
நியூ ஓர்லியன்ஸ்-1

நியூ ஓர்லியன்ஸ்-2

நியூ ஓர்லியன்ஸ்-3

நியூ ஓர்லியன்ஸ்-4

நியூ ஓர்லியன்ஸ்-5

நியூ ஓர்லியன்ஸ்-6

நியூ ஓர்லியன்ஸ்-7

நியூ ஓர்லியன்ஸ்-8

நியூ ஓர்லியன்ஸ்-9

நியூ ஓர்லியன்ஸ்-10
not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
தங்கர்பச்சான் தலை உருள்கிறது; திரைப்பட உலகினை ஆவென்று பார்க்குமொரு சமூகத்தின் முன்னே அதன் ஒளிவெள்ளத்திலே உலாவுகின்றவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் அது விவாதப்பொருளாகிவிடுகின்றது; ஹொலிவுட்டின் (உ)ரொம் க்ரூஸ் அண்மையிலே சயின்ரோலஜி குறித்து என்பிசி இன் மற் (உ)லோவரின் காலைநிகழ்ச்சியிலே தான் நடித்த War of Worlds இனை விளம்பரப்படுத்த வந்து War of Words நிகழ்த்தி, வேண்டாமல் ப்ரூக் ஸ்ல்ட்ஸுக்கும் தாய்மையின் நெறி எப்படியாக இருக்கவேண்டுமென்பது குறித்து அறிவுரைகூறி சலசலப்பினையும் ஊடகங்களுக்கு மெல்ல அவலையும் கொடுத்திருந்தார். ('Blue Lagoon' Brook Shields இற்கு என்றபடியாலே விட்டுவிட்டேன்; 'Paradise' Phobe Cates இற்குச் சொல்லியிருந்தால், அண்ணருக்கு பொஸ்ரன் பக்கம் அடுத்த முறை வரும்போது நடந்திருக்கக்கூடியதே வேறு). போலிவுட்டிலே, ஸக்தி கபூர், ஸல்மான் கான்-மான் என்று தொடர்ந்து ஏதாவது அவல் பொரிகின்றது. கோலிவுட் மட்டும் குறைந்ததா என்ன? நிறைய நடக்கின்றது.
ஆனால், அடிக்கடி திறக்கத் தெரியாமல் வாயைத் திறக்கின்றவர்களுக்குமட்டும் சிக்கல் பெரிதாகிவிடுகின்றது; அதுவும் குறிப்பாக, பெரும்பான்மையிலிருந்து விலகி நின்றுகொண்டு, கண்ணாடி வீட்டுக்குள்ளே கல்லெறிகின்றவர்களுக்கு மிகவும் சிக்கல். அதுதான் தங்கர்பச்சானுக்கு நிகழ்ந்திருக்கின்றது. தங்கர்பச்சான் குறித்து தங்கமணி மிகவும் சுருக்கமாகவும் அருமையாகவும் எம். கே. குமாரின் பதிவிலே சொல்லியிருக்கின்றார்; வார்த்தைக்கு வார்த்தை ஏற்றுக்கொள்ளமுடிகின்றது ('இவைகள்' என்று எழுதுவதைத் தவிர ;-)).
தயாரிப்பாளர் தங்கர்பச்சானின் பக்கம் கூலி- வேலை நேரம் தொடர்பாக நியாயமிருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். அது குறித்து, தொடர்ச்சியாக நான் வாசித்திருக்கவில்லை. அதனாலே ஏதும் சொல்லமுடியாது; ஆனால், அவர் பக்கம் நியாயமிருக்கிறதோ இல்லையோ, தங்கர்பச்சான் "நடிகைகள் விபசாரிகள்" என்ற அர்த்தம் தொனிக்கும் விதத்திலே சொன்னால், அவரின் அக்கருத்தினை எந்தக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தமுடியாது; நியாயப்படுத்தத்தேவையில்லை. மன்னிப்பு பிரச்சனையை ஆற்றுமோ, அல்லது அவர் குறித்த மற்றவர்களின் பார்வையை மாற்றுமோ தெரியாது; ஆனால், அதற்கு அவர் மன்னிப்புக் கேட்பதுதான் நியாயமே - அஃது அவரினை ஒரு பகிடிக்குரிய பண்டமாக, வித்தையாட்டப்படும் குரங்கின்நிலையிலே மற்றவர்கள் பார்க்க வைத்தபோதுங்கூட.
அவமதிப்புக்குரிய பாத்திரப்படைப்புகளையும் காட்சிகளையும் நகைச்சுவை, பண்பாடு என்ற விதத்திலே உள்ளிடும் படங்களிலும் நடிகர்களும் நடிகைகளும் வாய்ப்புக்கிடைத்தாலே சரியென்ற விதத்திலே நடிக்கவும் செய்கின்றார்கள். பாடலாசிரியர்களும் கதாசிரியர்களும் 'பெண் என்றால் இப்படியாகத்தான்' என்று வரையறுக்க, அதனை ஏற்றுக்கொண்டு நடிக்கும் கேடான நிலையையும் காணலாம். ஆனால், இவை மறைமுகமான ஆமோதிப்பென்று விட்டுவிடலாம். தயாரிப்பாளர்.எதிர்.நடிகர் என்ற நோக்கு என் கரிசனைக்கு அப்பாற்பட்டதாலும் அந்தக்கோணத்திலே நிகழ்ந்தது முழுக்க எனக்குத் தெரியாததாலும் ஏதும் சொல்லமுடியாது.
ஆனால், இந்த விடயம் தொடர்பாக வேறு சில பக்கங்கள் பார்க்கப்படவேண்டியவை; குறிப்பிடத்தக்க இரண்டு.
1. அவதூறு பேசுதல் என்பது, அரசியலும் திரையுலகும் கலந்த கோடம்பாக்கத்திலே இன்றைக்கு நேற்றைக்கு நிகழ்ந்ததல்ல; திரைப்படக்காரர்களைக் கூத்தாடிகளென்று முதலமைச்சர்களாகவிருந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொல்லியிருந்தார்கள்; அஃது இழிவுபடுத்தும் நோக்குத்தான். எஸ். எஸ். சந்திரன் போன்ற அரசியல்நடிகர்கள் (முன்னாள்) பெண்நடிகைகள் பற்றி, முன்னாள் சொன்னதெல்லாம் இழிவு நோக்குத்தான். கூட நடிகைகளை, சக ஜரிதாபீடா நடிகர்கள் பறக்கும் விமானத்திலே, அவமானப்படுத்துவது தொடக்கம், தொட்டு அழுத்துவது தொடக்கம், வெளிப்புறப்படப்பிடிப்புகளிலே அத்துமீறி நடிகைகள் அறைக்குள்ளே நுழைவதுவரைக்கும் கிசுகிசுக்கள் வராத சஞ்சிகைகள் இல்லை; அப்படியான "நடிகைகளின் கதைகளை" விற்றுப்பிழைக்காத கௌரவமான பத்திரிகாசிரியர்களுமில்லை. அந்த நேரங்களிலே எதுவுமே நடிகர்கள் சகநடிகைகளுக்காகக் குரல் கொடுத்துவரவில்லை. (ஹொலிவுட்டிலே இவ்வாறு நடிகைகளுக்கு நிகழ்பவை குறித்து அண்மையிலே ஒரு குறை_சுயசரிதை வந்திருக்கின்றது). நடிகைகள் நடிகர்களை அவமதிப்பதும் (ரஜனிகாந்த்~மனோரமா) நடந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கர்பச்சானை நடிகர்சங்கக்கூட்டத்திற்கு வரச்செய்து, இறுதியாக, "இப்படியாக நடந்தால், தொழில்புரிய மறுப்புத்தான்" என்று சொன்ன விஜயகாந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே, தொலைக்காட்சி நடிகையான புவனேஸ்வரி தொடர்பாகச் சொன்னது, "தொலைக்காட்சிநடிகைகள் மட்டுமே விபசாரத்தில் ஈடுபடுகின்றார்கள்; சினிமா நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடுவதில்லை." குஷ்பு, ராதிகா, தேவயானி, மனோரமா, சரிதா, காந்திமதி தொடக்கம் எத்தனையோ திரைப்பட நடிகைகள் தொலைக்காட்சியிலே பெரும்புகழடைந்திருக்கும் இந்நேரத்திலே, இவர் சொன்னது குறித்து எந்த நடிகரும் நடிகையும் எதையும் கேட்டதாகத் தெரியவில்லை; கண்டித்ததாகவும் தெரியவில்லை.
2. தங்கர்பச்சான் குறிப்பாகத் தாக்கப்படுவதற்கான காரணம், 'நடிகர்-எதிர்-தயாரிப்பாளர்' என்ற கூட்டமைப்புகளுக்கிடையேயான பலப்போட்டியிலே, இவர், முழுமையாக, ஒரு தமிழ்த்தயாரிப்பாளருக்குரிய பொதுப்பண்புகள் கொண்டிராததால், தயாரிப்பாளர்கள் முழுமையாக ஆதரிக்கமுடியாத ஆளென்பதும் ஆனால், அதே நேரத்திலே தயாரிப்பாளர் என்ற குறியீடாக இவர் பயன்படக்கூடுமென்பதும் இருக்கலாம். மேலும், குறிப்பாக அவரின் கார்காலநுணல்வாயின் வினை குறித்தும் காணவேண்டும்; இவர் இரஜனி குறித்துச் சொன்ன கருத்துகளின் பின்னால், சில ஆண்டுகளின் முன்னால், இணையத்திலே தமிழ்க்குழுமங்களிலே இவர் ரஜனியைத் தாக்கிப்பேசினாரென்ற காரணத்தினாலே மட்டும் "(இ)ரஜனி என் வீட்டிலே ஒண்ணுக்கடித்தார்" என்று அணுக்கத்தார் பதிவுகள் போடக்கூடியவர்களாலே தாக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கின்றோம்; இவரும் சேரனும் ஒரு பரபரப்பான செய்தி பத்திரிகைகளுக்கும் பொலீஸுக்கும் கொடுத்த பெண்ணினாலே இழுத்தடிக்கப்பட்டார்கள்; பின்னால், அப்பெண் சொன்னவை பொய்யெனத் தகவல்கள் வந்தன. அந்த விசாரணையும் அதன் முடிவுகளும் என்ன ஆயின என்பது குறித்தோ, அல்லது சுடச்சுட மெல்லும் வாய்க்குப் பொய்யவல் கொடுத்தது குறித்தோ எந்த அச்சூடகமும் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால், இப்படியான நிலை, 'சேரன், தங்கர்பச்சான் போன்றவர்கள் காட்டமாகக் குறிவைத்து திரைப்படவுலகத்திலும் பத்திரிகையுலகத்திலும் இணையத்திலும் சிலரினாலே தாக்கப்படுவதற்கு தங்கர்ப்பச்சானின் ஓவெனத் திறந்த வாய்மட்டுமே முழுக்கக் காரணமெனச் சொல்லிவிடமுடியாது' என்ற கருத்துந்தலையே தருகின்றது; அவருடைய அரசியல்நிலைப்பாடும் அதிலே பெரும்பங்கு நடத்துகின்றதென்றே சொல்லலாம். தங்கமணி சுட்டிக்காட்டியதுபோல, தங்கர்பச்சானின் இக்கருத்தினை எதிர்த்துப்பேசுகின்ற திரைப்படம்சாராதவர்களிலே சிலர், சங்கராச்சாரியாரின்மீது அனுராதா ரமணன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றியோ அது ஏன் ஒரு ஜனரஞ்சக சஞ்சிகையிலே வெளிவர அதன் அன்றைய ஆசிரியர்கள் விடவில்லையென்பது குறித்தோ ஒரு கருத்தும் சொல்லவில்லையென்பதைக் காணவேண்டும்.
தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்துவெளிப்பாடு எதுவிதமான விட்டுக்கொடுப்புகளுமின்றி வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது; அதேபோல, நடிகைகள் குறித்து இன்னும் "எம்பிபிஎஸ் படித்து பெரிய வக்கீலாகியிருப்பேன்" 'ஜோக்' போடுகின்றவர்கள் குறித்தும் நடிகைகள் குறித்து சொல்வன்முறை, உடல்வன்முறை செய்யும் சகநடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குறித்தும் தங்கர்பச்சானை அவரின் திரைப்படம்சாரா அரசியல்குறித்து இலக்குவைத்துத் தாக்குகின்றவர்கள் குறித்தும் எச்சரிக்கையாகவிருக்கவேண்டும்.
'05 ஓகஸ்ற் 31, புத. 16:54 கிநிநே.
'04 ஜூன், 17 11:00 மநிநே.
பிறந்த ஊரைப்போல, படித்த ஊர்களும் நெஞ்சிலே நின்று கொள்கிறன. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் நெ'ஓர்லின்ஸ் அப்படியாகப் பிடித்துக்கொண்டது. பிரெஞ்சுச்சதுக்கம்; தெருவண்டி எனப்படும் 'ட்ராம்'; கேஜன் - க்ரியோல் உணவு; ஜாஸ் - அக்காடியன் இசை; மாடி க்ரா; மிஸிஸிப்பி ஆறு; பொஞ்சட்ரீன் ஏரி; சார்ல்ஸ் வீதிமருங்கு வீடுகளின் கலை; புதைகுழிகள்; ஓடபேன் பூங்கா; உவூடு மந்திரக்காரர்கள் & ஜாஸ் மரணவூர்வலங்கள்; எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் நகரமத்தி ஸுப்பர்டோம் ........................ கூடவே, கோடைகளின் ஓடவைக்கும் தென் திசைப்பெரும்புயல்.
அமெரிக்காவிலே பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலே மூன்றாவது மிகமோசமான புயலாக, முந்தநாள் கத்ரீனா நெ'ஓர்லியன்ஸினை உலுப்பி எழுப்பியிருக்கின்றது. அடிப்படையிலேயே கொஞ்சம் மழை பெய்தாலும், ஆடிப்போகும் ஊர் நெ' ஓர்லியன்ஸ். பிரெஞ்சுக்காரர், சதுப்புநிலத்திலே துறைமுகவசதிக்காக மிஸிஸிஸிப்பி ஆற்றுமுகத்துவாரத்திலே நிரப்பிக்கட்டிய நகர்; ஒரு புறம் மிஸிஸிப்பி ஆறு; மறு புறம் கடல், மூன்றாவது பக்கம் கடலோ எனப் பிரமிக்கவைக்கும் 24 மைல் நீளத் தொடர்பாலம் குறுக்கோட, பொஞ்சட்ரீன் ஏரி. இவையிடையே, இவற்றின் மட்டத்துக்கு ஆறடி கீழ்த்தாழ, நெ' ஓர்லியன்ஸ் நகர். ஊருக்குள்ளே வரும் நீரை உறுஞ்சி அனுப்ப, ஒன்றோ இரண்டோ மட்டுமே மழைநீரகற்றும் குழாய்களுடனான வசதி; எப்போதும், பெரும்புயலுக்கு, நகர் "கூழ்ப்பானை" (Soup Bowl) என வர்ணிக்கப்படும். ; மேலும், கடல்மட்டத்துக்குக் கீழான நிலையிலே இருப்பதாலே, நிலமட்டத்துக்கு மேலே கல்லறைகளிலே புதைக்கப்படும் பிணங்கள் வெளியே மிதப்பதும் அவற்றினை மீண்டும் எடுத்துப்புதைப்பதும் என்ற மிகவும் மனவழுத்தம் தரக்கூடிய சம்பவங்களும் ஒவ்வோர் ஆண்டிலும் நடக்கும். அருந்தப்பிலே '1998 இலேயும் '2002 இலேயும் நகர் தப்பியது. இந்த முறை அந்தளவுக்குத் தப்பிக்கும் வாய்ப்பிருக்கவில்லையென்றாலுங்கூட, எண்ணியதிலும்விடப் பரவாயில்லையென்ற நிலையிலே ஓரளவு திருப்தியடைந்திருக்கின்றார்கள்.
புயலோடு வரும் அபாயங்கள் காற்றும் மழையும் சம்பந்தப்பட்ட அபாயங்கள்தான்; இவை குறைத்து மதிப்பிடப்படமுடியாது; ஆனால், அதன்பின்னாலே ஆற்றுமண்தடுப்போ, ஏரிமண்தடுப்போ உடைத்தால் வரக்கூடியதுதான் பெருமபாயம்; நேற்றிரவு, பொஞ்சரிட்டன் ஏரியிலே இப்படியாக உடைப்பு நிகழ்ந்திருக்கிறது. இயன்றவரை உடனடியாக, மின்சார, தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக்கொண்டாலுங்கூட, வெள்ளத்துடன் குடிநீர்வசதி, கழிவகற்றல் வசதி, நோய்த்தொற்று என்பன பெரிய சிக்கல்களாக இருக்கும்; சரியான அழிவு விபரங்கள், அங்கும் நேரடித்தாக்குதலுக்குட்பட்ட, மிஸிஸிப்பி மாநிலத்தின் ப்லொக்ஸி நகரிலும் மதிப்பிட்டுமுடியவில்லை.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலே இருக்கும் திட்டமிடல் வசதிகளாலே (FEMA போனற அரசமைப்புகளாலே)இவ்வழிவுகள் வளர்முகநாடுகளிலே ஏற்படுவதிலும்விடக் குறைவானதாகவே இருக்குமென்றபோதிலும், "This is our Tsunami" என்றவகையிலே இம்மாநிலத்தார் சொல்வதிலும் உண்மை ஓரளவுக்கு உண்டு; அமெரிக்காவின் வறுமையான மாநிலங்களிலே, தென்திசைக்குடா அடுத்த பெருஞ்சாலை 10 ஊடறுத்தோடும் நெ'ஓர்லியன்ஸ் இருக்கும் உலூயிசியானா மாநிலம், மிஸிஸிப்பி மாநிலம், அதையடுத்த அலபாமா மாநிலங்கள் அடங்கும். கலிபோர்னியா நிலநடுக்கத்துக்கும் மஸாஸுஸெட்ஸ் பனிப்புயலுக்கும் புளோரிடா மழைப்புயலுக்கும் செய்ததுபோல, செலவழிக்கக்கூடிய வசதி இம்மாநிலங்களிடமில்லை. அந்நிலையிலே இம்மாநிலங்கள் மீண்டும் பழையநிலைக்கேனும் நிமிர்ந்தெழுவது மிகவும் பிரயத்தனப்படவேண்டியிருக்கும்.
