Wednesday, August 08, 2007

புலம் - 21


படம் நன்றி: The Hunger Project

"தமிழ் தேசியவாதம் தமிழர் நலனைப் பிறரது நலன்களை விடவும் முக்கியமானதாகக் கொள்கின்றபோது, அது தமிழருக்கும் நல்லதல்ல, பிறருக்கும் நல்லதல்ல. ஈழத்தமிழன் என்ற சுய அடையாளத்தை நான் மறுக்கமுயல்வது அபத்தம். ஆயினும், அந்தச் சுய அடையாளத்தைப் பேண எனக்குள்ள உரிமை, தனது சுய அடையாளத்தைப் பேண, வேறு எவருக்கும் இருக்கவேண்டாமா? இங்கேதான் 'ஆண்ட பரம்பரைக்'கதை கூறுகிற தேசியவாதத்தின் வறுமை ஒரு மார்க்ஸியவாதியின் மொழிப்பற்றின் முன்னும் இனப்பற்றின் முன்னும் தெளிவாகிறது. தமிழர் ஒடுக்கப்பட்டால் அதற்கெதிராகக் குரல் கொடுப்பதோ போராடுவதோ, தமிழர் மேம்பட்டோர் என்பதனாலே அல்ல, எல்லோரும் சமமென்பதாலேதான். வியற்னாம் விடுதலைப்போரின் தேசியத்தன்மைகூடச் சமத்துவ அடிப்படையிலானதே ஒழிய, இன மேம்பாடு கோரும் முறையிலானதல்ல"
- சி. சிவசேகரம் நேர்காணல், காலச்சுவடு இதழ் 15 (1996)


மேலேயும் வாசிக்க எண்ணமும் பொறுமையும் கொண்டவர்கள் வாசித்துக்கொள்ளவேண்டிய எனது மறுதலிப்புக்கூற்றுகள்

1. இவ்விடுகை தனி(ப்)பட்ட -/பெயரிலி. என்ற எனது கருத்துகளின் தொகுப்பு மட்டுமே; என் மொழி, நாடு, அமைப்பு, கதிரைக்கால், குதிரைவண்டி சார்ந்த வேறெவருக்காகவும் பிரதிநிதியாகச் சொல்லப்படுவதல்ல; அதனால், ஈழம்.எதிர்.இந்தியா, ஈழத்தமிழர்.எதிர்.தமிழகத்தமிழர்.எதிர்.புலம்பெயர்தமிழர், பார்ப்பான்.எதிர்.திராவிடன் புரிதல்களெல்லாம் அநாவசியமாக நான் சொல்வதைத் திசைதிருப்புவதாக அமையுமென்று நம்புகிறேன். அவ்வழி புக்கி, முக்கி வரும் 'அகதி, 'பார்ப்பான்' வகைப்பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டா

2. அண்மையிலே நடந்த சென்னை வலைப்பதிவர்பட்டறையிலே மாலன் பேசிய வலைநெறி, அதனுடன் சம்பந்தப்பட்டு வலைப்பட்டறை நெறிப்படுத்துனர் மா. சிவக்குமார் (மற்றும் வலைப்பட்டறை அமைப்பாளர்கள்) நடத்துமுறை, வெளியிட்ட கருத்து ஆகியற்றினை மட்டுமே மையப்படுத்தி வரும் இடுகை இது. ஆனால், இஃது எவ்விதத்திலும் வலைப்பதிவர்பட்டறையினைக் குறித்த விமர்சனமாகக் கருதப்படக்கூடாது; அவ்வாறு விவாததைத் திசை திருப்பும் வகையிலே திரிக்கப்படவும் கூடாது. வலைப்பதிவர் பட்டறை குறித்த மிகுதி செயற்பாடுகளிலே எனக்குக் கருத்தினைத் தெரிவிக்க எதுவிதமான விழைவோ தேவையோ அறிதலோ, அதைக் கேட்க மற்றவர்களுக்கும் எதுவிதமான விழைவோ தேவையோ இல்லை. [அதனால், இங்கே பேசுவதற்குச் சம்பந்தமில்லாத வலைப்பதிவர் பட்டறை தொடர்பான அநாமதேய, அன்னியோன்யநேய(ர்)ப் பின்னூட்டங்களும் என் இவ்விடுகையின் தேவைக்கும் என் சொந்தத்தேவைக்கும் அநாவசியமானவையென்பதாலே, அனுமதிக்கப்படமாட்டா]

3. இங்கே இவ்விடுகைக்குப் பயன்படுத்தியிருக்கும் தரவுகளைத் தந்த நண்பர் தன் பெயரை வெளியிடலாமென அனுமதி தந்திருந்தாலுங்கூட, அநாவசியமாக நான் வெளியிடவிரும்பவில்லை. என் தரவுகளிலே தவறென எதுவிருந்தாலுங்கூட, ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டப்படும்போது, வழக்கம்போல திருத்திக்கொள்வேன்.

4. என் தொடரான "அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு" உடன் தொடர்புள்ளதென்றாலுன்கூட, அதன் பகுதியாக இவ்விடுகை எழுதப்படவில்லை



பின்புலம்


கோ. சுகுமாரனின் ஆனந்தவிகடன் செவ்வியொன்றினை மேற்கோளிட்டு, "மக்கள் பங்கு பெறாத புரட்சியினால் பயனில்லை" எனச் செல்வநாயகி இட்ட இடுகையின் பின்னூட்டத்திலே, பதிவர் சந்திப்புக்குப் பதிலளிக்கும் வகையிலே, இந்தியா/தமிழ்நாட்டின் மரபுசார் மார்க்ஸியக்கட்சியின் தலைமைப்பீடங்கள்-தொண்டுத்தோழர்கள் இடையேயான வித்தியாசத்தினைச் சுட்டிக்காட்டும்போது, இந்து இராம் அவர்களின் சீனச்சார்பு மார்க்ஸியம்.எதிர்.அமெரிக்காவினைப் பயன்படுத்துதல் என்ற இரட்டைத்தன்மையைச் சுட்ட "......இப்போதுதான், செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே? இது காலகாலமாகத் தவங்கிடந்து பெற்ற புரட்சியில்லையா? இத்தகைய தலைவர்களின் காத்திருந்த புரட்சியின் பின் வாலைப் பார்த்திருந்த பஞ்சாலைத்தொழிலாளர்களோ தெலுங்கானா விவசாயிகளோ கடைசியாகத் தங்கள் நிலையை உலகுக்குச் சுட்டுவதற்காகத் தற்கொலை செய்து போராடுவதுதான் புரட்சி முழுமையடைந்தது என்பதா? அல்லது..... சேவையின் விருதாக அந்நிய நாடொன்றின் லங்கா ரத்னா விருதைப் பெறுவதும் சிறை மீண்ட இருள்நீக்கி சுப்பிரமணியத்தைக் காத்திருந்து காரிலே ஏற்றிப்போவதுமேதான் காத்திருந்த புரட்சியி(டி)ன் ஈடேற்றமா? என்னத்தைக் கிழித்தீர்கள்? நீங்கள் ஐம்பதாண்டுகள் பண்ணிக் கிழிக்காததைத்தான் நக்ஸலைட்டுகள் கடந்த பத்தாண்டுகளேனும்..." என்று எழுதியிருந்தேன்.
இதற்கு, மாலன் வலைநெறிவசப்பட்டு, "அந்த சூழ்நிலைகளில் அவனது கருத்தை தங்களது மாற்றுக் கருத்துக்கருத்துக்களை வைத்து ஆராய்வது, விமர்சிப்பதுதான் முறையானது. ஆனால் பொதுவாகத் தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில், தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது என்றால், அந்த அறிவுஜீவியை அவனது சொந்த வாழ்க்கை, குடும்பம், ஜாதி இவற்றின் அடிப்படையில் தனிமனிதத் தாக்குதல்களைத் (இந்த்த் தாக்குதல் வசையாகத்தான் இருக்க வேண்டியதில்லை, எள்ளலாகக் கூட இருக்கலாம்) தொடுத்து அவர்களை devalue செய்கிற முயற்சி நடக்கிறது. அப்படி devalue செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை மதிப்பிழக்கச் செய்யலாம் எனவும் சிலர் கருதிக் கொள்கிறார்கள். அதை உங்களைப் போன்றவர் அனுமதிப்பதும் வியப்பளிக்கிறது. உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார். அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? ராமிற்கே கூட என்ன சம்பந்தம்? அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் போக்கைத் தீர்மானிக்கிற பொலிட்பீரோ உறுப்பினரா? மார்க்சிஸ்ட் கட்சி பற்றிய விவாதத்தில் அவரை அவ்ர் மகளை, அவர் தாத்தா வரை இழுத்து ஏகடியும் பேசுவது முறைதானா? அது இந்த விவாதத்திற்கு எந்த விதத்தில் பயனளிக்கும்?" என்று செல்வநாயகியிடம் கேட்டு எழுதியிருந்தார்.

செல்வநாயகி அவ்விடுகை திசைதிரும்புவதாகக் கருதியதாகத் தெரிவதால், மேற்கொண்டு பின்னூட்டங்களை நிறுத்திவைப்பதாகக் கூறினார். அதன் பின்னால், என் உதாரணத்துக்கான காரணத்தை, செல்வநாயகியின் "அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் இடுகையின் பின்னால், "மாலன் சந்திப்புக்கான என் பதிலிலே இந்து ராம் ஐயங்காரின் மகள் குறித்து எதற்காகச் சுட்டியிருக்கின்றேன் என்பதைக் கவனிக்கவில்லை (என்றே இப்போதைக்குக் கருதிக்கொள்கிறேன்). அது சீனச்சார்பு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, சீன அரசின் விருந்தினராக திபெத் போய் வந்து கட்டுரை எழுதியவர், மகளைமட்டும் முதலாளித்துவத்தினை முன்வைக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய முரணைச் சுட்டுவதற்கு. மாலன் வசதியாக இதனைத் தவிர்த்துவிட்டுத் தன் வாதத்தினை வைக்கின்றார். இதே தனிப்பட்டவர்களின் வாழ்க்கைமீதான எள்ளல் (வசை?/அவதூறு) இனை சன் தொலைக்காட்சியின் செய்திகள் எதிர்க்கட்சிகளிலோ, குமுதம் நடிகைகள் வாழ்க்கை பற்றி எழுதும்போதோ பயன்படுத்தாதிருப்பினுங்கூட, நான் இங்கே முரணையும் ராமின் பொய்த்தன்மையையும்சுட்டச் சொன்னதைத் தவறென்று வைத்துக்கொண்டு விமர்சித்திருக்கலாம்." என்று விரிவாகத் தந்து, என் இடுகை கரைவு -9 இன் பின்னூட்டத்திலும் தந்திருந்தேன். மீண்டும், என் கரைவு - 10 இடுகையிலே கூற்று 4 ஆக, "சீன அரசின் சார்புநிலைப்பாட்டோடு திபெத்தின் சுதந்திரத்தேவையினைத் தாக்கியெழுதும் இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிக்கின்றார்" என்ற அர்த்தத்திலே நான் சந்திப்புக்குப் பதிலாகச் செல்வநாயகியின் பதிவிலே சுட்டிக்காட்டியது, மாலனுக்குத் தனிமனிதத்தாக்குதலும் எள்ளலுமாகிப்போனது பற்றி" வரும் இடுகையிலே இன்னும் விளக்கிச் சொல்வேன் என்றும் எழுதியிருந்தேன். இத்தனைக்குப் பிறகும், மாலன் என் இடுகைகளை வாசிக்கின்றார் என்றே கருதியிருந்தேன்.

ஆனால், சென்னைப்பல்கலைக்கழகத்திலே களமிட்டு நடந்த ஒருநாள் வலைப்பதிவர் பட்டறையிலே, வலைநெறி (வலைநன்னடத்தை என்றும் சில பதிவுகளிலே குறிப்பிடப்பட்டிருந்தது) பற்றி மாலன் பேசியிருக்கின்றார்; வலைப்பதிவுகளிலே இணையப்போகின்றவர்களுக்கு நல்லதும் அவசியமானதுமான தலைப்பு - இணையத்துக்கு அப்பாலான பெருமளவிலே ஒற்றைவழி தகவற்செலுத்துகை ஊடகங்களிலேயே பட்டறிவுமிக்க மாலன் நிகழ்த்தியிருந்தாலுங்கூட. அப்பேச்சின்போது, "கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுறோம் அதனால இதையும் சொல்லலாம் தப்பில்லை, பெயரிலி ஒரு பதிவில் இராமைப் பற்றி பேசும் பொழுது அவருடைய மகளைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்" என்று சுட்டி, மேற்கொண்டு அது தொடர்பாகவும் அதற்கப்பால், ஈழத்தமிழர்கள் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டு வைத்திருப்பது பற்றியும் பேசியிருக்கின்றார். இஃது அவருக்கான எனது பதில்களையெல்லாம் குமுதம், இந்தியா ருடே ஆசிரியர்களுக்கான கடிதங்களாகக் கருதிக்கொண்டிருக்கின்றாரோ என்று எண்ணவைக்கின்றது. "நான் பேசுவதை மாற்றாமலே பேசிக்கொண்டிருப்பேன்; நீ வாசித்து வை; நீ என்ன சொல்கின்றாயென்று நான் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; நீ என்ன நினைக்கின்றாய் என்று நான் நினைக்கின்றேனோ, அதையே நீ நினைப்பதாக அகப்படும் என்னை நம்பக்கூடியவர்களுக்கு என் பெயரையும் விலாசத்தையும் வைத்துச் சொல்லிக்கொண்டிருப்பேன்" என்பதாகத்தான் அவரின் செயற்பாடுகள் செய்யவைக்கின்றன.

இவை குறித்து 'ஓசை' செல்லா அவரது இடுகையொன்றிலே, மாலனின் உரையினையும் ஒலிப்பதிவாகப் பிறகு இடுவேன் எனக் குறிப்பிட்டிருந்ததாலே, பயன்படுத்தப்பட்ட சரியான வரிகள் கிடைக்குமென்று அவர் இடும் வரைக்கும் ஒன்றரை நாள் பார்த்திருந்தேன். ஆனால், இதுவரை செல்லா இட்டதாகத் தெரியவில்லை. ஏற்கனவே மோகன்தாஸும் மா. சிவக்குமாரும் இது குறித்து சிவக்குமாரின் இடுகையொன்றின் பின்னான பின்னூட்டங்களிலும் லக்கி லுக், பதிப்பெழுத்தாளர்கள், இணையத்திலில்லாதிருத்தல் பற்றி மாலனிடம் அவரின் பதிவுப்பின்னூட்டத்திலும் பேசிய பின்னால், மாலன் பேசியவை, ஒலிப்பதிவாகவோ, முழுமையாகவோ இணையத்திலே எல்லோரும் கேட்கவென வருமென்ற நம்பிக்கை குறைந்திருக்கின்றது. மேலும், மா. சிவக்குமாரின் "எவரைப் பற்றி இவர் இப்பட்டறையிலே வலைநெறி உரையிலேகூடச் சொன்னால் எனக்கென்ன?" என்பதுபோலவே அர்த்தம் தரும் ""கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்ற அலட்சியத்தன்மையுடனான வரிகள் உள்ளெழுப்பிய ஆத்திரமும் உடன் எழுதத்தூண்டுகின்றது. ஆனாலும், இனியுங்கூட, செல்லாவோ பட்டறைக்குச் சென்று மாலனின் வலைநெறி உபன்நியாசத்தினைக் கேட்ட எவராவது அவரின் உரை, தொடர்ந்த கேள்விமறுப்பு என்பன உட்பட்ட ஒலிப்பதிவினைத் தர முடியுமானால், நன்றி.

இங்கே இரண்டு விடயங்கள் பற்றி எழுத விரும்புகிறேன்.

1. மாலனின் இரட்டைநிலைப்பாடுகளும் தொடர்ச்சியான குழந்தைப்பிள்ளைத்தனமான வாதங்களையும் முன்னிட்டு;
2. மா. சிவக்குமாரினதும் வலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களினதும் ஓரளவுக்கு மாலனின் உரையின்போது, அக்கூ(ட்)டத்திலேயிருந்த ஏற்கனவே வலைப்பதிவுகளிலே மாலன்.எதிர்.-/பெயரிலி. இடுகைகளை வாசித்த பதிவர்கள் பலரினதும் எதிர்வினைகள் அல்லது எதிர்ப்பில்லாவினையின்மைகள் குறித்து

1. மாலனின் இரட்டைநிலைப்பாடுகளும் தொடர்ச்சியான குழந்தைப்பிள்ளைத்தனமான வாதங்களையும் முன்னிட்டு:

மேலே நான் ஏன் இந்து ராமின் மகளினைக் குறிப்பிட்டேன் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கின்றேன். அது புரியாவிடின், மாலனின் வாதத்தினைச் சரியென ஒரு பேச்சுக்குக் கொள்வோம். அந்நிலையிலுங்கூட, இவ்விடுகையின் எல்லையயும் நோக்கையும் கருத்திலே கொண்டு, மாலனுக்கு மிகவும் எளிமையான கேள்வி; "வலைநெறி என்று பேசுகின்றவர், வலையிலே உங்களுடன் முரண்பட்ட நான் இல்லாதவிடத்து எதற்காக என் பெயரை வலைக்கு புதியவர்களிடம் உதாரணத்துக்கு எடுக்கவேண்டும்?"

