Thursday, April 28, 2005

புலம் - 12

ஒரு விவரணம்: உடற்கூறும் பிரேதப்பரிசோதனையும்

கறுப்பி, நற்கீரன், வெங்கட், ஸ்ரீரங்கன் ஆகியோரின் பதிவுகளிலே வாசித்த கருத்துகளின் தொடர்ச்சியான் எனது அவதானிப்பு.

இங்கே எனது நோக்கம், இராஜனி திரணகமவின் வாழ்க்கை பற்றிப் பேசுதலோ அல்லது அவரைப்போல பாதிப்பட்டும் குரல் வெளியாக வசதியற்றவர்களின் வாழ்க்கை ஏன் பேசுபொருளாக எடுக்கப்படவில்லை என்பது குறித்துப் பேசுவதோ இல்லை. ஆனால், அவருடைய வாழ்க்கை விவரணமான இப்படத்திலே (அதை நான் பார்க்கவில்லை) எத்தனையோ முக்கியமான விடயங்கள் பற்றிப் பேசப்பட இருக்க, நாங்கள் தொடர்ந்து ஏன் யாரால் என்று சரியாக நிறுவப்படமுடியாத அவரது கொலை குறித்து மட்டும் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி குறித்தது.

விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்று ஆதாரமில்லாமல் நம்புங்கள் என்று நிற்கும் சிலரைப்போல, விடுதலைப்புலிகள்தான் கொன்றார்கள் என்று ஆதாரமில்லாமல் சிலரும் பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள் எனத் தோன்றுகின்றது. இணையத்திலே ராஜினி திரணகம என்று போட்டுத் தேடுங்கள்; அவர் கொலைக்குக் காரணம், புலிகள் என்பதிலே புலி எதிர்ப்பாளர்களிலே பெரும்பாலானோர் (அவரின் யாழ் பல்கலைக்கழக ஆசிரிய முறிந்த பனை நண்பர்கள்,சிங்கள ஊடகங்கள், நந்திகேசன், அவர் மனைவி வாசுகி நேசையா, அகிலன் கதிர்காமர் & Lines, டி. பி. எஸ். ஜெயராஜ் என்று நீளும் பட்டியல்) நிற்கின்றார்கள்; புலிகள் இல்லை என்பதிலே, புலி ஆதரவாளர்கள் பலர் நிற்கின்றார்கள். ஆனால், உண்மையாக நடந்தது என்ன என்பதை விவாதிக்கும் நாங்கள் எவருமே மூன்றாம் ஆட்களாகக்கூட அறிந்ததில்லை; அறியவும் போவதில்லை என்பதும் கவலைக்குரியதே. வெறுமனே, நான்காம் ஐந்தாம் ஆட்களுக்குமப்பால் நின்றுகொண்டு இரைச்சல் சேர்ந்த தரவுகளைப் பிரித்துப் பகுத்து ஆய்வு நிகழ்த்துகிறோம்.

அற்புதனின் வார்த்தையைமட்டும் நம்பிக்கொண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் கொன்றிருக்கலாமென்று எப்படி முழுக்க நம்பமுடியாதோ (அற்புதனைக் கொன்றவர்கள் யாரென்பதுகூட இன்னும் சரியாகத் தெரியவில்லை), அதேபோல, உறவினர்களைமட்டும் வைத்துக்கொண்டு, புலிகள்தான் என்று அடித்துச் சொல்லிவிடமுடியுமா? சாண்ட்ரா லிவி தொடக்கம் பலரின் கொலைகளில் இப்படியான உறவினர்களின் முழுநம்பிக்கைகளுக்கு மாற்றாக உண்மையான நிகழ்வுகள் இருந்திருக்கின்றன. வெளிநாட்டு விவரணங்கள் முழுக்க முழுக்க சார்பற்றிருக்குமென்று நம்ப முடியாது; அதையும் ஏற்றுக்கொண்டு நாங்கள் ஓர் எல்லைவரைக்குமே உய்த்தறியலாம். குறிப்பாக, வழக்கமாக நான் இயன்றவரை நடுநிலை என்று நம்பும் PBS இன் இலங்கை தொடர்பான விவரணம், Sri Lanka - Living with Terror இன் கோணல் என்னைத் திகைக்கவைத்தது. கலாநிதி. இராஜன் கூல், கலாநிதி ரொஹான் குணவர்த்தனா, கொழும்பிலே கண்ட ஒரு குண்டுவெடிப்பு இத்தனையையும் வைத்துக்கொண்டு தமிழ்ப்பயங்கரவாதத்தினை வரையறுத்து, இவ்வளவுதான் இலங்கைப்பிரச்சனை என்ற விதத்திலே சுருக்கி அமெரிக்கர்களுக்கு, அதுவும் செப்ரெம்பர் 11 இன் பின்னான தாம் கேட்டும் கண்டும் அறியாத எதற்கும் பயங்கரவாதமென்று சாயங்காட்டடினால் அஞ்சும் அமெரிக்க மனோபாவத்துக்கு, தந்திருந்தது அந்த விவரணம். இதேபோல, ராஜனி திரணகமவின் விவரணத்தினை Helene Klodawsky ஈழத்தின் போர் அவலத்தினைக் குறிக்க எடுத்திருந்தாரென்றால், அதுவும் இதேபோன்ற ஒரு ஜின்னியைச் சீசாவுக்குள்ளே அடக்கிக்காட்டும் சித்துவித்தையே. ஓர் ஒளிக்கீற்றீனைச் சுட்டி, மின்னலின் வலுவை உணர்த்தமுடியாது. ஏப்ரல், 27 அன்று NPR வானொலியிலே ஒரு விவரணம்; Scholars at Risk. கேட்ட அமெரிக்கர்களுக்கு எப்படியிருந்திருக்குமோ தெரியாது; ஆனால், எனக்குள்ளே இதிலே எத்துணையானது, தமக்குத் தேவையானதை உருப்பெருப்பித்து, தமக்கு எதிரானதை உருச்சிறுத்து அல்லது மறைத்துக்காட்டும் தன்மை என்ற கேள்வி எழுந்துகொண்டேயிருந்தது. இதேபோல, இந்த மே 8, ஈரானின் நோபல் பரிசு பெற்ற, Shirin Ebadi ஹாவார்டிலே பேசப்போகிறார்; அவரின் அபிப்பிராயம் எந்த விதத்திலே தமது புரவலர் குறித்தும் அவர்களின் நாடு குறித்தும் மனித உரிமை அளவிலே இருக்கின்றதென்பதை அறிய நேரே சென்று கேட்கும் எண்ணமிருக்கின்றது. நோபல் பரிசு பெற்றபின்னால், அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையைச் சாடியிருந்தார். ஆனல், இங்கே பேசும்போது, அதையும் சுட்டுகின்றாரா என்று பார்க்கவேண்டும்.

இதேபோலத்தான், க்ளோடாவ்ஸ்கியினையும் அவரின் படங்களையும் நான் அணுக விழைகின்றேன். ஹிட்லரின் மனிதவதைமுகாமிலிருந்தவரின் மகளான Klodawsky பலஸ்தீனியர்களைப் பற்றி எடுத்த படம், Shoot and Cry இனை நான் பார்க்கவில்லை அதிலே இஸ்ரேல்-பலஸ்தீனிய உறவுகளைப் பற்றிச் சொல்லும்போது, நடுநிலை தவறாதிருக்கின்றாரா என்று பார்க்க விரும்புகிறேன்.

ராஜினியின் சேவையை எவரும் எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடமுடியாது. வெளிநாடொன்றிலே இயன்றவரை பத்திரமாக இருந்துகொண்டு, தான் வெளியே வசதியாக வாழ வழியிருந்தும் தன்நாட்டுக்குத் திரும்பிச் சேவை செய்ய விரும்பிய ஒருவர் குறித்து நாம் குறைவாக எந்தக்காரணம் கொண்டும் மதிப்பிட அருகதையற்றவர்கள். (ராஜனி இலண்டனிலிருந்து திரும்பிப்போகமுன்னால், தன்னோடு பேசியவை குறித்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எங்கோ - (உயிர்நிழல்/எக்ஸில்/இருள்வெளி??)- ஒரு கட்டுரை எழுதி வாசித்திருந்தேன்). கூடவே, புலிகளை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஈழப்போராட்டத்தைமட்டுமே முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தும் தேவையும் எமக்கு இருக்கக்கூடாது; ஆனால், நான் அவதானித்த அளவிலே, மனித உரிமைமீறலென்றால், பிடி விடுதலைப்புலிகளை என்று விரலைச்சுட்டும் முழங்காலடிக்கு மூன்றடி துள்ளும் மனப்பாங்கு தம்மை மனித உரிமையின் காவலர்களென்று நிறுவிக்கொள்ள முயல்கின்ற புலம்பெயர் தமிழர்களிலே குறிப்பிட்ட சாராரிடம் இருக்கின்றது. இப்படியான பொதுமைப்படுத்துதல் சரியான போக்கென்று எனக்குத் தோன்றவில்லை; இது நீங்கி, ஒதுங்கிநின்று ஒவ்வொரு சம்பவத்தினையும் தனித்தனியே பார்த்து மெய்யுணரும் உளநிலை எங்களுக்கு வரவேண்டும்.

இந்த விவரணம், No More Tears, Sister: Anatomy of Hope and Betrayal இனைச் சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது பார்க்க விருப்பமுண்டு. ஆனால், இந்த விவரணத்தின்மூலம் நான் அறிந்து கொள்ளவிரும்புவதிலே, கடைசியான நோக்கமாகக்கூட, "ராஜனியினைக் கொன்றவர் யார்?" என்பதை அறிய முனைவதாக இருக்காது; என்னளவிலே, இதன் நோக்கு, குறைந்த பட்சம், ஈழத்தமிழர்களிடையேயான தம் விழுமியங்கள் குறித்த மீள்பார்வைக்கேனும் இஃது உதவும் என்பதாகவும் ஈழப்போராட்டம்சாராத ஒரு மேலைத்தேயரின் பார்வை என்று கூறப்படுவது எப்படியாக இருக்கின்றது என்பதை அறிவதாகவும் மட்டுமே இப்போதைய எதிர்பார்ப்பிருக்கின்றது.

2005, ஏப்ரில் 28 13:39 கிநிநே.


13 comments:

கறுப்பி said...

பெயரிலி தங்கள் தலைப்பு கொஞ்சம் சங்கடத்தைத் தருகின்றது (உடற்கூறும் பிரேதப் பரிசோதனையும்) யார் ராஜினியைக் கொன்றார்கள் என்பதை ஆராய்வது தேவையில்லாத விடையம் என்றாலும் எமது நாட்டுக்கு மிகவும் உபயோகமான ஒரு தமிழ் பெண்ணை ஒரு (பலர் சேர்ந்து) தமிழர் கொன்றிருக்கிறார்கள் என்றால் அது பேசத்தேவையற்ற ஒன்றாக எனக்குப் படவில்லை. நேற்றைய விடையங்கள் நிராகரிக்கப்பட்டால் இன்றையது நாளை நேற்றையதாகி விடும். ஒரு கட்டிடத்தின் அடித்தள ஆட்டங்களை கவனிக்காமல் மேல் தளத்தில் எமது கவனம் இருந்து என்ன பயன். ஒட்டு மொத்தமா எல்லாமே இடிந்து விழும் அபாயம்தான் மிஞ்சும். நாம் (நான்) வெறும் சிறுதுளிதான். இருந்தும் போராட்டதில் பங்கு கொள்வோரிலும் பார்க்க போராட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி சிறுதுளிகள் சிறிதேனும் சிந்தித்தால் உதவினால் அது அவர்களுக்குப் பாரியதாகவே படும். வெறும் பேச்சோடு விடாமல் புளொக்கில் இருக்கும் சமூக விரும்பிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட எம் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சின்னதாக ஒரு உதவியைச் செய்யலாமே.

SnackDragon said...

Bravo!!
// வெளிநாடொன்றிலே இயன்றவரை பத்திரமாக இருந்துகொண்டு, தான் வெளியே வசதியாக வாழ வழியிருந்தும் தன்நாட்டுக்குத் திரும்பிச் சேவை செய்ய விரும்பிய ஒருவர் குறித்து நாம் குறைவாக எந்தக்காரணம் கொண்டும் மதிப்பிட அருகதையற்றவர்கள்.//

இளங்கோ-டிசே said...

விரிவும் ஆழமானதுமான பதிவு, பெயரிலி.
இது குறித்த எனது கருத்துக்களை இன்றிரவுக்குள் எழுதமுயற்சிக்கின்றேன்.

ஜெயச்சந்திரன் said...

மிகவும் வித்தியாசமன பார்வையுடன் எழுதப்பட்ட பதிவு.

Anonymous said...

இலங்கையின் இனப் போராட்ட வரலாற்றில் இரஜினி திரணகமவையும், அவர்கள் போன்ற மேலும் பலரையும் பற்றி நானும் நிறையப் படித்திருக்கின்றேன். இப்படிப் பட்ட நடு நிலை மனித நேயர்களை பல தரப்பினரும் கொன்றிருக்கிறார்கள், இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்த இனப் போராட்டத்தில், போராளிகளுக்கிடையே இருந்த போட்டியில், பகையில் சந்தேகத்தின் பேரில் கொல்லப் பட்ட தமிழ் மற்றும் சிங்கள மனித நேயவாதிகள் பலர். இது மிகவும் கவலைக்குரியது. நாகரீக நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத போர்க்களத்தில் நியாயம், நேர்மைக்கு இடமில்லை என்பதையே இது காட்டுகிறது.

