Friday, March 10, 2006

புலம் - 18




கடந்த இரண்டாண்டுகளாக, குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றவர்களிலே நானும் ஒருவனாக முடிந்திருக்கின்றது; கற்றுக்கொண்டதையெல்லாம் நடைமுறைக்கு எவ்வகையிலே எத்துணை பயன்படுத்துகிறேன் என்பது வேறு விடயம். நண்பனுக்கு இரண்டு குழந்தைகள்; பத்து வயது & எட்டு வயது. சில வாரங்களுக்கு முன்னால், அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். சிறுவர்கள் படுக்கையறையினை ஒட்டிய வரவேற்பறையிலே அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கின்றோம். சிறுவர்களின் அறைக்குள்ளே நிகழும் குத்து வெட்டுக்கள் பாதி திறந்த கதவூடாகத் தெரிகின்றன. கதிரையிலே அமர்ந்திருக்கும் எட்டு வயது கட்டிலிலே படுத்துக்கொண்டிருக்கும் பத்து வயதின் உள்ளங்காலிலே தும்பொன்றை வைத்துச் சேட்டைவிட்டுக்கொண்டிருக்கின்றது. சிறுவர்களுக்கான ஆங்கிலக்கதைப்புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருக்கும் பத்து வயது புத்தகத்தின் மேலாகத் தலையை வெளியே எடுக்காமலே உதைந்து கொண்டு, எங்களையும் கடந்து சமையலறைக்குள்ளே வேலை செய்து கொண்டிருக்கும் தாயிடம் ஏனோதானோவென முறைப்பாடு சொல்லிக்கொண்டு வாசிப்பிலேயே ஈர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. வரவேற்பறையிலே இருக்கும் தந்தைக்கே இந்த கஜேந்திரனின் 'அபயம்!' கேட்க வாய்ப்பில்லை; அம்மாவினைப் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. தன்னை முழுக்க ஆழமாக எடுத்துக்கொள்ளாமல், புத்தகத்திலேயே மூழ்கியிருந்து, ஏனோ தானோவென வாசிக்கிறபோக்கிலே அவ்வப்போது ஒரு வரி முறைப்பாடிடும் அண்ணனின் அலட்சியம் தம்பியின் 'நான்' இனை நிறையத் தாக்கியிருக்கவேண்டும். சின்ன கம்பித்துண்டையெடுத்து, அண்ணனின் உள்ளங்காலிலே சுருக்கென்று குத்திவிட்டு, அவன் பதைத்து ஆத்திரத்தோடும் நோவோடும் எழமுன்னரே, தான் பாய்ந்து என்னையும் கடந்து தந்தையிடம் முறைப்பாடு சொல்லிக்கொண்டே தாயிடம் ஓடிப்போய்ப் பாதுகாப்பாக நின்று கொண்டு, "மேசையிலேயிருந்து படித்துக்கொண்டிருக்கும் என்னை அண்ணா பிடரியிலே தட்டுகிறான்" என்ற வகையிலே குற்றசாட்டினை முன்வைக்க, தாய் பின்னாலே ஆத்திரத்தோடு ஓடி வரும் அண்ணனுக்கு அவன் சமையலறையை வந்தடைய முன்னரே அவனுடைய தம்பியைத் தட்டும் அநியாயம் குறித்து ஏசத்தொடங்கினார். தந்தைக்கு இந்தக்கூத்தும் எவன் என்ன செய்திருப்பான் என்பதும் ஓரளவுக்குத் தெரியுமென்பதால், என்னைப் பார்த்துச் சிரிப்பொன்றை வீசுகிறான். பிறகு, நான் தாயிடம் விடயத்தைச் சொன்னதும் தம்பிக்காரன் என்னைப் பொய்யனென்றதும் பின்னால், இரண்டுநாட்கள் என்னைக் கண்டும் முகத்தினைத் திருப்பிக்கொண்டு திரிந்ததும் இங்கே தேவையில்லாத பின்கதைச்சுருக்கம். ஆனால், இந்த அண்ணன் நிலையிலே என்னைச் சிலர் தள்ளி தம்பிக்காரன்போல தாயிடம் ஓடியதுவரை இணையத்திலே நடந்தது கற்றுக்கொண்டால் மட்டும் போதாது, நடைமுறைப்படுத்தவேண்டுமென்பதையும் நினைவூட்டியிருக்கின்றது.

முச்சந்தி, நாற்சந்தியிலே நாலு கூட்டாளிகளோடு குந்திக்கொண்டு, நாவாற்கிளை நட்டு போகிற வருகின்றவர்களைச் சண்டைக்கிழுத்துக்கொண்டு, இவர்களோடு ஏன் வம்பு என்று போகின்றவர்களை "கிளையைச் சாய்க்கமுடியாது எம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஓடுகின்றவர்களைக் கவனியுங்கள்" என்று யேசுகாலயூதக்குருக்கள்போல முச்சந்திப்பிரசங்கம் செய்கின்றவர்களுக்கு முன்னைச் சண்டித்தனத்தோடோ அல்லது நிதானமாகவோ நின்று பதில் சொல்லலாமா என்று எண்ணும்போது, "Just Ignore them; It's not worth your time and effort" என்று சொல்லும் நண்பர்கள் ஒரு பக்கம்; "இதுதான் கடைசிமுறை; இதுதான் கடைசிமுறை" என்று கூற்று வெளியிட்டுக்கொண்டு, ஏனோதானோவென ஓரிரு தடவைகள் எழுதியிருக்கவேண்டுமா என்ற சங்கடம் இன்னொரு புறம் இருக்கட்டும்; ஏனோதானோவென ஏன் எழுத வேண்டுமென்றால், ஏனோவுக்குக் காரணம் நேரக்குறை; தானோவுக்குக் காரணம் வீண்வம்புக்கிழுக்கும்போது, வராதுபோகின்றவர்களை இழுப்பதற்கு மிகவும் இலகுவான வழி, உண்மைக்குப் புறம்பானதொன்றை எழுதுதலும் உள்ளதைத் திரித்து எழுதுதலும். இப்படியான பொழுதிலே, சொல்லப்பட்டதை மற்றவர்கள் முன்னாலே மறுதலிக்கவேனும் வந்தாகவேண்டிய பின்தள்ளுதல்நிலை இருக்கின்றது. வராவிட்டால், இதுதான் எதிர்க்கட்சிக்காரர் சொல்வதே "மௌனம் சம்மதம்" என்பதான புளித்தகூற்றுபாற்பட்டு மெய் என்றாகிப்போம். வந்து பதில் சொன்னால், அதிலிருந்து இன்னும் மயில் இராவணர்கள் முளைப்பு. இது Catch 22 சிக்கலின் ஒருவகை நிலை.

அதனால், கடைசித்தடவைக்கும் பிறகொரு கடைசித்தடவை சொல்லவேண்டிய அவசியமேற்படுகின்றது; குறிப்பாக, கணிசமான மக்கள் நிகழ்வுகளைக் அரைகுறையாகப் புரிந்துகொண்ட நிலையிலே - குறிப்பாக, காலவொழுங்கிலே புரிந்து கொளளமுடியாத அவசரத்திலே- "சட்டம், நீதி, நெறி, நாட்டுப்பற்று, பாதுகாப்பு" போன்ற பதங்களையும் "பெரியார்களின் சகவாசம்" போன்ற உசாத்துணைகளையும் கண்டவுடன் புல்லரித்துப் போய், அப்பதங்களைப் பயன்படுத்தி உசாத்துணை அஸ்திரங்களை செலுத்துவார்க்குத் தம் வாக்குகளை இட்டுவிடும் அபாயநிலை இருக்கின்றது. அந்நிலையிலே கடைசிக்கும் கடைசி கடைத்தேற வேண்டியதாகின்றது. "அரசுவன்முறைக்கு எதிராக நோட்டீஸ் ஒட்டுகிறவன் எல்லாம் பயங்கரவாதி" என்ற ஆட்சித்தலைவர் கருத்தை நெறிநம்பிக்கையிலே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு, தர்ம அடி போடும் காலமும் களமும் சூழலும் நமது. நமக்குப் பிடித்த உன்னத இலக்கியவாதியினை தம் நண்பராய் மேற்கோள் காட்டிச் சின்னதாய்க் குளறும் (குறளும்?) சொல்கிறவர் சொல்வதுதான் உண்மையாகலாமென்ற ஊக்கி வேறு இந்தக் கரைசலுள்ளே ஊற்றப்படும். இந்நிலையிலே, கடைசித்தடவைக்கும் பிறகொரு கடைசித்தடவை சொல்லவேண்டிய அவசியமேற்படுகின்றது - கிண்டல் தவிர்த்து கொஞ்சம் நிதானமாகவும் ஆனால், சுருக்கமாகவும்.

[என்னோடு சேர்த்து சுழற்றி இன்னும் என் சீடர்கள் குருமார்கள் என்று அவர்கள் சாத்தியிருக்கும் நண்பர்கள் தாம் பதில் தர வேண்டிய அவசியம் இருக்கின்றதென எண்ணினால், வேண்டியவற்றினைத் தரும் சிந்தையும் ஆற்றலும் சுயமும் உள்ளவர்களென்று எனக்குத் தெரியும். அதனால், அவர்களுக்காக நானும் எனக்காக அவர்களும் பதில் தர வேண்டிய ஆட்டுமந்தைத்தனம் இங்கே அவசியப்படவில்லை. மேலும், பி.கே.சிவகுமார், முகமூடி, குசும்பன் ஆகிய மும்மூர்த்திகளின் உரைகளுக்கான இணைப்புகளை நான் தரப்போவதில்லை. பி.கே.சிவகுமார், குசும்பன் குறித்து கிஞ்சித்த மரியாதையும் எனக்கில்லை - இவர்களுக்கு முகமூடி பரவாயில்லை; அவர்களுக்கும் அப்படியே என்னைக் குறித்த 'சிறப்பான மரியாதை' இருக்குமென முழுநம்பிக்கை உண்டு. இந்தப் பதிலெழுதுகை மீதிப்பதிவர்களுக்கு என் பக்கத்தினைத் தெளிவு படுத்த வேண்டிய நிலைக்கு அநாவசியத்துக்கு என்னைத் தள்ளி இவர்களால் என் மீது திணிக்கப்பட்டதொன்று. அதனால், மீதிப்பதிவர்களினைக் கனம் பண்ணும் விதமாக இப்பிரச்சனை குறித்து அவர்களுக்கு என்னைத் தெளிவுபடுத்தவேண்டிய தேவையாக இப்பதிவிருப்பினுங்கூட, இம்மும்மூர்த்திகளின் இணைப்புகளை நானாக என் பதிவிலே சேர்த்துக்கொண்டு இம்மூவர்க்கென எதுவித அங்கீகாரத்தினையும் தரப்போவதில்லை. உசாத்துணைக்குப் பயன்படும் மீதியான இணைப்புகளை நேரம் கிடைக்கும்போது, தேடி வேண்டியவிடங்களிலே இணைத்துக்கொள்வேன்]

இப்போது என் மீது பி.கே.சிவக்குமார், முகமூடி, குசும்பன் ஆகிய மூவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளாக எனக்குத் தென்படுகின்றவற்றினை இங்கே தந்துவிடுகின்றேன். இத்தாலிக்கிலே இருப்பவை அவரவர் வார்த்தைகள். இவற்றினைத் தவிர, மேற்கூறிய பதிவுகளில் ஆங்கங்காங்கே பெயரில்லாமலே பெயரிலியைத் தாக்கிய உள்ளீடுகளை விட்டுவிட்டேன்.

பி. கே. சிவக்குமார்:
1. சும்மா இருக்கும் என்னையும் என் கருத்துகளையும் வரம்பு மீறித் தாக்குகின்றார்கள். பெயரிலி உள்ளடங்கித் திரித்து வெளியிடுகின்றார்கள். நான் சட்டரீதியிலே நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

"பொதுமக்களுக்கு. இது ஒரு தொடக்கம்தான். இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. நானும் என் கருத்துகளும் எப்படித் தாக்கப்படுகின்றன என்பதை முன்வைத்து அந்த ஆதாரங்கள் வெளிவருவதோ, சட்டத்தின் துணையை நான் நாடுவதோ நடக்கும். என்னைப் போன்ற எதிலும் சட்டத்துக்குட்பட்டு நடக்க விரும்புகிறவர்களுக்கு ஆபத்து என்று வரும்போது சட்டத்தின் துணையை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதைப் பற்றி விமர்சிக்கிற வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கட்டும்."

ஆதாரமே இல்லாமல், சிவகுமாரைப் பற்றிச் பெயரிலிகளும் என்னால் நீக்கப்பட்ட பெயர்களும்! வரம்புமீறி எழுதுவதைப் பற்றியெல்லாம் "திரிக்காதீர்கள்" என்று நீங்கள் எங்கும் எழுதியிருந்தால் தயவுசெய்து என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்.


2. பெயரில்லாமல் / வேறுபெயர்களிலே எழுதுகின்றவர்கள் குறித்து அவருடைய கருத்து

3. ராம்வோச்சர் என்ற பெயரிலே களவும் கையுமாகப் பிடிபட்ட பெயரிலி +

"வாசகர்களே, ஈழநாதனின் அடுத்த பதிலில் மேலே இருக்கிற கருத்துகளில் ஒன்றோ, அல்லது மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் தலையும் புரியாத வாலும் புரியாத ஓர் ஆயிரம் விஷயங்கள், சண்டைக்கு வெளியே இருக்கிற நபர்கள் மீதான உள்குத்துகள், எதிராளி நடத்தும் பிஸினஸ், எதிராளியின் சொந்த வாழ்க்கை, எதிராளியின் வலைப்பதிவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள், எதிராளி எழுதுகிற பத்திரிகைகள் ஆகியவற்றைக் பிசைந்து கலந்தடித்து வறட்டி ஒட்டிப் பின் வறட்டிக் காய்ந்துபோனதும் (சிலமணி நேரங்களில் அல்லது சில நாட்களில் என்று வறட்டி காய்வது பாஸ்டனின் அன்றைய தட்பவெப்பத்தைப் பொருத்தது. :-) ), நீக்கிவிட்டு அதன்மூலம் வாசகரைத் தன்வயப்படுத்தி விட்டோ ம் என்று நம்பிவிடுகிற அண்ணன் பெயரிலியின் டெக்னிக்குடனோ ஈழநாதன் எழுதினால், நம் அனைவரையும் அந்த இறைவன் காப்பாற்றட்டும்!

4. கணியிணைமுகவரி எடுத்துப்போட்டது பற்றிக் கடிந்தோ கிண்டலாகவோ பேசியிருக்கின்றார்

"விழுமியக் காவலர்கள் (நீங்கள் இல்லை), பெயரிலி ஐ.பி.களை எடுத்துப் போட்டு (சம்பந்தமே இல்லாமல்) படம் காட்டியபோது, பெயரிலி பழைய பூதங்களைத் தோண்டியெடுத்திருக்கிறார் என்று புளகாங்கிதமடைந்தவர்கள் மீண்டு வருகிறார்கள். :-) "

கடந்த ஆறேழு மாதங்களாக நான் எழுதிப் பதிவுகளே போட்டதில்லையெனலாம். இச்சிக்கல்களெல்லாம் தொடங்கமுன்னால், கடைசியாக தை பிறந்தபோது அது குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறேன். அதன் முன்னால், இந்து ராமுக்கு விருது கிட்டியது குறித்து நவம்பர் 19, 2005 இலே பதிவிட்டிருக்கின்றேன். ராம்வோச்சரிலே மீண்டும் வலுக்கட்டாயத்தின்பேரிலே பி. கே. சிவக்குமார், குசும்பன் இட்ட பதிவுகளின் விளைவாகவும் ஒக்ரோபர் மூன்றாம் வாரத்திலே பதிவுகள் போட்டிருக்கிறேன் (ராம்வோச்சர் = -/பெயரிலி. என்று தெரியாதவர்கள் கண்டுகொள்ளவும் ;-)) மிகுதிப்படி படங்களை அனுப்புதல்களும் பழையனவற்றினை மீள்சுழற்சி செய்தலுமாகவே நேரநெருக்கடியினால் இருந்திருக்கின்றேன். இப்படியாக இருந்த நான் பெப்ருவரி மாதத்திலேதான் (இப்படியாக ஒதுங்கியிருந்ததையும்சுட்டிக் காட்டி) பதிவு போட வேண்டிய தேவையை குசும்பன் ஏற்படுத்தினார். குசும்பனின் என் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களும் அவருடைய பதிவுகளின் நாகரீகமும் பி. கே. சிவகுமாரை "இன்றைக்கு இணையத்தில் - உங்கள் பாஷையில் உங்களுக்குப் புரியும்படி பேசவும் உங்கள் டெக்னிக்குகளைப் பயன்படுத்தி உங்களுக்குப் பதில் சொல்லவும், ஸ்ரீரங்கத்தில் வைணவர்கள் ஒன்றுசேர்ந்து திருப்பி அடித்தார்களே - அப்படித் திருப்பி அடிக்கவும் பலர் வந்துவிட்டனர். முகமூடி, குசும்பன், இட்லி வடை, ரஜினி ராம்கி, ஞானபீடம் உள்ளிட்ட மிகப் பலர். அவர்கள் உங்களைப் போன்ற கருத்துடையோரை வறுத்தெடுப்பதை நானும் வேடிக்கைப் (தங்கமணி KGP என்றெழுதியது வேடிக்கைப் பார்க்கப்பட்டதா வேடிக்கை பார்க்கப்பட்டதாவெனத் தெரியவில்லை :-() பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் தம்பி. அப்படிப் பலரும் இப்போது உங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்திருப்பது உங்களைப் போன்றவர்களுக்குப் பொருமுகிறது. எனக்கோ, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற இயற்கையின் நியதையைச் சொல்கிறது" என்று சொல்ல வைத்திருப்பின், மற்றைய நாகரீகமில்லாத பதிவர்களை மட்டும் ஏன் சுட்டவேண்டுமென நான் கேட்கப்போவதில்லை. ஏனெனில், எனக்கும் சிவக்குமாருக்குமான தனிப்பட்ட தகராறுகள் 2004 இலேயே இருக்கின்றன என்றுதான் என் பழைய பதிவுகள் சுட்டுகிறன. திண்ணையிலே இந்துத்துவா குறித்த எதிர்ப்பினைச் சுட்ட ஆசாரகீனன் என்பவரோடு சேரச் சுட்டியதற்குச் சிவக்குமார் அளித்த பதில் "Thats a good point Aachara Kiinan. I wont be surprised if Salman Rushdie, Thaslima Nasreen, Irshad Manji, Asra Nomani and Tariq Ali etc were branded as "Hindutuvaists" by our friend Ramanitharan who looks things at its entirety I am just praying people (i am neither agnostic nor athiest) wont interpret him based on everything he says becos then he will be in deep trouble. Becos people can easily brand him as 1.) Anti Brahmin, 2.) Anti India, 3.) Pro LTTE, 4) Anti Women, 5) Pro Taliban, 6) Anti Democratic and in so many other categories if we take into entirety whatever he says. AK, I think your efforts and time are better spent on your other works than answering such remarks.PK Sivakumar Homepage 05.03.04 - 6:09 pm " இதற்கு நான் எழுதிய விளக்கங்கள் ஒருபுறமிருக்கட்டும்.

தவிர, 'என் மூக்கு' சுந்தரராஜனின் (தற்போது) நீக்கப்பட்ட பதிவிலே, பலருடன் குறிப்பாக இவருடனும் வந்தியத்தேவன் என்பவருடனும் (இவருடைய பெயர் ஏன் இங்கே என்று பார்த்திபன் கனவு வாசித்தவர்கள், படத்திலே ரங்கராவைப் பார்த்தவர்கள் நிச்சயமாகக் கேட்கமாட்டார்கள்) "கோழிக்குப் பின் முட்டையா? முட்டைக்குப் பின் கோழியா?" வகையிலே நடைபெற்ற "ஐபிகேஎப் அட்டூழியங்கள் முன்னாலா? ராஜீவ் கொலை முன்னாலா?" வாக்குவாதங்கள் குறித்தும் வாசித்தவர்களுக்கு இப்போது சிவக்குமார், குசும்பன் ஆகியோரின் கருத்துகள் ஏன் என் மீது திட்டமாக நடக்கின்றதென்பது குறித்து ஆச்சரியமிருக்கப்போவதில்லை. இந்த கோழி-முட்டை விவாதத்தின்பின்னால், விடுதலைப்புலிகள் செய்ததாகக் கருதிக்கொண்டதெல்லாவற்றுக்கும் என்னைக் குற்றஞ்சாட்டி என் பதிவுகளிலே வந்த முகமற்ற பின்னூட்டங்களை இட்டார்தம் முக வரி தெரியாதலால் விட்டுவிடுவோம். ஈழ ஆதரவாளன் என்பதைப் புலியாதரவாளன் என்பதாக இணைத்துக் காட்டுவதிலே "சட்டம், ஒழுங்கு" குறித்து சட்டமிடப்பட்ட நெறிக்கோவைக்குள்ளே மூளையைக் கட்டிக் கவலைப்படும் வாசகர்களிடம் பொதுமக்களிடம் இலகுவிலே வெற்றி பெற்றுவிடலாம்.

வேறுபெயரிலேயெழுதுகின்றவர்கள் தொடக்கம் பெயரில்லாமலே எழுதுகின்றவர்கள் குறித்து எனக்கேதும் ஆட்சேபணையில்லை. பத்துப்பதினொரு ஆண்டுகளாக soc.culture.tamil, தமிழிணையம் காலம் தொடக்கம் நிறையப்பேரிலே எழுதியிருக்கின்றேன். ஒன்று, இலங்கை அரசியல் குறித்து அமெரிக்கா வாழும் இந்தியர்கள் மிக இலகுவாக இலங்கை-இந்திய அரசு நிலைப்பாட்டினை ஒட்டிச் சொந்தப்பெயரிலே எழுதலாம். ஆனால், வெட்டி எந்தத்தமிழரும் எந்தநாட்டிலிருந்தாலும் எழுதமுடியாது. அந்தவகையிலே, -/பெயரிலி. போன்றோர் அரசியல் குறித்து எந்தவகையிலே எழுதினாலும் அதற்கும் ஆளைச் சொன்னால் உயிர்போவதால் ஆசாரகீனனாய் எழுதுகின்றவருக்குமிடையே என்ன வித்தியாசமென்ற வினா இதுவரை பி. கே. சிவக்குமார் எழுப்பினாரா எனத் தெரியவில்லை. அடுத்தது, படைப்புகள், விமர்சனங்களைச் சொந்தப்பெயரிலே வைக்கும்போது, ஏற்படும் நடைமுறைச்சிக்கல்கள் (உ+ம்: ஹரன்பிரசன்னாவின் 'இறங்குமுகம்' கதையினை அவர் இவர்தான் என்று தெரியாதிருப்பின், அஃது ஈழத்தவர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும்). குசும்பன், முகமூடி தொடக்கம் எவர் எதையெழுதினாலும் ஆட்சேபிக்காத சிவக்குமார் This-is-not-a spam என்று எழுதினால் ஆட்சேபணை செய்ததும் கணியிணைமுகவரியை எடுத்துப்போட்டு ராம்வோச்சர்தான் This-is-not-a-spam என்று பெருங்கட்டுரை வடித்ததும் நிகழ்ந்தது.

தமிழ்மணத்திலிருந்து குசும்பன் விலக்கப்பட்டபோது, தன் பதிவு ஏன் விலக்கப்பட்டது என தன் பதிவிலே கேட்டிருந்தார். அதையே முகமூடியும் தொடர்ச்சியாகக் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து "ஏன் சில பதிவுகள் விலக்கப்பட்டன?" என்ற கேள்வியைப் பி. கே. சிவக்குமார் காசியிடமும் கேட்டிருந்தார். அதற்கு This-is-not-a-spam என்ற பெயரிலே கேட்டதும் தொடர்ந்ததும் நிகழ்ந்தது. this-is-not-a-spam கேட்ட சில வரிகள் இவை: "காசி. குசும்பனுடைய கடைசி பதிவு சந்திரமதியினுடைய பதிவுகளைக் கிண்டல் செய்வதாக இருந்தது. அதன்பின்னாலேயே இது நீக்குப்பட்டதோ என்ற எண்ணத்திலேயே மேற்கட்ட கேள்வி வந்திருக்கின்றதெனத் தோன்றுகின்றது. சந்திரமதி ஓர் ஆரம்ப உறுப்பினராக இருந்து தொடக்கிய மரத்தடியிலிருந்து அவரை விலகும்வண்ணம் உள்நுழைந்த அமீனாக்களுக்கு இப்படியான சந்தேகங்கள் வழக்கம்போல நியாயம் தர்மம் நீதிப்போர்வைகளின் அடிப்படையிலே எழுவது வியப்பில்லை. நீதியின் பெயரினாலே நானும் முகமூடியும் கேட்கிறோம்: "எதற்காக குசும்பனின் பதிவு நீக்கப்பட்டது?". இடையிலே நுழைந்த மூன்றாம் ஆள் ஒருவர் this-is-not-a-spam இன் பெயரைத் தான் பயன்படுத்திக்கொண்டு பி. கே. சிவக்குமாரோடு தனது துவந்த அசரீரியுத்தத்தைத் நடத்திக்கொண்டார். அவர் அப்படியாகப் பயன்படுத்துகின்றார் என்று original this-is-not-a-spam என்றபெயரிலே சுட்டிக்காட்டவேண்டியதாகவும் வந்துமுடிந்தது. மரத்தடியிலே நிகழ்ந்தவை குறித்து கட்டங்கட்டமாக நான் அறிந்தது குறித்து விபரிப்பது இங்கே அநாவசியம் (ஆரம்பக்கட்டத்திலே, இகாரஸ் பிரகாஷிடம் விஷயம் தெரியாமல், இரு கூட்டணிகள் குறித்து எழுதி நான் வாங்கிக்கட்டிக்கொண்டதும் இதில் அடக்கம். இந்த மரத்தடி-திண்ணை-ராயர் க்ளப் புழுப்பேணியைத் திறந்து ஊர விடுவதுதான், கடைசியாக நான் விரும்புவது என்பதால், அதை விட்டுவிடுகிறேன்). ஆனால், எத்தனையோ பதிவுகள் நீக்கப்பட்டபோது (என்னுடைய ஒரு பதிவும் உட்பட்டு) பேசாத பி. கே. சிவக்குமார், குசும்பனின் பதிவு சந்திரமதியினைக் கிண்டல் செய்து வந்த காலகட்டத்திலே நீக்கப்பட்டவுடன் கேள்வி கேட்டது வியப்புக்குரியதல்ல. சொந்தப்பெயரிலே இது பற்றிக் குறிக்கப்பட்டிருந்தால், கேட்கப்பட்டிருந்தால், சிவக்குமாருடனான கேள்வி இலகுவாக கேட்டவரின் மீது திருப்பப்பட்டிருக்கும்

அதனாலேயே this-is-not-a-spam பயன்படுத்தவேண்டிய அவசியமேற்பட்டது. காசி அவருடைய பதிவினை அமைத்திருந்தவிதத்திலே கொஞ்சம் கணணி-இணையத்தோடு நாளாந்தம் இயங்கும் எவர்க்கும் (குசும்பன் குறிப்பிட்டு முகமூடி சின்னவன் போன்றோர் பின்னூட்டமிட்ட பதிவிலே சொல்லியிருக்கும், "மோப்பசக்தியில்லாத மாஸாஸூஸெட்ஸ் வாசி" உட்பட்டு) கணியிணைமுகவரி அறிந்து கொள்வது மிகவும் எளிதானது என்பது தெரியாததல்ல. "anti-democratic, anti-brahmin, anti-indian, anti-women, pro-ltte, pro-taleban" குற்றச்சாட்டுகள் முன்வைப்பது முதல், என் பதிவிலே சில பெண்பதிவாளர்கள் உட்பட சிலரைக் குறிவைத்து "நாய்" என்பதை விடவும் மோசமாக உறுப்புகள் சொல்லிப் பெயரில்லாதவர்கள் பின்னூட்டமிட்டபோது கண்டிக்காத/கண்டுகொள்ளாதவர்களுக்கு மேற்படியான வரிகள் மிகவும் குற்றச்சாட்டுகளாகத் தெரிந்தது வியப்புத்தான்.

இங்கே சுட்டவேண்டியதொன்று. காசி தமிழ்மணத்திலே பதிவுகள் நீக்குவது குறித்து -குசும்பனின் பதிவு உட்பட நான் சார்பு-மாற்றுக்கருத்துகளோடு இட்ட பதிவினை முகமூடி வந்து என் பதிவிலே பாராட்டிப் போனது நிகழ்ந்ததும் இதே சமயத்திலேதான்.

இத்தனைக்கும் பிறகு ராம்வோச்சரின் கணியிணைமுகவரியென பி. கே. சிவகுமார் வெளிட்டபின், இப்படியான மோப்பசக்திவல்லமை சுட்டிக்காட்ட, மோப்பசக்தி குறித்த பதிவிலே ஒப்பமிட்டார் உட்பட ஐபி விவகாரத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு குசும்பன், முகமூடி, பி. கே. சிவக்குமார், சின்னவன் ஆகியோருடைய கணியிணைமுகவரி சுட்டவேண்டியதாகிற்று. பாய்ந்தடித்து முகமூடி "இது முறையல்ல; விலக்குவீர்" என்றார். அவர் முறையல்ல என்றது மாசாசூசெட்டு மோப்பசக்தியை அல்ல என்பதைக் கண்டுகொள்ளவேண்டும். அப்பதிவு விலக்கப்பட்டது மட்டுமல்ல, அது சம்பந்தப்பட்ட நான்கு பதிவுகளுமே விலக்கப்பட்டன. இதையெல்லாம் புதைத்துவிட்டு அண்மையிலே, "வழக்கம்போல போட்ட பதிவினை விலக்கிவிட்டதாக" முகமூடி ஒரு பதிவு போட்டார். அந்நுணல்நாக்குறிப்பின் காரணமாக, மீண்டும் அவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மேலே கூறியதுபோல அண்மைக்காலத்திலே நான் ஏதும் எழுத நேரம் வாய்க்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு திரும்ப எழுதத்தொடங்கிய குசும்பன் நகைச்சுவை என்ற பெயரிலே தொடர்ந்து என்னைத் தாக்கிக்கொண்டே வருகின்றார். அது குறித்து நான் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டுமென எவரும் இதுவரை (இலவச)ஆலோசனை சொல்லவில்லை. மேலும், குசும்பன் அவ்வாறு தாக்குவதிலே எனக்கும் ஏதும் ஆட்சேபணையில்லை. பன்னிரண்டு ஆண்டுத்தடிப்பு எருமைத்தோல் இணையத்திலே எனக்குப் பூத்திருக்கின்றது. நானும் தாக்குதல் என்ற பெயரிலே கிண்டலைச் செய்திருக்கிறேன்; கிண்டல் என்ற பெயரிலே தாக்குதலையும் செய்திருக்கிறேன். ஆனால், குசும்பனுக்கும் எனக்கும் பொதுவான நண்பரோடு போகிற போக்கிலே சொன்ன விஷயத்தினை கிண்டல் நீட்டி அவர் முழக்கிச் செய்திருந்தார். அதே நேரத்திலே, முகமூடி எதுவும் அவரோடு அவர் பதிவிலே பேசாத என்னைக் குறித்து மோடி என்றொரு பதத்தினை முன்னிட்டு, மோடியைப் பயன்படுத்துகின்றவர்கள், ராம்வோச்சர், மார்டன்கேர்ள், அப்டிப்போடு என்ற தோரணையிலே பேசி ஆகவே மூவரும் ஒருவரோ என்ற வகையிலே ஒரு பதிவிட்டிருந்தார். (இடையிலே சன்னாசியும் பெயரிலியும் டெம்ப்ளேட் கவிதைகள், கார்பன்காப்பி கதைகள் எழுதாமல் தமக்கும் புரியாமல் எழுதுவதால், இவரே அவரு அவரே சுவரு என்ற ரேஞ்சிலே சில முன்வைப்புகளும் கூடவே சன்னாசி, பெயரிலி இருவருடைய தொழிற்றளங்களின் இணைப்புகளும் சின்னவன் உட்பட ஓரிருவரின் பதிவுகளிலே பெயரின்றி இணைக்கப்பட்டிருந்தன). இவை எல்லாவற்றுமாக ஒரு பதிவினை பெப்ருவரி 24 இலே இட்டிருந்தேன். அதிலே குறிப்பிட்டிருந்தவை இவை:

முகமூடிக்கு
"இப்ப முகமூடி பதிவிலை காலங்காலத்தாலை இழுபட்டதால, ஒரு மணத்தியாலம் இங்கை அநியாயமாப் போச்சு. மொடேர்ன் கேள் வேற அப்பப்ப புளொக்க ஆளுக்காள் நான்தான் மூக்கிலை சளி ஒழுகிறதைப் பதிவு செய்யிறனெண்டு சீறிக்கொண்டு நிக்கினம். ஒருக்கால் ரெண்டு தரக்கா, நானில்லையெண்டு சொல்லலாம். அதுக்குமேலை உதுக்கு ஒண்டும் நான் செய்ய ஏலாது. நானெண்டால், புரூப்பை காட்டு இல்லையெண்டால், என்ரை பெயரிலை உன்ரை மூக்கைத் தயவு செய்து நுழைக்காதையெண்டு மட்டும் கேக்கலாம். அதுக்குமேலை நானென்ன செய்யலாம்? மொடேன்கேளோட ஒத்தியெடுப்பு எழுத்தைப் பாராட்டலாம். சன்னாசியையே பேரி/குத்து எண்டு மயங்கின ஒண்டு ரெண்டு ஆக்களுமிருக்கினம். அது சன்னாசி பேரி/குத்துக்குத் தந்த பெருமையெண்டு நன்றி தெரிவிச்சுக்கொள்ளலாம். ஆனா, உதெல்லாம் முகமூடி போட்டு எழுதைக்குள்ளை பெயரில்லாம எழுதேக்குள்ளை குடுக்கவேண்டின விலையெண்டதைக் கண்டு கொண்டு, ஒதுக்கித்தள்ளிக்கொண்டு போகோணும்."

குசும்பனுக்கு
"ராம்வோச்சர் அவற்றை அய்பீ அட்ரசை ஒருக்கால் குடுத்துப்போட்டாரெண்டு (அவற்றை மட்டுமில்லை சைட்கிக், சும்பர்நிசும்பர் எல்லாரிண்டையும்தான் குடுத்தார்). பத்து மைல் தூரத்தில நிக்கிறதைக் குடுக்கோணுமோ எண்டு பரதேசியாருக்குக் கவலை. அய்பீ போட்ட ஞாயித்துக்கிழமை அண்டைக்குக் காலம்பிறயே நோதர்ன் காளிபோனியாவிலயிருக்கிற என்ரை கும்பனி பேரை எடுத்து எப்பிடி நீ திருப்பதியான் நாமம் போடலாமெண்டு ராஜன்ஜீ கூக்குரல் இட்டதாகத் தெரியுது. பிறகு அந்தப்பதிவையே காணம். பிரச்சனை என்னவெண்டால், அல்லது நீதி என்னவெண்டால், வேலியிலை போற பாம்பைப் பிடிச்சு வெறுமன லங்கோட்டுக்குள்ளை போட்டுப்போட்டு குத்துது குடையுது எண்டு குழறக்கூடாது. பொஸ்ரனுக்கு மோப்பசக்தியோ சகதியோ இருக்காவெண்டு பின் ஊட்டடேக்குள்ளை இந்தப்பிரச்சனையை எல்லாம் சகோக்கள் எதிர்பாக்கோணும். பிறகு பத்துமைல் நூறுமைல் டிஸ்ரன்ஸ் குறிச்செல்லாம் ஸ்பேசியல் அனலிசிஸ் நெற்வேர்க் அனலிஸிஸ் செய்யக்கூடாது. முகமூடி திருவண்ணாமலையாகவோ திருமலையாகவோ இருந்தாலுங்கூட எனக்குக் கவலையில்லை. ஆனால், சும்மா இருக்கிறவங்களோட தனகாதையுங்கோ. அவ்வளவுதான் நான் சொல்லுறது. போலி டோண்டு எண்ட பேரிலை ஒருக்கால் காசியின்ரை பதிவிலை எழுதினவர் சும்பர் எண்டு ராம்வோச்சர் அய்பீயோட ஒருக்கால் நிறுவினவர். வேணுமெண்டால், படமாயே அவர் அதைக் காட்டினால், இண்டைக்கு சிங்கப்பூரில மலேசியாவில போலி டோண்டு எண்டு குழறுகிறவை குழம்பிப்போவினம். இது இன்னொரு போலி டோண்டுவோ இல்லை இதுதான் அந்த ரெண்டாவது வாழைப்பழமுமோவெண்டு. வேணுமெண்டால், ஆள் அடையாளத்துக்கு சகோ சென்னை புத்தக்கக்கண்காட்சியில எடுத்த தாடி ஸ்போட்டிங் படம் கூடப் போடலாம். இதெல்லாம் பேரி/குத்துக்கு அநாவசியமும் அநாகரீகமுமாக இருக்குமெண்டு நினைக்கிறன். முகமூடியின்ரை பரதேச விதேச சுயராஜ்ய படங்கள்கூட திருமலைமீதொருநாள் திருமணம் நடந்தது பாரெண்டு பப்ளிக்கிலை போடலாம். ஆனால், உதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனம். நாப்பது வயசு கடந்தபிறகு அப்பப்ப அப்பாடா எண்டு கிடக்கிறவனோடை சும்மா சொருகாமல் இருந்தால், நடக்காது."

இங்கே போலி டோண்டு என்ற பெயரிலும் குசும்பன் என்ற பெயரிலும் ஒரே கணியிணைமுகவரியிலிருந்து அஞ்சல்கள் எதிர்மாறான கருத்துகளோடு வந்ததைச் (வார இடைவெளியிலே) சுட்டியிருந்தேன். இதற்குப் பதிலாக, குசும்பன், proxy பயன்படுத்தினால், ஒரே முகவரியோடு வேறு வேறு ஆட்கள் பின்னூட்டமிடலாமென வாதிட்டார். ப்ரொக்ஸி வழங்கிகளுக்கு மேயச் செலவில்லாதபோதும், உள்ளிடும் சேவைக்குப் பணம் கட்டுகிறோமென்றே வைத்துக்கொள்வோம். அப்படியானாலுங்கூட, ஒரே சேவையை தமிழ்ப்பதிவுகளை மேயவும் உள்ளிடவும் எத்தனை பேர் பயன்படுத்துகின்றார்கள்? அவர்களிலே எத்தனை பேருக்கு ஒரே வலைப்பதிவிலே ஒரே முகவரியோடு போடும் வல்லமை வாய்க்கின்றதென நான் நிகழ்தகவின் அடிப்படையிலே எண்ணி வியந்து முடிவினை வாசகர்கள், பொதுமக்கள் எடுத்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். [கவனிக்க: இவர்கள் வசதிக்கே போலி டோண்டு ஒண்டோ இரண்டோ என்று சொன்னதைக்கூட இவர்கள் அ/வசதியாக விட்டுவிடுகின்றார்கள்]

இக்குறிப்பிட்ட என் பதிவின் பின்னூட்டத்திலே ஒரு முகமற்ற நண்பர் இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படி ஆலோசனை கூறியிருந்தார். அதற்கு "ஆனி வெயிலிலே மாதத்திலே வெக்கையிலும் வேட்கையிலும் பின்புறம் தாளாமற் திரியும் நாய்களின் செயற்பாடுகள்" குறித்துச் சொன்னதும் அப்பின்னூட்டத்தைக் கழற்றிக்கொண்டதும் தொடர்ச்சியாக இவர்களுக்கு குறிப்பாக குசும்பருக்கு தைத்திருக்கின்றது. மாசி மாதத்திலேயே அதை ஆபாசபின்னூட்டமென்று அறிக்கைவிட்டு ஒரு பதிவு. அது சரி "மோப்பசக்தி இல்லாதது", "தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்" என்பதெல்லாம் பாசம்; இது ஆபாசம். அப்படியாகப் பார்த்தால், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, பிரமிள் எல்லோருமே ஆபாசம் பேசுகின்றவர்களே.

அதன் பிறகான பதிவிலே "பத்து மைல்" தொலைவு வந்ததை முகமூடியும் குசும்பனும் பயன்படுத்தியிருந்ததை ஒன்றாக எடுத்துப் போட்டிருந்தேன். வேறு ஒரு சொல் எதையுமே சொல்லவில்லை. அன்றிலிருந்து இன்றைக்கு வரை எப்படியாக நீ இருவரும் ஒருவரே எனச் சொல்லலாமென இவர்கள் உட்பட இவர்கள் பதிவுகளிலே பின்னூட்டமிடும் வேறு சிலரும் கேட்டபடியேயிருக்கின்றார்கள். ஆச்சரியமென்னவென்றால், இவர் எவருமே தாம் "மோடி" என்ற சொல்லை வைத்து "வோச்சர்=மார்டன்கேர்ள்=அப்டிபோடு" என்றோ அல்லது 'புரியாமல் எழுதுவதை வைத்து' "சன்னாசி=பெயரிலி" என்றோ முடிவு கட்டி அறிக்கைகள் விடும்போதும் அவ்வறிக்கைகளை ஆதரிக்கும்போதும், ஏன் 'பத்து மைல்' என்ற ஒற்றுமைகொண்ட இரு பந்திகளை இணைத்து ஒரு படத்தின்கீழே போட வாசகர்கள்/பொதுமக்கள் முடிவு கட்டுகின்றார்கள் என்று நினைத்துப் பார்த்தார்களா? 'மோடி'யை வாசித்த பொதுமக்கள் 'பத்து மைல்' இனை வேறு எப்படியாகப் புரிந்துகொள்ளச்சொல்கிறீர்கள்? எதிர்பார்க்கின்றீர்கள்?

இடையிலே குசும்பன் என்னோடு பேச வர நான் மறுத்துவிட்டதாக வேறு சொல்லியிருக்கின்றார். இது செய்தி. இவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர், சில மாதங்களுக்கு முன்னால், முன்னொரு முறை இவர் பேச வேண்டுமெனச் சொன்னதாகவும் தான் இடையிலே தலையைக் கொடுக்கவிரும்பவில்லை என்பதாகவும் சொன்னதாகச் சொன்னார். அவ்வளவுதான் எனக்குத் தெரிந்தது. வேண்டுமானால், அவரே தெளிவு படுத்திக்கொள்ளலாம்; கொள்ளட்டும்; தெளிந்தால், சொல்லட்டும். தவிர, இவருடன் பேச எனக்கு எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. "நீர் உமக்கு WWF ஆட்டத்தின் சமனெனப்படும் அடிப்படை விதி எதுவெனக் கொள்ள விரும்புகின்றீரோ, அதையே எனக்குமான பங்காகப் பிரித்துத் தாரும். எதுவாயினும் ஏற்றுக்கொள்வேன்."

இதுவெல்லாம் இப்படியாக ஓடிக்கொண்டிருக்க, இப்போது என்னவென்றால், பி. கே. சிவகுமார் முகமூடியின் பதிவிலே வருகிறார். இவரைப் பற்றி நான் எதையுமே பதிந்து பேசாத போதிலே, நான் எதுவுமே எழுதாத முகமூடியின் பதிவிலே, ஈழநாதன், (சன்னாசி ஆகியோரிடம்) என் மேலான தன் எழுத்துவன்முறையை இஷ்டப்படி உளறாவாயாய் கட்டவிழ்த்துவிட்டபின்னர், தன் பெயர் கெடுவது திரித்துச் சொல்வதும் பேசி, "சட்டம், ஒழுங்கு"க்குக் கட்டுப்படும் அவரின் தன்மை குறித்தும் மற்றவர்களின் எழுத்து வன்முறை குறித்தும் விரிவுரை ஆற்றியிருக்கின்றார். [அமெரிக்காவிலே திடீர் இலக்கியவாதிகள் ஆவது குறித்து, "முப்பதுநாளிலே இலக்கியவாதம்", "Becoming Tamil Literary Figures for Dummies" என பின்னாலே ஒரு முறை ஆறுதலாக எழுதுகிறேன். இப்போதைக்கு வேண்டாம்.] அவர் விரிவுரையிலே மனுஷ்யபுத்ரன் பெயரிலே நான் பதிவிட்டதாக "அடித்து, மனுஷ்ய புத்திரன் எழுதினதுபோல "சண்டையின் நடுவே துணியைத் தூக்கிக் காட்டுகிற" காரியத்தைச் செய்தது நான் அல்ல தம்பி. பெயரிலி என்கிற ரமணீதரன் கந்தையா" என்று வேறு இல்லாத குற்றச்சாட்டு. இதை நிரூபிக்கட்டும் பார்ப்போம். நிரூபிக்க இயலாதபோது, வேறேதும் விதமாகத் திரித்து அர்த்தம் சொல்லுவாரென நினைக்கிறேன். இந்தப்பதிவில் மட்டுமல்ல, அண்மையில், இதற்கு முன்னரும் ராம்வோச்சரை இழுத்து இன்னொரு பதிவிலே பின்னூட்டியிருந்தார். எதையுமே நான் பேசாதவிடத்து, எனக்குச் அவ_சரமாரி பொழிந்துவிட்டு இவர் நிற்கும் இந்நிலையில், இப்போது சட்டம் ஒழுங்கு பற்றி வாசகர் பொதுமக்களிடம் விரிவுரை ஆற்றவேண்டியது நானா இவரா என்பது குறித்து வாசகர்களும் அவர்கள் அல்லாத பொதுமக்களுமே தீர்மானித்துக்கொள்ளவிட்டுவிடுகிறேன். [இவர் மாலனுடன் ஜெயகாந்தன் குறித்துப் பட்ட பிரச்சனையில், இவர் சார்பாகப் பேசிய சிலரிலே நானும் ரோசாவசந்தும் அடக்கம் என்பது ஒரு புறமிருக்கட்டும், மறுபுறம் கடந்த காலத்தமிழ்ப்பதிவுகளை வாசிக்கும் எவருமே இவர் ரோசாவசந்தினை இத்துணை மதிப்பாகப் பேசுவது குறித்து ரோசாவசந்துடன்கூடி வியந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், ஈழப்பிரச்சனை குறித்து வரும்போது, இவரும் மாலனும் வடக்கும் தெற்குமான ஈழத்தில் நின்று வந்திறங்கும் அனுமார்வாலுக்குக் கூடி நெருப்பு வைத்தால் நான் இவர்களை வாசித்தறிந்தவரையிலே வியப்படையமாட்டேன். இன்னொரு பக்கம், முகமூடி பதிவிலே சன்னாசிக்கு ஆரம்பத்திலே கொடுத்த அர்ச்சனையும் கடைசியிலே முடித்த மங்களமும் அக்மார்க் அவரது தொடுகை. பத்ரியையும் கௌரவித்திருக்கின்றார். "anyinidan Vs. Kamadenu குறித்து சின்னதாக எண்ணிக்கொண்டு என் லெவலிலே இருந்து கொண்டு சிரித்துக்கொண்டிருக்கின்றேன்" என்று நான் எழுதினால் ஆச்சு].

அடுத்ததாக, அவருடைய "...சண்டைக்கு வெளியே இருக்கிற நபர்கள் மீதான உள்குத்துகள், எதிராளி நடத்தும் பிஸினஸ், எதிராளியின் சொந்த வாழ்க்கை, எதிராளியின் வலைப்பதிவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள், எதிராளி எழுதுகிற பத்திரிகைகள் ஆகியவற்றைக் பிசைந்து கலந்தடித்து வறட்டி ஒட்டிப் பின் வறட்டிக் காய்ந்துபோனதும் (சிலமணி நேரங்களில் அல்லது சில நாட்களில் என்று வறட்டி காய்வது பாஸ்டனின் அன்றைய தட்பவெப்பத்தைப் பொருத்தது. :-) ), நீக்கிவிட்டு அதன்மூலம் வாசகரைத் தன்வயப்படுத்தி விட்டோ ம் என்று நம்பிவிடுகிற அண்ணன் பெயரிலியின் டெக்னிக்குடனோ..." அன்னாரின் இரட்டைத்தன்மைக்கு செவ்வியல் உதாரணம். பிரசன்னாவுக்குப் பதில் சொன்னதுக்கு பாய்ந்து வந்து குத்தியிருக்கின்றாரோ என்று படுகிறது. ஈழநாதனைப் போலச் சுயமாகச் சிந்தித்துச் சுயமாய்ப் பேசும் தம்பியைத் தந்ததற்கு (என் சொல்லைக் கேட்டிருக்கக்கூடிய தம்பியென்றால், பழையன கழிக்க பதிவது தேடி அலையும் அன்னாரைப் போன்றவர்களின் பதிவுகளிலே அதுவும் இன்னார் பின்னூட்டத்தின் பின்னால் பின்னூட்டம் இட்டிருக்கமாட்டார் :-() நன்றி. ஆனால், ஈழநாதனும் சன்னாசியும் பேசியதற்கு குருநாதராக எதையுமே பேசாத என்னைக் காட்டிவிடுகிறவர், ஆரம்பத்திலிருந்தே குருநாதரான (ஒற்றைக்கண் சுக்கிராச்சாரியார் என்றுதான் என்னை இதுவரை நினைத்திருந்தேன்; குரு ஆக்கியிருக்கின்றார்கள். நன்றி) என்னைப் போட்டு அடிக்கும்போது, "சண்டைக்கு வெளியே இருக்கிற நபர்கள் மீதான உள்குத்துகள், எதிராளி நடத்தும் பிஸினஸ், எதிராளியின் சொந்த வாழ்க்கை, எதிராளியின் வலைப்பதிவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள்" கொஞ்சம் யோசித்தாரா என்று எனக்கேதும் எதிர்பார்ப்பில்லை. பி. கே. சிவக்குமார் அவர்களை அவர் இணையத்திலே பேசத்தொடங்கிய காலத்திலிருந்து என்னைப்போல உளறுவாயன் இல்லாத உருப்படியான பலருங்கூட அவதானித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆக, இவர்கள் மூவரையும் காணும்போது, என் நண்பனின் எட்டுவயதுக்குழந்தை ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. தாய்மார்களே உங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளித்து மகிழுங்கள். தந்தைமார்களே உங்களுக்குட் சிரித்துக்கொண்டிருங்கள். வீட்டுக்கு விருந்தாளிகளாகச் சென்று நடந்ததைக் கண்டவர்களே, நீங்களாச்சு உங்கள் தலைகளாச்சு (ஆனாலும், என்னைச் சிரஸ் சிரைக்கும் கேடிகளாகாமல் என் சிஷ்யகோடிகளாகச் சங்கமிப்பதை வரவேற்கிறேன். அனுமதி இலவசம் :-)).

வாசகர்கள், பொதுமக்களிடம் சுற்றி வாக்கு கேட்பதல்ல என் நோக்கு. குறிப்பிட்ட மிகச்சிலர் தவிர்த்து மீதியானோர் என்னை இன்னார் இப்படிப்பட்டவர் என்று நினைப்பதினால் எனக்கேதும் ஆகப்போவதில்லை. ஆகவே, இங்கே புகழ்பெறும்போட்டிக்கு நான் இவற்றை எழுதவில்லை. ஆனால், எனது பக்கக்கதை ஏற்கனவே என்னை அறிந்து தனிப்பட்டத் தெரிந்த சிலருக்குத் தெரியவேண்டுமென்பதாலும் இனியும் கிடைக்கக்கூடிய சில கருத்தொத்த நண்பர்கள் கிடைக்காமலே போய்விடக்கூடுமென்ற அச்சத்தாலுமே இதைப் பதிவு செய்கிறேன்.

என்னால், இயன்றவரை சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டதால், இந்தப்பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் அப்பால், எதையுமே நான் பேசப்போவதில்லை. ஆனால், வரப்போகும் பதிவுகள் இப்பதிவிலே எங்கே வெட்டி எங்கே ஒட்டித் தொடங்குமென்பதை உணர்வேன்.

உண்மையிலேயே ஆறுமணித்தியாலங்களுக்குமேலாக அநாவசியச்செலவு. அதற்கு இது பயனாகவிருக்க வேண்டுமென்பது விழைவு.


'06 மார்ச், 11 சனி 11:01 கிநிநே.

படம்: வெள்ளைக்காக்கா மல்லாக்கப் பறக்குது

15 comments:

SnackDragon said...

வாசிப்பதற்கு முக்கால் மணிநேரமாச்சு. எழுத ஆறு மணியாகியுள்ளது. குறைந்தது ஒரு மூன்று வருடங்களாவது நிம்மதி அருள்வார்களென மும்மூர்த்தியருக்கு ஒரு வேண்டுதல் மனதுக்குள்ளே...
நடக்குதா பார்ப்போம்.

-அடியாள்

முகமூடி said...

கேட்ட கதை ஒன்று, பொருள் குற்றம் கண்டுபிடிக்காமல் படியுங்கள் :: ராமர் (god) சிவபூசை செய்வதற்கு முன் ஒரு அம்பை (arrow) பூமியிலே குத்தி வைப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் பூமியிலே குத்தி வைத்த அம்பை வெளியே எடுக்கும்போது அதன் நுனியில் ரத்தம்.. அடடா என்று பூமிக்குள் பார்த்தால் ஒரு தவளை குற்றுயிராக கிடக்கிறது.. ராமர் அந்த தவளையை எடுத்து "குத்தும்போதே ஒரு வார்த்தை கத்தியிருக்க கூடாதா" என்றாராம். அதற்கு அந்த தவளை சொன்னதாம் :: யாராலாவது எனக்கு ஆபத்து வந்தால் நான் ராமா ராமா என்று கத்துவேன்.. ஆபத்து ராமராலேயே எனும்போது என்ன சொல்லி கத்துவேன் என்று...

// ஒரு மூன்று வருடங்களாவது நிம்மதி அருள்வார்களென // இதை நீங்கள் கண்ணாடி முன் நிற்கும் போதும் கிடா வெட்டும் போதும் வேண்டி அதை நிறைவேற்றினால் போதும்... கண்டிப்பாக இணைய நல்லுலகில் அனைவருக்கும் நிரந்தர நிம்மதி கிடைக்கும்... வேண்டிக்கொள்வீர்களா?

Sri Rangan said...

ரமணிதரன்,வணக்கம்!

உங்கள் எழுத்துக்களையெல்லாம் படித்தபோது எனக்கு இங்ஙனம் தோன்றுகிறது:"Every error has three levels:On the first it is called into life,on the second you don't want to admit it and on the third nothing will make it undone!"இதற்குமேல் எதைச் சொல்ல?

இன்றைய சூழலில் இப்படியுமொரு அவஸ்த்தை உங்களெல்லோருக்கும்- உருவாகியுள்ளது.

அநியாயமாகப் போகின்ற பொழுதைப் பிடிப்பார் யார்?

He who is used to the absurd will get along fine in our time.இதுதாம் உண்மை பெயரிலி!

Mookku Sundar said...

//தவிர, 'என் மூக்கு' சுந்தரராஜனின் (தற்போது) நீக்கப்பட்ட பதிவிலே, பலருடன் குறிப்பாக இவருடனும் வந்தியத்தேவன் என்பவருடனும் (இவருடைய பெயர் ஏன் இங்கே என்று பார்த்திபன் கனவு வாசித்தவர்கள், படத்திலே ரங்கராவைப் பார்த்தவர்கள் நிச்சயமாகக் கேட்கமாட்டார்கள்) //

ப்ளாக்கர் பின்னூட்ட வசதி இல்லாத காலத்தில் ஹாலோஸ்கான் தரும் பின்னூட்ட வசதியை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன். ப்ளாக்கர் பின்னூட்ட வசதியை உபயோகப்படுத்த ஆரம்பித்ததும் ஹாலோஸ்கான் உபயோகப்படுத்தாதலால் அந்தப் புகழ்பெற்ற நாகரீகமான பின்னூட்ட விவாதங்களும் மறைந்து போனது. நான் அறிந்தே, வேறு காரணங்களுக்காக அதை செய்யவில்லை என்று சொல்லவே இந்தப் பதில்.

பொடிச்சியின் hypocrisy பதிவிலே அது இருப்பது மதிக்கு தெரியும். உங்களுக்கு தெரியாவிட்டால், இதோ,

http://dsonador.blogspot.com/2004_01_01_dsonador_archive.html

மற்றபடி, உங்கள் ஆறு மணி நேரம் வேஸ்ட் ;-). இதற்கு நித்திலனுடன் விளையாடி இருக்கலாம்.

முகமூடி said...

பெயரிலி.. இதுவரை நான் உங்களை கேட்டது, கேட்பது எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான்.. அதை தவிர வேறெதுவும் கேட்டதில்லை. அது நீங்கள் என் IP

அட்ரஸை எடுத்துப்போட்டது.. (அப்போது ராம்வாச்சர்தான் பெயரிலி என்பது எனக்கு தெரியாது என்பதை சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்) நீங்கள் காசி பதிவை மேற்கோளிட்டு, குசும்பன் ஐபீயையும் சின்னவன் ஐபீயையும் எடுத்து போட்டு என்னவோ எழுதுகிறீர்கள்.. ஆனால் அதோடு கூடவே எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் காசி பதிவில் என் ஒரிஜினல் பெயரோடு ஒரே ஒரு கேள்வி கேட்ட என் ஐபீயையும் எடுத்து எழுதுகிறீர்கள்... இதன் மூலம் உங்கள் நோக்கம் என்ன?

இந்த இரண்டு பேரின் ஐபீயையும் எழுதி அதோடு என் ஐபீயையும் எழுதுவதன் மூலம் எனக்கும் இந்த இரண்டு பேருக்கும் சம்பந்தம் உண்டு என்று நிறுவுவது போன்றதான

செய்கை அல்லவா அது... கொசுறாக ஒன்றிரண்டு ஐபீ எடுத்து போட்டால்தான் பதிவு பெரிசாக இருக்கும் என்று தோன்றினால் உங்கள் ஐபீயையோ அல்லது வேறெதாவது

உங்கள் நண்பர்கள் ஐபீயையோ எடுத்து போட்டுக்கொள்ள வேண்டியதுதானே?

சின்னவனுக்கும் முகமூடிக்கும் எச்சரிக்கை என்று அப்டிபோடு ஒரு பதிவு எழுதுகிறார். நண்பர்கள் மெயில் அனுப்பி விளக்குகிறார்கள், போனில் பேசி விளக்குகிறார்கள் என்று

அவரே சொல்லிக்கொள்கிறார். எந்த பிண்ணனியில் நாங்கள் மயில் ராவணர்கள் என்ற முடிவுக்கு வந்தார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை (சின்னவன் பதிவுக்கு நான்

தொடர்ச்சியாக பின்னூட்டம் இட்டதாலாம் என்பது பின்னர் தெரிய வந்தது.. அப்ப ஏகப்பட்ட பேரு சிலருக்கு தொடர்ச்சியா பின்னூட்டம் எழுதறாங்களே என்று நான் கேட்க

ஆரம்பித்தால் அது வேறு விதமாக ஆகிவிடும்) அறியாத நிலையில், என்றோ குத்து மதிப்பாக சின்னவன் ஐபீயோடு முகமூடியின் ஐபீயையும் எடுத்து போட்ட ராம்வாச்சரின் பதிவு, அதுவும் மறைக்கப்பட்ட விலக்கப்பட்ட அந்த பதிவு அப்டிபோடுவுக்கு "நண்பர்கள்" மூலம் அறிய வந்ததாலேயே இருக்கலாமா என்பது எனக்கு தோன்றக்கூடாதா? ஆனால் நான் அப்படி கூட கேட்கவில்லை. நீங்கள் சம்பந்தமில்லாம் என் ஐபீயை எழுதினீர்கள் என்பதாலேயே நீங்கள் ஓட்டு கேட்கும் பொதுமக்களில் ஒருவரான அப்டிபோடு இவ்வாறு நினைக்கிறாரோ என்று பொருள் படும்படி சொல்லியிருந்தேனே தவிர உங்களிடம் காலங்காத்தாலை சண்டை பிடித்துக்கொண்டிருக்க எனக்கென்ன விசரே?

இன்றளவும் நீங்கள் அப்படி எழுதியதற்கு காரணம் உங்களின் ஆறு வயது குசும்புத்தனமா அல்லது வேறு விஷயமா என்பதற்கு விளக்கமில்லாமலே இருக்கிறது.. ஆக

செய்வதெல்லாம் செய்துவிட்டு முகமூடி என் பெயரை எழுதுகிறது என்று பரிதாப வேஷம் போடுவது எதனால்? எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை வரலாம் என்பது

உங்களுக்கு தோன்றவில்லையா? அல்லது நீங்கள் என்பதால் அதற்கு வராது என்று நினைத்தீர்களா?

இப்போது உங்கள் பதிவில் பிகேஎஸ்ஸுக்கு குசும்பனுக்கு பத்திகளை படிக்காமல் தாண்டி, நீங்கள் பொதுவில் எழுதியது + முகமூடிக்கு என்று எழுதியதை மட்டுமே நான்

படித்தேன் என்பதை சொல்லி, அதுபற்றி மட்டும் நான் பேசுகிறேன்.

மாடர்ன் கேர்ள் என்று நான் பெயரிலியை சொன்னதாக ஞாபகம் இல்லை.. (வேறு சிலரும் இதே போன்று claim செய்கிறார்கள்..) ஆனால் முகமூடிக்கு என்று எழுதிய பத்தியில் மூக்கில் சளி என்றெல்லாம் குன்சாய் எழுதினால் என்ன எழுதுகிறீர்கள் என்று புரியாமலே கைதட்டும், நீங்கள் விசனப்படும் குறிப்பிட்ட அந்த மிகச்சிலர் தமக்கு ஏற்றபடி புரிந்து கொண்டு உணர்ச்சி வசப்படுவார்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ..

நானும் குசும்பனும் வேறு வேறு என்று சத்தியமாக உங்களுக்கு தெரியும் என்றாலும், "பத்து மைல்" என்ற வார்த்தை பிரயோகத்தை இருவரும் உபயோகித்திருந்தோம்

என்பதை குறிப்பிட்டு குசும்பன் = முகமூடி என்பதாக நீங்கள் படம் காட்டிய போது எல்லாரும் அறிவாளியாக கொண்டாடுகிறார்களே அது இந்த பெயரிலியையா என்று

சிரிப்புதான் வந்தது... அதை விட சிரிப்பு நீங்கள் என்ன படம் போட்டாலும் பப்படம் போட்டாலும் ஓடி வந்து அண்ணை சூப்பர் என்று சொல்லும் அந்த குறிப்பிட்ட சிலர்

இதற்கும் அதே வேலையை செய்ததுதான்...

இன்று சன்னாசி = பெயரிலி ஈக்குவேஷனின் பாற்பட்ட உங்கள் பார்வை ஏன் மற்றவர்களுக்கு நடக்கும்/நடத்தியபோது உங்களுக்கு தெரியவில்லை. என்னை

வந்தியத்தேவனாக நீங்கள் சொன்னபோது வெறுமே நான் இல்லை என்று மறுத்தேனே தவிர உங்களை போல் "புத்திசாலித்தனமாக" பேசிக்கொண்டிருக்கவில்லை..திடீரென

சன்னாசி மீது என்னவோ ஒரு அக்கரை.. அவரை பேரி குத்து என்றெல்லாம் சொன்னேன் என்பது என்னுடைய

href="http://mugamoodi.blogspot.com/2006/01/blog-post_24.html">இலக்கிய சலிப்பும் கருத்துப் பதிவும்
பதிவை வைத்து என்றால் அது படிப்பவரின்

அனுமானம் மட்டுமே. அதை எழுதிய காலகட்டத்தில் இதே போன்றதொரு சலிப்பில் எழுதிக்கொண்டிருந்த ஒரு பதிவாளரை பற்றியது அது.. அதற்கு எதிர்வினையாக அவர்

கவிதை எல்லாம் கூட எழுதினார்... எதை எழுதினாலும் தன்னை பற்றி என்று சிலர் நினைத்துக்கொண்டால் ஒன்றும் செய்ய முடியாது.

// அதனாலேயே this-is-not-a-spam பயன்படுத்தவேண்டிய அவசியமேற்பட்டது // இதே போன்ற நிர்ப்பந்தங்கள் மற்றவருக்கு ஏற்பட்டால், அதுவும் சின்னவனுக்கு

ஏற்பட்டால் அது குறித்து என்னிடம் என் பதிவில் வந்து சன்னாசி கேட்பது ஏன் என்பது எனக்கு புரியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். நான் இங்கு கேட்க விரும்புவது,

KingKK எழுதியது - சாரம் என்னவென்றாலும் - தவறுதானே அவர் பதிவில் எல்லாம் நீ எப்படி பின்னூட்ட (ஆதரவு) தரலாம் என்றெழுதிய சன்னாசி, இந்த

உங்களுக்கேற்பட்ட "நிர்பந்தத்தை" பற்றி இதுவரை உங்களிடம் ஒரு கேள்வியாவது கேட்டிருக்கிறாரா என்பதை மட்டுமே..

இதுவரை கார்த்திக்கை தவிர வேறு யாரையும் உங்களின் அடியாள் என்று நான் சொன்னதாக ஞாபகம் இல்லை. கார்த்திக்கை உங்கள் அடியாள் என்று சொல்வதில் என்னிடம்

மாற்றம் எதுவும் இல்லை.. (எப்படி என்று கேட்டால் ஒரு பெரீய்ய பதிவே எழுதும் அளவு விஷயம் இருக்கிறது) அப்படி அவராக விரும்பி அடியாளாக இருப்பதிலும் எனக்கு

ஒன்றும் ஆட்சேபம் இல்லை, அந்த விசுவாசத்தால் எனக்கு ப்ரச்னை எனும்போது மட்டுமே அதை குறிப்பிடுகிறேன் என்பதை இந்நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்.

இதற்கு முன்னால் நீங்கள் செய்த "உண்மைக்குப் புறம்பானதொன்றை எழுதுதலும் உள்ளதைத் திரித்து எழுதுதலும்" பதிவுகளில் பலவற்றிலே சொல்வதற்கு எனக்கு நிறைய விஷயம் இருந்தது... ஆனால் ஆகப்போவது என்ன என்றே சும்மா இருந்தேன்.. இதற்கும் அப்படியே இருந்திருப்பேன், ஆனால் "இப்படியான பொழுதிலே, சொல்லப்பட்டதை மற்றவர்கள் முன்னாலே மறுதளிக்கவேனும் வந்தாகவேண்டிய பின்தள்ளுதல்நிலை" ஏற்பட்டதாலேயே இப்பின்னூட்டம்.

நானும் நீங்களும் சம்பந்தப்பட்டது இது ஒன்றுதான் :: ராம்வோச்சரின் கணியிணைமுகவரியென பி. கே. சிவகுமார் வெளிட்டால் அதற்கு பதில் சொல்லும்போது எதற்கு முகமூடி ஐபியையும் எடுத்து போடவேண்டும் என்பதை இன்றாவது எல்லோருக்கும் புரிகிற எளிய தமிழில் விளக்கவும்... இல்லையெனிலும் ஒன்றும் பாதகமில்லை, அது பெயரிலியின் "நேர்மை மனதிற்கு" மற்றொரு சாட்சி என்று இருந்துவிட்டு போகிறேன். ஆனால் கதைப்படி உண்மையில் நீங்கள் தம்பியாக இருந்துகொண்டு "அண்ணன் நிலையிலே என்னைச் சிலர் தள்ளி" என்றெல்லாம் புலம்பாதீர்கள். அது உங்களின் ஆளுமைக்கு இழுக்கு.

பிகு :: உங்க ஆளுமை இப்பதிவிலேயே கிழிந்து தொங்குவதை பார்க்க உண்மையிலேயே பாவமாக இருக்கிறது. நீங்கள் விரும்பியோ விரும்பாமலேயே உங்களுக்கு தலைமை பொறுப்பு கொடுத்துவிட்டார்கள்.. அதற்கென ஒரு கம்பீரம் வேண்டாமா? (இதை கிண்டலாக எடுத்துக்கொள்ளாமல் படியுங்கள்)

அ) "மிகச்சிலர் தவிர்த்து மீதியானோர் என்னை இன்னார் இப்படிப்பட்டவர் என்று நினைப்பதினால் எனக்கேதும் ஆகப்போவதில்லை" என்று ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்? நான் உட்பட எல்லோருமே விளக்கம் கொடுத்து மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதுவது சம்பந்தப்பட்டவர் உட்பட அனைவருக்குமாகத்தான் (அதை எடுத்துக்கொள்வார்களா இல்லையே என்பது வேறு விஷயம்) அதில் வெட்கப்பட ஒன்றுமேயில்லை.. எனக்கு கவலையில்லை என்றெல்லாம் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே செய்வதை பார்த்தவர்தானே நாம்... உங்களின் நோக்கம் "எனது பக்கக்கதை ஏற்கனவே என்னை அறிந்து தனிப்பட்டத் தெரிந்த சிலருக்குத் தெரியவேண்டுமென்பதாலும்" என்பதாகத்தான் என்றால் பதிவே தேவையில்லை, யாகூ குழுமத்தில் ஒரு மெயிலே போதும் என்பது உங்களுக்கு தெரியாதா? ஓ.. "இனியும் கிடைக்கக்கூடிய சில கருத்தொத்த நண்பர்கள்" சரிதான்..

ஆ) தயவு செய்து எனக்காக நீங்கள் பொதுமக்களிடம் ஓட்டு கேட்காதீர்கள்.. அப்புறம் எதிர்காலத்தில் "என்னால் ஓட்டு பெற்ற முகமூடி இப்படியெல்லாம் எழுதுவதை கண்டால் புல்லரிக்கிறது" என்றெல்லாம் நீங்கள் பெருமைப்படும்போது எனக்கு தர்மசங்கடமாக இருக்கும்.

இ) நான் அரசியல்வாதிக்கு சொல்வதை இங்கும் சொல்கிறேன்.. அரசியல்வதியின் அடிப்படை குணத்திடை ஒன்று, வாக்கு மாறுவது. அதை அமைதியாக செய்தால் ப்ரச்னை ஒன்றுமில்லை.. ஆனால் வீராப்பாக வசனம் விட்டுவிட்டு அதை மாற்றும்போதே அதுகுறித்த கிண்டல் வருகிறது. எனவே ஏற்கனவே உங்களால் 27 தடவை சொல்லி புளித்து போன "இந்தப்பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் அப்பால், எதையுமே நான் பேசப்போவதில்லை" போன்ற அனாவசிய வாக்கியங்களை தவிருங்கள்.. அதனால் "கடைசித்தடவைக்கும் பிறகொரு கடைசித்தடவை சொல்லவேண்டிய அவசியமேற்படும்" பத்திகள் குறையும். எழுதுபவருக்கும் சில மணித்தியலங்கள் மிச்சம்.. படிப்பவருக்கும் முக்கால் மணிநேரம் ஆகாது பாருங்கள்..

Thangamani said...

//He who is used to the absurd will get along fine in our time.//

இதுதான்.

இளங்கோ-டிசே said...

பெயரிலி, நீங்கள் எழுதியதை முற்றுமுழுதாய் வாசித்து கிரகிக்கமுடியாவிட்டாலும் உங்களுக்கு ஏற்படும் அலுப்பும் சோர்வும் புரிகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் -வலைப்பதிவுக்கு வரமுன்னர்- நடந்த விவாதம் ஒன்றை வாசித்தபோது எழுந்த முடிவுகள் இன்னும் மாறாமல் இருப்பதுதான் ஆச்சர்யமாயிருக்கிறது. ஏன் இவ்வளவு வன்மத்தோடும் குரூரத்தோடும் இவர்கள் இருக்கின்றார்கள் என்று, ஒரு பதிவும் பின்னர் நான் எழுதியது ஞாபகம். அன்று கூறியதுமாதிரி, நேரிலும் விவாதங்களிலும் எத்தனையோ எதிரெதிர் முரண்களுள்ளவர்களை சந்தித்திருக்கின்றேன். எவரும் இப்படி ஒருவித வனம்த்தோடு அலைந்ததைக் காணவில்லை. இன்று எத்தனையோ கருத்துக்களில் முரண்பாடு இருந்து விவாதிக்கொண்டிருக்கும் சிறிரங்கனோடோ, பரமுவேலனோடு, ரயாகரனோடோ என்னால் விவாதிக்கமுடியும். அவர்களின் கருத்துக்கள் பிடித்தாலோ பிடிக்காவிட்டாலோ அவர்களின் தளத்துக்குச்சென்று பின்னுட்டம் இடவும் முடியும் (நேரிலும், எத்தனையோ புள்ளிகளில் முரண்படும் நண்பர்களோடு இயல்பாய் உரையாட என்னாலும் முடியும், அவர்களுக்கும் தெரியும்). நமது கருத்துக்களின் முரண்களின் அடிப்படைகளை மீறி சகமனிதர்கள் என்ற நேசிப்பு நமக்குள் இருக்கிறது. அதைத்தான் போர் எங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு பெறுமதி வாய்ந்தவை என்பது போருக்குள் இருந்தவர்கள் அறிவார்கள். இறப்பதற்கு முன் கடைசிப்பாவத்துக்கான வாக்குமூலத்தையும் கொடுத்துவிடத் துடிப்பவர்களாய்த்தான் நம்மில் பலர் இன்னமும் நடமாடிக்
கொண்டிருக்கின்றார்கள்.

.....
'இவர்களைப்' போன்றவர்களின் அடிப்படைப்பிரச்சினைதான் என்ன? இராஜீவ் காந்தி கொல்லப்பட்டதுதான் அனைத்து வன்மத்துக்கும் காரணமா? 'உங்கள் பாதிப்புப் புரிகிறது. எங்களுக்கும் வேறுவிதமான பாதிப்புக்கள் இருக்கின்றன' என்றுதானே கூறுகின்றோம். இதைவிட வேறு என்னத்துக்காய் இவ்வளவு மூர்க்கமாய் எங்களோடு விவாதித்தபடி இருக்கிறார்கள். அவர்களின் இடங்களை நாங்கள் எவரும் ஆக்கிரமிக்கவில்லையே. (பாருங்கள் நீங்கள் கடைசி ஆறுமாதங்களும் எதுவும் பெரியதாய் எழுதியதில்லை. திருப்பத் திரும்ப உங்களை வம்புக்கு இழுக்கின்றார்கள். யாராவது ஒருவர் அவர்களுடன் விவாதித்தால் பெயரிலிதான் ரொனிக் கொடுத்து அனுப்புகின்றார் என்ற நக்கல் வேறு. ப்ரோக்களாகவோ, புறாக்களாகவோ நாங்கள் இருந்தாலும் ஒவ்வொருத்தரும் அவரவர் சொந்தக்கருத்துக்களோடும் முரண்பாடுகளோடும்தானே இருக்கிறோம். எங்களுக்குள்ளும், ஒரு கருத்துப் பிடிக்கவில்லையென்றால் முரண்பட்டு விவாதிக்கத்தானே செய்கின்றோம்)
....
இந்தா மகாபாரதப்போர் தொடங்கிவிட்டது. இனி தலைகளை உருட்டாமல் ஓயப்போவதில்லை. இன்ன இன்னார் வெள்ளைக்கொடியோடு வந்தால் தான் சமாதானம் இல்லாவிட்டால் போர் போர் போரன்றி எதுவுமில்லை என்று அங்காலை ஒருவர் முரசறைவிக்கிறார். ஒரு அரசியல்வாதியின் பேச்சைக் கேட்பதுபோல முதலில் சிரிப்புத்தான் வந்தது. ஜயா, போருக்குள்ளேயே இருந்து பிணங்கள் விழவிழப் பார்த்த எங்களுக்கு 'போர்' என்ற ஒரு சொல் தரும் பாதிப்பு உங்களுக்குச் சிறிதாவது தெரியுமா? இன்றும் ஆண்டுகள் கடந்தாலும் இடிவிழுந்தாலும் திடுக்குற்றும், ஹெலி மேலே பறந்தாலும் ஒருகணம் நிதானித்து வானம் பார்த்துத்தான் நடந்துகொண்டிருக்கின்றோம் என்பதை அறிவீர்களா? போர் இன்னமும் தந்துகொண்டிருக்கும் உளவியல் பிரச்சினைகளை..., நாங்கள் தப்பி இன்னொரு நாட்டுக்கு வந்துவிட்டாலும் அங்கே மடிந்துகொண்டிருக்கும் மக்களின் நிலை எங்களுக்கு குற்றவுணர்வைத் தினமும் தந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிவீர்களா?
இது நிச்சயம் அனுதாபம் வேண்டி அல்ல கூறவிளைவது, நாங்களும் பலங்களும் பலவீனங்களும் உள்ள இன்னொரு வகை மனிதர்களே.. அவ்வளவுதான். தயவுசெய்து எதையும் அனுபவிக்காது வார்த்தைகளுக்குள் நின்று 'போர்' செய்யாதீர்கள் என்றுமட்டுந்தான் இந்தப்பொழுதில் கூறமுடிகிறது.

எத்தனையோ புள்ளிகளில் முரண்பட்டாலும் சிறிரங்கனோ, ரயாகரனோ, பரமுவேலனோ கூறுவதை நிதானித்துக் கேட்பமே தவிர, 'இவர்களை'ப்போன்றவர்கள் தலைக்கு மேலே ஏறிநின்று பிரசங்கம் செய்வதை எந்தப்பொழுதிலும் என்னைப்போன்றவர்கள் செவிமடுக்கமாட்டோம் என்றுதான் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.எனெனில் மேற்கூறிய நண்பர்களுக்கு சொல்வதற்கான தகுதியிருக்கிறது, அவர்களும் மக்களுக்காய்தான் களங்களில் இருந்திருக்கின்றார்கள். மக்களின் அமைதியான வாழ்வுக்காய்த்தான் தங்களின் சொந்த நம்பிக்கையின்பாற்பட்டு இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.
....
பெயரிலி, முதல் ஒரு பதிவிலும் இந்தப்பதிவிலும் சிறிரங்கன் கூறுவதைத்தான் நானும் தனிப்பட உங்களுக்குக் கூற விரும்புவது. எத்தனை தடவைதான் நீங்கள் 'நியாயம்' கேட்டுக்கொண்டு இருக்கப்போகின்றீர்கள்? உங்களின் எழுத்துக்களுக்காய் உங்கள் பதிவுகளை வாசித்துக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை-ஒரே விடயத்தை- திருப்பக் திருப்பக் கூறி ஏமாற்றிக்கொண்டிருக்கின்றீர்கள்என்பதைத்தான் அலுப்புடன் கூறிக்கொள்கின்றேன். இப்படி மனவழுத்தம் ஏற்றும் பதிவுகளைப் பார்த்து, சிலவேளைகளில் இவற்றைப் பகிர்ந்துகொள்ளும்போது ஒரு தோழி கூறுவார், 'திருப்பித் திருப்பி ஒரே விடயத்தை எழுதி எத்தனைபேரை மாற்றப்போகிறாய்.... புதிது புதிதாய் ஆட்களும் புதிது புதிதாய் குற்றச்சாட்டுக்களுடன் பழைய நபர்களும் வந்துகொண்டிருப்பார்கள் அத்தனை பேருக்கும் விளக்கமளித்துக் கொண்டிருக்கப் போகிறாயா?' என்று. அந்தக் கேள்வியைத்தான் நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
.....
ஆறு மணித்தியாலம் செலவழித்ததைவிட நீங்கள் இன்னும் தூங்கியிருக்கலாம் என்றுதான் கூறுவேன். மற்றும்படி எனக்குப் பிடித்த ஒரு படைப்பாளியை இந்தப்பொழுதுகளில் நான் இழந்துகொண்டிருக்கின்றேன் என்ற கவலையை மட்டும் இறுதியாய் பதிவு செய்துவிடுகின்றேன். நன்றி.

( I know this comment is too personal, But I couldn't find any other form to share my thoughts rather than this. Thankx again)

வசந்தன்(Vasanthan) said...

//எத்தனையோ புள்ளிகளில் முரண்பட்டாலும் சிறிரங்கனோ, ரயாகரனோ, பரமுவேலனோ கூறுவதை நிதானித்துக் கேட்பமே தவிர, 'இவர்களை'ப்போன்றவர்கள் தலைக்கு மேலே ஏறிநின்று பிரசங்கம் செய்வதை எந்தப்பொழுதிலும் என்னைப்போன்றவர்கள் செவிமடுக்கமாட்டோம் என்றுதான் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.எனெனில் மேற்கூறிய நண்பர்களுக்கு சொல்வதற்கான தகுதியிருக்கிறது, அவர்களும் மக்களுக்காய்தான் களங்களில் இருந்திருக்கின்றார்கள். மக்களின் அமைதியான வாழ்வுக்காய்த்தான் தங்களின் சொந்த நம்பிக்கையின்பாற்பட்டு இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.
//

டி.சே, சரியாகச் சொன்னீர்.

ஆனால் நீர் குறிப்பிட்டவர்களையே துணைக்கழைத்து, பெயரிலியையும், உம்மையும் இன்னும் அவர்களே பெயரிலியின் சீடர்களென்று நினைக்கும் நபர்களையும் சேர்த்த கூட்டத்தை எதிர்கொள்ளப் பாவிக்கிறார்கள். இதே நபர்களின் இந்தியா பற்றிய, இந்திய அமைதிப்படை பற்றிய, இந்திய ஏகாதிப்பத்தியம் பற்றிய (இதை விடவும் கடுமையான வார்த்தைகளை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்) எந்தக் கருத்தையும் காணாது, அல்லது மறைத்துவிட்டு புலியெதிர்ப்பை மட்டும் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.