நெ'ஓர்லியன்ஸுக்கும் அதற்கு மேற்கிலே இடெக்ஸ்ஸாஸ் மாநிலம் நோக்கிப்போகும் உலூசியானாவின் தலைநகரான பட்டன்ரூச்சுக்குமிடைப்பட்ட பிரதேசம், புற்றுநோய்த்தாழ்வாரமென, அப்பிரதேசங்களின் வேதியற்றொழிச்சாலைகள் குறித்துக் கருதப்படும்; இவ்வேதியற்றொழிச்சாலைகளும் மெக்ஸிகோகுடாவிலிருக்கும் எரிபொருளகழ்வும் சுத்திகரிப்பும் உலூயிஸியானாவின் சூழலுக்கான அக்கறையுள்ளவர்களினாலே எப்போதும் குற்றம் சாட்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இவ்வேதியற்றொழிச்சாலைகளிலே புயல் சேதமேற்படுத்தின், புயலின் அளவையிட்டும் வேதியமப்பொருளின் தன்மையையிட்டும் பாதிப்பு எவ்வளவு பிரதேசத்திற்கிருக்கும், அந்நிலையிலே எவ்வாறு மக்களை வெளியேற்றுவதென்பதெல்லாம் குறித்து ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால், ஆய்வுகளின் முடிவுகளின்பின்னான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தனியே அறிவியல், சமூகவியல் மட்டும் சார்ந்த விடயமில்லையே; உள்ளூர் அரசியலும் திறைசேரிப்பொருள்நிலையும் தீர்மானிக்கிற சங்கதிகள் இவை. தற்காலிகமாக, எரிபொருள் உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம் தடங்கிப்போயிருப்பதால், ஏற்கனவே அமெரிக்காவிலே ஏறிநிற்கும் எரிபொருள்விலை இன்னும் ஏறுமயில் ஏறிவிளையாடும்.
உலூஸியானாவின் தென்மேற்குப்பகுதிகளிலே, அமெரிக்காவின் சீனியுற்பத்தியிலே முக்கியம் வகிக்கும் உலூயிஸியானாவின் கரும்பு விவசாயப்பகுதி. இவை 1992 இன் அண்ட்ரூ புயல் போல இல்லாது, தப்பி, நெ' ஓர்லியன்ஸின் கிழக்குப்பகுதியே சேதமடைந்திருக்கின்றது. ஏற்கனவே இறக்குமதியாகும் சீனியினாலே நொடிந்துபோயிருக்கின்றோமென உலூயிசியானாவின் சீனியுற்பத்தியாளர்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கையிலே, இப்புயலும் சேதமேற்படுத்தியிருப்பின், மாநிலத்துக்குப் பெரும் பொருளாதாரநட்டமே.
ஆனால், உலூயிசியானாவுக்கு, "தனக்கு வந்தது மிஸிஸிப்பியோடு போனது" என்ற நிலையிலே நிம்மதி.
'05 ஓகஸ்ற், 30 12:00 கிநிநே.
The Swamp Thing
நிர்ச்சலனத்து நீர்ப்பரப்பிருந்து
பட்டென் றெழுந்து வருகிறது;
சேற்றுக்காலிரண்டு முன்தூக்கி
ஆற்றா மூர்க்கத்தே அலறும்;
மூசுமூச்சு முழுவெப்பம்.
ஆள் தின் எண்ணம்
மின்னும் நகக்கண்.
சொட்டு நீர், சுரி சிலும்பிச்
சுற்றுதோல் உரித்தெறியும்.
உற்றுப் பார்க்கமுன்னால்,
உடுக்கு மொரு நரத்தோற்றம்.
மிடுக்கோடு செருகும்
ஒரு தொப்பி
மேலோ ரிறகு
பத்துப்பேனா
பளபளக்கச் சட்டை
சொட்டு விழியன்பு
மொத்தச்சப்பாத்து
கத்தைத்தாள்,
மடிக்கணணி
கை(ப்)பற்றிக்
காதை மட்டும்
கழற்ற மறுத்துக்
கடந்து நடக்கும்.
அலைச்சத்தத்தில்
கூட்டச்சனத்துள்
எட்டிக் கலக்கும்
இன்னோர்
அப்பனாய்
அண்ணனாய்
புத்தனாய்
புதல்வனாய்
போதிசத்வனாய்
புத்தகப்புழுவாய்
மெத்தப்படித்தாரின்
மொத்த வாணிகனாய்.
உரித்துக் கரைகாயும்
தோற்சொரசொரப்பு,
பற்ற
வரும்
மாலை.
