Saturday, July 28, 2007

கரைவு - 10




கல்யாணசுந்தரத்தின் தமிழ் மின்னுரைச்சுவடிகள் பக்கம்

@ உலூசன் பல்கலைக்கழகம் '96 (ஆரம்பம் 23 மே 1995)



முன்னைய பகுதி
அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - காப்பு (பகுதி 0)
==========

முஎன்னுரையும் இன்ன பிறவும் - அ

இந்தப்பகுதியிலே மாலனுக்கான பதிலிலே பேசப்படவேண்டிய கருக்களுக்கு முக்கியமற்றபோதுங்கூட, தம்மளவிலே முக்கியமான சில உதிரிக்கூற்றுகள்மீதான எனது விளக்கங்களைத் தரவிரும்புகின்றேன்.

கூற்று 1: இணையத்தமிழினைத் தொழில்நுட்பத்திலே முன்னேற்றாது இணையத்தமிழ் வரலாற்றினைப் பேசும்போது என்பது வெற்றுவிவாதங்களாகி அயர்ச்சியே மிஞ்சுகின்றது என்று எண்ணங்களின் குரல் கூறியிருப்பதன்மீது

கூற்று 2: தன்னதை ஒத்த கருத்தினைச் சொன்ன எத்தனையோ பேரிருக்க மாலன் தன்னை மட்டும் நான் கேள்விகளைக் கேட்டது காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே என்று கூறியிருப்பதன்மேல்

கூற்று 3: இணையபிதா, டாக்டர், பேராசிரியர் என்று பதங்கள் சொல்லப்பட்டது குறித்து எதற்காக நான் 'அதிகம் அலட்டிக்கொள்கின்றேன்' என்பது பற்றி

கூற்று 4: "சீன அரசின் சார்புநிலைப்பாட்டோடு திபெத்தின் சுதந்திரத்தேவையினைத் தாக்கியெழுதும் இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிக்கின்றார்" என்ற அர்த்தத்திலே நான் சந்திப்புக்குப் பதிலாகச் செல்வநாயகியின் பதிவிலே சுட்டிக்காட்டியது, மாலனுக்குத் தனிமனிதத்தாக்குதலும் எள்ளலுமாகிப்போனது பற்றி

கூற்று 5: தகுந்த ஆதாரங்கள் என்று முன்வைக்கும்போது, கருத்திலே கொள்ளப்படவேண்டிய குறைந்த பட்ச நம்பிக்கை & தராதரம் பற்றி

இவை தவிரவும் பேசப்படவேண்டிய வேறு உதிரிக்கருத்துகளிருக்கலாம். இத்தொடரை முடிக்கும்போது, அவை ஞாபகத்துக்கு வந்தால், மீண்டும் ஒரு பதிவாக்கி அதனையிடுவேன்.

மேற்கூறிய ஐந்திற்கான விளக்கங்களையும் ஒரேயடியாக இவ்விடுகையிலே விரித்துத் தருதலுக்கான சாத்தியமில்லையென்பதாலே, முதலிரு கூற்றுக்களின் மீதான எனது விளக்கங்களை இங்கே தருகிறேன். மற்றைய மூன்றும் அடுத்த இடுகையிலே தொடரும். அதனைத் தொடர்ந்து கோவிந்தசாமி-இணையத்தமிழ் குறித்த மாலனின் ஆதாரங்களின் தம்மைத்தாமே சுட்டுக்கொல்லும் தன்மையையும் மேலதிக ஆதாரங்களையும் பார்க்கலாம். இயன்றவரை இணைப்புகளை இங்கே தரமுயன்றிருக்கின்றேன். மேலதிக ஆதார இணைப்புகள் தொடர்ந்து கிடைக்கும்போதெல்லாம் தகுந்தவிடங்களிலே ஏற்றப்படும்.


கூற்று 1: இணையத்தமிழினைத் தொழில்நுட்பத்திலே முன்னேற்றாது இணையத்தமிழ் வரலாற்றினைப் பேசும்போது என்பது வெற்றுவிவாதங்களாகி அயர்ச்சியே மிஞ்சுகின்றது என்று எண்ணங்களின் குரல் கூறியிருப்பதன்மீது

'இன்று தமிழர்களுக்கு இணையத்தமிழின் வரலாறா, தமிழ்க்கணித்தொழில்நுட்பமா முக்கியமானது?' என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்தேர்தல் வருமானால், தொழில்நுட்பத்தேவைக்கே என் வாக்கு; இணையத்தமிழின் வரலாற்றினைப் பற்றி நான் ஏதும் பேசமாட்டேன். ஆனால், இங்கே அப்படியான கட்டாயத்துக்கான தேவையேதும் எழவில்லை. அதனால், இணையத்தமிழின் வரலாற்றினைப் பற்றி நான் நீட்டிப் பேசுவதற்கான காரணங்கள் எனக்குத் தெளியத் தெரிந்து, இரண்டு.

காரணம் 1: என் முன்னைய இடுகை ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, "யார், எதை, எப்போது, எங்கே செய்தார்" என்பதற்கான சரியான தரவுக்கோவை முறையான வரலாறாகத் தொகுக்கப்பட்டுப் பதிவாகுவதுகூட அவசியமில்லை. ஆனால், தவறான, திரிந்த, உறுதியற்ற, மழுங்கிய முன்வைப்புகள் வரலாற்றுத்தரவுகளாகத் தரப்படும்போது, "யார், எதை, எங்கே, எப்போது, எங்கே செய்யவில்லை" என்பதற்கான எதிர்த்தரவுக்கோவை முறையாக முன்வைக்கப்பட்டேயாகவேண்டும். அவ்வகையிலே மாலனும் அருணாவும் கூறிய கருத்துகளின், முன் வைத்த ஆதாரங்களின் எதிர்வினையாகவே நான் இணையத்தமிழின் வரலாற்றினை - என் கைக்கெட்டிய ஆதாரங்களுடன் - முன்வைக்கவிரும்புகிறேன். இஃது எவ்விதத்திலும் கணித்தொழில்நுட்பத்தின் முக்கியத்தை மறுப்பதாகக் கருதப்படக்கூடாது. இது போன்ற நோக்குடனேதான், கணித்துறையிலே திறந்தமூலமென்நிரல்களிலே, அவற்றுக்குப் பங்களித்தவர்களின் பெயர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; அவர்களின் பங்களிப்புகள் காலவரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன. இப்படியான பதிதல்களும் சுருக்கமான வரலாற்றுப்பதிதலே; அதன் தேவையும் இங்கே நாம் பேசிக்கொள்ளும் நிரல்களின் வளர்ச்சி, பங்களிப்பினைப் பற்றிய சரியான தகவல்களை ஆவணப்படுத்தும் நோக்காகும்.

காரணம் 2: மேலே கூறிய காரணத்தினைவிடவும் எனக்கு - ஈழத்தமிழனென்ற அளவிலே- முக்கியமாகும் இன்னொரு காரணமுண்டு. ஒரு சமூகம் தன் வரலாற்றினை இயன்றவரை தொடர்ச்சியாகவும் கோவையாகவும் (அது மிகத்திருத்தமாகக்கூட அமைய வேண்டியதில்லை) பதிந்துகொள்வதன் தேவையை ஈழத்தமிழரின் இன்றைய (வரலாற்று)நிலை உணர்த்தியிருக்கின்றது.

அண்மையிலே பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பர் சொன்னார், "எவருமே நம்ப முடியாத வகையிலே ஆண்சிங்கத்துக்கும் மனிதப்பெண்ணுக்கும் பிறந்து வந்த சந்ததியே சிங்கள (ஹெல) இனம் என்று எழுதிவைத்திருந்தாலுங்கூட, சிங்களவர்களுக்கு, அவர்களின் வரலாறென்பதைக் காலவரையறைப்படி எடுத்துச் சொல்லும் வகையிலே மகாவம்சம், சூளவம்சம் என்ற ஆவணப்படுத்துதல் தொடர்ந்திருக்கின்றது;" இது நாம் மிகவும் கூர்ந்து காணவேண்டிய கோணம். ஈழத்தமிழருக்கென்று இவ்விடத்தின் இன்னார்தான் என நிறுவமுடியாத ஈழத்துப்பூதத்தேவனாரின் கவிதையிலிருந்து வரலாற்றினைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளவேண்டிய அவலமே இன்னமும் இருக்கின்றது. அவரின் பெயரிலேயிருக்கும் ஈழம் என்பது இப்போது நாங்கள் குறிப்பிடும் ஈழமா, வேறிடமா, அச்சொல்லுக்கான வேறேதும் கருத்திலே ('பொன்' என்பது போல) வந்ததா என்றுகூட எங்களால் அறுதியிட்டுச் சொல்லமுடிவதில்லை. அதன் பின்னால், குளக்கோட்டன், குத்தன் - சேனன், எல்லாளன், யாழ்ப்பாடி, திருஞானசம்பந்தர் + சுந்தரர் தேவாரங்கள், பல்லவ_சோழ_பாண்டிய வரலாறுகள், அருணகிரிநாதர் திருப்புகழ் என்று வழிவந்த கதைகளும் பாடல்களும் அடுத்தார் வரலாறுகளும் பேசப்பட்டபோதுங்கூட, இவற்றில் எதுவுமே ஈழத்திலே தமிழர் வரலாற்றினை, அவர்களின் இருப்பின் தொடர்ச்சியினை முறையாக ஆவணப்படுத்தியதாக, ஆவணப்படுத்த உதவியதாக அமையவில்லை. தமிழ்ப்பாடல்களிலிருந்து தரவுகளை உய்த்தறிந்து வடிகட்டி, வரலாற்றினை உருக்கி வடிவமைத்துக்கொள்ளும் இரண்டாம்நிலை ஆதாரத்தினைப் பிடித்துக்கொள்ளும் அவலமே தொடர்ந்திருக்கின்றது. இதன் அவவிளைவே, பரணவிதாரண போன்றோரின் கைகளிலே இலங்கையின் 'தொல்பொருளியலாய்வும் அகழ்வும்' சென்றதும், அதன்பின்னான 'கண்டுபிடிப்புகள்' சிங்களக்குடியேற்றங்கள் முதல் இன்னோரன்ன மொழிசார் இனவமைப்பு ஒடுக்குமுறைகளுக்கு, தமிழ்பேசும் சமூகங்கள் ஈழத்திலே உள்ளாகவும் காலாயிருந்திருக்கிறன; காலாயிருக்கின்றன. தமிழ்ப்பௌத்தர்கள் இருந்திருக்கலாமென்ற வாதத்தைக்கூட முன்வைத்து, சிங்களப்பேரினவாதத்தின் வரலாற்றாக்கத்தை மறுத்துப்பேசமுடியாத நிலையிலே கந்தரோடை, வல்லிபுரம், நயினாதீவு, திரியாய் ஆகிய இடங்கள் 'பௌத்தர்கள்=சிங்களவர்கள்' என்ற சமன்பாட்டினாலே எழுதிவைக்கப்படுகின்றன. இங்கேதான் ஈழத்தமிழர்கள் சந்த்யானாவின் 'தமது கடந்த காலத்தினை நினைவுகூரமுடியாதவர்கள் எதிர்காலத்திலே அதை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்படுவார்கள்' என்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றோம். இந்நிலையிலேதான் வரலாற்றினைப் பதிவுசெய்தலென்பது வாழ்தலின் இருத்தலின் தொடர்ச்சியாக ஒரு சமூகத்துக்கு ஓர் அவசியமான அத்திவாரக்கூறாகின்றது. இன்னமும், வரலாற்றின் தேவைதான் - கடந்த காலத்திலிருந்து எமது இன்றைய நிலையைச் சரிபார்த்துக்கொள்தலும் போகும் பாதைக்குக் கடந்தகாலத்தின் தவறுகளைத் தவிர்த்தலுமே - கற்றுக்கொள்ளவைக்கின்றது; இதன் அடிப்படையிலேயே பொதுவரலாறு ஒரு பாடமாக பாடசாலைகளிலே கற்பிக்கப்படுவதும், இராணுவ,போர்வரலாறு இராணுவக்கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுவதும் அமைகிறன. வரலாற்றின் பதிவின்றி உடோல்ஸ்டோயின் பாதையிலே மோஹன்தாஸ் காந்தியும் அதன் தொடர்ச்சியாக மார்டின் உலூதர் கிங்கும் அடியொற்றி நடக்க முயன்றிருக்கமாட்டார்கள்.


ஒரு சமூகத்தின் விடுதலையென்பதும் சுதந்திரமென்பதும் இருநிலைத்தளங்களிலே நிகழலாமென்பது என் பார்வை. ஒன்று உறைவிடம்சார் பௌதீகதளத்திலே (அச்சமூகத்தின் ஒடுக்கப்படுதலுக்கெதிராக) நிகழ்வது; இன்றைக்கு இலங்கைத்தீவிலே தேடப்படும் விடுதலையென்பதும் இவ்வகை உறைவிடம்சார் இனவிடுதலையாகவே கருதப்படலாம். ('மொழிசார்ந்த' என்று சொல்லவில்லை.... சிங்களவரிடமிருந்து தமிழர்களும் தமிழர்களிடமிருந்து முஸ்லீம்களும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இங்கே 'இனம் சார்ந்த' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்கின்றேன்.) இந்த புவிசார் அரசியல் விடுதலை எய்தப்படும்போது, அதன் விளைவாக, அவ்வடிமைத்தனம் சங்கிலித்தொடராகக் கட்டிவைத்திருந்த எல்லைப்படுத்தல்களும் முறிந்து, அதன் வழிப்பட்ட எமது மற்றைய மனிதசுதந்திரங்களும் வந்துசேரும். .

அடுத்தது, உளம்சார், சிந்தைசார்தளத்திலே நிகழும் விடுதலையென்பது; இதற்குப் பௌதீக, புவியமை எல்லையில்லை. இவ்விடுதலையென்பது புவிகட்டுப்படுத்தும் வரையறைகளுள்ளே அவற்றினை முறித்துத் தனித்துவம் காண்பதற்காக நிகழ்வதல்ல. கருத்துத்தளத்திலே தன்மீதான அடக்குமுறைகளிலிருந்து தம்மை உடைத்துக்கொண்டு, விட்டுவிலகிச் சிட்டுக்குருவியாகப் பறக்கும் நோக்கிலே பிறப்பது; தமிழர் என்ற கருத்துநிலையிலே ஈழத்தமிழர், மற்றும் அவர்கள்போன்ற நிலையிலுள்ள ஏனைய உட்கூற்றுத்தமிழர்களின் தம்மடையாளங்களை, 'தமிழினை மேம்படுத்தியவர்கள் நாம்' என்ற கருத்துநிலை மேலாதிக்கத்தாக்குதலின்மூலம், கருத்துநிலை அரசியல்மூலம் இதுவரைநாள் நிலைநிறுத்தி நிற்கின்றவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு காணும் சுதந்திரம் இவ்வகைப்படும்.

மேற்கின் குடியேற்றவாதிகளை எமது சொந்தநாடுகளிலிருந்து வெளியேற்றுவதென்பது உறைவிடம்சார் சுதந்திரப்படுத்துதலென்று கொண்டால், அவர்களின் கருத்தாக்கங்களும் வரலாற்றுப்படுத்துதலுமே முற்றுமுழுதாகச் சரியென்ற கருத்துநிலையிலிருந்து எம்மை விடுவிடுத்துக்கொள்வதிலான சுதந்திரம் கருத்துநிலைச்சுதந்திரமாகும். இதே கண்ணோட்டத்திலேயே ஈழத்தமிழரின் சிந்தை மீதான மேலாதிக்கவாதிகளின் சிறைப்படுத்துதலிலிருந்து விடுதலை பெறும் நிலையையும் நான் காண்கின்றேன். இவ்விரு உறைவிடம்சார் விடுதலைப்போராட்டத்தினை ஈழக்களத்திலும், கருத்துநிலைசார் விடுதலைப்போராட்டத்தினை பல்வேறு தகவலூடகக்களங்களிலும் சமகாலத்திலேயே நிகழ்த்தவேண்டிய அவநிலைக்கு நாம் உள்ளாகியிருக்கின்றோம்.

இப்போராட்டங்களிலே எம் சுயத்தினையும் தேவைகளையும் அடையாளம் காணவேண்டும்; எம் காலம் சார்ந்த இருப்பின் தொடர்ச்சியினையும் பங்களிப்பினையும் நிறுவவேண்டும்; நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது புவிநிலை, கருத்துநிலைசார் விடுதலைகளை, ஈழத்தமிழரென்று கொண்டிருக்க நாம் ஆரம்பித்துச் செய்யவேண்டியது இதுதான்: "ஈழத்தமிழரின் சிங்களம் அண்டிய புவிசார் வரலாற்றோடு, கருத்துநிலைசார் அகிலத்தமிழர் என்ற பெருங்கூட்டத்தினுள்ளேயும் எம் தொடர்ச்சியான இருப்பும் பங்களிப்பும் குறித்த வரலாற்றினையும் ஆவணப்படுத்தவேண்டும்." எதிர்கால வரலாறு எம்மை விடுதலை செய்யவேண்டுமானால், எம் கடந்த கால வரலாற்றினை நாம் விடுதலை செய்தாகவேண்டும்; தங்கிநிற்கும் மோழைத்தனமும் இரண்டாம்நிலைச்சமூகமென்ற தாழ்வுணர்வும் நீங்கும்படியாக, மற்றவர்களுக்கீடான எமது சாதனைகள், பங்களிப்புகள் பதியப்பட்டாக வேண்டும்.

இப்படியாக, எதிர்கால இருத்தலை, சமூகத்திலே எமக்கான பங்கை நிச்சயப்படுத்தும் நோக்குடனேயே, நாம் இங்கே தமிழரின் வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழிணையவரலாற்றினையும் காணவேண்டும். மகாவம்சமும் பரணவிதாரணவும் அடித்துப்போட்டுப் போட்டு நிலையற்று அலையும் ஈழத்தமிழரின் கடந்த புவிசார்வாழ்வுக்கு ஈடான ஓர் இரண்டாம்நிலை(இணைய)த்தமிழ்வாழ்வினையே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' என்ற சொல்லாடல், இச்'சுதேசமித்திரன் பாரம்பரிய'த்தை, அதைச் சார்ந்திருக்கின்றவர்களின் கதைகளுக்கு அப்பாலான எத்தமிழருக்கும் வழங்கும். மாலன் + லேனா தமிழ்வாணன் போன்றோரின் "வெறும் ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் என்பதைக் கொடுத்தவர்கள் நாம்" என்ற சொற்றொடர் வெறுமனே எஸ். பொன்னுத்துரை என்னும் ஒருவரின் நாவடக்கமுடியாத எதேச்சைப்பேச்சுக்கான எதிர்வினையென மட்டுமே கருதிவிட்டுப்போகமுடியாது. அக்கூற்றின் அடியிலேயிருக்கும் குமுதம்+கல்கண்டு ஆசிரியர்களின் நுண்ணரசியல், எம் சிந்தைத்தளத்தினை, அவர்கள் தருவதே வரலாறு என்ற கருத்துநிலைத்தளத்திலே அடக்கி ஒடுக்கும் தன்மையிலேயே எள்ளலாக வெளியிட்டுக் கக்குகின்றது.

இன்றைய காலகட்டத்திலே அச்சு ஊடகங்கள், கேள்காண் ஊடகங்கள் இவற்றினை வளைத்துப்போட்டு அவற்றின் 'ஆசிரியரிடமிருந்து --> வாசகர்களுக்கு' என்ற ஒற்றைத்திசைச்செயற்பாடுகளைத் தம் விருப்பப்படி இயக்கும், தோற்றம் தரச்செய்யும் விதமாக கைகளிலே வைத்துக்கொண்டிருக்கின்றவர்கள், இணையத்தின்பால் மிகவும் அவதானமாக அடுத்த நிலைக்கு நகர்கின்றார்கள்; இதன் வழிப்பட்டதே, தமிழ் பேசும் இணையமும் அவர்தம் இயக்கத்தின்படி பொம்மலாட்டமிட வைக்கும் நோக்குடன், இவர்கள் நகரும் திசைதான், "தலையும் முண்ட அவயவங்களும் உங்களிடமேயிருக்கட்டும்; கழுத்தின் கட்டுப்பாட்டைமட்டும் எம் கைகளிற் கொடுங்கள்" என்பதற்கொப்பாக, வலைப்பதிவுகள் எப்படியாக நெறிப்படுத்தப்படவேண்டும், இயக்கப்படவேண்டும் என்பவற்றின் மீது தம் கருத்துகளைச் சாணக்கியத்தனமாக வரையறுத்து மாலன் போன்றோர் முன்வைக்கும் கருத்துகள். இவற்றுக்கு ஆதரவாக, தம் ஆள்தலுக்கு, நெறிப்படுத்துதலுக்கு வசதிசெய்யும் இருக்கைகளை இணையத்திலே அமைத்துக்கொள்ள, தமக்குச் சாதகமான 'நீண்டகாலப்பாரம்பரிய'த்தினை வடிவமைக்கின்றனர்; சாதுரியமாக, இணையத்திலே தமிழுக்கான தம் பங்கினை 'இன்னாருக்கு இணையத்திலே தமிழ்ப்பொறி' படச்செய்தோமெனத் தம்மை முற்படுத்தும் பண்பும், 'வலைப்பதிவுவரை தொடரும் சுதேசமித்திரன் பாரம்பரியம்' போன்ற கருத்தாடல்களும் வாசிப்போரின் உளத்தளத்திலே நுணுக்கிப் பதிந்துகொள்ள இடமாகின்றது. (மாலன் போன்றோரின் பிரபலம், அவரின் கருத்துகளை ஆராய்ந்து சரிபிழை பார்க்காமலே, எத்தனை வாசகர்களை நம்பவைத்திருக்கின்றதென்பதை அவரின் இணையம் பற்றிய கருத்துப்பதிவுகளுக்கு, மற்றும், எனக்கான எதிர்வினை இடுகைகளுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களே தெரியப்படுத்துகின்றன.)

இப்பின்புலத்திலேயே மாலன் கூறிய தரவுக்கருத்துகளுக்கான எமது மாற்றுத்தரவுகளை முன்வைத்து, இன்னொரு திருத்தமான கண்ணோட்டத்திலே வரலாற்றினைக் கூறி எம் கருத்துநிலைத்தமிழர் விடுதலையைப் பெற வேண்டியிருக்கின்றது. ஆறுமுகத்துக்கு புகழ் அவருக்கு ஆதீனம் கொடுத்த நாவலர் பட்டத்தினாலல்ல. அவரைப் போன்றவர்களின் செயற்பாடுகளே அப்படியான ஒரு பட்டத்திற்கான தேவையினை, இருப்பினை உருவாக்கியிருக்கின்றதென்ற மறுதலைநிலைதான் உண்மை; நாவலர் என்ற பட்டமின்றியிருப்பதால், ஆறுமுகத்தின் திறமையிலே ஏது பங்கமும் ஏற்பட்டிருக்காது; ஆனால், ஆறுமுகம் போன்ற திறனாளர்களில்லாவிட்டால், 'நாவலர்' என்ற பட்டம் தக்கித்திருக்குமா? அங்கே உண்மையிலே பேசப்படவேண்டியது, நாவலர் என்ற பட்டத்துக்கு இருப்பை நாவலர் கொடுத்ததேயொழிய, ஆறுமுகத்துக்குப் பின்னால் நாவலர் ஒட்டிக்கொண்டதல்ல. ஆனால், அந்த தொப்புட்கொடியாக, சேயாக அங்கிகாரத்தினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கருத்துநிலைத்தமிழ்க்கைதிகளான ஈழத்தமிழரிடையேயேனும், மாலன் போன்றோர் "நாவலர் என்ற பட்டத்தைத் தந்தோம்" என்று ஏற்படுத்தும் மயக்கத்தினைத் தெளியவைத்து, அங்கீகார எதிர்பார்த்தலிலிருந்து கருத்துவிடுதலை செய்ய நாம் வரலாற்றினை மீண்டும் சொல்லவேண்டியதாகவிருக்கின்றது.

தமிழக-ஈழத்தமிழரிடையே தொப்புட்கொடி உறவிருக்கவில்லை என்பதை நான் அவ்வகையிலேயே மாலனுடன் சேர்ந்து ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அப்படியாக ஒத்துக்கொள்வதற்கான என் காரணம், அவருடையதற்கொப்பானதல்ல; தாய்-சேய் உறவென்பதிலும்விட, ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளே ஈழம்-தமிழகம் ஆகியவற்றின் தமிழ்ச்சமூகங்களென்ற எடுகோளின்பாற்பட்டதாகும். இரு தொப்புட்கொடிகளைக் கொண்டு சமகாலத்திலே ஒரு தாயிடமிருந்து பிறந்த குழந்தைகளென்பதே சரியானதாகும். ஆறுமுகத்துக்கு நாவலர் என்பதிலும், பரிதிமாக்கலைஞர் கொடுத்த 'வசனநடைகைவந்த வல்லாளர்'1 என்பதிலும் சிலிர்த்து மகிழ்ச்சியடையும் ஈழத்தமிழர்கள், இராமலிங்கவள்ளலாரோடு ஆறுமுகம் காட்டிய நாவன்மையையினையோ, தமிழிலே முதன்முதலாக -பரிதிமாக்கலைஞர் சுட்டிக்காட்டிய,"பொருட்டெளிவும் விரைவுணர்ச்சியும்' தரத்தக்க- நிறுத்தற்குறிகளை அறிமுகப்படுத்திய திறனையோ மறந்துவிடுகின்றோம்.

சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பிய தமிழகம்போலவேதான், வீரகேசரிக்கு வந்த வரா உம், இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு வந்த இசை கற்பித்த மஹாராஜபுரம் சந்தானமும் பின்னாளிலே தமிழகத்திலே பெயர் பெறும்வரை வாழ இலங்கையும் வழிசெய்ததென்பதை 'சுதேசமித்திரன் பாரம்பரியக்காரர்கள்' மறை/றந்துவிடுகின்றார்கள். (ஒரு வலைப்பதிவு நண்பர், தாம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கர்நாடக இசைச்செல்வி ஒருவரிடம் ஈழத்தின் பிரபலமான சில இசைக்கலைஞர்களின் பெயர்களைச் சுட்டிப்பேசியபோது, "யார் அவர்கள்?" அச்செல்வி கேட்டதாகச் சொன்னார்) தமிழக ஆதீனங்களுக்கு ஆறுமுகத்தம்பிரான்களையும் ஈழம் தந்திருக்கின்றது (திருவண்ணாமலை ஆதீனம்)2; அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துக்கு விபுலாநந்தரைத் தந்திருக்கின்றது; கனகசுந்தரம்பிள்ளை, தமிழ் அகராதி கண்ட கதிரவேற்பிள்ளை ஆகியோரைத் தந்திருக்கின்றது; வி. கல்யாணசுந்தரம் சொல்வதுபோல "சுவாமிநாதையர் கூரைபோட உதவிய தமிழ்ப்பதிப்புலகுக்கு, அடிக்கல்லிட்ட ஆறுமுகத்தையும் சுவர்கட்டியெழுப்பிய தாமோதரம்பிள்ளையும்" தந்திருக்கின்றது. தமிழாராய்ச்சி மகாநாட்டினைத் தொடங்க, உழைக்க தனிநாயகத்தினைத் தந்திருக்கின்றது. (அதன் தொடர்ச்சியான தமிழாராய்ச்சி மகாநாட்டிலே சிதம்பரத்திலே ஆறுமுகநாவலரின் சிலை எழுப்பப்படும் என்று அன்றைய தமிழக அரசுத்தலைமைச்செயலர் சொல்லியும் அது தவறிப்போயிருக்கின்றது.2 தொடர்ச்சியாக, ஜெயலலிதா முதல்வராகவிருந்தபோது, ஈழத்திலிருந்து தமிழாராய்ச்சி மகாநாட்டுக்குப் போன தமிழறிஞர்களைச் சிறைவைத்த சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றது. இஃதெல்லாம் எப்பாரம்பரியத்தின் வழிப்பட்டது? சுஜாதா ரங்கராஜன்கூட "சிங்களத்தீவுக்கோர் பாலமமைப்போம்" எழுதினார். அந்நேரத்திலே மாலன் என்ன செய்தார்? கற்கண்டு இலெட்சுமணன் என்ன செய்தார்?) தமிழிலக்கியவிமர்சனத்துறையிலே மார்க்ஸிய அணுகுமுறைக்கு கைலாசபதியையும் சிவத்தம்பியையும் காலத்தே முந்தியதாக ஈழம் தந்திருக்கின்றது; தலித் எழுத்து முன்னோடியாக, 'பஞ்சமர்' டானியலைத் தந்திருக்கின்றது; கவிப்படிமத்துக்கும் ஒரு பிரமிளை, அவரைத் தமிழகத்தவரென்றே மயங்கிக்கொள்ளுமளவுக்குத் தந்திருக்கின்றது.

1882 இலே தொடங்கிய சுதேசமித்திரனுக்கு ஏறக்குறைய நாற்பதாண்டுகள் முன்னமே இலங்கை உதயதாரகையைத் தந்திருக்கின்றது. சென்னையிலே பீற்றர் பார்சிவல் தான் நடத்திய 1855 இலே நடத்திய தினவர்த்தமானி வாரப்பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த உதயதாரகையின் ஓர் ஆசிரியரான கரோல் விசுவநாதபிள்ளையையும் சி. வை. தாமோதரம்பிள்ளையையும் கூப்பிட்டழைத்து சேவைக்குள்ளாக்கியிருக்கின்றார். இப்படியே பட்டியலை வளர்த்துக்கொண்டுபோனால், தமிழ்ப்பத்திரிகை, படைப்புலகிலே "எல்லாமே சுதேசமித்திரன் பாரம்பரியம் என்பதன் தொடர்ச்சி" என்பது சுக்குநூறாகிப்போகும். இத்துணைக்கும் இங்கே என் இக்குறிப்புகளின் எல்லை ஆக ஈழத்தின் தமிழுக்கான வழங்கலை முன்வைத்துமட்டுமே; தமிழகத்திலேயே சுதேசமித்திரன் பாரம்பரியத்துக்கு மாற்றுப்பாரம்பரியமென்பவை ஒன்றுக்கு மேலாகவிருக்கின்றன. அவற்றினை அவற்றின் நீட்சியும் விரிவும், என் அறிதலின் போதாமை கருதி இங்கே தவிர்த்துக்கொள்கிறேன். இவற்றினை அறிந்து தம்மைத் தாமே இரண்டாம் தள நிலையிலிருந்து, சேய்நிலை 'தரப்படுவதை'யே பெரிதெனக் கருதிப் புளகாங்கிதம் எய்தும் கருத்துச்சிறையிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுவித்துக்கொள்ள, நாம் வரலாற்றினைப் பற்றி, அவசியப்பட்ட போதெல்லாம் மீள மீளப் பேச வேண்டியதாகவேயிருக்கின்றது.

மாலனைப் போன்றவர்கள் சுதேசமித்திரனுக்கு முன்/பின், பாரதிக்கு முன்/பின் (இன்னமும் ஈழ-இந்திய அரசியல்நிலைகளிலே இராஜீவ் காந்தி கொலைக்கு முன்/பின்) என்று காலப்பகுதிகளைப் பிரிக்க அமைகோடு போடும் புள்ளிகளும் இதே மாதிரியாக மிகவும் அவதானமாகக் கேட்கும், வாசிக்கும்போதெல்லாம் 'இவையே/இன்னார்களே மூலாதாரங்கள், மீதியெல்லாம் சார்ந்ததெழுந்தவை' என்பதான உணர்வினை உளத்தளத்திலே மறைமுகமாகத் தூண்டிப் பதிக்கும் வகையிலே அமைபவை. (கிரகோரியன் நாட்காட்டி & கிறீஸ்து ஆண்டுக்கணக்குக்கு மாற்றாக தமிழர் நாட்காட்டி & திருவள்ளுவர் ஆண்டு, இந்து, இஸ்லாமிய ஆண்டுகள் நாட்காட்டிகள் இவை பிறந்ததற்கான காரணமும் இப்படியான மாற்றுக்கண்ணோட்டத்தினையும் எதிர்நிலைகளையும் உணர்த்தவே. எமக்கும் அதுவே அத்தியாவசியமாகின்றது). எதற்காக, தமிழகத்தின் அறியப்பட்ட முதலாவது தமிழிதழிலிருந்து தமிழகத்தின் தாளிகைப்பாரம்பரியம் காலநீட்சி கருதிச் சுட்டப்படமுடியாது?

இதே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' இணையத்தளத்திலே கடை விரிக்கப்படும்போது, மீண்டும் கணிசமான பங்களிப்பினை ஆற்றிய தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரும் ஈழ, மலேசிய, சிங்கப்பூர், புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் அது வைக்கப்படும் பாங்கிலே தம் சுய அடையாளமிழப்பார்கள்; தமிழ்மறுமலர்ச்சி அடையாளத்தினை முன்வைத்துச் சங்கத்தமிழ்க்குடிநிலையை மீளக்கண்டெடுத்து, திராவிடப்பாரம்பரியம் கட்டமைக்கும் மறுமலர்ச்சித்திசையிலே சென்றதால், தமது மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாரம்பரியத்தைச் சுவாமிநாதைய்யர் பாரம்பரியமாகத் தாரைவார்த்துக்கொடுத்தவர்கள் செய்த தவற்றிலிருந்து இந்த "தமிழிலே முதல்" வரையறை செய்யப்படும் வரலாற்றுத்தவறு ஆரம்பிக்கின்றது. அச்சூடகங்களிலும் கேள்காணூடகங்களிலே தமது கிடுக்கிப்பிடியை வைத்திருக்கும் மாலன் போன்றோரின் 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' இணையத்துக்கு விரிகின்றபோது, -முதற்படையெடுப்பிலே தோற்றாலும் அடுத்தடுத்த படையெடுப்புகளிலே- இணையத்திலே "தமிழில் முதல்" என்று அவராலே கண்டுபிடிக்கப்படுகின்றவர்களின் வரலாறு தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும்வகையிலே அமைக்கப்பட்டு வந்துகொண்டேயிருக்கும்; இதனைத் தகுதியான தரவுகளோடு நாம் எதிர்கொள்ளப்படவேண்டும். தமிழினை முதலிலே இணையத்திலே ஏற்றியவர்கள், தமிழிலே முதற்தேடுபொறிசெய்தவர்கள், தமிழிலே முதல் இணையவுரையாடி அமைத்தவர்கள், தமிழிலே முதற்சஞ்சிகை அமைத்தவர்கள் இப்படியான *சரியான தரவுகளுடனான* வரலாறு -எம்முடையது உட்பட- எல்லோரினதும் சான்றுடனான மொழிப்பங்களிப்பினை உறுதிப்படுத்தி, கருத்துநிலைதமிழ்ச்சுதந்திரத்தினை எமக்கும் எல்லோருக்கும் உணர்த்துவதாக அமையவேண்டும்.

இப்படியாகவே, கருத்துநிலையிலே தமது சொந்த(த் தமிழ்)ச் சமூகத்துள்ளேயே இரண்டாம்நிலைக்குடிமக்களாக உணராதிருக்கும் சுதந்திரம்வேண்டியே எவ்வரலாற்றினையும் - தமிழர் நிகழ்நிலை வரலாற்றையோ, மெய்நிகர் இணைய வரலாற்றினையோ - நாம் திருப்பியும் திருந்தவும் சரியான தரவுகளைத் தாங்கி எழுத வேண்டிய அவசியமேற்படுகின்றது. எம் மொழி,குடி, பண்பு வரலாற்றை நாம் மாலன் போன்றவர்களின் கைகளிலிருந்து விடுதலை செய்யவேண்டியதாகின்றது. வாய்ஸ் ஆப் விங்க்ஸ் போன்ற நண்பர்களுக்கு (மீள) வரலாற்றினையெழுதலின் தேவையின்மையும் அதன் முக்கியம் உணர்வதற்கு முடியாததாக வெறும் உணர்வின் அடிப்படைப்பட்ட வெற்றுக்கூச்சலாகவும் படலாம். ஆனால், எனக்கு அப்படியாகத் தோன்றவில்லை. இணையத்தமிழ்வரலாற்றைப் பேசுவது மாலனுடன் வாதத்தினை வெல்வதற்குமப்பால், தனக்கென்றே ஒரு வரலாற்றுத்தேவை அமைந்தாயுள்ளது.

[இம்மீட்டெடுத்தலைத் தம்மளவிற் செய்தவர்கள், தம் அடுத்த செயற்பாடாக, இன்றைய நிலையிலே தம் சுயத்தினைக் காக்க, காந்தி, வ.உ.சிதம்பரம் இவர்களின் வரலாற்றினைப் பாடமாக்கிக்கொள்ளலாம்; தாமே உப்பினைக் காய்ச்சுவதும் இராட்டையிலே கதர் இழைப்பதும் கப்பல்விடுவதும் முயற்சி செய்யமுடிந்தால், பதிப்பகங்களும் ஊடகமும் தம் நிலத்திலேயே வளர்க்கும் நோக்கும் தவறானதல்ல என்பது புரியும். ஆனால், இவை தனியே பேசப்படவேண்டிய விடயம். இப்பதிலுக்குப் பெருமளவிலே சம்பந்தமில்லாததால், இங்கே தவிர்க்கின்றேன்.]



கூற்று 2: தன்னதை ஒத்த கருத்தினைச் சொன்ன எத்தனையோ பேரிருக்க மாலன் தன்னை மட்டும் நான் (-/பெயரிலி.) கேள்விகளைக் கேட்டது காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே என்று கூறியிருப்பதன்மேல்

இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுண்டு.

காரணம் 1: தமிழ்க்கணிமை தொடர்பாக தமிழ் விக்கிபீடியாவினை நான் என்றைக்குமே தேடலுக்கு அணுகியதில்லை. அதனால், அங்கே இட்டிருக்கும் தகவல்களைத் திருத்தவேண்டுமென்ற எண்ணமேற்படவே வாய்ப்பில்லை

காரணம் 2: மாலன் ஆதாரமாகக் காட்டியிருக்கும் கோவிந்தசாமியின் கட்டுரையிலே ஏதேனும் வரலாற்றுச்சந்தேகத்தினைக் கேட்பதானால், நான் யாரிடம் கேட்பது? சொல்லப்போனால், பரஸ்பர நட்பு என்பதை ஓரமாக ஒதுக்கி விட்டுவிட்டு, அக்குறித்த கட்டுரை வாசிக்கப்பட்ட கருத்தரங்கிலேயிருந்த ஏனைய கணித்தமிழுக்குப் பங்காற்றியவர்களே கோவிந்தசாமியிடம் கேட்டிருக்கவேண்டும். அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள் (என்றுதான் இதுவரை வாசித்ததை வைத்துத் தோன்றுகின்றது; வேண்டுமானால், அது வாசிக்கப்பட்டது, ஆரம்பகாலக்கருத்தரங்கொன்று என்பதாலே, இணைநிலையிலே அல்லது முதலிலே ஆங்காங்குத் தனித்தனியே செய்யப்பட்ட முயற்சிகள் கோவிந்தசாமிக்குத் தெரிந்திருக்கமுடியாததுபோலவே, மற்றைய கருத்தரங்கின் பங்காளிகளுக்கும் தெரியாதிருந்திருக்கலாம் என்றும் நாம் கொள்ளலாம்)

காரணம் 3: மாலன்(, அருணா) போன்ற ஊடகத்துறைப்பின்புலமும் பலமும் கொண்டு வருகின்றவர்கள் சொல்லும் கருத்துகள், தமிழூடகங்கள் தரும் தகவல்களை அப்படியே கேள்வியின்றிக் கேட்டுக் கடத்துகின்றவர்களின் தொகை எத்துணையென்பதற்கு மாலனின் பதிவுகளின் பின்னூட்டங்களே சான்று. (இதுபோலவே சுஜாதாவின் அம்பலம் வலையுடையாடலுக்கு வாராவாரம் தீர்த்தயாத்திரைபோலச் சென்று வந்து வலையிலே அவர் தமக்கான வரிப்பதிலிட்டதையும் பேசிப்பெருமிதப்பட்டவர்களையும் கண்டிருக்கின்றேன்)

இப்போதைக்கு உதாரணத்துக்கு மாலனின் பிரபலத்தினை நம்பி அவர் சொன்னவற்றினை அப்படியே எடுத்துக்கொண்டு போகும் வாசகர்களினால் தவறவிட்டவற்றிலே சிலவற்றினைக் காண்போம்:

நேரடியாகத் தெரியும் உதாரணங்கள் சில: -

உ+ம் 1 : கோவிந்தசாமியின் கட்டுரையிலேயே 'தமிழ் முன்னமே இணையத்திலே எழுத்துருவாக ஏறியிருந்தாலும், கோவிந்தசாமியே அதை "செழுமைப்படுத்தி" வெளியிட்டவர்' என்ற அர்த்தத்திலே சொல்லப்படும்போது, "அப்படியானால், இணையத்தின் தமிழ்பிதா என்று எப்படியாக கோவிந்தசாமியைச் சொல்வது எப்படி?" என்று ஒருவரும் அருணாவினைக் கேள்வி கேட்டதாகத் தெரியவில்லை; ஏற்கனவேயிருந்ததாகச் சொல்லும் கோவிந்தசாமிக்கு மாலன் எப்படி 'இணையத்திலே தமிழேற்றப் பொறிதட்ட'ச் செய்திருக்கலாம் என்பதைப்பற்றியும் இவ்வாசகர்கள் கேட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்நேஷன் தளத்திலிருந்து கோவிந்தசாமியின் கட்டுரையிலிருந்து தேவையான பகுதி (தடித்த எழுத்தாக்கம் நான் செய்திருப்பது)
/Tamil Eelam Page (http://www.eelam.com) was and is still very active in this direction. Tamil Nadu Home Page, and Tamil Electronic Library . (http://www.geocities.com/Athens/5180/index.html) are other popular Tamil Web Sites on Internet at that time. Tamil Electronic Library was using (and is still using) a mono 7bit font (Mylai) for the Tamil display on the Web.However, Mylai font cannot support native emailing at that time.
So there was a need to develop a Tamil Internet System which should go beyond Web display.
In May 1995, I met Dr Tan at the Technet Unit, National University of Singapore, soon to become the Internet Research and Development Unit (IRDU) (now upgraded to Centre for Internet Research). We identified the potential solutions and agreed for a possible research collaboration between NUS and my institution, NIE, NTU, the two instititutions of higher learning in Singapore at that time. /
நிலை இப்படியிருக்க, இன்றைக்கு ஆங்கில விக்கிபீடியாவரைக்கும் 'தமிழிணையத்தந்தை கோவிந்தசாமி' என்று எழுதப்பட இப்படியான கேள்வியெழுப்பாததும் விமர்சனத்தன்மையற்ற பிரபலமானவர்களின் சொற்களை அப்படியே நம்பி மலட்டுவாசிப்புச் செய்து அசைபோட்டு மீட்டும் மந்தைத்தன்மையுமே வழியமைத்திருக்கின்றன.

உ+ம் 2: மாலன் தந்திருக்கும் ஐந்து ஆதாரத்தரவுகளிலே, குறைந்தது மூன்று ஆதாரங்கள், ஒன்றிலிருந்து மற்றொன்று வருவிக்கப்பட்டதாக வெளிப்படையாகத் தெரிகின்றன. ஆனால், இவ்வெள்ளிடைமலையை ஏன் அவரின் "ஆமாம் சார்" வாசகர்கள் காணமுடியவில்லை? கோவிந்தசாமியின் கட்டுரையிலிருந்து ஆல்பேர்ட்டும் அதிலிருந்து விக்கிபீடியாவும் எடுத்துப்போட்டிருப்பதை மாலனின் "அன்புள்ள பெயரிலிக்கு" இடுகையைத் தொடர்ந்து வாசிக்கும் எவருமே உணர்ந்துகொண்டிருந்திருக்கலாம்.

உ+ம் 3: வருவிக்கப்பட்ட விக்கிபீடியாவின் தரவினை யாராவது முதலாவது ஆதாரமாகத் தரமுடியுமா என்று யோசித்துப்பார்த்தார்களா?

உ+ம் 4: இணையத்திலே உடனடியாகத் தமிழினை ஏற்றிவிடத் துடிக்கும் வகையிலே சிங்கப்பூரிலே தன்னிடம் இணையம் பற்றிப் பொறிபடச் சொன்ன மாலனைப் பற்றி, இணையத்திலே தமிழ் ஏற்றிய தன் மகாநாட்டுக்கட்டுரையிலே ஏன் கோவிந்தசாமி சொல்லவில்லை என்பதும் எவருக்கும் கேள்விக்குரியதாகத் தோன்றவில்லை.


