Thursday, August 04, 2005

படிவு - 11

மூர்க்கத்தின் உச்சக்கட்டம்

இன்று செய்தியில் இரண்டு வினை-எதிர்வினையான தொடர்சம்பவங்கள்; ஒன்று, பாலஸ்தீனத்தில்; மற்றது, ஈழத்தில். இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள். இரண்டு நாடுகளும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள். இரண்டிலும் ஆக்கிரமிப்பு இராணுவங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள், தாமும் தம்வேலைகளுமாக இருந்த அப்பாவிக்குடிமக்களைச் சுட்டுக்கொன்றிருக்கின்றார்கள்; கொன்றதற்கான காரணங்கள் இதுவரை இவைதானெனச் சரியாகச் சுட்டப்படவில்லை; வெறும் இனக்காழ்ப்புக்கூடக் காரணமாகவிருந்திருக்கலாம். அடுத்ததாக, இரு சம்பவங்களிலுமே, ஆக்கிரமிப்புப்படைகள் இவ்வெதேச்சையான கொலைகளைச் செய்த தம் படைவீரர்களை உடனடியாகக் காப்பாற்றியிருக்கின்றன. விளைவாக, இந்நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருந்த அந்நிலத்துக்குரிய பூர்வீகமக்கள் கொதித்துப்போய், உடமைகளை எரித்தல் கொளுத்துதலுக்குமப்பால் மிக மூர்க்கமாகச் செயற்பட்டிருக்கின்றார்கள். பலஸ்தீனத்திலே, பாதுகாப்பாக வைக்கப்பட்ட யூத விடலை இராணுவவீரனை, இராணுவப்பாதுகாப்பினையும் மீறி உடைத்துக்கொண்டுபோய்க் கொன்றிருக்கின்றார்கள்; ஈழத்தில், நிகழ்வைப் பார்வையிட, சட்டத்தினை நிலைநாட்ட(வென்று சொல்லிக்கொண்டு) வந்த நகர்காவல் மேலதிகாரியினைக் கடத்திப்போய்க் கொன்றிருக்கின்றார்கள்.

"ஒரு கண்ணுக்கு இன்னொரு கண்ணென்பது பயனாகாது" என்பதை, காலகாலமாக மறைமுகமாக அழுத்தப்பட்டும் உடனடிச்சம்பவத்தினாலே நேரடியாகப் பாதிக்கப்பட்டும் ஆத்திரத்தின் உச்சத்திலே இருப்பவர்களுக்குச் சொல்வதிலே ஏதும் பயனிருக்குமென்றோ நியாயமிருக்குமென்றோ நான் நம்பவில்லை. ஆனால், இப்படியான, அநாவசியமான எதிர்வினைக்கொலைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயனளிக்கப்போவதில்லை; ஆக, தமக்கான பாதிப்பினைச் சுட்டிக்காட்டி அதன்மூலம் நியாயமான அனுதாபத்தினை மற்றவர்களிடம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினையும் இழக்கின்றார்களென்றே தோன்றுகின்றது. இன்னுமொருபடி கீழேபோய், பாதிப்பினைச் செய்தவர்களுக்கும் தமக்கும் ஏதும் வித்தியாசமில்லையென்ற அபிப்பிராயத்தினைக்கூட வெளியுலகுக்கு ஏற்படுத்திவிடக்கூடும். எல்லாவற்றுக்கும்மேலாக, ஈழச்சம்பவத்திலே, சம்பந்தப்பட்ட நகர்காவலதிகாரி இச்சம்பவத்திலே குடிமக்களுக்கு ஏதும் கெடுதல் செய்ததாக செய்திகளை வாசித்தவரையிலே தெரியவில்லை; அந்நிலையிலே, இராணுவத்தின் கூத்துக்கு, தன் கடமையைச் செய்யவந்த ஒரு நகர்காவலதிகாரியினைக் கொல்வது எந்தவிதத்திலும் நியாயப்படுத்தமுடியாததாகும். நகர்காவலதிகாரியினை வேறொரு காரணத்துக்கு வேறொரு சந்தர்ப்பத்திலே கொன்றவர்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஆனால், இச்சந்தர்ப்பத்திலே எதுவுமே கெடுதல் செய்யாது தன் கடமையைச் செய்யவந்த அதிகாரியினைக் கொன்றதற்கு அவரைக் கொலை செய்தவர்கள் வெட்கப்படவேண்டும்; வருத்தப்படவேண்டும். இவ்வெதிர்ச்செய்கை முறையற்றது மட்டுமல்ல, கெடுதலானதுங்கூட. இதனாலே முழு ஈழச்சமுதாயத்துக்குமே பின்னடைவுதான் எஞ்சக்கூடும். இந்தப்பின்னடைவினை - குறிப்பாக, எந்தளவு நிகழ்ந்தது எந்தளவு திரிவுற்று ஊடகவியலாளரின் விருப்புவெறுப்புக்கேற்ப வேண்டியவிதத்திலே வளைத்து வனையப்பட்டுத் தரப்படுவதால், வரக்கூடிய இந்தப்பின்னடைவினை- நேரடியாக அறிய விரும்புகின்றவர்களை, இணையப்பதிப்பு அல்லது நாளைய அச்சிடப்பட்ட இலங்கை, இந்திய ஆங்கிலப்பத்திரிகைகளை வாசிக்கக்கேட்டுக்கொள்கிறேன்.

'2005 ஓகஸ்ற், 04 வியா. 15:14 கிநிநே.

3 comments:

SnackDragon said...

/ அந்நிலையிலே, இராணுவத்தின் கூத்துக்கு, தன் கடமையைச் செய்யவந்த ஒரு நகர்காவலதிகாரியினைக் கொல்வது எந்தவிதத்திலும் நியாயப்படுத்தமுடியாததாகும். /
மிகவும் சரி.

தெருத்தொண்டன் said...

கூர்ப்பு மந்தம் அகன்று புறப்பட்டார் பெயரிலி..

இளங்கோ-டிசே said...

பெயரிலி, நியாயமான கேள்விகளுள்ள பதிவு. மிக்க நன்றி.