் முகத்திற்கும்' இடையில், அம்மம்மாவிடம், ' இஞ்சை பார் நாகம், சுகுணனுக்கு வரவர படிப்பில நாட்டம் குறைஞ்சுபோகுது' என்பதுடனும் அன்றைய இரவு இடியப்பத்துடன் கடிதென வந்த கரியை உள்ளே நான் உரித்து ஊட்டி வைக்கவேண்டிய வேலையுடனும் முடிந்துபோகும். 'கொல்லுத்தம்பி' என்றால் 'வலு வில்லங்கம்.' சீமான் என் தேவாரப்பிழைகளை வைத்தே பிழைப்பு ஓட்டிவிடுவார். தேவாரம் முதற்பிழைக்கு ஒரு நவீனவில்லன் முறுவலுடன் தொடங்கி கடைசியில் முடிக்கையில், 'மணந்தால் மகாதேவி இல்லை மரணதேவி' வீரப்பா கணக்கில் அட்டகாசம் பண்ணி (சிரித்து என்பது சின்னத்தனமான சொல் அந்தச்செய்கைக்கு என்பதாய் எனதும் இன்னோரன்ன சிரிக்கத்தெரிந்த சீவராசிகளினதும் பெரிய அபிப்பிராயம்), 'ஏ/எல் ஆட்ஸ்' வகுப்பில் களவு ஒழுக்கம் கற்பித்து இரவுக்குறிக்குள் தான் தூங்கிப் போய்க்கொண்டிருக்கும் நமசிவாயத்தாரை உலுக்கி மடலேற்றிவிடுவார்; நமசிவாயம் வாத்திக்கு செல்லத்தம்பியான் 'வேண்டுமெண்டே' தன் நித்திரையைக் குழப்பவே சிரிச்சு வைக்கிறான் என்று காலகாலமாக 'உள்ளுக்குள்ளை' ஒரு 'சாதுவான கறள்' இருந்தது என்பது அவர் யுத்தகாண்டத்தில் கம்பனுடன் சேர்த்து மாஸ்டரையும் வம்புக்கிழுக்கையில் எல்லோருக்கும் படுவெளிச்சமாய்த் தெரியும். ஒரு நக்கலாய் சொல்லுவாராம், "அண்டைக்கு இராமன் கொல்லாம விட்டிட்டுப்போன சில இராவணன்டை வழியில வந்ததுகள் இண்டைக்கும் இந்த கோணேசர் பூமியில் தமிழும் சைவமும் நாந்தான் வளர்க்கிறன் எண்டு சொல்லி நாட்டியம் போட்டுத் திரியுதுகள்."

இங்கே நான் முன்னமே சொல்லியிருக்க வேண்டியது என்னவெனில், ஊரில் உள்ள ஐந்து சிவன் கோவில்கள், நாலு அம்மன்/அம்மாள்/அம்மாள்ளாச்சி கோவில்கள், ஒரு விஷ்ணு கோவில், புரட்டாதிச் சனிகள் மட்டும் புகைமண்டலம் தள்ளும் சனீச்சுவரர், மூன்றரைப் பிள்ளையார் கோவில்கள் (ஒன்று கோபுர உச்சியில் அரசு மென் குடையாய் முளைத்ததால் சிதிலமாகியும், அரசு நன் கொடை இல்லாமல் அப்படியே கிடக்கிறது; மூசிகர்கள் மட்டும் அளவுக்கு மீறி பிள்ளையாருக்குப் பேரின்பம் அளித்து அலைவது கண்டிருக்கிறேன்; பக்த(நூற்றிலொரு)கோடிகள், பொருள்வளம் உள்ள கோவில்களே அருள்வளம் கூடியதாகவும் கருத்தில் அருள்கொண்டு உணர்ந்து, மேலும் புதுப்புது விழாக்கள் கண்டெடுத்து மேலும் அக்கோவில்களின் வருமானம் பெருக்குவது என் ஊர் வழக்கம்; இல்லாத கோவில்கள் இல்லை என்று போவதும் சரியான விதத்தில் முதலாளித்துவமும் ஆகவே ஜனநாயகமும் சரியான திசையில் என் ஊரிற் போய்க்கொண்டிருந்ததைத் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கிறன.

பிச்சைக்காரக்கோவில் ஐயர்கள் கனவு காணாமலே தூங்கிக்கொண்டு (ஒருவர் INXS ஹக்ட்லேன் கணக்காக கயிற்றிலும்) இருக்கையில், 'chicken soup' கதைகள், நெப்போலியன் ஹில், எம். எஸ். உதயமூர்த்தி அறியாமலே, இரண்டாண்டுகளுக்கு முன்னரே, அருள்மிகு***** ஆலய ஐயர்+தர்மகர்த்தாவிற்கு, என் ஊரில் திடீரென இளம் தமிழ் மங்கையர், 'திருமாங்கல்யம்' அடையாமல் இருப்பதற்கு தன் அன்னையின் அருள் அற்றதே காரணம் என்று மூளை மூலைக்குள் ஒரு குட்டிக்கரணத்துடன் தெரிய வந்தது; அந்த அருள், மாதந்தோறும் பௌர்ணமியில் குறைந்தபட்சம் ஓர் ஐம்பது ரூபாப் பூசையுடன் தவணைமுறையிற் கிடைக்கும் என்பதையும் அறியத் தந்திருந்தார். இன்றைக்கு, ஊரில் பெரிய பதிப்பகம் அந்த அருளின் பக்கவிளைவு என்று நண்பன் ஒருவன் சொல்லியிருந்தான்; கூடவே, கோவிற்கூட்டத்தில் 'முன்னம் அவன் நாமம் கேட்டு, பின் மூர்த்தி அவன் உள்ள வண்ணம் கண்டு' ஏற்பட்ட அருளுடன், சில சங்கத்தமிழ் 'உடன் செல்லல்களும்' நிகழ்ந்ததையும் அவன் மறுக்கவில்லை; ஆக, அம்மன்கோவில் ஐயா/ர் செய்வது பலனுள்ளது என்றும், டென் ஷியாவோ பிங்கின் 'எந்த நிறப்பூனையானால் என்ன? எலியைப் பிடித்தாற் சரி" என்றும் தனது புரட்சிகரத் தத்துவத்தின் மேல்வைக்கப்பட்ட என் சுயவிமர்சனங்களை உள்வாங்கிப் பதிலளித்திருந்தான்; இதனை அவன் அருகே இருந்து மேற்கூறிய மூர்த்தியினைக் கண்ட அவனின் இணைவி ஆமோதித்தாள் (இருவரும் சரி சமன் என்பதால், துணைவி என்பதிலும் சரியான பதம் தோழர் என்று விளக்கம் தந்திருந்தான்; தோழர் அம்மன் உற்சவம் பார்க்கச்சென்றது ஏன் என்று நான் கேட்கவில்லை; சிலவேளை, நீண்ட பயணத்தில், எப்போதாவது, மாவோ ஷேதுங் 'மாந்தோ' சாப்பிடமுன் சொல்லி வைத்திருக்கலாம்; ஆதலால், புரட்சிகரத்தின் மறுமலர்ச்சிக்குள் அதுவும் அடங்கியிருக்கலாம்). ஆனால், அருள்மிகு****** அர்ச்சகரின் மகள் மகிஷாசுரஹதமர்த்தனி (ஒரு முறை, ஒரே ஒரு முறை, சதாவின் 'கூப்பன்' கடையில் வைத்துச் சகோதரிபோலச் சிரித்து வைத்ததிற்குக் கிடைத்த பதிலே, இந்தப்பெயர் இடுபெயர் அல்ல, காரணப்பெயர் என்பதினை மிகத் தெளிவாக எனக்குச் சொன்னதென்பதை இவ்விடத்திற் சொல்லாமல் விட்டேன் எனில், உங்களின் நம்பிக்கைக்கு நான் உகந்தவன் அல்லன் ஆகிவிடுவேன்) மகேஸ்வரியின் அருளை எதிர்பார்க்காமல் திருநெல்வேலி இராமநாதன் சங்கீதக்கல்லூரியில் ஆரோ 'எளிய'தின் கிருதியிற் கிறுகி, இப்போது பிடிலும் பிருகாவுமாய்ப் போய்விட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்றும் அதற்கு அன்னையின் அருள் பெறாதது மட்டுமே காரணம் என்றும் அம்மா சொன்னார்; இருக்கலாம்.

