Wednesday, October 14, 2015

அரிவாளாதிருப்பாரின் அறிக்கை

கிளிநொச்சி பிடிக்கப்பட்டவுடன், முதலிலே இராணுவமும் ஶ்ரீலங்கா அரசும் உலங்குவானூர்தியிலே கொண்டு சென்று காட்டி முதலிலே வெற்றிக்கட்டுரை எழுத வைத்த பத்திரிகை த ஹிண்டு. அதன் ஆசிரியர் நரசிம்மன் ராம் ஶ்ரீலங்காவுக்கான சேவைக்காக லங்கா ரத்னா வழங்கப்பட்ட மிகச்சிலரான வெளிநாட்டினரில் ஒருவர். சைவ உணவுகள் மட்டுமே சமைக்க வலியுறுத்தப்படும் உணவகத்தைக் கொண்ட பத்திரிகைநிறுவனத்திலே அடிப்படையிலே திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை ஆதரிக்கும் வண்ணமே தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வரைகிற கம்யூனிஸ்டு தோழர்.

ராஜபக்ச சகோதரர்களுக்குக் 'கௌரவ கலாநிதி' பட்டங்கள் கொடுத்த கொழும்புப்பல்கலைக்கழகத்தையே திரும்ப அவற்றைக் கொலைக்குற்றங்களின் பேரிலே பெற்றுக்கொள்ள முன்னர் கலாநிதிப்பட்டத்துக்குப் பிரேரித்த பேராசிரியர்தான் ஓய்வுபெற்றபின்னர் வெளிப்படையாகக் கொழும்பு ரெலிக்ராப்பிலே கேட்டு எழுதுகிறார்.

உலகநாடுகள் தத்தம் அரசியலுக்காக முன்னுக்குப் பின் மசுந்தினாலும், ஒப்பீட்டளவிலே பெருங்கொலைகள் இலங்கையிலே ஶ்ரீலங்கா அரசினாலே நடத்தப்பட்டதை ஒத்துக்கொண்டிருக்கின்றன; குறைந்தளவு, "உள்நாட்டிலாவது ஒப்புக்கு விசாரணை வை" என்றாவது சொல்கிறார்கள்.

இப்படியான நிலையிலே ஒரு நேர்மையான பத்திரிகையாளர் என்றால், லங்கா ரத்னாவை என். ராம் இந்தியாவின் படைப்பாளிகள் சிலர் தேசியவிருதுகளைக் குற்றம் கடிந்து திருப்பிக்கொடுத்ததுபோல ஶ்ரீலங்கா அரசுக்குத் திருப்பிக்கொடுத்திருக்கவேண்டாமா? கொடுக்கவில்லை; கொடுக்கக்கூடியளவு கொடுக்கிருக்கின்றதாகவும் தெரியவில்லை.

அந்நிலையிலே அவர் சார்ந்த அரசியற்கட்சியினைச் சேர்ந்த தமுஎகச தமிழ்ச்செல்வன் போன்றோர் சூடு சுரணையோடும் இதயசுத்தியோடும் விருது, எருது, கதிரு, குதிரு, அரிவாளு, சம்மட்டி எல்லாம் திருப்பிக்கொடுப்பார்கள் என்று நம் பேஸ்புக் நண்பர்கள் என்று எதிர்பார்ப்பதைப் பரிதாபமாகப் பார்க்காமல் வேறென்ன செய்வது?

கட்சிக்கம்யூனிசம் என்றாலே வெறும் கார்ல் மார்க்ஸ் கட்டுரைவரைதல்தாம் காண்! நடிகர் சங்கத்தேர்தலிலே நிற்கவேண்டியவர்களெல்லாம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலே பதவிகளிலே நின்று காற்றிலே கைவீசிக் கறுப்பு, அறுப்பு அறிக்கைவிடுகின்றார்கள்.

இப்படியாக, பிழைப்புக்கு அரிவாளையும் சம்மட்டியையும் காட்டுகிறவர்களை, பெருங்கொலைகளை மேடைகளிலே கொட்டின இரத்தம் உறையமுன்னரே கிண்டல் செய்தவர்களை, ஒண்டிப்புலிக்கவிதைகளைச் செத்தபுல்மேய விட்டவர்களையெல்லாம் அறிக்கைக்குமேலே அரையங்குலம் நகர்வார்களென வாய்பார்த்து விருதைச் சகமனிதனுக்காக, படைப்பாளிக்காக விட்டெறி என்று எதிர்பார்ப்பதெல்லாம் "சாரி ரொம்ப ஓவர்!"

No comments: