Monday, December 24, 2007

பனிவிளக்கு


SnowLight'07 Dec., 13 Thurs

The Butter Battle Blog: Now and here on whatever to whoever

இரவிசங்கரின் இடுகைகளின் பெரும்பான்மையான குதர்க்கவாதத்துக்குப் பின்னூட்டமோ பதில் இடுகையோ இட விரும்பாததற்கான முதன்மைக்காரணம், சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி, செல்வராஜ், தமிழ்சசி போல தலையிலே சம்மட்டியாலே அடித்தாலும் தாங்கிக்கொண்டு நிதானமாகப் பேசும் தன்மை எனக்கு இல்லை என்பதே; துணைக்காரணமாக, தொழில்நுட்பம் சார்ந்து பேசுமளவுக்கு எனக்குப் புரிதல் போதாது என்பதைக் கொள்ளலாம். ஆனால், தமிழ்மணம் தொடர்பான இரவிசங்கரின் தொடர்ச்சியான ஒரு குற்றச்சாட்டிலேயிருக்கும் பொய்யினை எடுத்துச்சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.

தமிழ்மணம் தனக்குப் பதிலே தருவதில்லையென்பதாகச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றார்; பகிரங்கமாகப் பதிவும் இடுகின்றார். இவை குறித்த தமிழ்மணத்துக்கான இவரது அஞ்சல்களும் தமிழ்மணம் தொழில்நுட்பக்குழுவுக்கும் முறையீட்டுப்பிரிவுக்குமான அஞ்சல்களுக்கான அவர்களது பதில்களும் சேமிப்பிலேயிருக்கின்றன. தமிழ்மணத்தின் நெறிக்கோவை காரணமாக இவற்றினை வெளியிலே ஆதாரமாக இட முடியாமலிருக்கின்றது. ஆனால், கருத்தளவிலே இவரின் மேலோட்டமான பொதுமைப்படுத்தும் குற்றச்சாட்டிற்கான பதிலினைத் தரவேண்டியிருக்கின்றது.

முதலிலே அவரின் அண்மைய அஞ்சல்களைப் பற்றிய சாரம்; நவம்பர் 24 இலிருந்து டிசம்பர் 16 வரை ஐநது அஞ்சல்கள் தமிழ்மணம்-முறையீட்டுக்கு அனுப்பியிருக்கின்றார். முதலாவது, அவருடைய வேர்ட்பிரஸிலான விமர்சனம் பதிவினைச் சேர்க்கமுடியவில்லை என்று கூறியிருக்கின்றார். வேர்ட்பிரஸ்.கொம்மிற்கும் தமிழ்மணம் தளத்திற்குமான ஊடல்நிலையை சாதாரண இணையப்பதிவர்களே அறிந்துகொண்டுள்ளபோது, இது பற்றி முன்னமே அறிந்துள்ள தமிழ்த்தொழில்நுட்பம் தெரிந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் இவர் புரிந்துகொள்ளாமலிருக்க நியாயமில்லை. வேர்ட்பிரஸ்.கொம் உடனான தமிழ்மணத்தின் ஒவ்வாமை பற்றி ஏற்கனவே ஜுலையிலே இன்னொரு இவரின் தொடர்ச்சி அஞ்சலுக்கான -பதிவரின் படத்தினைச் சேர்த்தல் தொடர்பான- தொடர்ச்சியான பதில்களிலே குறிப்பிட்டிருப்பதாக ஞாபகம். இப்போது தன்னஞ்சலுக்கு உடனடியே பதில் போடவில்லை என்று அவருக்கு வருத்தம்.

அடுத்த அஞ்சல் தமிழ்மணத்திலே தோன்றும் ஒரு வழுவினைக் குறித்து -தோன்றிய வழு பற்றிய விபரவரிகளை- அறியத் தரும் அஞ்சல். இதற்கு நன்றி என்று ஒரு பதில் போட்டிருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தாரோ தெரியவில்லை.

மூன்றாவது, தன் படத்தினை பதிவிலே மாற்றுதல் குறித்த அஞ்சல்; ஐந்தாவது டிசம்பர் 16 இன் அஞ்சலும் இதே படம் குறித்த அஞ்சலே - "எத்தனையோ தடவைகள் கேட்டுவிட்டேன்" என்பதைக் குறைசொல்லிச் சுட்டி. இதற்குப் பதில் அளிப்பதிலே எவ்விதமான வருத்தமுமிருந்திருக்காது. ஆனால், போன மே, ஜூன், ஜூலையிலே இதே மாதிரியாக படத்தினைச் சேர்ப்பது விலக்குவது குறித்து தன்னிடம் சேவியர் கேட்டார் என்று சொல்லி இவர் அனுப்பிய அஞ்சலுக்குத் தொழில்நுட்பக்குழு தமிழ்மணம் நிரலிலே எங்கே படம் குறித்து எழுதப்பட்டிருக்கிறதோ அங்கே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமென்று சொன்னதை அவருக்கு அனுப்பியிருக்கிறோம். அவர் நன்றி சொல்லிவிட்டு, வேர்ட்ப்ரஸ்.கொம்மிலே ஏன் தொழில் புரியாது என்று கேட்டிருந்தார். வேர்ட்ப்ரஸ்.கொம்மிற்கு தமிழ்மணத்துக்கும் தற்போது சில ஒவ்வாமை. தமிழ்மணத்தின் அடுத்த பதிப்பிலே இது கண்டுகொள்ளப்படலாம். ஒரே மாதிரியான கேள்வியினை இவ்வளவு விபரம் தெரிந்தவராகக் காட்டிக்கொள்கிறவர், திரும்ப ஐந்து மாதங்களிலே கேட்கிறார். திரும்பவும் அதே பதிலினைத்தான் இதே விதண்டாவாதமான கேள்விக்குக் கொடுக்கலாம்: "தமிழ்மணம் நிரலிலே பார்த்து படத்தினை மாற்றவும் & வேர்ட்ப்ரஸ்.கொம் என்றால் சில சிக்கல்கள் உண்டு."

அவரது நான்காவது அஞ்சல், 2000 ஓடைகளைத் திறந்து விடும்படியாக; (அதற்கு கணிமை, மாற்று எல்லாம் ஆதாரம் காட்டுவார். எல்லாவற்றுக்கும் "தனது" தமிழ்விக்கிபீடியா, கணிமை, மாற்று, வேர்ட்ப்ரஸ் இவற்றிலிருந்தே புள்ளிவிபரங்களும் வாக்கெடுப்புமுடிவுகளும் பொதுமக்கள்போராட்டக்களநிலையாகவும் வருவது சோர்வினையும் சிரிப்பினையும் தருவது ஒரு புறமிருக்கட்டும்) இதே அஞ்சலைத் தமிழ்மணம் தலைவர், தொழில்நுட்பக்குழுவுக்கும் அனுப்பியிருந்தார். தமிழ்மணம் சார்பிலே தமிழ்மணம் தலைவர் பதிலினைத் தந்திருந்தார். 2000 ஓடைகளைத் திறந்துவிடக்கேட்டதற்கும் டிசம்பர் முடிவுக்குள்ளே மாற்று இணைப்பியிலே 2000 பதிவுகளைச் சேர்க்கும் இவரது நோக்கத்துக்கும் ஏதாவது சம்பந்தமிருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை.

தமிழ்மணத்துக்கு வரும் எல்லா அஞ்சல்களுக்கும் பதிலளித்த காலம் உண்டு. ஆனால், சில அஞ்சல்கள், மீண்டும் மீண்டும் தமிழ்மணத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட பதிவுகளின் செயற்பாடுகளிலே தமிழ்மணத்தினை ஏதாவது செய்யும்படி (நீக்கும்படி) கேட்பதும் தமிழ்மணம் செயற்படுத்தற்பட்டியலிலே வழிமுறை சொல்லப்பட்டவற்றுக்கு மீண்டும் வழி சொல்லும்படி கேட்கும்போதும் எப்போதும் பதிலளிக்கமுடிவதில்லை. அப்படியான பல சந்தர்ப்பங்களிலே பதிலளிக்கும் தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையிலே இரவிசங்கர் -தனக்கான பதிலினைத் தருவதில்லை என்ற - அவரது குற்றச்சாட்டினை, குறைந்த பட்சம், மேலே சொல்ல நிலையிலும் கடந்த காலங்களிலே எத்தனை தடவைகள் அவரது அஞ்சல்களுக்குப் பதில்கள் சளைக்காது தரப்பட்டிருக்கின்றன என்பதைக் கணக்கிலெடுத்தும் பார்த்துவிட்டு எழுதியிருக்கவேண்டும் - நியாயமானவரென்றால்.

மேலும் விருதுகள் தொடர்பான தமிழ்மணம் இடுகையின் பின்னே அவர் போட்டிருக்கும் பின்னூட்டம் அப்படியே அநாமதேயமாக மோகன்தாஸின் பதிவிலே இடைச்செருகிப் போடப்பட்டிருக்கின்றதைப் பார்க்கும்போது, வெறுப்புத்தான் மிஞ்சுகிறது. இவர் தன்னை ஒரு தமிழிணைய டேவிட்டாகக் கருதிக் கொண்டு, தமிழ்மணத்தினை கோலியாத்தாக எண்ணித் தாக்குகையிலே, இவர் தாங்கிப்பிடிக்கும் கூகுல்ரீடர், வேர்ட்ப்ரஸ் போன்றவை உலகம் பரந்த பலமான நிறுவனங்களென்பதை உணரவில்லையோ?

Deletion & Addition on 3rd, Jan 2007:
அண்மையிலே வேர்ட்ப்ரஸ்.கொம்மிலே தமிழ்ப்பதிவிட்ட மூன்று நண்பர்களின் இரண்டரை ஆண்டு காலப்பதிவுகள் அப்படியே விழுங்கப்பட்டன; இதற்கான காரணம், என்ன அல்லது எவர் என்பதை இங்கே விட்டுவிடலாம். ஆனால், குறைந்தபட்சம் வேர்ட்ப்ரஸ்.கொம் அவற்றினைப் பணம் தந்து செய்து இட்டவர்கள் பாதுகாத்து மீட்டெடுக்கக்கூட உரிமை தரவில்லை.


This is from a friend commenting on wordpress.com, wordpress software. My apologies for the technical incorrectness.

When we maintain a separate website with " wordpress software" such as one your friends did, it is fully in our control. we have to take care of it. Wordpress group can't help us there. Since the person, who took care of it let it go, the mistake is squarely on individuals and not on wordpress.

At the same time when we maintain a website in "wordpress.com" as a subdomain such as www.snapjudge.wordpress.com, then wordpress will give support. Mostly in wordpress.com you wont encounter any issues.

So, there is some difference between "wordpress software" and " wordpress.com"

In any case, even in blogger we need to keep a backup of what we write...

You should have a backup of all your articles, as you have written many things over the years.


இப்படியான வேர்ட்ப்ரஸ்.கொம் இற்கு இலவசமாகத் தமிழ்ப்படுத்துவதும், மைக்ரோஸொப்ட்டுக்கு இலவசமாகத் தமிழ்ப்படுத்துவதும் கோலியாத்துகளுக்குக் குடைபிடிக்கும் செயல்களே. இவற்றினைப் போன்றவற்றினைத் தாங்கிக்கொண்டும் தங்கிக்கொண்டும், தமிழ்மணத்திலும் இருக்கும் திரட்டிகளிலும் இவர் எதற்குத் தன் மேதாவிசாலவிலாசத்தைக் காட்டுகின்றார் என்று தெரியவில்லை.

என்னைக் கேட்டால், தமிழ்மணத்திலே இணைந்திருக்கும்வேளையிலும் தம் பதிவுகளிலே வேறு திரட்டிகளுக்கு இணைப்பினைக் கொடுப்பதுபோல, தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினைக்கூடக் கொடுக்காத பதிவர்களின் பதிவுகளையும் சேர்த்துக்கொண்டு போவதுதான் தமிழ்மணத்தின் நல்ல பண்புகளிலே மிக நல்ல பண்பென்பேன் :-) ஆனால், அதற்காக, தமிழ்மணத்திலே தோன்றும் இரவிசங்கரின் மாயையை விதைக்கும் எல்லாக்கருத்துகளையும் பதிலன்றி விட்டுவிட்டுப் போகத்தேவையில்லை.

related old post

Tuesday, December 04, 2007

என் எல்லைக்குள்ளிருந்து...."என்ன எண்ணிக்கொண்டு சொன்னீர்கள்?"


His Holiness the Abbot
is shitting
in the withered fields
- Yosa Buson (1716 - 1783), translated byRobert Hass



கடந்த ஒரு கிழமைக்குள்ளே இலங்கை தொடர்பாக வாசித்தவற்றிலே, சிலரின் சில கருத்துகள் தமது கருத்துகளை நியாயப்படுத்த, வாசிக்கின்றவரின் பகுத்தறிவினைப் பகிடி செய்ததாகத் தோன்றின.

தொடர்ந்து உற்சாகமாகச் சண்டைபோட்டுக்கொண்டிருக்க உளநிலை இல்லாததாலே, இப்பதிவிலே நக்கலையும் குத்தலையும் தவிர்த்துவிடலாம். குறிப்பான சில விடயங்களை மட்டும் பேச எடுத்துக் கொண்டு, கருத்தாளர்களின் மற்றக்கருத்துகளை, பதிவுநீட்சி, நேரப்பற்றாக்குறை, முக்கியமின்மை, ஒத்துப்போதல் காரணங்களாக விட்டுவிடலாம்.

*****
தவிகூட்டணியின் தனித்தவில் ஆனந்தசங்கரி,
"வன்னியிலே கொல்லப்பட்ட பாடசாலை மாணவிகளை ஸ்ரீலங்கா அரசு கொன்றிருக்க நியாயமேயில்லை; இது ஸ்ரீலங்கா அரசின்மீது பழியைப் போட விடுதலைப்புலிகளே கிளப்பிவிட்ட பொய்ப்பிரசாரமேதான்"
என்று பகிரங்கக்கடிதம் விட்டது இதிலே ஒன்று. அவரின் கருத்து என்னவென்றால், ஸ்ரீலங்கா இராணுவம் அவ்வளவு தூரம் ஊடுருவிப் போய்ச் செய்திருக்க முடியாதாம். ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஊடுருவித்தாக்கும் அணி இதே வன்னிக்குள்ளே ஒட்டிசுட்டான்வரை சென்று விடுதலைப்புலிகளின் கேர்ணல். சங்கரை 2001 இலே கொன்றதும் அப்படியாகச் செயற்படும் தேவைகளுக்கான திட்டமிட கொழும்புவட்டாரத்திலே அமர்த்தியிருந்த மறைவிடம் பற்றியும் ஸ்ரீலங்கா செய்திகளிலே வெளிவந்தன. அந்நேரம் ஸ்ரீலங்கா அதிபராகவும் முப்படையின் ஆணையிடுநாயகியாகவுமிருந்த சந்திரிகா குமாரணதுங்கவே தனக்குத் தெரியாமல் இப்படியான மறைவிடமிருந்ததையிட்டு ஆத்திரம் கொண்டதும் செய்திகளிலே வந்திருந்தது. அண்மையிலே கொல்லப்பட்ட மன்னார் கத்தோலிக்கத்துறவியின் கொலைக்கும் இத்தகைய ஊடுருவித்தாக்குதலே காரணமாக வைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஆனந்தசங்கரி பொய்யான செய்தி என்று மறுதலிக்கலாம்; ஆனல், தங்களுடைய மாவீரர் வாரத்திலே வன்னியின் இதயப்பகுதியிலே பாடசாலைமாணவிகளைக் கொல்லும் தேவை -எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்றுதான் கொண்டாலுங்கூட - எதற்கு விடுதலைப்புலிகளுக்கு இருக்கமுடியும்? இதனை ஆனந்தசங்கரி யோசித்துப் பார்த்திருக்கவேண்டாமா? எத்துணை அவருக்கு விடுதலைப்புலிகளுடன் வெறுப்பிருந்தாலுங்கூட, ஸ்ரீலங்கா அரசை நியாயப்படுத்த தமிழ்மக்களிலே ஸ்ரீலங்கா அரசு இரக்கம் நிறைந்திருக்கின்றது என்பதாக நிறுவ இப்படியாகவா ஓட்டைப்பாத்திரத்திலே தண்ணீர் வார்ப்பது?

*******
அடுத்ததாக, பிரான்சிலே வாழும் எம். ஆர். ஸ்டாலின் என்ற ஞானம் என்ற சின்னமாஸ்ரர், தேசம் இணையத்தளத்திலே கொடுத்த செவ்வி. ஈழத்தின் கிழக்குமாகாணத்தின் நலனைப் பேணுகின்றவராக, வடக்கின் ஆக்கிரமிப்பினை எதிர்ப்பவராகவும் கருணா அம்மானின் தீவிர நியாயப்படுத்துனராகவும் தனது செவ்வியிலே பேசியிருக்கின்றார். பிரான்சிலே வந்திறங்கிய கருணா அம்மானை ஸ்ராலின்தான் ஸ்ரீலங்கா தூதராலய அதிகாரியோடு வரவேற்றார் என்று டிபிஎஸ் ஜெயராஜ் எழுதியதிலிருந்து அண்மைய பாரிசின் தலித் மகாநாட்டின் அமைப்பாளரிலே ஒருவரான அவர்மீது அங்கேயே கிழக்கின் கழுதாவளையிலே இருக்கும் சாதியத்துவத்தினைப் பற்றி கிழக்கின் யோகன் கண்ணமுத்து (அசோக்) பேசி முரண்பட்டதுவரை இணையத்திலே தேட அகப்படுகின்றன. இணையத்திலே வாசித்த இவற்றிலே எவை உண்மை, எவை பொய் எனக்குத் தெரியாது; எவரும் எதையும் வரலாறு என்று எழுதிவிட்டுப்போகலாம் - இங்கே திருகோணமலை பற்றி எம். ஆர். ஸ்டாலின் சொல்லியிருப்பதுபோலவே. அதனால் உறுதிப்படுத்தப்படாத இக்கருத்துகளையும் இங்கே பேச்சுக்கான விடயங்கள் அவையல்ல என்பதாலும் அவற்றினையெல்லாம் இப்பதிவிலே விட்டுவிடுவோம். ஆனால், தான் கிழக்கின்காவலர் என்பதை நிரூபிக்கும் முயற்சியிலே, "அவரது" திருகோணமலையினைப் பற்றி ஓர் அட்டகாசமான தகவலைத் தருகின்றார். அதைப் பார்ப்போம்

"ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது"


இதை, புரிந்துகொண்டே சொன்ன புளுகுமூட்டை என்பதா புரியாமலே அவிழ்த்துவிட்ட கோழிக்குஞ்சு என்பதா என்று எனக்குத் தெரியவில்லை. மூவினங்களும் சேர்ந்துவாழும் அந்த அற்புதமான அவரது திருகோணமலை எங்கேயிருந்தது என்று எனக்குத் தெரியாது; ஆனால், நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்த திருகோணமலையிலே செல்வநாயகத்தின் சாம்பல் கொண்டுவரப்பட்டபோது எனக்கு நடப்பது ஓரளவுக்குப் புரியும் வயதுதான். அதற்கு முன்னரும் என்ன என்ன திருகோணமலையிலே இனத்தினை முன்வைத்து நடந்தன என்பதைக்கூட இணையத்திலே தேடிப் பார்க்கின்றவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். கிழக்கிலே சேருவில, கல்லோயா குடியேற்றத்திட்டங்கள் குறித்தும் திட்டமிட்டவகையிலே இனவிகிதாசாரம் அன்றிலிருந்து இன்றுவரைக்குங்கூட மாற்றப்படும் நிலையினைப் பற்றிய ஆதாரத்துடனான கட்டுரைகள் இணையத்திலே நிறையவுண்டு. இவை எல்லாம் நிகழ்ந்திராவிட்டால், தமிழ்த்தேசியம் எதற்காக எழுந்திருக்கப்போகின்றதென்று, மிதக்கும்வெளி சுகுணா திவாகருக்குத் தெரிந்திராவிட்டாலுங்கூட, எம். ஆர். ஸ்டாலினுக்குத் தெரிந்திராமலிருக்க வாய்ப்பில்லை. வாகரை, மூதூர், சம்பூர் என்று தமிழ்மக்கள் துரத்தப்பட்டபின்னால், இன்றைக்கும் அப்படியான குடியேற்றம் கிழக்கிலே இவ்வாண்டிலே, இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும்போது நடந்துகொண்டிருக்கின்றது. ஸ்ராலின் என்பவருக்கு இது தெரிந்திருக்காதா? இப்படியான குடியேற்றமேதான் எங்கள் திருகோணமலையிலேயும் செல்வநாயகம் அஸ்தி வருவதற்குமுன்னாலே நிகழ்ந்துகொண்டிருந்தது. திருகோணமலையின் இந்துக்கல்லூரிவிடுதிக்கான காணியிலேதான் அந்நேரத்திலேயே கோகர்ண விகாரைக்கு வருகின்றவர்கள் தங்குவதற்கான சங்கபோதி பௌத்தயாத்திரீகர்மடம் அமைக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தின் பன்குளம் மொரவெவ என்றும் குமரன்கடவை கோமரன்கடவல என்றும் மாற்றப்பட்டதும் மகாவலித்திட்டத்துடனான குடியேற்றங்கள் அல்லைக்கந்தளாயிலே நிகழ்ந்ததும் செல்வநாயகத்தின் அஸ்தி வந்து அனுராதபுரச்சந்தி என்றழைக்கப்படும் கலைமகள் வித்தியாலயம் அல்லது கஞ்சிமடம் பள்ளிக்கூடம் என்ற இடத்திற்குக் கிட்டே கொண்டு வந்தவர்கள் சிறிமாபுர/மகிந்தபுர என்றழைக்கப்படும் குடியேற்றத்திட்டப்பகுதியிலே காரணமேதுமின்றிச் சிங்களக்காடையர்களாலே தாக்கப்படுவதற்குமுன்னாலேதான். ஸ்டாலினுக்குத் திருகோணமலையின் நிகழ்வுகள் பற்றித் தெரியாதென்றால், பேசாமலிருந்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, அவரது கிழக்கின் காவலர்பிரதேசத்துக்குள்ளே திருகோணமலையையும் சேர்க்கும் அநாவசியமான தேவையில்லை. யாழ்ப்பாணத்தின் மேலாதிக்கத்தாலேயே கிழக்குக்கு இந்நிலை என்று வரையும் ஸ்டாலினின் வாதத்தின்படி பார்த்தால், கல்லோயாத்திட்டத்தினைக் கொண்டு இனவிகிதாசாரத்தினை மாற்ற பாரம்பரியப்பிரதேசங்களிலிருந்து தமிழ், முஸ்லீம்களை விரட்டியதும் தமிழ் என்ற மொழி ரீதியிலான இரண்டாம்பட்சக்குடிமகனாகச் செய்ததும் யாழ்ப்பாணமேலாதிக்கமா? வடக்குமேலாதிக்கத்தின்படிதான் கிழக்கு அமுக்கப்பட்டதென்றால், மட்டக்கிளப்பிலிருந்து வந்து திருகோணமலையைத் தனதென்று உரிமை கொள்ள ஸ்டாலினின் மேலாதிக்கம் எவ்வகைப்பட்டது? கிழக்கிலே யாழ்மேலாதிக்கத்தினைச் சுட்டிக்காட்டுகின்றவர்களும் அதற்குமுன்னாலே யாழ்ப்பாணத்திலேயிருந்து போய்க் குடியேறியவர்கள்தான் என்பதைக் கிண்டி யாராவது பதிவு போடுவார்களாக.

*******
புரிதலின்றி எழுதப்பட்டதோ என்று தோன்றுவகையிலே சில வரிகளைச் சொல்லும் மூன்றாவது ஆள், மிதக்கும் வெளி சுகுணா திவாகர்; ஈழம் தொடர்பான அவருடைய கருத்து & நிலைப்பாடு(ம் அ. மார்க்ஸின் நிலைப்பாடும்) பிரான்ஸின் ஷோபா சக்தியினதும் அவரது நண்பர்களினதும் வழியான புரிதலே என்பது அவதானித்த வரையிலே என் புரிதல்; நான் தவறாகவுமிருக்கலாம். முன்னர் அவருடைய இடுகையொன்றிலே, ஒரு கவிதையின் பின்னாலே, ஈழம் தொடர்பான சில பின்னூட்டங்கள் நானும் அவரும் குழலியும் எழுதிக்கொண்டது ஞாபகமுண்டு. அவரின் அண்மைய தமிழகத்திலே ஈழத்தின் ஆதரவாளர்கள் குறித்த பதிவிலே சில கருத்துகளோடு முற்றாக உடன்படுகிறேன் (தமிழகத்தின் சில திராவிட அரசியல்வாதிகளின் இரட்டைநிலை); சிலவற்றிலே பேசுவதற்கு எனக்கு விபரம் பத்தாதென்பதும் ஈடுபாடில்லையென்பதும் உண்மை (நெடுமாறனின் சாதி + பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருது); சில சந்தர்ப்பங்களிலே சாதி சம்பந்தமாகப் பேச அவருக்குப் பிடிப்பதில்லையென்பதையும் கண்டிருக்கின்றேன் (வளர்மதி அவரின் சாதி பற்றிச் சுட்டியபோது). அதனால், இங்கே அவரின் இடுகையிலிருந்து இரண்டு கருத்துகளின் அபத்தநிலை பற்றிக் கேட்க விரும்புகிறேன்


"தமிழ்த்தேசியம்....ஆனால் (ஏன், ஈழத்திலும் கூட) சாதியக் கறைபடிந்த இந்துத்துவச் சார்போடேயே உள்ளது."


இதற்கு ஆதாரம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பாரிஸின் தலித் மகாநாட்டிலே எம். ஆர் ஸ்டாலினின் பேச்சு மும்பாய் புதியமாதவி சங்கரனுக்குத் தந்த மெய்ஞானம் போலவோ, சத்தியக்கடதாசி என்று நண்பரின் வலைப்பதிவியோ காட்டினாலும் சரிதான். தமிழகத்தின் வர்ணாச்சிரமத்தின் பிரமிட்டுவாழ்நிலைத்தட்டினை அப்படியே ஈழத்துக்கும் நகர்த்தி அதனூடாகப் பார்க்கும் பலரிடமிருந்து வாசிப்பு நிறைந்தவராகத் தோன்றிய சுகுணா திவாகர் கொஞ்சம் விலகி நிலைமைக்கு அண்மித்த கண்ணோட்டத்தோடு பார்த்திருப்பார் என்று எதிர்பார்த்தது தவறோ தெரியவில்லை. தமிழ்த்தேசியம் ஈழத்திலே இந்துக்களை (??, வேளாள சைவர்களை??) மட்டுமேதான் பற்றிப்பிடித்திருக்கின்றதா? ரொக்கிராஜுகளுக்கும் அந்தோனிசாமிகளுக்கும் ஸ்ரனிஸ்லாசுகளுக்கும் சார்ள்ஸ் அன்ரனிகளுக்கும் தமிழ்ச்செல்வன்களுக்கும் சாதியக்கறை படிந்த இந்துத்துவச்சார்போடுதான் அடித்திருக்கிறதா? மேலே ஸ்டாலினின் கருத்தின்பின்னாலே குறிப்பிட்ட மாதிரி, குடியேற்றத்திட்டங்களும் சிங்களமொழிச்சட்டமும் யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க நோக்கு என்று சத்தியக்கடதாசி பட்டியல் போட்டுக் கட்டுரையிட்ட பல்கலைக்கழகக்கல்வியும் சாதி இந்துக்களைமட்டுமேதான் தாக்கியதா? ஸ்ரீலங்கா இராணுவமும் அப்படியாகத்தான் சாதியம் கேட்டுத் தாக்கியதா? தமிழ்த்தேசியம் இலங்கையிலும் சாதியக்கரை படிந்த இந்துத்துவச்சார்போடேயே உள்ளதாக, தமிழச்சிக்கு எடுத்துச் சொல்லும் சுகுணா எங்களுக்கும் அதற்கான "இராணுவம் துரத்தியபோது, கோவிலுக்குள்ளே சாதி குறைந்தவர்களை இன்ன இடத்திலே இவர்கள் விடவில்லை; ஆகவே, தமிழ்த்தேசியம் சாதிக்கறை படிந்த இந்துத்துவச்சார்போடேயே உள்ளது" என்றது மாதிரியான ஆதாரங்களைத் தந்தால், நாங்களும் தெளிவு பெறலாமே? "தமிழ்த்தேசியம் = இந்துத்தமிழர்", "சிங்களத்தேசியம்=சிங்கள பௌத்தர்" என்பதுபோன்ற மஹிந்த சிந்தனய / சிவசேனா சிந்தனை / HINDRAF Philosophy எப்போது சுகுணாவுக்கும் வந்ததென்று அறிந்தால், நமக்கும் புரிதல் கிடைக்குமென்று நம்பலாம். [தமிழ்த்தேசியவாதிகளிலே சாதியக்கறை படைத்தவர்கள் இருப்பது மறுப்பதற்கில்லை; இல்லாதவர்களும் எத்தனை வீதமென்று இலங்கையிலுஞ்சரி இந்தியாவிலுஞ்சரி எண்ணிப்பார்க்கவேண்டாமா? மற்றப்பக்கம், தமிழ்த்தேசியவாதிகள் அல்லாதவரிடமுமேதான் அதே சாதியக்கறை கிடக்கிறது - இலங்கையிலும் இந்தியாவிலும். ]


அவருடைய அடுத்த கருத்து:

"தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை."


விடுதலைப்புலிகள் என்றால், ஈழத்தமிழர்களை வெறுக்கும் தமிழ்நாட்டின் தேசியவாதிகளும் அல்லாத இரட்டைப்படகு பெரியாரிய-தலித்போராளிகளான உங்களைப் போன்றவர்களுங்கூட, திட்டித்தள்ளுகின்றீர்கள். சென்னையிலே தகுந்த ஆவண & அனுமதி அடையாளங்களையும் கையிலே காசையையும் வைத்துக்கொண்டும் வீடெடுக்க, தமிழ்நதி ஈழத்தமிழர் என்ற முகவரியோடு பட்ட க(வி)தையைக் கேட்டு, "வெட்கப்படுகின்றேன்; வேதனைப்படுகின்றேன்" என்று இத்தனை கவிதைகள் வந்த பின்னால், புலம்பெயர் தமிழர்கள் தமிழகத்திலே வசிக்கும் அகதித்தமிழர்கள் பற்றிக் கவலைப்பட்டாலுங்கூட, என்ன செய்ய முடியுமென்கிறார், சுகுணா திவாகர்? ஆழியூரானோ வரவனையானோ போய்ப் பார்த்து எழுதிய கட்டுரைகள், இரவிக்குமார் கட்டுரை வாசித்துத்தான் இப்படியான அகதிகள் நிலையே தமிழகத்திலேயிருக்கும் மக்களுக்கே அப்போது இப்போது தெரிகின்றது? இந்நிலையிலே, புலம்பெயர்தமிழர்கள் என்ன செய்யமுடியுமென்று எண்ணுகின்றார்? அகதி முகாமிலே இருப்பவர்களுக்கான கெடுபிடிகளின்பின்னால், உதவ விரும்புகின்றவர்கள்தான் உதவமுடியுமா? உதவி பெற விரும்புகின்ற அகதிதான் பெற்றுவிடவோ பெற்றுவிட்டால் "வால் அடையாளம்" சேராமல் இருக்கமுடியுமா? அகதிகளோடு தொடர்புள்ள தன்னார்வ இயக்கமாகக் காட்டிக் கொள்வதை நடத்து செல்வநாயத்தின் மகன் சந்திரஹாசன், சுப்பிரமணியசுவாமியினதும் இந்திய அரசினதும் சட்டைப்பை பொமரேனியன் என்றுதான் ரீடிப்பிலே சில ஆண்டுகளுக்கு முன்னாலே வாசித்த கட்டுரையிலிருந்து உணர்ந்துகொள்ளமுடிகின்றது. எவ்விதத்திலே, ஈழத்தமிழர்கள் உதவ வந்தாலுங்கூட, உதவமுடியும்?

சாதாரணமான இயக்கம் சாராத ஈழத்தமிழர்களுக்கே உதவமுடியாமல் நிலமை இப்படியிருக்க, "தமிழக ஈழ அகதித்தமிழர்கள் குறித்து, விடுதலைப்புலிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என்று எழுதும் சுகுணா திவாகரின் அவசரத்தினை எண்ணித்தான் கவலைப்பட முடிகின்றது. இதுவரைக்கும், விடுதலைப்புலிகள் தமிழக அகதிகள் குறித்துக் கவலைப்படுவது குறித்து வாசனும் ஜெஜெயும் மட்டுமேதான் அதிகம் கவலைப்பட முடியுமென்று எண்ணியிருந்தேன்.

நிற்க; இந்த அகதிகளைப் பற்றி சுகுணா திவாகரின் புலம்பெயர்ந்த நண்பர்கள் எத்துணை கவலைப்படுகின்றார்கள்? தமிழகம் வரும்போதெல்லாம், அகதிகளைக் காணச் சென்று என்ன செய்கிறார்கள்? அவற்றினைப் பற்றியும் அறிய ஆவல். இவர்களை மையமாக வைத்து நந்தாவும் இராமேஸ்வரமும் எடுக்கும் படத்துறையினர்தான் கவலைப்படுகின்றார்களா? புன்னகைமன்னனிலே பாலச்சந்தரும் கமல்ஹாசனும் கெட்டவர்களாகக் காட்டிவிட்டுப்போனார்கள். இப்போது, இராமேஸ்வரம் வந்தும் இந்தப்படத்துறையினர் உதவி செய்கிறார்களா?

தனிப்பட்ட நிலையிலே, என்னைப் பொறுத்தமட்டிலே, குறைந்தபட்சம் இந்த அகதிகளேனும் உயிருக்கு அதிகம் அஞ்சாமல், அன்றைய நாளுக்கு நிம்மதியாக இருக்கின்றார்கள்; சொந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து உயிருக்கும் உணவுக்கும் அஞ்சுகின்றவர்களுக்கு முதன்மையிடம் உதவுவதிலே கொடுப்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யக்கூடிய ஒரு தேவையாகவிருக்கும்.

*******

நான்காவது கருத்து, புதியமாதவி சங்கரன் பாரிஸின் தலித் மகாநாட்டிலே கலந்து கொண்டபின்னால், கண்ணை வெளிச்சம் திறந்தது (கூசியது??) என்பதுபோல, கீற்றிலே ஒரு கருத்தரங்கு(ப்பயணக்)கட்டுரை வரைந்திருக்கின்றார். தமிழச்சி, அ. மார்க்ஸின் முன்னுரையோடு வந்த ஈழத்துத்தலித் சிறுகதைகளைப் படித்ததோடு ஈழத்திலே தலித்திய நிலை இதுதான் என்பதுபோல முகவுரை எடுத்து எழுதியதற்கு ஒப்பான கட்டுரை புதியமாதவியனது. ஒரு விமானப்பயணக்கட்டுரைகள் எல்லாம் இப்படியாகத்தான் ஒரு புறப்பார்வையினைத் தரும் ஒரு கருத்தரங்கோடு வருமோ என்று தோன்றுகிறது - புலி ஆதரவுக்கூட்டங்களும் இப்படித்தான்; புலியெதிர்ப்புக்கூட்டங்களும் இப்படித்தான். (இயக்குநர் சீமான் அண்மையிலே கனடாவிலே ஈழத்தமிழர்கள் மத்தியிலே பேசும்போது, "ஈழத்திலே தமிழ்மக்கள் படும் துயரங்கள் உங்களுக்குத் தெரியாது; தெரிந்தவன் நான் சொல்கிறேன் கேளுங்கள்" என்ற விதத்திலே (சரியான வரிகள் ஞாபகமில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்) பேசினார் என்பதை ஒரு நண்பர் சொன்னார்; அதுவல்ல அங்கே முக்கியம், கேட்டுக்கொண்டிருந்த ஈழத்திலேயிருந்து புலம்பெயர்ந்தவர்களும் அவ்வரிகளுக்கு ஓங்கிக் கைதட்டினார்களாம்.)

புதியமாதவியை பாரதிதாசனின் தமிழ்த்தேசியத்தோடு உலகத்தமிழ்-யாஹூ குழுமத்திலே ஐந்தாறு ஆண்டுகளின் முன்னாலே பார்த்திருக்கிறேன்; பதிவுகள்.கொம்மிற்காக மும்பாயிலே ஈழத்தமிழ்த்தேசிய ஆதரவுக்கவிஞர் அறிவுமதியை, அவரின் கருத்தோடோடிச் செவ்வி கண்டு போட்டிருப்பதையும் பார்த்திருக்கின்றேன். இப்போது, மேலே சொன்ன, கருணாவின் காசுகளைப் பாரிசிலே முதலீடு செய்திருக்கின்றார் என்று கருணைதாசன் என்ற ஒருவர் அறிக்கைவிட, அதை மறுத்து, ஆனால், கருணாவின் கிழக்குத்தலைமையை வரவேற்கும் தோழர் எம். ஆர். ஸ்ராலின் ஈழத்திலே சாதியமே இன்றைய பிரச்சனையென்று கரகோஷத்திடையே சுட்டிக்காட்டியதை, ஈழத்தமிழ்த்தேசிய ஆதரவாள தமிழக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாளவளவன் அறிந்து கொள்ளவேண்டுமென்று புதியமாதவி கண் திறந்து சொல்கிறார்

"டொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்த பல்கலைì கழகம் பின்னர் எம்.ஏ- முதுகலை பட்டம் கொடுக்க முடிவெடுத்த கேலிக்கூத்து, புதிதாக கட்டப்பட்ட நூல் நிலையத்தை செல்லன் கந்தையா திறந்து வைக்கக்கூடாது என்று சொன்ன ஆதிக்கச் சாதி மனோபாவம், ஆரம்பக்கல்வியைத் தமிழர்களுக்கு மறுத்த தமிழர்களை அடையாளம் காட்டிய தோழர் ஸ்டாலின் அவர்களின் கட்டுரை அதிர்வலைகளை உருவாக்கியது. இதைப்பற்றி எல்லாம் சகோதரர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை? என்ற கேள்வி விசவரூபமெடுத்தது"


டொமினிக் ஜீவா, செல்லன் கந்தையா இவர்களுக்கான அவமதிப்புகள் செய்யப்பட்ட காலகட்டத்திலே, யாழ்ப்பாணத்தினைத் தமது வாக்கு எண்ணிக்கையாலே ஜனநாயகப்பிடிக்குள்ளே வைத்திருந்த அஹிம்சைப்பாதைக்குத் திரும்பிய இயக்கங்கள் தமிழ்த்தேசியத்தைவிட்டுவிட்டு, ஒன்றுபட்ட ஸ்ரீலங்காவுக்காகப் படை நடத்தியதாகத்தான் வரலாறு. இதைத் தலித் மகாநாடு புதியமாதவிக்குத் தெரிவித்ததா தெரியவில்லை. (ஆனால், அவருடைய செவ்வியிலே தமிழ்த்தேசியம்-தலித்தியம் முரண் பற்றிக் குழம்பியேயிருப்பதாகச் சொல்கிறார்)



அதாவது, தமிழத்தேசியமேதான் ஈழச்சாதியத்துக்கான அடிப்படைக்காரணம்... அல்லது சுகுணா திவாகர் சொன்னது மாதிரியாக, தமிழ்த்தேசியமே சாதிய அடிப்படையிலான இந்துத்துவாத்தனமேதான்.... சாதிய அடிப்படையிலான இந்துத்துவாத்தனமென்றால், கிழக்கிலே கழுதாவளையிலேயில்லாத, வடக்கின் மேலாதிக்கத்திலே வந்ததாக எம். ஆர். ஸ்ராலின் சொல்லும் தமிழ்த்தேசியமேதான்.... அந்தத்தமிழ்த்தேசியம் வருவதற்குமுன்னால், அல்லது அது அழிந்துபோனால், சாதியமே அறியாத முன்னைய சமாஜவாதி, பருத்தித்துறையின் பெரும்பிறப்பும் கிளிநொச்சியின் குடியிருப்புமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி சொல்லும் அல்லது எம். ஆர். ஸ்ராலின் செல்வநாயகம் அஸ்தி வருவதற்குமுன்னால் கண்ட சமரசம் உலாவும் ஸ்ரீலங்காவின் சாதி, மத, மொழி பேதமற்ற சமுதாயம் நிலவும்......

........நிலவிலே பேசியவர்களையெல்லாம் சமதர்ம நியாயவான்களென்று மறந்துவிட்டு
......நம்புவோம்.

XI
"Slave, come to my service!" "Yes, my master. Yes?"
"If all this is so, then what is good?"
"To have your neck broken and my neck broken,
to be thrown into a river - that's what is good!
Who is so tall as to reach the heavens?
Who so broad as to embrace plains and mountains?"
"If that's so, I should kill you, slave: I'd rather you go before me."
"And does my master believe that he can survive for three days without me?"
- Joseph Brodsky, 1987, "Slave, Come to My Service"

Sunday, December 02, 2007

முகிலின் பின் ஒளி

Moon Behind the Clouds

'07 நவம்பர்

புல்லென்று முளைக்கிறது
புள்ளென்று பறக்கிறது
நீ தூங்கு
காலம்

Wednesday, November 28, 2007

ஓய்வு

Rest

அடிப்படைப்படம்: '07 செப்ரெம்பர்
உருமாற்றம்: '07 நவம்பர்

Wednesday, November 21, 2007

சற்றே சும்மா க/கிடவும் பிள்ளாய்

புலம் - 25

"America is about to enter a presidential election year. Although the outcome is of course impossible to predict at this stage, certain features of the campaign are easy to foresee. The candidates will inevitably differ on various domestic issues - health cre, abortion, gay marriage, taxes, education, immigration - and spirited debates are certain to erupt on a host of foreign policy questions as well........

Yet on one subject, we can be equally confident that the candidates will speak with one voice. In 2008, as in previous election years, serious candidates for the highest office in the land will go to cosiderable lengths to express their deep personal commitment to one foreign country - Israel-as well as their determination to maintain unyielding U.S. support for the Jewish state. Each candidate will emphasize that he or she fully appreciates the multitude of threats facing Israel and make it clear that, ig elescted, the United States will remain firmly committed to defending Israel's interests under any and all circumstances. None of the candidates is likely to criticize Israel in any significant way or suggest that the United Sates ought to pursue a more evenhanded policy in the region. Any who will probably fall by the wayside"

-John J. Mearsheimer and Stephen Walt, in the Introduction of their book, "The Israel Lobby and U.S. Foreign Policy"


வைகோ-கருணாநிதி இடையேயான சிக்கல் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் என்பது எனது கருத்து; அவர்களுக்குத் தம்மைத் தக்கித்து வைத்துக்கொள்ளத் தேவைப்படும் உள்நாட்டு அரசியல் ஈழத்தமிழர்களுக்கு அவசியமானதல்ல என்பதும் வெறும் அரசியற்பார்வையாளர் என்பதற்கப்பால், ஈழத்தின் பிரச்சனையையும் உள்ளே ஊறப்போட்டு, உள்ளூரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்லும் உரிமையும் தேவையும் ஈழத்தமிழர்களுக்கு இல்லை என்பதும் என் உறுதியான நம்பிக்கை. மேலும் நம்பிக்கை என்பதிலும்விட, அப்படித்தான் இருக்கவேண்டுமெனும் கட்டாயத்தேவையென்றே சொல்வேன். (எனக்குத் தனிப்பட்ட அளவிலே, ஜெயலலிதா + சோ + ராம் + சுசுவாமி + எஸ்வி சேகர் என்ற மந்தைவரிசையிலே எழுதப்படாத புரிந்துணர்வுடன் இயங்கும் கூட்டணி எக்காலகட்டத்திலும் ஈழத்தமிழர்களுக்குப் பயன் தராதென்ற முழு நம்பிக்கை.)

விடுதலைப்புலிகளின் எம்ஜிஆருடனான அருகாமையும் கருணாநிதியின் மற்றைய ஈழ இயக்கங்களுடனுமான (டெலோ குறிப்பாக) அருகாமையுங்கூட கருணாநிதியினை விடுதலைப்புலிகளுடன் முற்றிலும் நெருங்கவிடவில்லை என்பதிலும் ஓரளவுக்கு உண்மையுண்டு. ஆனாலும், ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னால், ஐபிகேஎப் காலத்திலே கருணாநிதியின் ஈழத்தமிழர் நிலைப்பாடு, விடுதலைப்புலிகளுடனுங்கூட அத்துணை மோசமாக இருக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். (உலகத்தமிழினத்தலைவர் என்ற கோதாவிலே வம்புக்கு கருணாநிதி.எதிர்.பிரபாகரன் என்று நிறுத்தவும் சில உதிரிகள் கமல்.எதிர்.ரஜனி என்ற பாணியிலே நிறுத்தும் குரங்குத்தனத்தினை விட்டுவிடலாம்; அதைக் கருணாநிதியே கணக்கிலே எடுத்திருக்கமாட்டார்) இன்றைய நிலையிலே, ஈழம் தொடர்பான ஆதரவிலே ஆட்சியிலிருக்கும் கருணாநிதிக்கு இருக்கும் சிக்கல்கள், எதிரணியிலேயிருக்கும் வைகோவுக்கிருக்கும் சிக்கல்களை விட அதிகமானதுதான்; கருணாநிதிக்கு இழக்க ஆட்சியிருக்கின்றது; வைகோவுக்குத் தனிப்பட்டச் சிறைப்படவே வாய்ப்புண்டு. அதனால், ஆட்சியிலிருக்கும் கருணாநிதி, தமிழ்ச்செல்வன் இறப்புக்கு அவ்வசனவொழுக்கினை (கவிதை என்று எழுத ஒப்பமில்லை; அது கவிதையா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகக்கூட முக்கியமற்ற விடயமிங்கே) எழுதியதும் தொடர்ந்து "தமிழிரத்தத்தொடர்பு" (இவ்விதமான உணர்ச்சிப்பேச்சுகள் தனிப்பட இப்போதெல்லாம் எனக்குப் புல்லரிக்கவோ ஹாப் அரிக்கவோ செய்வதில்லை என்றபோதுங்கூட) பற்றிப் பேசியதும் வைகோ தமிழ்ச்செல்வன் நினைவுப்பேரணியிலே கலந்ததிலும்விடப் பெரியவிடயமென்பதிலே எனக்கேதும் சந்தேகமில்லை.

[தனிப்பட்ட, வைகோவினைக் கருணாநிதியினைவிட எனக்குப் பிடிக்கும் என்பதினையும் இவ்விடத்திலே சொல்லிக்கொள்ளவேண்டும்; அவர் ஜெஜெ என்றவரிடத்திலே சேர்ந்திருப்பது பிடிக்கவில்லையென்றபோதுங்கூட, அஃது அவருடைய உள்ளூர் அரசியலென்பதினாலே, எனக்கேதும் சிக்கலில்லை; திருமாவளவன் தமிழகத்தின் தலித் நலனுக்கான எவரோடு கூட்டுச்சேரவேண்டுமென்று சொல்ல எனக்கு உரிமையோ அருகதையோ இல்லை என்பதிலுள்ள தெளிவே இங்குமுண்டு. வைகோவின் நிலையிலே கருணாநிதியிருந்திருப்பின், பதினெட்டு மாதகாலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுக்காகச் சிறையிலே இருந்திருக்க ஆயத்தமாகவிருந்திருக்கமாட்டார் என்பதும் என் தனிப்பட்ட புரிதல்].

ஈழத்தமிழர்கள் (ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டென்பதாலே, என் கருத்தே இங்கே), தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியலிலே யார் என்ன செய்யவேண்டும் என்று வாயைத் திறக்காதிருத்தல் உத்தமம் என்று சொல்லமாட்டேன்; உத்தமத்திலும் உத்தமம் என்றே சொல்வேன். ஈழத்தமிழர்களுக்கு(ம் விடுதலைப்புலிகளுக்கும்) தமிழகத்தின் நலன்விரும்பிகள் ஆதரவினை இந்தியத்தேசியவாதப்பூதத்தினைக் கிளப்பிப் பயமுறுத்தும் பத்தி(ரிகை)யாளர்களையும் அரசியல்வாரிகளையும் அரசியல்வங்கரோத்துகளையும் மீறித் தரும்போது, இதுவரை நாள் ஈழத்தமிழர்களோ விடுதலைப்புலிகளோ என்ன செய்யவேண்டுமென்று சொல்லி நான் வாசிக்கவில்லை. அப்படியாக, "அரிவுரை" சொல்வதெல்லாம், இந்து ராம் அன் கோவும் அவற்றினையொத்த தமிழகத்திலேயே அடையாளமற்ற அரசியல் உதிரிகளுமேதான். இத்தகு பெருந்தன்மையான போக்கினை ஈழத்தமிழர்களிலே சிலர் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அவர்களின் குறைப்பார்வை, ஈழத்தமிழர்களை ஆதரிப்பதாலே (அல்லது தாம் ஆதரிக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதாலே), ஈழத்தமிழர் நலன்விழை தமிழக அரசியல்வாதிகள் "இதைச் செய்யவேண்டும், இதைச் செய்யக்கூடாது" என்று தமிழக உள்ளூர் அரசியலிலே மூக்கினை நுழைக்கும் நிலைக்கு உள்ளாக்குகின்றது. தமிழகத்தின் அரசியற்கூட்டணிகள், கூத்தணிகள், கூற்றணிகளைப் பற்றி ஈழத்தமிழர்களுக்கு, வெறும் தம் நலனைப் பிணைத்துக்கொண்டு காண் அரசியற்பார்வையாளர்களாக - 'புஷ் ஈராக்கிலே என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது' என்று சொல்வதுபோல- கருத்துகள் இருப்பதிலே தவறில்லை; ஆனால், அதற்குமேலே, "ஈழத்தமிழர் நாம் சொல்கிறோம், கருணாநிதி சரி/பிழை; வைகோ பிழை/சரி" என்று பேச உரிமையுமில்லை; நடைமுறைத்தக்கித்தலுக்கு, அப்படிப்பேசுவது நலனானதுமல்ல. ஈழத்தமிழர்கள் அல்லர், தமிழகத்துத்தேர்தல்களிலே வாக்குகளை இடுகின்றவர்கள் என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும்; அப்படியாக இட்டாலுங்கூட, தமிழகத்திலிருக்கும் தமிழர்கள் எண்ணிக்கையோடு பார்க்கும்போது, நாம் எதையும் எம் சொந்த விருப்புவெறுப்புக்கருத்துகளினாலே மட்டும் சாதித்துவிடமுடியாதென்பதையும் உணரவேண்டும். தமிழகத்தேர்தல்களிலே வாக்கிடுகின்றவர்கள், தமிழ்வலைப்பதிவுத்தமிழர்களல்ல; ஈழத்தமிழர்கள் (& அவர்களின் நலன்விரும்பிகள்) தன்னலன் பேணும் திட்டங்களை வெற்றி பெறச்செய்ய தம் நலன்களுக்கு எதிரானவர்களுக்குச் சமனான தொகையிலேயிருப்பது வலைப்பதிவுகளிலே மட்டுமே இன்றைய நிலையிலே சாத்தியப்படும்.

இன்றைய நிலையிலே, எமது முக்கியமான தேவை, தமிழகத்திலே எப்படியாக ஈழத்தமிழர்நலன்விழைசக்திகள் பலம் பெறுகின்றன என்பதிலேயிருக்கவேண்டுமேயொழிய, தமிழகத்தின் ஈழத்தமிழர்நலன்விழைசக்திகள் தமக்குள்ளே தமிழகத்தின் உள்ளூராட்சியிலே என்ன நிலைப்பாடுகள், எவ்விதமான கூட்டணிகள் கொண்டிருக்கவேண்டுமென்பதல்ல. சுசுவாமி, 'இந்து' ராம் போன்ற கொள்கையளவிலான ஈழ எதிர்ப்புசக்திகள் எப்படியாக தமிழக மக்களிடையேயும் இந்தியாவின் இலங்கை தொடர்பான செயலளவிலேயும் குரலிழந்து பலமிழந்து ஓரங்கட்டப்படவேண்டும் என்பது முக்கியமேயொழிய, கருணாநிதி/வைகோ/ராமதாஸ்/திருமாவளவன் எப்படியாகக் கூட்டணி தம் உள்ளூர் அரசியலுக்காகக் கொண்டிருக்கின்றார்கள் என்பதிலல்ல. சொல்லப்போனால், ஆளும் கட்சிகள் & எதிர்க்கட்சிகள் என்று இருபுறங்களிலும் ஈழத்தமிழர்கள்நலன்பேணுகின்றவர்கள் இருப்பதும் மேன்மையே; ஈழத்தமிழர்களின் நலன் ஒரு பக்கத்துக்குரலாகக் கூர்மைப்படுத்தப்படும் அவலம் குறைகின்றது. நெடுமாறன் கருணாநிதியினை ஆதரிக்காமல், சுப. வீரபாண்டியன் கருணாநிதியினை ஆதரித்தாலுங்கூட, ஈழத்தமிழர்கள் விடயத்திலே அவர்களிருவரும் காட்டும் குரலின் ஒத்திசைப்பிலே எவ்விதப்பிசிறுமிருப்பதில்லை.

கருத்தளவிலே என் விருப்பு வெறுப்புகள் தமிழக அரசியல் குறித்தும் அதன் கட்சிகள் குறித்தும் எதுவாகவுமிருக்கலாம்; மாயத்தேவர் & நாராயணசாமி எம்ஜிஆருடன் கூட்டுச்சேர்ந்திருக்கவேண்டுமா இல்லையா என்பதிலிருந்து, சிவாஜிகணேசன் தனிக்கட்சி தொடங்கியிருக்கத்தான் வேண்டுமா, திருமாவளவன்&ராமதாஸ் ஆகியோர் குஷ்புவினைத் தாக்கியிருக்கவேண்டுமா என்பவை ஊடாக, கனிமொழி, சல்மா அரசியலிலே இறங்கியிருக்கவேண்டுமா, திருமாவளவன் பார்ப்பனியசடங்குகளைச் செய்யவேண்டுமா, ரவிக்குமார் தொடர்ந்து பெரியாரைத் தாக்கத்தான் வேண்டுமா என்பதுவரை எனக்கு ஆயிரம் தனிப்பட்ட கருத்துகள் தமிழக அரசியல் குறித்து இருந்திருக்கின்றன; இருக்கின்றன. ஆனால், ஈழம் குறித்து வரும்போது, நான் அமெரிக்க "liberal, but not progressive" உயூதனாகிறேன் - "Anything, but Israel"; பாரதியும் டென்ஸியாவோ பிங்கும் சேரச்சொன்னால், "எலியைப் பிடிக்கக்கூடிய பூனை (எம்மைத் தாக்காதவரைக்கும்) எந்த நிறம் இருந்தாலும்-அவை யாவும் ஒரே தரமன்றோ இந்த நிறம் சிறிது என்றும்-இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ? வண்ணங்கள் வேறுபட்டால் -அதில் மானுடர் வேற்றுமையில்லை எண்ணங்கள் செய்கைகள் எல்லாம்-இங்கு யாவருக்கும் ஒன்றெனல் காணீர்." சண்டே லீடர் சொல்வதன்படி "ஏசியன் ரிபியூன்" ராஜசிங்கம் திருவிளையாடல்கள், பாரிஸ் தலித்மகாநாடு அமைப்பாளர்களில் ஒருவரான ஸ்டாலின்(ஞானம்)- இலங்கையரசு வனவிலங்கதிகாரியென்று கொடுத்த கடவுட்சீட்டுடன் இங்கிலாந்து போன கருணா உறவுக்குற்றச்சாட்டுகள், பேச்சுவார்த்தை நடக்கவேண்டும் என்று சொல்லும் விழாவிலேயே ஆயுதம் கையளிக்கும் அமெரிக்கத்தூதுவர், "“Brigadier” Thamilchelvan, The “Smiling” Face of LTTE" என்ற தலைப்புடன் வெளியான கட்டுரையை "Direct Hit" என்று தேவைக்கேற்ப உள்ளடக்கமும் சுருக்கி வெளியிடும் Frontline, கடந்த பதினைந்து மாதங்களில் 4082 விடுதலைப்புலிகளும் 1066 மக்களும் இறந்தார்கள் என்ற இந்திய உளவுத்தாபனம்சார் the South Asia Intelligence Review of the South Asia Terrorism Portal அறிவுக்குளத்தின் அற்புதக்கணக்கெடுப்பினை வெளியிடும் outlook, ஈழத்தமிழர்களின் கடவுட்சீட்டுகள் பற்றிய கருத்தின்மேலே கேள்வியெழுப்பினால், "எனது இந்தியா; எனது தேசம்" என்று தமது ஐந்தாம் உரிமைக்கு உருக்கொடுத்து, 180 பாகையிலே வாதத்தினைத் திருப்பும் இந்தியத்தமிழ்ப்பத்திரிகையாளர்கள் இப்படியானவர்கள்/வை பற்றிய செய்திகளை வாசிக்கும்போது, நான் தொடர்ச்சியாக, John J. Mearsheimer உம் Stephen Walt உம் எழுதிய "The Israel Lobby and U.S. Foreign Policy" நூலினை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.

நாம் எம் நியாயங்களை எமக்கே நியாயமாகப்படும் வழிகளிலே செயற்பட்டுத் தக்கிப்பதுதான் முக்கியம்; ஈழத்தின் வடக்குக்கிழக்கிலே இனவிகிதாசாரம் திட்டமிட்டப்பட்டு மாற்றப்படும்வேளையிலே அதையே முன்னிலைப்படுத்தி ஆதாரமாக அமெரிக்காவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவர் பொஸ்ரன்குளோப்புக்கு ஈழத்தின் கிழக்கிலே தமிழர்கள் உரிமைகொள்ளமுடியாதென்ற விதத்திலே ஆசிரியருக்கான கடிதம் வரையும்போது, கிண்ணியாவிலே, முஸ்லீம் குடியிருப்புகளிலேயிருப்பதாலே சாதி பற்றி எமக்குப் பாதிப்பில்லை என்று ஒருவர் சொன்னதாகத் 'தூ'வி, கீதையைப் பின்பற்றும் நெடுமாறனுக்கும் திருமாவளவனுக்கும் (sic), தம்மோபதேசம் செய்யும் சிங்களவர்களே மேல் என்று எழுதுகிற "பாரிஸவாதக்காரர்கள்" இருக்கும்போது, தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று பார்ப்பதோ, ஈழத்தவருக்குக் கூடுதலான ஆதரவு வழங்குவது வைகோவா, கலைஞரா என்று பட்டிமன்றம் வைப்பதோ ஈழத்தவருக்கான இப்பொழுதின் -மட்டுமல்ல, எப்பொழுதினதும்- முக்கிய வேலையல்ல; தேவையுமல்ல.

நூற்றாண்டின் முன்னான, ஆர்மீனியர்கள் மீதான துருக்கியக்கொடுமைகளையோ, துருக்கியகுர்திஷியர்களின் போராட்டங்களையோ பெருவிரல்நுனியிலே அமுக்கும் பேரரசுகளின் காலத்திலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்; கருத்துகளையும் நடைமுறைகளையும் ஒன்று சேர முன்னெடுத்துக்கொண்டு செல்லக்கூடிய வசதியினைக் கொண்டிருக்கவில்லை; "ஆயுதம் தாங்காத பொதுமகனை/மகளைக் கொல்லாத எதுவுமே பயங்கரவாதமில்லை" என்ற எளிமையான சூத்திரத்தினை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதுபோலவே, எமக்கே நியாயமென்று படும் எளிமையான தீர்வுகளைச் சிக்கலான கொள்கை-நடைமுறைப்படுத்தல் நிலைகளுக்கிடையே எடுக்கவேண்டிய நிலையிலேயிருக்கின்றோம். இந்நிலையிலே, தம்மளவிலே பலமற்ற எரித்திரியாவோ, பாஸ்க்/கடலோனியவிடுதலையமைப்புகளோ ஈழவிடுதலையை ஆதரிக்கின்றன என்று மகிழ்ச்சியோடு பதிவுகளிடுவதாலோ, "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே; இருட்டினில் நீதி மறையட்டுமே; தன்னாலே வெளிவரும் தயங்காதே; தலைவர் தக்க பதிலளிப்பார்; கலங்காதே" என்று எம்ஜிஆர் படப்பாடலாகப் பதிவெழுதுவதாலோ, எமக்குள்ளே பழங்கதை பேசி, எம் உற்சாகத்தினைத் தட்டியெழுப்புவதற்கப்பால் எதுவுமே நடந்துவிடப்போவதில்லை. ஈழ விடுதலையை ஆதரிக்கக்கூடிய (குறைந்தபட்சம் எதிர்க்காத) இந்திய ஆங்கில ஊடகமொன்றினை ஏற்படுத்த உழைக்காத நாங்கள், கருணாநிதி-வைகோவின் உள்ளூர் அரசியல் பற்றிப் பேசுவதற்கு எதற்காக இத்துணை பொழுது வீணாக்கவேண்டும்?

சென்ற வாரம் நெவாடாவிலே அமெரிக்க ஜனநாயகக்கட்சி சார்பிலே அதிபருக்காகப் போட்டியிடத் தேர்ந்தெடுக்கக் கேட்டு நிற்கும் வேட்பாளர்கள் இடையே விவாதம்; ஒரு பாக்கிஸ்தானின் இன்றைய நிலை பற்றி ஒரு கேள்வி; "பாக்கிஸ்தானிலே அமெரிக்க அதிபர் எதை முக்கியமாகக் கருதவேண்டும்? மனித உரிமைகளையா? அமெரிக்க நலன்களையா?" இங்கே வேட்பாளர்கள் என்ன பதில்களைத் தந்தார்கள் என்பதல்ல நாம் பெறவேண்டிய பாடம்; எவ்விதத்திலே அமெரிக்கா(வும் இந்தியாவும் - பி. ராமன், ஹரிஹரன் "ஆய்வுக்கட்டு உரை"களைக் காண்க) நடக்கமுயல்கின்றதென்பதையே காட்டுகின்றது; இதே மனப்பாங்கிலேதான், குடியரசுக்கட்சி சார்பான நவ-பழமைவாதப்போக்குள்ள ரைஸும் போன ஆண்டு லெபனானிலே இஸ்ரேலின் வெற்றியின் பின்னால், "we have to talk (from the balance of power at this very moment) - the status quo; not from where we were two weeks back (in which time Lebanon militants seemed to be in better position)" என்ற பாணியிலே சொன்னார்; துருக்கியிலே ஆர்மீனியர்/குர்தீசியர் தொடர்பான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்; தூதுவர் பிளேக், ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுதம் கையளித்துப் பேச்சுவார்த்தைக்கும் இனிப்பினைக் கொடுக்கின்றார். இச்சூழலிலே ஈழத்தமிழராக நாம் ஆதரிப்பது, கொள்கையளவிலே, ஜனநாயகக்கட்சியையா, குடியரசுக்கட்சியையா என்பதல்ல கேள்வி; வெல்லும் கட்சி ஈழத்தமிழருக்கு, அவர்களின் இனவிகிதாசாரம் திட்டமிடப்பிழிந்து மாற்றப்படும் நிலையிலே, அவர்களுக்கு ஆதரவாக என்னத்தினைச் செய்யவைக்கமுடியுமென்பதையே காணவேண்டும். இதே நோக்குடனேதான் கனடாவிலோ, பிரிட்டனினோ நாம் நோக்கவேண்டும். ஹார்ப்பரை ஈழவேந்தன் சந்தித்தாலுஞ்சரி, தமிழ்ச்செல்வன் நினைவுவிழாவிலே லிபரல் டெமோகிரட்டிக் கட்சி பாஉ கலந்துகொண்டாலுஞ்சரி, வெல்வது நமது நலனும் நோக்காகவேயிருக்கவேண்டும். உலகம் சார, புலம்பெயர்ந்த தமிழர்களும் அவர்களின் வரும் சந்ததிகளும் தாம் வாழும் நாட்டிலே அவ்வூரரசியலிலே -ஈழநலனையும் ஒரு பகுதியாக இருத்தி,- பங்கேற்க வேண்டும். இத்தாலியர்களின் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இன்றைக்கும் இத்தாலிய அரசவையிலே மேலவையிலே சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலையை மனதிலேயிருத்தி, புலம்பெயர்ந்த தமிழர்களின் உலகலளாவிய அரசியல்வாதிகள்கூட்டமைப்பொன்று உருவாகி, அவரவர் நாட்டிலே ஈழத்தமிழர்களின் நலனையும் பேசும்வகையிலே ஆக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், நாம் தக்கிக்கமுடியாது. நிலைமை இப்படியாகவிருக்கும்போது, கருணாநிதி-வைகோவின் உள்ளூர் அரசியலைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமென்ன என்று எனக்குப் புரியவில்லை. தேவையற்ற பிரச்சனைகளை மட்டுமே இவை கொணரமுடியும்.

"சமாதான ஒப்பந்த"த்தின் பின்னால், கௌசல்யன், சந்திராநேரு, ஜோஸப் பரராஜசிங்கம், விக்கினேஸ்வரன், ரவிராஜ் கொல்லப்பட்டபோது கள்ளமோனத்தவமிருந்த பேருலகு, கதிர்காமர் இறந்தபோது "பயங்கரவாதம்" என்று ஓலமிட்டத்தைக் கண்ட எமக்கு, தமிழ்ச்செல்வனின் கொலலயைக்கூடக் கதிர்காமரின் இறப்பிலிருந்துதான் 'சமாதானகாலத்திலே' அரசியல்வாதிகள் கொல்லப்படத் தொடங்கியதாக வரலாறு எழுதும்போது ஆச்சரியமேற்படவில்லை. ஆனால், இதனை நாம் மட்டும் உணர்ந்தால் போதுமா? அல்லது, "தமிழ்ச்செல்வன் இறந்தார்; லபோ! லபோ!!" என்று அரற்றினால் மட்டும் போதுமா? ஒருவன் இயக்கத்த்துக்கென்று போனால் இறப்பினை எதிர்பார்த்தே போகிறான்; இறப்புகள் இல்லாமல், ஆறு தாண்டி அக்கரை போகலாமென்று நம்பியா போனார்கள்? கொண்ட நோக்கத்துக்காவல்லவா? அவ்விறப்பும் அந்நோக்கத்திற்கு ஓரளவுக்கு பயன்படுமென்றால், அதைப் பயன்படுத்துவதுதான் இறந்த போராளிக்கும் அவனின் நோக்குக்கும் செய்யப்படும் கைமாறு. அவ்வகையிலேதான் தமிழ்ச்செல்வனின் இறப்பினைப் பார்க்கவேண்டும். இணையத்திலே சிலர் விடுதலைப்புலிகள் சாதியமைப்பினைப் பேணுகின்றார்கள் என்பது தொடக்கம் தமிழ்நாட்டிலே ஈழத்தமிழாதரவு செத்துவிட்டது என்பதாக அமைக்கப்பட்ட கருத்தமைவுகள் உடைந்துபோக, இவ்விறப்பின் பின்னாலான வாதங்களும் பதில்வாதங்களும் உதவியிருக்கின்றன. அவ்வகையிலே தமிழ்ச்செல்வனின் இறப்பு அமுக்கப்பட்ட எமது குரலைக் கேட்க உதவியிருக்கின்றது. தமிழ்ச்செல்வன் மறந்து அழகிய தமிழ்மகன் விஜயுக்குக் கட் அவுட் வைக்கப்போகும்முன்னால், அதனை நாம் பயன்படுத்தவேண்டும். (கருணாநிதியின் 'கவிதை' அந்தளவிலே ஈழத்தமிழர் நினைவினைத் தமிழகத்திலே நீட்டப் பயன்பட்டிருக்கின்றது என்பதிலே மகிழ்ச்சியடையவேண்டும்; ஜெயலலிதா உச்சநீதிமன்றத்துக்குப் போனால், தன்னை நோக்கி மக்கள் எதிர்ப்பு திரும்பிவிடுமோ என்று அடங்கிக்கொண்டதையும் ஞாபகத்திலேயிருத்தவேண்டும்). இந்நிலையிலே, கருணாநிதி-வைகோ அரசியலிலே எமக்கென்ன கவலை வேண்டும்? "தமிழ்ச்செல்வனின் பின்னால், நடேசனை ஏன் நிறுத்தினீர்?" என்று கருணாநிதியோ, வைகோவோ விடுதலைப்புலிகளைப் பார்த்துக்கேட்டார்களா? ஆக, டிபிஎஸ் ஜெயராஜுக்கும் ப்ரொண்ட்லைனுக்கும் பிகே பாலச்சந்திரன்+ இந்துஸ்தான் டைம்ஸுக்குமட்டுமேதான் நடேசன் இந்தியாவிடம் கெஞ்சுவாரா மிஞ்சுவாரா என்ற கணிப்பெடுப்புகள் முக்கியமாகின்றன. இதுதான் நிலையென்றிருக்க, நாமேன், "வைகோ, நெடுமாறன் கைது பற்றிப் புலிகள் கருத்தினைத் தெரிவிக்கமறுத்துவிட்டார்கள்" என்ற இந்துவின் "முக்கியமான, ஆய்வுச்"செய்திக்குச் சேர்ந்தாடுவதுபோல, உதயன் தலையங்கத்தையும் கோகர்ணனின் தினக்குரல் கட்டுரையையும் போட்டு வறுத்தெடுத்துச் சொல்முத்துப் பொறுக்கவேண்டும்?

கொஸூவோவிலே ஒரு முன்னைய அல்பேனியவழிவந்த கெரில்லாப்போராளி ஆட்சிக்கு வருகின்றார்; பயங்கரவாதத்தினை எதிர்க்கும் ஏகாதிபத்தியங்களுக்கு எவ்வித எதிர்ப்புமிருப்பதாகத் தெரியவில்லை; சேர்பிய"க்கொலையாளிகள்" வரவில்லை என்பதைமட்டும் தெரிவித்துக்கொள்கின்றார்கள். சென்ற ஆண்டு, ஒரு விவரணம் (The Broklyn Connection) வந்தது; அமெரிக்கப்பிரஜையான கொஸவோ-அல்பேனியர் ஒருவர் எப்படியாக அமெரிக்கத்தேர்தலிலே நிற்பவர்கள் தொடக்கம் ஆயுதக்கடத்தற்காரர்கள்வரை உறவு வைத்திருந்து கொஸவோ-அல்பேனியர்களுக்காகப் போராடுகின்றார் என்பதை அவரை விவரணத்துக்காக எடுக்க அனுமதித்த விவரணம். அமெரிக்க அரசுக்கு இதுவரை அவர் பயங்கரவாதியாகத் தெரிந்தாரா என்று தெரியவில்லை. ஏகாதிபத்திய அரசியல் "நம் ஏகாதிபத்திய அதிபர் X நாட்டிலே எதை முக்கியமாகக் கருதவேண்டும்? மனித உரிமைகளையா? எம் ஏகாதிபத்திய நலன்களையா?" என்பதாக நடப்பது; இதிலே, கோக்கோகோலாவும் உள்ளாடைதயாரிக்கும் சிறுபிள்ளைகளும் மொன்ஸாண்டோ விதைகளும் கருத்தளவிலே எவ்விதமான தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், நடைமுறையிலே எத்துணை X நாட்டிலே ஏற்கனவே வேறேதோ கருத்தமைப்பிலே நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிறுபான்மைக்கு மேலதிகத்தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். காலாசினிக்கோவ் நெத்திப்பொட்டிலே நிற்கும் நேரத்திலே, உபரி உற்பத்தியும் உள்ளூர் உற்பத்தியும் கொக்கோகோலாவுக்கு அண்டி வாரோல் வரைந்த ஓவியமும் பேசிப் பயனாகப்போவதில்லை. அதற்காக, கருத்தாக்கத்தினை விட்டுவிடவேண்டிய அவசியமில்லை. ஆனால், அதனைச் செயற்படுத்தும் தளமும் போக்கும் வேறாகவிருக்கவேண்டும். கடைசியிலே தக்கிப்பது, "Anything, but Israel" என்பதுதான். கருணாநிதியும் வைகோவும் ஸ்டாலினும் மார்க்ஸும் அவர்களின் உள்ளூர் அரசியலுக்காக, கவிதை எழுதினால் என்ன, கடதாசியிலே மலம் துடைத்து அனுப்பினாற்றான் நமக்கென்ன? வாயை நமக்குத் தேவையற்ற பிரச்சனையென்று மூடிக்கொண்டிருக்கவேண்டாமா? அல்லது "முட்டி முடுக்குது, மூத்திரம் பெஞ்சுதான் ஆகோணும்" என்றால், "இது நானாக என் கிணத்திலே வீட்டுத்துலாவைப் போட்டு அள்ளிக்குடிச்ச தண்ணியை வைத்து என்ரை உடம்புச்சிறுநீர்த்தொகுதி உற்பத்தியாக்கிய சொந்த மூத்திரம்" என்ற ஒரு கருத்தினையும் சேரச் சொல்லிவிட்டுப் பெய்யக்கூடாதா? எதுக்கு "ஈழத்தவர் கருணாநிதி பற்றிக் கருத்து, கந்தசாமி பற்றிக் கக்கூசு" என பாணியிலே இந்துவுக்குச் செய்தி அள்ளிக்கொடுக்கும் தேவை??

[இப்படியான சூழலிலே, இரயாகரன் போன்றவர்கள், புலிபாஸிஸ்ட் என்று திட்டினால், அவர்களுக்கு Umbreto Eco இன் "Eternal Fascism: Fourteen Ways of Looking at a Blackshirt" இனைச் சுட்டிக் காட்டி அவர்களையும் ஏதோவிதத்திலே பாஸிஸ்ட் ஆக்கிவிட்டுப்போகலாம். அட! மிஞ்சி மிஞ்சிப்போனது, பாலஸ்தீனர்களின் குரலுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றவர்களைக்கூட, "Islamofascists" என்று திட்டுகின்றவர்களினை "American Fascists: The Christian Right and the War on America " என்று திட்டி நூல் வந்திருக்கின்றது. அந்தளவிலே சந்தோஷம் - நான் தனியன் அல்லன் என்று :-)]

தமிழக அரசியல் குறித்து ஓர் ஈழத்தமிழனின் மிகவும் சுயநலமான, சந்தர்ப்பவாதக் கருத்தாக இது தோன்றலாம்; ஆனால், கொஞ்சம் நிதானமாக வாசித்தால், அப்படியல்ல என்று புரிந்துகொள்ளப்படலாம்.

தொடர்புள்ள பதிவொன்று
வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா? - வசந்தன்

//yet to be edited//

புகார்வெளியில்

Out there

'07 Nov, 20 Tue., 20:15

Wednesday, October 31, 2007

வண்டிக்கொல்லை


caryard

'07 ஒக்ரோபர் 31 புதன்
வெஸ்ற் ஹார்ட்போர்ட், கனடிகட், அகூநா

Monday, October 22, 2007

Saturday, October 20, 2007

Sunday, October 14, 2007

வன்மையாகக் கண்டிக்கிறோம் :-)




வன்மையாகக் கண்டிக்கிறோம்
14 ஒக்ரோபர் 2007 ஞாயிறு அன்று தமிழ்மணத்திலே நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற, நிகழப்போகும் கீழ்வரும் நிகழ்வுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்

1. "தமிழ்மணத்தில் உள்ள மக்களின் எதிரிகள் யார்?" என்று கேள்விகேட்ட தமிழரங்கம் இரயாகரனை "பிளேன் ரீ குடியுங்கள்" என்று கிண்டல் செய்ய டொக்டர். எம். கே. முருகானந்தனை ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியின் சார்பாக பூர்ஷுவா இன்ரலெக்சுவலாக அடையாளம் கண்டு கண்டித்தோம்

2. "பிளேன் ரீ குடியுங்கள்" என்று தன் கருத்தைப் பண்போடு சொன்ன டொக்டர் எம். கே. முருகானந்தனின் கருத்துச்சுதந்திரத்தினை அகில உலகப்புரட்சித்"தயாரிப்பாளருக்கு வந்த மிரட்டல்" என்று அறிக்கை விட்டு, தொடர்ந்து "கிட்னி மோசடி டாக்டருக்கு விழுந்த அடி" என்று அசுரத்தனமாக இடுப்புக்குக் கீழே குத்தும்வகையிலே மாற்றுக்கருத்து ஏதுமின்றிக் கிண்டல் செய்த வீராதிவீரனைக் கருத்துச்சுதந்திரத்தின் சார்பாகக் கண்டிக்கிறோம்

3. இப்பதிவினைப் போட்ட எம்மை ஏதாவது காரணம் கண்டு கண்டிக்கப்போகும் எவரையும் மேற்கூறிய இரண்டு காரணங்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து எதிர்காலத்திலே கண்டிப்போம்

இப்படிக்கு
பாசிசபுலிப்பினாமிமாபியாபுட்சோல்யர்
அமெரிக்க ஏகாதிபத்தியச்சாப்பாடு ஏரியா பொறுப்பாளர்
மொக்கன் முழுக்கோழிச்சாப்பாட்டுக்கடை
:-)

Gimpel the Fool

அரைகுறை

Gimpel the Fool
"I am Gimpel the fool. I don't think myself a fool. On the contrary. But
that's what folks call me. They gave me the name while I was still in school. I
had seven names in all: imbecile, donkey, flax-head, dope, flump, ninny, and
fool. The last name stuck. What did my foolishness consist of? I was easy to
take in. ...."
- IBS

இலங்கைத்தமிழர்களின் சாதியமைப்பினைக் குறித்துப் பேசுவதற்கு நான் எத்துணை பொருத்தமானவனெனத் தெரியாது; தாய்வழியிலே யாழ்க்குடாவின் வடமராட்சியினையும் தந்தை வழியிலே வன்னியை முக்கியமாகவும் கொண்டிருந்தாலுங்கூட, கிழக்கின் மக்கள் கலந்த பட்டினத்திலே பதினாறாண்டுகள் வாழ்ந்து கண்டியின் செயற்கைக்கலப்பான பல்கலைக்கழக அமைப்பிலே இலங்கையை விட்டு நீங்கமுன்னான ஒன்பது ஆண்டுகளைக் கழித்திருக்கிறேன். யாழ்நகரின் சுற்றுப்புறத்திலே வாழ்ந்தது, ஆக ஈராண்டுகள். இப்படியான அமைப்பின்கீழே, இலங்கைத்தமிழரின் சாதியம் குறித்த அனுபவங்களை நேரடியாக நான் காண வாய்ப்பு மிகவும் குறைவாகவேயிருந்தது; ஓரிரு சந்தர்ப்பங்கள். சாதியமைப்பினாலே பாதிக்கப்படவோ பாதிக்கவோ செய்யும்வகையிலே என் 'சாதி' எதுவென்றும் அறிந்துகொள்ளவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டதில்லை. இவ்வகையிலே, இரயாகரன், ஸ்ரீரங்கன், தலித் மகாநாடு நடத்துகின்றவர்கள் ஆகியோருக்கு இருந்திருக்கக்கூடிய, உணர்ந்திருக்கக்கூடிய பட்டறிவு எனக்கு இல்லை. ஆனால், இயலுமானவரை அதன் அழுத்தம், வரலாறு பற்றி நிறைய வாசித்திருக்கின்றேன். கீழே வரும் இரயாகரன், ஸ்ரீரங்கன் இவர்களுக்கான அவர்களின் கூற்றுகளின் மேலான சுருக்கமான பதில்களுக்கு, இந்த வாசிப்பும் வாழ்ந்த சூழலின்மீதான கவனிப்பும் போதுமானதென்று நம்புகிறேன்.

ஈழத்தின் ஐந்துவயதுக்குழந்தைக்கும் தெரியும் ரிவோல்வருக்கும் பிஸ்டலுக்குமே இன்றுவரை வித்தியாசம் தெரியாத நான், இயக்க ரீதியிலும் தத்துவ ரீதியிலும் நிறையச் செயலாற்றி, (புலம்பெயர்ந்து) ஒதுங்கியிருக்கும் பதிவர்கள், பதியாதவர்கள்மத்தியிலே இவற்றினைப் பற்றி எழுதுவதிலேயிருக்கும் தயக்கம் நிறைய. ஆனாலும், இரயாகரன், ஸ்ரீரங்கன், ஷோபா சக்தி, சுகன், அவர்களைப் போன்ற போராடியும் இன்னும் ஓயாத சிலரின் அளவு விரிந்த பெரும்பார்வையின் இடையே விழக்கூடிய நடைமுறைவிரிசல்களைக் காலத்தின் நலன் கருதிச் சுட்டவேண்டிய முரண்படவேண்டிய அவசியமிருக்கின்றது. இதனால், அவர்களின் மீதான என் மதிப்பு அதற்கான தேவைகளிலே குறையாததென்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்து இராம் போன்றவர்களினை ஒத்த இணையபிம்பங்களின் முன்னாலே இப்படியாக வாதம் செய்வது எனதும் (இங்கே எதிர்த்துப் பேசுகின்றவர்களினதும்) நலன்களுக்கு ஊறு விளைவிக்குமென்பதையும் இப்படியான இணையபிம்பங்கள் தமது நலன்களை முற்கொண்டு செல்ல வசதியாகப்போகும் என்றளவிலே, இயன்றவரை இத்தனைநாட்கள்போல, இனிவருநாட்களிலும் வேண்டாவாதங்களைத் தவிர்க்கமுயல்வேன். ஆனாலும், எனதும் என்னைப் போன்ற ஈழத்தார் நலன்களையும் பாதுகாத்துக்கொள்ளச் சில சந்தர்ப்பங்களிலே இரயாகரன், ஸ்ரீரங்கன், விபு போன்றோருடனான வாதங்களும் தவிர்க்கமுடியாதவை. அதன்வழியே இவ்விடுகை.

==========================

இராயகரன்

இராயகரன் தனது புலிகளும் சாதீயமும் என்ற இடுகையின் இடுகை முன்பதிவாகவும் பின்னூட்டங்களாகவும் நிறைய அல்லது நிறைத்து எழுதியிருக்கின்றார். முன்னூட்டத்தைப் பொறுமையுடன் வாசித்து ஒரு பதிலிட்டேன். அதற்கு இன்னொரு பின்னூட்டம் இட்டார். அதற்கு ஒரு பதிலிட்டேன். விவாதத்துக்கு வெளியேயான பின்னூட்டமும் உள்ளடங்கியதாக அனுமதித்த பின்னூட்டத்தினை அகற்றிவிட்டார். அதன் பின்னால், பின்னூட்டங்களாக நுரைக்க நுரைக்க முன்னூட்டத்தினையும் என் பின்னூட்டத்துக்குப் பதிலென்றும் கருதிக்கொண்டு நிறைத்திருக்கின்றார். அதற்கு நன்றி தெரிவிக்கபோதிலே அவருடைய பதிவின் தலைப்புக்கும் முன்னூட்டம் & பின்னூட்டங்களுக்கு என்ன தொடர்பு என்று விளக்க மறந்திருக்கின்றார். இவ்விடுகையிலும் பின்னூட்டங்களிலும் அவருடைய கட்டுரைகள் எல்லாம் இருபடிச்செயன்முறையானவையாக இருக்கின்றன.

முதற்படி: "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்று திரும்பத் திரும்ப எடுகோளாகச் சொல்தல்

இரண்டாம்படி: யாழ்மேலாதிக்கத்தின் கெடுதல்கள் என்று நிறைய எழுதுதல்

மூன்றாம்படி: புலிகள் தாங்கள் சாதியத்தினை மறுப்பவர்களென்று சொல்லியிருந்தாலோ அல்லது அதனுள்ளிருக்கும் ஒடுக்கியசாதி எனக் கருதப்படும் அங்கத்தவர் எனக் கருதப்படும் ஒருவர் சாதியமறுப்பினைச் செய்தால், அவரை அக்கருத்துக்காக கடிதல்

நான்காம்படி: புலிகள் இரயாகரனின் தத்துவத்தின்படி இயங்கவில்லை என்பதற்காக ஏகாதிபத்தியம் போன்ற இன்னோரன்னவற்றின் எடுபிடிகளாகி, தத்துவவெறுமைக்காகத் திட்டுதல்

ஐந்தாம்படி: இத்தனையின் காரணமாக, "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்று 'நிறுவுகின்றாராம்'

அதாவது, என்ன செய்கின்றாரென்றால், புலிகளின் சாதியம் தொடர்பான தனது கருத்தை எடுகோளாகச் சொல்கிறார். பின்னர், யாழ்மேலாதிக்கத்தைப் பற்றிப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து புலிகளின் வேறு விவாதத்துக்குரிய செயற்பாடுகளைப் பட்டியலிட்டு (இரத்தினதுரை புலம்பெயர்ந்தவர்களைக் கடிந்தது & புலிகளின் மற்றைய இயக்கங்கள்மீதான எதிர்வுகொள்ளல்கள்) அல்லது புலிகளின் சாதியமறுப்புக்கருத்துகளையே கிண்டல் செய்து (பாலசிங்கத்தின் கருத்து, இரத்தினதுரையின் கருத்து) எழுதுகிறார். பிறகு, புலிகள் மார்க்சிய தத்துவத்தின்படி நடக்கவில்லையென்பதைப் பெரிதாக விளக்குகின்றார் ("புலிகள் உயர்சாதிய யாழ் இயக்கம் தான் என்பதும், வலதுசாரி அரசியலால் தன்னை உலகமயமாக்குகின்ற ஒரு அமைப்புதான் என்பதற்கு யாரும் மறுப்புக் கூற முடியாது. இந்த இயக்கம் சாதியத்தை ஒரு நாளும் ஒழிக்காது. சாதியத்தை பாதுகாத்து, அதன் அடித்தளத்தில் உருவான படிமுறையான அடுக்குகளின் உதவியுடன் தான் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இயக்கம் தான்."). இறுதியிலே யாழ்மேலாதிக்கம், புலிகளின் இன்ன பிற செயற்பாடு & சாதிமறுப்புக்கூற்றுகள், மார்க்ஸியதத்துவத்தினை இரயாகரன் எதிர்பார்க்காதவிதத்திலே பயன்படுத்துதல் இவையனைத்தும் எதுவித தர்க்கக்கோவையோ வருவிப்போ தொடர்போ இன்றி இரயாகரனின் எடுகோளான "புலிகள் உயர்சாதியத்தின் நலன்களைப் பேணுகின்றார்கள்" என்பதாக ஆகிவிடுகின்றது.

வாசிப்பவர்களின் (அல்லது எழுதியவரின்) புத்திசாலிதனத்தினையும் தொடர்பாக்கிப் பேசுதிறனையும் கேலிக்கும் கேள்விக்குமுள்ளாக்கும் கட்டுரைகளின் தொகுதி இரயாகரனின் முன்னூட்டமும் பின்னூட்டங்களும். முப்பதினாயிரம் சொற்களிலே அவர் வளர்த்துவிட்ட வசனவெளியிலே கொண்டுவந்து புலியை மேயக் கட்டுகிறார்.

அதைத்தான் நான் என் இரண்டு பின்னூட்டங்களிலும் சுட்டிக் கேட்டிருந்தேன். கொஞ்சம் பொறுமையோடு அவருடைய கட்டுரையிலிருந்து வழக்கமான சொற்பதங்களைப் பிரித்து வாசிக்க முடியாதவர்களுக்கு நான் கீழே அவரின் கட்டுரைகளிலிருந்து மூன்று பந்திகளைப் பிரித்துத் தந்திருக்கின்றேன். அவற்றின்மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றாரென்று அவருக்குத்தான் வெளிச்சம்.

/யாழ் மேலாதிக்கம் என்பது யாழ் மக்களை பிரதிபலிப்பதில்லை. யாழ் மேலாதிக்கம் மிக குறுகிய ஒரு பிரிவை அடிப்படையாக கொண்டது. இது யாழ் பிரதேசத்தை சேர்ந்தவராகத் தான் இருக்க வேணடு;மென்பதல்ல. சிங்கள இனத்தில் பிறந்த ஒருவன் கூட யாழ் மேலாதிக்கத்தைக் கொண்டு இருக்கமுடியும். இது பிறப்புக்குள் உட்படுவதில்லை. ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் கிழக்கைச் சேர்ந்தவன் ஒரு முஸ்லீம் கூட யாழ் மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யமுடியும்./

என்ன சொல்கிறாரென்று யாரேனும் அவரிடம் கேட்டுச் சொல்லமுடியுமா? அப்படியானால், 'யாழ் மேலாதிக்கம்' என்றால் என்னதான்? இவ்விடத்திலே 'யாழ்' என்பதற்குப் பதிலாக 'பாழ்', 'தாழ்', 'சால்', 'பால்', 'குழல்', 'பறை', 'வீணை', 'பூனை', 'யானை' எதைப்போட்டாலும் மேலாதிக்கக்குழப்பமே வருகின்றது.

/"சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாராக இல்லை"/

இதைத்தானே முட்டி முட்டி நானும் வேறு சிலரும் சொல்கிறோம். இதை நாங்கள் சொன்னால், பாசிசப்புலிப்பினாமிமாபியா, இரயாகரன் சொன்னால், புரட்சிக்கருத்தா? ("With us or with Terrorists" என்ற புஷ்வகை "detailed dialectic :-)" அராஜகம்) இதனால் என்ன சொல்ல வருகின்றாரென்றால், யாழ்சாதியமேலாதிக்கம் உச்சம் பெற்றிருந்த புலிகள் அதிகாரத்தைக் கொண்டிராத காலத்திலேயிருந்த நிலைமையிலும்விட இப்போது புலிகளின் அதிகாரமுள்ள காலத்திலே நிலைமை மேன்மைபெற்றிருக்கின்றது என்பதாகத்தான் எனக்குப் புரிகின்றது. பிறகு எதற்காக, யாழ்மேலாதிக்கத்தினைப் புலிகள் விதைத்து உரம்போட்டு உற்பத்தி செய்து விற்பனைக்குச் சந்தைப்படுத்துகின்றார்கள் என்ற பாங்கிலே என்று எழுதுகின்றார் என்று சொல்வாரா? பாலசிங்கம் "ஒரு காலத்திலே இவை ஒழியும், ஒழிப்போம்" என்று சொன்னதை வைத்துக் கிண்டல் செய்கின்றவர், சாதியத்தின் இத்தேய்நிலையைக் கருத்திலே கொண்டால், பாலசிங்கத்தின் கருத்தினை ஒரு முகப்பெறுதிக்காகவேனும் ஏற்றுக்கொள்ளலாமே?

இப்படியாக, முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடும் நிறுவல் செய்யும் அவர், கடைசியிலே "இஃதென்ன தர்க்கம் பிறழ்ந்த நிறுவல்?" என்று கேட்டால், /"புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை" / என்ற குதர்க்கக்கருத்தினை முன்வைக்கின்றார். இவரோ எங்கும் "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம்" என்று நிறுவவில்லை; செய்ததெல்லாம் " புலிகள் யாழ் மேலாதிக்க நலனை முன்னெடுக்கின்றது" என்ற அறிவிப்போடு தொடங்கியதும் பிறகு இரண்டாம்படி தொடக்கம் ஐந்தாம்படிவரை அவருடைய யாழ்மேலாதிக்கம், இரயாகரனின் மார்க்ஸியமற்ற புலிகள் என்பனவற்றைப் பேசியதும் கடைசியிலே மீண்டும் " புலிகள் யாழ் மேலாதிக்க நலனை முன்னெடுக்கின்றது" என்ற அறிவிப்போடு முடித்ததுமே. எடுகோளுக்கும் நிறுவப்பட்டதற்கும் இதுவரைக்கும் அவருக்கு வித்தியாசம் தெரிந்ததாக எமக்குத் தெரியவில்லை. இத்தனைக்குள் நிறுவப்படாத கருத்தை மறுத்து, "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது எங்கள் கடமை" என்று செய்ய என்ன தேவை இருக்கின்றது?

ஒன்றை ஒருவர் நிறுவின பின்னாலேதானே, தகர்க்கவேண்டியவர்கள் இல்லையென்று நிறுவமுடியும்? இங்கே நான் நிறுவுதல் என்பது சாதி என்பது குறித்துப் புலிகளைச் சம்பந்தப்படுத்திப் பேசும்போது, சாதி என்பதை முன்னிறுத்தி அதை வளர்க்கப் புலிகள் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதைச் சுட்டி வாதத்தை எடுத்துச் செல்வதே.

ஆனால் இரயாகரனின் பதிவோ, பின்னூட்டங்களோ அப்படியான வாதத்தைச் செய்வதில்லை. (முரண்நகையாக) சோ ராமசாமி என்ற அதிதீவிரவலதுசாரி ஆசாமி முகமது பின் துக்ளக் நாடகத்திலே,கம்யூனிஸ்டுகட்சி ஆசாமிப்பாத்திரமொன்றினூடாக நக்கல் செய்யும், "மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு வோட்டு போடாதீர்கள்" எனும் வகையிலேதான் வாதம் செய்கின்றார். இப்படியாக, "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை" என்று வேறு கேட்கும் இரயாகரனுக்கு, "சப்பையைத் தவிர்த்துவிட்டு, நெல்லைக் காட்டுங்கள்; அரிசியையும் உமியையும் பிரித்துத்தருகிறோம்." என்று சொல்வதைத் தவிர வேறேதும் பதில் அவசியமில்லை.

இலங்கைத்தமிழரிடையேயிலேயிருக்கும் பிரதேசவாதம், சாதியம் என்பனவற்றினை மறுக்கவில்லை. ஆனால், அவற்றின் வடிவத்தினையும் அளவினையும் திரிப்பதினையும் மாற்றுவதையும் பின்னால், சம்பந்தப்படாத கொழுக்கியிலே கொண்டுபோய்க் காயவிடுவதையும் இரயாகரன் செய்வதுதான் தவறென்று சொல்கிறேன். புலிகள் மீது விமர்சனங்கள் சில விடயங்களிலே எனக்குமுள்ளது; ஆனால், சாதியத்தினை அவர்கள் வளர்க்கின்றார்களென்பது அதிலொன்றில்லை. அக்கருத்தினை மாற்றிக்கொள்ள, இரயாகரனின் தர்க்கம் கெட்ட குதர்க்கவாதம் பயனாகவில்லை.

==========================
ஸ்ரீரங்கன்

ஸ்ரீரங்கன் தன் "சாதியமைப்பும் தேசியவிடுதலைப் போராட்ட அவநம்பிக்கைகளும்,தலித்துக்களும் " பதிவில் இரண்டு 'அற்புதமான' கருத்துகளைச் சுட்டியிருக்கின்றார். [இவருடைய அகதி பதிவிலே வந்து புலம்பெயர்ந்த வெண்சட்டைப்போராளி மாசிலாமணி பின்னூட்டமிட்டிருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. சென்ற வாரத்தின் இரயாகரனின் இடுகைப்பின்னூட்டத்தோடு, காணாமற்போனவர், ஸ்ரீரங்கன், இரயாகரன் இப்படியான அகதிவழிப்புலம்பெயர்ந்தவர்கள் குறித்து என்ன கருத்தினைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை உத்தேசமாக நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், இப்போது மிகவும் தந்திரத்தோடு ஈழத்தின் தலித் ஒடுக்குமுறைக்காகக் கண்டனம் தெரிவிக்கின்றாராம். வாழும் நாட்டிலே பெயர்ந்திருப்பவனையே தன் பெயர் கெடுக்கும் அகதித்தமிழன் என்று சொல்லி ஒதுக்கும் இவர் கண்காணாத்தேசத்திலிருக்கும் தலித்துகளுக்காக இன்று மீண்டு கண்கலங்குவது வியப்புக்குரியதல்ல]

/இது சாரம்சத்தில் தமிழ் நாட்டு அரசியல் பொருளியற் சூழ் நிலைகளை வலிந்து இலங்கைத் தேசத்துகுள் திணிப்பதற்கான முதற்காரணமே இலங்கைத தமிழ்ச் சமுதாயத்துக்குள் நிலவும் வேளாள மேலாதிக்கத்தின்மீதான அவநம்பிக்கையே!/

இலங்கைத்தமிழ்வேளாளசமுதாயத்தின் திமிரினை ஆறுமுகநாவலர் தொட்டு, இராமநாதன் ஊடாக இன்று வரை வாசித்துவருகிறோம். முன்னைக்கு இற்றை தேயும் தன்மை தெரிந்தாலுங்கூட, இன்னுமிருக்கின்றதென்பதை ஆங்காங்கு இணையத்திலேகூடக் காணக்கூடியதாகவிருக்கின்றது. ஆனால், இப்படியான அவநம்பிக்கை தரும் வேளாளர்குடிவந்தவர்களின் ஒரு பகுதியினரே தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தம்மை நிறுத்திக்கொண்டு, தமிழ்நாட்டிலிருந்து அங்கு தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும் இடைநிலைச்சாதியினரூடாக ஈழத்தின் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தமிழ்நாட்டின் அரசியல், பொருளியற்சூழ்நிலைகளை கனடா/ஐரோப்பாவிலிருந்து விற்கும்போது இந்த வேளாளமேலாதிக்கத்தின்மீது என்ன நம்பிக்கையை ஈழத்தின் ஒடுக்கப்பட்டவர்கள் கொண்டிருக்கவேண்டுமென ஸ்ரீரங்கன் எதிர்பார்க்கின்றார்? தன்னுடைய ஓர் இடுகையிலே தானே வேளாளர் என்பதை மறுத்தாலும் தலித் என்ற ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தான் பேசமுடியாது என்று சுட்டியவர், இங்கே கனடா/ஐரோப்பாவிலிருந்து ஒடுக்கப்பட்ட ஈழத்தவருக்காக தம் சாதியை மறுக்கும் வேளாளசக்திகள் போராடுவதை ஒடுக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளலாமென்று நம்புவது எவ்விதம்?

இதன் வழியிலேயே நான் கேட்ட, "எந்த நம்பிக்கையிலை திருமாவளவனையும் கிருஷ்ணசாமியையும் விட்டிப்போட்டு அ. மார்க்ஸை பிரதிநிதியா கொண்டு வந்து சுகனும் ஷோபாவும் கற்சுறாவும் ஸ்டாலினும் யாழ்ப்பாண தலித்துக்குத் தருகினம் எண்டும் ஏட்டுச் சொல்லுங்கோவன்" இற்கு, ஸ்ரீரங்கன் சொல்லும் பதில் மறைமுகமாகத் திறந்த வாயை மூடாமல் வைத்திருக்கச் செய்கிறது (இரயாகரன் என்றால், நேரடியாகவே, "வாயைப் பொத்திக்கொண்டுபோ; நான் சொல்லும் புரட்சிக்கொட்டாவிதான் சரியான போராட்டம்" என்றே சொல்லியிருப்பார்):

/அ.மார்க்ஸ் தமிழ்ச்சமூகத்தில் மிக முக்கியமான சமூகவியலாளர்.அவரை சாதிரீதியாக எவரும் பார்ப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்படும் மனிதர்களுக்குத் தோழமையாகப் பார்க்கலாமே?அடுத்து திருமாவளவன்...இவர் ஓட்டுக்கட்சி அரசியல் மாயைக்குள் இருப்பவர்களுக்குப் பிதாவாக இருக்கலாம்.நமக்கல்ல./

ஸ்ரீரங்கன், அ. மார்க்ஸ், திருமாவளவனிலும்விடத் தமிழகத்தலித்துகளுக்குச் சிறந்தவர் என்று சொல்கிறார். அவரின் சாதியையும் பார்க்கவேண்டாமென்று சொல்கிறார். தமிழகத்தின் தலித்துகள் அல்லவா, அவர்களுக்கு சமூகவறிஞர் (சமூக + அறிஞர்) மார்க்ஸ் முக்கியமா, கூட்டுக்கட்சி மாறினாலும் தலித் நலனைப் பிரதிபலிக்கக்கூடிய (பிரதிபலித்த) திருமாவளவன் முக்கியமா என்று தீர்மானிக்கவேண்டும். ஈழத்து வேளாள அடையாளத்தை மறுத்துத் தலித்தின் தலைமையைத் தலித்தே கொள்ளவேண்டுமென்று சொல்லும் ஸ்ரீரங்கன் சொல்லமுடியாதல்லவா? இப்படியான குழப்பங்களே ஸ்ரீரங்கனின் பதிவுகளிலே மாறிமாறிவரும். குறைந்தபட்சம், ஸ்ரீரங்கன் இரயாகரன் மாதிரி தொடர்ச்சியாக அரூபக்கருத்தாக்கங்களிலே தனது விருப்பஎதிரிகளையே எப்போதும் கைவசமிருக்கும் சுட்டுச்சொற்களோடு திட்டிக்கொண்டிருப்பதில்லை என்பது ஆறுதலான விடயம்.

=====================