Wednesday, May 02, 2018

சண்முக வித்தியாலயம்

கிழக்கின் மற்றைய பகுதிகளிலே நிகழ்ந்தது, திருகோணமலையின் மையத்துக்கும் வந்து சேர்ந்திருக்கின்றது;
இது போன்ற சிக்கல்கள் கிழக்கிலே அதிகம். இதனாலேதான் கிழக்கிலே தமிழ்-முஸ்லீம் பிரச்சனை மிகவும் சிக்கலானதென்று சொல்கிறேன். இப்பாடசாலை என்வீட்டிலிருந்து வாசலைத் திறந்தால், வலப்புறமாக இரண்டு நிமிட நடையிலே இருப்பது. மகளிர்பாடசாலை; ஆனால், என் முதலாம் வகுப்பை ஆரம்பித்ததே இங்குதான். அந்நேரத்திலே சண்முக வித்தியாலமாகவிருந்தபோது, ஆரம்பப்பாடசாலைகளிலே ஆண்மாணவர்கள் கற்றார்கள்; திருகோணமலை இந்துக்கல்லூரியிலே உயர்தரத்திலே பெண்மாணவர்கள் கற்றார்கள். சண்முக வித்தியாலமாகவிருந்தது, சண்முக இந்துக்கல்லூரி ஆகியிருப்பது கடந்த இருபதாண்டுகளிலே.
அண்மையிலே மூன்று முஸ்லீம் பெண்ணாசிரியர்கள் முகத்தை மூடின ஆடை அணிந்து கற்பிப்பதிலிருந்து தொடங்கியிருக்கின்றது பிரச்சனை (அவர்களும் முஸ்லீம் அமைச்சர்கள் காரணமாகத் திட்டமிட்டே முஸ்லீம் பாடசாலைகள் அல்லாதவிடங்களிலே முஸ்லீம் ஆசிரியர்களை அதிகரிக்கும் நோக்குடனே கொணரப்பட்டவர்கள்). இவ்வாடை அணிதலைச் செய்யவேண்டாமென்று ஆசிரியைகள் சொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், தனிப்பட்ட இப்பாடசாலையின் ஆரம்பம் சைவம் சார்ந்த தனிப்பட்ட ஒருவர் ஆரம்பித்த பாடசாலையாகவிருந்தபோதுங்கூட, ஓர் அரச பாடசாலையிலே இதனை எப்படியாக அதிபரோ மற்றவர்களோ சட்டத்துக்கு மாற்றாக ஓர் ஆசிரியரின் உடையினை இப்படியாகத்தான் இருக்கவேண்டுமென்று செய்யமுடியுமென்று தெரியவில்லை. அதே நேரத்திலே திருகோணமலையின் முஸ்லீம் பாடசாலைகளிலே இருக்கும் வழமை எதுவெனவும் காணப்படவேண்டும் (அஃது எனக்குத் தெரியாது). தமிழ்ப்பெண்மாணவர்களும் பெண்ணாசிரியர்களும் பொட்டு வைத்துப்போகும் பாடசாலைகளிலே -அவை அரசபாடசாலைகளாக இருக்கும்போது- முட்டாக்கைப் போட்டு வரமுடியாதென்று சொல்லமுடியுமா தெரியவில்லை. பெண் ஆசிரியர்களுக்கு இதுதானெனச் சீருடை வழமையிருப்பதாக நானறியேன்.
ஆனால், அடுத்த கட்டமாக, இந்த ஆசிரியர்களின் கணவர்கள் பாடசாலைக்கு வந்து பயமுறுத்தலைச் செய்துவிட்டுப்போயிருப்பதன் பின்னாலே, இப்பகிஸ்கரிப்பு எழுந்திருக்கின்றது. அரசியற்பலமிருக்கின்ற வகையிலே கிழக்கிலே இதுமாதிரியான பயமுறுத்தல்கள், தொழில்வழங்குதல் முதல் வீதியமைத்தல்வரை நிகழ்வதைக் காணமுடியும்.
முப்பதாண்டுகளுக்கு முன்னே திருகோணமலை புனித மரியாள் கல்லூரியிலே பொட்டு வைத்தே போகவிடமாட்டார்கள். அந்நேரங்களிலே அதைப் பெரிதுபடுத்தாமல் ஒரு சிறுகுறையாகச் சொல்லிவிட்டுப் பொட்டைக் கழற்றிவிட்டுப்போனவர்களையே அறிவேன். மத அடையாளம் சார்ந்த சண்டைகள் மொழி|பூமி சார்ந்த பிரச்சனைக்காலத்திலே பெரிதாக்கப்பட்டதில்லை குறைந்தளவு, சைவம் ( இப்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்து அல்ல) - கிறீஸ்தவம் (கத்தோலிக்கர் இடையே பொட்டுவைக்கும் வழமையிருந்தபோதுங்கூட) உள்ளிட்ட தமிழர்களிடையே சமயம் (அதாவது, "மதம்") சார்ந்த பிரச்சனைகள் பாடசாலைகளிலே இருந்ததில்லை.
"கோயிலுக்குக் கொட்டுவதைச் சாப்பாடில்லாத சனத்துக்குக் குடுங்கோடா!" என்று எண்பதிலே எனக்கு ஏசின பழைய மார்க்ஸிய இயக்கம் சார்ந்த நண்பரொருவர் - இவரைப் போன்றோரைப் பார்த்தே சமயம் சார்ந்த கேள்விகள் எனக்குள்ளே எழுந்ததெனலாம் - திருகோணமலை இந்துக்கல்லூரிக்குள்ளே பிள்ளையார் கோவில் இருக்கவேண்டியதன் அவசியத்தை - தொடர்ச்சியாக அதனைத் தமிழர்களின் பாடசாலையாகப் பேணவேண்டிய காரணத்துக்காக- ஈராண்டுகளுக்கு முன்னால், எனக்குச் சொன்னபோது, எத்துணை மதமானது மொழி சார்ந்த எம் அடையாளத்தைப் பெயர்த்து மதம் சார்ந்த அடையாளங்களை நம்புகின்றோமோ இல்லையோ நடைமுறைக்கேனும் இருப்புக்காகக் கொணர்ந்து நிறுத்தியிருக்கின்றதென்று புரிந்தது. குறிப்பாக, பெரும்பான்மைப் பௌத்தம் சார்ந்த சிங்கள அடையாளத்துக்கெதிராக, இந்தியாவின் "இந்து" சார்ந்த அடையாளமும் மத்தியகிழக்கின் "முஸ்லீம்" சார்ந்த அடையாளம் தமக்குள்ளேயே முரண்பட்டிருக்கும் நிலையும் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றதென்பேன். கிழக்கின் தமிழர்களிடையே இஃது இருத்தலுக்கான எதிர்வினைகள் மோசமில்லாத, பாதுகாப்பான நடைமுறைவழி கண்டறிதலாகவே இது பார்க்கப்படுகின்றதாகவே என் புரிதல் - அதனோடு எத்துணை நான் உடன்படுகின்றேன் என்பது வேறுவிடயம்.
கிழக்கிலே தமிழ்த்தலைமைகளின் மட்கிப்போன செயலற்றதும் பலமற்றதுமான சவத்தன்மைக்கு முற்றிலும் எதிரான உத்வேகமான முஸ்லீம் அரசியல்வாதிகளின் தம் சமூகம் சார்ந்த செயற்பாடு -அத்துமீறிய நிலம், தொழில், வர்த்தகம் சார்ந்த செல்வாக்கு, அடாவடித்தனம் உட்பட- தமிழர்களிலே (குறிப்பாக, இளந்தலைமுறையிலே) கணிசமான பகுதியினை இந்துத்துவா இறக்குமதி சிவசேனையின் "இந்து" அடையாளத்தையும் இன்னும் அப்பாலே போய், பௌத்தம் சார்ந்த இனவாதிகளின் முஸ்லீம்களின்மீதான தவறான செயற்பாடுகளையும் ஆதரிக்கும் நிலையையும் ஏற்பதிலே நிறுத்தப்போகின்றது - ஏற்கனவே நிறுத்தியிருக்காவிட்டால். (ஆனால், திருகோணமலை நகரின் வர்த்தகத்தைத் தமிழர்கள் (பிறமாவட்ட)முஸ்லீம்களுக்கு இழந்ததற்கு அவற்றை விட்டுக்கொடுத்த தமிழர்களையும் குறைசொல்லவேண்டுமென்றே கருதுகின்றேன். தனியே கடந்த இனப்பிரச்சனைக்காலத்திலே தமிழர்கள் முடங்கிப்போய்விட்டதைமட்டுமே சொல்லிவிட்டுப்போகமுடியாதென்பது என் கருத்து)
இப்படியான சூழ்நிலையிலே கிழக்கின் தமிழர்-முஸ்லீம் இடையேயான நிலைப்பாட்டினைக் கிழக்குத்தமிழர்களும் முஸ்லீம்களும் மற்றும் தொலைதூர அலசுனர்களும் ஆய்வாளர்களும் அணுகுதல் மிகவும் கவனமாகக் கையாளப்படவேண்டும் என்பதையே முன்னரும் சில இடங்களிலே சுட்டிக்காட்டியிருந்தேன். பூனைகள் பிரிப்பதிலே இடையிலே புகக்கூடிய குரங்குநீதிமானையிட்டுக் கவனமாகவிருக்கவேண்டும். அதே நேரத்திலே, தனியே யாழ்ப்பாணத்திலும் மீதி வடமாகாணத்திலிருந்தும் முஸ்லீம்களை அடாவடித்தனமாக வெளியேற்றியதையும் காத்தான்குடிப்பள்ளிவாசலிலே தொழுகையின்போது நிகழ்ந்த கொலைகளையும் வைத்துக்கொண்டு அதன் குற்றவுணர்விலே மட்டும் தமிழர்கள் கிழக்கின் தமிழர்-முஸ்லீம் பிரச்சனையை இன்றைய கட்டத்திலே அணுகுதல், மிகவும் எதிர்மறையான விளைவினையே ஏற்படுத்துமெனத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன்; குறிப்பாக, வீரமுனை, சத்துருகொண்டான் போன்ற இடங்களிலே தமிழர்கள்மீது முஸ்லீம் ஊர்காவற்படையின் ஆதரவோடு நிகழ்ந்த கொலைகளையும் ஹிஸ்புல்லா போன்றோர் தாம் தமிழர்களின் காணிகளை முஸ்லீம் தேவைகட்கு எடுத்துக்கொடுத்ததை விழியத்திலே சொல்வதையும் நாம் தனிப்பட்ட செயல்களாக நிராகரித்துப் புறங்கையாலே ஒதுக்கிப்போவது கிழக்கின் தமிழர்-முஸ்லீம் பிரச்சனையிலே ஒரு பக்க நிலைப்பாட்டினை எடுத்துக்கொள்வதாகவே கிழக்கிலே தமிழர்கள் மத்தியிலே கருதப்படும் வாய்ப்பினைக் கொணரப்போகின்றது.
இதைக் கரிசனையோடு சுட்டுமிடத்திலே, "முஸ்லீம்களுக்கு எதிரான கருத்தினை"க் கொண்டதாக எண்ணும்போது, ஒன்றில், மீண்டும் ஆரம்பத்திலிருந்து கிழக்கிலேயிருக்கும் முஸ்லீம்-தமிழர்- சிங்களவர் குறித்த பிரச்சனைகளை வெறுமனே புட்டு-தேங்காய்ப்பூ-சீனி என்ற இனிப்பான எடுகோள்களைமட்டும் வைத்துக்கொண்டு அணுகாதீர்கள் என்று விக்கிரமாதித்தனின் வேதாளமாகச் சொல்ல முடியும்...... அல்லது,, "அலசும் அரசர்கள் பட்டாடைகளோடேயே பவனி வருகின்றார்கள்" என்று கூறிவிட்டு, நம் நாளாந்தத்தொழில் அழுத்தும் நேரக்கெடுவை முன்னிட்டுச் செயல் நோக்கியோ இளையராஜாவின் இசைக்கச்சேரியை நோக்கியோ நகரமுடியும்.
தொலைதூரத்திலிருந்து எழுதும்போது, பார்வையிலே தூசு தடுக்கும் காட்சிகளைக் காணமுடியாதிருக்கலாம். அதற்காக மன்னிக்கவேண்டும். இரண்டு பக்கத்தாருக்கும் எரிச்சலையூட்டினால், நான் சொல்ல வந்தது புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது என்று உணர்ந்துகொள்வேன்.
தொடர்பான சுட்டிகள்
0:03 / 4:23

No comments: