Sunday, May 21, 2017

ஒத்தோடிகள்: சிக்கல் ஒன்று

ஒத்தோடிக்கும்பலினதும் அவைபோட்ட விதைகளினதும் இவற்றுக்கு ஈடான மே 18 இற்குத் தமிழகத்திலிருந்து வன்மத்தினையும் காழ்ப்பினையும் கக்கிய கும்பலினதும் தொடர்ச்சியான தமிழ்த்தேசியம் தொடர்பான செயற்பாடுகள் (புலிகள்மீதான தாக்குதல் உட்பட) ஆதாரங்களுடன்கூடியவையாகப் பெருமளவிலே இருப்பதில்லை; அழுத்தமாக வடிவமைக்கப்பட்ட உளநிலைத்தாக்குதலாகவேயிருக்கின்றன.

இலங்கை முஸ்லீம்கள் நிலை தொடர்பாக, இலங்கையிலே சாதிவெறி தொடர்பாக, இலங்கையிலே மதவெறி தொடர்பாக, இலங்கையிலே பிரதேசவாதம் தொடர்பாக, இலங்கையிலே மலையகத்தமிழரின் நிலை தொடர்பாக, இலங்கையிலே பெண்கள்மீதான வன்முறை தொடர்பாக நிகழும் எதையும் தமிழ்த்தேசியத்தின் தேய்கூற்றின் விளைவுகளாகவும் புலிகளின் வலதுசாரியகூற்றாகவுமே வெறும் வார்த்தைகளாலே திரும்பத்திரும்பக் குழுக்களாக வந்து உச்சரித்து, தரவுத்திரிபும் வரலாற்றுக்கோணலும் செய்வதே இவர்களின் முழுச்செயற்றிட்டமாகவிருக்கின்றது. குறைந்தபட்சம் தமிழ்த்தேசியத்தினுள்ளேயே முற்போக்கு, பிற்போக்கு, நடுப்போக்கு, நற்போக்கு, வயிற்றுப்போக்கு என்று பல போக்குகள் இருக்கக்கூடும் என்ற ஆதாரக்கருத்துநிலையையே மறுக்கும் வன்முறையாளர் இவர்கள்.

சீமான், சச்சிதானந்தம், காசி ஆனந்தன், சம்பந்தர், நெடுமாறன் செய்யும் அத்தனைக்கும் தமிழ்த்தேசியத்தையும் (அழிந்துபோன புலிகளையுமே) பொறுப்பேற்கக் கேட்கும் இவர்கள், புலியெதிர்ப்பு & தமிழ்த்தேசியமறுப்பு இவற்றின்பாற்பட்ட பொதுவொற்றுமைக்கு அப்பாலே தம்மிடையே இருக்கும் பல வகையான கருத்துநிலைகளை என்னவென்று சொல்வார்கள்? அவர்கள் அத்தனைபேரினையும் ஒரே வகை ஒத்தோடிச்சதை & விதைக்கும்பல்களாகப் போட்டுவிட்டால் ஒத்துக்கொள்வார்களா?

முஸ்லீம்கள்மீது புலிகளின் வன்முறைகள் என்று பேசுகின்றவர்கள் தொடர்ச்சியாக, கிழக்கிலே முஸ்லீம்கள் மீது (காத்தான்குடி & வாழைச்சேனை) பகுதிகளிலே முஸ்லீம்கள்மீது வன்முறை நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் புலிகளிலிருந்து பிரிந்துபோன கருணா|பிள்ளையான் குழுவினருக்கு ஆலோசகர்களாக இன்றைக்கும் இருப்பதைப் பற்றிப் பேசுவதோ விமர்சிப்பதோ இல்லை; முஸ்லீம்களைக் காத்தான்குடியிலே கொன்ற காலகட்டத்திலே புலிகளின் கிழக்கு இராணுவத்தின் "கேணல்" ஆன கருணாவினைப் பிறகு கொழும்புக்குத் தப்பிப்போக வைத்த முஸ்லீம் அரசியல்வாதியின் சகவாசம் பற்றிப் பேசுவதில்லை. இந்திய இராணுவம் போனபின்னால், கிழக்கிலே ஶ்ரீலங்கா அரசு- புலிகள் பிரச்சனை தொடங்கியதற்கு புலிகளின் முஸ்லீம் தையற்காரர் தாக்கப்பட்டதும் ஒரு "வெளிப்படையான" கூறு என்பதைப் பேசுவதில்லை; முதலிலே முஸ்லீம்கள்மீது கிழக்கிலே தாக்குதல் புளொட்டினாலேதான் அக்கரைப்பற்றிலே நிகழ்ந்தது என்பதைப் பேசுவதில்லை; தாம் முஸ்லீம்களைத் தாக்குவதே தம் பணியென அலையும் பொதுபலசேனாவின் விஷக்கொடுக்கோடு படத்திலே தலித்துகள் பேரிலே கூட நின்று சிரித்துக்கொண்டிருப்பதை விமர்சிக்க மறுக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும்மேலாக, முஸ்லீம் ஊர்காவற்படை ஶ்ரீலங்கா விஷேட அதிரடிப்படையோடு சேர்ந்து தமிழ்க்கிராமங்களிலே செய்த தாக்குதல்களைப் பேசுவதில்லை; வீரமுனைக்கொலைகளைப் பற்றிப் பேசுவதில்லை.

இயக்ககாலங்களுக்குமுன்னாலேயிருந்தே கிழக்கிலே புட்டும் சீனியும் தேங்காய்ப்பூவுமிருக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்வதில்லை. தமிழ்-முஸ்லீம் என்று மாறிமாறியிருக்கும் கிழக்கிலே தொடர்ச்சியான இன உரசல்களிருந்ததைப் பேசியதில்லை; ஹிஸ்புல்லா சைவக்கோவில்நிலத்தை முஸ்லீம்மையவாடி ஆக்கியதைப் பகிரங்கமாக முஸ்லீம்வாக்குவங்கி நிரப்பும் நோக்குடன் வெற்றிச்சாதனையாகப் பேசும் ஒளிப்பதிவாக்கி விட்டதை விமர்சித்துப் பேசுவதில்லை. அதிகம் வேண்டாம், காத்தான்குடிக்கொலைகளுக்கு அனைத்துத்தமிழர் முதுகுகளிலும் பிரம்படிக்கும் ஷர்மிளா ஸையத் போன்றவர்களைக்கூடப் பேசவிடாது ஒடுக்கும் - ஞானசார, சச்சிதானந்தம் & கூல் போன்றோரின் பௌத்த, இந்து & கிறீஸ்தவ மதவடிப்படைத்தனத்துக்கு ஈடான- மத அடிப்படைவாதத்தைப் பற்றி, தமக்கெதிராக வரக்கூடிய பாதகங்களை எண்ணி விமர்சிக்கமுனைவதில்லை.

அண்மைக்காலத்திலே, தமிழரசியல்வாதிகள் ஓட்டுவீடு-சக்கரவண்டி என்று தமக்குள்ளே பிணக்குப் பட்டுக்கொண்டிருக்கையிலே முஸ்லீம் அமைச்சர்களாலே கிழக்கிலே அரசுப்பதவிகள், காணிப்பகிர்வுகள் இவற்றிலே நிகழும் இன விகிதாசாரத்துக்கு ஒவ்வாத கொடுப்பனவுகள், மட்டக்கிளப்பின் எருமைத்தீவின் காணிகளைத் தமிழர்களிடமிருந்து வாங்கி காத்தான்குடியோடு இணைத்து, காத்தான்குடியினை மாநகரசபையாக்கும் திட்டம் என்பன ஈழத்தென்கிழக்கிலே தமிழர்களிடையே இந்துத்துவாவினையும் ஏன் பொதுபலசேனா ஞானசாரவினையும் உள்ளே கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றன. இது நெருப்புக்கு அஞ்சிக் கிணற்றிலே குதித்த கதை. 😞

மறுபக்கம், ரிஷாட் போன்றோரின் ஆதிக்கம் முஸ்லீம்களிடையே இருந்துகூட வெறுப்பினைச் சம்பாதித்திருக்கின்றது. எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரின், அவர்களின் உறவினர்களின் காணிகளை ரிஷாட் சொந்த ஊரிலேயே தூக்கிக் கட்டிடங்கள் கட்டிக்கொண்டார். இத்தனைக்கும் இம்முஸ்லீம்கள் மன்னாரிலே தங்கள் சொந்த நிலங்களிலிருந்து புலிகளாலே யாழ்ப்பாண முஸ்லீம்கள்போல வெளியேறச்சொல்லப்பட்டவர்கள். ஶ்ரீலங்கா அரசுடன் இணைந்து அக்காலகட்டத்திலே (90களிலே) மன்னாரிலே ஜிகாத் என்று செயற்பட்ட துணைக்குழுவிலேயிருந்த சில முஸ்லீம் இளைஞர்களின் பேரிலே - எலியைக் கொல்ல வீட்டுக்கூரையை எரித்த கதையாக- வெளியேற்றப்பட்டுப் புத்தளம் போய்ச் சேர்ந்து அங்கும் மற்றைய முஸ்லீம்களுடன் பட்ட அரசியலிலே ஈடுபடாத முஸ்லீம்கள் இவர்கள். ( ரிஷாட்டின் காணி அபகரிப்பிலே சக முஸ்லீம்கள் என்ற அடையாளம் இங்கேகூட அவரைத் தடுக்கவில்லை). சென்ற ஆண்டு கிழக்கிலே நிலாவெளி உப்பளத்தினைத் தன் கைக்குள்ளே கொண்டுவர ஒரு தமிழ் விதானையை வைத்துக்கொண்டு ரிஷாட் படுத்தின கூத்துகளைப் பற்றிப் உப்பளச்சொந்தக்காரர் ஒருவர் சொல்ல அறிந்தேன். (முன்னர் அறிமுகமாகாத இத்தமிழ் உப்பளக்காரரை நான் சந்திக்க நேர்ந்தபோது, வீட்டு விறாந்தையிலே என்னுடன் பேசிக்கொண்டிருந்த என் பாடசாலைக்கால நண்பன் முஸ்லீமாகவிருந்தது இந்த உப்பளக்காரரின் கடும் விமர்சனத்துக்குரியதாகப் போயிற்று ("இவங்களையெல்லாம் வீட்டுக்குள்ளே சினேகிதரெண்டு விடுறியள்; அவங்கள் எங்கடை காணியளை எடுக்கிறாங்கள்"). ரிஷாட் மேலேயிருந்த அவருடைய நியாயமான ஆத்திரத்துக்கு சம்பந்தமேயில்லாத என் சினேகிதனைப் பிடிப்பது மாதிரியான அநியாயம் தோய்ந்த ஒரு மறச்சிந்தையை என்னவென்பது! அவருக்கு எப்படி "விளங்கும் வகையிலே வலுவாய் விளக்கம்" சொல்லி அடக்கவேண்டியதாயிற்று என்பது உபகதை.) ஒத்தோடிக்கும்பல், இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லீம்கள்- புத்தளமுஸ்லீம்களிடையேயான பிணக்கின்பின்னாலே புத்தள முஸ்லீம் தலைவர் பட்டாணி ரஷாக் யாராலே வாழைச்சேனை மலசலகூடத்துள்ளே மர்ஹூம் ஆக்கப்பட்டார் என்றதைப் பேசுவதில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் ஒத்தோடிக்கும்பலுக்கும் அதன் தொங்கு தசை & விதைக்கும்பல்களுக்கு விமர்சனங்கள் ஒருபோதும் இருப்பதில்லை.

