Sunday, October 07, 2007

இரயாகரனுக்கு மேலதிகமாக ஒரேயொரு கேள்வி (அல்லது வேண்டுகோள்)

அரைகுறை - 12

உங்கள் புரட்சிப்பட்டியலிலே கேள்விகள் கேட்பவர்களைப் பாஸிஸ்ட்டுகள், பினாமிகள் என்றுமட்டும் திட்டிக்கொண்டு பதிலைச் சொல்லுமளவுக்குத் தரமில்லையெனச் சொல்லுவதே ஒரு வகையிலே கருத்துச்சுதந்திரம் மறுக்கும் ஸ்டானிய,பொல்பொட்டிய, பொடா, தடா, பட்ரியோட் சட்ட(மறுப்பு)த்தன்மைகளாம். இதை நீங்கள் செய்கின்றபோது, புரட்சித்தன்மை வருகின்றது. ஸ்ரீரங்கன் தனக்குக் கொலைப்பயமுறுத்தல் புலிகள் விட்டார்களென்று சொன்னபோதும், லக்ஷ்மியின் வீட்டிலே புலிகள் கொள்ளையடித்துக்கொண்டுபோனார்கள் என்று நீங்கள் பதிவுபோட்டபோதும் முதலாவது பின்னூட்டங்களாகவும் பதிவுகளாகவும் இருந்தவை யாருடையனவென்று போய்ப்பாருங்கள். இராஜீவ் கொலை குறித்தோ, துரோகிகள்-தியாகிகள் குறித்துப் பட்டியலிடுவது குறித்தோ, குழந்தைப்போராளிகள் குறித்தோ, தேசியத்தலைவர் புகழுரைப்பது குறித்தோ எனது தனிப்பட்ட ஒற்றைச்சல்லிக்கருத்துகள் எவையென்று அறியாதிருப்பின், மற்றவர்களைப் பற்றிக் கருத்துகளைத் தெரிவிக்காமல் வாயை மூடிக்கொண்டிருங்கள் (ஆஹா! இது புலிப்பாஸிட்டுப்பினாமிமாபியாக்கள் செய்கின்ற காரியமென்ன? ;-)).

உங்களைப் பற்றி இன்றைக்கு நேற்றைக்குக் கேள்விப்பட்டவனில்லை நான்; உங்களுக்கு நடந்தவை குறித்தும்; நீங்கள் நடத்திக்கொண்டிருப்பது குறித்தும். தனிப்பட்டவர்களுடனான பேச்சுகளின்போதும், உங்களின் பதிவுகள்குறித்து அவற்றின் நடுநிலையான தரவுகளுக்காக மிகவும் மதிப்பினைக் கொண்டுதான் பேசியிருப்பதையும் (நேற்றுக்கூடப் பேசியதையும்) அவர்கள் சொல்லவேண்டினால், சொல்லலாம். ஆனால், உங்களுடைய கொக்கோ கோலாவுக்கும் கொக்கட்டிச்சோலையிலும் கொக்கிளாயிலும் குண்டுவெடிப்பதற்கும் சம்பந்தப்படுத்தும் பட்டாம்பூச்சி சிறகடிப்புக்கும் பசுபிக்சமுத்திரத்துப்பூகம்பத்துக்குமான தொடர்பாடலின் நடைமுறைப்பயனில்லாமை வெறுப்பேற்றவே செய்வதாலேயே "நடைமுறைப்பயன் என்ன?" என்று கேட்டேன். அதன் நீட்சியாகவே தயா சோமசுந்தரம் தரவுகளை வைத்துச் சமைத்த யாழ்க்குடாமக்களின் இன்றைய உளவியலிலே உங்களின் பாட்டாளிக்கான பாட்டளிசேர்பொற்கொன்றைப்பதிவுப்புரட்சியின் பயனை வினாவினேன்; அவர்களிடம் போய், கொக்கோகோலாவுக்கும் கொக்குவிலிலே குண்டு வெடிப்பதற்கும் பாட்டாளிகளின் பற்றரி வீக் எண்டு சொல்லிப் பாருங்கள்; நீங்கள் சொல்லும் புரட்சிக்கான உந்துதல் தெரியும்.

நீங்கள் சார்ந்திருந்த மார்க்ஸியசிறுகுழுவினரை நேரடியாக எனக்குப் பரிட்சமில்லாதபோதுங்கூட, அதுபோன்ற சொந்தத்தாயியக்கத்தினருக்கே மறைந்து திரிந்த உதிரிமார்க்ஸியத்தமிழ்க்குழுவினர் ஓரிருவரைத் தெரியும்; ஜேவிபியிடம் அடிவாங்கிக்கொண்டும் கொல்லப்பட்டுக்கொண்டுமிருந்த சிங்கள ரொட்ஸ்கிஸ்டுகளையும் கண்டிருக்கின்றேன். அதனால், உங்களின் புரட்சிக்கொள்கைகளைக் கேள்வி கேட்பதோ, உங்களினைப் பகிடி செய்வதோ எனது நோக்கமில்லையென்பதைத் தெளிவாக மீண்டுமொரு சொல்ல விரும்புகிறேன். உங்களளவுக்கு மார்க்ஸியமயிர் புடுங்காவிட்டாலுங்கூட, ஓரளவுக்கு நடப்பது நடக்காதது ஊர்வது ஊராதது பார்த்தறிந்துகொண்டுதான் பலர் இருக்கின்றார்கள். ஆனால், அவற்றினை நடைமுறைப்படுத்தாது, குறுந்தேசிய, பல்தேசிய, பாஸிஸபினாமி என்று சொல்லிக்கொண்டிருப்பதிலே, உங்களுக்கான உளத்திருப்திதான் முடிவாகின்றதேயொழிய, யாருக்காக நீங்கள் போராடுகின்றீர்கள் என்று சொல்கிறீர்களோ அவர்களுக்கான பயனல்ல. இதற்கும் புஷ்ஷுக்கெதிராக, "அமெரிக்கன்வார் பார்" என்ற யூரியூப்பினைப் பார்த்தோ அல்லது டொன் ஸ்ரூவர்ட்டின் கொமடி சென்ரலிலே புஷ்+செய்னி+ஈராக் போருக்கெதிரான இரட்டைவரிநகைச்சுவைகளைக் கேட்டு அடையும் திருப்திக்கோ பெரிதளவிலே வித்தியாசமிருப்பதில்லையென்றே தோன்றுகின்றது.

ஈழக்கலையிலக்கியச்சுவடி நடத்திக்கொண்டிருந்தபோதிலே, 2002~2005 வரை நீங்கள் வந்து சேரமுடியாத இணைப்பாகவோ அல்லது உள்ளடக்கி பாமினி எழுத்துருவிலோ பிரெஞ்சிலோ அனுப்பிக்கொண்டிருந்த தமிழ்சேர்க்கிள் அஞ்சல்களையெல்லாம் அவை புலிக்கெதிரோ ஆதரவோ, அவற்றின் தேவையும் உங்கள் மீதான மதிப்பும் கருதியே, அக்குழுவின் கலையிலக்கியச்சேகரிப்பு நோக்கத்தினைக்கூடத் தளர்த்தி அனுமதித்துக்கொண்டிருந்தேன். இன்று நீங்கள் உங்களுக்கும் அசுரனுக்கும் கேள்வி கேட்டேன் என்பதற்காக ஒரு பின்னூட்டத்தினையே இதற்கெல்லாம் பதிலளிக்கும் நேரமோ தேவையோ இல்லையென்று அலட்சியமாக அமுக்கிவைக்கின்றீர்கள். பதில் தரத்தான் வேண்டாம்; குறைந்த பட்சம் அனுமதித்திருக்கலாமே? நீங்கள் காட்டும் கருத்துச்சுதந்திரமறுப்பு, உங்களின் கேள்விகளுக்கு மற்றவர்கள் பதிலளிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கும்போது, மற்றவர்களின் கேள்விகளைத் தள்ளுதல் (கொலம்பியா பல்கலைக்கழகத்தலைவரின் அராஜகரத்துக்கான ஈரானிய அதிபரின் ராஜகரமான மறுபாணி(ப்பினாட்டு) :-)) எல்லாம் எதனைக் குறிக்கின்றன?

இப்போது, ஈழத்தமிழர்கள் நடத்தாததால், தப்பியிருக்கும் இருக்கும் ஒரே மாற்றுத்தளம் தமிழ்மணம் என்றும் அதைக் கொள்ளை கொள்ள புலி பாஸிட்டு ஈழத்தமிழர்கள் வந்து குமிந்திருப்பதாகவும் ஒரு பதிவு போடுகின்றீர்கள். [இன்னமும் இந்திய தேசியத்துக்கு எதிராகத் தமிழ்மணப்பாஸிட்டுகள் ஸ்வஸ்திகா சின்னத்தோடு சிலரிட்ட பதாகைகளின் பாசிகளே அழியாமலிருக்கின்றன. அந்தப்பாஸிட்டுக்குற்றச்சாட்டுப்பதாகையோடு தமிழ்மணத்திலே சேர்க்கப்பட்ட சரவணகுமார் பதிவுகளையும் தமிழ்மணம் கருத்துச்சுதந்திரத்தோடு அனுமதித்தேயிருந்தது. தமிழ்மணம் நடத்துகின்றவர்கள் புலிகள் என்று அரைவேக்காட்டு மூர்த்தியின் பிதற்றல் தொடக்கம் வெட்டியொட்ட மட்டுமே தெரிந்த "ஈழத்தமிழர்" வீரமணியின் குற்றச்சாட்டுகளும் அநியாயத்துக்குக் கெடுதலாக வந்திருக்கும்வேளையிலே தமிழ்மணத்தினை மாற்றுத்தளமென்று நீங்கள் சொல்வதற்காக நன்றி. தொடர்ந்து அந்தப்புறமும் இந்தப்புறமும் உங்களதும் அசுரனதும் தமிழச்சியினதும் பதிவுகளைக் கடந்தும் பார்த்திருந்தீர்களென்றால், உங்களுக்குத் தமிழ்மணம் அநாவசியத்துக்குப் பெறும் திட்டுகள் புரிந்திருக்கக்கூடும். நிச்சயமாக தமிழ்மணம் உங்களின் நடுநிலையான கருத்துக்கு நன்றி சொல்லவேண்டும்.] அவ்வகையிலே தமிழ்மணத்திலே மாற்றுக்கருத்துகள் அவை எப்புறமிருந்து எப்புரமெரிக்க வந்தாலும் விடுவதுதான் முக்கியமான நோக்கம். ஸ்ரீலங்கா, ஈழ, இந்திய ஊடகங்கள் சொல்லமறுக்கும் கருத்துகளும் அவற்றுக்கான வெளிப்பாட்டோடு இருக்கவேண்டுமென்றே தமிழ்மணம் கதவைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றது. அதை நீங்கள் சரியாகவே அடையாளம் கண்டதற்கு நன்றி. ஆனால், உங்களினைப் பேச வேண்டாமென்று தமிழ்மணம் திரட்டியூடே எங்கேனும் எவரேனும் எப்போதாவது சொன்னார்களா? மாலன் அண்மையிலே கூறியதுமாதிரியே ஒரு குழந்தைப்பிள்ளைத்தனமான குற்றச்சாட்டினை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், நீங்கள் உங்கள் கருத்தினைச் சொல்லும்போது, அவற்றினை அனுமதித்து எல்லாப் பதிவுக்காரர்களும் விடுகின்றார்கள். (நீங்கள்தான் மற்றையவர்களினுடையதை அனுமதிக்கின்றீர்களில்லை என்பது இங்கே அடுப்பிலே கிடக்கட்டும்.) அதேபோல, அவர்களும் கருத்தினைச் சொல்லக்கூடாதா? மாற்றுத்தளமென்பது, உங்களுக்கான கருத்தினைச் சொல்லும் தளமென்பதா உங்கள் அர்த்தம்? எல்லாவிதமான மாற்றுக்கருத்துகளுமென்று நீங்கள் சரியாக அர்த்தப்படுத்த உங்கள் சித்தாந்தம் இடமளித்துக் கைகொடுக்காதா?

மெய்யாகவே, வெஞ்சின பாயும்புலியும் சாராமல், குளிர்த்தூக்கம்போட்டுக்கொண்டேயிருக்கும் பொதுவகில ஒரேகணத்துக்கனத்த புரட்சியும் சாராமல் ஈழத்தமிழர்நலனுக்கான (மாற்றுக்)கருத்தினை எப்படி நானோ என்னைப் போன்றவர்களோ தத்துவத்திலே புரட்சிகரமாகவும் செயற்படுவதிலே உடனடி நடைமுறைக்காவும் வகையிலும் செய்யலாமென்பதை நீங்கள் சொல்லித் தந்தால், மகிழ்ச்சியடைவேன். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புலிப்பினாமிக்குறுந்தேசியக்கத்திகள் என்று சொல்லிக்கொண்டு கட்டுரை போடுவதிலும்விட, இலங்கை வெளிநாட்டமைச்சமைச்சருக்கு அமெரிக்க அரசு, மனிதவுரிமைகளைச் சேதப்படுத்துதல் என்ற அடிப்படையின்கீழே, இராணுவ உதவி வழங்குவதைத் தடுக்க விண்ணப்பிப்பது இன்றைக்கு முக்கியமான தமிழ்மக்களுக்கான போராட்டம் என்றே தோன்றுகின்றது. இதைக்கூட, "ஈராக்கிலே மனித உரிமைகள் மீறும் ஏகாதிபத்தியத்திடம் கெஞ்சிக்கொண்டிருக்கவேண்டாம்; எதிர்ப்புரட்சி செய்யவேண்டும்; அல்லாதோர் புலிப்பாஸிட்டுப்பினாமிகள்" என்று புரட்சி/டுக்கட்டுரை வடிப்பீர்களானால், உங்களின் தத்துவத்தோடு ஒத்துப்போனாலுங்கூட, நடைமுறை முக்கியமாகின்றதென்பதிலே மாறுபடுவேன். உலகின் ஒரே மார்க்ஸியப்புரட்சியாளர்கள் நீங்களும் அசுரனும் மக்கள் கலை இலக்கியக்குழுவும் மட்டுமே, மற்றோரெல்லாம் பாஸிட்டுப்பூஸ்டர்கள் அன்ரெனாக்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தால், ஏகாதிபத்திய அமெரிக்கப்பாணியிலே நடுவிரலையோ, அரேபியப்பாணியிலே பெருவிரலையோ, ஈழத்துப்பாணியிலே ஒரு கையில் இருவிரல்களாலே வளையம் குவித்து அதனுள் மறுகையின் சுட்டுவிரலாலேயோ சுட்டிச் சைகை செய்வதல்லால், வேறொன்றுமறியோம் இரயாகரனே; வேறு யாருமாயிருப்பின், அப்படியே செய்துவிட்டுப்போயிருப்பேன். இரயாகரன் என்பவரின் கடந்த இருபதாண்டு வரலாறும் தத்துவக்கோட்பாடுகளும் தான் கொண்ட கருத்துக்காக நின்றாடும் நேர்மையும் திடனும் தெரிந்தளவிலே, அவர் புலிப்பாஸிட்டுப்பினாமிமாபியாபோபியாவின் உச்சக்கட்டத்திலே என்னை நோக்கி என்ன வசை அரற்றினாலுங்கூட, அப்படியாக ஒருபோதும் அவமதிப்பினைச் செய்யப்போவதில்லை.



மிகுதி பின்னால். இப்போதைக்கு ஒரேயொரு மேலதிகக்கேள்வி (நீங்கள் திட்டியே பதில் சொன்னாலுஞ் சரி; திட்டாமலே போனாலுஞ் சரி)

உங்கள் இடுகையிலே சிவப்பாலே எழுதியிருக்கும் வரிகளிலே 'புலி' என்பதற்குப் பதிலாக் 'இராயகரன் & அவரையொத்த தத்துவம்சார்மார்க்ஸியக்குழுக்கள்" என்பதைப் பிரதியிட்டு வாசித்து விடைகளைத் தருவீர்களா? (அல்லது உள்ளாழ்ந்து பாருங்கள்)

நன்றி.

இவ்வண் இவன்,
பாஸிஸ்டுப்புலிப்பினாமிமாபியாபுட்(food)சோல்ஜர்


பிகு: தூங்கும் பாஸிட்டுகளை எழுப்பிப் பாஸிஸத்துக்கு உயிர் கொடுக்க முயன்றால், மதிப்புக்குரிய இரயாகரன் என்றுகூடப் பாராமல் எதிர்ப்போம் என்பதை ஒரு கையுயர்த்தி முஷ்டி மடித்து, மறுகையிலே காய்கறியரிகத்தி பிடித்து, செங்கோஷமிட்டு எதிர்ப்பேன் என்பதை இத்தால் தெரிவிக்கின்றேன் :-)

24 comments:

இளங்கோ-டிசே said...

வாசித்தேன் என்பதற்காகவும்,போட்டிருந்த லேபிள்(கள்) பிடித்திருந்தன என்பதற்காகவும்!

Anonymous said...

//ஈழத்துப்பாணியிலே ஒரு கையில் இருவிரல்களாலே வளையம் குவித்து அதனுள் மறுகையின் சுட்டுவிரலாலேயோ சுட்டிச் சைகை செய்வதல்லால்//

என்ன ஈழத்துப்பாணியா? கபர்தார்...
அது அசல் நார்த் மெட்ராஸ் பழக்கம். எங்க ஏரியா உள்ள வராதே(ங்கோ) :-)

அற்புதன் said...

தோழர் பாசிஸ்ட் பெயரிலி அவர்களே
உம்மை வருக வருக என வரவேற்கும் இன்னொரு பா(ச)சிசத் தோழர்.:-)

ஒரு பின்னூட்டத்தையே மறுக்கும் இவர்கள் புரட்சி செய்தால் மக்களின் சுதந்திரம் என்ன விலையாக இருந்திருக்கும் என்பது அந்த மார்க்சுக்கே வெளிச்சம்...

மலைநாடான் said...

ராசா போதும் போதும். ஓக்டோபர் கடைசிவரைக்கும் இது போதும். இந்தளவில விட்டிட்டு, அந்தளவைப் பாருங்கோ... இல்லையென்டு அடம்பிடிச்சா, இனி அந்த ஆள வைச்சுத்தான் அடி போடனும். :))

-/பெயரிலி. said...

காணமற்போன இருவரைக் காணக்கூடியதாகவிருக்கிறது :-)

பிரகாஷ், அதிலும் இரண்டு வகை முத்திரைகளும் சைகைகளும் பயன்பட்டிருக்கின்றதாக ஒரு ஞாபகம். வட இந்திய பாணி ஒன்றோ? பத்தாம் வகுப்புக்குப்பின்னால், இதிலே பெரிய ஆய்வுகள் நடத்தவில்லை :-(

அற்புதன் & மலைநாடான் ஒத்துக்கொள்ளவேண்டியவைதான்

Anonymous said...

ஐயா,

கொஞ்சம் பதிவுக்கு அப்பாற்பட்டது:

//பட்டாம்பூச்சி சிறகடிப்புக்கும் பசுபிக்சமுத்திரத்துப்பூகம்பத்துக்குமான தொடர்பாடலின் நடைமுறைப்பயனில்லாமை...//

இயற்பியலில் "குழப்ப இயக்கவியல்" (Chaotic Dynamics) எனும் பாடத்தில் நீங்கள் மேற்சொன்ன தொடர்பாடல் பற்றி சிலாகிப்பார்கள். நீங்கள் அப்பாடம் பயின்றவரோ ?

Anonymous said...

பெயரிலி யிடம் சில கேள்விகள்...

//இரயாகரன் என்பவரின் கடந்த இருபதாண்டு வரலாறும் தத்துவக்கோட்பாடுகளும் தான் கொண்ட கருத்துக்காக நின்றாடும் நேர்மையும....//
இதில் தான் கொண்ட கருத்துக்காக நின்றாடும் நேர்மையும் என்ற விடயத்தில் நீங்கள் எவ்வாளவு தூரம் உடன்படுகின்றீர்கள்.?
இப்பிடியான கருத்தியல் கட்டுமானங்களின் மீது உருவாக்கப்படும் மனம் பாஸிச மனமாயன்றி வேறெதுவாய் இருக்கும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
தட்டையான தளத்திலும் கோடுகளால் வரையப்பட்ட தத்துவ அமைப்பும் தான் உண்மையான இன்றைய பாஸிசம் என்பேன். பின் தங்களால் தங்களுக்கு தாங்களே கீறிய புனித வட்டத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பவர்களும், மற்றையோரையும் தங்கள் வட்டத்துக்குள் வருமாறு வற்புறுத்துவோரும் தான் உண்மையான பாஸிஸ்டுக்கள்.
மக்கள் நலன் சார்ந்த இயங்கியல் கோட்பாடு நடைமுறை சார்ந்து இயக்கம் பெற தவறியவர்களாலேயே குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றது.
இதற்கு ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அது சார்ந்த இடங்களிலிருந்தும் பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும்.
பிரான்ஸில் சர்த்தர் போன்றோர் ந்டைமுறைப்பிரச்சினை சார்பிலும், அதன் தோற்றுவாய்கள் சார்பிலும் எடுத்த நடவடிக்கைகள் 'அடிப்படைவாத மார்கஸிய' ர்களால் எவ்வாறு நோக்கப்பட்டது என்பதும் சர்த்தர் மீது அவர்கள் அள்ளி இறைத்த அவதூறுகளுமே இதற்கு நல்ல உதாரணம். இவர்கள் தான் உண்மையான மக்கள் விரோத சக்தி. இது தான் மோசமான வன்முறை.

//..ஆனால், உங்களுடைய கொக்கோ கோலாவுக்கும் கொக்கட்டிச்சோலையிலும் கொக்கிளாயிலும் குண்டுவெடிப்பதற்கும் சம்பந்தப்படுத்தும் பட்டாம்பூச்சி சிறகடிப்புக்கும் பசுபிக்சமுத்திரத்துப்பூகம்பத்துக்குமான..//
அடிப்படைவாதத்திற்குள் அமிழ்ந்து போனவர்களால் தான் இப்பிடியான கருத்துநிலைகளை கட்டமைக்க முடியும். மார்க்ஸிய சிங்கம் சிவசேகரம் கூட இப்பிடியான பலவிதமான நகைச்சுவைகளை அள்ளிவிடக்கூடியவரே...
கருணா வின் உடைவிற்கு CIA தான் காரணம் என்று சொல்பவரை வேறெப்படிச் சொல்ல முடியும். கருணாவின் உடைவிற்கு பிரபாகரனை விட வேறு காரணம் இருக்க முடியுமா?
அமெரிக்க ஏகாதிபத்தியம் வகுத்த உலக ஒழுங்கின் பாதையில் நாமெல்லாம் கைவீசி நடைபயில்கின்றோம் என்ற கேவலமான உண்மையை இந்த வகையில் நாம் மூடிமறைத்துவிட முடியாது. நுகர்வுக்கலாச்சாரத்தின் அதிகரிக்கும் விரிவு நிலையை எதிர்ப்பதை விட்டுவிட்டு இப்படி பைத்தியகாரத்தனமாக பேசமுடியாது.
இந்த லட்சணத்தில் இவர்கள் எல்லாம் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி குத்து விடுகின்றனர்.
துவித எதிர் மனநிலைகளில் வாழும் இவர்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. கறுப்பு அல்லது வெள்ளை இது தான் அவர்களின் முடிவு. கறுப்பு வெள்ளைகளுக்கு இடையில் பரந்திருக்கும் அப்பாவிவெளிகளை தனது தத்துவ வன்முறையினூடு நிராகரித்துவிடுகின்றனர். இவர்களா மனித நேய தத்துவத்தின் பால் உண்மையான ஈர்ப்பு கொண்டவர்களென நீங்கள் கருதுகின்றீர்களா?
நடைமுறை வாழ்வு தரும் கொடூர அனுபவங்களுக்கு தத்துவங்கள் புகலிடமாக இல்லை என்ற கசப்பான உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் இரயாகரன்.

//..."ஈராக்கிலே மனித உரிமைகள் மீறும் ஏகாதிபத்தியத்திடம் கெஞ்சிக்கொண்டிருக்கவேண்டாம்; எதிர்ப்புரட்சி செய்யவேண்டும்; அல்லாதோர் புலிப்பாஸிட்டுப்பினாமிகள்" என்று புரட்சி/டுக்கட்டுரை வடிப்பீர்களானால், உங்களின் தத்துவத்தோடு ஒத்துப்போனாலுங்கூட, நடைமுறை முக்கியமாகின்றதென்பதிலே மாறுபடுவேன்...//
தத்துவத்தோடு ஒத்து போனாலும்கூட, நடைமுறை முக்கியமாகின்றது என்று சொல்கின்றீர்களே... நடைமுறை முக்கியமற்ற தத்துவத்தோடு எப்பிடி உங்களால் ஒத்துபோக முடிகின்றது பெயரிலி? நடைமுறை தான் தத்துவம். நடைமுறையில் இருந்து தான் தத்துவம் உருவாக முடியும். அப்பிடி இல்லாத தத்துவம் தேவையில்லை.
அத்தத்துவம் இராயகரனின் தத்துவ உள்ளமைப்பை நெருங்க முடியும். அவ்வளவு தான்.

கெம்பல் மார்க்கிஸிய குஞ்சு பற்றிய குட்டிக்கதை.
இறுகிப்போன மார்க்ஸியர்கள், மாக்ஸிய குஞ்சுகளை பெற்றெடுக்கின்றனர். பூனை குட்டி போடுவதைப் போன்று...
முன்னொரு காலத்தில் அப்பிடியான ஒரு மார்க்ஸிய குஞ்சுடன் ஒரு சிறுவர் இல்லத்துக்கு புறப்பட்டேன். போகும் வழியெல்லாம் மார்க்ஸிய குஞ்சு ரஷ்ய புரட்சி பற்றியும், வர்க்க எழுச்சி பற்றியும் தான் ஒரெ பேச்சு. சிறுவர் இல்லத்தை சென்றடைந்தவுடன் மார்க்ஸிய குஞ்சு கெம்பத்தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் நாம் அங்கே கண்ட காட்சி தான். அங்கே ஒரு NGO வின் ஊழியர்கள் சிறுவர்களுக்கு பாண் வழங்கி கொண்டிருந்தனர். மார்க்ஸிய குஞ்சு புலம்ப தொடங்கிவிட்டது. சிறுவர் இல்ல நிர்வாகிகளுக்கு போய் முறைப்பாடு இட்டது. எனக்கு NGO வின் hidden agenda பற்றி வகுப்பெடுக்கத் தொடங்கிவிட்டது. நான் அதை ஏற்றுக்கொண்டேன் மிக மனப்பூர்வமாக. மார்க்கிஸிய குஞ்சுக்கு ஒரே சந்தோசம். தனது வாதம் வெற்றி பெற்றுவிட்டதென்பதிலும் தான் குஞ்சு என்ற நிலையை கடந்து வருவதுலிலும் தான்.

இப்போது மார்க்சிஸிய குஞ்சு வளர்ந்து பெரிய ஆள் ஆகிவிட்டது. தானும் மார்க்ஸிய குஞ்சுகளை பெறத்தொடங்கிவிட்டது. அதற்கென்று ஒரு வாழ்வு. அதற்கென்று கொஞ்சம் குஞ்சுகள். அதன் வாழ்வு சந்தோசமாயிற்று. அதன் குஞ்சுகளும் எகாதிபத்தியம் பற்றி பேசுகின்றனர். வர்க்கப்புரட்சி பற்றி பேசுகின்றனர். NGO களின் இரகசிய வேலைத்திட்டம் பற்றியும் பேசுகின்றனர்.

ஆனால் இன்றும் சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. NGO கள் பாண் வழங்குகின்றனர். பட்டினியால் சாகும் சிறுவர்கள் பாணை சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு NGO களின் பாணை விட்டால் வேறு உணவுகள் இல்லை. அவர்களுக்கு செம்புரட்சி பற்றித் தெரியாது. அவர்களை மார்க்ஸிய குஞ்சுகள் முட்டாள்கள் என்று நகைக்ககூடும்.

இதில் சோகம் என்னவென்றால், இப்போது இருக்கும் மார்க்ஸிய குஞ்சுகளும் நாளை முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். அவை அப்போது ஏகாதிபத்தியம் என்று பேசாது. imperialism என்று சப்பைக் கொட்டு கொட்டும். அதையெல்லாம் நாங்க பாத்து ஆகா அறிவுஜீவி வந்துவிட்டான் என்று புளங்காகிதமடைவோம்.
போடாங்ங்ங்ங் கொய்யாலா..

கேள்வி.1- நடைமுறை வாழ்வு சாராத தத்துவத்தால் நீங்கள் பட்டினியால் அலையும் சிறுவர்களை சாக்காட்டுவீர்களா?

கேள்வி.2- எழுத்து என்பதன் தேவை நடைமுறை சார்ந்தல்லாமல் தெவை என உணருகிறீர்களா?

கேள்வி.3- அமெரிக்காவின் மூஞ்சையில் குத்தும் போது இவர்களுக்கு கை வலிக்காதா?

கேள்வி.4- இவர்கள் சொல்வது போல் 'ஓ மகா காளி புரட்சி வந்துவிடு' என்றால் புரட்சி வந்துவிடும? அவ்வாறு வருமாயின் எங்கிருந்து வரும்? என்ன வேகத்தில் வரும்? இப்பவும் சிவப்பு நிறத்தில்தான் வருமா?

பி.கு.1- துவித எதிர் மனநிலை சிந்தனாவதிகள் என்னை NGO க்கு ஆதரவானவன் என்று திட்டக் கூடும். அதை நிறுவக்கூடும். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நிறுவத்தேவை இல்லை. உங்களுக்கு மட்டும் நான் ஒப்புக் கொற்கின்றேன். உங்கட அசத்தலான கண்டுபிடிப்புகள் தாங்க முடியலப்பா.

பி.கு.2- என்னை அமெரிக்காவின் ஆள் என்று சொல்லலாம். மார்க்ஸிய குஞ்சுகள் மட்டும் என்னை அப்பிடி சொல்லலாம். (CIA, டொலர் அதையும் சேர்த்து போடுங்க தலைவா..).

பி.கு.3- NGO கள் தான் திட்டமிட்டு சிறுவர்கள் மீது பட்டினியை உருவாக்கி பின் பாணை வழங்குகின்றன என்று நீங்கள் சொல்வீர்கள் ஒத்துகுறேன். நீங்க புத்திசாலி ங்கிறத ஒத்துக்கிறேன்.
-அமீபா-

thiagu1973 said...

இலங்கையில் இருக்கும் மற்ற மார்க்சியவாதம் பேசும் (தமிழர்கள் அல்லது சிங்கள்வர்கள்) யாராக இருந்தாலும் அவர்களது நிலைபாடு என்ன அவர்கள் புலிகளில் இருந்து எந்த வகையில் மாறுபடுகிறார்கள்.
மேலும் தோழர் பி. இரயாகரன் அவர்களுக்கும் அந்த மார்க்சிய குழுக்களுக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

இரயாகரன் உங்கள் மடலை மட்டறுத்தார் என்பதை தவிரவும் தங்களுக்கு இரயாகரன் மேல் சித்தாந்த ரீதியிலான வேறுபாடுகள் என்னென்ன?

மடலுக்கு பதில் அளித்தல் அல்லது அளிக்காமல் போதல் இவை எல்லாம் தனிமனித விரும்பம் சார்ந்ததே ?

தன்னை மார்க்சிய வாதி என கூறிக்கொள்ளும் ஒருவர் கண்டிப்பாக அனைத்து வசவுகள் மற்றும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேணும் எனும் நேர்மை? நான் கொண்டுதான் இருந்தேன் ஆனால் நடைமுறை அனுபவம் அதை மறுக்கிறது !

ஏனெனில் இங்கே நேர்மையான விவாதம் ஏதேனும் நடக்கிறதா?

எனவே பின்னூட்டங்கள் மட்டருத்தலை வைத்து ஒருத்தரின் மொத்த அரசியல் நிலைபாட்டையும் தீர்மானிக்க இயலாது என நான் துணிந்து கூறுவேன் .

அதை தவிர வேறு மாறுபாடுகள் என்னென்ன என்பதை சொல்லுங்கள் .

இதை நீங்கள் வெளியிடாமல் போகலாம் ஆனால் அதுக்காக நான் உங்கள் அரசியல் நிலைபாட்டை கேள்விக்கு உள்ளாக்க போவதில்லை

-/பெயரிலி. said...

அநாமதேய அமீபா,
இரயாகரனின் பலமும் பலவீனமும் அவர் பத்தாண்டுகளுக்கு முன்னாலேயிருந்த அதே தத்துவத்தையும் கட்டுரை உள்ளீடுகளையும் காலத்தினை வெல்லப் போட்டிருப்பதே என்பதாலேயே அவர் மீது மதிப்பும் (இலண்டன் ஜெயதேவன், ஜெர்மனி ஜெமினிக்கும் பிரான்ஸின் இரயாகரனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு) சோர்வும் (கொழுவி சொன்னதுபோல, பாசிசத்தைப் பொதுவெடுத்தால், ஆனைக்கட்டுரை பூனைச்சிற்றுரை ஆகிவிடுகிறது) உண்டு.

=========================
/எனவே பின்னூட்டங்கள் மட்டருத்தலை வைத்து ஒருத்தரின் மொத்த அரசியல் நிலைபாட்டையும் தீர்மானிக்க இயலாது என நான் துணிந்து கூறுவேன் ./

தியாகு, உங்களைவிட இரயாகரனை அதிககாலம் கவனித்திருப்பவன் என்றளவிலே,மட்டுறுத்தலைமட்டுமில்லை, மட்டுற்றுத்தலையே வைத்து அவரின் அரசியலை நான் தீர்மானிப்பதில்லை; தீர்மானிக்கவில்லை.

/அதை தவிர வேறு மாறுபாடுகள் என்னென்ன என்பதை சொல்லுங்கள்./

இரயாகரனின் பதிவிலே என்னென்ன பேசப்பட்டன என்பவற்றினையும் என் முன் பதிவிலே என்ன சொல்லியிருக்கின்றேன் என்பதையும் வாசித்துவிட்டீர்களென்று சொல்லுங்கள். அதன் பின்னால், வேண்டுமானால், ஆறு வித்தியாசங்கள் உங்கள் மேலே போட்டிருக்கும் கேள்விகளுக்குச் சொல்கிறேன்.

/இதை நீங்கள் வெளியிடாமல் போகலாம்/
எதற்காக அப்படியாக எண்ணினீர்கள்?

உங்களின் மார்க்ஸியத்தத்துவம் இங்கே கேள்விக்குள்ளாகவில்லை; ஈழத்துக்கான இரயாகரனின் அதுசார்ந்த நடைமுறையும் மற்றவர்களைப் பொதுவிலே பீம்சிங் பானா படவரிசைபோல, புலி, பினாமி, பாஸிஸ்ட் என்று பட்டம் சூட்டும் இலர்ச்சார்ச்சனைகளுமே கேள்விக்குரித்தானவை. அதனால், நீங்கள் என்னையும் இரயாகரனையும் பற்றி அவ்வகையிலே கவலைப்படாது, டோண்டுவையும் அதியமானையும் பற்றிமட்டும் கவலைப்பட்டுக்கொண்டு தூங்கப்போகலாம் என்று உத்தரவாதம் தருகிறேன். ;-)

thiagu1973 said...

டோண்டுவையும் அதியமானையும் பற்றி கவலை பட நான் என்ன அவர்களது விரோதியா அல்லது நண்பனா ? :))

மேலும் இந்த ஈழத்து காரர்களிடம் உள்ள பிரச்சனை இதுதான் கேள்வி

எங்கட நாடு எங்க மண் என குறுகி போய் அதே சிந்தனைதான் இருக்கும்

வேற எவனும் கேள்வி கேட்க கூடாது கேட்டால் ,

உன் பிரச்சனையை பார் என்பதாகத்தான் பதில் இருக்கும்

நீங்கள் பகடியாக சொன்னாலும் அதன் உள்ளே எனக்கு ஒலிப்பது இதுதான்.

ஏகாதிபத்தியம் தனது பிடியில் இலங்கையை மட்டும் வைத்து இருக்கவில்லை என்பதாக நினைப்புதான் .காரணம்

உண்மையை சொன்னால் நீங்கள் இடும் பெரிய பெரிய பதிவுகளீல் விசயத்தை தேடுவது கடலில் விட்ட பேனாவை தேடுவதாகத்தான் இருக்கிறது.

எனவே எனது கேள்விக்கு பதில் சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் .

மு. மயூரன் said...

அமீபாக் குஞ்சு,

நீங்கள் எந்தக் கோட்பாட்டின் குஞ்சு என்பது புரிகிறது.

"எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது"

என்று எப்பவோ சொன்ன காரியத்தை, ஆங்கிலத்திலிருந்தான நேரடி மொழிபெயர்ப்புச் சொற்களைப்போட்டுக் குழப்பி புரியவிடாமற்செய்யும் தத்துவத்தின் குஞ்சான நீங்கள் அமெரிக்காவின் மூஞ்சியில் குத்துபவர்களை சிலாகித்து எழுதவும் பேசவும் செய்கின்ற மார்க்சீயக்குஞ்சுகளுடன் தான் உங்கள் "கதையாடல்களை" எல்லாம் அளக்க முடியும்.
உண்மையைலேயே "அமெரிக்கத்தின்" மூஞ்சியில் குத்துபவர்களிடம் போய் கதையாடிப்பாருங்கள்.. பீச்சாங்கை உங்கள் மூஞ்சியில் விளையாடும்.

கோட்டுக்கருத்தியல், கோடில்லாக்கருத்தியல், கருப்புவெள்ளைத்தத்துவம், சாம்பல் தத்துவம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கும் உங்க்ளுக்கும் உங்கள் குஞ்சுகளுக்கும்
தெரிந்ததெல்லாம் மார்க்சீயத்தை கருவறுப்பது எப்படி என்று இரவுஅகலாக சிந்திப்பதும் பண்பாட்டின் உதிரிகளாய் அலைவதும்தான்.

அதற்காகத்தானே உங்களை திட்டமிட்டு உருவாக்கிவிட்டிருக்கிறார்கள் உங்கள் "முன்னோர்கள்"

உங்கள் "சாம்பல்" கோட்பாட்டாளர்கள் மக்களுக்கு பிரயோசனமாய் எந்தச் சிறு சாம்பல் துகளையாவது எடுத்து அப்பால் போட்டிருக்கிறார்கள் என்றால், பேச வாருங்கள். பாசிசத்தைப்ப்ப்பற்றியும் .......


ப்ரிட்டன் உலகின் ஆட்சியில் இருந்த காலத்தில் கூட உங்கள் முன்னோர்கள் (அப்போது அவர்கள் வேறு பெயர்களில் இருந்தார்கள்) சுதந்திரப்போராட்டம் எல்லாம் படு மோசமான இலட்சியவாதம், ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொண்டு அடங்கிப்போவதே வாழ்வதற்கான தத்துவம் என்று உளறிக்கொண்டிருந்தார்கள்.


இப்போ அவர்களின் பேரக்குஞ்சுகளான நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள்.

ஆட்சியில் அமெரிக்கா உங்கள் கைகளில் நாசிசத்தின் மூலவர்களின் கோட்பாட்டுப்புத்தகங்கள்..

மார்க்சீய மைப்புக்களின் தவறுகளையும், மர்க்சீயர்களின் போதாமைகளையும் எடுத்துக்காட்டுகளாகத்தூக்கிக்கொண்டு ஒரு புரட்சிகரத் தத்துவத்தையே பிழையென்று நிறுவி நிற்கும் நீங்கள் தான் உண்மையான "துவித எதிர்நிலைச்" சிந்தனையாளர்கள்.

-/பெயரிலி. said...

/மேலும் இந்த ஈழத்து காரர்களிடம் உள்ள பிரச்சனை இதுதான் கேள்வி

எங்கட நாடு எங்க மண் என குறுகி போய் அதே சிந்தனைதான் இருக்கும்

வேற எவனும் கேள்வி கேட்க கூடாது கேட்டால் ,

உன் பிரச்சனையை பார் என்பதாகத்தான் பதில் இருக்கும்/

தோழர் தியாகு (இந்தத்தோழர் என்பதை எடுத்த இடமெல்லாம் இறைப்பதைப் பார்க்கவே எண்ணிக்கையில் இரயாகரனின் பாஸிஸ எண்ணிக்கையைக் கடந்து ஓடுமென்று படுகின்றது. அதற்காகப் போடாவிட்டால், அதையே சாக்காக வைத்துக்கொண்டு பாஸ் சீசாப்பின் ஆமி என்றெல்லாம் தொடங்கவும் வாய்ப்பினைத் தந்ததாகிவிடும். நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்!! இரண்டு மனம் வேண்டும்;-))

இதற்கு எங்கட நாடு எங்கட மண் என்று எண்ணக்கூடாதென்று எண்ணும் நீங்களெல்லாம், உங்கட நாடு உங்கட மண்ணிலே ஈழத்தமிழரை உங்கட ஊடங்கள் உங்கட (மார்க்ஸிய) அரசியல்வாதிகள் டாவு கட்டி (பதங்களுக்கு வாழ்க தம்பி லக்கி லுக்) அடிக்கும்போதும் சிங்களப்பேரினவானசகதிகளை சகோதர மார்க்ஸிய இயக்கங்கள் என்று அன்புச்சகோதரர்கள் வசனங்கள் பேசும்போதும் போய் மார்க்ஸின் பின்னாலும் மக்களியக்கங்கள் என்று சொல்லிக்கொண்டும் காணாமற் போய்விடுங்கள். நல்ல ஆட்களப்பா. எத்தனையோ தமிழக நண்பர்கள், நண்பரல்லாதவர்கள் ஸ்ரீலங்கா, ஈழமென்று பேசிக்கொண்டிருக்கின்றார்கள். பேசக்கூடாதென்று மறுத்து எங்கேயேனும் சொல்லியிருக்கின்றதைக் காட்டுங்கள். எதற்குப் பயப்பிராந்தியிலே அலைகின்றீர்கள்? (இதை வேறு 'பய பிராந்தியிலேயே அலைகிறான்' என்று வாசித்து வைத்துவிட்டு, அதற்கு வேறு எனக்கு பிராது வைக்காதீர்கள் ;-))

(நீட்டி முழக்கி உருப்படியாக உள்ளே ஒன்றுமில்லாமலே எழுதுவதற்கு மன்னிக்கவேண்டும்; உங்களின் செஞ்சாந்திட்ட பின்புலத்துப்பதிவுகளிலே பார்ப்பான் என்று திட்டி எழுதும் கவிதைகள் (???) பலவற்றிலும் விட உருப்படியாகவே எழுதுகிறேன் என்று ஓர் அதீத தன்னம்பிக்கையோ தற்பெருமையோதான்)

ஆனால், நான் ஈழத்தவர் கருத்து ஈழத்தவர்தான் கருத்துச் சொல்லவேண்டுமென்ற அர்த்தத்திலே எழுதவில்லை. அப்படியாக எத்தருணத்திலும் எழுதுவதுமில்லை. இரயாகரனோடு எதற்கு / என்ன நான் பேசுகின்றேன் என்று புரிந்துகொள்ளாமல், ஆறு கேள்விகளை அள்ளிவீசியிருக்கின்றீர்களே, அதுதான் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த அதியமானுடனான அரிவாள்வீச்சிலே மேலும் பேசுவது என்னத்தினைப் பேசுகின்றோமென்றாவது தெளிவினைத் தருமென்ற அர்த்தத்திலே சொன்னது. உணர்ச்சி வசப்படாதீர்கள். பிறகு "பார்ப்பு என்றொரு ஆப்பு. பல்தேசியக்கம்பனிக்குக் காப்பு" என்று கவிதை தொடங்க, பித்தன் பார் அங்கேயே விழுந்து மாண்டான் என்று யாராவது என்னைப் பற்றி மரணவீட்டுக்கு குறும்பா பாடித் தொலைப்பார்கள். கடலிலே மினக்கெட்டுப் போய்ப் பேனாவினை விடாவிட்டால், தேடவேண்டிய அவசியமிருக்காதே; ஓடத்தை விட்டாலாவது ஏதாவது காரணமிருக்கென்று சொல்லலாம். பேனாவை...? கற்பனைக்கும் எல்லையுண்டு. (இதற்கு வேறு பார்ப்பான் அடிவருடி என்று தொடங்கிவிடாதீர்கள் :-()

/ஏகாதிபத்தியம் தனது பிடியில் இலங்கையை மட்டும் வைத்து இருக்கவில்லை என்பதாக நினைப்புதான் .காரணம்/

அண்ணா, எண்பதுகளிலே இந்த ஏகாதிபத்தியம், புரட்சி, தோழர், குறுந்தேசியவாதம், குடியேற்றவாதம், பாசிசம் போன்ற சர்வதேச எலி பிடிக்கும் எல்லா நிறத்துப்போராட்டப்பூனைக்குட்டிகளையும் பார்த்து, வாசித்து, கேட்டு (சரியான பெரிய பூர்ஸுவா, பெட்டிபூர்ஸுவா, கடகப்பூர்ஸுவா எல்லாமாகப் பங்கு பெற்றாமலே) விமர்சித்து நம்மையும் அவ்வப்போது ஆங்காங்கே சாய்மனைக்கதிரைமார்க்ஸிஸ்டாகக் காட்டி மகிழ்ந்துவிட்டாயிற்று. அதனால், இலங்கையிலே ஏகாதிப்பத்தியச்சாப்பாடு எந்த எரிகின்ற மூலத்திலிருந்து, எண்ணெய்க்குதத்திற்குத் தாவி குண்டலனி சிரசுக்கடித்தது எல்லாம் தெளிவாகத்தான் இருக்கிறோம். இப்படியான மார்க்ஸும் ஹெகலும் உங்களுக்கும் இரயாகரனுக்குமே சொந்தமென்ற தனியுடமைக்கோஷமே வெறுப்பேற்றுமளவுக்கு நமது பொதுவுடமைப்பார்வை இன்றைக்கும் இருக்கின்றதென்றால் பாருங்களேன். அதுதான், இரயாகரனின் அடிப்படைத்தத்துவத்தோடு முரண்படவும் கஷ்டமாகவிருக்கின்றதென்று இப்போதும் எழுதவேண்டிய அவலம், உங்களைப்போன்ற கணிச்சுவரொட்டி மார்க்ஸ் மார்ச் பண்ணும் வீரருக்கும் பதில் சொல்லவேண்டிய நிலை இருக்கின்றது. அதனால், ஏகாதிபத்தியம் எங்கே என்ன செய்கின்றதென்பதைப் பற்றி நாமும் அறிவோம். அமெரிக்கக்கடற்படைக்கப்பலின் வருகையை எதிர்த்துவிடுவதனால் மட்டுமே ஏகாதிபத்தியத்தைக் கவிழ்த்துவிடலாமென்று எண்ணிக்கொள்கிறதைக்கூட போராட்ட குணமென்று எண்ணிக்கொள்ளலாம். (மரபுMarkCyst 'சந்திப்பு' செல்வப்பெருமாளுடன் செல்வநாயகியின் பதிவிலே என்ன சண்டை போட்டிருக்கின்றோம் என்பதையேனும் பார்த்திருக்கலாம். நீங்கள் புஹாரியோடு 'மார்க்ஸியப்போராளிக்குழு' என்றென்றும் அன்புடன் சண்டைபிடிக்க முஸ்தீப்பிலே இருந்திருக்கும் அவசரத்திலே கவனிக்காமலிருந்துவிட்டீர்களென்று நம்புகிறேன்). வேண்டுமானால், ஹெகல், குக்கல், விக்கல் தொடங்கி, இப்போதிருக்கும் சிக்கல் வரைக்கும் மார்க்ஸியப்போலிப்பதிவுகள் சொற்களைத் தூவுவதை வைத்தே பண்ணிக்காட்டுமளவுக்கு "ஏகாதிபத்திய எதிர்ப்புக்கருத்துகள்' உண்டு. அதுவல்ல சிக்கல் நமது.

இங்கே அருந்தோழர் இரயாகரனுடனான பிரச்சனை மார்க்ஸியக்கூப்பாடோ, ஏகாதிபத்தியச்சாப்பாடோ அல்ல; அவர் மற்றவர்களின் கருத்துகளைச் செவிமடுக்கும் (சரியாகச் சொன்னால், செவிமறுக்கும்) தன்மை குறித்தே.

நீங்கள் கேட்கும் கேள்விகளொன்றும் பெரிய சித்தாந்தத்திலே புரட்டிக் கேட்கும் சினமனிலே உருட்டி எடுத்த அப்பிள் பைக் கேள்விகள் அல்ல. சாதாரண டங்குவார் இழுக்கும் முதல்நாள் மார்க்ஸியவகுப்புக்குப் போய்விட்டுவந்த விடலைப்புரட்சிக்காரப்போராளி(த்தோழர் - தோழரை நாங்கள் விடக்கூடாது பாருங்கோ) வெத்தலை போட்டுக்கொண்டு கிடக்கும் கிழங்களை உதைத்துக் கேட்கும் உசார்வகைக் கேள்விகள்தான். கொஞ்சம் நான் இரயாகரனுக்கு என்ன சொன்னேன் என்று வாசித்திருந்தால், இவற்றுக்கான பதில் நான் தரத் தேவையில்லையே என்று சொன்னேன். உங்களின் உலகத்தினைப் புரட்டும் போராட்ட குணத்தினை இதற்காக வாசித்துச் செலவழிக்க நீங்களும் இரயாகரன்போலத் தயாரில்லை என்றுதான் தெரிகிறது :-(

----
/இரயாகரன் உங்கள் மடலை மட்டறுத்தார் என்பதை தவிரவும் தங்களுக்கு இரயாகரன் மேல் சித்தாந்த ரீதியிலான வேறுபாடுகள் என்னென்ன?/

சித்தாந்தம் என்பதிலும்விட, அதை நடைமுறைக்கான சித்தாந்தமாக வைக்காமல் கருத்தளவிலான பேசுவதற்கு மட்டுமேயான சித்தாந்தமாக மட்டுமே வைத்திருக்கின்றார் என்பதே



/மடலுக்கு பதில் அளித்தல் அல்லது அளிக்காமல் போதல் இவை எல்லாம் தனிமனித விரும்பம் சார்ந்ததே ?/

ஹா! தோழர், தோழர், தனிமனித விருப்பம்.எதிர்.கருத்துச்சுதந்திரமறுப்பு இந்த முரண் உங்களைப்போல, இரயாகரன்போன்ற கருத்துநிலைமார்க்ஸிஸ்டுகளுக்கு எப்போது சுரணை தருமென்று சொல்லினால், வசதிப்படும். இதே மாதிரியாக, இரயாகரன் எழுதும் இரண்டு பின்னூட்டங்கள் என் கைக்கட்டுப்பாட்டு வசப்பட்டு எங்கேனும் நான் தடுத்து நிறுத்திப் பார்த்திருந்தால், தெரிந்திருக்கும் என் ஏகாதிபத்தியவருடித்தனத்துக்கருத்துமறுப்புபூர்ஸுவாத்தனம் :-( [இது நீங்கள் நகைச்சுவையாக மேலேயுள்ளதை எழுதவில்லையென்றோ உங்கள் பக்கத்துவீட்டுப்பாலகன்பாலகியைவிட்டு எழுதிய கருத்தில்லையென்று நம்பித்தான் இந்தப்பதிலை எழுதியிருக்கிறேன்]

/தன்னை மார்க்சிய வாதி என கூறிக்கொள்ளும் ஒருவர் கண்டிப்பாக அனைத்து வசவுகள் மற்றும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேணும் எனும் நேர்மை? நான் கொண்டுதான் இருந்தேன் ஆனால் நடைமுறை அனுபவம் அதை மறுக்கிறது !

ஏனெனில் இங்கே நேர்மையான விவாதம் ஏதேனும் நடக்கிறதா?/

ஙங்?? சேம் சைட் கோல் போடுகிறீர்களே தியாகத்தோழர்? இதைத்தான் நானும் இரயாகரனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நேர்மையான விவாதமெங்கே நடக்கிறது? சொல்லப்போனால், விவாதமே நடக்கவில்லை. நான் என் நிலையிலே நின்று நடைமுறைக்கான சித்தாந்தம், என் கருத்துச்சுதந்திரம் என்று பேசிக்கொண்டிருக்கிறேன். இரயாகரன், விடாப்பிடியாக, புரட்சி, பினாமி, புலி, மாபியா என்று சொற்களை வைத்துக்கொண்டு permutation/computation விளையாட்டு பல்லாங்குழியிலே புளியங்கொட்டைகள் வைத்தாடிக்கொண்டிருக்கிறார்.

/எனவே பின்னூட்டங்கள் மட்டருத்தலை வைத்து ஒருத்தரின் மொத்த அரசியல் நிலைபாட்டையும் தீர்மானிக்க இயலாது என நான் துணிந்து கூறுவேன் ./

தோழர், உங்களைத் தொழுது சொல்கிறேன். உந்த விளையாட்டு ஆடவில்லை. சாம்பிள் பார்த்து சங்கீதம் வாங்கும் ஏகாதிபத்தியவிடலைப்பருவத்தினர் வேலையெல்லோ அது?

இங்கே இரயாகரன் என்னுடைய ஒரு பின்னூட்டத்தை மட்டுறுத்தியது ஒரு விடயமேயல்ல. மூன்று நாட்களாக அதைக் கேட்கக்கூட இல்லை. அதைச் சொன்னபோதுகூட, நான் இடும் அடுத்த பின்னூட்டத்தினை முன்னையபின்னூட்டம் போல உள்ளடக்கத்துக்காகத் தடுக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறித்தான் சொன்னேன். அப்போதுகூட, முன்னைய அனுமதிக்கக்கேட்கவில்லை; அவரைப் பதில் சொல்லவும் கேட்கவில்லை. ஸ்ரீரங்கன்தான் இரயாகரனைக் கேட்டார். ஆனால், இரயாகரன் தான் விடாமலிருந்ததற்காகச் சொன்ன காரணமே அவருடைய கருத்தாடல்நிலையை எடுத்துச் சொன்னது. தோழர், எனது அரைகுறை மார்க்ஸியவாசிப்பு, கலந்துரையாடல், அடிப்படையிலே அதிலான என் இன்னமுமான நம்பிக்கையிலே கருத்தாடல் என்பது இயங்கியலுக்கும் முன்னடந்து செல்வதற்கும் முக்கியமானதென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் தோளர். சிலவேளை என் மார்க்ஸியம், உங்கள்/இரயாகரனின் மார்க்ஸியம் என்பதெல்லாம் வேறுவேறோ?


/அதை தவிர வேறு மாறுபாடுகள் என்னென்ன என்பதை சொல்லுங்கள்/

ஆவ்! கொட்டாவிதான் வருகிறது தோழர். ஆனால், புரட்சிக்காரன் தூங்கக்கூடாது விழிப்புணர்வோடு இருகக்வேண்டுமென்பதாலே, முகத்தினைக் கழுவிவிட்டு வந்து எழுதுகிறேன்.

1. கருத்தாடல் என்பது மார்க்ஸியத்துக்கோ எந்த முன்னெடுப்புப்புரட்சிக்கோ கலகத்துக்கோ ஏன் கழகத்துக்கோ முக்கியமானது. செவிப்பறையை மூடிவைத்துக்கொண்டு தொண்டைக்குழியைமட்டும் திறந்து வைத்துக்கொள்வது மார்க்ஸியத்துக்கான கலந்துரையாடல் அல்ல என்பது பூர்ஸுவாக்குஞ்சு எனது அறிவு

2. சொற்கள் மட்டும் கப்பல் கட்டிக் கடலைத் தாண்ட வசதி செய்யாது; பூர்சுவா, புரட்சி, தோழர் எல்லாம் போதைச்சொற்கள்தான் என்றபோதும், அதன் வீரியம் கெட்டுப்போவதற்கு சிகிரெட் பத்த வைக்க நெருப்பினைக் கேட்கவும் "தோழர், உந்தப் புரட்சி நெருப்பைத் தாருங்கோ; பூர்ஸுவா சிகிரெட் பத்த வைக்கவேணும்" என்ற சலிப்புத்தன்மையான வசனபந்தாக்களே காரணமென்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்

3. பயிரிடுவார் எல்லோர் வீட்டுக்கும் வேளாண்மை நெல்லாக வராதவரைக்கும் வயலைப் பொதுவுடமையாக வைத்திருந்தாலுஞ்சரி, தனியுடமையாக வைத்திருந்தாலுஞ் சரி பயனில்லை. நீங்கள் பூர்ஸுவா விவசாயயுக்தி கைவைத்திருந்தாலுஞ் சரி புரட்சி விவசாயயுக்தி கைவைத்திருந்தாலுஞ் சரி பிரயோசனமில்லை.

4. எந்தப்போராட்டத்துக்கும் பிரச்சனைக்கும் அதற்கெதிரான போராட்ட வழிமுறைகளிலே வேலைத்திட்டங்களிலே முக்கியமானவையும் முதன்மையானவையும், பிரச்சனையின் அளவும் அது செய்யப்படும் எல்லையும். ஏகாதிபத்தியக்கொக்கோகோலாவுக்கும் இலங்கையின் தமிழ்ப்போராட்டத்துக்கும் சுற்றியும் சுற்றாமலும் சம்பந்தமிருக்கலாம். ஆனால், அஃது நடைமுறையளவிலே எத்துணை அழுத்தமான மாறியாக இருக்கப்போகிறதென்பதே, ஈழத்தின் போராட்டத்திலே ஏகாதிப்பத்திய ஸீரோகலோரிகோலாவுக்கெதிரான போராட்டத்தையும் நடத்துவதா இல்லையா என்று தீர்மானிக்கும். உள்ள எல்லா மாறிக்கும் அததன் பங்களிப்புக் குணகத்தினைக் கண்டுகொள்ளாமல், சமன்பாடு போட்டுத் தீர்வு காண்பதென்றால் ஆகாது. இதுதான் இரயாகரனின் தத்துவநிலைமார்க்ஸியத்துக்கும் நமது நடைமுறை மார்க்ஸியத்துக்குமான வேறுபாடு. சீனாவிலே ஜப்பானுக்கெதிராக, தேசிய-கம்யூனிஸ்டுக்கட்சிகளும் ஹிட்லருக்கெதிராக ஸ்டாலின் -மேற்கின் ஏகாதிபத்திய சக்திகளும் சேர்ந்துகொண்டது அதன் காரணமாகத்தான் என்பது என் குறுணியறிவுக்குத் தோன்றுகிறது. ஈழத்தமிழரின் இன்றைய நிலையிலே புலிகளின் சில நிலைப்பாடுகளை ஆதரிக்கவேண்டிய நிலையை நடைமுறைக்கான மார்க்ஸியத்திலே நம்பிக்கையுள்ளவர்கள் பார்க்கவேண்டிய நிலையுமுள்ளதென்றே படுகிறது. இராயகரனுக்கு அது மக்கள்போராட்டமாகத் தெரியாதாம்; கொக்கோகோலாப்புரட்டாகவே தெரியுமாம்.

வரட்டா?

சந்தேகங்களை அள்ளிவீசுங்கள்; அவ்வப்போது, நாங்களும் புரட்சி, ஏகாதிப்பத்தியம், நெத்தலிக்கருவாட்டுக்கிரந்தி, சில்லாலைப்பரியாரியார் மருந்து என்று ஏதாவது எடுத்துவிட வசதியா இருக்கும்.

வசந்தன்(Vasanthan) said...

பெயரிலியின்ர எழுத்துக்கள் விளங்கிறேல எண்டு கும்மியடிக்கிற ஆக்களில உந்த பிரகாசரும் ஒருத்தர்.
ஆனா பாருங்கோ 'ரெண்டு விரல் கொண்டு வளையம் போட்டு இன்னொரு விரலைச் சொருகுற' வித்தை பற்றிப் பெயரிலி எழுதின வசனம் உடன அவருக்கு விளங்கீட்டுது.

ஆக, பெயரிலியின்ர எழுத்து நடையன்று பிரச்சினை; எழுதிற விசயம் தான் பிரச்சினை என்று இத்தால் அறியத்தருகிறேன்.

Anonymous said...

வஜந்தரே.. நான் ? புரியலைன்னு கும்மி? இதென்ன அபாண்டம்?

புரிஞ்சாதான் அடிப்பேன் கும்மி
புரியலன்னா ஒதுங்கிடுவேன் பம்மி
இதெப் புரிஞ்சுக்க உங்களுக்கு வயசு கம்மி
ஃப்ரீயா இருந்தா போய் ஆடுங்க ரம்மி

அப்பறம், ரொம்ப நாளாவே உங்களை ஒண்ணு கேக்கணுமின்னு இருந்தேன். பெயரை தமிழிலும் , அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்திலும் போடுறீங்களே, மேஜர் சுந்தரராஜன் ரொம்ப பிடிக்குமோ..

மொத்தமா ஸ்மைலி :-)))))))))))))

Anonymous said...

அன்புள்ள பெயரிலி க்கு,
நான் உங்களிடம் றயாகரன் என்பவர் பற்றியும் கோட்பாடுகள் உருவாக்கும் அடிப்படைவாத மனநிலைகள் சார்பாகவும் எனது கருத்துநிலைகளையும் தெரிவித்து இருந்தேன். அதற்கு மயூரன் என்பவர் பதிலளித்து இருந்தார்.
(அடப்பார்றா இவருக்கு கோபம் பொத்துக்குனு வந்துடுச்சு..)

மயூரன்,
//..."எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது"

என்று எப்பவோ சொன்ன காரியத்தை, ஆங்கிலத்திலிருந்தான நேரடி மொழிபெயர்ப்புச் சொற்களைப்போட்டுக் குழப்பி புரியவிடாமற்செய்யும் தத்துவத்தின் குஞ்சான நீங்கள் //

உங்கள் சமன்பாடுகளும் அவற்றிற்கான பதிலகளும் என்னைப் புல்லரிக்க வைக்குது மயூரன். மிகவும் எளிமையாக ஒரு விடயத்தை விளங்கி வைத்திருக்கிறீர்கள். "எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது". அவ்ளோ தானா..?
நான் சொல்ல வந்தது அவ்வளவு என்றா நினைக்கிறீர்கள்?
மனிதகுலம் நடந்து வந்த பாதைக்கு எதிரான அதற்கு மாற்றீடான மனித நேய தத்துவம் தான் மார்க்சீயம். அதற்கான தயார்ப்படுத்தல்கள் எழுத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தபடுத்திவிட முடியாதவை. நடைமுறை சார்ந்தும் செயற்பாடுகள் சார்ந்தும் தான் அதற்கான தளத்தினை அமைத்துவிட முடியும். எழுத்துக்கள் கூட செயற்பாடுகளை அண்மித்ததாகவே இருக்க முடியும். இவர்களின் எழுத்தில் இவற்றை பூதக்கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டும். நீங்கள் நினைப்பது மாதிரி ஒரே நாளில் புரட்டிப் போட்டுவிட முடியாது. (பராட்டா போடுவதைப்போல.) அந்நிலைமை றயாகரன் போன்ற மார்க்சீய அடிப்படைவாதிகளால் அடையப்படமுடியாதது. நேர்கோட்டின் வழியே ஒற்றைப் பரிமாணத்தில் சமூகத்தை பார்க்கும் பார்வையும், பல்சாத்தியப்பாடுகளை மறுத்து நிற்கும் அவர்களது கருத்தியலும் எவ்வகையிலும் மனித நேய தத்துவத்தை நடைமுறைப்படுத்த உதவாதவை. (பராட்டா போட மட்டுமே லாயக்கானவை).
மற்றமைகளை (others) ஏற்றுக்கொள்ளாத உங்களுக்கும் புலிப்பாசிஸ்டுகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? உங்களைப்போன்றவர்கள் கையில் அதிகாரம் கையகப்பட்டிருந்தால் இதைவிட மோசமான விளைவுகளை தமிழ்மக்கள் சந்தித்திருப்பார்கள். (நீங்க தான் பராட்டா பொடுபவர்கள் ஆயிற்றே.. புரட்டி போட்டிருப்பீங்க.)
அதைத் தான் நான் சொல்ல வந்தேன்.
மார்க்சீய குஞ்சுகள் என்றவுடன் நீங்கள் புல்லரித்து போனீர்களோ தெரியாது. "நானும் மார்க்சிஸ்ட்டுல". நான் சொன்ன மார்க்சிஸ்ட்களுக்கும் மார்க்சீயத்துக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. அவர்கள் மார்க்சீயத்தின் பெயரால் வாழ்பவர்கள். பிழைப்பு நடத்துபவர்கள். மனித நேய தத்துவத்திற்கு விரோதமானவர்கள். ("நானும் மார்க்சிஸ்ட் தான் என்னையும் கூட்டிடு போங்கடா" எண்டு யாரொ கத்துற மாதிரி இருக்கே.)

//அமெரிக்காவின் மூஞ்சியில் குத்துபவர்களை சிலாகித்து எழுதவும் பேசவும் செய்கின்ற மார்க்சீயக்குஞ்சுகளுடன் தான் உங்கள் "கதையாடல்களை" எல்லாம் அளக்க முடியும்.
உண்மையைலேயே "அமெரிக்கத்தின்" மூஞ்சியில் குத்துபவர்களிடம் போய் கதையாடிப்பாருங்கள்.. பீச்சாங்கை உங்கள் மூஞ்சியில் விளையாடும். ..//
நான் சொன்னதை பாருங்கள் மயூரன்
--அமெரிக்க ஏகாதிபத்தியம் வகுத்த உலக ஒழுங்கின் பாதையில் நாமெல்லாம் கைவீசி நடைபயில்கின்றோம் என்ற கேவலமான உண்மையை இந்த வகையில் நாம் மூடிமறைத்துவிட முடியாது. ......................
இந்த லட்சணத்தில் இவர்கள் எல்லாம் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி குத்து விடுகின்றனர். --
கேவலமான உண்மை என்றிருக்கிறேன் புரியவில்லையா?
மார்க்சீயர்கக் குஞ்சுகள் தானெ அமெரிக்காவிற்கு குத்துவிடுறன் எண்டு புருடா விடும்
மார்க்சிஸ்ட் புருடா விட மாட்டானே..!! மார்க்ஸை புரிந்தவனுக்கு செயற்பாடு தானே முக்கியம். அவனுக்கு புருடா விட வராது மயூரன். உங்களைப் போல..
உண்மையைலேயே "அமெரிக்கத்தின்" மூஞ்சியில் குத்துபவர்களிடம் போய் நான் ஏன் கதையாடப்போகின்றேன்.

மயூரன்,
நான் முதல் பின்னூட்டாத்திலேயே சொல்லியிருக்கிறேன்.
--
1.
துவித எதிர் மனநிலைகளில் வாழும் இவர்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. கறுப்பு அல்லது வெள்ளை இது தான் அவர்களின் முடிவு. கறுப்பு வெள்ளைகளுக்கு இடையில் பரந்திருக்கும் அப்பாவிவெளிகளை தனது தத்துவ வன்முறையினூடு நிராகரித்துவிடுகின்றனர். இவர்களா மனித நேய தத்துவத்தின் பால் உண்மையான ஈர்ப்பு கொண்டவர்களென நீங்கள் கருதுகின்றீர்களா?
2.
பி.கு.1- துவித எதிர் மனநிலை சிந்தனாவதிகள் என்னை NGO க்கு ஆதரவானவன் என்று திட்டக் கூடும். அதை நிறுவக்கூடும். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நிறுவத்தேவை இல்லை. உங்களுக்கு மட்டும் நான் ஒப்புக் கொற்கின்றேன். உங்கட அசத்தலான கண்டுபிடிப்புகள் தாங்க முடியலப்பா.

பி.கு.2- என்னை அமெரிக்காவின் ஆள் என்று சொல்லலாம். மார்க்ஸிய குஞ்சுகள் மட்டும் என்னை அப்பிடி சொல்லலாம். (CIA, டொலர் அதையும் சேர்த்து போடுங்க தலைவா..). --
நீங்கள் உங்களை மார்க்சீய குஞ்சு என்று ஏற்று கொண்டீர்கள்.(அப்பாடா..)
உங்களை போன்றவர்கள் தான் என்னை அமெரிக்காவின் ஆள் என்று சொல்வீர்கள்.
ஜோர்ஜ் புக்ஷ் கும் உங்களுக்கும் றயாகரனுக்கும் புலிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்வீர்களா?
கறுப்பு வெள்ளைகளுக்கு இடையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களை உங்கள் எழுத்தால் உங்களுக்கு வசதியான இடத்துக்கு கொண்டு சென்று அங்கே வைத்து அடிப்பீர்கள்.
இதை தான் ஜோர்ஜ் புஷ் "பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் எங்கள் பக்க்ம் வார்ங்கள். எங்களுடன் இல்லாதவர்கள் பயங்கரவாதிகள்" என்று சொன்னார்.
இதையே தான் றயாகரனும் சொன்னார். நீங்களுன் சொன்னீர்க. புலிகளும் சொன்னார்கள்.
யாருக்கையா மனித நேயம் இல்லை?

//அதற்காகத்தானே உங்களை திட்டமிட்டு உருவாக்கிவிட்டிருக்கிறார்கள் உங்கள் "முன்னோர்கள்" //
யார் மயூரன் அந்த முன்னோர்கள்?
வர வர றயாகரன் மாதிரியே வர்றீங்க?

இதோ எனது பின்னூட்டம்.
---பி.கு.2- என்னை அமெரிக்காவின் ஆள் என்று சொல்லலாம். மார்க்ஸிய குஞ்சுகள் மட்டும் என்னை அப்பிடி சொல்லலாம். (CIA, டொலர் அதையும் சேர்த்து போடுங்க தலைவா..).---

//கோட்டுக்கருத்தியல், கோடில்லாக்கருத்தியல், கருப்புவெள்ளைத்தத்துவம், சாம்பல் தத்துவம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கும் உங்க்ளுக்கும் உங்கள் குஞ்சுகளுக்கும்
தெரிந்ததெல்லாம் மார்க்சீயத்தை கருவறுப்பது எப்படி என்று இரவுஅகலாக சிந்திப்பதும் பண்பாட்டின் உதிரிகளாய் அலைவதும்தான்.//
ஆகா றயாகரன் மாதிரியே இருக்கே..
ஆமாம் மார்க்சீயத்தை அப்பிடியே நாங்க கருவறுக்க போறோம். நீங்க காப்பாத்த போறீங்க.. சும்மா வுடாதீங்கவா.. ஹையோ....
நான் மார்க்சீயத்தை கருவறுப்பதாக எதை வைத்து முடிவு பண்ணினீர்கள்.?
மார்க்ஸின் சொற்றொடர்களுக்குள் புரட்சியை தேடுபவர்களே மார்க்சியத்தின் எதிரிகள். மார்க்சீயம் ஒரு உணர்வு நிலைத் தத்துவம். வெறும் சொற்களுக்குள் அதை கண்டடைந்து விட முடியாது.
மார்க்சீய உணர்வு நிலையின் அடிப்படையே மானுடர்களின் நுகர்வுக்கான ஏது நிலை சம்பந்தப்பட்டது. பல்வேறுபட்ட நுகர்வின் அதியுச்ச மற்றும் அதிகுறைந்த புள்ளிகளுக்கிடையிலான இடைவெளி பற்றிய கவலை பற்றியது. அதை நீக்குவதற்கான வழிமுறைகள் கட்டமைப்புகள் பற்றியது.
வழிமுறைகள், கட்டமைப்புக்கள் பல்வேறுபட்ட சமூக மக்கள், மற்றும் அவர்களின் வாழ்வு முறைமை பற்றி மாறக்கூடியது. மாறவேண்டியது. சூழ்நிலைகளே எந்தவொரு சமூகத்தினதும் மாற்றத்தில் முக்கிய பங்குவகிப்பது. அதைதவிர்த்து எவ்வாறு சிந்திக்க முடியும். மார்க்சீய குஞ்சுகள் உற்பத்தி செய்யும் புழுத்தல்மார்க்சீயத்தை பற்றிப் பேசவேண்டும். மார்க்சீய மேதைகள் என்று தம்மை நினைக்கும் மார்க்சீய பிதற்றல்களுக்கு மார்க்சீயத்தின் உள்ளார்ந்த மனித நேயம் பற்றிய புரிதலை உருவாக்க வேண்டும்.
ஏனென்றால் நாங்கள் உதிரிகளை நேசிக்கின்றோம். அவர்களும் இச்சமூகத்தின் உற்பத்திதான்.
மயூரன்,
உதிரிகள் என்றால் உங்களுக்கு ரொம்ப கேவலமோ?
உங்களைப் போன்றவர்கள் எத்தனை பேருக்கு உதிரி தெரியுமா?
பார்ப்பனுக்கு தலித் உதிரி தான்.
அதிகார வர்க்கத்தின் குரல் இப்பிடிதான் மயூரன். மற்றமையை நிராகரிக்கும் வன்முறையினூடு மிக எளிதாக.

//உங்கள் "சாம்பல்" கோட்பாட்டாளர்கள் மக்களுக்கு பிரயோசனமாய் எந்தச் சிறு சாம்பல் துகளையாவது எடுத்து அப்பால் போட்டிருக்கிறார்கள் என்றால், பேச வாருங்கள். பாசிசத்தைப்ப்ப்பற்றியும் .......//
ஆமாம். நீங்கள் தான் கடகம் கடகமாய் சாம்பலை அள்ளிக் கொட்டுறீங்க..
ஏன் மயூரன் சின்ன புள்ளயாவே இருக்கிறீங்க?
மயூரன்,
சாம்பல் கோட்பாட்டின் பெயர் என்னவென்று சொல்லுங்களேன்..
கேக்க ஆசையா இருக்கு..
அதென்ன உங்கள் கோட்பாடு எங்கள் கோட்பாடு.???
பிரிச்சு பேசுறீங்களே
ஜார்ஜு புஷ்ஷு மாதிரியும்.
றயாகரன் மாதிரியும்.
புலிகள் மாதிரியும்..
யாருக்கு கண்ணா துவித எதிர் மனோநிலை?

//ப்ரிட்டன் உலகின் ஆட்சியில் இருந்த காலத்தில் கூட உங்கள் முன்னோர்கள் (அப்போது அவர்கள் வேறு பெயர்களில் இருந்தார்கள்) சுதந்திரப்போராட்டம் எல்லாம் படு மோசமான இலட்சியவாதம், ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொண்டு அடங்கிப்போவதே வாழ்வதற்கான தத்துவம் என்று உளறிக்கொண்டிருந்தார்கள்.//
நான் அப்பிடியா சொன்னேன்?
ஏன் நீங்களாவே கற்பனை பண்ணி புசத்துறீங்க?
ஏகாதிபத்தியத்தை ஏற்றுகொண்டு அடங்கிப்போவதே வாழ்வதற்கான தத்துவம் என்பதற்கு ஈடான கருத்து ஏதாவது நான் சொன்னனா?
மார்க்ஸியத்தை கொஞ்சம் விமர்சிச்சா ஏகாதிபத்தியதிற்கு அடங்கி போற மனிதன் என்ற பொய்ப்புழுத்தல்க் கற்பிதங்களை எங்க கொண்டு போய் அழ?
நீங்கள் மட்டும் தான் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்.
நாங்கள் எல்லாம் கூனி குறுகி வாழுறம்.

//ஆட்சியில் அமெரிக்கா உங்கள் கைகளில் நாசிசத்தின் மூலவர்களின் கோட்பாட்டுப்புத்தகங்கள். //
உதிரி என்று நிராகரிக்கிற நீங்கள் நாசிசத்தை பற்றி பேசுவீங்க...
உங்கட பேச்சை கேட்டுக்கொண்டு ஒரு கூட்டம்
நீங்க அமெரிக்காவிற்கு ஒரு குத்து விடுவீங்களாம்
அமெரிக்கா அலறி அடிச்சு கொண்டு ஓடுமாம்.
ரொம்ப cartoon பார்ப்பீங்களோ?
அமெரிக்கா விற்கு எதிரான உங்கள் கோபம் நியாயமானது தான் மயூரன்.
அமெரிக்க வல்லரசு நடத்திக் கொண்டிருக்கும் கொடூரங்களுக்கு நீங்கள் காட்டுவது மாதிரியான எதிர்ப்பு பின்லேடன் அமெரிக்க அப்பாவி மக்கள் மீது காட்டிய வெறுப்பிற்கு சமமானது. இம்மாதிரியான எதிர்ப்புணர்வுருவாக்கங்கள் வன்முறை சமூகத்தை மட்டுமே கட்டியெழுப்பும். அப்பாவி மக்களின் மரணங்களுடன் விளையாடும்.
ரவிக்குமார் தான் பாராளுமன்றதேர்தலில் நிற்பதற்கான காரண்ங்களை சொல்லுவார். அதை வாசித்த கணங்கள் மிக நெகிழ்ச்சியானவை.

பெயரிலி பாவம் ஏதோ கதைக்க போய் கடசீல இவங்க எதோ கதைக்கிறாங்கள் என்று நினைப்பார்.

பெயரிலி,
றயாகரன் போன்றோரின் உருவாக்கம் எப்படி நிகழ்கின்றது அது சமூகத்தளத்தில் எவ்வாறு தொடர்ந்து செல்கின்றது போன்ற விடயங்கள் முக்கியமானவை.
இயங்குசக்தியற்ற சமூகத்தளங்கள் செயற்பாடற்ற கோட்பாட்டாளர்களை உருவாக்கிவிடும். அந்த இடத்தில் றயாகரன் போன்றோருக்கான செயற்பாட்டுத் தளத்தை மறுத்து நிற்கும் புலிகளை அவர் பாசிஸ்டுகள் என்று சொல்வதில் தப்பில்லை தான். அதற்காக தட்டையாக ஒரேயடியாக புலிகளை நிராகரித்தல் என்பது அவர் நேசிக்கும் மக்களை அவரே நிராகரித்தல் போலவே..
.
றயாகரனை பற்றி பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன் மிக உயர்வாக.
அவரது தனிப்பட்ட நேர்மை சார்ந்து..
நான் இதை இங்கு சொல்வதற்கு முக்கிய காரணம்.
வாழ்வின் ஒரு கட்டத்தில் அவரை மாதிரி சிந்தித்திருந்தேன். அவை எனது வாழ்வின் மோசமான கட்டங்கள். அந்நேரங்களில் நான் எது சார்ந்தும் இயங்காமல் இறுகிக் கிடந்தேன். குறைந்தபட்சம் எனது படிப்பு சார்ந்து கூட..
இதை நான் எழுதியதற்கான காரணம் அதுதான்.
எனக்கு எழுதுவதில் எப்போதுமே உடன்பாடு இல்லை.

இறுதியாக,
மயூரனுக்காக ஒரு குட்டிக் கதை..
மயூ ,மயூ என்று ஒரு குட்டி கண்ணன் இருந்தானாம்.
ஒரு நாள் அவன் பயங்கர காட்டுக்குள்ளால அவனது பாட்டியை பாக்க போனானாம்.
அப்போ திடீர்னு இருண்டுடுச்சாம். காட்டுக்குள்ள ஒரே சத்தம். பயங்கர சத்தம்.
ஆனா மயூ குட்டி பயப்படலியே..
ஏன்னா அவன் தான் வீரனாச்சே...
வீர நடை நடந்துட்டு போறான்.
அப்போ ஒரு முயல் குட்டி வந்துச்சாம்.
அது மயூ வ வெருட்ட பாத்துச்சாம்.
மயூ வெருளுவான நம்ம சிங்க குட்டி.
அப்ப தான் மயூ க்கு தெரின்சிருக்கு.
அந்த முயலுக்கு பெயர் அமெரிக்கா என்பது.
விட்டான் ஒரு குத்து அமெரிக்கா(முயல்) ட மூஞ்சி மேல.
முயல் தலை தெறிக்க ஓடிட்டாம்.
முயல் ட பல்லு மட்டும்தான் அங்க இருந்துச்சாம்.
அப்ப மயூ க்கு 5 வயசு சொன்ன நம்புவீங்களா?
அன்னில இருந்து மயூ இப்பிடித்தான் அமெரிக்கா வ கண்டாலே மூஞ்சி மேலா ஒரு குத்து விடுவான்.
(பெயரிலி தன்னுடைய சின்ன தோழருக்கு சொல்லி மகிழலாம்.)

பி.கு.1- றயாகரனுக்கும் இப்பிடி ஏதாவது கதை இருக்க கூடும்.
பி.கு.2- மயூரன் எனது பின்னூட்டத்தை முழுமையாக வாசிக்கவும். அமெரிக்கவ பற்றி மட்டும் தான் எழுதி இருக்கிறன் எண்டு யோசிக்க வெணாம்.
-அமீபா-

வசந்தன்(Vasanthan) said...

பிரகாசரே,
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
முன்பொரு காலத்திலே புளொக்கர் கணக்கினூடு பின்னூட்டும் நபர்களின் தமிழ்ப்பெயர்களை வெறும் கேள்விக்குறியாகவே காட்டும் அவலநிலையொன்று இருந்தது.
யார் யார் என்னென்ன சொன்னார் என்பது தெரியாமல் இணைப்பைச் சொடுக்கி அவர்களின் profile போய் இன்னார் தானென உறுதிப்படுத்தி வரும் பெரும்பாடு இருந்தது. இந்தநிலையில் குழப்பம் வராமல் ஏற்படுத்திக்கொண்ட வசதிதான் அடைப்புக்குள் ஆங்கிலத்தில் எழுதுவது.

சரி, எனக்குமொரு கேள்வி:
சுந்தரராஜன் மேஜர் ஆனது எப்படி? (மே மாசத்தில் மேஜர் ஆன கதையெல்லாம் வேண்டாம்)
எங்காவது இராணுவத்தில் இருந்தாரா?

-/பெயரிலி. said...

/சுந்தரராஜன் மேஜர் ஆனது எப்படி?/
எல்லாம் சந்திரகாந்த் சகவாசத்துக்குப் பிறகுதான் :)
அப்ப ஜெயலலிதா கயித்தைச் சுத்திக் கழுத்திலை போட்டது மெய்யான தூக்காய் மட்டும் இருந்திருந்தா... லல்ல லல லாலா
- லல லாலா
- லல லாலா
நினைத்தாலே.............

thiagu1973 said...

உங்கள் மிக நீண்ட பதிலுக்கு நன்றி பெயரிலி அவர்களே!

இரயாகரன் ஏன் ஒரு உரையாடல் உங்களோடு நிகழ்த்தவில்லை என கேட்கிறேன் அவரது தளத்தில் .

மேலும் உங்களது நடைமுறை மார்க்சியம் என்றும் அவரது வெறும் தத்துவார்த்த மார்க்சியம் என்றும் சொல்லி இருக்கீங்கோ -

ஆனா மார்க்சியம் என்பதே நடைமுறைக்கான பேச்சுத்தான் என சொல்லி கொள்கிறேன் .

மெனகெட்டு பதிலளித்தமைக்கு நன்றி

உங்கள் பதிவுகள் அனைத்தையும் தூக்கம் வராமல் படித்து முடித்தபின் நான் தூங்காமல் இருந்தால் வந்து கேள்வி கேட்கிறேன்.

மேலும் டோக்குகள் பேசும் இடத்தில் மக்கள் திரள் புரட்சியும் , மார்க்சியம் பேசுவதும் நடக்காதுதான் .

அங்கேயும் சே போன்றவர்கள் டோக்கினால் பேசும் புரட்சி செய்தே இருந்தார்கள் என காண்கிறோம் அல்லவா ?

நன்றி பெயரிலி - ஏன் பெயர் ஏதாவது வச்சுக்கலாமே

-/பெயரிலி. said...

/ஆனா மார்க்சியம் என்பதே நடைமுறைக்கான பேச்சுத்தான் என சொல்லி கொள்கிறேன் /
போச்'சே'போச்!
பேசிப்பேசியே பேச்சிலரானோம் என்பதா பயன்? :-(

/மேலும் டோக்குகள் பேசும் இடத்தில் மக்கள் திரள் புரட்சியும் , மார்க்சியம் பேசுவதும் நடக்காதுதான்./
சரியாகச் சொன்னீர்கள்; மக்கள் புரட்சியைச் சிலர் மாக்கள் திரட்சி என்று புரிந்துகொண்டால், மார்க்சியம் என்பதே பேச்சென்று குந்தியிருந்து ஆண்டாண்டு தோறும் இழுத்துப் பேசினாலும் பயனில்லை என்பதறிவு.


/பெயரிலி - ஏன் பெயர் ஏதாவது வச்சுக்கலாமே/
ஏன் -/பெயரிலி.யே நல்லாத்தானே இருக்கு? previously known Prince என்று குறியீட்டைச் சுமப்பவர்களைப் பார்த்தபின்னால் இதுவே போதும் என்றாகிவிட்டது. :-)

Anonymous said...

You are wasting your time and energy in these useless polemics.
There is a lot to read, listen,
and see in USA.There is a lot for you to do and equip yourself in your profession. Please exile yourself from tamil blog world and tamil cyberspace for some months. It is good for you.

Anonymous said...

பெயரிலி,
//You are wasting your time and energy in these useless polemics.
There is a lot to read, listen,
and see in USA.There is a lot for you to do and equip yourself in your profession. Please exile yourself from tamil blog world and tamil cyberspace for some months. It is good for you//

அனானி ட கருத்தை கேட்டீங்களா?
பெரும்பாலும் இந்த பதிவு பெயரிலி ட சின்ன தோழர் ட அம்மா போட்டிருக்க வாய்ப்பு இருக்கு. அம்மா பயந்திருப்பா சின்ன தோழர்ட படத்தையும் போட்டு அவனை பழதாக்க போகுது மனுசன் எண்டு.. சில நேரம் சின்ன தோழர் நானும் புளொக் எழுத போறன் எண்டு அம்மா வோட சண்டையோ தெரியல...


பெயரிலி,
அகில புரட்சிக்கு பாத்து கொண்டு குந்திண்டு இருக்கிறவங்களுக்கு
"இப்பிடி இருந்தா புரட்சி வராதுடா.
ஏதாவது நடக்கிற மாதிரி பேசுங்கடா
டேய் அதுக்கு ஏதாவது செய்யணும்டா"
என்று சொல்றதுல ஏதாவது பிரயோசனம் இருக்கா பெயரிலி.?..
அந்த அனானி யார் என்று கண்டு பிடியுங்க பெயரிலி...
உங்கள் மீதான உண்மையான அக்கறை கொண்டுள்ளவரின் குரல் பெயரிலி அது.

வறுமை ஒழிப்பு, கல்வி சம்பந்தமான செயற்பாடுகளே முதலில் தேவை எங்கள் சமூகத்திற்கு.. சனம் செத்துக்கொண்டிருக்கேக்கை றயாகரன் மாதிரி பேசிக்கொண்டிருக்க முடியாது பெயரிலி.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு செத்த வீடாவது நடக்குது ஒரு பிரதேசத்தில.
ஒரு வீட்டில் செத்த வீடு என்பது அந்த குடும்பத்தை எத்தனை ஆண்டுகள் பாதிக்க கூடிய விடயம். எத்தனை நாட்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும் ஒவ்வோர் மனங்களிலும். அவற்றை நாங்கள் மறந்துவிட்டோம்.
செயற்பாட்டு இயங்குகைக்கான மறுதலிப்பை ஓயாது நிகழ்த்துபவர்களுக்கு ஓயாது எமது பதிலும் இருக்கும்.

கெட்டித்தனத்தை waste பண்ணிடாதீங்க தலைவா..
அனானி யின் கருத்துக்கள் உண்மையானவை...

பி.கு-. இக்கருத்து அமெரிக்காவின் சதி யென்று யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
-அமீபா-

thiagu1973 said...

நன்றி பெயரிலி ,

முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏகாதிபத்தியம் என்பதை தோழர் லெனின் தான் சொன்னார்.

அதை இரயாகரன் சொல்வதில் என்ன வியப்பு என தெரியவில்லை.

மேலும் , ஆய்தம் தாங்கிய போராட்டம் தவிர்க்க முடியாமல் இலங்கையில் நடக்கிறது என சொன்னால் அதற்காக மார்க்சியத்தை ஏன் தூக்கி எறிந்தார்கள்

அது காலுக்கு பத்தாத செருப்பு என்றா அல்லது செருப்பு தகுந்த கால் தங்களுக்கு இல்லை என்றா.

இரண்டாவது தான் சரியென நான் நினைக்கிறேன் .

சமூக வளர்ச்சி விதிகளின் படி புலிகள் கையிலே ஆட்சி வந்தாலும் அங்கே முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கமுடியும் .

அதற்கு எதிராக மீண்டும் ஒரு போரைத்தானே துவக்கனும் ,
இதில் மாற்று கருத்து உங்களுக்கு இருக்கா ?

Vasanthan said...

///ஆனா மார்க்சியம் என்பதே நடைமுறைக்கான பேச்சுத்தான் என சொல்லி கொள்கிறேன் ///

தியாகு,
அந்த மாதிரியிருக்கு.

உதைத்தான் பெயரிலியும் மாங்கு மாங்கெண்டு சொல்லிக்கொண்டிருத்தார் எண்டு நினைக்கிறன்.
உங்களுக்கெண்டு ஆயிரம் சொற்கள் எழுதியிருந்தநேரம் நீங்கள் சொன்ன அந்த ஒத்தை வசனத்தை எழுதித் துலைச்சிருக்கலாம் மனுசன். ;-)

மு. மயூரன் said...

அனானி அமீபாக்குஞ்சு, ;-)

இறுகிப்போன கம்யூனிஸ்டுக்கள் பற்றியும் அவர்களது துருப்பிடித்த நிறுவனங்கள் பற்றியும் நீங்கள் சொல்லும் விமர்சனங்களில் நானும் ஒரு புள்ளியில் உடன்பாடு காண்கிறேன்.
ஆனால், உங்கள் கோட்பாடு என்று நான் கண்டடைந்த ஊகத்தினடிப்படையில் (அனானியியத்தைப் பொறுத்தவரை ஊகம் தானே எல்லாம்) அந்தக் கோட்பாடோடு பாரிய முரண்பாட்டையும் காண்கிறேன்.

இதுபற்றி பிறிதோரிடத்தில் நாம் சந்திக்கலாம், விவாதிக்கலாம்.

உங்கள் குட்டிக்கதை என்னுடைய சிறுவயதையும் சித்தியையும், பெரியம்மாவையும் ஏனோ நினைவூட்டி நெகிழ வைத்தது. :-)

நன்றி.