முன்பொருமுறை நடந்த கருத்துச் சண்டையில், முறிந்த பனை நூலிலிருந்து சில பகுதிகளைப் பொறுக்கியெடுத்துப் போட்டுவிட்டு ஒப்பாரி வைத்தார் ஒருவர். பகிடியென்னெண்டா அந்தப்பதிவு இந்தியப்படை ஈழத்தில் என்ன செய்தது என்பதையொட்டியதும், தனிநபர்களா ஒட்டுமொத்த இராணுவமா அவற்றுக்குப் பொறுப்பு என்பதும்தான். பதிவுக்கு நேரடியான சம்பந்தமுள்ள - அதே முறிந்தபனையில் எழுதப்பட்டிருந்த இந்திய இராணுவம் கூட்டாகச் செய்த படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் என்பவற்றைத் தூக்கிப் போட்டிருக்க வேண்டும். "சிங்கள இராணுவத்தை விடவும் காட்டுமிராண்டித்தனமான மனிதநேயமற்ற அணுகுமுறைதான் இந்தியப்படையிடமிருந்தது" என்ற பொருள்பட அதே நூலில் சொல்லப்பட்டிருந்ததை எடுத்துப்போட்டிருக்க வேண்டும். மாறாக புலிகள் பற்றிய விமர்சனத்தைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கூக்குரலிட்டார்கள்.
இதற்குள் இப்போதும் ஜனநாயக, அகிம்சைப் போதனைகள் வேறு.

இங்கே இவற்றை எழுதுவதற்குக் காரணம், பெயரிலி மீதான அல்லது மற்றவர்கள் மீதான இந்தச் சேட்டைகளெல்லாம் அரசியல் சார்ந்தது, அரசியற் காரணங்களுக்கானது என்பதே. இந்த நிலையில் தப்பித்தவறி நாங்கள் யாரும் புலியை விமர்சித்து வாய்திறந்தால் அதைவைத்தே தங்கள் வியாபாரத்தைப் பெருக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

Vassan said...

ரமணீ

வணக்கம்.

எனக்கு இந்திய/இலங்கை என்றெல்லாம் தமிழர்களிடையே வித்தியாசம் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியும்..

6 மணி நேரம் செல்வழிந்தது பற்றி சொல்லியிருந்தீர்கள்...

எனக்குத் தெரிந்து 1997 தொடங்கி இது மாதிரி எத்தனையோ பல ஆறு மணி நேரங்களை நீங்கள் செலவழித்துள்ளீர்கள் இணைய நிழற் சண்டைகளில்.. நீங்கள் மட்டுமல்ல பலரும்தான்.

ஆனால் இதுவரை என்ன பலன்..?

ஒரு கட்டத்தில் அலுத்துப் போக வேண்டும், இவை. இல்லாவிட்டால் அலுத்து போய்விட தேவையானவற்றை செய்து இந்த இணைய உருப்படாதவற்றிலிருந்து ஒதுங்கி கொள்ள வேண்டும்... நம் அனைவருக்கும் வயது ஏறுகின்றதல்லவா.. எத்தனையோ பொறுப்புகள்.

டீஜே சொன்னது போல தனியாக சொல்லியிருக்கலாம்.

நித்திலனுக்கு எங்களது அன்புகள்.

-/பெயரிலி. said...

கோயிஞ்சாமி முதல் வாசன்வரை எல்லோரும் நன்றி. அநாவசியமான உரைப்புகளைத் தவிர்த்துக்கொண்டுதான், தள்ளியிருக்கிறேன். தொடர்ந்து சுரண்டியபோதும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மார்டன் கேர்ள் முதல் மனுஷ்யபுத்திரன்வரை இவர்தான் எனத் திரிபான பதிவு செய்யப்படும்போது, அதை நம்ப இருக்கும் ஒரு சாரார் குறித்துமட்டுமே. இப்பதிவின்பின்னால், எதையும் விரித்து விளக்கமுடியுமென நம்பவில்லை. அதனால், சுட்டியபடியே எதையும் எழுதப்போவதில்லை.

முகமூடி, நான் எழுதியதை நீங்கள் சரியாக வாசிக்கவில்லையென்பதை உங்கள் கேள்விகள்மூலம் உறுதிப்படுத்தியிருக்கின்றீர்கள். அதற்குமேலே சொல்ல ஏதுமில்லை. தெம்புமில்லை.

முகமூடி said...

// முகமூடி, நான் எழுதியதை நீங்கள் சரியாக வாசிக்கவில்லையென்பதை // போன முறை அவசரமாக வெளியே போகும் முன் படித்தது... நீங்கள் பொதுவாக எழுதியது மற்றும் முகமூடி என்று தென்படும் இடங்களை மட்டும் வாசித்தேன்.. ("பிகேஎஸ்ஸுக்கு குசும்பனுக்கு பத்திகளை படிக்காமல் தாண்டி" என்று போன முறை எழுதியதை குறிப்பிட்டு அப்படி இருக்கும்போது அவர்களுக்கான பத்தியில் முகமூடியை குறித்து எழுதியது முகமூடிக்கு எப்படி தெரிந்தது என்று யாரும் இன்னமும் "மடக்காதது" ஆச்சரியப்படுத்துகிறது) இருப்பினும் போன பின்னூட்டத்தில் நான் கொடுத்த விளக்கங்களில் பெரிய மாற்றம் எதுவுமில்லை..

// அவர் முறையல்ல என்றது மாசாசூசெட்டு மோப்பசக்தியை அல்ல என்பதைக் கண்டுகொள்ளவேண்டும் // அப்போது உங்களுக்கும் பிறருக்கும் நடந்த ஐபீ சர்ச்சையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.. ஆனால் எந்த வித குற்றமும் செய்யாத, யார் ஐ.பீயையும் சேகரிக்கும் அல்லது வெளியிடும் வழக்கமில்லாத என் ஐ.பீயை முகாந்திரம் இல்லாமலே பொதுவில் உபயோகித்ததை நான் கண்டித்தேன்/கிறேன். அவ்வளவுதான்.

// முகமூடி எதுவும் அவரோடு அவர் பதிவிலே பேசாத என்னைக் குறித்து மோடி என்றொரு பதத்தினை முன்னிட்டு, மோடியைப் பயன்படுத்துகின்றவர்கள், ராம்வோச்சர், மார்டன்கேர்ள், அப்டிப்போடு என்ற தோரணையிலே பேசி ஆகவே மூவரும் ஒருவரோ என்ற வகையிலே ஒரு பதிவிட்டிருந்தார் // கண்டிப்பாக இல்லை. ராம்வோச்சர்தான் மாடர்ன்கேர்ள் அல்லது அப்டிபோடு என்று சூசகமாக கூட நான் தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு தோற்றம் வந்தால் அது சொன்ன விதத்தில் அல்லது புரிதலில் வந்த கோளாறேயாகும். முன்பே சொன்னது போல முகமூடி கூத்தடிக்கிறது என்று அப்டிபோடு சில விஷயங்களை சொன்னபோது, அவர் விலக்கப்பட்ட பதிவுகளை குறித்த மேற்கோள் காட்டுகிறார் என்ற எண்ணத்தில் அது எப்படி அவருக்கு இப்போது தெரியவருகிறது என்ற - அது யாராலேயோ தரப்பட்டிருக்க வேண்டும், கண்டிப்பாக நீங்கள் அல்ல - அனுமானத்தில் எழுதப்பட்டது.. அன்றி ராம்வோச்சர் = மாடர்ன்கேர்ள் = அப்டிபோடு என்ற வாதம் எந்த இடத்திலும் என்னால் தரப்படவில்லை...

இவர் = அவர் என்ற அனுமானத்தை பலர் சுலபமாக கையாளுகிறார்களே, எழுத்துநடை ஒரே போல் இருப்பதை வைத்து சன்னாசி = பெயரிலி என்று கூட சொல்லலாம் என்ற அளவிலேதான் குறிப்ப்ட்டேன், அதன் மூலம் குற்றச்சாட்டு எதையும் வைக்கவில்லை

// "பத்து மைல்" தொலைவு வந்ததை முகமூடியும் குசும்பனும் பயன்படுத்தியிருந்ததை ஒன்றாக எடுத்துப் போட்டிருந்தேன். வேறு ஒரு சொல் எதையுமே சொல்லவில்லை // இதை பிறிதொரு நாள் படித்து பாருங்கள்... உங்களுக்கே சிரிப்பாக வரும். இறைதூதரை படமாக போட்டோம், வேறு ஒரு சொல் எதையும் சொல்லவில்லை.. இந்து கடவுளை நிர்வாணமாக வரைந்தேன் வேறு ஒரு சொல் எதையுமே சொல்லவில்லை என்றெல்லாம் அவர்கள் ஏன் சொல்லவில்லை என்று தோன்றுகிறது...

// முகமூடியின்ரை பரதேச விதேச சுயராஜ்ய படங்கள்கூட திருமலைமீதொருநாள் திருமணம் நடந்தது பாரெண்டு பப்ளிக்கிலை போடலாம். // இதற்கென்ன அர்த்தம் என்று புரியவில்லை.. ஆனால் இதற்கு முன் சில நண்பர்களால் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் போல, நீங்களும் திருமலை = திருப்பதிக்கு மேல் இருக்கும் புனித மலையை குறிப்பிட்டு என்னவோ சொல்கிறீர்கள் என்பதாய் நினைத்து சந்தோஷமாக இருந்து கொள்கிறேன்.

மற்றபடி போன பின்னூட்டத்தில் குறிக்கப்பட்ட அ மற்றும் இ குறிப்புகள் பெயரிலிக்கு எழுதியதல்ல... நான் அறிந்த மாசக்கா என்ற நபர் இன்றைக்கு பண்ணிக்கொண்டிருக்கும் வேலையை நினைத்து எழுதியதே... // அதற்குமேலே சொல்ல ஏதுமில்லை. தெம்புமில்லை // இவ்விடமும் அஃதே.. சண்டை போட வேண்டும் என்ற குறிக்கோளோடு நான் எதுவும் எழுதியதில்லை.. என்னை குறித்த விமர்சனம் வரும்போது பெரும்பாலும் அமைதியாகவே கடந்தாலும் சில சமயம் எனக்கு தெரிந்த மொழியில் பதில் சொல்கிறேன். அது சண்டை பிடிப்பதாக தோன்றினால் அதுகுறித்து சொல்ல ஏதுமில்லை... நித்திலன் என்பது யாரென்று தெரியவில்லை.. எல்லோரும் சொல்கிறார்கள், நானும் சொல்கிறேன். நித்திலனுக்கு வாழ்த்துக்கள்.. நன்றி.

முகமூடி said...
This comment has been removed by a blog administrator.
arulselvan said...

ரமணி
போய் ஒரு மெகா தூக்கம் ஒண்ணு போடவும். எப்பவாவது கவிதை போட்டாச் சரி.
அருள்

முகமூடி said...

// goinchami-8A // ஆனாலும் இப்படி போட்டு தாக்க கூடாதய்யா ;-))))

நித்திலன் அவர் குழந்தைன்னு யூகிக்க முடிந்தாலும் பெர்சனலாக தெரியாத நிலையில் நான் அந்த வாக்கியத்தை போட்டது அனாவசியம் என்றே தோன்றுகிறது

இனிமே அனாவசியமான வாக்கியங்களை தவிர்க்க முயற்சி பண்றேன். கண்ண திறந்ததுக்கு நன்றி..

மு. சுந்தரமூர்த்தி said...

ரமணீ,
இது அலுப்பு தரும் விஷயம் என்றாலும் இப்படியான நிர்பந்தம் உங்கள் மீது மீண்டும், மீண்டும் திணிக்கப்படும் நிலையில் நீங்கள் செய்துள்ளது சரியே. உங்கள் ஆறுமணி நேரச் செலவுக்கான பலன் கிடைக்கும் என்று நம்புவோம்.

வசந்தகாலம் வந்துவிட்டது. செர்ரி மரங்கள் முகிழ ஆரம்பித்துவிட்டது. தெற்கே போன வாத்துக்கள் குஞ்சுகளுடன் திரும்பும் நேரம். ப்ரோக்கள் கே/கமராக்களை துடைத்து வைத்து அடுத்தகட்ட வேலையைப் பாருங்கள்.

இப்படிக்கு,
(உங்கள் கட்சியில் சேர்க்கப்படாத கோயின்சாமி-8a வும், அருளும் இங்கு வந்துபோயிருக்கும் தைரியத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட)
"சுந்தரமூர்த்திகள்"