அதிகம் வேண்டாம். இங்கிலாந்திலிருந்து கொண்டு தமிழரசியல் தொடக்கம் அனைத்து அரசியலிலும் இலக்கிய அரசியல் செய்யும் மூன்றாம் மனிதர் ஒருவர் மர்ஹூம் அஷ்ரப்பை மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றார்.

இவையெல்லாம் ஒத்தோடிகளின் விமர்சனத்துக்கு ஆளாகமலிருப்பது வியப்பல்ல. புலிகளையும் தமிழ்த்தேசியத்தையும் தாக்குவதற்கு இவற்றினைப் பேசுவது சங்கடத்தை இக்கும்பலுக்குத் தரும். அதனாலே பேசுவதில்லை. புலிகளும் வலதுசாரித்தமிழ்த்தேசியமும் முஸ்லீம்கள்மீதான ஒடுக்குமுறையைப் பிரதேச ரிதியிலும் கருத்துவகையிலும் செய்த காலகட்டமுண்டு. ஆனால், அதற்கு ஈடாக முஸ்லீம் அமைப்புகள், தற்போது முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்கள் மீது செய்யும் வன்முறைகளை மறைத்துவிட்டுல் கறுப்பு|வெளுப்பு நியாயம் பேச முடியாது - குறிப்பாக, முஸ்லீம்கள் மீது வன்முறையைச் செய்ததாகச் சொல்லப்படும் கிழக்கின் பிரிந்துபோன சில புலிகளுக்குத் தற்சமயம் ஆலோசகர்களாக இருக்கின்ற தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களும் அவர்களின் தோழர்களும்.

இப்படியான கேள்விகளெழும்போதெல்லாம் அவற்றினை வாசிக்காதது|கேட்காதது போலவே பம்முவதும் பதுங்குவதும் "ஒற்றைப்படை"த்தமிழ்த்தேசியத்தின் இழிகூறுகளைப் பற்றி விசிலடித்துக்கொண்டிருப்பதாகக் கவனத்துடன் பாவனை பண்ணுதலும் கோழைத்தனமான, ஆனால், ஒத்தோடிகளிடம் (துரோகிகள் என்ற சொல் பொருத்தமானதில்லை; எந்நிலையும் பயன்படுத்தக்கூடாதது. ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான அரசியல்நிலைகளை மாற்றும் உரிமை உண்டு; நமக்குப் பிடித்தபோது தியாகிகளாகவும் பிடிக்காதபோது துரோகிகளாகவும் நாம் வகுத்தால், நம்மைவிடக் கருத்துச்சுதந்திரத்தை மறுப்பவர்களிருக்கமுடியாது. அடுத்தாள் கருத்துச்சுதந்திரத்தை மறுத்துவிட்டு, மறைத்துவிட்டு, நாம் நம் கருத்துச்சுதந்திரத்தினையும் சுயநிர்ணய உரிமைகளையும் பேசமுடியாது; அருகதையுமற்றோம்) இதைவிட வேறெதையும் எதிர்பாக்கவுமில்லை.

பிரதேசவாதம், சாதியம், பாலொடுக்குமுறை, மத அடிப்படைவாதம் பற்றி இன்னும் தொடவில்லை......

(1)

No comments: