Sunday, May 21, 2006

பழசு - 3

ஊர் (குறை)

* ஒன்பதாண்டுகளுக்கு முன்னால், அரைகுறையாக எழுதியது. திருத்தம் தேவை. (இன்னும் விழைவு நிமிண்டிக்கொண்டிருப்பதன் விளைவாக) இப்போது எழுதியிருந்தால், அமைப்பிலிருந்து நடைவரை நிறைய மாற்றங்களைச் செய்வேன். பார்ப்போம்.

மெலிந்த, சற்றுக் கூனிய உடல்; (பின் மழைக்கால வயல் நாற்று-'அங்கொன்று இங்கொன்று'- தலையை அழுத்திக் கிடக்கும் மயிர் அமுக்கி இரப்பர் வளையம் ஓட்டும்) ஐம்பதாம் ஆண்டுகளின் மூக்குக்கண்ணாடியின் கீழ் உள்ளே எங்கோ கிடந்தும் காண்பதெல்லாம் குத்திக் கிளறும் கண்கள், "செல்லத்தம்பி வாத்தி மாதிரி நோட்டம்போடுதுகள்' என்று 'வயசு போனதுகள்' தம் மூன்றாம் தலைமுறையினைப் பாராட்டும்/வையும் அளவிற்கு; பழைய வெள்ளை 'நஷனல்' சட்டை பக்கவாட்டுப் பைகள் இரண்டும் நுழைக்கும் இடங்களில் மார்க்கண்டேயத்தன மூக்குப்பொடிக் கரைக் கறையுடன்; 'ஷெல்லடி,ரவுண்ட் அப், கனடாவிலே இருந்து மகன் அனுப்பிய படங்கள், அரச வைத்தியசாலை வியாழக்கிழமை 'சீனி வருத்தக் கிளினிக்', அம்மாளாச்சியின் திருவிழாக்கதை' தவிர்ந்தும் நேரம் மிஞ்சிய தருணங்களில், அருள்மிகு துர்க்கையம்மன் கோவில் வீதி எழுந்தருளு 'பெஞ்சனியர்'களின் (அல்லது 'மடையர்சங்கம்', இளந்தலைமுறையின் சமானப் பெயரிடல்) பேச்சுக்குச் சுவை கூட்டும் சூடான சங்கதி ஒன்று இருக்கவேண்டுமானால், இந்தளவு நாட்டுப்பிரச்சனையுள்ளும் எங்கே மாஸ்டர் பொடி வாங்குகிறார் என்பதுதான்.

வேட்டிக் கரை, மாஸ்டருக்கு வெறும் கறுப்பு வெள்ளையாக இருக்கவேண்டும். "தங்கக் கரை வேட்டி அநியாய ஆடம்பரம்; காந்தியினைப் பாருங்கள், மிக எளிமையாக வாழ்ந்துபோன மகான்" என்பார், எங்களின் 1972ம் ஆண்டு நான்காம் வகுப்பு தமிழ்ப்பாட வகுப்பில்; அம்மாவின் அப்பா, அப்போது சிரித்து வைத்தார், "பிறகேன் செல்லத்தம்பியான் பத்துச் சத வட்டிக்குக் குடுக்கிறான்? வேட்டிக்கரையில வெள்ளை பிடிக்கிறவன், வெள்ளை சுத்திப் பிடிக்கிற காலத்திற்கு, சித்திரகுப்தன் கணக்கிலை வைக்கிறதெல்லாம் வேண்டாத கறுப்புக் கறை."

மூன்றாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி எடுக்கும் வரையும் வகுப்பு நேரசூசி ஆண்டு முதற் தவணை முதலாம் நாள் தந்தவுடன், நானோ நண்பர்களோ பார்த்து வைப்பது, தமிழ்ப்பாடத்திற்கும் சைவத்திற்கும் மாஸ்டரா, ரீச்சரா என்பதே. ராசையா ரீச்சர் அல்லது ஒளவையார் எனப்படும் பூமணி ஆசிரியை என்றால்,தேவாரம் பாடமாக்காவிட்டால், கைகளின் பின் மொழியில் 'வ்`உட் ரூலருடன்' (foot ruler) அடி அளந்து போய்விடும். மிஞ்சினால், அடுத்தநாள் வில்லூன்றி முருகன் கோவிற் காலைப்பூசையில், மூலஸ்தானப்பூசையில் இருந்து வசந்தமண்டபப் பூசைக்கு ஒரு காற் செவ்வகத்தூரம் நடக்கும் போது, 'கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகத்திற்கும்' 'குன்றுருக வேல் வாங்கி நிற்கும் முகத்திற்கும்' இடையில், அம்மம்மாவிடம், ' இஞ்சை பார் நாகம், சுகுணனுக்கு வரவர படிப்பில நாட்டம் குறைஞ்சுபோகுது' என்பதுடனும் அன்றைய இரவு இடியப்பத்துடன் கடிதென வந்த கரியை உள்ளே நான் உரித்து ஊட்டி வைக்கவேண்டிய வேலையுடனும் முடிந்துபோகும். 'கொல்லுத்தம்பி' என்றால் 'வலு வில்லங்கம்.' சீமான் என் தேவாரப்பிழைகளை வைத்தே பிழைப்பு ஓட்டிவிடுவார். தேவாரம் முதற்பிழைக்கு ஒரு நவீனவில்லன் முறுவலுடன் தொடங்கி கடைசியில் முடிக்கையில், 'மணந்தால் மகாதேவி இல்லை மரணதேவி' வீரப்பா கணக்கில் அட்டகாசம் பண்ணி (சிரித்து என்பது சின்னத்தனமான சொல் அந்தச்செய்கைக்கு என்பதாய் எனதும் இன்னோரன்ன சிரிக்கத்தெரிந்த சீவராசிகளினதும் பெரிய அபிப்பிராயம்), 'ஏ/எல் ஆட்ஸ்' வகுப்பில் களவு ஒழுக்கம் கற்பித்து இரவுக்குறிக்குள் தான் தூங்கிப் போய்க்கொண்டிருக்கும் நமசிவாயத்தாரை உலுக்கி மடலேற்றிவிடுவார்; நமசிவாயம் வாத்திக்கு செல்லத்தம்பியான் 'வேண்டுமெண்டே' தன் நித்திரையைக் குழப்பவே சிரிச்சு வைக்கிறான் என்று காலகாலமாக 'உள்ளுக்குள்ளை' ஒரு 'சாதுவான கறள்' இருந்தது என்பது அவர் யுத்தகாண்டத்தில் கம்பனுடன் சேர்த்து மாஸ்டரையும் வம்புக்கிழுக்கையில் எல்லோருக்கும் படுவெளிச்சமாய்த் தெரியும். ஒரு நக்கலாய் சொல்லுவாராம், "அண்டைக்கு இராமன் கொல்லாம விட்டிட்டுப்போன சில இராவணன்டை வழியில வந்ததுகள் இண்டைக்கும் இந்த கோணேசர் பூமியில் தமிழும் சைவமும் நாந்தான் வளர்க்கிறன் எண்டு சொல்லி நாட்டியம் போட்டுத் திரியுதுகள்."

இங்கே நான் முன்னமே சொல்லியிருக்க வேண்டியது என்னவெனில், ஊரில் உள்ள ஐந்து சிவன் கோவில்கள், நாலு அம்மன்/அம்மாள்/அம்மாள்ளாச்சி கோவில்கள், ஒரு விஷ்ணு கோவில், புரட்டாதிச் சனிகள் மட்டும் புகைமண்டலம் தள்ளும் சனீச்சுவரர், மூன்றரைப் பிள்ளையார் கோவில்கள் (ஒன்று கோபுர உச்சியில் அரசு மென் குடையாய் முளைத்ததால் சிதிலமாகியும், அரசு நன் கொடை இல்லாமல் அப்படியே கிடக்கிறது; மூசிகர்கள் மட்டும் அளவுக்கு மீறி பிள்ளையாருக்குப் பேரின்பம் அளித்து அலைவது கண்டிருக்கிறேன்; பக்த(நூற்றிலொரு)கோடிகள், பொருள்வளம் உள்ள கோவில்களே அருள்வளம் கூடியதாகவும் கருத்தில் அருள்கொண்டு உணர்ந்து, மேலும் புதுப்புது விழாக்கள் கண்டெடுத்து மேலும் அக்கோவில்களின் வருமானம் பெருக்குவது என் ஊர் வழக்கம்; இல்லாத கோவில்கள் இல்லை என்று போவதும் சரியான விதத்தில் முதலாளித்துவமும் ஆகவே ஜனநாயகமும் சரியான திசையில் என் ஊரிற் போய்க்கொண்டிருந்ததைத் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கிறன.

பிச்சைக்காரக்கோவில் ஐயர்கள் கனவு காணாமலே தூங்கிக்கொண்டு (ஒருவர் INXS ஹக்ட்லேன் கணக்காக கயிற்றிலும்) இருக்கையில், 'chicken soup' கதைகள், நெப்போலியன் ஹில், எம். எஸ். உதயமூர்த்தி அறியாமலே, இரண்டாண்டுகளுக்கு முன்னரே, அருள்மிகு***** ஆலய ஐயர்+தர்மகர்த்தாவிற்கு, என் ஊரில் திடீரென இளம் தமிழ் மங்கையர், 'திருமாங்கல்யம்' அடையாமல் இருப்பதற்கு தன் அன்னையின் அருள் அற்றதே காரணம் என்று மூளை மூலைக்குள் ஒரு குட்டிக்கரணத்துடன் தெரிய வந்தது; அந்த அருள், மாதந்தோறும் பௌர்ணமியில் குறைந்தபட்சம் ஓர் ஐம்பது ரூபாப் பூசையுடன் தவணைமுறையிற் கிடைக்கும் என்பதையும் அறியத் தந்திருந்தார். இன்றைக்கு, ஊரில் பெரிய பதிப்பகம் அந்த அருளின் பக்கவிளைவு என்று நண்பன் ஒருவன் சொல்லியிருந்தான்; கூடவே, கோவிற்கூட்டத்தில் 'முன்னம் அவன் நாமம் கேட்டு, பின் மூர்த்தி அவன் உள்ள வண்ணம் கண்டு' ஏற்பட்ட அருளுடன், சில சங்கத்தமிழ் 'உடன் செல்லல்களும்' நிகழ்ந்ததையும் அவன் மறுக்கவில்லை; ஆக, அம்மன்கோவில் ஐயா/ர் செய்வது பலனுள்ளது என்றும், டென் ஷியாவோ பிங்கின் 'எந்த நிறப்பூனையானால் என்ன? எலியைப் பிடித்தாற் சரி" என்றும் தனது புரட்சிகரத் தத்துவத்தின் மேல்வைக்கப்பட்ட என் சுயவிமர்சனங்களை உள்வாங்கிப் பதிலளித்திருந்தான்; இதனை அவன் அருகே இருந்து மேற்கூறிய மூர்த்தியினைக் கண்ட அவனின் இணைவி ஆமோதித்தாள் (இருவரும் சரி சமன் என்பதால், துணைவி என்பதிலும் சரியான பதம் தோழர் என்று விளக்கம் தந்திருந்தான்; தோழர் அம்மன் உற்சவம் பார்க்கச்சென்றது ஏன் என்று நான் கேட்கவில்லை; சிலவேளை, நீண்ட பயணத்தில், எப்போதாவது, மாவோ ஷேதுங் 'மாந்தோ' சாப்பிடமுன் சொல்லி வைத்திருக்கலாம்; ஆதலால், புரட்சிகரத்தின் மறுமலர்ச்சிக்குள் அதுவும் அடங்கியிருக்கலாம்). ஆனால், அருள்மிகு****** அர்ச்சகரின் மகள் மகிஷாசுரஹதமர்த்தனி (ஒரு முறை, ஒரே ஒரு முறை, சதாவின் 'கூப்பன்' கடையில் வைத்துச் சகோதரிபோலச் சிரித்து வைத்ததிற்குக் கிடைத்த பதிலே, இந்தப்பெயர் இடுபெயர் அல்ல, காரணப்பெயர் என்பதினை மிகத் தெளிவாக எனக்குச் சொன்னதென்பதை இவ்விடத்திற் சொல்லாமல் விட்டேன் எனில், உங்களின் நம்பிக்கைக்கு நான் உகந்தவன் அல்லன் ஆகிவிடுவேன்) மகேஸ்வரியின் அருளை எதிர்பார்க்காமல் திருநெல்வேலி இராமநாதன் சங்கீதக்கல்லூரியில் ஆரோ 'எளிய'தின் கிருதியிற் கிறுகி, இப்போது பிடிலும் பிருகாவுமாய்ப் போய்விட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்றும் அதற்கு அன்னையின் அருள் பெறாதது மட்டுமே காரணம் என்றும் அம்மா சொன்னார்; இருக்கலாம்.

கணக்கற்ற முருகன் கோவில்கள் அனைத்துக்கும் செல்லத்தம்பி மாஸ்டரே ஊஞ்சல், பதிகம் யாத்துக் கொடுத்திருந்தார்; தவிர திருவெம்பா முதல் நாளில் மாஸ்ரரை 'ஏலோரெம்பாவாய்' படிக்க வைக்க சகல் கோவில்களும் தங்களுள் அடிபிடி நடத்துவதும் வழக்கம்; இதற்கு காரணம், கறள் மிகுந்த குரலாக இருக்காது என்று, சட்ஜம், பஞ்சமம், சங்கீதம் சுலோச்சனா ரீச்சர், ரவிப்ரியாவின் "அண்ணா வீட்டில் இல்லை" (எனக்குத் தெரியாதா, என்ன? இருந்தென்ன இல்லாமல் என்ன? எல்லாம் கடந்தகாலம்; எங்கிருந்தாலும் வாழ்க) அறியாத அந்த நாளிலேயே எனக்குத் தெரிந்திருந்தாலும் கடைசி ஒற்றை செத்துப்போன சந்திரமோகனின் 'திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் கொலை' மர்மத்துடன் புரியாத, மனம் சுரண்டிக்கொண்டிருந்த மர்மங்களில் இதுவும் ஒன்று. கடைசியில் ஏ/எல் வகுப்பில் ஒன்றாய்ப் படித்த 'வில்லூண்டி முருகன்' சந்திரசேகர(சர்மாவி)ன் தயவுடன் புரிந்தது; மாஸ்டரின் குரல் 'லவுட் ஸ்பீக்கர்' இல்லாமலே கடல் கடந்து மூதூர், கட்டைபறிச்சான், வெருகல் தூர இருக்கும் கிராமத்து மக்களினையும் குளிருக்குள் 'அலுப்புக் குடுத்து உசுப்பி' திருவெம்பா வந்து விட்டது அல்லது மாஸ்டர் அறுக்கத்தொடங்கிவிட்டார் என்று எழுப்பி விடும் என்றும் ஊருக்குள்ளும் எல்லோரும் அந்தக்கோவிலில் இந்த முறை கூட விசேஷம் என்று வருவார்கள் என்றும். (சில கட்டைபறிச்சான் இளம்தலைமுறை, கிராமத்து விதானையார் ஊடாக, அரசாங்க அதிபருக்கு, "உழைக்கும் விவசாயமக்களின் தூக்கத்திற்கு இந்த 'பெற்றி பூர்ஸுவா' குழப்பம் விளைவிக்கிறார் என்று, 70 முற்பகுதி கூத்த(ட்ட)ணி அரசாங்கத்தில், பொதுவுடமைக்கட்சிகள் உள்ளதென தைரியத்தில் 'பெட்டிசன்' கொடுத்ததாயும், அமைச்சர் என். எம். பெரேரா, அதில் பிரஸ்னேவின், ரஷ்ய டூமாவின் கருத்து தெரிந்தபின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிவிடத்தாயும் தெரிந்தது; சில தோழர்கள், இன்னும் காத்திருப்பதாயும் சனநாயகப் பொதுவுடமைக்கட்சித் தோழர் ஒருவர் போன மார்கழித் திருவெம்பா 'பிட்டுக்கு மண்சுமத்தல்' திருவிழாவில் சொக்கநாதர் திருவுருவத்தினை வசந்த மண்டபத்தில் இறக்கி வைத்து விட்டு வந்த களைப்புடனே எனக்குக் கூறியிருந்தார்; அதன் பிறகு ஏது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை; தோழர் புரட்சி செய்ய ரொரண்டோ வந்து, தொழிற்சாலை ஒன்றில் சாக்குத் தைப்பதாகவும் நான்காம் உலகம் அமைய ரொட்ஷ்கியின் பாதையுடன் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டதகவும் தெரிகிறது). இந்த மாஸ்டரின் பாடல் மர்மம் நீங்கினாலும் பெரிதாக அந்தக் காரணத்தில் நம்பிக்கை இல்லை. (திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ராஜாவைக் கொன்றது யாரென்று இன்னும் தெரியவில்லை; ஆயினும், அதற்குப் பிறகு உண்மையில் ஆயிரம் கொலை பார்த்துவிட்டேன் பத்திரிகையிலும் நேரிலும்;யாரோ புண்ணியவான் கதை முடிவதற்காக அல்லது கதை நகர்வதற்காகக் கொன்றான் என்று வைத்துக் கொண்டேன்; நீங்களும் கொள்ளுங்களே; விடுங்கள்). ஊஞ்சல் பதிகம் என்றில்லை; ஊரில் ஆர் செத்தாலும், மக்கள் புலம்பல், மருமக்கள் புலம்பல், பேரக்குழந்தைகள் புலம்பல், உற்றார் புலம்பல், ஊர்ச்சனங்கள் புலம்பல் என்று பதிகம், சதகம், இந்தக் கண்ணி, அந்தக்கண்ணி என்று அந்தக்கணம் வாய்க்கு வந்ததெல்லாம் வரியில் வடித்து வைத்துவிடுவார் (இப்போது புரியும், நீங்கள் இப்போது படும் கஷ்டத்திற்கு மூலம் எங்கே உள்ளதென்று; எய்தவன் இருக்க, என்னை நோவானேன்?).

நான் அறிந்து ஒரு முறைதான் சிக்கலில் மாட்டிக்கொண்டார்; 'குடிகார' ராசனின் பாட்டனார் செத்தபோது, 'பொன்னும் பொருளும் பூவெனப் பொலிந்து பேரரைப் பூமியில் பூரிக்க வைத்தாய்' என்று இயம்பியது ஐந்நூறு பிரதி அடித்து முடித்தபின்னரே ராசன் வாசிக்க நேர்ந்து,'டேய் பொய்சொல்லித்தம்பி, கண்டியோடா வாத்தி, கிழடன் பொன்னும் பூவும் பொலிஞ்சதை..கிழவன் அரைப்பட்டினி காற்பட்டினி எண்டு இளந்தாரிக்கலத்தில இருந்து கஷ்டப்பட்டுச் செத்துக்கிடக்கு; நீ புழுகிறாய் கூனல் வாத்தி; உன்ரை புழுகை, கோயில் வழிய, வட்டிக்கு வாறவங்களிட்ட காட்டு, இஞ்சை என்ரை வீட்டில காட்டாதை. மாஸ்டராம், ம*ர்க்கதை பேசுறான் மொட்டைக் கிழடன்' என்று சதய நட்சத்திரம் ஒன்றில் மாஸ்டர் 'சதக்' ஆகி அவருக்கே சதகம் பாடுதல் ஆகு நிலை கண்டு, அதன் பின், 'அப்புக்காத்து' 'கொத்துரொட்டி' சிவநாதன் முன்னுக்கு 'இத்தால் அறியத்தரப்படுவது....இரங்கற்பாவிற்கு எழுதக்கேட்டவர் ஆகிய நானே பொறுப்பு..' என்றெல்லாம் உறவினரை எழுதவைத்து வாங்கி விட்டே இரங்கற்பாவிற்கு இறங்கும் அளவிற்கு எச்சரிக்கையாகி விட்டார்.

'97 நவம்பர்

1 comment:

Sri Rangan said...

//ஒன்பதாண்டுகளுக்கு முன்னால், அரைகுறையாக எழுதியது. திருத்தம் தேவை. (இன்னும் விழைவு நிமிண்டிக்கொண்டிருப்பதன் விளைவாக) இப்போது எழுதியிருந்தால், அமைப்பிலிருந்து நடைவரை நிறைய மாற்றங்களைச் செய்வேன். //


இஃதுதாம் உண்மை பெயரிலி!

தங்களுடைய கதைகளில் எப்பவுமொரு எள்ளல் நடை மிளிரும்,அத்துடன் வாசிப்புக்குக் குறுக்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி கதையோடு ஒன்றித்த உள்ளடக்கம் இருப்பது!இதுள் இவையெதுவும் பொலிவுறவில்லை.இருந்தும் வாசிப்பதற்கான தூண்டலைக் கிராமிய வாழ்வே நகர்த்துகிறது.பெருஞ் சிரமத்தோடு வாசித்துப் பார்த்தேன்.இயற்கை வாதத்துள் மூழ்கிய கதைசொல்லல்.என்றபோதும் கிராமிய மாந்தரின் மங்கலான முகங்களைப் பதியமிடும் உங்கள் முயற்சி, ஓரளவு வெற்றி பெறுவதும் உண்மை!