மாலனின் எட்டு இடுகையிலே கோவிந்தசாமி பற்றிக் குறித்திருந்தை நான் செல்வநாயகியின் இடுகையின் பின்னூட்டத்திலேயும் என் "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" இடுகையிலேயும் சொல்லியிருந்ததற்கு மாலன் தன் "அன்புள்ள பெயரிலி" இடுகையிலே, எள்ளலாக, "என் பதிவில் வந்து பின்னூட்டமிடுவது தனது தகுதிக்குக் குறைவு எனக் கருதி உங்கள் பதிவில்- மன்னிக்கவும் உங்கள் ஈகோ இன்ஜினில்- எனக்குச் சில கேள்விகளை நீங்கள் வீசியிருந்தாலும், உங்கள் பதிவில் அவற்றுக்குப் பதிலளிப்பதைப் பெறும் பேறாகக் கருதி இதனை எழுதுகிறேன்" என்று சொல்லியிருந்ததற்கு, நான் ஏன் பின்னூட்டங்கள் சிலரின் பதிவுகளிலே இடுவதில்லையென்பதையும் சொல்லியிருந்தேன் (1. பதிலுக்கு, "பின்னூட்டங்களுக்குப் பயந்ந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கத் தயங்குவது என்பதற்கும், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் புத்திசாலித்தனத்திர்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒரு வேளை என் பதிவில் பின்னூட்டம் பிரசுரமாவதில் சங்கடங்கள் இருக்குமானால், அவற்றை பிரசுரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு அனுப்புங்கள். இப்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுவதால் அவை மற்றவர் பார்வைக்குப் போகாது. அல்லது நீங்கள் எனக்கு மின்னஞல் அனுப்பலாம். நீங்களே சொல்வது போல அடுத்தவரின் அந்தரங்கம் கூட அறிந்து வைத்திருக்கும் பதிவுலகில் என் மின்னஞச்ல் முகவரி கிடைப்பது அவ்வளவு சிரமமாக இராது. உங்கள் பதிவிலேயே அதை நீங்கள் வெளியிட்டுக் கொள்வதும் கூட முறையானதுதான். ஆனால் அப்படிச் செய்யும் பட்சத்தில், அதனைக் குறித்த தகவலைப் பின்னூட்டப் பெட்டியிலோ, மின்னஞ்சலிலோ தெரிவித்துவிட்டால் நலமாக இருக்கும்" என்று அவர் எழுத அதற்கு, "நான் எழுதியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதோ என அஞ்சுகிறேன். நான் பின்னூட்டமிடப் பயப்படவில்லை. ஆனால், ஒருவர் ஒரு பின்னூட்டம் இடுகை இட்டவருக்கு மாற்றாக இட்டபின்னால் அப்பதிவிலே அதைத் தொடர்ந்து பலர் ஏன் எமக்கு வம்பு என்று தம் சொந்தக்கருத்துகளையும் தெரிவிக்க அஞ்சுவதைத்தான் சொல்கிறேன் :-) ஓர் உதாரணத்துக்கு, உங்கள் முன்னைய பதிவுகளிலே பின்னூட்டம் இட்டவர்களிலே எத்தனை பேர் இங்கே பின்னூட்டியிருக்கின்றார்களெனப் பாருங்கள். இந்த இடுகை கொஞ்சம் விவகாரமான இடுகை என்று எண்ணிக்கொண்டு தள்ளி நிற்பார்கள். அதன் காரணமாகவே பல பதிவுகளின் "சமநிலை"யைக் குழப்பவேண்டாம் என சொந்தப்பெயரிலோ பெயரில்லாமலோகூடப் பின்னூட்டுவதில்லை. அதைத்தான் சொன்னேன்." என்று நான் எழுதியிருந்தேன். இப்படியாக, இருவரும் உலாவும் வலையிலேயே தன் பதிவிலே சொல்லப்பட்டதற்குப் பதில் தனக்கும் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற வலைநெறியை முன்வைத்தவர், நான் இல்லாத சென்னை வலைப்பதிவர்பட்டறையிலே போய் என் பெயரைக் குறிப்பாகச் சொல்லி, நான் பதில் அளிக்கமுடியாதவகையிலே நான் விளக்கங்களையோ சொல்லப்பட்ட பின்புலத்தினையோ சொல்லாமல், தன் கருத்தைச் சொல்வது - அதுவும் வலைநெறியைப் பற்றிச் சுட்டுவதற்குச் சொல்வது எவ்வகை நெறி?

சரி; இனி நான் இந்து இராமின் மகளைச் வலைச்சந்திக்கிழுத்து ஏளன சுய மந்தஹாஸம் உதிர்த்ததாகவே மாலன் வைக்கும் குழந்தைப்பிள்ளை வாதத்தைச் சரியென்றே வைத்துக்கொண்டு, அந்தக்கோட்டிலேயே பார்ப்போமே? "125 ஆண்டுப்பழமை இந்துவையா அல்லது விடுதலைப்புலிகளையா உலகம் நம்பும்?", "ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் கொடுத்தனுப்பினோம்" இவற்றிலே இல்லாத ஏகடிய ஹாஸ்யமா, அல்லது அதற்கும்மேலாக, அதே வலைநெறியிலே அவர் தொடர்ந்து சொன்ன "ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஈழத்தமிழர்கள்" என்பதிலேயில்லாத குரூரம் ஊடோடும் எள்ளற்பரிஹாஸமா நான் சொன்னதிலேயிருக்கின்றது? அதைக்கூட விடுவோம்; செய்தியாக வந்த இராமின் மகளின் கதையை நான் பேசியிருக்கக்கூடாதென்றால், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் எடுக்க முயற்சிப்பதாக, இந்து மட்டும் செய்தி வெளியிடலாமா? இங்கே அப்பனுடனான தகராறுக்கு மகனை ஏன் இழுக்கின்றீர்கள் என்று மாலன், நரசிம்மன் ராமிடம் கேட்டுச் சொல்வாரா? நியாயப்படுத்தத்தான் செய்வாரா?
இதைக்கூட விட்டுவிடுவோம். வலைநெறி விரிவுரையிலே இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதை நியாயப்படுத்துவதற்கும் அதற்குச் சம்மந்தமில்லாமல், ஈழத்தமிழர் ஸ்ரீலங்கா கடவுட்சீட்டுடன் அலைவதைப் பற்றியிழுப்பதற்கும் எந்த நெறியேனும் இடம் கொடுக்குமா? மாலன் ஆசிரியராகவிருந்தபோது குமுதத்திலே நடிகைகள் பற்றியும் பெண்கள் பற்றியும் வந்த தரத்துக்கான சஞ்சிகைநெறியினையும் (சிம்ரனுக்கு நெருக்கமானது உள்ளாடை: லைட்ஸ் ஆன் ரங்கராஜன்) சன் தொலைக்காட்சியிலே திமுக சார் செய்திகளைமட்டுமே புகைபோக்கிபோல ஆற்றுப்படுத்தித் தந்துகொண்டிருந்த தார்மீகநடுநிலைநெறியினையும் விடவா இராமின் மகள் கொலம்பியா பல்கலைகழகத்திலே படிப்பதைச் சுட்டிய தீநெறி தேய்ந்துபோயிருக்கின்றது?

-/பெயரிலி.யை வலைநெறி வழுவியவன் என்று காட்ட எத்தனையோ கட்டற்ற உதாரணங்கள் இருக்க, உப்புச்சப்பற்ற இந்து ராம் மகளினைக் கோடி காட்டிவிட்டான் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப எடுப்பதிலேதும் உள்நோக்கிருக்கின்றதா, மாலன்? நான் போகாத சென்னையிலே என் "கல்யாண குணாம்சங்களை" ஏற்கனவே தெரிந்த நாற்பதுபேருக்கும் யாரோ ஒரு மூஞ்சி தெரியாத வாலும் வரியும் நிறைந்த காட்டுவிலங்கென்றுமட்டும் உங்களின் விபரிப்பினை வைத்துப் புரிந்துகொள்ளக்கூடிய புதுப்பதிவர்கள் நாற்பதுபேருக்கும் வலைத்தர்மோபதேசம் செய்வதனாலே எனக்கேதும் பாதிப்பில்லை; தெரிந்தவர்களின் என் மீதான கருத்திலே உங்களின் பாதிப்பில்லை; தெரியாதவர்களின் என் மீதான கருத்திலே எனக்கு - அவர்கள் இணையத்திலே சேர்ந்து அறியாதவரைக்கும் - பாதிப்பில்லை. இஃது உங்களுக்கும் தெரியும். ஆனாலும், நீங்கள் அங்கே இந்து ராம் மகள், ஈழத்தமிழர், ஸ்ரீலங்கா விசா என்று பூதத்தைக் கிண்ட முயன்றது, தனியே என்மீதான உங்கள் காழ்ப்புணர்விலேயில்லை என்றே நினைக்கிறேன். வந்திருப்பவர்களிலே இணையத்திலிருக்கும் ஈழத்தமிழர்கள் பற்றிய தவறான கருத்தினைப் பதிய வைக்க விரும்பியிருக்கலாம். இல்லாவிட்டால், மிகச் சிறந்த பொருத்தமான, வலைப்பதிவர் பட்டறைக்கு வந்திருந்த, முன் நின்று நடத்திய பலருமே தெளிவாகச் சாட்சியம் கூறியிருக்கக்கூடிய சல்மா அயூப் விவகாரம் எப்படியான வலைநெறி பிறழ்வென்று உங்களாலே காட்டியிருக்கமுடியாதா, என்ன? சல்மா அயூப் என்பவர் வலைப்பட்டறை நிகழ்வினை முன்நின்று நடத்திய ஒருவரைப் பாதித்ததைவிடவுமா, சந்திப்புக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்திலே ராமின் மகள் படிக்கின்றார் என்று நான் சொன்னது உங்களுக்கு மிகவும் நெறிபிறழ்வாகப் போய்விட்டது? நிச்சயமாக, இத்துணை பத்திரிகைப்பட்டறிவுள்ள உங்களுக்கு அது தெரிந்திருக்கும். அதன் பிறகும் நீங்கள் இந்து_இராம்_அவரின் மகள்_ஈழத்தமிழர்_இணையம்_ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் என்ற சொற்களினாலே மத்தியதட்டுப்புதுப்பதிவர்களுக்கு ஒரு பயமுறுத்தல் தமிழகத்திலே உருவாக்க முயன்றீர்களென்றால், அது நிச்சயமாக எதேச்சையானதல்ல; இந்து தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசுக்காக, ஈழத்தமிழரைப் பற்றித் தமிழக மத்தியதட்டின் மூளைக்குள்ளே நுழைத்துச் செய்து வரும் அதே தந்திரப்பூச்சாண்டியைத்தான் நீங்களும் உங்களுக்கு வாய்ப்பான இடங்களிலெல்லாம் எப்படிச் செய்கின்றீர்கள் என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கின்றீர்கள். எதற்கு உங்களுக்கு ஈழத்தமிழர்கள்மீது இத்துணை காழ்ப்புணர்வு?

2. மா. சிவக்குமாரினதும் வலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களினதும் ஓரளவுக்கு மாலனின் உரையின்போது, அக்கூ(ட்)டத்திலேயிருந்த ஏற்கனவே வலைப்பதிவுகளிலே மாலன்.எதிர்.-/பெயரிலி. இடுகைகளை வாசித்த பதிவர்கள் பலரினதும் எதிர்வினைகள் அல்லது எதிர்ப்பில்லாவினையின்மைகள் குறித்து

தமிழ்நாட்டிலேயிருக்கும் பெரும்பான்மையான தமிழ்ப்பதிவர்களுக்கு என்னைப் பற்றி (ஏற்படுத்தப்பட்டு) இருக்கும் கருத்துகளைப் புரிந்துகொள்கிறேன். அதனால், பட்டறையிலே மாலன் பேசியபோது, அதனைத் தட்டிக்கேட்கவேண்டிய அவசியமின்றி, "நமக்கேன் வம்பு?" என்றோ "நன்றாகச் சொல்லட்டும்" என்றோ இருந்துவிட்டுப் போயிருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. அதையும் புரிந்துகொள்கிறேன். இது கூடல் (conference) அல்ல, குலை(த்)தல் அல்லது கூடாமை (unconfernce) என்பதாலே, அமைப்பாளர்களுக்குப் பேசப்போகின்றவர்கள் இதைத்தான் பேசப்போகின்றோமென ஆரம்பத்திலேயே சுருக்கம் கொடுத்திருக்கவேண்டிய நிலைமையுமில்லை என்பதையும் புரிந்துகொள்கிறேன். மாலன் பேசியபின்னால், அது பதிவாகி வராதுபோனால், அதைப் பற்றி மாலன் கூறிய தனியாளோ, குழுவினரோ அறிந்துகொள்ளவேண்டிய அவசியமோ சிக்கலோ எவருக்குமில்லையென்றே மட்டுறுத்துனரும் அங்கே கூ(ட்)டத்திலே இல்லாத, பின்னாலே அறிந்திருக்கக்கூடிய மற்றைய அமைப்பாளர்களும் பட்டறையின் நல்ல விளைவுகளிலேயே கருத்தினைச் செலுத்தி, நம்பிக்கையைப் பரப்பும் தேவையிருப்பதையும் புரிந்துகொள்கிறேன்.

ஆனால், மாலனைத் தொடர்ந்து பேசவிட்டுவிட்டு, அவரிடம் கேள்வி கேட்க முயன்றவரை மட்டும் மட்டுறுத்துனர் தடுப்பது எவ்வகை வலை(ப்பதிவர் பட்டறை)நெறி? குறைந்தபட்சம், அது தவறென்றாவது எழுதியோ அல்லது மாலனிடம் சுட்டிக்காட்டியோ இருந்திருந்தால், வலை(ப்பதிவர் பட்டறை) நெறி பற்றி புதுப்பதிவர்களுக்கில்லாவிடினும், அமைப்பாளர்களின் சக பழைய பதிவர்களுக்கேனும் ஏற்பட்டிருக்குமல்லவா? திட்டமிட்டே இதையெழுதக்கூடாததுபோல, எந்த அமைப்பாளரும் சுட்டவில்லை. சரி, சுட்டி ஒருவர் வலையிலே காட்டியபின்னுங்கூட, "கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்பது கொஞ்சம் நிர்த்தாட்சணியமற்ற அராஜகவலைநெறிக்கூற்றாகப்படவில்லையா? இதற்கெல்லாம் மேலாக, வலைப்பதிவுகளிலே சக ஈழத்துப்பதிவர்களின் நாளாந்த (எனக்கே புளித்தோ விறைத்தோ போன) சாதாரண சா ஓலத்துக்கும் கூடவிருந்து ஒப்பாரி வைத்தோ ஆறுதல் சொல்லியோ பின்னூட்டம், முன்னூட்டம் தரும் தமிழகவலைப்பதிவர்களிலே மோகன்தாஸ், செல்லா, இராம.கி போன்ற ஓரிருவர் தவிர மீதி எவருமேகூட, மாலன் கூறுவதை அவ்விடத்திலே நிறுத்தியோ அல்லது அதன்பின்னாலே சுட்டியோ அவரின் வலைநெறிமீறலையும் சொந்த அரசியல் ஊசிகுத்தல்களையும் வந்திருக்கும் புதுப்பதிவர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கமுடியாமற்போய்விட்டது? இப்படியான சூழல்களிலே தமிழகத்தின் சக மக்களிடம் ஈழத்தமிழர்களின் நியாயமான பக்கத்தினை மாலன், இராம் போன்றவர்களின் ஊடகவலிமையையும் மீறிச் சொல்லமுடியாதிருக்கும் நண்பர்கள், வலைப்பதிவிலே மட்டும் ஆறுதல் சொல்வதாலே நடைமுறையிலே என்ன பலன் கிட்டுமென்று நினைக்கின்றீர்கள்? எல்லாவற்றுக்கும்மேலாக, வலைப்பதிவர் பட்டறைகள் இப்படியான செயற்பாடுகளினால் புதிதாக வரக்கூடிய பதிவர்களின் மூளைப்பதிவுகளிலே வலைப்பதிவுகள் பற்றித் தவறான கருத்துகளை ஏற்படுத்தி,, தம் கால்களிலே தாமே சுட்டுக்கொள்ளும் விளைவினையே ஆகின்றன என்று தோன்றவில்லையா ? இவை பற்றி எனக்குக் கவலையில்லை. அது பட்டறை அமைப்பாளர்களின் கவலை; நாளைக்கு இன்னோர் இடத்திலே பட்டறை வைப்பவர்கள், இதே மாதிரியாக வலைநெறியைப் பேசக் கேட்க, சென்னையிலே மீறப்பட்ட வலை(ப்பதிவர் பட்டறை)நெறியையே உதாரணம் எடுத்து யாராவது புதுப்பதிவர்களுக்கு வலைநெறிமீறலைச் சொல்கின்றபோதுதான் பட்டறை அமைப்பாளர்களாலே புரிந்துகொள்ளப்படுமெனத் தோன்றுகின்றது.

வலைப்பதிவர் பட்டறையைத் திட்டமிட்டு நடத்தி முடிப்பதென்பது மிகவும் சிக்கலான, பொறுப்புமிகுந்த, பன்நோக்குடனான காரியமேதான்; அதிலே இப்படியான ஒரு வலைநெறிமீறல் ஒரு பெரிதான அலட்டிக்கொள்ளும் விடயமேயல்ல; அதனால், இதனைப் பெரிதுபடுத்தி, இவ்விடுகையை இட்டதாக எண்ணக்கூடாது. தவிர, தனிப்பட மாலன் என்னை நான் இல்லாத இடத்திலே இழுத்துப்பேசியது குறித்தும் எனக்கு வருத்தமில்லை; தினசரி சட்னிவடை உறவினர்கள், நண்பர்களின் நலன் கேட்டு அனுப்பும் பின்னூட்டங்களைவிடவா மாலன் பெரிதாகத் தொந்தரவு கொடுக்கின்றார்? :-) சொல்லப்போனால், அவரின் பொய்யான முகத்தோலை மேலும் உரித்துக்காட்ட வாய்ப்பென்று மகிழ்ச்சியே. ஆனால், இனியேனும், வலைப்பதிவர் பட்டறை அமைப்பாளர்கள் இப்படியான ஈழத்தமிழர்களை ஏகடியம் செய்யும் மாலனின் உரை போன்ற நெறி போதிக்கும் போர்வையுரைகளைத் தவிர்க்கும்முகமாகப் பேசப்போகின்ற உள்ளடக்கங்களைக் கேட்டுக்கொள்வது பயனானதும் நியாயமானதுமாகும். ஏற்கனவே தமிழகத்தமிழர்கள் மத்தியிலே இந்தியா ருடே, சன் டீவி, தி இந்து போன்றவை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஈழத்தமிழருக்கு வாலும் வரியுமிட்ட விலங்குவடித்தினை இன்னமும் பயமுறுத்தும்வகையிலே மாலன் போன்றவர்கள் செய்ய அனுமதிப்பது எவ்வகைப்பட்டறை நடத்தும் தர்மத்தின் அடிப்படையிலுங்கூட நியாயமாகாது.

13 comments:

மலைநாடான் said...

//நீங்கள் அங்கே இந்து ராம் மகள், ஈழத்தமிழர், ஸ்ரீலங்கா விசா என்று பூதத்தைக் கிண்ட முயன்றது, தனியே என்மீதான உங்கள் காழ்ப்புணர்விலேயில்லை என்றே நினைக்கிறேன். வந்திருப்பவர்களிலே இணையத்திலிருக்கும் ஈழத்தமிழர்கள் பற்றிய தவறான கருத்தினைப் பதிய வைக்க விரும்பியிருக்கலாம். இல்லாவிட்டால், மிகச் சிறந்த பொருத்தமான, வலைப்பதிவர் பட்டறைக்கு வந்திருந்த, முன் நின்று நடத்திய பலருமே தெளிவாகச் சாட்சியம் கூறியிருக்கக்கூடிய சல்மா அயூப் விவகாரம் எப்படியான வலைநெறி பிறழ்வென்று உங்களாலே காட்டியிருக்கமுடியாதா, என்ன? சல்மா அயூப் என்பவர் வலைப்பட்டறை நிகழ்வினை முன்நின்று நடத்திய ஒருவரைப் பாதித்ததைவிடவுமா, சந்திப்புக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்திலே ராமின் மகள் படிக்கின்றார் என்று நான் சொன்னது உங்களுக்கு மிகவும் நெறிபிறழ்வாகப் போய்விட்டது? நிச்சயமாக, இத்துணை பத்திரிகைப்பட்டறிவுள்ள உங்களுக்கு அது தெரிந்திருக்கும். அதன் பிறகும் நீங்கள் இந்து_இராம்_அவரின் மகள்_ஈழத்தமிழர்_இணையம்_ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் என்ற சொற்களினாலே மத்தியதட்டுப்புதுப்பதிவர்களுக்கு ஒரு பயமுறுத்தல் தமிழகத்திலே உருவாக்க முயன்றீர்களென்றால், அது நிச்சயமாக எதேச்சையானதல்ல; இந்து தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசுக்காக, ஈழத்தமிழரைப் பற்றித் தமிழக மத்தியதட்டின் மூளைக்குள்ளே நுழைத்துச் செய்து வரும் அதே தந்திரப்பூச்சாண்டியைத்தான் நீங்களும் உங்களுக்கு வாய்ப்பான இடங்களிலெல்லாம் எப்படிச் செய்கின்றீர்கள் என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கின்றீர்கள். எதற்கு உங்களுக்கு ஈழத்தமிழர்கள்மீது இத்துணை காழ்ப்புணர்வு?//


பெயரிலி!
மிகச்சரியான வரிகள். இக்கருத்துக்களுடன் முழுமையாக ஒத்துப்போகின்றேன்.

பூனைக்குட்டி said...

பெயரிலி, பட்டறையில் அந்தச் சமயத்தில் நடந்ததை என் நினைவில் பதிந்த வரை எழுத இருக்கிறேன்.

சொன்னால் நம்புவது கடினமாகத்தான் இருக்கும் என்றாலும் நேரம் கிடைப்பதில் இருக்கும் பிரச்சனை தான் பட்டறையைப் பற்றிய என் குறிப்புக்களை எழுதுவதில் சிக்கலை உண்டு பண்ணுகிறது.

உண்மையில் பட்டறையின் வெற்றியையோ இல்லை அதனால் பயனடைந்த மக்களின் எண்ணிக்கையைப் பற்றிய உண்மைகளையோ இந்த விவாதம் எந்த விதத்திலும் தீண்டிவிடக்கூடாது என்ற ஒரு எண்ணம் மட்டும் தான் இப்பொழுது இருக்கிறது.

உங்களுக்கும் அதே போன்ற மனநிலை இருப்பதில் மகிழ்ச்சி.

லக்கிலுக் said...

//பின்னான பின்னூட்டங்களிலும் லக்கி லுக், பதிப்பெழுத்தாளர்கள், இணையத்திலில்லாதிருத்தல் பற்றி மாலனிடம் அவரின் பதிவுப்பின்னூட்டத்திலும் பேசிய பின்னால், மாலன் பேசியவை, ஒலிப்பதிவாகவோ, முழுமையாகவோ இணையத்திலே எல்லோரும் கேட்கவென வருமென்ற நம்பிக்கை //

மாலன் பேசியபோது என்னைப் போன்றவர்கள் அரங்கத்தில் இல்லை. அவரது Session முடியும் நேரத்திலேயே அடுத்த Session எடுப்பதற்காக உள்ளே வந்தேன். மாலன் அதுபோல பேசினார் என்பதை உங்களைப் போலவே சில பதிவுகளை வாசித்தே என்னாலும் அறியமுடிந்தது.

அவர் இங்கே பேசியதைப் போலவே "அன்புள்ள பெயரிலிக்கு" பதிவிலும் முன்னர் எழுதியிருந்தபோது முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தவன் நான் என்பதை இங்கே உங்கள் பார்வைக்கு எடுத்து வைக்கிறேன்.

நடந்தது Unconference. எனவே Session எடுத்தவர்கள் பேசும்போது மட்டுறுத்துனர் தலையிட்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

மட்டுறுத்துனர் மா.சி. மீது தாங்கள் பாய்வதில் அர்த்தமில்லை. அங்கே கூடியிருந்தவர்களில் யாராவது ஆட்சேபம் தெரிவித்திருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கக் கூடும்.

இளங்கோ-டிசே said...

பெயரிலி, இப்பதிவு நிதானமாகவும் -வழமை போலில்லாது- எளிமையாகவும் எழுதப்பட்டுள்ளது. இந்தளவுக்குப்பின்னும் பேசப்படும் விடயங்கள் குறித்து மாலன் புரிந்துகொள்ள தனது மனதை விசாலித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆகக்குறைந்தது என்ன நடந்தது/நடக்கின்றது என்று தெரிய விரும்பும் பிற பதிவர்களுக்கு இந்தப்பதிவு உதவலாம். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி இது தனிப்பட்ட ஒருவரின் மீதான மாலனின் காழ்ப்புணர்வு அல்ல; அதைத் தாண்டி ஒரு முழுசமூகத்தின் மீது பரவுகின்ற வெறுப்பே இது. நன்றி.

பூனைக்குட்டி said...

http://imohandoss.blogspot.com/2007/08/blog-post_07.html

-/பெயரிலி. said...

மலைநாடான், டிசே நன்றி.


மோகன்தாஸ்,
மாலன் என்ன சொன்னார் என்று தெரிந்தபொழுதிலேயே இதனை வைத்து ஆர்ப்பார்ட்டம் பண்ணியிருக்கலாம். ஆனால், அப்படியேதும் செய்யத்தோன்றவில்லை; ஒரு காரணம், பேசுவதற்கு மாலனின் பேச்சு போன்ற ஒலிப்பதிவிருக்கும், உரையிருக்கும் தகுந்த ஆதாரம் தேவையென்பது; இன்னொரு முக்கிய காரணம், இங்கே முக்கியமான விடயம் என்னைப் பற்றி மாலன் என்ன சொன்னாரென்பதல்ல; ஆனால், வலைப்பதிவர் பட்டறை என்பதுதான். பட்டறை ஒன்றினைத் திட்டமிட்டு, நெறிப்படுத்தி, நடக்கவைக்கும் காரியமென்பது இலகுவானதல்ல. அதன் / அவர்களின் நோக்கமும் விதந்தோத்தப்படவேண்டியதே. அப்படியெல்லாம் செய்து முடித்திருந்து அதை முன்னின்று நடத்தியவர்களும் கலந்துகொண்டவர்களும் வலைப்பதிவு எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் மகிழ்ந்திருக்கும் வேளையிலே, எங்கோ கண்காணாத்தூரத்திலேயிருந்து கொண்டு எனக்கும் நேரமும் விரல்களும் கணணியும் மொழியும் இருக்கின்றதென்பதற்காகமட்டும், மாலன் எப்படியாக இப்படிப் பேசலாமென்று பதிவிட்டு, கொண்டாட்டத்தினைக் குழப்புவது முறையற்றது. ஆகவே, பின்னூட்டத்திலே மட்டும் எனக்குத் தெரியுமென்று குறித்துவிட்டு இருந்தேன். ஆனால், மா. சிவக்குமாருக்கும் உங்களுக்குமிடையே அவரின் இடுகையிலே நடந்த பின்னூட்ட ஆட்டத்திலே, அவர் "புல் முளைப்பது" பற்றிச் சொல்லியதும் தேவைக்கான தணிக்கை பற்றிச் சொன்னதுமே வெறுப்பினை ஏற்றியது. என்னதான் அந்நேரத்திலே அவரது நிலையாகவிருந்தாலுங்கூட (அந்நிலையை உணரமுடியாதிருக்கவில்லை), அவர் நீங்கள் சுட்டிக்காட்டியபின்னரும் தணிக்கையின் அவசியம் பற்றியும் "கேள்வி கேட்கும் விவாதங்கள் புல் முளைக்கவும் பயன் தராதது" பற்றியும் சொல்வது, அவரின் அலட்சியத்தனத்தினைத்தான் - அவர் இப்போது பட்டறை-விவாதம் என்று ஒரு பதிவிட்டிருந்தாலுங்கூட- தெளி/ரிவித்தது. இது அவரின் மாலனை மட்டுறுத்தாது மற்றவர்களை மட்டும் மட்டுறுத்திய செய்கையின் தொடர்ச்சியான அராஜகமாகவே தோன்றியது. அதனாலேயே, கொண்டாட்டப்பதிவுகள் அடங்கி, மற்றைய பதிவுகள் இதைக் குறித்து வரத்தொடங்கவும் பதிவினையிட்டேன். இது பற்றிய தங்கள் விளக்கங்களை நேரமெடுத்துத் தந்த அமைப்பாளர்களுக்கும் நன்றி.

நீங்கள் மா. சிவக்குமாரின் பதிவின் பின்னாலே கேள்விகளெழுப்பியிராவிட்டால், அமைப்பாளர்கள் இவ்விடயம் குறித்து, தெளிவானதும் உறுதியாதுமான தங்கள் கருத்துகளை இப்போது தந்திருப்பதுபோல, எழுதியிருப்பார்களா என்றெல்லாம் வாதாடிக்கொண்டிருக்கமாட்டேன். சொல்லப்போனால், இப்படியாக மாலன் பேசியதிலே எனக்கு மகிழ்ச்சியே; குறைந்த பட்சம் தானே தன்னை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தினை அவரின் சில தொடர்பான செயற்பாடுகளின் உள்நோக்குகளை மற்றவர்களுக்கு வெளிக்காட்டி நிறுவ முயல்கின்ற என்னைப் போன்றவர்களுக்குத் தந்திருக்கின்றார்.

இச்சிறு பிசிறுதலுக்காக, வலைப்பதிவர்பட்டறையின் நோக்கும் முயற்சியும் செயற்பாடுகளும் எவ்விதத்தாலும் குறைந்துவிடவில்லை & குறைத்து மதிப்பிடப்படவுங்கூடா என்று பலரைப் போலவே நானும் நிச்சயமாக நம்புகிறேன்.


லக்கி லுக்,
உங்களை நான் சொல்லவில்லை. நீங்கள், சிந்தாநதி ஆகியோர் மாலனின் "அன்புள்ள பெயரிலிக்கு" இடுகையின் பின்னே இட்டிருந்த பின்னூட்டங்களைக் கண்டேயிருந்தேன். (அதற்கு நன்றி சொல்ல இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொள்கிறேன்). நீங்கள் கூட்டத்திலேயிருந்தீர்களா என்றும் தெரியாது. நான் பொதுவிலே சொன்னேன்.

நடந்தது அமைப்பு & செயற்பாடு முறையின்படி பார்த்தால், unconference என்பதானா என்பது பற்றி எனக்குச் சரியாகச் சொல்லமுடியவில்லை. இங்கே பேசுவதற்கும் இப்படியான "கலைந்திருப்பு" வரைப்படுத்துதலுக்கும் சம்பந்தமில்லை என்பதாலே, பேசுபொருளின் தேவைக்கேற்பமட்டும் சுட்டிவிட்டு மேலே. முதலாவது, நடந்தது unconference தான் என்றால், பழைய பதிவர்கள் & பதிய விரும்புகின்றவர்கள் என்ற இருவேறு வகை/நிலைப்பட்டவர்கள் கலந்திருக்கும் கூடலுக்குப் (கலைதலுக்குப்??) பொருந்துமா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். அடுத்ததாக, unconference - session (I assume, you mean the workshop here) இலும் மட்டுறுத்துனர் இருப்பாரானால், அவருக்கு conference ஒன்றிலே மட்டுறுத்துனருக்கு இருக்கும் அதே கடமைகளேயிருந்தாகவேண்டும்; அக்கடமைகளிலே நான்கு கீழ்வருமாறு:
1. எல்லோருக்கும் பேச (உரை-கேள்விகேட்பு) சம சந்தர்ப்பம் தருதல்
2. எல்லோரையும் ஒரே நிலையிலே வைத்துப் பேச அனுமதித்தல்
3. அவைக்கான நேரத்தினைக் கண்காணித்திருத்தல்
4. அரங்குக்கும் தலைப்புக்கும் பொருந்தாதவற்றை, மிகவும் விலகிப்போகும்போது தவிர்க்க, பேச்சாளரையும் பார்வையாளர்க்கேள்விகேட்பாரையும் நெறிப் படுத்தச் சுட்டிக்காட்டுதல்

மா. சிவக்குமார், மாலனைத் தொடர்ந்து அவைக்கும் தலைப்புக்குப் பொருந்தாததை அவையிலே பேசவிட்டு, மற்றவர்களைக் கேள்வி கேட்க இஃது இடமில்லையென்று தவிர்க்கக்கேட்டிருக்கின்றார்; நேரமுங்கூட ஒரு காரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றது. இது மா. சிவக்குமாரின் தவறு; மாலனிடத்திலே நானிருந்து மாலனைப் பற்றியும் இந்தியத்தமிழர் பற்றியும் பிரபாகரனின் மகன் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கலாமென்று பேசியிருந்தாலுங்கூட மா. சிவக்குமார் உடனடியாகத் தடுக்கும் அதே உரிமை கொண்டிருந்திருக்கின்றார்; , அதைக்கூட விட்டுவிடலாம்; எமக்குத் தெரியாதவிடயமாகப் போய்விடும். ஆனால், தன் வலைப்பதிவிலே, 'தணிக்கை' & 'புல்' குறித்து அவர் மோகன்தாஸின் பின்னூட்டக்கேள்விகளுக்குப் பின்னால் பேசியதை வாசித்தபோது, உங்களுக்கே ஆத்திரம் வந்திருக்கவில்லை என்பீர்களா?

மிகுதிப்படி, இதை வைத்துக்கொண்டு வலைப்பட்டறையின் நோக்கத்தையோ முயற்சியையோ அதன் அமைப்பாளர்கள், பங்காளர்களின் உழைப்பையோ நான் குறைத்து எவ்விதத்திலும் எடைபோடவில்லையென ஏற்கனவே சுட்டிவிட்டேன். பட்டறையின் வெற்றியைக் காலம் கனியக் காட்டட்டும் என நானும் விழைகின்றேன்.

-/பெயரிலி. said...

பத்ரி தன் பதிவிலே ஏற்றியிருக்கும் ஒலிப்பதிவு மூலம் மாலனின் உரை & பின்னான கேள்வி நேரத்தினைக் கேட்க முடிந்தது. அதற்கு பத்ரிக்கு நன்றி.
முழுதாக நாற்பது நிமிடங்கள் இருக்கும் ஒலிப்பதிவிலே கேள்விபதில் பகுதியிலே கடைசியான ஐந்து நிமிடங்களிலேமட்டுமே (35:50 இலிருந்து) இங்கே விவாதிக்கப்பட்ட விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
அக்கடைசிப்பகுதியைத் தனியே mp3 & rm கோப்புகளாக என் தேவைக்கு ஆக்கிக்கொண்டாலுங்கூட, பத்ரியின் உரிமையில்லாமல் எங்கும் ஏற்ற விருப்பமில்லை.

ஒலிப்பதிவு மிகவும் கூர்ந்துகேட்பின்மட்டுமே சில இடங்களிலே புரிந்துகொள்ளும்வகையிலே புறத்து இரைச்சல் இருப்பதால், நான் புரிந்துகொண்ட, மாலன் பேசியிருப்பதன் சாரம் இதுதான்:
எனக்கும் இராமுக்கும் உள்ள தனிப்பட்ட தகராற்றிலே எதற்கு நான் வலைப்பதிவுக்குச் சம்பந்தப்படாத இராமின் பொண்ணு என்ன செய்யும் என்று கேட்கிறார். (இதற்கு ஏற்கனவே பதில் சொல்லியாகிவிட்டது. வேண்டுமென்றால், சில வாரங்களுக்கு முன்னால் நடந்த அமெரிக்க ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதிவேட்பாளர்களின் விவாதமேடையிலே "பிள்ளைகள் தனியார் பள்ளிக்கூடங்களிலே படிக்கின்றார்களா? பொதுப்பள்ளிக்கூடங்களிலே படிக்கின்றார்களா?" என்று விவாதமட்டுறுத்துனர் ஒவ்வொரு வேட்பாளரிடமும் கேட்டார். அவர்களுக்கும் ஆறுதலாகப் பதில் சொன்னார்கள். விவாதமட்டுறுத்துனர் என்ன நெறியோடு வேட்பாளர்களின் தேர்தலிலே சம்பந்தப்படாத பிள்ளைகளைப் பற்றிக் கேட்கிறார் என்று அவரிடம் எவருமே கேட்பதில்லை. அது வெறுமனே வேட்பாளரின் சொல்லுக்கும் செயலுக்குமான ஒத்துப்போகும் தன்மையைக் காணவே கேட்கின்றார் என்று புரிகின்றது)

பிறகு இராஜாஜி-பெரியார் நட்பு பற்றியும் குறைந்த பட்சப்புரிந்துணர்வுக்காக ஒரு விளக்கம் வருவதாகத் தெரிகின்றது. குறைந்தபட்ச "எதையோ விபரிக்க" "இந்திய அரசு இலங்கைப்பிரச்சனையிலே விடுதலை... தமிழருக்கான ஆதரவை எடுப்பதில்லை. அதற்காக... (தெளிவாகக் கேட்கவில்லை) போகிறான்/போராடுகிறானா? ஈழத்தமிழர் இலங்கை அரசினை எதிர்த்துப்போராடுகின்றார்கள்; ஆனால், ஸ்ரீலங்கா பாஸ்போட்டுடன்தானே வெளியிலே போகின்றார்கள்" என்றுகூறி, மீண்டும் அமெரிக்க அரசுக்கும் அமெரிக்கப்பல்கலைக்கழத்துக்கும் சம்பந்தமில்லை என்பதாகச் சொல்லி, திரும்பவும் ராமின் மகளுக்கே வருகின்றார்.

இத்தனையெல்லாம் சொல்லி அவர் விவாதத்துக்கே சம்பந்தமில்லாத விடயங்களைப் பதிவிலே பேசுவதாகச் சொல்லி முடிக்க ஓர் அன்பர் "ஆமாம் சார்" சொல்கிறார். யாரது? :-)

அதன் பிறகு வருவன கேட்டும் கேளாமலும்போய், கடைசியிலேதான் பின்னணி பற்றி யாரோ (மோகன்தாஸ்?) பேசுகிறார். அத்தோடு நேரம் முடிகின்றதாம்.

.......... இத்தனைக்கும் நான் ஆரம்பத்திலே செல்வநாயகியின் பதிவிலே பெயர் குறிப்பிடாமலே பொதுவாகச் சொன்னது, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இது.

ஆனால், முதன் முதலிலே இந்து ராம் & மகள் என்று வெளிப்படையாக எழுதியது, "உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார். அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? ராமிற்கே கூட என்ன சம்பந்தம்? அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் போக்கைத் தீர்மானிக்கிற பொலிட்பீரோ உறுப்பினரா? மார்க்சிஸ்ட் கட்சி பற்றிய விவாதத்தில் அவரை அவ்ர் மகளை, அவர் தாத்தா வரை இழுத்து ஏகடியும் பேசுவது முறைதானா? அது இந்த விவாதத்திற்கு எந்த விதத்தில் பயனளிக்கும்?" - மாலன்.

இப்போதேனும் சொல்லுங்கள்; மாலனா -/பெயரிலி.யா முதன்முதலிலே இராமின் மகளை இழுத்தது??

✪சிந்தாநதி said...

அன்பின் பெயரிலி

1.பட்டறை நடத்துநர்கள் பலரும் இந்தகழ்வையே கேட்டிருக்கவில்லை.

எதிர்பாராமல் ஒரு பேச்சினிடை வீழ்ந்து விட்ட இதன் தாக்கமும் பொருளும் மனதில் உறைக்கவே சில நிமிடங்கள் ஆகியிருக்கும். எனவே தான்தொடர்ந்து விவாதத்தை மாசி மட்டுறுத்தி நிறுத்தியிருக்கிறார்.

*இதை விவாதமாக்கி கொண்டு செல்வது சரியாக இருந்திருக்குமா?இதைத்தான் மோகன்தாசின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்குமுகமாக மாசி கூறி இருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் உங்களினதும் ஈழத்தமிழர்களினதும் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு பட்டறை நிகழ்த்துநர்கள் சார்பில் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதை நீங்கள் ஏற்கவில்லை என்பதையே இந்த பதிவின் தொனி காட்டுகிறது ;(

பட்டறையிலேயே இதை விவாதமாக்கி இருந்தால் பட்டறையின் பயனும் நிகழ்வும் முழுக்க திசைமாறிப் போயிருக்கும்.

இப்போதும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது.பட்டறையின் விளைவாக பல புதியவர்கள் வலைப்பதிக்க வந்திருப்பார்கள். அதைவிட நிறைய பேர் வலைப்பதிவுகளை வாசிக்க வந்திருப்பார்கள். அவர்களுக்கு இன்று வலைப்பதிவுகளில் முழுக்க இந்த விவாதத்தைத்தான் காண முடிந்திருக்கிறது:(

இதை நான் கூறுவதற்காக உங்களின், ஈழத்தமிழர்களின் உணர்வை உணராதிருப்பதாக எண்ணிக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

-/பெயரிலி. said...

/தனிப்பட்ட முறையில் உங்களினதும் ஈழத்தமிழர்களினதும் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு பட்டறை நிகழ்த்துநர்கள் சார்பில் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதை நீங்கள் ஏற்கவில்லை என்பதையே இந்த பதிவின் தொனி காட்டுகிறது ;(/

சிந்தாநதி, அப்படியேதும் நான் புண்படுதல், மன்னிப்பு என்ற மாதிரியாக எதுவுமே தோன்றி நான் ஆரம்பத்திலிருந்தே எழுதவில்லை. கொஞ்சம் நிதானமாக வாசித்தீர்களென்றால், நான் என்ன சொல்கிறேன் என்று புரியும். குறைந்தது மோகன்தாஸ், லக்கிலுக் ஆகியோருக்கு எழுதியபின்னூட்டங்களின் இறுதி வரிகளையேனும் பாருங்கள். எப்படியாகப் புரியவைப்பதென்று எனக்குத் தெரியவில்லை. வேண்டுமானால், அற்புதனின் பின்னூட்டத்திலே இட்டதையும் பாருங்கள். ஆக, சிவக்குமார் எழுதிய வரிகள்மட்டுமே உதைத்தது; ஆத்திரத்தினைத் தந்தது. அந்த ஒரு கணத்தைத் தவிர, தனிப்பட்ட அளவிலே எனக்கு இஃது ஒரு பெரிய விசயமாகவே படவில்லை. மாலனின் மீதான தோலுரிதலுக்கு வாய்ப்பென்பதிலே எனக்கு மகிழ்ச்சியே. மாலனின் அரசியலைக் கலைப்பது என்பதுதான் எனது நோக்கு. வேறேதுமில்லை. இதற்குமேலே எப்படியாகப் புரியவைப்பதென்று எனக்குத் தெரியவில்லை :-(

உங்களைப் பற்றி, லக்கிலுக்கிற்கு எழுதிய பதிலிலே எழுதியிருக்கின்றேனே?

வெற்றி said...

பெயரிலி,

/* ஆக, சிவக்குமார் எழுதிய வரிகள்மட்டுமே உதைத்தது; ஆத்திரத்தினைத் தந்தது. */

நீங்கள் சிவகுமார் எழுதிய வரிகளால் ஆத்திரப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

முதலில் மாலன் இப்படிப் பேசுவார் என அவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் அதற்கு சில நேரங்களுக்கு முன் இப்படியான நிகழ்வுகளில் அரசியல் பேசக் கூடாது என மாலன் அவர்களிடம் சொல்லியதை அவர்கள் நம்பிவிட்டனர்.

திடிரென மாலன் தனது இழிகுணத்தைக் காட்டியது சிவகுமார் உட்பட யாரும் எதிர்பார்க்கவில்லை.

பட்டறையின் நோக்கம் இப்படியான விவாதத்தை நடத்துவது அல்ல. இப்படியான விவாதங்கள் தொடர்ந்திருந்தால் தேவையில்லாமல் வீண் சிக்கல்கள் தலைதூக்கியிருக்கலாம்.

ஆக அந்த நல்லெண்ணத்தில்தான் நண்பர் சிவகுமார் அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். என்னைப் பொறுத்தளவில் அது பாராட்டப்பட வேண்டியதே. நண்பர் சிவகுமாரின் இடத்தில் நானிருந்திருந்தால் அனேகமாக சிவகுமார் செய்ததையே செய்திருப்பேன்.

ஆகவே நீங்கள் நண்பர் சிவகுமாரின் நிலைமையை தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேணும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

✪சிந்தாநதி said...

நன்றி

நானும் நீங்கள் வேறு எதுவும் கூறியதாக எண்ணவில்லை. எனினும் அந்தச் சூழலில் மாசி செய்தது குறித்த உங்களின் குற்றச்சாட்டு குறித்தே விளக்கங்களைகூற முற்பட்டேன்.அவர் அறிந்தே அதை அனுமதித்தது போன்ற உங்கள் கருத்து...என்ன நிகழ்ந்தது என்பதை உணர்ந்ததும் அந்த விவாதம் அத்துடன் நிறைவு செய்யப் பட்டது...(மாலனின் கருத்தை அங்கேயே கண்டித்திருக்க வேண்டும் என்பதும் பட்டறை நிகழ்வை வேறு திசையில் செலுத்தி இருக்கும்.)...இந்நிலையில் வேறு எதுவும் செய்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த விவாதத்தை நீளச் செய்திருந்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியேகூற முனைந்தேன்.

Badri Seshadri said...

பெயரிலி: அந்த ஒலிப்பதிவும் நான் வலையேற்றும் பிற ஒலிப்பதிவுகளும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம். யார் வேண்டுமானால் அவற்றைக் கையாளலாம், மாற்றலாம், ஏன் விற்பனை கூடச் செய்யலாம். எனவே feel free to...

=== குறிப்பிட்ட பகுதியின் approximate transcript ===

Sanctity என்பது எதற்கும் கிடையாது, எதுவுமே புனிதமானது அல்ல என்பதுதான் இப்பொழுது வலைப்பதிவுகளில் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கோணத்தில இது நல்லதுதான், ஆனால் ஒரு கோணத்தில் இது ... ஏற்கெனவே இருக்கும் சில institutionகளை கேவலப்படுத்துவது. இப்பொழுது பெரியார் இருக்கிறார். பெரியார் பற்றிய சில பதிவுகளில் அவரது கருத்துகளை விட்டுவிட்டு பெரியாரை denigrate பண்ணற மாதிரியான ஒரு பின்னூட்டம் வருகிறது. அவர் ஏற்கெனவே ஒரு institution. சமூகத்தில் சில விளைவுகளை ஏற்படுத்தியவர். அதனால ஏற்றுக்கொள்ளப்பட்டவர். நீங்க பெரியாரோட கருத்த மறுத்து எழுதுங்க. ஆனால் பெரியாரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவது...

வலைப்பதிவர்கள் இங்க இருக்காங்க...

பெயரிலின்னு ஒரு வலைப்பதிவர் இருக்கார். (ஹிந்து) ராமுடைய மகள் அமெரிக்கா போய் பல்கலைக்கழகத்துல படிச்சதை அவர் விமரிசனம் பண்ணி எழுதறார். அவருக்கும் ராமுக்கும் பிரச்னை, அதுல ராமோட பொண்ணு என்ன செய்யும்? ராம் ஒரு மார்க்ஸிஸ்டாக இருக்கும்போது அவரோட பொண்ணு எப்படி அமெரிக்கால இருக்கற ஒரு பல்கலைக்கழகத்துல படிக்கலாம்ன்னு கமெண்ட் பண்றார்.

யதார்த்த வாழ்க்கைல... நேர் முரணான ஒரு கருத்து வைக்கிறவங்களோடயும் உறவு இருக்குங்கறதுதான் அர்த்தம். பெரியார் அவரோட மணத்தைப் பற்றி விவாதிப்பதற்கு ராஜாஜி ஒர்த்தர்கிட்ட மட்டும்தான் கடிதம் எழுதறார். இரண்டு எதிரெதிர் கருத்து நிலை உடையவங்க தனிப்பட்ட விஷயங்களுக்காக interact பண்ணமுடியாதா? இந்தியா இலங்கைப் பிரச்னையைப் பொருத்தமட்டில் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்ததில்லை. அதுக்காக ....

இலங்கை அரசோடதான் இலங்கைத் தமிழர்கள் போராடுறாங்க, ஆனா இலங்கை பாஸ்போர்ட்டோடதான தேசத்தைவிட்டு வெளில போறாங்க? அப்ப குறைஞ்சபட்ச, எதிரெதிர் நிலைல இருக்கறவங்க தங்களோட தனிப்பட்ட ....

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்ள போய் யார் வேணும்னாலும் படிக்கலாம்ங்கறது போக, அமெரிக்கப் பல்கலைக்கழங்கள்ள போய் படிச்சவங்களுக்குத் தெரியும், அவங்களுக்கும் அரசாங்கத்தோட கொள்கைகளுக்கு எந்த உறவும் கிடையாதுன்னு. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் முதலாளித்துவத்தை ஆதரிக்கறதாச் சொல்லமுடியாது. ...

... சீனாவை ஆதரிக்கறவரோட மகள் அங்க படிக்கறதுல என்ன முரண்பாடு இருக்கு?

==== end ====

Anonymous said...

பெயரிலி,

உங்கள் ஆத்திரம் எல்லாம் புரிகிறது. ஆனால் நீங்கள் தவற விட்ட (அல்லது விடாத) ஒரு விசயம் என்ன என்றால் குட்டி காந்தியைப் பொறுத்தவரை 'புல் முளைக்கக் கூட பயனில்லாத விவாதம்' என்று சொல்லி விட்டாலே, அது தான் அவரின் உச்சபட்ச கோபம். அந்த சொற்களை அவர் சொல்லி கேட்பது போல் கற்பனை செய்து பார்த்தாலே அவரின் கொதிநிலை எங்களுக்கு புரிந்து போகிறது. நேரில் சந்திக்காத காரணத்தால் உங்களுக்கு அது குறைவாக தெரிகிறது.

இதே போன்றதொரு விவாதம் இங்கே வலைப்பதிவுகளில் நிகழ்ந்திருந்தால் அவர் என்ன எழுதி இருப்பார் என்று உங்களுக்குத் தெரியாதா!
'பயனில்லாத விவாதம்
- அன்புடன்,
கொஞ்சம் கோபத்துடன்
மா.சிவக்குமார்.. '

இந்த மாதிரியான ஒரு பின்னூட்டத்துக்குத் தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்று புரியாவிட்டாலும்....