புலிகள் தவறாகச் சில செயல்களைச் செய்திருக்கிறார்கள், அவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியது அத்தவறுகளை அவர்கள் மறுபடியும் செய்யாதிருக்க உதவும். இந்த விமர்சனப் போக்கைப் பெரும்பாலான புலிகளின் ஆதரவாளர்கள் கடை பிடிப்பது இல்லை. அப்படிச் செய்திருந்தார்களானால் புலிகள் இயக்கம் தன்னாட்டு மக்களைக் காக்கும் முழுப்பொறுப்பை மட்டுமல்லாமல், தார்மீக ரீதியான வெற்றியையும் என்றே அடைந்திருப்பார்கள். இது ஒரு புறம் இருக்க, புலிகள் இயக்கம் தான் அங்கு நடந்த/நடக்கும் அத்தனை துயரங்களுக்கும் காரணம் என்பது போல கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டிருப்பவர்கள் பலர். இவற்றை இந்தியாவிலுள்ள இந்துப் பத்திரிகை போன்றவர்கள் செய்வதற்குக் அவர்களது சுயநலக் காரணங்கள் உண்டு. ஆனால் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் புலிகளினால் தமிழர்களுக்குக் கிடைத்த பாதுகாப்பையும், தன்மானத்தையும் மறைத்து எப்பொழுதும் அவர்களது குற்றங்களிலும், குறைகளிலும் மட்டுமே தங்கள் பார்வையைக் குவியப் படுத்துவது ஏனென்று தெரியவில்லை. குறிப்பாக இவர்களது எதிர் பார்ப்பே புலிகள் ஏதாவது தவறு செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது போல இருக்கின்றன இவர்களது செயல்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

ஜெயச்சந்திரன் said...

//ஈழத்தில் இருந்து வந்தவர்கள் புலிகளினால் தமிழர்களுக்குக் கிடைத்த பாதுகாப்பையும், தன்மானத்தையும் மறைத்து எப்பொழுதும் அவர்களது குற்றங்களிலும், குறைகளிலும் மட்டுமே தங்கள் பார்வையைக் குவியப் படுத்துவது ஏனென்று தெரியவில்லை. குறிப்பாக இவர்களது எதிர் பார்ப்பே புலிகள் ஏதாவது தவறு செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது போல இருக்கின்றன இவர்களது செயல்கள்.//


நீங்கள் சொல்வது உண்மை எப்ப எந்த சந்தர்ப்பத்தில் புலிகளை குற்றம் சொல்லி விமர்சிக்லாம் என காத்திருப்பது போல் கூட்டாக கிளம்பிவிடுவார்கள். அதிலும் மொட்ட ;ந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாவது குறைகூறுவது சிலர் வழக்கம். இவர்களின் சிலர் பார்வைக்கு அரசோ அது சார் அமைப்பக்களோ எது செய்தாலும் கண்ணில் படுவதில்லை. அல்லது வசதிகருதி கண்களை மூடிவிடுகிறார்களோ தெரியவில்லை. அதில் பாதிக்கப்பட்வர்களுக்காக குரல் கொடுப்பதாக வேறு கதைவிடுவார்கள்........................

Anonymous said...

// புலிகளினால் தமிழர்களுக்குக் கிடைத்த பாதுகாப்பையும்இ தன்மானத்தையும் மறைத்து //

சங்கரபாண்டி அண்ணாச்சி என்ன இப்பிடிப் போட்டுப்புட்டீக?
புலிகளால் தமிழருக்குப் பாதுகாப்புங்களா கெடைச்சிச்சு? இன்னைக்குத் தேதிக்கு வடக்குத் தமழ் பகுதிகளுக்கு யாருக பொறுப்பாக இருக்காங்க?
யாழ்பாண மாவட்டத்தில இராணுவமெல்லே இருப்பதாக நாம படிக்கிறோம்?
நம்ம நாட்டுக்குப் பக்கத்தில கெடக்கெற தீவுகளுக்குள்ல மனுசங்க போறதில்லேங்களாமே! இங்கிருந்தவங்கள்ல பலருல நாடோடிகளாத் திரிகிறாங்களாமே?

கிழக்குத் தமழீழத்தில பல பகுதிகளல் சிங்கள ஆமிகளாலதானாமே ஆட்சிநடக்கறப்ப எப்பிடீங்க புலிகளால்ல பாதுகாப்புக் கெடைச்சிச்சு?

இவங்க ஆமிக்காரப் பசங்களுக்குக் குண்டெறிஞ்சு ஓடினாபொறவு,ஆமிக்காரங்க ஊருக்கப்போயி தமிழர்கள துவஷம் செஞ்சாஞ்களாமே?

போராட்டத்துக்கு முன்னாக தமிழர்கள் இருந்த பகுதிகள ஆமிக்காரங்க வந்து குந்திக்கிட்டிருகப்ப நீங்க வேறு வயித்தெரிசn;சலக்கௌப்பீர்க.

இளங்கோ-டிசே said...

Just read this news :-(((.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14766
Hope, Sivaram (Dharaki) will be back home safely.

Anonymous said...

Journalist Sivaram abducted

[TamilNet, April 28, 2005 18:31 GMT]
Mr. Sivaram Dharmeratnam, 46, a senior editorial board member of TamilNet was abducted at around 10.30 PM by a group of unidentified men in front of a restaurant in Bambalapitiya, Colombo, according to reliable media persons in Colombo. A Sinhala journalist who has been in touch with the HIRU newspaper said that four unidentified persons, who were standing in front of the Bambalapitya Police Station, got into an ash coloured Toyota SUV type of vehicle and pulled Mr. Sivaram into the vehicle and drove off. 9.30pm was the last time Mr. Sivaram was in touch with TamilNet.
At least one of the kidnappers could be identified by an eyewitness, the journalist said. The number of the vehicle started with WPG11, according to the journalist who didn't want to be named.

Mr. Sivaram was scheduled to meet a HIRU journalist Thursday night.

Mr. Viraj Mendis, a German based human rights activist who was in contact with the Sinhala newspaper, HIRU, revealed the details to TamilNet.

Mr Sivaram, also known as Taraki, is a reputed military analyst and columnist for Daily Mirror.

Mrs. Sivaram has lodged a formal complaint with the Police.

Thangamani said...

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14768

தாரக்கி சிவராம் கொல்லப்பட்டார். நான் இவரது கட்டுரைகள் சிலவற்றை வாசித்துள்ளேன். சமீபத்தில் புலிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பைப்பற்றிய கட்டுரையொன்றை வாசித்தேன். இவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

-/பெயரிலி. said...

எல்லோருக்கும், இந்தப்பதிவுக்கான பின்னூட்டங்களுக்கு நன்றி. அவை குறித்த என் எதிர்வினை பின்னொரு நாளிலே.

நற்கீரன் said...

"விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்று ஆதாரமில்லாமல் நம்புங்கள் என்று நிற்கும் சிலரைப்போல, விடுதலைப்புலிகள்தான் கொன்றார்கள் என்று ஆதாரமில்லாமல் சிலரும் பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள் எனத் தோன்றுகின்றது."

You are absolutely right. I often wonder where objectivity, and standard skepticism get lost when people are engaged in propaganda; now I realize that it can easily get buried when you want to communicate or promote some ideas or principals that you hold to be true.

I deeply regret for asserting that it must have been LTTE. Doing that just got me sucked into the mindset that I deeply despise. I recognize that one can not hold false or incorrect believes honestly. Also, people can error logically. I do not know how to classify this bad judgment.

I simply want express truth as I know it, and as best as I can. I also want to promote principals that I hold. But, using a speculative judgment to promote ones principal is dangerous, and exemplifies propaganda. This I regret.

I despise propaganda because it manipulates the truth, thus manipulates people. Although, propaganda and true expression are hard to distinguish, people engaged in both know what they are doing.

Thank you for reminding me of fault.

சுந்தரவடிவேல் said...

இதைப் படிக்க வேண்டுமென்றிருந்தேன். இன்றுதான் முடிந்தது. கேள்விப்படும் ராஜனியின் பணிகள் போற்றுதற்குரியவை. என்றாலும் புலிகளுக்கெதிராக அல்லது எதிராகத் தோற்றமளிக்கக் கூடும் என்ற சாத்தியக்கூறு படைத்த எந்தவொரு விசயத்தையும் ஊதிப் பெரிதாக்கிக் காட்டுவது பலருக்கு உவப்பாயிருக்கும் போலத் தெரிகிறது. அதுவும் இன்றைய அரசியல் சூழலில் இது ஏதேனும் ஒரு பாதகத்தைப் புலித்தரப்புக்கு ஏற்படுத்திவிடக்கூடாதா என்ற ஆர்வக்கேடும் பிண்ணனியிலே துருத்திக் கொண்டிருக்கலாம்.