'05 ஓகஸ்ற், 28~29 ஞாயி.~திங்.
...................
.......அபிநயம்...................
..................அபிநயம்..............
..............அபிநயம்....................
..........அபிநயம்...........................
.................அபிநயம்......................
இந்த கதையினூடே இரண்டு விதமான பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அவற்றை சல்மா ஸ்பெஷல் என்று சொல்லலாம்: 1. போலித்தனமான பெண்ணியக் குரல். துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் வக்கிரங்களும் இதில் அடக்கம். 2. மதம் குறித்த சந்தேகங்களை, கேள்விகளாகவும், கிண்டலாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம். 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்பதால் இந்த இரண்டையும் ஜாமத்துக்கு ஒன்றாக வைத்துக்கொள்ளலாம
Jorge de Burgos: Laughter is a devilish whim which deforms, uh, the lineaments of the face and makes men look like monkeys.
William of Baskerville: Monkeys do not laugh. Laughter is particular to men.
Jorge de Burgos: As is sin. Christ never laughed.
William of Baskerville: Can we be so sure?
Jorge de Burgos: There is nothing in the Scriptures to say that he did.
William of Baskerville: And there's nothing in the Scriptures to say that he did not. Why, even the saints have been known to employ comedy, to ridicule the enemies of the Faith. For example, when the pagans plunged St. Maurice into the boiling water, he complained that his bath was too cold. The Sultan put his hand in... scalded himself.
இத்தகையை கேள்விகளும் இதற்கான பதில்களும் பல முறை கேட்கப்பட்டு பதில்களும் சொல்லப்பட்டு நீர்த்துப் போயாச்சு. ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அதன் சட்டதிட்டங்கள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அப்படிக் கேள்வி கேட்பதே முற்போக்கு என்றும் ஆதிக்கத்துக்கு எதிரான நியாயமான குரலென்றும் எழுத்தில் பதிவு செய்வது, அதுவும் சீரியஸாக அல்ல, ஒரு ஓரமாக, எந்த வகையில் சரி என்று எனக்கு விளங்கவில்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி ஈரான் போன்ற நாடுகளில் விபச்சாரம் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி ஏழைப் பெண்களை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொலை செய்கிறார்கள். இதை எதிர்த்து என்றைக்காவது சல்மா போன்றவர்கள் குரல் கொடுத்துள்ளார்களா? (பார்க்க எனது கட்டுரை கற்காலம்).
காலக்குருதி மெல்லத் துளை
காலிடைச் சிந்தத் தள்ளும்
செயல் பொறுக்கிப் பாதம்,
தக்கிட, தடக்கித் தக்கிட,
நடை.
அள்ளும் காற்று; கொல்லும் வெயில்;
வெள்ளம் மழை; எல்லாம் சமமாம்.
கணம் தரியான், நாளெல்லாம்
நசிகின்ற சனங்களுள் நெரியக்
கசியும் ஊனாய்க் கலக்கின்றான்.
நேரென நிலையாக் கண்ணன்
தனைத் தின்னு பசியும் தின்று
ஆலென விரி திரிசடையில், நினைவு
ஆர் தேடியலைவான் இவ்வண்?
சிறு பூனைக்கும் மணிகட்ட
பெரும் போக்குக்காட்டும்
அசலும் நகலும் அரைத்துக்
கைபிசை அழுக்கு நகரிலே
எது தேடி அலைகிறான்
இத்தோட்டி?
காத்து ரயில் பார்த்த காரிராப்
பொழுதொன்றில், மூசி விரை
கடப்பான் முணுமுணுத்தான்,
"எட்டி ஆள் நடக்க
எத்துணை இடமிருக்க
எதற்காய்த் தரிப்பான்
இத்தனை நாள்?"
தனக்கா சொன்னான்?
'05 ஓகஸ்ற், 26 வெள்ளி 14:35 கிநிநே.