Wednesday, October 14, 2015

டாக் டர்ர்ர்ர்ர்ர்ர்

தமிழ்த்திரைப்படத்துறைக்கு வக்காலத்து வாங்கும் ஆளாய்க் கடைசியிலே வந்து சேர்ந்திருக்கிறேன். அதன் குறைகளெனப் படுகின்றவற்றைச் சுட்டிக்காட்டும்வேளையிலே அதன் அடிமடியிலே குத்துகின்ற முறையற்றதையும் சுட்டவேண்டியதாகின்றது.

அப்துல் கலாமுக்கு டாக்டர் பட்டம் பெயருக்கு முன்னாலே போட்டு மகிழ்ச்சியடைகின்றவர்கள் எல்லோரும் கருணாநிதி, ஜெயலலிதா, சிவாஜி, விஜய், விஜயகாந்த் இவர்களின் பெயர்களுக்கு முன்னாலே போட்டால்மட்டும் கிண்டல் செய்வது ஏனோ?

அவரவர் அவரவர் துறையிலே சிறப்பினைப் பெற்றால், கௌரவ டாக்டர் பட்டத்தை எவராவது எதற்காவது வழங்கித்தான் தீருவார். இதிலே கலாமுக்கு மட்டும் பயபக்தியோடும் கருணாநிதிக்கும் மற்றோருக்கும் பகிடியோடும் போட்டுப் பார்ப்பது, ஆக, போடுகின்றவர்களின் அரசியலைத்தான் காட்டும்.
அப்துல்கலாமின் கௌரவ முனைவர் பட்டங்கள் எத்தனை அரசியல் சார்ந்து கொடுக்கப்பட்டவை என்பதைக்கூட இவ்விடத்திலே விட்டுவிடலாம். ஆனால், திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட ஐந்து முதலமைச்சர்களைக் கண்டுவிட்ட தமிழ்நாட்டிலே, தமிழ்ப்படம் ஒவ்வொன்றின் வெளியீட்டையும் அதன் பாடல்வெளியீடு, பூஜைபோடுதல் இத்தனையையும் உடனுக்குடன் பெரும்படமாகவும் உரையாடலாகவும் நிகழ்த்திக்காட்டும் அதே கற்றார் சமூகம், ஒரே திரும்பலாக, அடுத்த கணத்திலே திரும்பி, அப்துல் கலாமின் கௌரவ டாக்டர் பட்டத்தை உச்சிமுகர்ந்தும் விஜயகாந்தின் கௌரவடாக்டர் பட்டத்தை எள்ளிநகையாடுவதும் என்ன நிலை?

கௌரவ 'டாக்டர்' பட்டங்களையும் கற்றுப்பெற்ற 'டாக்டர்' பட்டங்களையும் வேறுபடுத்த நாம் முனைவதில்லை. கற்காமலே ஒற்றை அறைக்கடதாசிப்பட்டம் விடும் பாழ்கலைக்கலகங்களிலிருந்து கற்றதாய்ப் பெற்ற டாக்டர் பட்டங்களைப் போட்டுக்கொள்ளும் 'டீ ஸ்வாமி'ஜீக்களைக்கூட அங்கீகரித்துவிடுகின்றோம். ஆனால், பத்துப்பேர் அவனை/அவளை/அவரை ஆய்வு செய்து பல்கலைக்கழகத்திலே 'டாக்டர்' பட்டம் பெற உதவுமளவுக்கு ஒரு நடிகர் பேரிலே இருக்கும் பட்டறிவினை, ஆகர்ஷத்தை வைத்து ஒரு கௌரவப்பட்டம் கொடுத்தால், அதுமட்டும் கிண்டலுக்குரியதாகிவிடுகின்றது.
சிவாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ராதா போன்றோர் மேற்கின் வகுப்பறை/அகடமி சார்ந்த பல்கலைக்கழகக்கல்வியைப் பெறவில்லை என்றபோது, அவர்கள் நாளும் நாடகக்குழுவிலேயே கிடந்து, உழன்று, கற்றவர்கள் என்பதைக் காணும்போது அவர்களின் பெற்ற அறிவும், பட்ட அறிவும் ஒரு பல்கலைககழக 'டாக்டர்' பட்டத்துக்குரிய ஆராய்ச்சிக்கும் மேலானவை; கௌரவ டாக்டர் பட்டத்துக்குரியவை.

நிச்சயமாக, இக்கௌரவ 'டாக்டர்' பட்டத்தைக் கொடுப்பவர்கள் யார், கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பவை ஆளுக்காள் மாறுபடும். இவை எல்லாவற்றையுமே நாம் நடிகர்களைக் கிண்டல் செய்யமுன்னால், எண்ணிக்கொள்ளவேண்டும்.

கனவுகள் மட்டுமே உச்சத்தை எட்ட உதவுமென்ற பார்வையிலேதான் கலாமும் கனவு காணச் சொன்னார்; விஜயின் கதாநாயகனும் கனவு காணச் சொல்கிறான்.

சொந்தமாக இசையமைத்த ராஜேந்தரைக் கிண்டல் செய்து கொண்டு, வேற்றிசைகளிலிருந்து நுள்ளி மெல்ல அள்ளிப்போடும் இசையமைப்பாளர்களுக்காக உருகும் உலகம் நமது. "என்ன இருந்தாலும் படித்தவர்களில்லையா?" ஆன நம்மிடமிருந்து உள்ளுக்கு இன்னும் "மழித்தலும் நீட்டலும் மயிர் ஓயாது விக்கிரமாதித்தன் முதுகுதொங்கு வேதாளமாய் வளர வளர" நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றது.


[பிகு: தனிப்பட்ட அளவிலே 'கலாநிதி' என்பதையே Doctor(ate) என்பதற்கு ஈடான பதமாகத் தமிழிலே பயன்படுத்துகின்றபோதுங்கூட, இவ்விடத்தே இக்குறிப்புக்கான பின்புலத்தினையிட்டு, 'டாக்டர்' என்றே பயன்படுத்தியிருக்கின்றேன்.]

No comments: