Saturday, July 21, 2007

கரைவு - 9



ஜெயச்சந்திரன் கோபிநாத்தின் வலைப்பக்கம் 1995



சிறுபொறியும் நொய்புள்ளியொன்றில் நெகிழ்ந்த கணத்திலே தெறிக்க, பரவிச் சுற்றெல்லாம் பற்றிக்கொள்கிறது. மாலனின் "விட்டுப்போன எட்டு" என்ற வலைப்பதிவு இடுகையிலே சொல்லப்பட்ட தமிழிணையம் பற்றிய கருத்துகள், பெருமளவிலே இக்குறிப்புத்தொடருக்குப் பொறியாகியிருக்கின்றது.


முன்நிகழ்வுகளின் சுருக்கம்

மாலன் தன் "எட்டியவரைக்கும் ஒரு எட்டு" பதிவின் பின்னூட்டத்தில் சுதேசமித்திரன் பாரம்பரியம், "விட்டுப்போன எட்டு" என்ற பதிவிலேயும் இணையத்திலே தமிழினை ஏற்றியது, கோவிந்தசாமி, கணிச்சொல்லகராதி, தமிழின் முதல் யூனிக்கோட் எழுத்துரு இதழ், வலைப்பதிவின் வரலாறும் வளர்ச்சியும் ஆகியவை குறித்த இரு குறிப்புகளினையும் உள்ளடக்கியிருந்தார். அதற்கு "இணையபிதா கோவிந்தசாமி" என்ற அர்த்தத்திலே அருணா ஸ்ரீனிவாசனும் பின்னூட்டியிருந்தார். இவர்களின் கருத்துகளிலே, தரவுகளிலே காணப்படும் வழுக்களையும் அவ்வரலாற்றுத்தரவுகளுக்கு மாற்றுகளிருப்பதற்கான சாத்தியத்தைச் சுட்டாத முழுமையின்மையும் பற்றி எழுத எண்ணியிருந்தேன். அதே நேரத்திலே, செல்வநாயகியின் "மக்கள் பங்குபெறாத புரட்சியிலே பயனில்லை" பதிவிலே வெளியான மாலனது, எனது எதிர்வினை, தெறிவினைகளின் காரணமாக, இவ்(வி(தண்டா))வாதம் ஈழம், இந்தியா, விடுதலைப்புலிகள், தி இந்து ராம், எள்ளல்/ஏகடியம் ஆகியவை குறித்தும் நீட்சியடைந்து, பேச்சு தடித்து விரிந்தது; இவற்றினைத் தொட்டு, மாலன், தொட்டுப்போனவர்களுக்கு நன்றி" என்ற இடுகையையும் நான் "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" என்ற இடுகையினையும் இட்டோம்.

இவ்விடுகையிலே, நாவலர், உதயதாரகை, மற்றும் கணித்தமிழ், பாரம்பரியம் இவை பற்றி மாலனினாலே சொல்லப்படாத மாற்று வரலாறுகளுக்கான சாத்தியங்களையும் சான்றுகளையும் ஓரளவுக்கு இணைத்திருந்தேன். இதற்கான எதிர்வினைகளாக, என் இடுகைகளிலே 'பாஸ்டன்' பாலாஜி, டிசே, 'மூக்கு' சுந்தர், தீவு, இரவிசங்கர், தங்கமணி, கொழுவி, குளக்காட்டான், குழப்பி உட்பட சிலர் பின்னூட்டியிருந்தனர். பதிலுக்கு, அருணா ஸ்ரீனிவாசன் மூன்று இடுகைகளைத் தந்திருந்தார்; தலைப்பற்ற இடுகை (சுட்டும் காரணம் நோக்கி அவ்விடுகையினை அதன் முன்மூன்று சொற்கூட்டால் "பெயரிலி என்ற ரமணீதரனுக்கு" என்று இனிக் காட்டுவேன்), TamillNet 97 and 2000, Tamil on Web. இவ்விடுகைகள், கு. கல்யாணசுந்தரம், 'முரசு' நெடுமாறன், நா. கோவிந்தசாமி ஆகியோரினை அவர் கண்ட செவ்விகளைத் தந்திருந்தன. இவற்றிலே மாலன், 'அச்சுப்பதிப்பிலிருந்து இணையத்தின் ஏறிய முதலாவது தமிழ்ச்சஞ்சிகை' என்று குறிப்பிடுதலுடன் மாலனின் கருத்தும் இடம் பெற்றிருந்தது. இதன் பின்னால், மாலன், அன்புள்ள பெயரிலிக்கு என்ற இடுகையைத் தந்திருந்தார். இவரின் இவ்விடுகை விடுதலைப்புலிகள், வலைப்பதிவுகளின் எதிர்காலம், எதிர்வினைகளில் எள்ளல், தமிழ்ப்பாரம்பரியம், கோவிந்தசாமி- இணையத்தில் தமிழ் ஆகியவற்றுக்கான அவரின் ஆதாரங்கள் அடக்கியவை.

இவற்றுக்கான எதிர்வினைகளை அவ்வப்போது என்னுடைய முன்னே சுட்டிய "விட்டதன் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" இடுகையிலே இட்டுவந்தேன். விடுதலைப்புலிகள் தொடர்பான மாலனின் ஒரு கருத்துக்கு, கொழுவி தனது, "கள நிலவரங்களும் மக்கள் ஆதரவும்" இடுகையினை எதிர்வினையாக்கியிருந்தார். வலைப்பதிவுகளின் அமைப்பு, தொழிற்பாடு குறித்த எதிர்வினைகளை ஓசை செல்லா, "இப்படிச் சொல்லீட்டிங்களே மாலன்?" எனவும், மாயன் "மாலன் Vs. செல்லா - சில கருத்துக்கள்" எனவும் தந்திருந்தனர். மேலும், செல்வநாயகி, "அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்" என்று ஈழத்தமிழர் குறித்த மாலனின் இடுகைக்குத் தொடர்பான இடுகையைத் தந்திருந்தார். இவற்றோடு வாய்ஸ் ஆன் விங்க்ஸ், இவ்விவாதங்களின் போக்கினைச் சுட்டி, "வெற்றுவிவாதங்கள் தரும் அயர்ச்சி" என்ற இடுகையினை இட்டிருந்தார்.

இவ்விடுகைகளின் பட்டியலை வாசிப்பவர்களின் வசதிக்காக, கீழே தந்திருக்கின்றேன்.

1. எட்டியவரைக்கும் ஒரு எட்டு - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post.html


2. விட்டுப்போன எட்டு - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post_05.html


3. மக்கள் பங்குபெறாத புரட்சியிலே பயனில்லை - செல்வநாயகி
http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_05.html


4. விட்டதன் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல் - -/பெயரிலி.
http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html


5. பெயரிலி என்ற ரமணீதரனுக்கு - அருணா ஸ்ரீனிவாசன்
http://aruna52.blogspot.com/2007/07/blog-post_12.html


6. TamillNet 97 and 2000 - அருணா ஸ்ரீனிவாசன்
http://arunasarchive.blogspot.com/2007/07/tamil-net-97.html


7. Tamil on Web - அருணா ஸ்ரீனிவாசன்
http://arunasarchive.blogspot.com/2007/07/naa.html


8. தொட்டுப்போனவர்களுக்கு நன்றி - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post_2256.html


9. அன்புள்ள பெயரிலிக்கு - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html


10. இப்படிச் சொல்லீட்டிங்களே மாலன் ? - ஓசை செல்லா
http://osaichella.blogspot.com/2007/07/blog-post_08.html


11. மாலன் Vs. செல்லா - சில கருத்துக்கள் - மாயன்
http://www.pkblogs.com/maayanpaarvai/2007/07/vs.html


12. கள நிலவரங்களும் மக்கள் ஆதரவும் - கொழுவி
http://koluvithaluvi.blogspot.com/2007/07/blog-post_16.html


13. அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் - செல்வநாயகி
http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_18.html