கணக்கற்ற முருகன் கோவில்கள் அனைத்துக்கும் செல்லத்தம்பி மாஸ்டரே ஊஞ்சல், பதிகம் யாத்துக் கொடுத்திருந்தார்; தவிர திருவெம்பா முதல் நாளில் மாஸ்ரரை 'ஏலோரெம்பாவாய்' படிக்க வைக்க சகல் கோவில்களும் தங்களுள் அடிபிடி நடத்துவதும் வழக்கம்; இதற்கு காரணம், கறள் மிகுந்த குரலாக இருக்காது என்று, சட்ஜம், பஞ்சமம், சங்கீதம் சுலோச்சனா ரீச்சர், ரவிப்ரியாவின் "அண்ணா வீட்டில் இல்லை" (எனக்குத் தெரியாதா, என்ன? இருந்தென்ன இல்லாமல் என்ன? எல்லாம் கடந்தகாலம்; எங்கிருந்தாலும் வாழ்க) அறியாத அந்த நாளிலேயே எனக்குத் தெரிந்திருந்தாலும் கடைசி ஒற்றை செத்துப்போன சந்திரமோகனின் 'திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் கொலை' மர்மத்துடன் புரியாத, மனம் சுரண்டிக்கொண்டிருந்த மர்மங்களில் இதுவும் ஒன்று. கடைசியில் ஏ/எல் வகுப்பில் ஒன்றாய்ப் படித்த 'வில்லூண்டி முருகன்' சந்திரசேகர(சர்மாவி)ன் தயவுடன் புரிந்தது; மாஸ்டரின் குரல் 'லவுட் ஸ்பீக்கர்' இல்லாமலே கடல் கடந்து மூதூர், கட்டைபறிச்சான், வெருகல் தூர இருக்கும் கிராமத்து மக்களினையும் குளிருக்குள் 'அலுப்புக் குடுத்து உசுப்பி' திருவெம்பா வந்து விட்டது அல்லது மாஸ்டர் அறுக்கத்தொடங்கிவிட்டார் என்று எழுப்பி விடும் என்றும் ஊருக்குள்ளும் எல்லோரும் அந்தக்கோவிலில் இந்த முறை கூட விசேஷம் என்று வருவார்கள் என்றும். (சில கட்டைபறிச்சான் இளம்தலைமுறை, கிராமத்து விதானையார் ஊடாக, அரசாங்க அதிபருக்கு, "உழைக்கும் விவசாயமக்களின் தூக்கத்திற்கு இந்த 'பெற்றி பூர்ஸுவா' குழப்பம் விளைவிக்கிறார் என்று, 70 முற்பகுதி கூத்த(ட்ட)ணி அரசாங்கத்தில், பொதுவுடமைக்கட்சிகள் உள்ளதென தைரியத்தில் 'பெட்டிசன்' கொடுத்ததாயும், அமைச்சர் என். எம். பெரேரா, அதில் பிரஸ்னேவின், ரஷ்ய டூமாவின் கருத்து தெரிந்தபின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிவிடத்தாயும் தெரிந்தது; சில தோழர்கள், இன்னும் காத்திருப்பதாயும் சனநாயகப் பொதுவுடமைக்கட்சித் தோழர் ஒருவர் போன மார்கழித் திருவெம்பா 'பிட்டுக்கு மண்சுமத்தல்' திருவிழாவில் சொக்கநாதர் திருவுருவத்தினை வசந்த மண்டபத்தில் இறக்கி வைத்து விட்டு வந்த களைப்புடனே எனக்குக் கூறியிருந்தார்; அதன் பிறகு ஏது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை; தோழர் புரட்சி செய்ய ரொரண்டோ வந்து, தொழிற்சாலை ஒன்றில் சாக்குத் தைப்பதாகவும் நான்காம் உலகம் அமைய ரொட்ஷ்கியின் பாதையுடன் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டதகவும் தெரிகிறது). இந்த மாஸ்டரின் பாடல் மர்மம் நீங்கினாலும் பெரிதாக அந்தக் காரணத்தில் நம்பிக்கை இல்லை. (திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ராஜாவைக் கொன்றது யாரென்று இன்னும் தெரியவில்லை; ஆயினும், அதற்குப் பிறகு உண்மையில் ஆயிரம் கொலை பார்த்துவிட்டேன் பத்திரிகையிலும் நேரிலும்;யாரோ புண்ணியவான் கதை முடிவதற்காக அல்லது கதை நகர்வதற்காகக் கொன்றான் என்று வைத்துக் கொண்டேன்; நீங்களும் கொள்ளுங்களே; விடுங்கள்). ஊஞ்சல் பதிகம் என்றில்லை; ஊரில் ஆர் செத்தாலும், மக்கள் புலம்பல், மருமக்கள் புலம்பல், பேரக்குழந்தைகள் புலம்பல், உற்றார் புலம்பல், ஊர்ச்சனங்கள் புலம்பல் என்று பதிகம், சதகம், இந்தக் கண்ணி, அந்தக்கண்ணி என்று அந்தக்கணம் வாய்க்கு வந்ததெல்லாம் வரியில் வடித்து வைத்துவிடுவார் (இப்போது புரியும், நீங்கள் இப்போது படும் கஷ்டத்திற்கு மூலம் எங்கே உள்ளதென்று; எய்தவன் இருக்க, என்னை நோவானேன்?).

நான் அறிந்து ஒரு முறைதான் சிக்கலில் மாட்டிக்கொண்டார்; 'குடிகார' ராசனின் பாட்டனார் செத்தபோது, 'பொன்னும் பொருளும் பூவெனப் பொலிந்து பேரரைப் பூமியில் பூரிக்க வைத்தாய்' என்று இயம்பியது ஐந்நூறு பிரதி அடித்து முடித்தபின்னரே ராசன் வாசிக்க நேர்ந்து,'டேய் பொய்சொல்லித்தம்பி, கண்டியோடா வாத்தி, கிழடன் பொன்னும் பூவும் பொலிஞ்சதை..கிழவன் அரைப்பட்டினி காற்பட்டினி எண்டு இளந்தாரிக்கலத்தில இருந்து கஷ்டப்பட்டுச் செத்துக்கிடக்கு; நீ புழுகிறாய் கூனல் வாத்தி; உன்ரை புழுகை, கோயில் வழிய, வட்டிக்கு வாறவங்களிட்ட காட்டு, இஞ்சை என்ரை வீட்டில காட்டாதை. மாஸ்டராம், ம*ர்க்கதை பேசுறான் மொட்டைக் கிழடன்' என்று சதய நட்சத்திரம் ஒன்றில் மாஸ்டர் 'சதக்' ஆகி அவருக்கே சதகம் பாடுதல் ஆகு நிலை கண்டு, அதன் பின், 'அப்புக்காத்து' 'கொத்துரொட்டி' சிவநாதன் முன்னுக்கு 'இத்தால் அறியத்தரப்படுவது....இரங்கற்பாவிற்கு எழுதக்கேட்டவர் ஆகிய நானே பொறுப்பு..' என்றெல்லாம் உறவினரை எழுதவைத்து வாங்கி விட்டே இரங்கற்பாவிற்கு இறங்கும் அளவிற்கு எச்சரிக்கையாகி விட்டார்.

'97 நவம்பர்

அள்ளல் - 4




முதலில்
கெட்ட கனவொன்றில்
மரண ஓலம் கேட்டது
பிறகு வானொலிச்செய்தி
பிறகு ஒரு செய்தித்தாள்;
ஆறு பேர்
சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்
இருபத்தைந்து வீடுகள்
தரைமட்டமாக்கப்பட்டிருந்தன
ஒரு தேவாலயத்தில்
கைகள் பின்புறம்
கட்டப்பட்ட நிலையில்
பதினாறு பேர்
தலைவெட்டப்பட்டிருந்தனர்
நாட்கள் நொருங்கி நகர்ந்தன
வென்றவர்களது தொகையும்
வீழ்ந்தவர்களது தொகையும்
கூடிக்கொண்டே வர
தடித்த என் தோலுக்குள்
நான் இறுகிக்கொண்டிருந்தேன்
நைந்துபோன என்
மனிதநேயத்தை இழக்கும்வரை
இன்னமும் தம் பெற்றோரது
வருகைக்காக
எரியும் குடிசைகளுள் காத்திருக்கும்
குழந்தைகளைப் பற்றி
யோசிப்பதைக் கைவிட்டேன்.


கடந்து சென்ற குளிர்காலங்களில்
கணப்புகள் அருகே இருந்தபடி
தம் பாட்டியிடம் கேட்ட கதைகளை
மரணத்தின்போது
அவர்கள் நினைவுகூர்ந்தார்களா,
எழுத்துகளின் மாயத்தை
கற்றிருந்தார்களா அவர்கள்,
நான் தெரிந்துகொள்ள
விரும்பவில்லை.

கர்ப்பத்தின் சுமை கூடிய
பெண்களின்,
மெல்லிய உடல்கள்
அறுவடையின்போது
கதிர்களைப் போல
வெட்டிச் சாய்க்கப்பட்டபோது,
தம் கணவர்களுக்காகக்
காத்திருந்த அவ்வேளையில்
அவர்கள் சூந்தலில்
காட்டு மலர்களைச்
சூடியிருந்தார்களா,
நான் தெரிந்து கொள்ள
விரும்பவில்லை.

அவர்களோடு சேர்ந்து என்
உண்மையை எரித்தேன்
சங்கடம் தரும்
என் மானுடத் தன்மையையும்
அவர்களோடு புதைத்தேன்
நெடுநாள் கழித்து
முணுமுணுக்கத்தான் செய்தேன்
"எதற்கும் எல்லை உண்டு"
பிறகு வந்த நாள்கள்
கொலையாளிகளை
மன்னித்து விடுவித்தபோதும்
எதுவுமே நடவாதது போலத்தான்
இருக்கிறேன்

தமிழில்: அசதா
Indian Literature (205)
இதழ் 41, மே-ஜூன் 2002


-ராபின் எஸ். காங்கோம்
அதற்குமேல் ஒன்றும் இல்லை
காலச்சுவடு மொழிபெயர்ப்புக்கவிதைகள் (1994-2003)
தொகுப்பாசிரியர்: எம்.எஸ்
காலச்சுவடு பதிப்பகம்
நவம்பர், 2003
144 பக்கங்கள்

Friday, May 19, 2006

தொடுப்பு - 4

<= விழியிலே விழுந்தது =>

பகட்டு
Show off



பனியிரவு
Winter Night



வண்ணமத்தபூச்சு
bEtterfiles



உயிர்நிழல்
Still Life



கட்டித்தனம்
Bulkiness



நெடுவல்
Standing Tall



உடைமை
Property



எங்கெங்கும்
Everywhere



Thursday, May 18, 2006

தொடுப்பு - 3

<= விழியிலே விழுந்தது =>

ஊஞ்சல்
Swing



விளக்கு
Lamp



வடிகால்
Outlet



துளிரும் தூங்கும் இரவு



பகலவன்துதி
Sunworshippers



சீர்குலைவு
Lawlessness




Wednesday, May 17, 2006

தொடுப்பு - 2

<= விழியிலே விழுந்தது =>

ஒரு வீடு, ஒரு மரம், ஒரு வண்டி
Triangle



நகர எல்லை
City Limits



குறுவட்டு
Minidisc



Wednesday, May 10, 2006

குவியம் - 27

Climax
Britney's orgasmic climax
Blaine's oopsgasmic anticlimax

What changed in the tiny red cells?

CWould the sprinkled strains
from the dirty auto that
got blasted on my home
tell me?
Or cwould
the forgotten bunch of five
banana under the noon sun?

Tell me,
what got changed in those tiny red cell counts!


'06 May 10, Wed. 13:36 EST
Photo Courtesy: Yahoo!News

தொடுப்பு - 1

<=மூன்றாவது கண் =>

கதிரவனாட்டம்
Sun(set) Dance






























கண்ணாடிக்கும் பிளாத்திக்குக்கும் இடையே
Between Glass & Plastic


உயிர்ப்போடு
Alive

Tuesday, May 09, 2006

துளிர் - 54


Peace Parade
மீண்டு(ம்) வாத்து ;-)




'06 மே 06 மாலை

வேக்ப்லீட்
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.

Saturday, May 06, 2006

துளிர் - 53


Spring Leaves Arrive

Light Sight, Side & Site


Dark Sight, Side & Site



'06 மே 06 மாலை


வேக்ப்லீட்
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.

Thursday, May 04, 2006

கணம் - 483


'06 ஏப்ரல் 29 சனி மாலை

கவலைப்படாதீர்கள்; மிக இலகு.

விதைகளை நாட்டவேண்டாம்;
விடிகாலை நீர் ஊற்றவேண்டாம்;
உரங்களைச் சேர்க்க வேண்டாம்;
மரங்களைக் காக்கவேண்டாம்;
பழங்களை,
......................பார்க்கவே வேண்டாம்.

பொடிநடையில், கடையிற் கிடைக்கிறது
பொதிபடுரசப்பொடி; கனியே சேரா
வேதிம நறுமணப்பொடி; தோடை தொட்டுத்
தூரியன்வரை, பல பள பழப்படம் முகம்
தாங்கிப் பக்குவமாய்ப் பெட்டியுள்ளே.

விருந்தினரை எண்ணிக்கொள்ளுங்கள்.
வெறும் நீரை முகந்தோ முகராமலோ
இறைந்து நிறையுங்கள்; அளந்து சீனி
கலந்து கொள்ளக் கைநுனியிற் கரண்டி;
விருந்தினர் தேர்வில், விரும்பின தேர்வில்,
ஒரு சிட்டிகை தோடம்பொடி
..................................தூரியன்பொடி
.................................புளிப்பொடி
................................ப்ரூன்பொடி.

வரும் விருந்துக்குப் பழரசம் பரிமாறுவது இலகு.

~~

அரசியற்கட்டுரை அமைப்பது அடிப்படையிற் சுலபம்;
மனிதநேயக்கட்டுரையுங்கூட.

ஒரு சிட்டிகை பாசிசப்பொடி
..................................தேசியப்பொடி
..................................புலிப்பொடி
..................................புனுகுப்பொடி

'06 மே 04 வியாழன் 04:05 கிநிநே.