Sunday, September 29, 2019

என் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு!


கடந்த வாரம் கனடாவிலே இலங்கைப்பெண் தர்ஷிக்கா கணவர் சசிகரனின் வதை தாளாது பிரிந்து வாழ்ந்தவர், அவரைச் சந்திக்கக்கூடாதென்று சட்டரீதியாக ஆணைப்படுத்தப்பட்ட நிலையிலும் வீதியிலே வைத்து அவர் கணவராலே வெட்டிக் கொலைசெய்யப்பட்டிருக்கின்றார். ஒரு கொலை பல்லடுக்கான தளங்களிலேயும் பார்கோணங்களிலும் கேள்விகளை எழுப்புவது எதிர்ப்பார்க்கவேண்டியதும் எதிர்காலத்திலே இத்தகா அவலம் நிகழாதிருப்பதற்கான மாறுதலுக்காகத் தேவையானதுமாகும்.

கேள்விக்கான காலமும் இடமும் பொருந்தாதிருக்கலாம். ஆனாலும், பல பதிவுகளிலே தர்ஷிகா குறித்தும் சுவிட்சலாந்து தமிழ்மதபோதகர் குறித்தும் கடந்த சில நாட்கள் வாசித்தபோது எழுந்த கேள்விகளை ஆங்காங்கு எழுமிடங்களிலே கேட்பின் தவறாக எண்ணப்படலாம் என்பதாலே கேட்கவில்லை. இங்குப் புரிந்துகொள்ளப்படலாம் என்ற நம்பிக்கையோடு....

 'இப்படியான அவநிகழ்வு நம் சமூகத்துக்குமட்டுமேயானதா? இக்கொடுமையைத் தமிழ்ச்சமூகம் என்பதன் கோளாறாகவே ஆணியறைவது எதற்காக? ஒரு சமூகமாகமட்டுமே இக்கோணற்றனத்தினை எப்படியாக நீக்கமுடியும் என நம்புகின்றோம்? இந்நிகழ்வுமட்டுமல்ல, தொடர்ச்சியாக இன, மொழிசார் சமூகம் கடந்து பால், சாதி, மதம் தொடர்பாக நிகழும் ஒடுக்குதலையுங்கூட, எளிதிலே திடமற்ற வடிவும் பண்புகளும் தொடர்ந்து கால இடத்துக்கேற்ப மாறும் பாயித்தன்மைவாய்ந்த ஒரு சமூகத்துக்கானதாகக் காட்டி, ஒட்டுமொத்தமாகப் பழியினைச் சமூகத்திலேயே போட்டுவிட்டுப்போவதோடு எப்படியாக முடித்துவிடுகின்றோம்? தனிப்பட்ட பொதுவிலான எவ்வவலம் குறித்தும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் உள்வாங்கலும் அதன்பின்னான மாறுதலும் எதிர்வினையும் எத்துணை முதன்மையானது என்பதை வசதியாக மறந்துவிடுகின்றோமா?'

இக்கேள்விகளை முன்வைக்கும்போது,  நிகழ்ந்தவற்றையிட்டுக் கோபமும் ஆற்றாமையும் பொதுவுணர்வுக்குழம்பாகப் பரவிக்கிடக்கையிலே, கேட்கின்றவரை நோக்கி எழக்கூடிய சிக்கலை அறிவேன். உச்சநிலையிலே கேட்கின்றவர், இக்கொலையினை ஆதரிக்கின்றவராகவும் இடைநிலையில் அவர் இப்பிரச்சனை அவர் சார்ந்த சமூகத்திலேயே இல்லையென்று சொல்பவராகவும் தாழ்புள்ளியிலே இக்கொடுநிலைமீதான எம் சினத்தைக் காட்டக் கிட்டிய கொடும்பாவியாகவும் கொண்டு குத்துச்சண்டைத்தலையணையாகக் குத்தப்படும் நிலைமைதான் உள்ளது.

ஆயினும், நான் கேட்பது, இம்முந்நிலைகட்குமானவனாக வேண்டியல்ல என்று ஒரு சிலரேனும் புரிவார்களென்ற நம்பிக்கையுண்டு. அனைத்துக்கும்  எழுபதுகளின் புதுக்கவிஞர்கள்போல, " புழுத்துப்போன சமூகமே!' என்று தன்னை (விதி)விலக்கிவைத்துக்கொண்டு,  தொடர்ச்சியாகச் சமூக அக்கறையைத் தமக்கான விளம்பரத்தட்டியாகக் கொண்டு நிகழ்ந்ததுக்கான காரணத்தை இலக்குச் சுட்டிக் குறித்து சுடமுடியாத 'சமூக'த்தினையே கேட்கிறேன். "கொடூர ஆண்களே!', 'பிற்போக்குத்தமிழர்களே!' என்று திட்டித்தீர்த்துவிட்டு, பெண்ணுக்குத் தாலிகட்டுதல்- பிழைபடு மதபோதகர்-  கொல்லப்பட்ட தர்ஷிகா என்று தம்மைத் தவிர்த்து சூழ்ந்திருக்கும் மீதியானவர்களே குற்றத்துக்குரியவர்களென்பதாக அவசர அவரசமாக அடுத்த விளம்பரத்தட்டிக்கு நகர்கின்றபோது, இது குறித்து நம்மீது நாம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய நமக்கான தனிப்பட்ட மாறுதல்களைப் பேசமறுக்கின்றோம்.

தனியான மனிதனாக என்னைப் பற்றி நான் எண்ணிக்கொண்டிருப்பதற்கும் என் இழிநிலையிலே நான் எப்படியாகச் செயற்படக்கூடும் என்று உணர்தலுக்கும் நிறைய வேறுபாடுண்டு; அதை அறிய நேரிடும் பொழுது கொடூரமானது; காலத்துக்குமான வதை அங்குண்டு. அந்நிலையிலே இது மொத்தமாகச் சமூகத்தின் குறையென்று என்னைமட்டும்  விலக்கி வைத்துவிட்டு, தமிழ்ச்சமூகமே தர்ஷிக்காவை கொல்ல ஊக்குவித்திருக்கின்றதென்பதுபோலத் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பதுங்கூட எமது தனிப்பட்ட தேர்ந்தெடுத்த அரசியலேதாம்! ஆபிரிக்க சமூகத்திலும் அமெரிக்கசமூகத்திலேயும் இதே கொடூரமிருக்கின்றது.    நிகழும் பொழுதுக்குக் கடற்கரையிலே குந்திக் கூட்டத்திலே வருந்திக் கதைபேசிவிட்டு, பேச்சின் சுவை குன்ற எழுந்து பின்புறம் தட்டி மணலோடு துன்பநிகழ்வையும் ஒட்டுமொத்த சமூகமாக உதிர்த்து விழுத்திவிட்டுப்போகின்றோமா என்று வருந்துகின்றவர்களின் ஆதங்கம் புரிகின்றது; ஆனால், இங்கு, இதேநிலைதாம் எச்சமூகத்தைச் சார்ந்தவனானாலுங்கூட, தனிப்பட என்ன மாற்றத்தை நான் ஒரு நிகழ்வின் பாற்பட்டு ஏற்படுத்தலாமென்று எண்ணவேண்டியதையும் மறந்துவிடுகின்றேனா என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டுமெனக் கருதுகிறேன்.

பல சமயங்களிலே நான் இழைந்தும் இழைக்கப்பட்டும் கூடியிருக்கும் சமூகத்திலும்விட, தனிமனிதனாக, எப்போது எவ்வகையிலே வெளிப்படுவார்களோ எனத் தெரியா நிலையிலே எனக்குள்ளே ஒளிந்திருக்கும் எண்ணற்றவர்களுக்கு இப்போதெல்லாம் பெரிதும் அஞ்சுகிறேன். அவ்வறிதலே தன்னளவிலே ஒரு நற்சிந்தனைதான். L  எவ்விதமான அவநிகழ்வு குறித்தும் அது மீண்டும் நிகழாதிருக்கச் செய்வதிலே என் சமூகமும் அதற்கப்பாலும் பெருங்கோளங்களும் மாறவேண்டுமெனில், தனிப்பட அந்நிகழ்வின் காரண காரியங்கள் குறித்து என்மீதான என்னாலான மாற்றமென்னவென்பதே முதன்மையானதும் சாத்தியபடக்கூடியதுமானதுமாகும்.

என் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு!
Not in my name, but the changes within me.

09/14/2019

Blowin’ in the Wind



முந்தநாளிரவு ஆர்டிக்கள் 15 (Article 15) படம்; இந்தியச்சட்டம் குறித்த புரிதல் எனக்கில்லை. மதம், பால், இனம், சாதி, பிறப்பு அடிப்படையிலே வேறுபாடு குடிமக்களுக்கிடையே காட்டப்படக்கூடாது என்றதைச் சொல்வது இந்தியச்சட்டத்தின் 15 ஆம் சட்டமூலவிதி என்று புரிந்துகொள்கிறேன். அதற்குமாறாக, சட்டமே சாதியோடு சேர்ந்தோடுவதையும் சாதிகள்கூட்டாவதையும் நகரிலிருந்து கிராமத்துக்குப் போகவைக்கப்பட்ட, ‘உயர்சாதி சுதந்திரசிந்தனைகொண்ட காவற்றுறை அதிகாரி எப்படியாகக் கையாள்கின்றார் என்பதான படம். ஆரம்பத்திலே நடைமுறையின் கொடுமையைக் காட்டிக்கொண்டிருந்தது, முடியப் பதினைந்து நிமிடங்களேயிருக்கையிலே திடீர்த்திருப்பம், நாயகனின் சாகசம், எல்லாச்சாதிகளிலும் நல்லவருளர் என்பவைபோலவும், நேரே கை-பூ கட்சிகள் எனப் பிரசாரத்தன்மையோடும் படம் கலையொடுங்கிச் சப்பெனச் செத்துப்போனது.

 படத்தின் ஆரம்பத்திலே, கிராமத்தின் கோரம் துலங்கத்தொடங்கமுன்னால், வண்டியிலே வரும் வெளிநாட்டிலே வளர்ந்த நாயகன் கேட்கும் பாடல், பொப் இடைல்யானினது. இடைல்யான், அமெரிக்க (நவீன)நாட்டுப்பாடலசைக்கும் உரொக்கிசைக்குமிடையிலே கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் குறுக்கும்நெடுக்கும் தடைதாண்டியோட்டம் ஓடிக்கொண்டிருப்பவர். அறுபதுகளின் சமூகக்கட்டுப்பாட்டுகளுக்கெதிராக உடைத்துப்பாடியவர், 2000 களிலே சொகுசுவாழ்க்கையிலே தொலைந்துபோனாரென வேரோடின நாட்டுப்பாடலிசைக்காரர்களாலே ஏளனம் செய்யப்படுகின்றவர். (பாடகர் ஆர்லோ கூத்ரி, ‘பொப் இடால்யனின் பாடல்களினை பொப் இடால்யனிலும்விட மூலம் கெடாது பாடுகின்றவர் தானென அண்மையிலே ஒரு மேடையிலே நக்கல் செய்திருந்தார்).  நாட்டுப்பாடல்களின் வேரோடாத மினசோட்டா மாநிலத்திலே அமெரிக்கவேரிசையின் பெருங்கூறாயிராத உயூதப்பின்புலத்திலிருந்து வந்தவர்.  பாடகரென்ற அளவிலே பிடித்தவரல்லர்; குரல், தூறல்மழையிலே நனைந்த அடுத்தநாள் மூக்காலே பாடுவதுபோன்ற குரல்; அவரைப்போலவே பாடலுமெழுதி இசையுமமைத்து மூக்காலே பாடும் அண்ணன் தம்பி இரண்டுபேர்  எனக்குத் தெரிந்திருக்கின்றார்கள். இசைக்காக அவர்களைப் பொறுத்துக்கொள்வதுபோல, எழுதும் பாடல் வரிகளுக்காக இடால்யனைப் பொறுத்துக்கொள்ளலாம். 2016 இலே இலக்கியத்துக்கு அவரின் பாட்லகளுக்காக நோபல் பரிசு கொடுத்தபோது, மனுசனுக்கே போய்வாங்கச் சங்கடமாயிருந்ததோ என்னமோ மேடையிலே வாங்காமல், பிறகு தனியே போய் வாங்கினார். அத்துணை அவரின் பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன எனலாம். பயன்படும் இசைக்கருவிகள், இசையமைந்த நுட்பம் இவற்றிலே கவனம் செலுத்தவேண்டிய இயல்பற்றவகையிலே எனக்கு இவர் மவுத்ஓகர்ன், கிற்றார் இவையிரண்டையும் வைத்துக்கொண்டு பாடும் பல்திறனை மட்டும் விதந்துவிட்டு இவரின் பாடல் வரிகளிலே கவனம்போய்விடும்.  ஆர்ட்டிக்கள் 15 இலே ஒலித்த இப்பாடல், I Pity the Poor Immigrant ஆகியவை பிடித்துக்கொண்டவை.

நமது கட்சிப்பாடகர்களான பீற் ஸீகர், ஆர்லோ கூத்ரி, ஜோன்போல்-மேரி போன்று பாடிய பாடல்கள் அனைத்தும் வரிகளுக்காக பொப் இடால்யனைப் பிடித்துக் கவனப்படுத்திக் கேட்க இல்லாதபோதுங்கூட,  இப்பாடலை முதலிலே கேட்ட 2004 ஆண்டளவிலிருந்து அவ்வப்போது தேவைப்பட்ட தவனத்தருணங்களிலே கேட்டிருக்கின்றேன்.

2009 இன்பின்னான காலத்திலே அவ்வப்போது, தட்டிக் கேட்க விழையும் அரசியல்சார்ந்த பாடல்கள் மூன்று; இரண்டாவது, பீற் ஸீகரின் we shall overcome, மூன்றாவது இது. 1962 இலே அமெரிக்க (நவீன)நாட்டுப்பாடல் வகையிலே போருக்கெதிரானவகையிலே, கேள்விகளாகவே தொகுத்ததுமாதிரியான பாடல் இது. இப்பாடலை அதை எழுதிப் பாடியபின்னால், பிரபலயமான பல பாடகர்கள் – மார்லின் இடைரிட்ச், ஜோன் பேய்ஷ், பீஜீ, ஆர்லோ கூத்ரி, ஜோன்-போல்-மேரி, ச்ரீவ் உவொண்டர், ஜோனி காஷ், ப்ரூஸ் ஸ்ப்ரீங்ரன்.உடொலி பாட்ரன், ஜோன் இடென்வர்- இப்பாடலுக்கு வாயசைத்திருக்கின்றார்கள். ஸ் ரீவ் உவொண்டர் தொண்ணூறுகளிலே இடைல்யானின் முப்பதாண்டு இசையுலகைக் குறித்துப் பேசும்போது, “இப்பாடல்,  அறுபதுகளிலே அமெரிக்கக்குடிசாருரிமைக்காகப் பேசியது; எழுபதுகளிலே (தென் ஆபிரிக்க) ச்ரீவ் பிக்கோவுக்காகப் பேசியது; எண்பதுகளிலே தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கெதிராக, (எதியோப்பியாவின்) பட்டினிக்காகப் பாடப்பட்டதுபோன்றிருந்தது; தொண்ணூறுகளிலே  யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்பதைச் சுட்டவும் பயன்படுவதுபோலுள்ளது;  இப்பாடலின் எப்போதுக்குமாகப் பொருந்துநிலை துயரமுமானது; துயரமானது ஏனெனில், அப்படியாகப் பொருந்துமளவுக்குத் துயர்நிலை மாறாதிருப்பதாலே ’ என்றார். அவர் தொண்ணூறுகளில் வேண்டிய கிளிண்டன் அரசியலும் பெரிதும் போர்முடித்த அரசியலல்ல; அதுவும் பிறநாடுகளிலே போர் முடிந்த அரசியலே என்பது ஒரு புறமிருக்கட்டும்.   ஆனால், 2010 களிலே இன்னமும் நான் நோக்குமிடத்துக்கெல்லாம் பொருந்துவதுபோலத்தானிருக்கின்றது.

ஓரிடத்திலே அடாவடித்தனமான சவ எரிப்பு சூழ நெடுங்காலம் நிலம்பட வாழ்வாரின் உரிமைகளையும் நீதியையும் புறங்கையொட்டிய காய்சேற்றுப்பருக்கையைச் சுண்டுவதாய் அலட்சியப்படுத்திச் சட்டத்தின் துணையோடு நிகழ்கையிலே,  இப்பாடலிலே வரும் இடைல்யானின்,
 ‘Yes, and how many years can some people exist
Before they're allowed to be free?”
வரிகள் ஞாபகத்திலே வந்தால், அதற்கு இரு மணிநேரப்பயணத்தூரத்திலே கூடி, அப்படியான போர்முடியா  நிலையிருப்பதையே அறியாததுபோலப் பேசவேண்டுபொருளைப் பேச மறுத்து, போர்மறுபடைப்புத் தோன்றாத்துயர்தோய்வாய்ப் பாவனைபேசுங்கிளிகளைச் சுட்டி,
Yes, and how many times can a man turn his head
And pretend that he just doesn't see?”
வரிகள் காலத்தோடு நமக்கும் பொருந்திவருகின்றதாய்த் தோன்றுகிறது.

வரும்போரை எதிர்த்தல் என்பதைப் போன கொடும்போரை மறைத்தல், நிகழ் மறைபோரை மறுத்தல் என்பதாகத் தம்மரசியலின்பொருட்டுச் சுட்டிக்கொண்டேயிருப்பார்க்கு,
The answer, my friend, is blowing in the wind
  The answer is blowing in the wind!’
என்பதைச் சுட்டினாலும் ஏறாதென்றே தோன்றுகின்றது. 

Yes, and how many ears must one man have
  Before he can hear people cry?’
 தேர்ந்தெடுத்துக் கேளாச்செவியர்க்கு முடிவிலி + ஒன்று!


92: தீதீ


92 இலே புரட்டாதியிலே சீனா போயிறங்கியபோது, வானொலி, வீடியோகொட்டகைகள், கோயில்விழாக்கள் தந்த தமிழ்ப்பாடல்கள், ஆங்கிலத்திரைப்படங்கள் தொடங்கமுன்னால் கொட்டகையிலே தன்பாட்டுக்குப் போன பொனியம், பீட்டில்ஸ், அபா குழுக்களின் வரி தெரியாத ஆங்கிலப்பாடல்கள், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் மதியம் ஒன்றரைக்குப் போட்ட ஹிந்திப்பாடல்களிலே ஒன்றிரண்டு, போகவருகையிலே கேட்ட சிங்களப்பாடல் சில, அப்போதுதான் தொடங்கின கொழும்பு எப் எம் பக்கத்தறையிலே போட்ட ஒருவனின் உபயத்தாலே சில ஆங்கிலப்பாடல்கள், கேள்விப்பட்ட எல்விஸ் ப்ரீஸ்லி, மைக்கல் ஜக்ஸன், மடோனா பெயர்கள் - இத்தனைதான் இசையும் பாடலுமென்ற கிணறு என்னது.
போன ஒரு மாதத்துள் கையளவல்லது உலகு என்றளவுக்குத் தெளிவு வந்துவிட்டது. சீனாவிலே வெளிநாட்டுமாணவர்களுக்கென்று ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தனியான கட்டிடம். டென்சியாவோபிங்கின் நிறம் முக்கியமற்ற பூனை அனைத்துவண்ண எலிகளையும் பிடிக்கப் பாதி கதவைத் திறந்து மீதி மூடி மறைத்து வைத்திருந்த காலம், வெள்ளியிரவுகளிலே வெளிநாட்டுமாணவர்கட்டிடங்களின் நிலத்தடி அகலமான அறைகளிலே பியரும் பாடல்களும் சீனமங்கைகளும் ஆடல்களும். எந்த நகரிலும் நாலைந்து பல்கலைக்கழகங்களேனும் வெளிநாட்டுமாணவர்களோடிருக்கும். ஒரு கிழமைக்கு ஒரு பல்கலைக்கழகமென்ற சுற்றிலே இரவு எட்டுக்குத் தொடங்குவது பன்னிரண்டு வரைக்கு உச்சமாகி ஒன்றுபோல அடங்கிப்போகும்; சனிகளிலே நடனவிடுதிகளிலே போகிறவர் போயாடினால், உண்டு. பெருமளவிலே ஆபிரிக்கமாணவர்கள்; இந்தியா தவிர்ந்த தென்னாசியமாணவர்கள் அடுத்தபடி; ஓரிரு கிழக்கைரோப்பியமாணவர்களும் தென்னமரிக்கர்களும். யேசுவை ஆங்கிலம் கற்பிப்பதூடாகக் கடத்த வருகின்ற தொண்டர்கள் கலந்துகொள்வதில்லை. குடிக்காமலே அறுதிவரை நர்த்தனநடுச்சென்ரரிலிருந்து அறை நாலுகோனர்மூலைகள்வரை குதியன் குத்திய ஒரேயாள் நானாகத்தானிருப்பேன்.
ஆனால், ஒருமாதத்துள்ளேயே, ஆபிரிக்க பாபாவெம்பா (le voyageur), கரிபியன் பொப்மாலி, சபா இராங்ஸ் (Mr Loverman), சோல்ட் அண்ட் பெப்பர் (Let's Talk About Sex), ஏஸ் ஒப் பேஸ் (Happy Nation & All That She Wants), டொக்ரர் அல்பான் (It's my life), ப்ரையன் அடம்ஸ் (Everything I Do I Do It For You), மைக்கல் போல்டன் (When a Man Loves a Woman) என நடனத்தளத்திலே காதுகளூடாக நுழைந்து காலிலே சூடேற்றினார்கள். பின்னாலே பங்காரா வந்தது. இதற்கப்பால், நேபாளநண்பர்களூடாகக் கிட்டின நாட்டுப்பாடல்கள், ஹிந்திப்பாடல்கள் (குறிப்பாக, கேட்ட கணங்களுக்காக நிலைத்துவிட்ட sadak படப்பாடல்கள்), இசைநாடாக்களாக மலிவுவிலையிலே காப்புரிமையைச் சீனம் அறுத்துவிடக் கேட்ட ஆங்கிலப்பாடல்கள், தொலைக்காட்சியிலே கிட்டின சீனப்பாடல்கள் - தொடரும் இப்பட்டியற்பாடல்கள் வேறுவகை ஆடாத கானங்கள்.
துள்ளலின்போது, அலைந்த ஒரேயோர் அரபுப்பாடல், ஷெப் காலித்தின் தீதீ. நேபாளநண்பர்களுடனான சகவாசத்திலே முதலிலே தீதீ என்பது அக்கா என்பதாக மொழி தெரியாது ஒரு மாதமாவது குழம்பியிருப்பேன். பிறகுதான் பாடல், பிரான்சிலே வாழும் அல்ஜீரியர் காலித்தின் பாடல் என்பதாகத் தெரிந்தது. பின்னாலே, இப்பாடலிசை பல மொழிகளிலே ஆரத்தழுவியோ, உருளைக்கிழங்குப்பிரட்டலாயோ வந்துவிட்டது.... இதிலே தென்னாசியாவின் உருட்டல், பிரட்டல், உழுதலும் கணிசமாகவுண்டு.😉 சஜாத் அலியின் babia அசலுக்கு வஞ்சகம் செய்யாத ஒளிவுமறைவற்ற கண்ணாடியுருண்டை.
அர்த்தம் இன்றைக்கும் என்னவெனத் தெரியாது. ஆனால், இப்பாடலூடாக, பிற்காலத்திலே காலித்தினதும் (aicha, hiyahiya) , இப்போது காலமாகிவிட்ட இரஷீத் தாஹா (Ya Rayah), செப் மாமி, பௌடல் போன்றோரினதும், இன்னும் அல்ஜீரியர்களின், அரபுபேசும் வட ஆபிரிக்கர்களின் பாடல்|இசை வகைகளையும் (rai) தெரிந்துகொள்ளும் ஈடுபாடு உண்டானது. ( இசை வகைகளையேயொழிய எனக்குத் தொலைதூரமான இசையை அல்ல 🤫 ) காலித், பௌடல், காலித் மூவரும் சேர்ந்து பாடின Abdel Kader குறிப்பிடத்தக்க பாடல்; மொழிக்கு அப்பாலான குதிப்புக்கானது . ... தடங்கலில்லாத தாளக்கட்டுக்கு உருளும் தண்டவாளத்தொடரியோட்டம்!
பின்எண்பது -முன் தொண்ணூறுகளின் ஆடையணி காட்சிப்படுத்தலோடு தீதீ


சத்தியமே இலட்சியமாய்




பழந்தமிழ்நடிகர்களிலே இருவர் அவர்கள் நடித்த காலத்தின் வரையறுக்கப்பட்ட அழகுக்கும் நளினத்துக்கும் மீறுதலானவர்களெனப் படும். ரஞ்சன்; ரவிச்சந்திரன். நடிப்புக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். இருக்கட்டும்; ஆனால், ரஞ்சன்தான் தமிழின் முதலாவது "ஸ்ரைல் நடிகர்" என்பேன். திருகோணமலையின் பழைய ராஜி தியேட்டரிலே ஓரிரு ஆட்களேயிருக்க நீலமலைத்திருடன் பார்த்தது, நிச்சயமாக அஞ்சலிதேவிக்காக அல்ல (அடுத்தவீட்டுப்பெண் பிற்காலத்திலே பார்க்கும்வரைக்கும் அஞ்சலிதேவியைக் கண்டாலே ஒவ்வாமை. மனுசி நினைச்ச நேரத்திலை நாலு கல்யாணம் கட்டின ஜெமினியை நினைச்சு அழத்தொடங்கும் மணாளனே மங்கையின் பாக்கியம் படத்தைப் பின்னிரவொன்றிலே கிருஷ்ணா தியேட்டரிலே பார்த்திருந்த நேரத்திலே இராகுகாலம். உதே பிரச்சனை சௌகார் ஜானகியோடும் தெரியாமல், இருகோடுகள், அன்னை பார்த்த குற்றத்திலே கிடந்தது, பிறகு பாமாவிஜயம், எதிர்நீச்சலிலே கொஞ்சம் தெளிஞ்சு, தில்லுமுல்லுவுடன் சமாதானம் ஆனோம்). ஜோதி தியேட்டரிலே சந்திரலேகா பார்த்ததும் ராஜகுமாரிக்கும் எம் கே ராதாவுக்கும் முரசுநடனத்துக்குமல்ல..... ரஞ்சனுக்காகவுமல்ல :-) பார்க்க வேறு தமிழ்ப்படங்கள் மீதித் திரையரங்குகளிலே ஓடவில்லை; ஆனால், இவற்றைப் பார்த்தபோது, ரஞ்சன் பிடித்துக்கொண்டார் படம் முடியும்வரை இருக்கவைப்பதற்கேனும்.

ரஞ்சனின் நாய், குதிரையைப் பற்றி, எம் ஜி ஆருடனான அவரின் வாட்சண்டைப்போட்டி பற்றியெல்லாம் அப்பப்போது எவனாச்சும் அளந்துவிட்டுக்கொண்டேயிருப்பான் - ஹமில்டனுக்கும் பேர் இற்கும் நடந்த வாழ்வா சாவா போட்டிபோல.... இன்றைக்குவரைக்கும் நாடுவிட்டு வந்து செத்துப்போன ரி ஆர் ராமச்சந்திரன், மஹ்மூத் போல, அமெரிக்காவிலே வந்து செத்த ரஞ்சன் நாயையும் குதிரையையும் எம்ஜி ஆருக்குக் கொடுத்துப்போட்டுத்தான் மூட்டையைக் கட்டினாரா என்ற உண்மை தெரிந்தே ஆகவேண்டுமென்ற பேரவா தீரவில்லை.

வின்சன்ட் ப்ரைசின் சாயலையொத்தவர் ரஞ்சன். அடிப்படையிலே வில்லத்தனமான முகம்; பெருத்துப்பரவின மூக்கு கடைசியிலே ஒரு கிளிச்சொண்டு வளைவிலே அகன்று குழிவாடிக்கோட்டு மீசையோடும் பெருமோவாயின் மேலாத் தொங்க, உதடுகள் அதைத்திருக்கும். கண்களிலே வஞ்சகமும் கொடுநகையும் மின்னி மின்னிப்போகும் ஒடுங்கிய முகம் அவரது.

அவரின் இப்பாடல் அக்காலத்திலே குதிரையோடு நாயகன் 'தன் தத்துவம்' சொல்லியோடும் வகையைச் சார்ந்தது. (எம் ஜி ஆரின் 'அச்சமென்பது மடமையடா' (மன்னாதிமன்னன்), எஸ் எஸ் ஆரின் முக்குலத்தோர் புகழ், 'வீரர்கள் வாழும் திராவிடர்நாட்டை" (சிவகங்கைச்சீமை), அசோகனின் 'அழிவதுபோற்றோன்றும்' (வீரத்திருமகன் - ஓரளவுக்கு) போன்றவை இதே 'இராஜபாட்டிலையே' தாளத்துக்குக் குதித்தோடிய புரவிகள் :-) ஜெமினி தேன் நிலவிலே வைஜந்திமாலாவுடன் பாட்டுப்பாடவே என்றோடின குதிரைகளல்லன இவை )

அக்காலத்திலே இப்பாடல் தனித்துத் தெரிந்த ஒன்று - அதன் நடிகரைப் போலவே!