Tuesday, March 15, 2005

கணம் - 460

அவரவர் தொழில்கள்

ஆடுவது நான்;
சலங்கையைக் கட்டிக்கொள்வேன்;
காலை விடு.

ஊதுவது நான்;
சங்கைத் தூக்கிக்கொள்வேன்;
கையை எடு.

தோண்டி மருதாணி
தோய்த்துப் பூச ஆசையில்லை;
காயக் கைப் பொறுதி இல்லை.
அரைத்து அள்ளிய சாயம் அனைத்தும்
உனக்கே; விரியக் கை பதுக்கிக்கொள்.

இனி என்ன செய்வதென்று என்னைக் கேளாதே.
திருப்பு உன் முகத்தை; கண்டாயா, கதவும் தெருவும்?
முதுகு குறுக்கிப் போ; மெல்ல முனகாதே உனக்குள்.
வெளிப் பார்ப்பாய்: - விரிந்திருக்கும் விண்;
நட நெடுக்கே; தந்திக்கம்பம் கண்டால் தரி கணம்.
கால் தூக்கிச் சர் என்றடி சலம்; பட்டமரம் ஒன்றுதான்
சுனைப்பட்டுத் திரும்பச் சுர்ரென்று பேசாதென்றறி.

சிறுபிள்ளைத்தமிழ் சொன்னால்,
உன் பருத்த தலைக்குள்ளும் முளை
சுரக்கும் என்றாயா, சொன்னேன்.

புரிந்ததுக்குப் பெருநன்றி.

இனி, உன்னித் திரும்பாதே;
ஓயாமல் நிழல் தொடர நட;
இன்னும் இருக்குமாம் வழி
எண்ணில்லாத் தந்திமரம்.

அடுத்த முறை சக மனுஷனாய் வா;
அமர்ந்திருந்து கதைப்போம் ஆறி.

'05 மார்ச் 15, 18:33 கிநிநே.