14. வெற்றுவிவாதங்கள் தரும் அயர்ச்சி - வாய்ஸ் ஆன் விங்க்ஸ்
http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post_15.html




இத்தொடர் மீதான என் எதிர்பார்ப்பு

இவ்வாதங்கள்மீதான தொடர்ச்சியான என் சிறுகுறிப்புகளை வாசிக்க முன்னால், மேலே தந்திருக்கும் இடுகைகளை மிகவும் அவதானமாக வாசிக்கும்படி ஈடுபாடுடையோரைக் கேட்டுக்கொள்கிறேன். அவரசமான எதிர்வினையாற்றல், குழப்பத்தைத் தந்து எதிர்வினைகளைத் திசை திருப்புவதோடு நேர, சக்திவிரயங்களையும் எல்லோருக்கும் ஏற்படுத்தும். இதுவரை இவ்விடயத்திலே நான் அவதானித்ததன்படி, அருணா, மாலன் போன்ற சம்பந்தப்பட்டவர்கள்கூட என் இடுகை, பதில்களின் கருத்துகள், இணைப்புகள் ஆகியவற்றினைக் கவனிக்காமல், மீண்டும் எனக்கே அவ்விணைப்புகளை வாசிக்கும்படி சுட்டுவதும் (கோவிந்தசாமியின் தமிழ்நேஷன் தொடர்பான சுட்டி, Casting their Net) தமக்கு வாய்ப்பான ஆதாரத்தரவுகளைக்கூடத் தவறவிடுவதும் (நா. கோவிந்தசாமியின் 1995 ஆண்டின் இணையமேறிய தமிழ்க்கவிதைப்பக்கத்தினையும் அவர் 1995 செப்ரெம்பரிலே தொடங்கியதாகச் சொல்லி, 27 ஒக்ரோபர் 1995 இலே தமிழ்பொயம்ஸ் ஏறியதாகக் குறித்த அவரின் இணையப்பக்கத்தினையும் சுட்டிக்காட்டியும் மாலன் அதற்குப் பின்னாலான இரண்டாம்நிலைத்தரவுகளை முன்வைக்கின்றார்) அவலமான நிலை. இதற்கு என் இடுகையின் எழுத்துநடை ஏதேனும் காரணமாகவிருந்திருந்தால், அவர்கள் மன்னிக்கவேண்டும்.

பொதுவாக என் வலைப்பதிவுக்கு எவரையும் வரவேண்டுமென்ற எண்ணத்தினைத் தமிழ்மணத்திலே சேர்த்தலுக்கப்பால், நான் பின்னூட்டக்கயமையினாலோ வேறேதோ வகையினாலோ முயற்சிப்பதில்லை. ஆனால், இச்சிறுதொடரை வாசிக்கும் நண்பர்கள், இயன்றவரை தம் நண்பர்களிடம் (-பல்லைக்கடித்துக்கொண்டு) வாசிக்கும்படி கேட்க வேண்டுகோள் விடுக்கின்றேன். இஃது என் பதிவு கவனம் பெறுவதற்காகவல்ல; ஆனால், "சார், நல்ல விளக்கம்!", "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது","காய்த்த மரத்தில் கல்லெறிவது நல்லதுதான் போலும்; இல்லையெனில் இத்தனை 'கனிகள்' விழுமா என்ன ..?", "இ-தமிழின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி" என வெளிப்படையான வழுக்களும் பலமில்லாத ஆதாரங்களும் பரவிக் கிளைத்திருக்கும் மாலனின் இடுகைக்கு விழுந்திருக்கும் பின்னூட்டங்கள் தமிழ் இணையம், தமிழ்க்கணிமை குறித்த நிகழ்வுகள் எதிர்காலத்திலே எப்படியாக எழுதிவைக்கப்படப்போகின்றதென்ற பயத்தினை ஏற்படுத்துகின்றன. 'முப்பதாண்டு பத்திரிகையனுபவம் மிக்க' மாலனின் பிரபலமோ, 'இணைய ரவுடி' -/பெயரிலி. மீதான தனிப்பட்ட வெறுப்புணர்வோ தமிழ்மொழி சார்ந்த வரலாற்றினைத் திரிபுற்றுப் புரிந்துகொள்ளக்காரணமாகிவிடக்கூடாது. அதற்காகத்தான் இவ்வேண்டுகோளை முன்வைக்கின்றேன் - -/பெயரிலி. குறித்த அபிப்பிராயத்தினை மாற்றவல்ல. மாலன், அருணா ஆகியோர் முன்வைத்திருக்கும் ஆதாரங்கள், தரவுகள், கருத்துகளை, இத்தொடரிலே இனி வரும் இடுகைகளிலே ஒவ்வொன்றாக எதிர்கொண்டு பதிலளிப்பேன்.

வரலாறென்பது விமர்சனத்தோடு அணுகப்படவேண்டியது. நிகழ்வுகளை வரலாறு என்ற பெயரிலே பதியும்போது, பதிகின்றவனின் பார்வை நிகழ்வின்மீது தொடர்ந்தும் தன் எச்சத்தை இட்டுப்போவதைத் தவிர்க்கமுடியாது; ஆனால், நேர்மையான வரலாற்றுப்பதிதல் என்பது, வரப்போகும் விமர்சனத்தன்மையுள்ள வாசகன் சொல்லப்பட்ட வரலாற்றிலிருந்து எழுதியவனின் பார்வையைப் பிரித்து தரவுகளை உள்வாங்கவும் இன்னொரு வரலாற்றுக்குறிப்பாளன் அத்தரவுகளை நம்பிக்கையுடன் மேற்கோள்காட்டி விட்டுப்போன பகுதியைப் பொருத்தமான வகையிலே மீளாய்ந்து இட்டுநிரப்பவும் கிட்டும் புதிய தரவுகளை தகுந்த இடங்களிலே இடைச்சேர்க்கவும் வசதியை வழங்குவதாகவும் இருக்கவேண்டும். அறியாத காலம் பற்றிய வரலாற்றினை, தன் கைவசமிருக்கும் அல்லது தான் நம்பும் தரவுகள் போதுமானவையும் அறுதியானவையும் என்ற தீர்மானத்துடன் எவரும் முழுமையாகப் பதிவு செய்யமுடியாது; பதிவு செய்யக்கூடாது. தமக்கு அறியப்படாத மாற்றுநிலைகளும் நிகழ்வுகளும் இருக்குமென்பதை ஏற்றுக்கொண்டு அவற்றின் சாத்தியத்தைத் தன் வாசகருக்கு உணர்த்தி, தன் பார்வையிலே தரவுகளைத் தருகின்றபோதே அவ்வரலாறும் அதன் ஆசிரியரும் தன்னுடைய இன்றைய நாளைய வாசகர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் சரியானதைச் செய்கின்றவராகின்றார்; நேர்மையுடைத்தவராகின்றார்.

வரலாறு என்பது ஒற்றைப்புல்லுமில்லாத வெட்டவெளியிலே ஒற்றைத்தடமாக மணற்கோடு கீறுவதாகாது; நிகழ்வுகளாக உறுதிப்படுத்தப்பட்ட பல புள்ளிகளூடாகச் செல்லக்கூடிய அனைத்து நெளிகோடுகளினதும் தொகுப்பாகவே இருக்கமுடியும். இவற்றிலே எக்கோடு பொருத்தமானதென்பதை இனிவரும் நாட்களிலே தோண்டியெடுத்துச் சரிபார்த்த புதிய தரவுகளே தீர்மானிக்கமுடியும். சாதாரணமாக வாசகர்களுக்குப் போகின்றபோக்கிலே கதை சொல்கின்றபோதுங்கூட, இக்கவனம் பிறழாமல் ஒருவர் செய்யவேண்டும். இதன் அடிப்படையிலேயே என் இக்குறிப்புகள் தொடர்கின்றன. நான் எத்தரவினையும் ஆதாரத்துடன் முன்வைக்கும்போதும், கருதுகோள்களை அவற்றுக்குரிய போதும்-போதாமை உணர்ந்து எடுத்துக்கொள்வதிலும், முடிவான நிறுவல்களை, தரவுகள் போதாத வெளிகளிலே இருக்கும் தரவு, கருதுகோள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி ஏரணத்தின் அடிப்படையிலும் இயன்றவரை தர முயற்சிக்கின்றேன் என்பதை வாசகர்களுக்குத் தெளிவுபடத் தெரியப்படுகிறேன்.


எனது இச்சிறுதொடரின் நோக்கம், எவரையும் எதிலும் வெல்வதல்ல; நாவற்கிளையேதும் நான் நாட்டித்தொடங்கவில்லை. ஆக, நிகழ்ந்ததை, திருத்தமான ஆதாரத்தரவூடாக மேலும் தெளிவாக்கியும் நேராக்கியும் காட்டுதலும் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் என் தனியான புரிதல்களையும் பார்வைகளையும் தருதலுமேயாம்.

தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களிலே எழுதச் சந்தர்ப்பம் வாய்க்காது; ஆனால், ஓகஸ்டு 2007 இற்கு முன்னால் இச்சிறுதொடரை -இடையிலே வரும் எதிர்வினைகளுக்கும் இயன்றவரை பதிலளித்து- முடித்துவிடுவேன்.


இச்சிறுதொடரிலே கீழ்க்கண்ட இடுகைகளை இப்போதைக்கு இடுவதாக இருக்கின்றேன்

பகுதி 1 - மு(எ)ன்னுரையும் இன்ன பிறவும்
மாலன், அருணா, வாய்ஸ் ஆன் விங்க்ஸ் ஆகியோரின் மையக்கருத்துகளிலிருந்து விலகியோ முக்கியமற்றோ துகள்போலக் காணப்படும் சில உதிரி விடயங்கள் பற்றிய பதிவு இது. இணையபிதா, டாக்டர்/பேராசிரியர், வரலாற்றை உரைப்பதில் பிரபலங்களின் தாக்கம், எள்ளலும் மாலனைக் கேள்வி கேட்பதற்குமான காரணங்கள், ஆதாரங்களை முன்வைக்கும் முறையிலிருக்கும் பிரச்சனைகள், வலைப்பதிவுகளை நோக்குதல், இணையத்தமிழ் வரலாற்றினைப் பதிவு செய்யும் நோக்கு

பகுதி 2 - இணையத்தமிழ் ஆரம்பம்
soc.culture.tamil, gif தமிழ், இணையபிதா?, இணையத்திலே தமிழ் மீதான பொதுக்கருத்து, கோவிந்தசாமி, தமிழ்நெற் எழுத்துரு.எதிர்.தமிழ்நெற் இணையக்குழு, கணியன்+தமிழ்நெற் விசைப்பலகை+எழுத்துரு .எதிர்.கணியன் இதழ்.எதிர்.பூங்குன்றனார் கவிதை, மாலனின் ஆதாரங்களின் ஓட்டைகளும் துருக்களும் களிம்பேற்றமும், கல்யாணசுந்தரம் (மயிலை)/மின்னூலகம், ஜெயச்சந்திரன் கோபிநாத்+சைரஸ் தமிழினை எழுத்துருவினால் இணையமேற்று முயற்சி (ஓகஸ்ட்/செப் 1995)

பகுதி 3 - தமிழில் முதல் சஞ்சிகை, யூனிகோட் சஞ்சிகை, இன்ன பிற 'முதல்'
இணையம் கண்ட முதல் தமிழச்சுச்சஞ்சிகை 'குமுதம்' ஆ?, முதல் யூனிகோட் தமிழிதழ் 'திசைகள்' ஆ? முதல் தமிழ்ப்பக்கங்கள் தேடி, முதல் தமிழிணைய உரையாடி, இன்ன பிற

பகுதி 4 - தமிழில் கணிச்சொற்கோவை அமைத்தலும் தன்னாவத்தொண்டுகளும்
தமிழிலே கணிச்சொற்கோவை இணையத்திலே ஆகிவரும் முறை, தன்னார்வத்தொண்டுகளும் செயற்பாடுகளுக்கான பங்களிப்புகளும் பங்குபிரித்தல்களும்

பகுதி 5 - தமிழில் வலைப்பதிவு
தமிழில் வலைப்பதிவு.. எங்கிருந்து, எங்கே, எவரால், இனி எப்படி

பகுதி 6 - தமிழ் இலக்கியப்பாரம்பரியம்
யாருடையது, தமிழகத்தின் சுதேசமித்திரன் பாரம்பரியம் அடக்குவன இவை என்ற பிம்பக்கட்டுமானம், கட்டுமானம் உருவாகும் முறை, தமிழுக்கு சுதேசமித்திரன் சுட்டாதனவற்றின் பங்களிப்பு பேசும் தேவைக்கேற்ப, மொழிவளர்ச்சியில் ஈழத்தின் பங்களிப்பு

பகுதி 7 - ஈழம், இந்தியா, இந்து ராம், மாலன், விடுதலைப்புலிகள்
ஈழம், இந்தியா, இந்து ராம், மாலன், விடுதலைப்புலிகள், தரவின்றித் தன் மையத்துக்காய்க் கருத்துக் கட்டமைத்தல்


இயன்றவரை கைக்கெட்டிய இணையம், கையிருப்பு நூல்கள் ஆகியவையே என் ஆதாரங்களாகும். ஆனால், அவற்றினை முன்வைத்தே பேசுவேன். இக்கட்டுரைக்கான மேலதிகமான ஆதாரங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தித் தந்த (& தரப்போகும்) நண்பர்களுக்கும் நேரமெடுத்து என் பதிவுக்குப் பதில் தரும் விதத்திலே பதிவிட்ட மாலன், அருணா ஆகியோருக்கும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

'07 ஜூலை 21, சனி 00:35 கிநிநே.


கரைவு~

5 comments:

Anonymous said...

மிக்க நன்றி மாலனுக்கு ;) - இப்படி அருமையான தொடர் எமக்கு கிடைக்க ஒரு பொறியாய் இருந்ததற்காய் மட்டும்

அதைவிட கொஞ்சம் கூட நன்றி பெயரிலிக்கு - இந்த தொடருக்கு

இவற்றுடனெல்லாம் அளவிடமுடியாத நன்றி - இவற்றில் எல்லாம் உண்மையான பங்களித்தவர்களுக்கு.

-/பெயரிலி. said...

அநாமதேயநண்பர்
அன்புக்கு நன்றி.
இத்தொடர் அருமையானதாவென எழுதி முடிந்தபின்னால், விமர்சனக்கண்ணோட்டத்தோடு வாசித்துச்சொல்லுங்கள். தவறுகள் விட்டிருப்பின், திருத்துங்கள்; தரவுகள் விட்டிருப்பின், தாருங்கள். எல்லோருக்கும் பயனாகவிருக்கும்.

Anonymous said...

What about Yahoo! Groups?

-/பெயரிலி. said...

onelist eGroups Yahoo பரிணாமங்களின்போதிருந்த தமிழ்க்குழுக்கள் பற்றிப் பின்னொரு முறை (மரத்தடி உட்பட :-))
கலந்துரையாடு மன்று/அவை (forum) பற்றியும்.
மாலனுக்குப் பதிலாக வரும் இத்தொடரிலிருந்து அவரைச் சுட்டிச் சொல்வன தவிர்த்து, மீதியிலே தவறுகளைக் களைந்து, புதுத்தரவுகளைச் சேர்த்து, விரித்து, முன்னரே எண்ணியிருப்பதன்படி, தனியாகப் பின்னர் காலவரிசைப்படி கட்டுரையெழுத எண்ணம்

Thangamani said...

ரமணி:

உங்களது இந்த முயற்சிக்கும், நடைக்கும் என் நன்றிகள்!