கொஞ்சம் தேடி முயன்றிருந்தால், (மாலனும் தன் தவறினை ஒப்புக்கொள்ளும்படி) அவரின் இணையவரலாற்றினைப் பாராட்டும் வாசகர்கள் கண்டிருக்கக்கூடிய உதாரணங்கள் சில: -

உ+ம் 5: கணியன்/தமிழ்நெட் என்பன கோவிந்தசாமியின் விசைப்பலகை/எழுத்துரு இணை; அதற்கும் கணியன் இதழுக்கும் கணியன் பூங்குன்றனாரின் கவிதைக்கும் வித்தியாசங்கள் உண்டென்பது எனக்குத் தெரியாமலில்லை. அதேபோலவே, தமிழ்நெட் என்ற பாலா பிள்ளையின் மின்னஞ்சற்குழுவிலே 96 இன் பின்னரையிலிருந்து இருந்தேன் என்பதால், அதற்கும் (அது பயன்படுத்திய முரசு-அஞ்சல்/இணைமதி எழுத்துருவிணைக்கும்) தமிழ்நெட் எழுத்துருவுக்கும் உள்ள வித்தியாசம் எனக்கும் தெரியும். கோவிந்தசாமியின் நண்பரும் உத்தமம் அங்கத்தவருமான மாலனுக்கு கோவிந்தசாமியின் எழுத்துரு தமிழ்நெட் என்பதைக்கூடத் தெரியவில்லையென்பது சோகமான விடயம்.

உ+ம் 6: ஆல்பேர்ட் சிங்கப்பூரின் தமிழிணையக்கருத்தரங்கிலே கோவிந்தசாமி குறித்த தன் கட்டுரையை வாசித்ததாக மாலன் சொல்கின்றார். மாலன்கூட கலந்து கொண்ட அக்கருத்தரங்கிலே ஆர்பேர்ட் அக்கட்டுரையை வாசித்தாரா? ஆல்பேர்ட் தன் கட்டுரையை எழுதியது, உத்தமத்தின் மின்மஞ்சரியிலே தோன்றி, பின்னால், அவர் தான் நடத்திய ஈ-சங்கமம் என்ற இணையவிதழின் ஏழாம் இணையத்தமிழ்ச்சிறப்பிதழுக்காக மட்டுமே இடப்பட்டதென ஞாபகம். அதே இதழிலேயே மாலனும் இராம. கி உம் கட்டுரைகள் எழுதியிருந்தார்கள் என்பது மேலதிகத்தகவல். Tamil Nation தளத்திலே ஓரிடத்திலே தவறாகச் சொல்லப்பட்டிருப்பதை அப்படியே எடுத்துப் போட்டதால் ஏற்பட்ட பிழை இஃதில்லையென்றால், ஏழாவது தமிழிணையக்கருத்தரங்கிலே சிங்கப்பூரிலே வாசிக்கப்பட்டதாவென மாலன் உறுதிப்படுத்தலாம்.

இதுபோல, இலகுவிலே தகர்ந்துவிடக்கூடிய, ஓட்டை நிறைந்த பாத்திரங்களிலே (பின்னைய இடுகைகளிலே இவை பற்றியும் மேலதிகமான புது ஆதாரங்கள் பற்றியும் மேலும் விபரமாக எழுதுவேன்) நீர் நிரம்பியிருப்பதாக "சார், நல்ல விளக்கம்!", "இ-தமிழின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி" என்று வாசகர்களை எண்ண வைத்துக்கொண்டு நகரவைப்பது, மாலனுக்குச் சாத்தியப்படுகின்றதென்றால், அதற்கு அவரின் புன்புலம் தந்த பிரபலமே காரணம். இப்பிரபலம் வாசகர்களிடையே பரப்பக்கூடும் வரலாற்றுப்பிறழ்வுகளை, மாலன் நான் ஏன் கேள்வி கேட்டிருக்கக்கூடாதென வினாவிச் சுட்டும் மற்றவர்கள் (இணையத்தமிழ் குறித்த விடயங்களிலே தமிழ்விக்கிபீடியா நண்பர்கள், ஆல்பேர்ட் போன்றோர்) விட்டிருந்தால், தப்பித்துப்போகமுடியாது; சொல்லப்போனால், அவர்கள் சரியாகச் சொன்னாலுங்கூட, மாற்றுக்கருத்துகள், முரண்படும் தரவுகள் தென்படுகின்றதா எனத் தேடுகின்றவர்களே அதிகமாகவிருப்பார்கள். அதுவும் மாலன் போன்றவர்களின் வரலாற்றினைத் திருத்த முயற்சிக்கும்போது, "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது", "காய்த்த மரத்தில் கல்லெறிவது நல்லதுதான் போலும்; இல்லையெனில் இத்தனை 'கனிகள்' விழுமா என்ன ..?", என்று கண்ணைமூடிக்கொண்டு வருகின்ற நிலைதான் எம்மிடையேயிருக்கின்றது.

சுஜாதா குறித்து வெங்கட் எழுதியிருக்கும் பதிவும் இரவிசங்கர் சொன்ன கருத்தும் 'பிரபல்யம் தரும் இப்படியான வரலாற்றுப்பிறழ்வுப்பிரச்சனை' பற்றிய என் கருத்தினை மேலும் பலப்படுத்தும்.

ஆக, மாலன் என்பவர் பேசும்போது, அவரிடம்மட்டும் நான் கேள்விகளைப் போட்டதற்கான மூன்றாவது காரணம், இப்படியான வரலாற்றுப்பிறழ்வே வரலாறென வாசகரிடையே வாசகரால், மாலனின் வசனங்களாலே இறுகிப்பதிந்துபோகும் இலகுத்தன்மையை ஆரம்பத்திலேயே தகர்த்து சரியான அத்திவாரமிட்டு நேரே நிமிர்த்தவேண்டுமென்பதாலேதான்.

காரணம் 4: இந்த நான்காவது காரணம் எனக்கு - ஈழத்தமிழனென்றளவிலே - மிகவும் அவசியமானது. மாலன் என்ற பத்திரிகையாளரை, சஞ்சிகையாசிரியரை, தொலைக்காட்சிச்செய்தியாளரை அவரைக் காசு கொடுத்து அச்சுவடிவமாக, ஓரளவுக்குச் காண்கேள் செய்தியாக நான் வாசித்திருக்கும் கடந்த இருபத்தெட்டு ஆண்டுக்காலத்திலே முதன் முறையாக நான் கேள்விகளைக் கேட்டு அவர் உலகலாவிய பல இலட்சம் வாசகர்களிலே ஓர் ஈழவாசகனாக எண்ணிக்கொண்டு, தப்பிப்போகமுடியாத சூழலை இந்த இணையம் ஏற்படுத்தித்தர, எனக்குக் கேள்விகள் கேட்கவேண்டியிருந்த புள்ளிகளிலே அவரே தன் கருத்துகளைச் சொல்லி முடுக்கிவிட்டு வாய்ப்பினைத் தந்திருப்பது. மாலனின் ஈழம்-இந்தியா தொடர்பான நிலைப்பாடு, அரசியல், எனது ஈழம்-இந்தியா தொடர்பான நிலைப்பாடு, அரசியல் என்பவற்றினையும் கடந்து, ஓர் ஊடகவியலாளரை அவரின் சேவைக்கு இருபத்தெட்டாண்டுகள் ஏதோ விதத்திலே அப்போதும் இப்போதுமாக சொந்தப்பணம் தந்து பெற்றுக்கொண்டிருக்கும் (ஒரு தமிழ்ச்சமூகத்தின்) ஒரு வாசகன், பயனாளி அவர் பதில் சொல்லாமல் தப்பிக்கமுடியாத தளத்திலே, வகையிலே கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் இது. இப்படியான தேவை எனக்கு விக்கிபீடியாவினரிடமோ ஆல்பேர்ட்டிடமோ கோவிந்தசாமியிடமோ இல்லை; இராமிடமிருக்கின்றது, சோவிடமிருக்கின்றது, ஜெயக்காந்தனிடமிருக்கின்றது; மாலனிடமிருக்கின்றது. மாலனிடம் இணையத்தமிழுக்கு அப்பாலும் கேட்கவேண்டிய கேள்விகளிருக்கின்றன; அதற்கான களத்தினை அவர் செல்வநாயகியின் பதிவிலும் தமிழ்சசி போன்றோரின் முன்னைய பதிவுகளிலும் எனக்கான எதிர்வினையாகவும் ஏற்படுத்தியிருக்கின்றார். அதனாலேயே தேர்ந்தெடுத்தேன்.

அவருக்கான அரசியற்கேள்விகளை இங்கே இவ்விடுகையிலே எழுப்பவில்லை; இத்தொடரிலே பிறகு வரும் இடுகைகளிலே பார்த்துக்கொள்ளலாம். ஆனால், நான் மேலிருக்கும் பந்தியிலே அவரிடம் கேள்வி கேட்பதற்கான காரணமாகச் சொன்னதன் பின்புலத்தினையும் தேவையையும் மேலும் விரிவாக்கி, நிகழ்வுகளின் சுருக்கமாகச் சொல்லவிரும்புகிறேன்.

கொஞ்சம் பின்னோக்கி எழுபதுக்குப் போவோம். ஊரிலே எனது வீட்டினைச் சுற்றிய பகுதியிலே அப்பகுதியினரிடம் மாதாமாதம் சேகரிக்கப்படும் தொகையை வைத்துக்கொண்டு, தினசரி, சஞ்சிகைகள், நூல்கள் வாங்கி நடத்தப்படும் நூலகம். இதுபோலவே பத்துப்பன்னிரெண்டென ஊருக்குள்ளே நூலகங்கள்; தவிர, தனியவே தத்தமது வாசிப்புக்காக, வீடுகளிலே வாங்கும் சஞ்சிகைகள்; எழுபதுகளின் ஆரம்பத்திலே அம்புலிமாமாவோடும் கட்டப்பட்ட கண்ணன் தொகுப்புகளோடும் சிறுவர் உலகம் எனக்கும் என் வயதொத்தவர்களுக்கும் விரிந்தது. அம்புலிமாமா வகையிலே வந்த இலங்கையின் நட்சத்திரமாமாவினை ஒதுக்கினோம். பின்னர், எழுபதுகளின் பின்னரையிலிருந்து, மிஸ்டர் வேதாந்தம், துப்பறியும் சாம்பு, தில்லானாமோகனாம்பாள், பொன்னியின் செல்வன் தொடக்கம், வரும் அத்தனை தமிழ் குடும்ப, 'பெண்', சினிமா, சிறுவர் இதழ்களோடு, பெமினா, இலஸ்ரரேட் வீக்கிலி, பிலிமாலயா ஈறாக அடங்கும் உலகமாக விரிந்தது. இதயம் பேசுகிறது, மயன், குங்குமம், சாவி, திசைகள், வண்ணத்திரை, மங்கையர்மலர், ராணி, அலிபாபா, ராணிமுத்து, கல்பனா, மாலைமதி, கல்கண்டு, துக்ளக், முத்து & வாசு காமிக்ஸ்கள் உட்பட்ட திரிசியம் தெறிக்கும் வானவில்வகை தமிழக, இந்தியப்பதிப்புகளையும் உற்பத்திகளையும் காசைவிட்டு வாங்கித்தள்ளினோம்; 'இதயம் பேசுகிறது' வேங்கடசுப்பிரமணியன் இலங்கை வந்துபோனபோது, எங்கே நம்மூரைப் பற்றியும் ஏதேனும் குறிப்பு இவ்வாரமேனும் வருமா என்று காத்திருந்தோம். .. காத்திருந்தோம்.... காத்திருந்தோம்.... அவர் எழுதாமல் ஏமாற்றியபோதுங்க்ட, அவர் ஆனந்தவிகடனிலிருந்து லட்சுமி சுப்பிரமணியம், மாயாவுடன் சென்று நடத்திய அந்த இதயம் பேசுகின்றது இதழினையும், அவர் பதிப்பித்துத்தள்ளிய அத்தனையையும் வாங்கினோம். ஆனால், ஈழக்கவிஞர்கள், படைப்பாளிகளை இன்னாரெனச் சிலர் அறிந்திருந்தாலுங்கூட, பெரிதளவு ஊக்குவிக்கவில்லை. அதன் பின்னால், எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரே, பிரமிள் என்னும் ஒரு கவிஞர் தமிழகத்திலேயிருக்கின்றார் என்று தெரிந்தது, அதற்குப் பின்னும் மூன்றாண்டுக்குப் பின்னர்தான் அவர் எம் தெருக்காரராகப் பிறந்து வளர்ந்திருந்து தமிழகத்துக்குப் பெயர்ந்தவர் என்பதும் தெரிந்தது. ஆனாலும், அதைப் பற்றியேதும் அச்சமும் நாணமுமுறாமல் இந்திய இராணுவக்காலத்தின் செயற்பாடுகளின்போதும் அதன் பின்னும் எம்மைத் திட்டித் தள்ளிய, இந்திய இராணுவத்தின், அரசின், இந்தியத்தூதுவரின் அத்துமீறல்களைப் பற்றி ஒரு குண்டூசிச்சத்தமோ சொல்லோ எழுப்பாதும் அழகிகள் வண்ணப்படங்களுடம் மினுமினுங்கி வந்த தமிழகத்தின் புதுபுதுச்சஞ்சிகைகள் பத்திரிகைகளையும் வாங்கினோம். எண்பத்தேழிலிருந்து (என்று ஞாபகம்; சரியாகத் தெரியவில்லை) தொண்ணூற்றி இரண்டு வரைக்கும் உழைக்கத்தொடங்கிக் காசு கை கண்டபோது, சொந்தக்காசைவிட்டே இந்தியா ருடே, துக்ளக்(, சரிநிகர்) இவற்றினை எங்கள் அயல் நூலகத்துக்கு நானே எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.

இந்திய இராணுவம் குறித்து எவ்விதமான விமர்சனத்துக்கும் உட்படுத்தாது, ஈழத்தமிழருக்கு எது வேண்டுமென்று தாமே தீர்மானித்துக்கொண்ட துக்ளக் போன்ற சஞ்சிகைகளை இறக்குமதி செய்து சொந்தக்காசினை விட்டு வாங்கிக்கொண்டபொழுதிலேதான், இந்திய இராணுவம் ஈழத்தமிழரின் நலனுக்காக வந்திருப்பதாக, இந்திய இராணுவ ஆதரவுச்செய்தியூடகங்களிலே ஜெயக்காந்தன் என்பவரும் மாபொ சிவஞானகிராமணியாரும் எங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதுதான் முரண்நகை; ஜெயக்காந்தனையும் சிவஞானத்தினையும் விட்டு ஈழத்தமிழருக்குச் சொல்லக் காரணம், அவர்கள்மீதான ஈழத்தமிழருக்கான இலக்கியப்பரிச்சயம் என்பதுதான். காசை விட்டு அவர்களின் படைப்புகளையும் உரைகளினையும் கேட்ட் ஈழத்தவர்களை அவர்களுக்குப் பரிச்சயமிருந்திருக்குமா என்பது இன்றைக்கும் எனக்குள்ளே கேள்விக்குறியே. இப்படியாக, ஜெயக்காந்தன் சொல்லிக்கொண்டிருந்த வேளையிலேதான் அவரை ஆண்டாண்டுக்குப் புண்ணியயாத்திரையாகப் போய்த் தரிசித்து வந்த டொமினிக் ஜீவா பாடசாலையிலே பிள்ளைகள் பயன்படுத்தும் தாள்களைப் போன்ற கடதாசியிலேனும், தன் மல்லிகையைப் பிழைக்க வைக்கமுடியுமா என்று வழி பார்த்துக்கொண்டிருந்தார். ஜெயக்காந்தன் அதைப் பற்றி எதையும் வானொலியிலே எங்களுக்குச் சொல்லவில்லை. எல்லாம் முடிந்து பதினைந்து ஆண்டுகளின்பின்னால், "இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளோடு மோதாமல் திரும்பி வந்திருக்கவேண்டும்" என்ற விதத்திலே ஐங்கரநேசனுக்குச் செவ்வி கொடுக்கின்றார்.3

ஆனால், இப்படியான காலத்திலெல்லாம், குமுதம், இந்தியா ருடே, அவுட்லுக், புரொண்ட் லைன் முதல் எங்களை(யும்) வாசகர்களாகக் கொண்ட சஞ்சிகைகளோ இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைப் பற்றி ஒரு வசனமேதும் உதிர்க்கவில்லை; புத்தகவாசனைக்காற்றிலேகூட விசனிக்கக்கூட இல்லை. மீள மீள தம் அரசின் நிலைப்பாட்டினையே பாடிக்கொண்டிருந்தன; எங்களின் தவறுகளாக தமது செயற்பாடுகளைச் சுமத்தி அவ்வப்போது தேவைக்கேற்ப நியாயப்படுத்திக்கொண்டிருந்தன; அல்லது, பேச்சேயில்லாமலிருந்தன. நாங்கள் தொடர்ந்து குமுதம், இந்தியா ருடே, துக்ளக், கல்கண்டு, கல்கி ஆகியவற்றைச் சலிக்காமல் அகதிக்காசு வந்தபோதும் விட்டு வாங்கிக்கொண்டேயிருந்தோம். ஆக, எம் நிலையைப் பேசியவர்கள் நாங்கள் ஒருபோதும் வாங்கவே எண்ணியிருக்க வாய்ப்பில்லாத, அறிந்திருக்காத ஓரிரு இந்தியச்சிறுபத்திரிகையாளர்களும் பதிப்பாளர்களுமே.

தொண்ணூறுகளின் பின்னால், புலம்பெயர்ந்த ஈழத்தவரினைக் குறி வைத்த பெருவணிகச்சஞ்சிகைகள் அவதானமாக ஈழத்தவர்கள் என்ற பெயரிலே அரசியல் சாராத அல்லது அரசியற்சோரம்போன அல்லது விடுதலைப்புலிகளுக்கெதிரான நிலைப்பாடுள்ள அல்லது இந்திய ஆதரவுநிலைப்பாடுள்ள புலம்பெயர்ந்தவர்களை ஈழத்தவர்கள் என்ற பெயரிலும் ஈழத்தவரின் பன்முகத்தலைமைகள் என்ற பெயரிலும் முன்னிலைப்படுத்தின. குமுதம், யாழ்மணம் என்பதினை வெளியிட்டபோது, கேட்காமலே அள்ளிப்போட்டவற்றினை விட்டால் [எப்படி எனக்குத் தெரியுமென்றால், நான் உயிர்நிழலிலே எழுதிய ஒரு கோழிமுட்டைத்துக்கடாவை அள்ளிக் கவிதை என்று வகை பிரித்துப்போட்டதனாலேதான்], மிகவும் கவனமாக, ஈழத்திலே அப்போதும் வாழும் தமிழர்களின் படைப்புகளைத் தவிர்த்துக்கொண்டன. அரசியலை மிகவும் இலகுவாக இராஜீவ் காந்தி கொலைக்கு முன்னால்/பின்னால் என்பதாக மட்டுமே நிலைப்படுத்திக்கொண்டு செயற்பட்டன. அப்போதுங்கூட, புலம்பெயர்ந்தும் பெயராதிருந்தும் குமுதம், இந்தியா ருடே, துக்ளக் இவற்றினை வாங்கிக்கொண்டு மேலதிகமாக சன் தொலைக்காட்சிக்கும் செய்மதியுணர்தி பொருத்திப் பார்த்துக்கொள்ளத் தொடங்கினோம் - எல்லாமே எம் சொந்தக்கையிருப்பினை விட்டுத்தான்.

அதேநேரத்திலே, எங்களுக்கு, சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலருக்குப் பட்டம் கொடுக்கப்பட்டதை இதே சஞ்சிகைகளின் ஆசிரியர்களே எடுத்துச் சொன்னார்கள். அதன் பின்னால், பத்தாண்டுகளிலே பார்த்தால், அதே லேனா தமிழ்வாணனின் அண்ணன் ரவி தமிழ்வாணன் ஈழம், புலம் அனைத்திலும் அலைந்து பதிக்க, "சோளங்கதிர் ஐந்து வாங்கினால், ஒன்று இலவசம்" என்ற வகையிலே படைப்பாளிகளைத் தேடிப்பிடித்தார். இந்திய பதிப்பகங்களோ, பத்திரிகை+சஞ்சிகைகள், திரைப்படங்கள் பெரிதான பொருளாதார அளவிலே ஈழத்தமிழரையோ புலம்பெயர்ந்தவர்களையோ நம்பியில்லை என்பதை அறிவேன். ஆனால், ஆனந்தவிகடன் தொடங்கிய காலத்திலிருந்து எமது கைப்பொருளைவிட்டு வாங்கிய இச்சஞ்சிகைகளோ ஊடகசேவைகளோ தம் நாட்டின் மீதான குற்றங்களை முற்றாக மறைத்துவிட்டும் ஈழத்திலான தம் நோக்கத்தினைத் தம் நாட்டின் அதேமொழிபேசும் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தாமலுமிருந்துவிட்டு (திரித்ததையும் சேர்த்துக்கொள்ளலாம்), தொடர்ந்தும் எம்மை வாடிக்கையாளராகக் கொண்டிருப்பது, எம்மைப் பற்றிய இவர்களின் உட்கருத்தினை மிகவும் தெளிவாகக் காட்டிவிடுகின்றது.

எமது கருத்துகள் இந்திய இராணுவத்தின் இலங்கைக்கான வருகையின் பின்னால், ஒருபோதும் இச்சஞ்சிகைகளிலே, ஊடகங்களிலே தெரியப்படுத்தப்பட்டதில்லை. கிட்டத்தட்ட ஈராக்குக்குப் படையினரோடு சென்ற அமெரிக்கப்பத்திரிகையாளர்கள்போலவே தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்கள் செயற்பட்டுக்கொண்டார்கள். இராம், மாலன், சோ போன்ற இதழாசிரியர்கள் இன்னமும் ஒரு படி மேலே சென்று இந்த அரசியலிலே தமக்கான ஒரு நிலைப்பாட்டினைக்கூட எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு அப்படி எடுக்க இருக்கும் உரிமையை எவ்வகையிலும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர்களாகவிருக்கும் ஊடகங்கள், சஞ்சிகைகள், செய்திநிறுவனங்களிலே பணம் விட்டு வாங்கிக் காணும் எல்லா வாசகர்களுக்கும் பேதமின்றிக் கருத்தினைச் சொல்லும் சந்தர்ப்பத்தினையும் செய்திகளைச் சரியான தரவுகளோடு எவருக்குச் சாதகம்-பாதகம் என்றில்லாமலே தந்திருக்கவேண்டும். ஆனால், ஒருபோதும் செய்யவில்லை. எங்கள் குரலைக் கேட்கவிடவில்லை.

