Saturday, November 05, 2011

இஃது இன்னொருவித முதலைக்கண்ணீரன்றி வேறில்லை!

சிபிஐ(எம்) ஆட்களெல்லாம் எப்போதோ நிகழ்ந்த யாழ் நூலக எரிப்பினைப் பற்றி இப்போது கவலைப்பட்டு எழுதுவதுபோல பொய்மைத்தன்மையின் உச்சத்தை சில நிகழ்வுகள்மட்டுமே பிடிக்கமுடியும்.

ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் செய்கைகளுக்கு, வன்கொடுமைக்கு, "மார்க்ஸிய' ஜேவிபி இயக்கத்தின் சகோதரத்துவத்துக்கு நியாயம் கட்டி நிருத்தியம் பழகியவர்கள் சிபிஎம் ஆட்கள்; இன்னமும் இக்கட்சியின் கதைஞர்கள், கவிஞர்கள், தாளிகைக்காரர்கள், இன்னோரன்ன ஓர ஓரங்க கலைகவின்நாட்டியதாரகைகள் வால்வெள்ளிகள் சுயதம்பட்டச்சீமாட்டிகள் சீமான்கள் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளின் வலதுசாரித்தோலை உப்பிட உரிப்பதற்கே இலங்கைநிகழ்வுகளையும் நிகழ்ந்தவையையும் தேடிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையிலே வேறெவரேனும் எதுகாரணங்கொண்டும் மலையையும் மடுவையும் சமானப்படுத்துவதுபோல, யாழ் நூல்நிலைய எரிப்பினையும் அண்ணாநூற்றாண்டுநூலகத்தேவை மாற்றுதலையும் கருத்து மேவி ஒரு தட்டிலேற்றி விளையாடப்போவதையுங்கூட, பார்க்காததுபோலப் பார்த்துக்கொண்டிருக்க எனக்கேதும் பெருவருத்தமில்லை; ஆனால், இக்கள்ளமௌன சிபிஎம் ஆசாமிகள், அசுரர்கள், அணங்குகள், ஆடகசௌந்தரிகள் உதிர்க்கும் ஒவ்வொரு முதலைக்கண்ணீர்த்துளியும் மெழுகுருக்கிச் சுடச்சொட்டும் தீக்கங்காகவே தெரிகின்றது.

என்னைக் கேட்டால், வளைந்து நெளிந்து நெகிழ்ந்தோடும் அரசியலுக்கு அப்பாலும், காங்கிரஸ், பாரதியஜனதா, திமுக, அதிமுக, தேதாதூதீதைமுக எதையும் அதனதன் கூத்துகளோடுங்கூட இலங்கைத்தமிழர் அணுவதிலே சிக்கலில்லை; ஆனால், இப்பொல்லாத சிபிஎம் பொய்யர்களிடமிருந்து எட்டிநிற்றல்வேண்டும்.

"அமைப்பின் கோப்பினைச் சிதைக்கோம் என்ற பெயரிலே தலைமையைக் கேள்வி கேட்காத இயக்கம்; மேலிடத்தின் உத்தரவை அப்படியே செயற்படுத்தும் அடிமட்டம்; மாறும் அரசியல்சூழலையும் கருத்துகளையும் உள்ளெடுத்து விவாதித்துத் தத்துவார்ந்த அளவிலே வளராமல், முப்பதாண்டுகளுக்கு முன்னாலான 'அவர்கள்.எதிர்.நாங்கள்' பிடிமந்திரத்தையே உருப்போட்டுப்போட்டு உருவேற்றும் தன்மை. சுயசிந்தனையை மறுத்து மண்ணுக்குள்ளே தலையை நுழைக்கும் தீக்கோழித்தன்மை; இயக்கநோக்கின் பேரிலே வெகுவாக அறிந்த தவறுகளையுங்கூட நியாயப்படுத்தும் எதிர்க்கருத்துகளை எம்மட்டத்திலும் மறுத்துமூடும் அடாவடித்தனம்."

- விடுதலைப்புலிகளிலே இத்துணைக்குற்றங்களையும் முன்வைக்கின்ற முற்போக்குத்தோழர்கள், மாற்றுக்கருத்துமகான்கள், இவற்றையே சிபிஎம்மிலே வைக்காமல், அதன் கலை இலக்கிய கட்சி கருத்துகளை நியாயப்படுத்த நாவற்கிளை நாட்டுவது நகைச்சுவை.

ஸ்ரீலங்காவின் சமசமாஜக்கட்சியிலும்விட ஸ்ரீலங்கா அரசின் சிறந்த எடுபிடிகளானவர்கள் இவர்கள்;கட்சிக்கோப்பென்ற போர்வைக்குள்ளே மேலிடத்தின் அத்துணை ஸ்ரீலங்கா அரசின் கொடுமைகளின் வெள்ளையடிப்புக்கும் தீந்தை ஏந்தி நிற்கும் அடியாட்கள் சிபிஎம் தொண்டர்த்தோழர்கள்; இவர்களின் ஒற்றைவரிக்கண்ணீர்த்துளிக்குக் காத்திருப்பதிலும்விட, ஸ்ரீலங்கா அரசின் காலடியிலே விழுவது எனக்கு உளச்சுத்தியுடனான தார்மீகநியாயமாகத் தோன்றுகின்றது.

1 comment:

எஸ் சக்திவேல் said...

அவாள் சொன்னச் சரிதான், ஏண்டா அம்பி?