Saturday, July 09, 2005

புலம் - 15

ஒன்றாகிப் பலவாகிப் பலதே ஒன்றாகி

இன்று South Asia Tribune இனை மேற்கோள் காட்டி INAS உம் Hindustan Times உம் கே. ரி. இராஜசிங்கத்தின் Asia Tribune உம் India Daily இன் ஆசிரியர் கருத்தும் இன்ன பிற செய்தித்தாபனங்களும் சொல்வதாவது, "Sri Lanka's Liberation Tigers of Tamil Eelam (LTTE) guerrilla group is providing military training to Nepal's Maoist insurgents in India's Bihar state near the Nepalese border."

வோஷிங்டன் டி.ஸி. யிலிருந்து நடாத்தப்படும் South Asia Tribune என்ற இந்த வலைஞ்சிகை அதன் செய்திகள், கருத்துகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் நலனை முன்னிறுத்திச் செய்தி வெளியிடுவதாகத் தோன்றுகின்றது. இங்கே நான் சுட்டிப் பேச முனையும் விடயத்தினை முன்னிறுத்துவதற்காக மேற்படிச்செய்தியின் முகப்பெறுமதியின்படியே, "விடுதலைப்புலிகள் நேபாள மாவோவாத கரந்தடிபோராளிகளைப் பயிற்றுவிக்கின்றார்கள்" என்றே எடுத்துக்கொள்வோம்.

அந்தச்செய்தியிலே /“The Maoists of Peru, Netherlands, Norway, France, Germany, Sri Lanka, Nepal and India participated in the meeting. The Tamil Tigers and rebels of the United Liberation Front of Assam (ULFA) were present as special invitees,”/ என்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. விடுதலைப்புலிகள் என்றிலிருந்து மாவோவாதிகளானார்கள் என்பதை இவர்கள் விளக்கியிருக்கலாம். அப்படியாக ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற மாவோவாதக்குழு விடுதலைப்புலிகள் இல்லையெனில், இலங்கையிலிருந்து சென்ற மாவோவாதக்குழு எதுவென்றாவது விளக்கப்பட்டிருக்கலாம்.

அரச எந்திரத்தின் பயங்கரவாதக்கூ(ற்)றை, தேசியப்பற்று, தேசநலனென்ற குளிர்காயும் போர்வைகளின்கீழே நியாயப்படுத்துகின்றவர்கள், மக்கள்போராளிகளை, அவர்கள் எங்கே வாழ்கின்றவர்களாக இருக்கட்டும் -பீகாரிலே வாழ்கின்றவர்களாகட்டும் (sic) நேபாளத்திலே வாழ்கின்றவர்களாகட்டும் (sic), தெலுங்கானாவிலே வாழ்கின்றவர்களாகட்டும் (sic)- இன்னொரு நாட்டின் "பயங்கரவாதிகள்", தற்கொலைப்போராளிகளின் இந்நாட்டுத்தெறிப்புகளாக விகாரப்படுத்திக் காட்டுகின்றனர். அதிகாரத்திலிருக்கும் அரசுப்பிரச்சார எந்திரம் அரைத்துத் திரித்து ஊட்ட, வெறுமனே தம் விற்பனையை முன்னிறுத்தும் செய்தியூடகங்கள் பதித்துக் கொட்ட வரும் செய்திகளை நம்புகின்ற அவசரத்திலே வாழ்வையோட்டும் மக்களை இப்போர்வைமூடிகள் இத்தெறிப்புக்காட்டல்மூலம் இலகுவாகப் பயமுறுத்த முடிகின்றது. குறிப்பாக, இச்செய்திகளினை அவற்றின் மேலோட்ட வாசிப்புத் தரும் முகப்பெறுமதியோடு அப்படியே அள்ளி நம்பிக்கொள்ளும் வாசகர்களின் எத்தனை பேர் இச்செய்திகளின் நிரப்பப்படாத இடைவெளிகளிலே இட்டு முழுமைப்படுத்தக்கூடிய சொல்லாத சேதிகளை உணர்கிறோம்? குறைந்த பட்சம், "தீவிரவாதிகள்", "பயங்கரவாதிகள்" என்ற பதங்களுக்கிடையேயான பேதத்தினைக்கூட மழுப்பிமூடி, இரண்டும் ஒரே அர்த்தமுடையவை என்பதுபோலக் காட்டி, ஒரு கருத்திலே கூர்மையாக, தன் நிலை மாறாது நிற்கின்றவரைக்கூடப் பயங்கரவாதி என்று வாசிப்பவர் எடுத்துக்கொள்ளும் அவலநிலையை இப்படியான மேட்டிமைத்தனமான செய்தியாளர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இதன்மூலம், தம்மிஷ்டப்படி நிலை மாறக்கூடிய மிதவாதிகளல்லாத (சந்தர்ப்பவாதிகள் என்றும் வாசித்துக்கொள்ளலாம்) எவருமே பயங்கரவாதிகள் என்று ஓரங்கட்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும்போகும் நிலைமையைப் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த சவுத் ஏசியா ட்ரிப்யூன் தன் செய்தியிலே நேபாள மாவோ போராளிகளின் குறியீடுகளாக, சயனைட்டினையும் விடலைப்பருவப்போராளிகளையும் மட்டுமே உருவகித்துச் சுட்டிக்காட்டி, அப்போராளிகள் உருவாகும் காரணங்களைப் பேசாமலே விடும்போது, இவ்வூடகமும் இதுபோன்ற குறியீடுகளைமட்டுமே உருவகிக்கும் பிற ஊடகங்களும் யாரின் நலனைப் பேணுகின்றன என்பதை எத்தனை பேர் யோசிக்கின்றோம்?

இச்செய்தி ஊடகங்கள், ஒரு மேல்நிலைத்தர்க்கரீதியான தளத்திலே இப்போது நேபாள மாவோ தீவிரவாதிகளுடன் இணைத்துப்பேசும் விடுதலைப்புலிகளுக்கும் இன்ன பிற ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் இந்திய அரசு இலங்கை அரசுக்கெதிராக ஆயுத உதவியும் பயிற்சியும் ஒரு கட்டத்திலே தாம் வழங்கியதையோ, இலங்கை அரசுக்கெதிராகச் சமவளவிலே ஆட்களைக் கொன்று தள்ளிய ஜேவிபியின் தலைவர்கள் பிரிட்டனுக்குத் தப்பிப்போக உதவியதையோ, இன்னொரு தெற்காசிய நாடான மாலைதீவுக்கெதிராக புளொட் இயக்கத்தினைக் கூலிப்படையாகப் பயன்படுத்த உதவியதிலே பங்கெடுத்ததையோ, கிழக்குப்பாக்கிஸ்தானின் சாந்திபாஹினி போராளிகளை மேற்குப்பாக்கிஸ்தானுக்கெதிராகப் பயன்படுத்தியதையோ, பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலே சிறிய அளவிலான சேதமேற்படுத்த முயன்றதையோ பேசுவதில்லை (இதேபோல, ஒவ்வொரு தென்னாசிய நாடும் தன்னையடுத்த நாட்டிலே சமநிலையின்மையை ஏற்படுத்த முயன்ற உதாரணங்களுண்டு); இன்னொரு கீழான உணர்வுநிலைத்தளத்திலே, "உதவிய இந்தியாவின் கரத்தினைத்துண்டித்த ஈழத்தமிழர்" என்ற வகையிலே பேசுவன. ஆனால், எந்நிலையிலும் இந்த இரு தளநிலைகளையும் ஒன்றாக முன்வைப்பதில்லை; அப்படியாக வைக்கமுடியாது. வைத்தால், இவர்களின் இரட்டைநிலை மேலோட்டமாக வாசிக்கும் ஒரு சாதாரண வாசகருக்கும் புரிந்துவிடும். இப்போது, அமெரிக்காவின் தலைநகரிலிருந்து செய்தி தயாரிக்கும் சவுத் ஏசியா ட்ரிப்யூனுக்கு ஈழம்-பெரு-நேபாளம்-இந்தியா-"பிரான்ஸ்" என்ற எல்லை கடந்த "பயங்கரவாதிகளின்" இணைப்புகளும் "மாவோயிசம்" என்ற பிசாசுக்கொள்கையும் மிக இலகுவாக பயங்கரவாதப்பூச்சாண்டிக்கு ஆளாகியிருக்கும் எந்நாட்டினதும் விளிம்புநிலைசாராத/அறியாத இடைநிலைமக்களை ('மத்தியதட்டு_நெறிக்கோவைவழிபேணும்/பேணமுயலும் மக்கள்' என்றும் வாசித்துக்கொள்ளலாம்) எதிர்ப்புநிலை கொள்ளவைக்கமுடியும். இந்நிலையிலே பெயர்சொல்லாத தகவல் தந்த நேபாளப்போராளித்தலைவர் யாரென்று கேள்வியை இந்த இடைநிலைமக்கள் கேட்கப்போவதில்லை.

தேசியக்கொடியின் கீழே தேசப்பற்றென்ற பெயரிலே எந்த நசுக்குதலையும் சிறுபான்மையினருக்கெதிராகவும் விளிம்புநிலைமக்களுக்கெதிராகவும் நடத்திவிட்டுப்போக, பெரும்பான்மையான இடைநிலைமக்கள் கண்ணை மூடிக்கொண்டும் காதை அடைத்துக்கொண்டும் ஒத்துழைப்பார்கள். குறியீடுகளான தேசியக்கொடியும் தேசப்பற்றும் ஒடுக்கப்படும் சகமனிதனின் உரிமைக்குரலிலும்விட, சுயநிர்ணய உரிமையிலும்விட, தான் வாழ்வதற்கான நியாயப்போராட்டத்திலும்விட முதன்மைப்படும்; அக்குறியீடுகளைக் காக்க எச்செய்கைகளையும் சட்டங்களாகவும் சடங்குகளாகவும் ஆக்கச் சமரசப்பட்டுக்கொள்கின்றார்கள். இதற்கு மிகவும் சிறந்த உதாரணம், "வீரப்பன்குழு.எதிர்.தமிழ்நாட்டு+கன்னடஅரசுஎந்திரங்கள்" கால நிகழ்வுகள். வீரப்பன் ஆதரவாளர்களோ சரி, அல்லது அரசுசார்செய்திகளை நம்பியவர்களோ சரி, இரு பகுதியினராலும் மலைவாழ்பழங்குடிகள் மத்தள அடிபட்டு நசுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை; ஒன்றில், அடுத்த பகுதியினரால், மலைவாழ்மக்கள் பாதிக்கப்பட்டார்களென்று ('நசுக்கப்பட்ட'தென வாசிக்கவும்) சுட்டிவிட்டுப்போனார்கள்; அல்லது, மலைசசாதி மக்களின் நாளாந்தவாழ்க்கை குறுக்கிடப்பட்டது ('நசுக்கப்பட்ட'தென வாசிக்கவும்) நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் நாளாந்தநெறிவாழ்க்கைக்கும் அவசியமென்று எழுதினார்கள். இந்த வகையிலே, மலைசாதிமக்களின் மீதான எந்த ஆதாரமில்லாத கைதும் பாலியல்வன்முறையும் கொலையும் பயங்கரவாதத்துக்கெதிரானதென வீரப்பனின் இறப்புவரை நியாயப்படுத்தப்பட்டது.

மேற்படியான செய்திகள் போல, பல செய்திகள், அநாவசியமான ஒப்பீட்டினால், பயப்பீதியினை எதிர்மறைவிம்பத்தினையோ இடைநிலைமக்களிடையே ஏற்படுத்தி தமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள முயல்கின்றவை. இன்னோர் அண்மைய உதாரணம், இலண்டனின் இரட்டை ஏழு குண்டுவெடிப்பின்பின்னால், இலண்டனிலிருந்து விடுதலைப்புலிப்பயங்கரவாதிகளை வெளியேற்றுமாறு இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுனவும் ஜாதிக ஹெல உரிமயவும் கேட்டிருப்பதாகும். ஆயுதப்போராட்டத்தினை நான்கு ஆண்டுகளாக நிறுத்திவைத்துச் சமாதானப்பேச்சுவார்த்தைகளிலே இறங்கியிருக்கும் ஒரு குழுவினை அது சம்பந்தப்படாத, அதற்குச் சம்பந்தமேயில்லையென சின்னக்குழந்தையும் உணரக்கூடிய ஒரு நிகழ்வைச் சாட்டாக வைத்து இருபதாண்டுகளுக்கு முன்னாலே உண்மையிலேயே மனித இரத்தத்தினால் இலங்கை நதிகளைக் களங்கப்படுத்திய, இன்றைக்கும் சமாதானப்பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் இன்னொரு குழு கேட்கத் துணிகிறது. இவ்வேண்டுகோள் சரியே எனச் சொல்லக்கூடியவர்களும் எம்மிடையே இருக்கின்றார்களென்றால், அதற்கான காரணம், இந்த அநாவசியாமான ஒப்பீட்டுப்பயத்துக்கு அவர்கள் உள்ளாகும் தன்மையே. தாம் நம்ப விரும்புததைத் தவிர, வேறெதனையும் கேட்கத்தயாரற்ற இத்தகைய வாசகர்கள் இருக்கும்வரை இந்தமேட்டுமைச்செய்தியூடகங்கள் அழுத்தப்பட்டவர்களின் நியாயங்களினை மறுத்துக்கொண்டு, அரச எந்திர அரக்கர்களின் நலனைப் பேணிச் செய்தி வாசித்துக்கொண்டேயிருக்கும்.

'05 ஜூலை 09 சனி 18:24


6 comments:

Thangamani said...

நல்ல, அருமையான, சரியான காலத்தில் வந்துள்ள பதிவு. நன்றிகள். இடைநிலை மக்களின் அடிப்படை பயத்தையும், அவர்களுக்கு அமைப்பின் (அரசின், மதம்) மேலுள்ள பயம் கலந்த நம்பிக்கையையும் முன் வைத்து தங்கள் நோக்கங்களை பூர்த்தி செய்துகொள்ள ஏதுவான கருத்தாக்கங்களை பத்திரிக்கைகள் விதைப்பதிலேயே வன்முறையின், போரின் முதல் விதை பரவல் தொடங்கிகிறதாய் நான் பலமுறை உணர்ந்துள்ளேன். இடைநிலை, நடுத்தர மக்களின் இயல்பான குணம் விசயங்களை அதன் முழு பரிமாணத்தோடு பார்பதில் இல்லை. அவர்களின் வேலை நேரம் போக கிடைக்கும் இச்செய்திகளை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு அமைப்பின் கருத்துக்களை நம்ப அவர்களுக்கு அதிக சிரமமிருப்பதில்லை. ஈராக்கில் அப்படித்தான் பயங்கர ஆயுதங்கள் இருந்தன; இப்பொழுது உலகளாவிய மாவோயிஸ்டுகள் இந்தியாவின் பெயர் சொல்லமுடியாத வனாந்திரங்களில், பயங்கரவாத புலிகள் மனித வெடிகுண்டுகளை தயார் செய்ய, பல்லைக்கடித்துக்கொண்டு இலக்குகளின் மேல் பாய தயாராய் இருக்கிறார்கள். எத்தனை பயமேற்படுத்தும் கற்பனைகள்! அப்புறம் எப்படி தினசரி தொலைக்காட்சித் தொடரில் லயித்துக்கிடக்கும் பெண்களையும், சம்பாதிக்கவும், சமமாக பேசவும் அறிந்த மனைவிக்கு சம்போகத்துக்கு முன்னால் எப்படி தன்னை உருப்பெருக்கிக் காட்டுவது என்ற உயிரினச் சிக்கலிலும் ஆழ்ந்திருக்கும் ஆண்களையும் தங்கள் செய்தியின் பக்கம் இழுத்து அமைப்பைக் காப்பாற்றும் கருத்துக்களை விதைப்பது? கற்பனையான பயமுறுத்தும் செய்திகளில் கருத்துக்களை ஏற்றி தூவுங்கள் என்பதே வெற்றிகரமான பார்முலாவாக இருக்கிறது. இந்துவும் இதைத்தான் செய்கிறது.

வன்னியன் said...

அருமையான பதிவு.
நன்றி பெயரிலி.

Anonymous said...

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2005/07/09/AR2005070901425.html

SnackDragon said...

//தேசியக்கொடியின் கீழே தேசப்பற்றென்ற பெயரிலே எந்த நசுக்குதலையும் சிறுபான்மையினருக்கெதிராகவும் விளிம்புநிலைமக்களுக்கெதிராகவும் நடத்திவிட்டுப்போக, பெரும்பான்மையான இடைநிலைமக்கள் கண்ணை மூடிக்கொண்டும் காதை அடைத்துக்கொண்டும் ஒத்துழைப்பார்கள். //
இதைத்தான் மிகவும் வெறுக்கிறேன். இதற்கு என்ன செய்யமுடியும். ஒட்டுமொத்த சமுதாயமும் விழிப்புணர்வு பெறும் வரை காத்திருக்க்போகிறோமா? அதுவரை நடக்கு அநியாங்களுக்கு யார் பலியாவது?

-/பெயரிலி. said...

/இதைத்தான் மிகவும் வெறுக்கிறேன். இதற்கு என்ன செய்யமுடியும். ஒட்டுமொத்த சமுதாயமும் விழிப்புணர்வு பெறும் வரை காத்திருக்க்போகிறோமா? அதுவரை நடக்கு அநியாங்களுக்கு யார் பலியாவது?/
இப்பதிவைப் பார்த்துவிட்டு, மனிதன் செய்ததுமாதிரி இல்லாவிட்டாலுங்கூட, ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். ;-)

-/பெயரிலி. said...

தொடரான செய்தியாததால், இங்கே இணைப்பினைத் தருகிறேன்
'LTTE not training Nepal's Maoists in Bihar'