இப்படியான பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர்களுக்கு பிரபல இந்திய ஊடகவியலாளர் ஒருவர் காஷ்மீரை முன்னிலைப்படுத்தி இந்தியா-பாக்கிஸ்தான் மக்களைக் குறித்து ஊடகங்களின் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்திச் சொன்னதை இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்; "...before talking of any political solutions, misgivings have to be cleared. An average Indian especially from the south sees Kashmir only on TV or in the paper and perceives Kashmiris to be unpatriotic or ungrateful. Perhaps the media is responsible for this portraiture. This has to be rectified. Possibly a similar situation prevails with reference to Pakistan. There is a very colonial mindset with a series of biased perceptions against each other. Without clearing the air, it is not possible to put forward a solution. There is a very large constituency for peace and this has to be strengthened before moving towards any solution. And, yes, there is definitely a need for more interaction with Kashmiri journalists..." இத்தகைய களநிலையை, உண்மைநடப்பினை, தமிழ்நாட்டின், இந்தியாவின் பத்திரிகையாளர்கள் தம் உற்பத்தியினைத் தொடர்ந்து வாங்கும் ஒரே மொழி பேசும் ஈழத்தமிழருக்காக, அவர்களின் குரல்களையும் கேட்டு, தமது சொந்தநாட்டிலிருக்கும் வாசகர்களுக்கும் அடுத்த பக்கத்தினைச் சொல்லியிருக்கச் செய்திருக்கவேண்டிய அவசியமும் வாய்ப்புமுள்ள பத்திரிகைநெறியும் வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தவேண்டிய கடப்பாட்டு வியாபாரநெறியுமிருந்திருக்கின்றன. ஆனால், மாலன், லேனா போன்ற ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள் செய்யவில்லை. எங்கோ ஆங்கிலம் பேசும் அமெரிக்கா அரபு பேசும் ஈராக்குள்ளே நுழைவதற்காக யுத்தத்தினை எதிர்த்துக் குரல் எழுப்பி தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும் ஆர்ப்பாட்டம் பண்ணுவதிலே மும்முரமாகவிருந்திருக்கின்றார்கள். யாரோ ஆங்கிலம் பேசும் அமெரிக்க ஊடகவியலாளர்களிலே ஓரிருவரேனும் விழித்துக்கொண்டு, அரபுத்தேசத்திலே அபு கிராப் பற்றியோ, அமெரிக்க இராணுவத்தினர் சிலரின் ஈராக்கியப்படுகொலைகள், பாலியல்வன்புணர்வுகள் பற்றிப் பேசும்போதும், அந்த அழுத்தத்திலே அமெரிக்க அரசு சம்பந்தப்பட்டவர்களிலே விசாரணை நடத்தும்போதும் நியாயம் நிகழ்ந்ததென இப்பத்திரிகையாசிரியர்கள் வரவேற்கின்றார்கள். ஆனால், இன்றைய நாள்வரை அதேபோன்ற இந்திய இராணுவத்தின் ஈழச்செயற்பாடுகள் குறித்து ஏன் விசாரணை எழுப்பப்படவில்லையென்றோ என்ன நடந்ததென்றோ ஒரே மொழி பேசும், ஈழத்தமிழருக்கு இன்னமும் பதிப்புற்பத்தி ஏற்றுமதி செய்யும் தமிழகப்பத்திரிகையாளர்களோ, செய்தியாசிரியர்களோ அதைப் பற்றி ஒரு சொட்டுச்சத்தமுமெழுப்பவில்லை. நாங்கள் தொடர்ந்தும் குமுதம், கல்கி, துக்ளக், இந்தியா ருடே, புரொண்ட் லைன் வாங்கிக்கொண்டு, சிவாஜி படத்திலே "யாழ்ப்பாணப்பெண்ணெடுப்பது" குறித்து ஒரு வரி சொன்னது எமக்கான அங்கீகாரமெனப் புளகாங்கிதம் அடைந்துகொள்கிறோம். (இங்கேதான் என் முதற்கூற்றிலே சொல்லப்பட்ட கருத்துநிலைவிடுதலை அவசியமாகின்றது. எவரது அங்கீகாரமும் எமக்குத் தேவையில்லை; ஆக, நாம் எதிர்பார்ப்பது, சமதட்டிலிருக்கும் சக நண்பர்களையே)
இத்தனைக்குப் பிறகு, இப்படியான அவலச்சூழலிலே அவம்சுமக்கும் தன் ஊடகவியலாளர் முகத்தினை இன்னமும் இணையத்திலே(யும்) காவி வந்து "விடுதலைப்புலிகளையா இந்துவையா உலகம் நம்பும்?" என்று மாலன் வெட்கமின்றி எம்மிடம் கேட்கும்போது, இத்தனை ஆண்டுகளாக குமுதத்துக்கும் இந்தியா ருடேக்கும் நான் விட்டழித்த காசின் பெயரினாலே, தமிழகச்சஞ்சிகைகளில் இழந்த நம்பிக்கையின் பேரால், ஒரு வாசகனாக, ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளனாக, அவரிடம், அவரது பத்திரிகாதர்மம் மேலே, இங்கே -அவர் தப்பித்துப்போகமுடியாத,என் குரலும் அமுக்கமுடியாது கேட்கும் இணையத்திலே- கேள்வி கேட்காமல், வேறெங்கே, வேறு யாரிடம், வேறெப்போது, வேறெதைப்பற்றி நான் கேட்பது? இதைக் காழ்ப்புணர்விலே கேட்கின்றேன் என்று அவர் கருதினால், "இத்தனை நாள் உங்கள் உற்பத்திகளைத் தரம், குணம், மணம் பற்றியேதும் கேட்காமல் வாங்கிக்கொண்டேயிருந்த எங்களின் அவலங்கள் பற்றி ஒரு சொல் உங்கள் சஞ்சிகைகளிலே, செய்திகளிலே உங்கள் நாட்டுக்கோ, இராணுவத்துக்கோ மாற்றானதாக விடாத உங்களின் உணர்விலே எம்மைப் பற்றிக் காழ்ப்பிருந்திருக்கவில்லையா? ஓர் இரண்டாம்நிலைத்தமிழர்களென்ற கீழ்நோக்கிய பார்வையிருக்கவில்லையா? " என்று நான் எதிர்க்கேள்வி கேட்கலாமா?


இத்தனைக்கும் பின்னால், "விடுதலைப்புலிகளையா இந்துவையா உலகம் நம்பும்?" என்று இங்கே இணையத்திலே எள்ளலாகக் கேட்பவர், "...before talking of any political solutions, misgivings have to be cleared. An average Indian especially from the south sees Kashmir only on TV or in the paper and perceives Kashmiris to be unpatriotic or ungrateful. Perhaps the media is responsible for this portraiture. This has to be rectified. Possibly a similar situation prevails with reference to Pakistan. There is a very colonial mindset with a series of biased perceptions against each other. Without clearing the air, it is not possible to put forward a solution. There is a very large constituency for peace and this has to be strengthened before moving towards any solution. And, yes, there is definitely a need for more interaction with Kashmiri journalists..." என்று இலங்கையிலே பெந்தோட்டவிலே நடந்த இந்திய-பாக்கிஸ்தான் உறவுநிலை குறித்த ஊடகவியலாளர்கூடலிலே காஷ்மீரிகள் & பத்திரிகையாளர்கள் பற்றி -கொழும்பிலே சக தமிழ்ப்பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் அதே காலகட்டத்திலே அது பற்றி எங்குமே பதிவு செய்யாமல்- பேச முடிமுடியுமானால், அது பாசாங்குத்தனமில்லாமல் வேறென்னவென்றே தோன்றுகின்றது.


இப்போது, சொல்லுங்கள், மாலன், உங்களைப் போன்ற ஒரு தமிழ்ப்பத்திரிகையாளரிடம், வாய்ப்பாகிப்போன எனது-உங்களது என இருபக்கக்குரல்களும் கேட்கக்கூடிய இணையத்திலே, கேட்காமல், வேறு யாரிடம் நான் இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே என் ஈழம்-இந்தியா பற்றிய கேள்விகளையும் உங்களின் பத்திரிகாதர்மங்களின் இரட்டை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிலைப்பாடுகளைப் பற்றியும் கேட்பதாம்?

உசாத்துணை (அச்சு நூல்கள்)
1 ஆ. இரா. வேங்கடாசலபதி (2002) நாவலும் வாசிப்பும்; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
2 இரா. வை. கனகரத்தினம் (2001) ஆறுமுகநாவலர் வரலாறு: ஒரு புதிய பார்வையும் பதிவும்; பூரணம் வெளியீடு, கொழும்பு
3 பொ. ஐங்கரநேசன் (2006) வேர்முகங்கள்: நேர்காணல்களின் தொகுப்பு; சாளரம் வெளியீடு, சென்னை

-/இரமணிதரன், க.
'07 ஜூலை 27 வெள்ளி 17:28 கிநிநே.



கரைவு~

30 comments:

Voice on Wings said...

உங்களது ஈழம் பற்றிய கருத்துகளுடன் முழு உடன்பாடு.

தமிழில் கணினித் தொழில் நுட்ப வரலாறு குறித்தும் பேசலாம்தான் - சில தவறான நபர்கள் 'hogging the limelight' செய்து விடும் அபாயம் இருப்பதால். எனது கோணத்திலிருந்து எழும் கேள்வி - இங்கு 'ஓளிவீச்சு'க்கு தகுதியான சூழல் அமைந்து விட்டதா என்பதுதான். அதில் உடன்பட்டால், பிறகு யார் மீது அந்த ஒளிவீச்சைப் பாய வைக்கலாம் என்ற பிரச்சனையில் என்னாலும் பங்கு பெற முடியும்.

'99களில் நானும் Mylai plain எழுத்துருவை உபயோகித்து ஒரு geocities வலைத்தளத்தை உருவாக்கியிருக்கிறேன் (இப்போது தேடினால் அகப்பட மறுக்கிறது). அப்போது (Prof/Dr) கல்யாணசுந்தரத்தைப் பாராட்டி, மற்றும் எனது வலைத்தளத்தின் இணைப்பையும் குறிப்பிட்டு ஒரு தனிமடல் எழுதி, அவரிடமிருந்து பதிலும் கிடைத்தது. ஒரு தனிநபர் என்ற வகையில் அவரது சாதனை போற்றப்பட வேண்டியதே. அதே போல் (Prof/Dr) கோவிந்தசாமியின் தமிழ்நெட்99 விசைப்பலகை குறித்தும் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. இத்தகைய தனிநபர் சாதனைகளையெல்லாம் கடந்து, கணினியில் ஒரு மொழிக்கான ஆதரவு / வசதி என்ற அளவுகோலின்படி நாம் வரலாறுகள் எழுதும் நிலையை எட்டி விட்டோமா என்று கேட்டால் அதற்கு எனது விடை 'இல்லை' என்பதுதான்.

இருந்தாலும், உங்களுக்கு இவ்விவாதத்தைத் தொடருவதற்கான வலுவான காரணங்கள் இருப்பதாக நீங்கள் பட்டியலிட்டிருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

இராம.கி said...

நண்பரே!

ஈழம் பற்றிக் கேட்கப் படவேண்டிய கேள்விகள்; கேளுங்கள். "கேட்பவர்களுக்கு உரைக்குமா?" என்று தெரியவில்லை. இன்னும் சொன்னால், தமிழ் மிடைய உலகில் இருந்து இதற்குச் சரியான விடை வரும் என்றும் கூட எனக்குத் தோன்றவில்லை.

இணையம் பற்றிய தங்களின் உரையாடலை வெறுமனே படித்துவந்தேன். ஊடே புகுந்து கருத்துச் சொல்லுவது கூச்சல் போடுவதாகிவிடும் என்று அமைந்திருந்தேன்.

தமிழ் இணைய வரலாறு முறையாக எழுதப் படவில்லை தான்.

உங்கள் தொடர் தேவையான ஒன்று.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

இப் பதிவுக்கு நன்றி. நிச்சயமாக இவை திசைதிருப்புவதற்கான கேள்விகளல்ல [அப்படிப்பட்டால் நீக்கிவிடுங்கள்]

1. உங்கள் கேள்விகள் மாலனை நோக்கி இருப்பினும், மற்றவர்களும் அறிய வேண்டிய விடையங்கள் இருப்பதால் இனிவரும்
பதிவுகளை கொஞ்சம் இலகுவாக்க முடியுமா?

2. எப்போதுமே "விமர்சனத்தன்மையுள்ள" வாசிப்பு கொண்டிருக்க முடியுமா?

3. பதிப்பு/தொலைக்காட்சி ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் - வேற்று உடகமான இணையத்தில் வைக்கப்படலாமா? எதிர்கொள்ளப்படலாமா?

4. எனது பார்வை எனக்கு. எனது பார்வையை மற்றவர்கள் மீது திணிக்கலாமா?

5. எப்போது pdf font பிரச்சனை தீரும்?

6. ஈழத்தவர் - தமிழக ஊடகங்களில் மயங்கி இருப்பது எதனால்?

-ஆனா. அனானி

Anonymous said...

:-)) நிறையத் தெரிந்து கொண்டோம் அண்ணாச்சி

Anonymous said...

Maalan, thank you.

Anonymous said...

சாமி எனக்கொரு சந்தேகம்

இப்ப யாருங்க இணையப்பிதா?

கோவிந்தசாமிக்கு முதலே இணையத்தில் தமிழ் அரங்கேறியிருக்கிறது.ஓகே.

கல்யாணசுந்தரம் ஆதவின் செயலியை பாவித்து இணையமேற்றியிருக்கிறார்
தரவு அப்படித்தான் சொல்கிறது.
ஓகே

அப்போ ஆதவின் செயலியை உருவாக்கிய சிறீநிவாசன் அதற்கு முதலே
தனது செயலிமூலம் எப்படியும் இணையத்தில் தமிழை பரீட்சித்து பார்த்திருப்பார்தானே...

என்ன நான் சொல்லுறது சரிதானே..

Anonymous said...

//தமிழில் கணினித் தொழில் நுட்ப வரலாறு குறித்தும் பேசலாம்தான் - சில தவறான நபர்கள் 'hogging the limelight' செய்து விடும் அபாயம் இருப்பதால். எனது கோணத்திலிருந்து எழும் கேள்வி - இங்கு 'ஓளிவீச்சு'க்கு தகுதியான சூழல் அமைந்து விட்டதா என்பதுதான். //

Voice on Wings,
இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?
நீங்கள் சொல்லும் 'ஒளிவீச்சுக்குத் தகுதியான சூழுல்' வருவதற்கிடையில் தவறானவர்கள் துண்டுபோட்டு உட்கார்ந்து விடுவார்கள். தவறான தரவுகளே வரலாறாகப் பதிவாகிவிடும். தற்போதைய வலைப்பதிவர்களின் புரிதல்களையும் சில பின்னூட்டங்களையும் பற்றித் தெளிவாகவே இவ்விடுகையில் சுட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வரலாறாக இனங்காணப்படப் போகும், ஆதாரமாகக் கொடுக்கப்படப் போகும் தமிழ் விக்கிபீடியாவில் நடந்திருப்பதையும் இடுகை சுட்டியுள்ளது. இதற்குப்பிறகும் வந்து நின்றுகொண்டு, இதைப்பற்றிக் கதைப்பதற்கான சூழுல் வந்துவிட்டதா என்று கேட்டுக்கொண்டிருப்பது என்ன வாதம்?
இதை வேறு யாரும் கேட்டிருந்தாற்கூட இவ்விடுகையில் சுட்டப்பட்டிருக்கும் 'காழ்ப்புணர்வு' அல்லது குறிப்பிட்டவர் மேலான பக்தியும் அவரை விமர்சிப்பதனால் ஏற்படும் எரிச்சலும் என விட்டுவிட்டுப் போயிருக்கலாம்.

இளங்கோ-டிசே said...

வாசித்தேன். நன்று.
....
/ஆனால், இன்றைய நாள்வரை அதேபோன்ற இந்திய இராணுவத்தின் ஈழச்செயற்பாடுகள் குறித்து ஏன் விசாரணை எழுப்பப்படவில்லையென்றோ என்ன நடந்ததென்றோ ஒரே மொழி பேசும், ஈழத்தமிழருக்கு இன்னமும் பதிப்புற்பத்தி ஏற்றுமதி செய்யும் தமிழகப்பத்திரிகையாளர்களோ, செய்தியாசிரியர்களோ அதைப் பற்றி ஒரு சொட்டுச்சத்தமுமெழுப்பவில்லை. நாங்கள் தொடர்ந்தும் குமுதம், கல்கி, துக்ளக், இந்தியா ருடே, புரொண்ட் லைன் வாங்கிக்கொண்டு, சிவாஜி படத்திலே "யாழ்ப்பாணப்பெண்ணெடுப்பது" குறித்து ஒரு வரி சொன்னது எமக்கான அங்கீகாரமெனப் புளகாங்கிதம் அடைந்துகொள்கிறோம்./

அதிகம் கவனத்தைக் கோருகின்ற/உரையாடலை வளர்க்கவேண்டிய புள்ளி.

Voice on Wings said...

கொண்டோடி, யார் மீதும் உள்ள காழ்ப்புணர்வு / பக்தியினாலும் நான் எனது கருத்தை வெளியிடவில்லை என்று நீங்கள் எனக்கு அளித்த சான்றிதழுக்கு நன்றி. எனது கூற்றில் அப்படி எரிச்சல் ஏறபடுத்தும் அளவுக்கு என்ன கூறி விட்டேன் என்பது புரியவில்லை. இப்போது சாதனைகளாக அறியப்படும் சாதனைகள் பின்னாளில் (பலப்பல புதுமைகள் புகுந்துவிட்ட நிலையில்) ஒரு பொருட்டாகவே இல்லாமல் போகலாம் / போக வேண்டும். அப்போது 'இந்த' சாதனைகளுக்கான இடங்களை யார் துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற விவரம் கூட தேவையற்றுப் போய்விடும். (உ-ம். தமிழில் முதலில் bit notice அச்சடித்தது யார் என்ற விவரம் இன்று எனக்குத் தெரியாது. வேறு யாருக்கும் தெரியுமா என்றுத் தெரியவில்லை) அதற்காக அந்த சாதனையாளர்களே கூட வருந்திக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். Microsoft, Unicode, Mozilla என்று மேற்கிலிருந்து அடிக்கும் பேரலைகளால் இன்று தமிழ்க்கணிமை ஏதோ ஒரு திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது (அதில் நமது பங்களிப்பு என்று குறிப்பிடும்படியாக எதுவுமின்றி) இப்படி அவர்களே ஏதாவது பார்த்து செய்யட்டும் என்று காத்துக் கொண்டிருப்போம், அது வரை நமது சிறு சிறு சாதனைகளைப் பற்றி பேசிக் கொண்டே. இந்த விடை உங்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியதென்றால் மன்னிக்கவும். இந்த இடுகையில் நான் இட்ட முதல் கருத்து - பெயரிலி எனது இடுகையைக் குறிப்பிட்டு தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்வினையாகத்தான். (எனது இடுகையின் சுட்டியை பெயரிலியின் முந்தைய இடுகையில் காணலாம்.) தமிழ் விக்கிப்பீடியாவில் 'நடந்திருப்பதை' தமிழ் விக்கிப்பீடியாவுக்கே சென்று திருத்துவது எல்லோராலும் இயன்ற ஒன்றுதான். அதுவே அந்தக் கூட்டு முயற்சியை வலுப்படுத்துவதாக இருக்கும்.

Unknown said...

அன்புள்ள பெயரிலி,
உங்கள் இருவரின் விவாதங்களையும் விவாத அரங்கினுள் நுழைந்த ஒரு சிறுவனைப்போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு இந்தியத்தமிழனாக எனக்கு சில இடங்கள் மனம் கனக்கச்செய்கின்றன.
//ஓர் இரண்டாம் நிலைத்தமிழர்களென்ற கீழ்நோக்கிய பார்வையிருக்கவில்லையா?//
ஓர் இந்தியத்தமிழனாக இதை நான் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.
//ஆக, நாம் எதிர்பார்ப்பது, சமதட்டிலிருக்கும் சகநண்பர்களையே//
மிகவும் சரி. இதற்கு தேவை மனமாற்றம். அது ஈழத்தமிழர்களிடையேயும் ஏற்படவேண்டும். தொப்புள்கொடி உறவு என்ற பயன்பாடு தவறு என்று நான் நினைக்கிறேன். இந்திய, ஈழத்தமிழர்களுக்கிடையேயான உறவு எனபது தாய்-சேய் என்பதைவிட ஒருதாய் மக்கள் என்று அணுகப்பட வேண்டும்.
இந்த இடத்தில் இதைச் சொல்வது சரியா என்று தெரியவில்லை. உங்களுடைய எழுத்து மாலனுடையதைவிட மேம்பட்டதாக எனக்குத்தோன்றுகிறது. காய்த்த மரத்தில் கல்லெறிந்து கனி விழுந்தாலும் எறியப்பட்டது கல் அல்ல. அதுவும் கனியே.

RamaniKandiah said...

voice of wings,
பின்னூட்டங்களுக்கு நன்றி. நீங்கள் சொன்னதன் அடிப்படையிலேயே முன்னர் உங்கள் பதிவிலே என் பின்னூட்டத்தின் பின்னரும் பின்னூட்டியிருந்தீர்கள்.

இரண்டு விடயங்கள்;
1. தமிழ்த்தொழில்நுட்பத்தின் இன்றைய நிலை
2. இணையத்தமிழ் (+பொதுவிலேயே தமிழுக்கான சேவை) வரலாற்றினை எழுதுதுதல்

இரண்டினையும் நாம் தனித்தனியே பார்க்கவேண்டுமென நினைக்கிறேன்.

தமிழ்த்தொழில்நுட்பத்தின் இன்றைய முதுகிலேறிச் செல்லும் நிலை குறித்து நீங்கள் சொல்வதை நான் ஒத்துக்கொள்கிறேன். உங்கள் பதிவின் பின்னூட்டத்திலும் அதைச் சுட்டியிருந்தேன். ஆனால், அதற்கு வெறுமனே தமிழரைமட்டுமே குறை சொல்லிவிடமுடியாது. (உ+ம்: தமிழுக்கேற்றவாறு, அதன் தன்மைக்குப் பொருந்தும்வகையிலே தகுதரம் போன்றவற்றினை இயல்பாக இவர்கள் வளர்த்தெடுக்க முயலும்போது, யூனிகோட்டின் கட்டாய வரையறுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுடனான திணிப்பு வந்தேறியது. அதை மகிழ்வோடு உடனடி வசதிக்காக ஏற்றுக்கொண்டவர்கள் பலர். யூனிக்கோட்டின் போதாமை குறித்து இராமகி போன்ற பலரும் சில ஆண்டுகளாகவே சொல்லிவருகின்றனர். ஆனால், அத்திணிப்பு நெருக்கடிக்குள்ளும் சிலர் முயன்று இவ்வாண்டு மே மாதத்திலேதான் இந்தியமொழிகளிலே தமிழினைமட்டுமே இயல்பான தன் தேவையைப் பூர்த்திசெய்யும் தகுதரத்தினை அங்கீகாரம் பெற்றிருக்கின்றனர்). பரவலாக, ஆட்சி, ஆட்கணக்கு கருதிப் பயன்படுத்தப்படும் மொழிகளுக்குள்ள அங்கீகாரமும் நினைத்ததைச் சாதிக்கும் தன்மையும் இனக்குழு சார்ந்த மொழிகளுக்கு, கணியுலகிலேயில்லை. மேலும், ஒரு நிலை அதிகமாக மற்றோரிலும்விட முயன்றே வெற்றி பெற வேண்டியிருக்கின்றது. அதுதான் நடைமுறைநிலை.

ஆனால், இந்நிலைக்கும் தமிழிணையவரலாற்றினைப் பதிவு செய்வதற்கும் எவ்விதமான பிணக்குமில்லை. சொல்லப்போனால், அந்நிலையிலேயே மொழிக்கான தன்னியல்பான கணிமைமுன்னேற்றப்படிகளைச் சிறிய அளவிலேனும் செய்கின்றவர்கள் பற்றி நாம் குறிப்பெடுக்கவேண்டியதாகவிருக்கின்றது. உயூனிக்கோடு (என்ற ஒருங்குறி) என்பதை அப்படியே உடனடி வசதிக்காக அள்ளிப்போட்டுக்கொண்டு தமிழுடம்புக்கு யாருடையதோ சட்டையை அளவாக வெட்டிப்போடும் சேவையிலும்விட, தமிழுக்கான தன்னியல்பினை அறிந்து மேம்படுத்தச் செயற்படுகின்றவர்களை அடையாளம் கண்டு பதியவேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்னால், யார் என்ன செய்தார்களென்று இன்றைக்கு ஆதாரம் போதாமல் விவாதம் செய்யும் அவநிலைக்கு உள்ளாகியிருக்கின்றோம். waybak machine களிலே போய்த் தேடிப்பார்த்தும் கிட்டாத நிலை. இப்போதேனும், இவ்வாதரங்களைப் பதியாமல், இன்னும் இருபதாண்டுகளுக்குப் பின்னால், பதியலாமென்றால், அப்போது இன்னமும் அதிகமாகக் குழப்பம் வந்திருக்கும்; தமிழிணையத்தின் தந்தை, எல்லைக்காவற்கடவுளர்போல, தமிழிணையத்தின் தெய்வமாகியிருப்பார். கருவறையிலே மூலமூர்த்தி ஆனவரை எடுத்து வசந்த மண்டபத்துக்குக்கூடக் கொண்டுவரமுடியாது :-( அத்துணை நம்பிக்கையைத் தெய்வம் குறித்து இடைக்கால இடைநிலைப்பூசாரிகள் ஏற்படுத்தியிருப்பார்கள். இதுதான் ஒரு காரணம். எண்ணியப்பாலம் கட்டுவதிலே அணிலின் சேவையோ அனுமானின் சேவையோ என்பதல்ல முக்கியம், சேவை என்பதுதான் முக்கியம். ஓர் அங்கீகாரமாகவும் வந்த பாதை குறித்த வளர்ச்சி, இடர்ப்பாடுகள் பற்றித் தொடரும் தொழில்நுட்பவியலாளருக்குச் சுட்ட இத்தகு தமிழ்க்கணிமைத்தரவுப்பதிவு அவசியம்.

மேலும், நான் ஏற்கனவே சுட்டியதுபோல, இங்கே நான் பேச முயன்றது, தவறான கருத்தமைவுகளை போதிய தரவுகளின்றி வரலாறென்ற பெயரிலே விமர்சனமற்று சொன்னதைச் சொல்கின்றவரின் சிரசொளிவட்டவிட்டவிலாசத்தைமட்டுமே வைத்து அப்படியே நம்பிப் பரப்பும் "ஹரிபோல் !ஹரி போல்!!" பஜனைக்கருத்துக்குருடர்களையும் கொண்ட கணியுலகத்திலே அப்படியான எல்லைக்காவற்கடவுள் நம்பிக்கை வேரூன்றாமலிருக்கவே. இல்லாவிடின், இச்சந்தர்ப்பத்திலே தமிழ்க்கணிமைத்தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரியாத நான் எதையும் பேச முற்பட்டிருக்கமாட்டேன்.

தவறான தகவல்களை அகற்றிவிட்டு, எனக்குத் தெரிந்த, பொருந்தும் தரவுகளைச் சரியான இடத்திலே பொருத்துதல் மட்டுமே என் நோக்கு; அவை இன்னும் இருபதாண்டுகளுக்குப் பின்னரேனும் எவருக்கேனும் வரலாற்றினை நேராக எழுத வாய்ப்பினைக் கொடுத்தால், மகிழ்ச்சி.

மிகுதிப்படி, நீங்கள், அற்புதன் போன்றோர் சொல்லும் "தமிழிலே முதன்முதலாக..." அபத்தத்தினை ஆய்தலைப் பற்றிய கூற்றினை அப்படியே ஒத்துக்கொள்கிறேன். நேற்று ஒரு தளம் கண்டேன், தலைப்பிலே, "நெல்லையின் முதல் யுனிகோடு மின்னிதழ்." எங்கே போய்த் தலையை இடித்துக்கொள்வது? தமிழிலே முதன்முதலிலே யூனி கோடு போட்டவர் - போட்டவர்தான் என்பதை எப்போது இவர்கள் அறியப்போகின்றார்கள்? :-)

அன்பின் இராமகி,
உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. உங்களைப் போன்றவர்கள் இணையத்தமிழ்பற்றி, தேவையான வளர்ச்சி பற்றி எழுதுவது மிகவும் பயன்தரும். கருத்திலே கொள்வீர்களானால், நன்றி.

ஈழம் குறித்த கருத்துகளைத் தொடர்ந்து பதிய எண்ணமுண்டு. இப்படியான சந்தர்ப்பங்கள் அதற்கான வாய்ப்புகளையும் ஊக்கத்தையும் முடுக்கிவிடுகின்றன.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வாய்ஸ், தமிழ்க்கணிமையின் வளர்ச்சி மீது உண்மையான அக்கறை கொண்டு நீங்கள் எழுப்பும் வாதங்களோடு ஒத்துப்போக முடிந்தாலும், ஆரம்பகால வளர்ச்சிகளை சும்மா பிட்டுநோட்டீசோடு ஒப்பிட்டு ஒதுக்கித் தள்ளும் உங்கள் கருத்தோடு உடன்பட முடியவில்லை.

திசைகள் இதழிலே சில ஆண்டுகள் முன் முனைவர் கண்ணன் எழுதிய கட்டுரையில் கணினியில் தமிழைப் பார்க்க ஆர்வலர்கள் (தனியாக யாரும் என்று இல்லை) எடுத்துக் கொண்ட முயற்சிகளை ஒரு பிரசவ வலிக்கு ஒப்பீடு செய்திருப்பார். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆரம்ப காலத்தின் பயனர் என்கிற முறையில் அவற்றோடு பயணித்திருக்கும் என் அனுபவத்தையும் எழுதி இருக்கிறேன். (அங்கிருக்கும் திசைகள் சுட்டிக்குப் போனால் தவறான இடத்திற்கே செல்லும்! எச்சரிக்கை).

vt100 மற்றும் பிற dumb terminalகளில் தமிழைக் கோட்டெழுத்தாய்ப் பார்க்க முயன்ற 'மதுரை' தமிழ் தட்டச்சு முறையையும் (மேற்சொன்ன பதிவில் கடைசியில் என் கையொப்பம்) பாருங்கள்.

மயிலை கல்யாணை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. 1993 வாக்கில் GreetingCardWare (freeware, shareware போல) மயிலை எழுத்துருவுக்கு மாற்றாய், பயனர் இருக்கிற ஊரில் இருந்து ஒரு அட்டை போதும் என்றிருந்தவருக்கு லூயிவில் கென்டக்கியில் இருந்து நான் கூட அனுப்பி இருக்கிறேன். ஆனால், இன்று வலைப்பதிவு தொடங்கும் எத்தனை பேருக்குக் கல்யாணையோ, மயிலையையோ, அவரின் பிற முயற்சிகளையோ, அவரைப் போன்றவர்களின் முனைப்புக்களையோ தெரிந்திருக்கப் போகிறது?

இது போன்ற முயற்சிகள் பிட்நோட்டீஸ் கணக்காய் மறையாமல் தமிழரின் முனைப்புக்களுக்குச் சான்றாய் ஆவணப் படுத்தப் படவேண்டும் என்றே நானும் நினைக்கிறேன். அந்த வகையில் பெயரிலியின் இந்தத் தொடரை நான் வரவேற்கிறேன். (கூடவே ஈழம்-இந்தியா, ஊடகம்-இணையம் போன்ற விவாதங்கள் நிறையத் தெரிந்து கொள்ள வைக்கிறது).

nayanan said...

//ஆனால், இப்படியான காலத்திலெல்லாம், குமுதம், இந்தியா ருடே, அவுட்லுக், புரொண்ட் லைன் முதல் எங்களை(யும்) வாசகர்களாகக் கொண்ட சஞ்சிகைகளோ இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைப் பற்றி ஒரு வசனமேதும் உதிர்க்கவில்லை; புத்தகவாசனைக்காற்றிலேகூட விசனிக்கக்கூட இல்லை. மீள மீள தம் அரசின் நிலைப்பாட்டினையே பாடிக்கொண்டிருந்தன; எங்களின் தவறுகளாக தமது செயற்பாடுகளைச் சுமத்தி அவ்வப்போது தேவைக்கேற்ப நியாயப்படுத்திக்கொண்டிருந்தன; அல்லது, பேச்சேயில்லாமலிருந்தன. நாங்கள் தொடர்ந்து குமுதம், இந்தியா ருடே, துக்ளக், கல்கண்டு, கல்கி ஆகியவற்றைச் சலிக்காமல் அகதிக்காசு வந்தபோதும் விட்டு வாங்கிக்கொண்டேயிருந்தோம். ஆக, எம் நிலையைப் பேசியவர்கள் நாங்கள் ஒருபோதும் வாங்கவே எண்ணியிருக்க வாய்ப்பில்லாத, அறிந்திருக்காத ஓரிரு இந்தியச்சிறுபத்திரிகையாளர்களும் பதிப்பாளர்களுமே.
//

இரமணி,

தமிழக-ஈழ உறவு குறித்து மனதை நெருடுகின்ற கருத்துகளை எழுதியிருக்கிறீர்கள்.
மனதைத் தொட்டன.


இணைய வரலாறு என்பது தேவைதானா? வெறும் இணையப் பக்கங்களைப் படிக்க மட்டும்
சில டசன் எழுத்துருக்களையும் கிட்டத்தட்ட அரை டசன் குறியீடுகளையும் பண்ணி வைத்துக்
கொண்டு அதனையே பெருஞ்சாதனையாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிற சூழல்
நமது அறியாமையோ என்று நானும் பல நேரம் எண்ணுவதுண்டு.

இந்த நிலையில் மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரைக்
காண பலரும் களத்தில் இறங்கியிருப்பது சலிப்பைத் தருகிறது.

இணைய நுட்பத்திற்குத் தொடர்பே இல்லாதவர்களும்,
இணையத் தமிழுக்கு மிக இளையவர்களும்,
அவற்றையே தகுதியாக வைத்துக் கொண்டு பல குறையான தகவல்களை
வெளியிடுவது வழக்கம்போல பல திரிபுகளை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்திற்கு
உங்கள் மடல் ஆறுதல் அளிக்கிறது.

இணையத் தமிழ் என்பது கணித்தமிழா? அல்லது கணித்தமிழ் என்பதன்
வளர்ச்சி இணையத்தமிழா என்ற வினாக்களில் இருந்து தேட நிறையவே
இருப்பதாக எனக்குப் படுகிறது.

இந்த வினாக்களை கருக்களில் ஒன்றாகக் கொண்டு, இணையத்தமிழ் வரலாறு
படைக்கப் பட வேண்டும். அதனை உங்களால் செவ்வனே செய்ய முடியும்.
ஆதலால் இந்தத் தொடரையே மாற்றி, வரலாறினை எழுத ஆரம்பித்தீர்களென்றால்
நலன் விளையும். அவ்வாறு ஒன்று இல்லாத்தினால் பலரும் எழுத முற்படுகின்றனர்.
என்னைப் பொறுத்தவரையில், இணைய வரலாறு என்பது
கணித்தமிழ் வரலாறோடு வரவேண்டும். அதில் இந்திய மற்றும் ஈழக் கணினி,
இணைய வல்லுனர்கள், தமிழகத்தைச் சேர்ந்த கணித்தமிழ் (கணித்தமிழ் சங்கத்திற்கும் முந்தைய)
முன்னோடிகள் போன்ற பலரை உள்ளிட்ட பல "ஆதி கணினி/இணையத் தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பும்" இதற்கு இருக்க வேண்டும். அப்படியான ஒரு நல்ல நூலை நீங்கள் ஆக்க வேண்டும் என்பதனை வேண்டுகோளாக்குகின்றேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sri Rangan said...

இரமணிதரனும்,மாலனும்...

-சில கவனக் குறிப்புகள்.



//என் முன்னைய இடுகை ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, "யார், எதை, எப்போது, எங்கே செய்தார்" என்பதற்கான சரியான தரவுக்கோவை முறையான வரலாறாகத் தொகுக்கப்பட்டுப் பதிவாகுவதுகூட அவசியமில்லை. ஆனால், தவறான, திரிந்த, உறுதியற்ற, மழுங்கிய முன்வைப்புகள் வரலாற்றுத்தரவுகளாகத் தரப்படும்போது, "யார், எதை, எங்கே, எப்போது, எங்கே செய்யவில்லை" என்பதற்கான எதிர்த்தரவுக்கோவை முறையாக முன்வைக்கப்பட்டேயாகவேண்டும்.//-/பெயரிலி.



கருத்துகட்குட்பட்ட எல்லைகளிலிருந்து ஒரு வகைப்பட்ட மையத்தைத் தேடுவதும் பின்பு அதன் சாத்தியத்தைக் குறித்து எந்தவகைத் "தெரிவும்" ஒரு எல்லையைத்தாண்டிச் செல்வதும்,அங்ஙனம் செல்லும் வழியில் எவரோ,எப்போதோ வீசியெறிந்தவைக்காக விழிகசக்கிச் சிந்தித்து வருவதும், அந்தச் செயலில் மாண்டு-மூழ்காது போவதும் அவசியம்.இந்த அவசியத்தில் ஆர்த்தெழும்போதும் அங்கே அந்தவுலகம் மிகப் பெரிதாக இருக்கிறது.இன்றையவுலகத்தில் வரலாற்றைத் திருடுவது பின்பு அதைத் தமதாக்குவதும் பண்டுதொட்டு மானுடம் ஆற்றும் செயற்பாடுதாம்.அங்ஙனமின்றி இந்தவுலகத்தில் உண்மையான வரலாறாக எந்த வரலாறுமில்லை.அன்றைக்குஞ்சரி இல்லை இன்றைய அதிபுரட்சிகரமான தகவற்றொழில் நுட்ப வலுவிலுங்சரி உண்மைகளை உரக்கச் சொல்வது சாத்தியமில்லை.இது மனித செயற்பாட்டின் அனைத்துத் தடங்களையுங்வுட்கொண்டே சொல்லப்படுகிறது.ஆக பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயத்தின்மீதான வரலாற்றுத் திருட்டுத்தனங்கள் அவர்களை வரலாறற்ற அல்லது வரலாறு தெரியாதவர்களாக்கிய செம்மையான அந்நியத் தலையீடு அந்தச் சமதாயத்தின் இருப்பையே அழித்து விட்டதென்பதை எல்லோரும் உணரக்கடவது.இந்தவகையில் தங்கள் "தெரிவு"அவசியமென்பதை மறுபதற்கில்லை.என்றபோதும் இரமணி இந்த வட்டம் பெரிதென்பதை நீங்கள் உணர்திருப்பீர்கள்.இதுள் பாரபட்சமற்று மனித செயற்பாட்டின் அனைத்துத் தளங்களையும் ஒருவர் கடந்தேகவேண்டும்.இது தொழில் நுட்பத்துக்குள்ளோ அன்றிக் கணினியியல் கருவூலங்களுக்குள்ளோ குறுகிவிட முடியாதல்லவா?அப்போ இது ஒரு சிறு பகுதிதாம்.அந்தத் "தெரிவின்"பாரிய பக்கம் இன்னும் இருள் சூழ்ந்தே கிடக்கிறது.அங்கே மக்கள்தம் உண்மையான வரலாற்றைப் பேராடும் பல்கலைக்கழகங்கள்கூட விஞ்ஞான பூர்வமாய் கற்கை நெறியாக்குவதுமில்லை.அப்படிச் செயற்படுத்தும் வரலாற்றுக் கற்கையும் அதுசார்ந்த தேடுதல்களும் ஆளும் அதிகாரத்தின் எல்லைகளையும் அவற்றைத் தக்கவைக்கும் முனைப்புகளுக்கிசைவானவையாக இருக்கும,; இந்தச் சூழலில் உங்களின் மேற்காட்டிய இந்தக் கூற்று எந்தத் காரணத்துக்கும் பொருந்துமென்றே கருதுகிறேன்.




//மேலே கூறிய காரணத்தினைவிடவும் எனக்கு - ஈழத்தமிழனென்ற அளவிலே- முக்கியமாகும் இன்னொரு காரணமுண்டு. ஒரு சமூகம் தன் வரலாற்றினை இயன்றவரை தொடர்ச்சியாகவும் கோவையாகவும் (அது மிகத்திருத்தமாகக்கூட அமைய வேண்டியதில்லை) பதிந்துகொள்வதன் தேவையை ஈழத்தமிழரின் இன்றைய (வரலாற்று)நிலை உணர்த்தியிருக்கின்றது.//


இங்கேதாம் இரமணி ஒரு உண்மை மிகக் காட்டமாக உணர்வில் உறைகிறது.ஈழத் தமிழர்களின் வரலாறென்பது அவர்களது தொடர்ச்சியான குடிப்பரம்பலாலும்,மானுட வர்க்கப் போராட்டங்களாலும் மிக யதார்த்தமாகப் பதியப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,ஈழத் தமிழர்கள் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயமென்றழைக்கும் தகுதியைத் தமது இழி நிலைகளால் இழந்தர்ர்கள்.இது ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதிக்குள் இயல்பானதாக இருக்கவில்லை.ஒத்த மக்கள்தம்மை ஒருவகையொடுக்குமுறைக்குள் வற்புறுத்தி வெற்றி கொண்டது பொருள் சார்ந்த நலன்களை அவர்களோடு பங்கீடு செய்யாதிருப்பதற்காகவென்பதை நாம் வெறும் பொருளாதார நலன்களுக்குள்மட்டும் குறுக்கிவிடமுடியாது.அங்கே பண்பாட்டுத் தளத்தில் பாரிய பார்ப்பன நெருக்குதல் மனிதப் பண்பையே சாகடித்திருக்கிறது.அரியரெத்தினத்தை அரியம் என்பதும்,கந்தசாமியை கந்தன் என்ற பதிவுகளும்-கந்தன் தோட்டஞ் செய்தான் என்று பாடத்தில் எழுவாய் பயனிலை கற்பிக்கப்பட்டதும் நீங்கள் அறிந்தது.வரலாற்றைச் செம்மையாகக் குறித்துவிட முடியாது.ஆனால,; அங்ஙனம் முனையும்போது மிகத் தெளிவாகச் சில வரையறைகளையும் நாம் செய்து கொள்வது அவசியமாகிவிடும்.ஏனெனில், மனிதர்கள் வர்க்கமாக பொருள்களைக் கவர்ந்து தமது வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் தரணத்தில் ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது வர்க்கத் தளத்திலிருந்து மற்றையத் தளத்திற்குக் கல் வீசுவது இதுவரை நாம் காணும் தொடர்ச்சிதாம்.ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்பாணச் சமூக அமைப்பின் அரசியல் தன்மை இயல்பு,வர்க்கப் பிளவுகள்,முதலியவற்றை ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ய முனைதல் இதுவரை சாத்தியமாகி வருகிறது.இது மிக ஆபத்தானது.இந்த முயற்சி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது இன்றைய மெய்ப்பாடு.ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வோரையும்,அவர்கள் மத்தில் அரசியல் வேலைகளைச் செய்பவர்களையும் உண்மையை அறியுமாறு இன்றுவரை தூண்டும் ஒரு அரசியல் சமூக விஞ்ஞானத் தூண்டலில் நீங்கள் வைத்திருக்கும் கால் மிக நீண்ட வெளிகளைக் கொண்டிருக்கிறது.தம்பி வெற்றி இணையத்தில் எடுத்துவைக்கும் சிறுபிள்ளைத் தனமான விளக்கங்களைப்போன்று நீங்கள் நிச்சியம் செய்யமாட்டீர்களென்ற நம்பிக்கை எனக்குண்டு.எனினும்,இயன்றவரை வரலாற்றுத் தரவுகளை எந்த வர்க்கத்தையும் திருப்பத்திப்படுத்தாது காலத்தைச் சார்ந்து-காலத்தில் எழுதுவது மிகப் பொருத்தமானது.தமிழ்ச் சமுதாயம் தன்னைத்தான் ஆளுவதற்குத் தகுதியற்றதென்ற தந்திரோபாயத்தோடு இதுவரை வரலாறுற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு,தனக்குள்ளேயே அது உள்ளியல்புக் காலனித்துவப் பண்புகளை கொண்டிருக்கிறது.இதற்கு எங்கள் வித்துவான்களும்,நாவல்லவர்களும்,பேராசிரியப் பெருந்தகைகளும் காரணம் மட்டுமல்ல.நிலுவுகின்ற பொருளாதார அமைப்புக்கேற்ற நலன்களும்தாம்.அரசியல் அதிகாரம் என்பது ஒரு அவசியமான தேவையாகும்.அதன் தொடர்ச்சியுள்தாம் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவதும்,கூடியவரை-சாத்தியமானவரை விஞ்ஞான பூர்வமாகப் பதிவதும் நேரிடும்.ஆனால், அந்த அதிகாரத்தை மக்கள் தொகுதியிலுள்ள எந்த வர்க்கம் கைப்பற்றுகிறதென்ற போக்கில்தாம் அது உண்மையாகத் திரிவின்றியுள்ளதாவென்று தீர்மானிக்க முடியும்.நமது சாபக்கேடு நாம் அதிகாரத்தை வெறும் மொழிசார்ந்த மதிப்பீடுகளால் போட்டுக் குழப்பி எமது மக்களை இணைக்க விரும்புகிறோம்.அங்கே தமிழ் மக்களைச் சாகடித்து,அவர்கள்தம் வரலாற்றையே தாம் விரும்பும்போக்கில் சிதைத்தவர்கள் நமது வீரதீரத் தலைமைகளும் அவர்கள் வழி சிந்தித்த புத்திசீவிகளும்தாம்.இதைச் சுட்டுவது இந்தத் தரணத்தில் எமக்கு நன்மையே பயக்கும்.



//இதன் அவவிளைவே, பரணவிதாரண போன்றோரின் கைகளிலே இலங்கையின் 'தொல்பொருளியலாய்வும் அகழ்வும்' சென்றதும், அதன்பின்னான 'கண்டுபிடிப்புகள்' சிங்களக்குடியேற்றங்கள் முதல் இன்னோரன்ன மொழிசார் இனவமைப்பு ஒடுக்குமுறைகளுக்கு, தமிழ்பேசும் சமூகங்கள் ஈழத்திலே உள்ளாகவும் காலாயிருந்திருக்கிறன; காலாயிருக்கின்றன. தமிழ்ப்பௌத்தர்கள் இருந்திருக்கலாமென்ற வாதத்தைக்கூட முன்வைத்து, சிங்களப்பேரினவாதத்தின் வரலாற்றாக்கத்தை மறுத்துப்பேசமுடியாத நிலையிலே கந்தரோடை, வல்லிபுரம், நயினாதீவு, திரியாய் ஆகிய இடங்கள் 'பௌத்தர்கள்=சிங்களவர்கள்' என்ற சமன்பாட்டினாலே எழுதிவைக்கப்படுகின்றன. இங்கேதான் ஈழத்தமிழர்கள் சந்த்யானாவின் 'தமது கடந்த காலத்தினை நினைவுகூரமுடியாதவர்கள் எதிர்காலத்திலே அதை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்படுவார்கள்' என்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றோம். இந்நிலையிலேதான் வரலாற்றினைப் பதிவுசெய்தலென்பது வாழ்தலின் இருத்தலின் தொடர்ச்சியாக ஒரு சமூகத்துக்கு ஓர் அவசியமான அத்திவாரக்கூறாகின்றது. இன்னமும், வரலாற்றின் தேவைதான் - கடந்த காலத்திலிருந்து எமது இன்றைய நிலையைச் சரிபார்த்துக்கொள்தலும் போகும் பாதைக்குக் கடந்தகாலத்தின் தவறுகளைத் தவிர்த்தலுமே - கற்றுக்கொள்ளவைக்கின்றது; இதன் அடிப்படையிலேயே பொதுவரலாறு ஒரு பாடமாக பாடசாலைகளிலே கற்பிக்கப்படுவதும், இராணுவ,போர்வரலாறு இராணுவக்கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுவதும் அமைகிறன. வரலாற்றின் பதிவின்றி உடோல்ஸ்டோயின் பாதையிலே மோஹன்தாஸ் காந்தியும் அதன் தொடர்ச்சியாக மார்டின் உலூதர் கிங்கும் அடியொற்றி நடக்க முயன்றிருக்கமாட்டார்கள்.//


இங்கே இன்னொரு அவசியமான கேள்வி எழுகிறது.பாடசாலைகளில் மாணவர்கள் கற்கும் வரலாற்றுக் கல்வி உண்மையில் வர்க்கஞ் சாராத முழுமொத்த மக்களின் வாழ்வியற் தொடர்ச்சிகளைப் பதிந்துள்ளதா?அதிகாரத்தை நிலைப்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த எடுத்த-எடுக்கும் முயற்சி யாருக்கு எதிரானது?யாரை ஒடுக்கிய இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றுப்படமாகவுள்ளது?போர் வரலாறு என்றும் முழுமொத்த மக்களையும் சார்ந்த வரலாறாக இருப்பதில்லை.அது தொடர் வருத்தல்களை ஒரு இனத்துக்குள்ளேயே வற்புறுத்தி அந்த இனத்துள் கணிசமானவர்களையொடுக்கி வருவது.வரலாற்றில் இயங்கும் சக்திகளைச் சரியான வர்க்கப்பார்வையின்றி மதிப்பீடு செய்வது கும்பல்ல கோவிந்தாப்போடுவதாக இருக்கும்.இதுதாம் சொல்கிறது நமது தேசயவாதம் "தற்காப்புத் தேசியவாதம்"என்று.இப்படியும்,இதற்கு மேலும் அது கடைவிரிக்கும்.ஆனால்சிங்களப் பேரனவாதத்தையும் அதன் வரலாற்றுப் புரட்டுக்களையும் மறுத்துப் பேசும் தகுதியைத் தமிழ் அறிவாளிகள் இழந்ததென்பது சிங்கள அதிகாரத்தால் அல்ல.அது திட்டமிட்ட தமிழ்வரலாற்றுக் குருடாகளால் முன்னெடுக்கப்பட்டதும்,அதைப் பிழைப்புக்காக அரசியலாக்கிய அந்தப் பெருங்குடிப் பிறப்புக்களாலுமே.பொதுவாகத் தமிழ்ப் பெளத்தர்கள் இலங்கையின் வடபுலத்துள் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள் அநுராதபுரம்வரைத் தமது தொடர்ச்சியான குடிப்பரம்பலைக் கொண்டிருந்ததும் உண்மையான வரலாறகவே இருக்கிறது.இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு குறித்த ஆழமான ஆய்வொன்றைப் கலாநிதி சி.க.சிற்றம்பலம் செய்தும் உள்ளார்.பூனா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்டத்துக்கான ஆய்வு இது.இதில் எமது வரலாற்றை அவர் விஞ்ஞான பூர்வமாக நிறுவுவதில் பல சான்றுகளை முன்வைத்துள்ளார்கள்.சிங்களச் சமுதாயம் இப் பெருங்கற்காலப்பண்பாட்டின் முகிழ்பபென்பதும்,அது தென்னிந்தியாவில் எங்ஙனம் தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளும் என்று தோற்றுவித்ததோ அவ்வண்ணமே தமிழ்,சிங்களம் என்று இலங்கையில் தோற்றுவித்துள்ளதென்பது பரவலாக ஏற்புடையது.ஆரிய வம்சம் எனும் புரட்டுச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு அவசியமாகலாம்.இது புத்தமத மறுமலர்ச்சியைத் தூக்கி நிறுத்திய சமூகக் காரணி மிகக் கூர்மையாக விளங்கத் தக்கது.அது காலனித்துவத்துக்குப் பின்பான இலங்கையில் கிறித்துவத்தின் வாய்ப்புக்களையும்.வசதிகளையும் தட்டிப்பறிப்பதற்கும் கூடவே அந்த மத்தால் பயனுற்ற படித்தவர்களை ஓரங்கட்டுவதற்காவும் இருந்ததை நாம் அறிய முடியும்.இது ஒருகட்டத்தில் முழுமொத்தச் சிறுபான்மை இனங்களுக்கும் எதிராகக் கிளம்பியதை இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியோடு ஒப்பிட்டறிவதே சாலச் சிறந்தது.கந்தோரடை பற்றிய அகழ்வராச்சியில் அன்றீடுபட்ட(1967 என்றே நினைக்கிறேன்) பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்து அரும்பொருளக ஆய்வாளர்கள் யாழ்ப்பாணத்தில் பெருங்கற்காலப்பண்பாடு நிலவியதை முதன்முதலில் விஞ்ஞானபூர்வமாக வெளிப்படுத்தினார்கள்.விமலா பேக்கிலி மற்றும் பென்னற் புறொன்சன் போன்றோர்களின் ஆய்வுகள்-வெளிப்படுத்தல்கள் யாவும் இதை உறுதிப்படுத்துபவை.ஆனால் அந்த அகழ்வாராச்சியின் முடிவுகள்-அறிக்கைகளை இதுவரை நாம் கண்ணிலும் காணவில்லை.ஏன்-எவரால் முடக்கப்பட்டதென்பதை நம் தமிழ் வரலாற்றாய்வாளர்களால் இதுவரை குறித்துச் சொல்லப்படவில்லை.இங்கேதாம் நம் வரலாற்றாளர்களின் தவறுகளும்,மதிப்பீடுகளும் சிங்கள பெளத்த பொய்மையையும்,பெளத்த மதத்தைப் பற்றிய தளம்பலிலிருந்து விட்டு வேறொரு தொலைவுக்கு உயர்த்தியது.இது தமிழரென்பவர்கள் சைவத்தை மதமாகக்கொண்டவரென்பதும்,பெளத்தம் சிங்களருக்கே உரித்ததுமாகக் கற்பனையில் மூழ்கடித்தது.அங்கே வலுவுறும் தரணம் சிங்களவருக்கானது.கடந்தகாலத்துத் தவறுகளைத் தவிர்த்துக்கொள்வதற்கான முன் நிபந்தனை எனஇன?அந்தத் தவறுகளைப் பகிரங்கமாக விமர்சனத்துக்குள்ளாக்குவது.அதை நாம் சரியாகச் செய்வதாக இருந்தால் இன்றைய போராட்டத்தவறுகளும் பகிரங்கமான விமர்சனத்துள் மையங் கொண்டிருக்கவேண்டும்.ஒரு சமுதாயம் தனக்குள் ஒடுக்குமுறையை ஏவிவிட்டுத் தன் சொந்தத்தையே குட்டிச் சுவராக்கும்போது அந்நியப் புறச்சக்தி எம்மை ஒடுக்குவது வியப்புக்குரியதல்ல.


//அடுத்தது, உளம்சார், சிந்தைசார்தளத்திலே நிகழும் விடுதலையென்பது; இதற்குப் பௌதீக, புவியமை எல்லையில்லை. இவ்விடுதலையென்பது புவிகட்டுப்படுத்தும் வரையறைகளுள்ளே அவற்றினை முறித்துத் தனித்துவம் காண்பதற்காக நிகழ்வதல்ல. கருத்துத்தளத்திலே தன்மீதான அடக்குமுறைகளிலிருந்து தம்மை உடைத்துக்கொண்டு, விட்டுவிலகிச் சிட்டுக்குருவியாகப் பறக்கும் நோக்கிலே பிறப்பது; தமிழர் என்ற கருத்துநிலையிலே ஈழத்தமிழர், மற்றும் அவர்கள்போன்ற நிலையிலுள்ள ஏனைய உட்கூற்றுத்தமிழர்களின் தம்மடையாளங்களை, 'தமிழினை மேம்படுத்தியவர்கள் நாம்' என்ற கருத்துநிலை மேலாதிக்கத்தாக்குதலின்மூலம், கருத்துநிலை அரசியல்மூலம் இதுவரைநாள் நிலைநிறுத்தி நிற்கின்றவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு காணும் சுதந்திரம் இவ்வகைப்படும்.//



தமிழருக்கு வழிகாட்டிகளாவதும்,அவர்கள் கூறுகின்ற தமிழர்கள் என்பவர்கள் யாரென்பதும் தங்கள் கூற்றுள் பொதிந்துணரப்படத்தக்கதாக இருப்பினும்,தென்னாசியச் சமுதாயங்கள் சார்ந்தெழுந்த கருத்து நிலைகள் வெறும் கருத்துக்களால் நிலை நிறுத்தப்படவில்லை.அவை குறிப்பிட்ட அதிகாரத்தின் மைய ஆளுமையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனைத் தளத்தைக் கொண்டிருப்பதற்காகக் கட்டபட்ட ஒரு பெரும் நிறுவனமான இந்துத்துவப் பார்ப்பன நிறுவனத்தின் நீட்சியாகும்.இங்கே மாலன் என்பவர் குறித்துரைத்தவை அவரையொத்த பலரின் கருத்துக்களாக இருப்பதாக அவரது கூற்றே தெளிவுப்படுத்தும்போது,அந்தத் தனிமனிதர் இந்த நிறுவனத்தின் உறுப்பினராகிறார்.அவரே நேரே வந்து ஒப்புதல் அளித்தும்விடுகிறார்.ஆக மொத்தத்தில் மாலன் வெறும் குறியீடாக இருக்கலாம்.ஆனால், தங்கள் கருத்துத் தளம் விரியும் இன்னொரு பரப்பு ப் பார்ப்பனியத்தின் உட்கூறுகளையும் அதன் ஆதிக்கக் கருத்தியல் தளத்தையும் நோக்கியதாக இருப்பதே சாலச் சிறந்தது.இத்தகைய தரணத்தில்மட்டுமே உளம்சார்,சிந்தைசார் விடுதலைக்கான வாசற்கதவு திறக்கப்படுகிறது.அதை நோக்கிய வழிகள் யாவும் ஆளும்வர்க்கத்துப் பெரும் ஊடககங்களாலும் காவி பூசிய கல்வியாலும் தடைப்படுத்தப்பட்டிருப்பதைச் சொல்லும் அறிவு நாணயம் அவசிப்படுந்தறுவாயில் விமர்சனம் செல்லும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்தச் சுதந்திரத்தை வலியுறுத்தும் நீங்கள் முதலில் அந்தச் சுதந்திரத்தின் எதிரிகளைத் திறம்பட இனம்காணத்தக்கபடி மக்கள் முன் நிறுத்தவேண்டும்.இத்தகையவொரு முன்னெடுப்பைக் கருத்தியற் தளத்தில் ஆழமாகச் செய்வது அவசியமானதாகும்.ஆதிக்க வாதிகளிடமிருந்து விடுவித்துக் கொள்வதுற்கு அந்த ஆதிகத்துக்கு மாற்றானதை முன்வைத்துப் போராடுவது அவசியமாகும்.பார்ப்பனியத்தின் ஆதிகத்துக்கு என்ன மாற்றீடு முன்மாதிரியாக இருக்கும?;.நமது பண்பாட்டைச் சிறைப்படுத்திய பார்ப்பனியத்துக்கு நாம் தொடர்ந்து படியளப்பதும் அதையே நமது பண்பாடாக உணர்ந்து, எமது உடல்களை அதற்காகத் தாரைவார்ப்பதும் இன்றைய சர்வசாதரண வாழ்வியலாக நமக்குள் முகிழ்க்கும்போது அதை நிலைப்படுத்தும் தரணங்கள் மிகுதியாகக் கொட்டிக்கிடக்கிறது எமது சிந்தையுள்.அதை விலக்கும் மாற்று என்ன?இத்தகைய வியூகமற்றுச் செய்யப்படும் விவாதம் எத்துணை தூரம் மேற்சொன்ன சிந்தை-உளசார் விடுதலையைச் சாத்தியமாக்கும்?



//மேற்கின் குடியேற்றவாதிகளை எமது சொந்தநாடுகளிலிருந்து வெளியேற்றுவதென்பது உறைவிடம்சார் சுதந்திரப்படுத்துதலென்று கொண்டால், அவர்களின் கருத்தாக்கங்களும் வரலாற்றுப்படுத்துதலுமே முற்றுமுழுதாகச் சரியென்ற கருத்துநிலையிலிருந்து எம்மை விடுவிடுத்துக்கொள்வதிலான சுதந்திரம் கருத்துநிலைச்சுதந்திரமாகும். இதே கண்ணோட்டத்திலேயே ஈழத்தமிழரின் சிந்தை மீதான மேலாதிக்கவாதிகளின் சிறைப்படுத்துதலிலிருந்து விடுதலை பெறும் நிலையையும் நான் காண்கின்றேன். இவ்விரு உறைவிடம்சார் விடுதலைப்போராட்டத்தினை ஈழக்களத்திலும், கருத்துநிலைசார் விடுதலைப்போராட்டத்தினை பல்வேறு தகவலூடகக்களங்களிலும் சமகாலத்திலேயே நிகழ்த்தவேண்டிய அவநிலைக்கு நாம் உள்ளாகியிருக்கின்றோம்.//



மிகச் சரியான வரையறுப்பு.நல்லது!இந்தக் குடியேற்ற வாதிகளை வெளியேற்றிவிடுவது மிக இலகுவானது.ஆனால், அவர்களது கருத்தாகங்களும் வரலாற்றுப்படுத்தப்பட்ட விஞ்ஞான விளக்கங்களையும் அவ்வளவு இலகுவாக விட்டொழிக்க முடியுமா?இன்றைய மேலாண்மைச் சிந்தனையானது வெறும் கருத்துகளால்மட்டும் ஆனதில்லை.அது அவர்களது பொருட்களிலும்,மருத்துவ மற்றும் விஞ்ஞானத்திலும் மெருக்கேற்றப்பட்டு நம்மைத் தாக்குபவை.இன்றைய வர்த்தகக் கலாச்சாரமென்பதை எங்ஙனம் மதிப்பிடுகிறீர்கள் பெயரிலி?இதன் போசாக்கென்பது மூன்றாம் உலகத்தை ஏப்பமிடுவதிலும்,நுகர்வடிமையாக்குவதிலுங் மையங் கொள்கிறதென்பது உண்மையா? அப்படியாயின் இதற்கெதிரான போராட்டம் எல்லையைத் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடுமா அல்லது எமது வரலாற்றைப் புரட்சிகரமான முறையில் உந்தித் தள்ளி மாற்றை வைத்துப் போராடுவதில் நிசமாகுமா?இலங்கையை உதாரணமாக எடுத்தால் நமது சிந்தனையை நாம் நமது நோக்கிலிருந்து இதுவரை முன்னெடுத்தபோதெல்லாம் எமக்கு எதிரான ஆதிக்கக் கருத்துக்கள் மெல்லத் தாக்குகின்ற வரலாறு வெறுமனவே நம்மை வந்தடையவில்லை.அவை நமக்குள் இருக்கும் வளங்களாலேயே முன்னெடுக்கப்படுவதை நாம் எதிர்கொள்ளும் இன்றைய யதார்த்தத்தில்- அதை மேன்மேலும் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கம், அந்த மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்கும் தரணத்தில் எங்கே செல்லும்?அதை அப்பட்டமாக விடுதலைக்கான முன்னகர்வென்றழைக்க முடியுமா?


//இப்போராட்டங்களிலே எம் சுயத்தினையும் தேவைகளையும் அடையாளம் காணவேண்டும்; எம் காலம் சார்ந்த இருப்பின் தொடர்ச்சியினையும் பங்களிப்பினையும் நிறுவவேண்டும்; நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது புவிநிலை, கருத்துநிலைசார் விடுதலைகளை, ஈழத்தமிழரென்று கொண்டிருக்க நாம் ஆரம்பித்துச் செய்யவேண்டியது இதுதான்: "ஈழத்தமிழரின் சிங்களம் அண்டிய புவிசார் வரலாற்றோடு, கருத்துநிலைசார் அகிலத்தமிழர் என்ற பெருங்கூட்டத்தினுள்ளேயும் எம் தொடர்ச்சியான இருப்பும் பங்களிப்பும் குறித்த வரலாற்றினையும் ஆவணப்படுத்தவேண்டும்." எதிர்கால வரலாறு எம்மை விடுதலை செய்யவேண்டுமானால், எம் கடந்த கால வரலாற்றினை நாம் விடுதலை செய்தாகவேண்டும்; தங்கிநிற்கும் மோழைத்தனமும் இரண்டாம்நிலைச்சமூகமென்ற தாழ்வுணர்வும் நீங்கும்படியாக, மற்றவர்களுக்கீடான எமது சாதனைகள், பங்களிப்புகள் பதியப்பட்டாக வேண்டும்.//



பெயரிலி,இங்கே இன்னொரு மனவிருப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.தமிழர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனமான பாசப்பொழிவு புலப்படும் சிந்தனை இதுள் தூக்கலாக இருக்கிறது.அங்ஙனம் நீங்கள் கூறாதபோகினும் இதுள்மையமிடும் உணர்வு அத்தகையவொரு உணர்வினைத் தூண்டமுடியும்.எவ்வளவுதாம் நாம் முயன்றாலும் தமிழ்பேசும் உலகம் ஒரு தேசிய இனமாக இருப்பதற்கான ஒழுங்கமைக்கு குறைவானது.தமிழ் பேசுபவர்களை பல் தேசிய இனங்களாக இலங்கைக்குள்ளேயே நம்மால் பார்க்கமுடியும்.எனவே, அகிலவுலகத்துத் தமிழரெனும் பெருங்கூட்டத்துள் எமது தொடர்ச்சியை நிலைப்படுத்துவது அவ்வளவு இலகுவல்ல.அதுவும் அவசியமற்றது.ஏனெனில், நம்மைத் தொழிலால் ஒன்றுபடுத்திவிடமுடியும்.மொழியால் கூறிடப்படும் மானுடம்,தன் தொழிலால்-படைப்பால் ஒன்றுபடும்போது அங்கே ஒருமித்த மக்கள்பலம் தன்னையொடுக்கும் பெரு நகர்வை மிக இலகுவாக-வெளிப்படையாகப் புரிகிறது.இங்கே ஒடுக்கப்படும் அந்தக் கூட்டம் ஒடுக்குபவர்கள் தத்தம் இனங்களுக்குள்ளேயும்,வெளியேயும் கரங்களை இணைப்பதைப் புரிந்திட வாய்ப்புண்டாகிறது.இதுவன்றி நமது மானுடத் தொடர்ச்சியைக் குறுக்கி இனம்சார்ந்த-மொழிசார்ந்த அலகுகளுக்குள் இனம்காணும்போது, நிகழ்வது வெறும் உணர்வு நிலைப் புள்ளியில் தங்கும் பெருமிதம்தாம்.அங்கே செயற்கரிய வியூகம் அடிபட்டுப்போகிறது.எதிரியும் நமது இனம் எனும் பச்சோதாபம் எம்மை விடுவிக்கப் பங்கஞ் செய்து படிமத்துள் தள்ளும் நம்மை.கோழைத்தனமும்,இரண்டாம் நிலைச் சமூகம் எனும் உணர்வு நிலை எங்ஞனம் தொடர்ச்சியை வற்புறுத்தி இதுவரை நம்மைத் தொடர்கிறது.தனிநபர் வழிபாடு,ஏன்-எதற்கு என்ற கேள்வி ஞானமின்றிய கட்சி-இயக்க விசுவாசம்,நக்கிப் பிழைப்பதே சாலச் சிறந்ததாக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சினிமாத்தனமான கருத்தாடல்,தனிமனிதவாதம்.இவைகளெல்லாம் ஓட்டுமொத்தமாகவுள்ள ஒரு சமூகம் அதிலிருந்து விடுபடும் பண்பாட்டுப் புரட்சிக்கு எவர் தடைக்கல்லாக இருக்கிறார்கள்.அகவிடுதலையென்பது புறவிடுதலையோடுமட்டுமே சாத்தியமாகும்போது,அகத்தைப் புறத்திலிருந்து பிரித்தெடுதுப்பார்த்தல் அகவயக் குறைபாடுதாமே?எல்லைகளை விடுவித்துப் புவிநிலைசார் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.எங்கே தேசியத்தன்மைகள் அழிகப்பட்டனவோ அங்கே அந்த அலுகுகள் மீளக் காக்கப்பட்டு,அது சார்ந்த பொருளாதாரச் சுதந்திரமின்றி புவிசார் விடுதலை கனவிலும் சாத்தியமில்லை.இது எல்லா வகைப்பட்ட விடுதலைக்கும் புறநிலையாக இருக்குமொரு முன் நிபந்தனை.அதை மறுதலித்தபடி நாம் சொல்லும்-செய்யும் விவாதம் உட்புறுத்துள் ஊனத்தைக்கொண்டபடி கருத்து நிலையில் தோல்விக்கான காரணங்களை வேறொரு பொருளில் பேச முற்படும்.


//இப்படியாக, எதிர்கால இருத்தலை, சமூகத்திலே எமக்கான பங்கை நிச்சயப்படுத்தும் நோக்குடனேயே, நாம் இங்கே தமிழரின் வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழிணையவரலாற்றினையும் காணவேண்டும். மகாவம்சமும் பரணவிதாரணவும் அடித்துப்போட்டுப் போட்டு நிலையற்று அலையும் ஈழத்தமிழரின் கடந்த புவிசார்வாழ்வுக்கு ஈடான ஓர் இரண்டாம்நிலை(இணைய)த்தமிழ்வாழ்வினையே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' என்ற சொல்லாடல், இச்'சுதேசமித்திரன் பாரம்பரிய'த்தை, அதைச் சார்ந்திருக்கின்றவர்களின் கதைகளுக்கு அப்பாலான எத்தமிழருக்கும் வழங்கும். மாலன் + லேனா தமிழ்வாணன் போன்றோரின் "வெறும் ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் என்பதைக் கொடுத்தவர்கள் நாம்" என்ற சொற்றொடர் வெறுமனே எஸ். பொன்னுத்துரை என்னும் ஒருவரின் நாவடக்கமுடியாத எதேச்சைப்பேச்சுக்கான எதிர்வினையென மட்டுமே கருதிவிட்டுப்போகமுடியாது. அக்கூற்றின் அடியிலேயிருக்கும் குமுதம்+கல்கண்டு ஆசிரியர்களின் நுண்ணரசியல், எம் சிந்தைத்தளத்தினை, அவர்கள் தருவதே வரலாறு என்ற கருத்துநிலைத்தளத்திலே அடக்கி ஒடுக்கும் தன்மையிலேயே எள்ளலாக வெளியிட்டுக் கக்குகின்றது.// "



...புவிசார் வாழ்வுக்கு ஈடான இரண்டாம் நிலை(இணைய)தமிழ்வாழ்வினையே சுதேசமித்திரன் பாரம்பாரியம் என்ற சொல்லாடல்..."பண்டுதொட்டு தமிழக வர்த்தகச் சஞ்சிகைகள் உலகு தழுவிய சந்தைக்காகத் தமிழ்பேசும் உலகத்தை மொட்டையடிப்பது வெறும் பொருட்தளத்தில் மட்டுமல்ல.அது அதைத் தக்க வைப்பதற்காகவே உள்ளேயும் வெளியேயும் பற்பல சிறப்பான மேலாதிக்க மனோபாவதைக் கருத்துக்களாகக் கொட்டுகிறது.இது வெறுமனவே ஒரு இனத்தின்மீதான காழ்புணர்வொடு சம்பந்தப்பட்டதல்ல.அதிகாரத்தைச் சந்தையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனா முயற்சியென்ற வகையில் பெயரிலியின் இக் கூற்றோடு உடன்படமுடியும்.அது மட்டுமன்றி ஒருகமைந்த செயற்கையான இந்தியாவில் தாம் கொண்டிருக்கும் ஆதிகத்தைத் திறம்படத் தக்கவைப்பதும்,ஒட்டச் சுரண்டுவதற்கும் இத்தகைய கருதாண்மை அவசியமாவும் இருக்கிறது.இது தமிழகத்தின் விடுதலையை மொட்டையடிப்பதற்காக ஈழத்தமிழ் மக்களின் சுய விடுதலையைக் கொச்சைப்படுத்தும்.இங்கே சோ இரமாசாமிபோன்ற காரியவாதப் பார்ப்பனர்கள் இதுள் முக்கிய பங்காற்றுவார்கள்.இவற்றுள் பற்பல அடுக்குகளாகப் பார்ப்பனக் கருத்தாண்மை நம்மைப் பலவீனப்படுத்திப் பண்பாட்டு ஒடுக்குமுறையையும்,உளவியற் தாக்குதலையுஞ் செய்கிறது.அந்தத் தளத்தின் உறுப்புக்களாக இருப்பவை இன்றைய ஊடகங்களே.



//சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பிய தமிழகம்போலவேதான், வீரகேசரிக்கு வந்த வரா உம், இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு வந்த இசை கற்பித்த மஹாராஜபுரம் சந்தானமும் பின்னாளிலே தமிழகத்திலே பெயர் பெறும்வரை வாழ இலங்கையும் வழிசெய்ததென்பதை 'சுதேசமித்திரன் பாரம்பரியக்காரர்கள்' மறை/றந்துவிடுகின்றார்கள். (ஒரு வலைப்பதிவு நண்பர், தாம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கர்நாடக இசைச்செல்வி ஒருவரிடம் ஈழத்தின் பிரபலமான சில இசைக்கலைஞர்களின் பெயர்களைச் சுட்டிப்பேசியபோது, "யார் அவர்கள்?" அச்செல்வி கேட்டதாகச் சொன்னார்) தமிழக ஆதீனங்களுக்கு ஆறுமுகத்தம்பிரான்களையும் ஈழம் தந்திருக்கின்றது (திருவண்ணாமலை ஆதீனம்)2; அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துக்கு விபுலாநந்தரைத் தந்திருக்கின்றது; கனகசுந்தரம்பிள்ளை, தமிழ் அகராதி கண்ட கதிரவேற்பிள்ளை ஆகியோரைத் தந்திருக்கின்றது; வி. கல்யாணசுந்தரம் சொல்வதுபோல "சுவாமிநாதையர் கூரைபோட உதவிய தமிழ்ப்பதிப்புலகுக்கு, அடிக்கல்லிட்ட ஆறுமுகத்தையும் சுவர்கட்டியெழுப்பிய தாமோதரம்பிள்ளையும்" தந்திருக்கின்றது. தமிழாராய்ச்சி மகாநாட்டினைத் தொடங்க, உழைக்க தனிநாயகத்தினைத் தந்திருக்கின்றது. (அதன் தொடர்ச்சியான தமிழாராய்ச்சி மகாநாட்டிலே சிதம்பரத்திலே ஆறுமுகநாவலரின் சிலை எழுப்பப்படும் என்று அன்றைய தமிழக அரசுத்தலைமைச்செயலர் சொல்லியும் அது தவறிப்போயிருக்கின்றது.2 தொடர்ச்சியாக, ஜெயலலிதா முதல்வராகவிருந்தபோது, ஈழத்திலிருந்து தமிழாராய்ச்சி மகாநாட்டுக்குப் போன தமிழறிஞர்களைச் சிறைவைத்த சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றது. இஃதெல்லாம் எப்பாரம்பரியத்தின் வழிப்பட்டது? சுஜாதா ரங்கராஜன்கூட "சிங்களத்தீவுக்கோர் பாலமமைப்போம்" எழுதினார். அந்நேரத்திலே மாலன் என்ன செய்தார்? கற்கண்டு இலெட்சுமணன் என்ன செய்தார்?) தமிழிலக்கியவிமர்சனத்துறையிலே மார்க்ஸிய அணுகுமுறைக்கு கைலாசபதியையும் சிவத்தம்பியையும் காலத்தே முந்தியதாக ஈழம் தந்திருக்கின்றது; தலித் எழுத்து முன்னோடியாக, 'பஞ்சமர்' டானியலைத் தந்திருக்கின்றது; கவிப்படிமத்துக்கும் ஒரு பிரேமிளை, அவரைத் தமிழகத்தவரென்றே மயங்கிக்கொள்ளுமளவுக்குத் தந்திருக்கின்றது.//



·பெரும்பாலும் பெயரிலி குறிப்பிடாத இன்னொருவிடயம் இங்கே உண்டு.ஆளும் வர்க்கக் கருத்தியல் தளத்தில் நிற்கும் அவர்களிடம் இவற்றைக் கோரிக்கையாகவோ அல்லது மறந்துவிடுகிறார்களென்றோ கூறுவதற்கில்லை.ஒவ்வொரு வர்க்கமும் தன் தன் வர்க்க நலனுக்குச் சாதிய நலனுக்கொப்பவே காரியமாற்றும்.இது அனைத்து மக்கள் கூட்டத்திடமும் நிலவும் விஷயம்.இதை இப்படியும் பார்க்கலாம்.ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற சுயகெளரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம் ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப் பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக விரியவேண்டியுள்ளது.அதாவது, ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த நிறமும் இல்லை.அவர்கள் சாரம்சத்தில் பொதுவானவொரு வர்க்கக் கூட்டைக் கொண்டிருக்கிறார்கள்.இன்று ஆறுமுகத்தைப்பற்றிக் கூறுகையில் அவர் ஆசான்,நாவலர் என்று ஒளிவட்டம் உண்டு.ஆனால், அவரது மறுபக்கமோ அப்பட்டமான சாதி வெறியன் என்பதாக விரியும்.ஊருக்கு ஊர் எழுந்த "சைவப்பிரகாச வித்தியாலயம்"எனும் ஆரம்பப்படசாலைகளுக்கூடாக நாம் காணும் சமூக யதார்த்தம் என்ன?இது தாழ்த்தப்பட்டவர்கள் அரச கலவன்பாடசாலையுள் உள்வாங்கப்பட்டதற்கு எதிர்க்கும் முகமாக எழுந்ததா இல்லையா? இந்த ஆறுமுகத்திடம் இருந்த ஆதிக்க-மேலாதிக்க மனம் எந்தக் கருத்தால் வடிவமைக்கப்பட்டது?தமிழரசுக் கட்சியும்,இராசலிங்கம் போன்ற தாழ்த்தப்பட்ட அரசியல் வாதிகளின் நிலையும் புரிந்துகொள்ளத்தக்கதே.ஏன் இன்றைய உண்மையானவொரு சமூக யதார்த்தம் பேராசிரியர் சிவத்தம்பியின் திறமைக்கு என்ன தகுதியை வழங்கியதென்பதைப் புரிவதில் தெளிவுறும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் முதல்வர் பதவிக்கு அவரைவிட அறிவிலும் வயதிலும் கீழ்மைப்பட்டவர்கள் வந்தபோதும் இவருக்கு மறுப்பு எந்தவடிப்படையில் நிகழ்ந்தன?அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்குத்தானே?




//இப்படியாகவே, கருத்துநிலையிலே தமது சொந்த(த் தமிழ்)ச் சமூகத்துள்ளேயே இரண்டாம்நிலைக்குடிமக்களாக உணராதிருக்கும் சுதந்திரம்வேண்டியே எவ்வரலாற்றினையும் - தமிழர் நிகழ்நிலை வரலாற்றையோ, மெய்நிகர் இணைய வரலாற்றினையோ - நாம் திருப்பியும் திருந்தவும் சரியான தரவுகளைத் தாங்கி எழுத வேண்டிய அவசியமேற்படுகின்றது. எம் மொழி,குடி, பண்பு வரலாற்றை நாம் மாலன் போன்றவர்களின் கைகளிலிருந்து விடுதலை செய்யவேண்டியதாகின்றது. வாய்ஸ் ஆப் விங்க்ஸ் போன்ற நண்பர்களுக்கு (மீள) வரலாற்றினையெழுதலின் தேவையின்மையும் அதன் முக்கியம் உணர்வதற்கு முடியாததாக வெறும் உணர்வின் அடிப்படைப்பட்ட வெற்றுக்கூச்சலாகவும் படலாம். ஆனால், எனக்கு அப்படியாகத் தோன்றவில்லை. இணையத்தமிழ்வரலாற்றைப் பேசுவது மாலனுடன் வாதத்தினை வெல்வதற்குமப்பால், தனக்கென்றே ஒரு வரலாற்றுத்தேவையமைந்தாயுள்ளது//




இங்கே எவர் எவரிடமிருந்து வரலாற்றை விடுவிப்பது?வரலாற்றைப் படைப்பவர்கள் எவர்கள்?எந்த வரலாற்றை விடுவிப்பது?மாலனின் கைகளில் வழமையாக இருப்பது ஊடகப் பலமும்,அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்தின் கருத்துநிலை ஆதிக்கப்பலமும்தாம்.இதைக் கடந்து மாலன் வரலாற்றைத் தடுத்திடவோ அல்லது திசை திருப்பிடவோ முடியாது.வரலாறு தன் ஓட்டத்தோடு நம்மை அழைத்துச் செல்கிறது.எம் மொழி,குடி,பண்பு வரலாற்றை நாம் மாலனிடமிருந்தல்ல விடுவிப்பது மாறாக நிலவுகின்ற இன்றைய சமுதாய அமைப்பிடமிருந்தே விடுவிக்க வேண்டும்.மாலன் சேவகன்.ஒரு மாலன் போனால் பற்பல மாலன்கள் பின்தொடர வாய்ப்புகள் அதிகம்.இந்த அமைப்பைத் தூக்கி நிறுத்தும் கருத்தியல் தளத்தை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மிகப் பெரும் பலம் பொருந்திய தளத்தை நமக்குள் பண்பாட்டு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும்,சமூகவுளவியற்றளத்திலும் மிக ஆழமாகவூன்றியுள்ளன.இவற்றைக் கடந்து நாம் வரலாற்றை விடுவிப்பது என்பதைவிட அதைப்படைப்பவர்களாக ஒருமைப்பட வேண்டும்.ஏனெனில,; வரலாற்றைப்படைப்பவர்கள் உழைக்கின்ற மக்கள் கூட்டம்தாம்.வரலாறென்பதைத் தனிநபர் திருத்தலாக்கிவிட முடியாது.அங்ஙனஞ் செய்யப்பட்ட சிங்கள வரலாற்றுப் புனைவுகளின் இன்றைய இழி நிலையை நாம் ஆளும் வர்க்கத்தின் குருதி தோய்ந்து பற்களினு}டாகப் பல்லிளிப்பதைக் காணமுடியும்.எனவே, புனைவுகள்,புரட்டல்களைப் பண்டுதொட்டுச் செய்த வரலாற்றுக் காரணங்கள்,தேவைகள் இன்றும் நிலவுவதை இனம் காண்பதே சாலச் சிறந்தது.அதையொட்டியே பாரிய அறிவுத் தேடலையும்,குறிப்புகளையும் சமூகப் பொறுப்போடு செய்யவேண்டும்.அங்ஙனம் செய்யாத நிலையை எய்வதற்காக மாலன்கள் குறுக்கே நின்று கல்லெறிவதைக் குறித்து விவாதிக்க முடியுமேயொழிய அவரிடமிருந்து வரலாற்றை விடுவிப்பதென்பது மிகை மதிப்பீடு.



//எமது கருத்துகள் இந்திய இராணுவத்தின் இலங்கைக்கான வருகையின் பின்னால், ஒரு போதும் இச்சஞ்சிகைகளிலே, ஊடகங்களிலே தெரியப்படுத்தப்பட்டதில்லை. கிட்டத்தட்ட ஈராக்குக்கு படையினரோடு சென்ற அமெரிக்கப்பத்திரிகையாளர்கள்போலவே தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்கள் செயற்பட்டுக்கொண்டார்கள். இராம், மாலன், சோ போன்ற இதழாசிரியர்கள் இன்னமும் ஒரு படி மேலே சென்று இந்த அரசியலிலே தமக்கான ஒரு நிலைப்பாட்டினைக்கூட எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு அப்படி எடுக்க இருக்கும் உரிமையை எவ்வகையிலும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர்களாகவிருக்கும் ஊடகங்கள், சஞ்சிகைகள், செய்திநிறுவனங்களிலே பணம் விட்டு வாங்கிக் காணும் எல்லா வாசகர்களுக்கும் பேதமின்றிக் கருத்தினைச் சொல்லும் சந்தர்ப்பத்தினையும் செய்திகளைச் சரியான தரவுகளோடு எவருக்குச் சாதகம்-பாதகம் என்றில்லாமலே தந்திருக்கவேண்டும். ஆனால், ஒருபோதும் செய்யவில்லை. எங்கள் குரலைக் கேட்கவிடவில்லை.//




இதுதாம் இன்றைய மிகப் பெரிய அப்பாவித்தனம்.யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?முடிந்தால் சோபா சக்தியைத் தமது தேவைக்காகப் பயன்படுத்த முனைவார்கள்.அங்கே, நமது குரல் பதிவிடப்படுவதல்ல நோக்கம்.தமது நோக்குக்கு உரம் சேர்ப்பது.அந்த வகையில், இவர்களிடம் போய் நம் குரலைக் கேட்கவில்லையென்பது அப்பாவித்தனமா இல்லைப் புத்திஜீவிதத் தொந்தரவா?என்றைக்குமே ஆதிக்கத்தை நிலைப்படுத்துபவர்களின் ஊடகங்களும்,அவர்களின் பரபலங்களும் தம்மிலும் கீழானவர்களுக்கு எந்த வகை உதவிகளைச் செய்துள்ளார்கள்.தொடர்ந்தும் எங்கள் கால்களில் விழுந்தொழும்வுவதற்கான தளங்களையும்,வலைகளையும் உதவி-மனிதாபிமானம் என்ற முகமூடிக்குள் ஒழிந்தாற்றும் கபடம் அறியத் தக்கதுதாமே?இதிலிருந்து இவர்களைப் பிரித்துப் பார்க்க முடியுமா?இத்தகைய ஒடுக்குமுறையாளர்களிடம் எந்தச்"சாதகம்-பாதகம்"என்ற அளவுகோல் முன்னிலைப்படும்?அதென்ன அவர்களுக்கிருக்கும் உரிமை?தமது எஜமானர்களுக்கு வாலாட்டும் உரிமையா?அந்த உரிமைக்குள் இருக்கும் நரித்தனம் இன்னொரு இனத்தின் விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்குமானால் அதைக் குறித்து என்ன வகைமாதிரியான அணுகு முறையை நாம் செய்யவேண்டும்.ஐயோ,அவர்கள் எங்கள் குரலைப் பதிவிடவில்லையே என்ற ஆதங்கமா?பெயரிலி இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.அதை இங்கே மிகவும் கவனமாகச் சுட்டுகிறேன்!



//இத்தனைக்குப் பிறகு, இப்படியான அவலச்சூழலிலே அவம்சுமக்கும் தன் ஊடகவியலாளர் முகத்தினை இன்னமும் இணையத்திலே(யும்) காவி வந்து "விடுதலைப்புலிகளையா இந்துவையா உலகம் நம்பும்?" என்று மாலன் வெட்கமின்றி எம்மிடம் கேட்கும்போது, இத்தனை ஆண்டுகளாக குமுதத்துக்கும் இந்தியா ருடேக்கும் நான் விட்டழித்த காசின் பெயரினாலே, தமிழகச்சஞ்சிகைகளில் இழந்த நம்பிக்கையின் பேரால், ஒரு வாசகனாக, ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளனாக, அவரிடம், அவரது பத்திரிகாதர்மம் மேலே, இங்கே -அவர் தப்பித்துப்போகமுடியாத,என் குரலும் அமுக்கமுடியாது கேட்கும் இணையத்திலே- கேள்வி கேட்காமல், வேறெங்கே, வேறு யாரிடம், வேறெப்போது, வேறெதைப்பற்றி நான் கேட்பது? இதைக் காழ்ப்புணர்விலே கேட்கின்றேன் என்று அவர் கருதினால், "இத்தனை நாள் உங்கள் உற்பத்திகளைத் தரம், குணம், மணம் பற்றியேதும் கேட்காமல் வாங்கிக்கொண்டேயிருந்த எங்களின் அவலங்கள் பற்றி ஒரு சொல் உங்கள் சஞ்சிகைகளிலே, செய்திகளிலே உங்கள் நாட்டுக்கோ, இராணுவத்துக்கோ மாற்றானதாக விடாத உங்களின் உணர்விலே எம்மைப் பற்றிக் காழ்ப்பிருந்திருக்கவில்லையா? ஓர் இரண்டாம்நிலைத்தமிழர்களென்ற கீழ்நோக்கிய பார்வையிருக்கவில்லையா? " என்று நான் எதிர்க்கேள்வி கேட்கலாமா? //




பெயரிலி இது எங்களது தவறேயன்றி அவர்களது தவறில்லை.நாம் நம்மை அறிவதில் நாட்டமின்றிப் பொத்தாம் பொதுவான கருத்து நிலைகளால் சூழப்பட்டபோது இங்ஙனம் காரியமாற்றினோம்.குமுதம்,ஆனந்தவிகடன் எம்மைக் கவருவதற்கான அவர்களது தந்திரத்தால்மட்டுமே ஏமாற்றப்பட்டோம்.அவர்கள் ஒருபோதும் தம்மை நம்பும்படி நமக்குக் குரலிடவில்லை.அவர்களது நலனையும்,அவர்களது வர்க்கத் தளத்தையும்"தமிழர்கள்"எனும் பொதுக் கூப்பீடால் ஒதுக்கிவிட்டுப் பார்த்தோம்.ஒவ்வொரு அரசியல் முன்னெடுப்பிலும்-போராட்டப் பாதையிலும் முதலில் புரியப்பட வேண்டிய அரசியலறிவானது நாம் யார்?எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இங்கே வர்க்க ஒடுக்குமுறை எந்தத் தளத்தில்,எப்படி நிகழ்வதென்பதே!இதைக்கடந்த எந்த உறுவுகளும் மானுட சமூகத்துள் நிலவ முடியாதென்பதற்கு இதுவொரு உதாரணம்.





//இப்போது, சொல்லுங்கள், மாலன், உங்களைப் போன்ற ஒரு தமிழ்ப்பத்திரிகையாளரிடம், வாய்ப்பாகிப்போன எனது-உங்களது என இருபக்கக்குரல்களும் கேட்கக்கூடிய இணையத்திலே, கேட்காமல், வேறு யாரிடம் நான் இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே என் ஈழம்-இந்தியா பற்றிய கேள்விகளையும் உங்களின் பத்திரிகாதர்மங்களின் இரட்டை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிலைப்பாடுகளைப் பற்றியும் கேட்பதாம்?//



இங்கே கேள்விமட்டுமல்ல பெயரிலியின் சமூகப் பார்வையே முக்கியமாகும்.அவரது வர்க்க அறிவுப்பரப்பும், அதை அவர் எந்த வர்க்கஞ்சார்ந்து சிந்திக்கிறாரென்ற நோக்குமே இனி முக்கியம் பெறும்.இது நாள் வரை இப்படிச் சிந்தித்துவிட்டோம்.இனியும் இப்படியல்ல.அவர்களைத் தோலுரித்து ஆதிகத்தை-அதிகாரத்தை உடைப்பதற்கான அறிவை எழுத்து மூலம் வைப்பதே சாலப் பொருத்தம்.அப்படிச் செய்யும் ஆற்றலும்,அறிவும்,அநுபவமும் உங்களுக்கு உண்டு.அந்தப் பலங்களினு}டே நீங்கள் எழுதும்போது மாலனிடமிருந்தென்ன மற்றெல்லோரிடமிருந்தும் நாம்,நம்மை விடுவிக்க முடியும்.




ப.வி.ஸ்ரீரங்கன்

29.07.2007

-/பெயரிலி. said...

அநாமதேயர்கள், டிசே, கொண்டோடி, உமையணன், செல்வராஜ் நன்றி


ஆனா. அனானி,

/1. உங்கள் கேள்விகள் மாலனை நோக்கி இருப்பினும், மற்றவர்களும் அறிய வேண்டிய விடையங்கள் இருப்பதால் இனிவரும்
பதிவுகளை கொஞ்சம் இலகுவாக்க முடியுமா?/
:-) முயற்சிக்கின்றேன். இயன்றவரை முயன்றாலுங்கூட, பழக்கம் தொத்திக்கொள்கிறது


/2. எப்போதுமே "விமர்சனத்தன்மையுள்ள" வாசிப்பு கொண்டிருக்க முடியுமா?/
படைப்புகளை நயக்கும்போது தேவையில்லாமலுமிருக்கலாம்; ஆனால், 'வரலாற்றுத்தரவுகளை'க் கேட்கும்போது, பாட்டன்பாட்டி மடியிலிருந்து, "பிறகு... காக்கா வடையைத் தூக்கிக் கொண்டுபோய்..."என்று கேட்கும் கதைகேட்கும் குழந்தைத்தன்மையில்லாமல், "வடையைத் தூக்கின காக்கா வளமான இடம் பார்த்து இருந்துதானா சாப்பிடும்?" என்று கேட்கும் விமர்சனக்கூர்மையேனும் குறைந்தளவு இருக்கவேண்டாமா?

/3. பதிப்பு/தொலைக்காட்சி ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் - வேற்று உடகமான இணையத்தில் வைக்கப்படலாமா? எதிர்கொள்ளப்படலாமா?/
சுஜாதா போன்றோர் இணையம் மீதான தம் வி(மர்)சனங்களை இணையம் வசப்படாத இலட்சக்கணக்கான வாசகரிடத்திலே வைக்கும்போது, பதிப்பு/காண்கேள் ஊடகங்களையும் உள்வாங்கும் இணையப்பயனாளிகளிடம் அவற்றின் மீதான விமர்சனங்களை வைப்பது தவறல்ல. மாலன் போன்ற பதிப்பு/காண்கேள் ஊடகவியலாளர்கள் இணையத்திலிருக்கும்போது, அவர்களிடம் கேள்விகளை வைக்கும் சாத்தியம் கைவசப்படுகின்றது. தவிர, எது பற்றிய விமர்சனமாயினும், எமக்குச் சாத்தியமான, எம்மை வெளிப்படுத்தக்கூடிய தளங்களிலேயே வைக்கப்படமுடியும். குமுதம் என் கருத்தினைப் பதிப்பிக்காதென்ற நிலையிலே, எனக்கான சாத்தியம் என்ன?


/4. எனது பார்வை எனக்கு. எனது பார்வையை மற்றவர்கள் மீது திணிக்கலாமா? /

இக்கேள்வி இங்கே எதற்காக என்று எனக்குப் புரியவில்லை. என்றாலும், நான் புரிந்துகொண்டவளவிலே, பார்வையைத் திணித்தல் என்பது ஒன்று; மற்றவர் பார்வையிலே (தரவிலே) இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுதல் என்பது இன்னொன்று. வரலாற்றுக்குப் பார்வையிருக்கலாம்; பக்கமிருக்கலாம்; ஆனால், தரவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் "யார், எப்போது, எங்கே, எப்படி" மட்டுமேயிருக்கலாம்.

/5. எப்போது pdf font பிரச்சனை தீரும்?/

நல்ல கேள்வி; திறந்தவெளியிலே எழுத்துரு எவரும் பயன்படுத்தக் கட்டுகையிலே தீருமென்றுதான் என்னைப் போன்ற தொழில்நுட்பக்குறைவுள்ளவர்கள் சொல்லமுடியும் :-) யாராவது தொழில்நுட்பம் நிறைந்தவர்களே இதற்கான பதிலைத் தரவேண்டும்.


/6. ஈழத்தவர் - தமிழக ஊடகங்களில் மயங்கி இருப்பது எதனால்?/
இஃது ஆட்தொகை, உள்நாட்டு அரசியல் தந்த ஆரம்பகால அழுத்தத்தின்பாற்பட்ட விளைவின் நீட்சியென்றே படுகின்றது. இதுபற்றிய புரிதலும் மீளக்கூடிய சந்தர்ப்பமும் விழிப்பும் ஓரளவுக்கேனும் பரவலாக வந்தபோது, ஈழத்தவர்கள் பரந்தோடவேண்டிய அரசியற்சூழலேற்பட்டிருக்கின்றது.
==================

இளங்கோவன், ஸ்ரீரங்கன் உங்கள் பின்னூட்டங்களிலே பின்னால்.

Anonymous said...

hey malan talked about you in his speech on net ethics at the workshop.

Anonymous said...

/hey malan talked about you in his speech on net ethics at the workshop. /

அந்தாளு இன்னா சொன்னாருன்னா..

வேணாம் நைனா விட்டுரு..எதுக்கு வம்பு

-/பெயரிலி. said...

அவர் என்ன எப்போது சொன்னார் என்று தெரியும். பெரிய விடயமில்லை. அவரிடம் இப்படியான செயற்பாடுகள் எதிர்பார்த்துதான். சீன கம்யூனிஸ்டு சார்பு இந்து இராமின் மகள் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதைச் சுட்டிய காரணத்தை விளக்கியபின்னரும் நெறிப்பட்ட்ட குமுதம் சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியருக்கு இணைய நன்னடத்தைக்கு இஃது எதற்காக உதாரணமாகத் தோன்றவேண்டுமென்பதற்குக்கூட ஓரளவுக்குக் காரணத்தைத் தேடிப் பிடித்துக்கொள்ளலாம் (செல்வேந்திரன் போல கண்ணைமூடிக்கொண்டு மாலன் சார்பாக மற்றவர்களை வேலையற்ற அறிவிலிகளென்று எண்ணிக்கொள்ளும் இரண்டுபேர் பட்டறையிலும் அகப்படக்கூடுமென்று அவர் எண்ணியிருந்திருக்கலாமோ என்னவோ?).

ஆனால், வலைப்பதிவர் நன்னடத்தை வரையறைக்குள் ஈழத்தமிழர் இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன் இருப்பது பற்றியும் பேசவேண்டி வருமென்று(ம்) இன்றுதான் புரிந்துகொண்டேன். அப்படியான வலைப்பதிவர்நெறியுடனான பேச்சுக்குக் களம் அமைத்துக்கொடுத்த சென்னை வலைப்பதிவர்பட்டறையினருக்கு - குறிப்பாக, மாலனிடம் மேலே பேசவிடாமற் தடுத்தாட்கொண்ட எல்லோருக்கும் நல்லவரான *.******க்கு - நன்றி. அவ்வளவுதான் இப்போதைக்குச் சொல்லலாம்.

-/பெயரிலி. said...

ஒருவர் இல்லாதவிடத்து அவரைப் பற்றிய அவதூறுகளை வலைநெறிகளின் பெயரிலே இன்னொருவர் பேச இடமளித்த, அதைக் கண்டிக்காத, பேசியவரிடம் கேள்வி எழுப்ப முயன்றவரைமட்டும் "இதற்கான இடம் இதுவல்ல" என்று சொல்லித் தடுத்த குறிப்பிட்ட நிகழ்ச்சியின் மட்டுறுத்தனருக்கும் பட்டறையிலே பேசப்படுகின்ற விடயங்களின் உள்ளடக்கங்களை முன்கூட்டியே பார்க்காத, அல்லது அறிந்தும் அலட்டிக்கொள்ளாத மற்றைய சென்னைவலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களுக்கும் இப்பின்னூட்டத்தின்மூலமாக நன்றியைத் தெரிவிக்கவிரும்புகின்றேன்.

அற்புதன் said...

பெயரிலி,

உங்கள் வாசிக்கும் பரப்பு என்னைப் பலதடவை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.எப்படி உங்களால் வாசிப்பதற்க்கு இவ்வளவு நேரத்தை ஒதுக்க முடிகிறது?

மாலனின் அரசியலை ஆதாரபூர்வமாக கட்டுடைப்பது அவசியம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.காலம் காலமாக வரலாறு என்பது வளங்களைக் கொண்டிருப்போரால் தான் எழுதப்பட்டு வருகிறது.வென்றவர்களின் வரலாறே ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறாகப் போயுள்ளது.இணைய வெளி இதனை இப்போது மாற்றி விட்டுக் கொண்டு வருகிறது என்பதுவும் உண்மையே.பெரு ஊடகச் செலாவாக்கினை இணய வெளி கேள்விக்குள்ளாக்கி வருவதன் ஒரு வெளிப்பாடகவே உங்கள் பதிவுகளைப் பார்க்கலாம்.அதற்கு அப்பால் தமிழ்க் கணனிமை என்பது கணனிமை வரலாற்றில் பொன் எழுதுக்களால் பொறிக்கப் பட வேண்டிய நிலையை என்றுமே எட்டப் போவதில்லை.குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் தமிழ் இலக்கியக்காரர்களின் நிலையிலையே தமிழ்க் கணனிமையும் கட்டுண்டு இருக்கும்.(வருங் காலத் தமீழீழ அரசு
பெரும் மூலதனத்தை இதற்கென செலவழித்தால் மாற்றங்கள் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில் ஏற்படலாம்)

மாலனின் ஈழம் சம்பந்தமான ,'மக்கள் ஆதரவு = தொப்பிக்கலத் தோல்வி' என்பதற்கு ஒரு பதிற் பதிவு எழுத வேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டது.ஆனால் எழுதவில்லை, ஏனெனில் 'செய்துவிட்டுத் தான் சொல்லுவோம்', அதுவரை பொறுத்திருப்பதாக உத்தேசம்.;-)

மாலனின் ஈழம் சம்பந்தமான கதையாடல்களுக்கான உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தபடி..

-/பெயரிலி. said...

அற்புதன்,
பின்னூட்டத்துக்கு நன்றி. ஸ்ரீரங்கன், இளங்கோவனுக்கும் பதில்கள் தரவேண்டியுள்ளன.
மாலனை மையமாக வைத்து எழுதுவதற்கு இன்னுமொரு காரணமுமுண்டு (ஓரளவுக்கு நான் இரண்டாம்கூற்றிலே இறுதியாகச் சொன்ன காரணத்தின் பொதுமைப்படுத்தல் என்றும் கொள்ளலாம்).

மாலனை, ஒரு குறிப்பிட்ட, அறியப்பட்ட அறிவுஜீவிகுழாம் என்று முகத்தினை வைத்துக்கொண்டு, தமிழகத்திலும் ஓரளவுக்கு விரிய, இந்தியாவிலும் ஈழத்தினைப் பற்றிய கருத்துகளை முன்வைக்கின்றவர்கள், பரப்புகின்றவர்களின் பிரதிநிதியாகவே பார்க்கின்றேன்.

அவர் வலைநெறி பற்றி, இடம், பொருள் நெறிகள் பிறழ்ந்து வைத்ததைக் கேள்வி கேட்பதைக்கூட, "கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்று சென்னை வலைப்பதிவர் பட்டறையினை நடத்திய மா. சிவக்குமார், "தெருநாய்களுக்கு எவன் கல்லெறிந்தால் என்ன" என்பதுபோல அலட்சியமாகச் சொல்லிவிட்டு நகருமளவுக்கு இவர் தன் பெயரினாலும் பிரபலத்தாலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றாரென்றால், நாங்கள் அவதானமாகவிருக்கவேண்டும். இணையத்தினையும் தன/மதென்று - குமுதம், சன் தொலைக்காட்சி இவற்றின் ஊடகநெறிகளை ஊடுருவி, - கைக்கொள்ள இவரும் இவரைப் போன்றோரும் மீண்டும் மீண்டும் படையெடுத்து முயல்வதைத் தவிர்க்க, இயன்றவரை இவரின் பொய்மைத்தனத்தினையும் இரட்டைநிலைப்பாடுகளையும் தகுந்த ஆதாரங்களுடனும் நேர்மையுடனும் நிதானமாகவும் முயற்சி செய்யவேண்டும். வலைநெறியைப் பற்றிய விரிவுரையிலேயே அச்சமின்றி அந்நெறி பிறழ்ந்து எதிராளியின் குரலுக்கு இடம் கொடுக்கமுடியாத வகையிலும் தன் சொந்த அரசியலை உட்திணிக்கும் வகையிலும் பேசுகின்றவர் தன்னை நிலைப்படுத்த எவ்வூடகத்தினையும் எவ்விதத்திலும் கையாள்வார். மா. சிவக்குமார், சென்னை வலைப்பட்டறை அமைப்பாளர்கள் போன்ற இவரது ஈழம் தொடர்பான அரசியல் ஓரளவுக்குப் புரிந்தவர்களே ஏதோ காரணத்தினாலே அவரின் செய்கைகளைக் கண்டும் காணாது அனுமதிக்கின்றபோது, செல்வேந்திரன் போன்ற இவரது அரசியலின் அடியும் நான் சொல்வதின் நுனியும் புரியாதவர்களிலோ, புரிந்து கொள்ள அக்கறை கொள்ளாதவர்களிலோ இவர் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பினைப் பற்றி என்ன சொல்வது? என்ன செய்வது?

இளங்கோ-டிசே said...

/வலைப்பதிவர் நன்னடத்தை வரையறைக்குள் ஈழத்தமிழர் இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன் இருப்பது பற்றியும் பேசவேண்டி வருமென்று(ம்) இன்றுதான் புரிந்துகொண்டேன்/
மாலன் சார், ஈழத்தமிழர் மீது துளிதானும் தடம்புரளாத 'அன்பும் பாசமும்' என்றுமே கொண்டிருக்கின்றார் என்பதற்காய் வாழ்நாளுக்கான 'இயல்விருது' அடுத்தவருடம் மாலன் சாருக்கே கொடுக்கவேண்டுமென கனடா இலக்கியத்தோட்டத்திடம் இறைஞ்சுகின்றேன். அத்துடன் இயல்விருதுச் சிறப்புரையாக 'ஈழத்தமிழர் + சிறிலங்கா கடவுச்சீட்டு = இணையச் சாக்கடை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றி நம்மையெல்லாம் மீட்டெடுக்க வந்த தேவனாக மாறி இரட்சிக்கவும் வேண்டுமென பேரன்போடு வேண்டிக்கொ'ல்'கின்றேன்.

Anonymous said...

//அவர் என்ன எப்போது சொன்னார் என்று தெரியும். பெரிய விடயமில்லை. அவரிடம் இப்படியான செயற்பாடுகள் எதிர்பார்த்துதான்.//

மாலன் என்ன பேசினார்னே தெரியாமல் அவரைப் பற்றி எழுத உனக்கு எப்படிடா மனம் வந்துச்சு ஈழத்து பரதேசி நாயே.

போ போய் சட்னிவடை உன்னையும் உன் அம்மாவையும் நல்லா திட்டி வெச்சிருக்கான் போய் படிச்சுப்பார்.

Badri Seshadri said...

இணையம் + தமிழ் + எழுத்துரு சார்ந்த விவாதங்களில் 1993-ல் சாக்.கல்ச்சர்.தமிழில் நடைபெற்ற சில விவாதங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

முக்கியமாக பாலா சுவாமிநாதன், ஞானசேகரன் சுவாமினாதன் ஆகியோரின் பங்களிப்பு, எக்ஸ் விண்டோஸில் தமிழ் எழுத்துரு வடிவமைத்தது, மதுரை டிரான்ஸ்லிடெரேஷன் முறை ... போன்றவை.

உண்மையில் 1993-லேயே தமிழ் எழுத்துருவில் இணையம் வழியாக உள்ளடக்கம் பரவியது. ஆனால் அவை அனைத்தும் எக்ஸ் விண்டோஸ், யூனிக்ஸ் வொர்க்ஸ்டேஷன் என்ற அளவில் மட்டுமே இருந்தன.

http://groups.google.com/group/soc.culture.tamil/browse_thread/thread/d56e07f9ee90980c/4ec25c91fd8316ad?lnk=gst&q=tamil+font+X+windows+1993&rnum=1#
http://groups.google.com/group/soc.culture.tamil/browse_thread/thread/5797c30efec03f99/0ba3339250a60554?lnk=gst&q=tamil+font+X+windows+1993&rnum=3#0ba3339250a60554

மேலும் பல சுட்டிகள் இருக்கலாம்.

-/பெயரிலி. said...

நன்றி. கட்டாயமாக.
சி. ஆர். செல்வகுமார் அவர்கள் tamilnation பின்னூட்ட அஞ்சலிலும் சுவாமிநாதன் சகோதரர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். நாக. கணேசனும் அண்மையிலே இவர்களுடனான தொடர்பினை ஏற்படுத்தித் தருவதாகச் சொல்லியிருந்தார். மேலும், ஆதமி எழுத்துப்பெயர்ப்பினை எளிமைப்படுத்தி மேம்படுத்திய சிவதயாளன் எனக்கு ஓராண்டு பின்னால், பல்கலைக்கழகத்திலே கற்றவர். எதேச்சையாகவே செல்வராஜ் பதிவு ஊடாக, கல்யாணசுந்தரம் தொகுத்த பக்கத்திலே அத்தகவல் கிட்டியது. இப்படியான சின்னச் சின்னத்தகவல்களையும் அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புகொண்டு பெறலாமென்றுதான் முயற்சி செய்கிறேன்.

நிச்சயமாக விரிவான இணையத்திலே தமிழ் பற்றிய கட்டுரை ஒன்றிலே அது குறித்தும் அன்றைய இணையத்தமிழர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டு எழுதவேயிருக்கின்றேன். அதனாலேயே, கொஞ்சம் காலம் எடுத்தாலும் பரவாயில்லை; விபரங்களை முழுமையாகப் பெற்றுக்கொண்டபின்னால், எழுதுவது நல்லதென்று பொறுத்திருக்கின்றேன்.

-/பெயரிலி. said...

Tue, 5 Jun 2001 13:29:44 -0700
TamilNet.com
பழசு

நற்கீரன் said...

எனக்கு பின்புலம் புரியவில்லை. த.வி இடம்பெற்றெருக்கும் தகவல் தவறா? எந்த தகவல்? சுட்டினால், மாற்றலாமே?? நன்றி. --~~~~

-/பெயரிலி. said...

நற்கீரன்,
இது தமிழிணையத்தின் தந்தை நா. கோவிந்தசாமி என்று தமிழ் விக்கிபீடியா, (ஆங்கில) விக்கிபீடியாவிலே குறிப்பிடப்படுவது தவறானது என்பதை முன்வைத்துச் சொல்லப்படுவது. இணையத்திலே தமிழினை முதலிலே ஏற்றியவர் நா. கோவிந்தசாமி அல்ல என்பதே உள்ள ஆதாரங்களைப் பார்க்கும்போது சொல்லமுடிவது.

-/பெயரிலி. said...

for the "recording" purpose
hiStory

http://www.telegraphindia.com/1061119/asp/look/story_7000250.asp


In early 2003, Badri Seshadiri, a regional books publisher, was experimenting with Indian language web pages using Unicode fonts. "Prompted by my journalist friend, Maalan, I figured out that it was possible to blog in any of the Indian languages using Unicode fonts." A co-founder of Cricinfo, Badri has four blogs,including two in Tamil, Thoughts in Tamil and Kirriket, a group blog on the similar sounding sport in Tamil. "I was not interested in blogging till I discovered Unicode."

It was the technical challenge that made me start a blog in my mother tongue," says Seshadiri. "Mine was the first blog in Tamil, I think. Though I started my blog, I didn't know what to write subsequently. So my Tamil blogging was very intermittent. But whatever little I wrote resulted in Tamil print magazines asking me to write occasional pieces for them."

There are no exact figures on how many people blog in a particular language but quite obviously they differ from language to language. For instance, on one Marathi aggregator, there are 300 blogs alone. Kannada blogs have been a slow starter while Hindi blogs abound. I posted a question on the Internet about the number of Indian language bloggers. "There were exactly 36,247 blogs in languages of the Indian sub-continent," replied someone called Musiu, while Ravi dreams_03 wrote: "The popular Tamil blog portal thamizmanam. com says that it aggregates 1,461 blogs written in Tamil currently."

Jayakumar said...

Shame Shame

வேற என்னத்த சொல்றது!