Friday, December 11, 2015

நம்போக்கே நற்போக்கு; கேட்டுக்கொள் பிற்போக்கு!

நாராயணனை அறந்தாங்கி பிரபாகரன் வேறெப்படி எதிர்கொள்ள வழியிருக்கின்றது என்று கேட்டாலும் பிற்போக்குவாதி!
சுமந்திரனைக் கேள்விகேட்டாலும் பிற்போக்குவாதி!
ஹரி ஆனந்தசங்கரி எதற்காக பகவத்கீதையிலே "தமிழர்பாரம்பரியமாக"ச் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார் என்று கேட்டாலும் பிற்போக்குவாதி!
பிரெஞ்சுக்கொடியிலே தோய்த்து முகப்படத்தைப் போடாவிட்டாலும் பிற்போக்குவாதி!

முன்னரெல்லாம் தம்மோடு சற்றே ஒற்றாதவர்களைப் பிற்போக்குவாதிகள் என்னும் உத்தி கட்டித்த கட்சி மார்க்ஸியர்களுக்கு மட்டுமே இருந்தது; இப்போதெல்லாம், பழம்புலிகள், புதுமிதவாதிகள், பழம்புலி புளியாய்ச் சுழிப்பவர்கள் எல்லாருமே கும்பலிலே ஒன்றுகூடி ஜெபிக்கக்கிளம்பியிருக்கின்றார்கள் என்பதாகத் தோன்றுகின்றது.
பிற்போக்கு,முற்போக்கு, நற்போக்கு வியாக்கியானங்களைக் கேட்டே வயிற்றுப்போக்குவலியாகிவிடுவதுதான் விதி.
 
நிகழ்ந்த பிரெஞ்சுப்படுகொலைகள் விமர்சனமின்றிக் கண்டிப்புக்குரியவை, நிகழும் பலஸ்தீன, ஈழ, குர்திஷிய, காஷ்மீரிய, கடலோனியப்படுகொலைகள்போலவே! நியாயமின்றி விழுத்தப்படும் ஒவ்வொரு கொலையும் பெருங்கொலையே; நெருக்கமான கொலைகளுக்கே நிறம் தோய்த்துக்கொடி முகப்பிட வக்கும் வாய்ப்பும் நீதியுமற்ற நாம் பிரெஞ்சுக்கொலைக்காகமட்டும் முந்நிறச்சாயம் தோய்த்திட எண்ணுகையிலே குற்றவுணர்வு நிறைய உறுத்துகிறது. பிரெஞ்சுச்சாந்து போடுகிறவர் போடட்டும்; போடாதார் விடட்டும். அதைவைத்தே, "பிற்போக்கு".எதிர்."நற்போக்கு" என்று மெல்லியமிரட்டலிட்டால் எப்படி?
நியாயமின்றி இருபதாண்டுகள் சொரியும் ஒளியும் சுத்த வளியும் உள்ளிருப்பதற்கா ன காரணத்தைச் சுட்டவேண்டிய விசாரணையும் இன்றி அடையுண்டிருக்கும் ஒவ்வொரு சிறைக்கைதியின் நிச்சயமற்ற வாழ்வும் அப்பெருங்கொலைக்கு நிகர்த்த கொடுவவலவாழ்வே! அதுக்கே ஆதரவு காட்ட, கொடிகட்ட அச்சமாகவிருக்கின்றது, எவர் பிற்போக்குவாதியென்பார், எவர் எவ்வித அடையாளத்தைச் சொல்லிற்குத்திக் காவத்தருவாரென எண்ணி.
-/.
நவம்பர் 14, 2015

No comments: