Thursday, February 20, 2014

"இவன் ரொம்ப நல்லவேண்ண்ண்ண்ண்டா அ! அ! அ! அ!"

எழுவர்விடுத்லை குறித்த ஜெயலலிதாவின் அரசியலை மறுக்கமுடியாது. இதிலே எவர்தான் அரசியல் செய்யவில்லை? கருணாநிதி, சிதம்பரம் உட்பட எல்லோருமே "வரவேற்கிறோம்", "மகிழ்ச்சியில்லை என்று சொல்லமாட்டேன்" வகை அறிக்கை தொடக்கம், விஜயராணி, "ஜப்பா த ஹட்" ஞானதேசிகன் "உர்ர்ர்! பொதுமக்கள் வாக்கெடுத்தாயா? வருங்காலப் பிரதமரின் அம்மாவுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?" வகை அலறுகைவரை அரசியல்தான்.

ஆனால், எல்வாற்றையும் மிஞ்சிய சாக்காட்டுச்சவம் தோண்டி மருத்துவக்கற்கைக்கு விற்கும் அரசியலிலிருந்து பிரிகின்ற நிறமே தனி.... தமிழ்நாட்டு எல்லைக்கப்பாலான, பெரும்பான்மையான காங்கிரஸ், மற்றும் (குறிப்பாக,  அப்சல் குருவின் மரணதண்டனையை எதிர்த்த தமிழர்களையே அப்சல் குருவுக்கும் காஷ்மீரமக்களும் எதிரானவர்களாகக் காட்டி, அப்சல் குருவைத் தூக்கிலே போட்டதாலே, இந்த மூன்றுபேரையும் போட்டால்மட்டுமே காஷ்மீர்மக்களின் தேசியப்பிரச்சனை தீரும் வகையிலே வட இந்திய ஆங்கில ஊடகநிகழ்ச்சிநடத்துனர்களுக்கு ஈடாக நாட்டுப்பற்றையும் நீதியின் நெறிவிளக்கின் மின்கலத்தினையும் பையுக்குள்ளே வைத்திருக்கும்) வலதுசாரிக்கட்சிகளின் கருத்துக்குவியலை முன்னே போட்டு,
"திரளும் முன்பே கலைகிறதா மூன்றாவது அணி?

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் விதித்த மூன்று நாள் கெடு எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிட்டது மட்டுமின்றி அதிமுக தலைவியின் பிரதமர் கனவிலும் தண்ணீர் தெளித்துவிட்டதா?"

என்று மிகவும் தெளிவாக எக்கட்சியினதும் எவரோடும் கூட்டுக்கான சாத்தியச்சந்தர்ப்பவாத அரசியலை உணராதவர்போலவே அசந்தர்ப்ப அரசியல் பாய்ச்சும் அண்ணேன் ரவிக்குமார் ரொம்ப நல்ல வேர்!

ஜெயலலிதா இந்தியத்தலையமைச்சராக வரவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருப்பாரென நம்பவில்லை. அவருக்கு அவரின் எல்லை தெரியும். அடுத்தாள் கையைப் பின்னால்மடக்கி எத்துணை முறுக்கிக் கக்குவதைக் கக்கவைக்கலாம் என்பதிலேமட்டுமே தன் முதலைப்பிடி இறுக்கமாகவிருக்கமுடியுமென்பதை முழுமையாக அவர் அறிவாரென்றுதான் தோன்றுகிறது. ஒருபோதும், கையை முறுக்க்கொடுக்கும் இடத்திலே தன் காலைக்கொண்டுபோய் நிறுத்தக்கூடியவர் அவரல்ல. அவருக்குத் தமிழகத்திலே எத்துணைப்பெரும்பலத்தினைத் தான் கொண்டிருக்கின்றேனோ அதுவே தலைநகரிலே தனக்கான பால் கறக்கும்வலிமையை, பொம்மலாட்டும் திரிநூலைப் பெருமளவிலே தீர்மானிக்கும் என்பதையுணர்ந்தே, "ஐந்துநாட்களிலே விடுதலை" என்ற அறிக்கையை விட்டிருக்கின்றார். அவருக்கே இது உடனடியே சாத்தியமில்லாததென்றோ வடக்கிலே முடக்குவாத நோயாளிகளும் எல்லாம் அம்மாவின் சொற்கிருபையாலே உடனடியாய்ச் சொஸ்தமடைந்து கண்டன அறிக்கைவிட்டுச் செயற்படுவார்கள் என்று தெரிந்தே விட்டிருக்கின்றார். இன்னமும் ஆங்கிலத்தொலைக்காட்சியிலே அப்சல் குரு என்றாலே ஆவ் ஊவ் என்று துள்ளும் பாஜக கருத்தாளர், ஜெயலலிதான் கருத்துக்குப் பம்முவதைத்தான் காணமுடிகின்றது. பாஜகவும் மோடிசார்ந்த ஆதரவாளர்களும்  தமிழ்நாட்டிலே தன் வாக்கினை உணர்ச்சிப்பலத்திலே (இராஜீவ் செத்தபோது சென்று பதவிக்கு வந்த வழிக்குச் சரியான எதிர்த்திசையிலே சென்று) பதவிக்கு வர, அறிக்கையாலே உறுதிப்படுத்திவிட்ட ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர இன்னும் முயற்சிப்பார்கள் என்பதே உண்மை.  இதையெல்லாம், அறியாதவர் இல்லை நம் ரொம்ப நல்ல வேன்.  அவருக்கு அவருடைய சொந்தத்தொகுதி நிலைக்குமா என்ற முன்யோசனையிலே கவலையோ என்னமோ? டி ஆர் பாலுவும் கனிமொழியும் அவர் கட்சித்தலைவர் திருமாவளவனும் ராஜபக்‌ஷவைச் சென்று சந்தித்தபோதுகூட வராத தேர்தலின் பெருங்கவலை.

 இதற்கு அவர் வேறொன்றையுமே கவனிக்கத்தேவையில்லை; தமிழகத்திலேயே பொதுவாக, ஈழம்-தமிழ்த்தேசியம் சார்பான எவ்விவாதத்திலுமே |வெளிப்படையாகக்| கலந்துகொள்ளாதோ அல்லது மறைமுகக்குத்தலும் கருவலுமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் -பொதுவிலே பாஜக, காங்கிரஸ் இவற்றினை ஆதரிக்கும்- குழுமங்கள்கூட, பத்திரிகையாளர்களூட ஜெயலலிதாவின் விடுதலை குறித்த அறிக்கைகளையிட்டுப் பெருமளவிலே குத்தலாகவோ கோபமாகவோ சொல்லவில்லை. சொல்லப்போனால், ஜெயலலிதாவுக்கு மற்றையமாநிலங்களிலே (பாகஜ தவிர்ந்த) எதிர்ப்பு எழுந்த இன்றைக்கு மெலிதான ஆதரவுக்குரலை (கட்டாயமாக, மூவர்|எழுவர் விடுதலை பற்றி ஒரு சொல்லேயில்லாமற்றான்) இணையச்சமூகத்தளங்களிலே ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். இத்தகைய நிலையைத்தான் ஜெயலலிதா எதிர்பார்த்து, தன் முடிவினை வெளியிட்டாரென்றே நம்பலாம்.

உதிரியான உணர்வின்பாற்பட்டும் தாம் சார்ந்த இனம்சார்ந்த நலன் குறித்தும் அரசியற்கட்சியாகச் செயற்படாது ஈடுபடும் ஒரு சில குழுக்களைத் தவிர மீதி எல்லோருமே அரசியலிலே மூவரின்|எழுவரின் விடுதலை எத்துணை தமக்கு வாகனமோட்ட எரிபொருள்தருமென்பதையே கண்வைத்திருக்கின்றார்கள்.

இவை சாராமல் இன்னொரு பயம் தரும் விடயமென்றை நேற்றிரவு(|இன்று அதிகாலை :-) ) ஒரு நண்பருடன் பேசியபோது சுட்டிக்காட்டினார்; மூவரோ எழுவரோ விடுதலையாகி வருகின்றவர்களுக்கு உடனடியாக அரசியல் அடையாளமொன்றைத் திணித்து, அவர்களை எவர் அவர்கள் இல்லையென இப்போது சொல்லிக்கொண்டிருக்கின்றோமோ, அப்படியானவர்களே அவர்களென்பதுபோல, கதைகளை உருவாக்கி எம் அரசியலை அவர்கள்மீது திணித்து, எமது ஆதாயத்துக்காக, அவர்களின் எதிர்காலத்தினை இன்னமும் நிலையற்றதாக்கிவிடக்கூடாது. வெளிவருகின்றவர்களை அடுத்த அரசியற்பிரச்சனையொன்று நமக்குக் கிடத்தவுடன் மறந்துவிட்டு நகராமல், அவர்களுக்கு நிலையான, |அமைதியான|. |அரசியலின்பாற்பட்ட தொந்தரவில்லாத| வாழ்க்கைகளை அமைக்க உதவுவது எத்துணை அவசியமோ அதைவிட அவசியமானதும் பொறுப்பானதும் நியாயமானதும் அவர்களை வைத்து நம் அரசியலை முன்னெடுக்காமலிருப்பது. இதை இந்நேரத்திலே நாம் கருத்திலெடுத்துக்கொள்ளவேண்டும்.

No comments: