Saturday, February 25, 2006

பழசு - 2

தெநா. மே. உந. உபோ. உவீ.
தெருநாய்களின் மேலொரு உரைநடையும் உடைத்துப்போட்ட உரைவீச்சும்

கடி வேட்டை நாய்களுக்கெதிரான
என் வேக ஓட்டத்தின் பின் தொடரும்,
தெரு வீதி நொண்டி நாய்களுக்கெதிரான
கால் வீச்சு உதையும் கல்வீச்சு நிகழ்வும்.

நேற்றைக்கிதுபோல,
இன்றைய நேரத்திற்கிதுபோல,
நினைவுக்கெட்டிய நாளெல்லாம் இதுபோல...


()()()()()()()()()()

எங்கள் வீட்டிலே நாய் வளர்க்க எப்போதும் அனுமதியில்லை. குதறிக்கடிக்கும் விலங்கு என்பதிலும்விட வரவேற்பறை தொட்டு சமையலறை, படுக்கையறை எல்லாம் தன் சொந்தப்பிரதேசம் என்று அதன் வர்க்கம் எண்ணிக்கொண்டு இருக்கலாமென்று எங்கள் வீட்டில் எண்ணிக் கொண்டிருந்தார்கள்; எங்களுக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மை பொய் தெரியாது; ஏனென்றால், எங்கள் வீட்டிலே எப்போதும் நாய் வளர்க்க அனுமதியில்லை. ஆனால், நாய் வளர்க்க அனுமதியில்லை என்பது நாய் வர அனுமதியில்லை என்று பொருள்படும் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. அதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வீட்டுவாசல்வரை வர அனுமதியுண்டு. அன்றைய தான்யதானத்துக்குக் காலித்தனமான தெருநாய்கள் எல்லாம் புளியடிப்பைரவமூர்த்திக்கு நன்றியுடையவையாக இருக்கவேண்டும். எவராலும் கவனிக்கப்படாத தான் கவனிக்கப்படுவதற்கு வைரவமூர்த்தி எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி இரவில் அந்த நாய்களும் வரவிட்டாமற் காவலுக்குப் போயிருக்கவேண்டும். இதுதான் எவருமே கையொப்பமும் இடாமல், பேச்சளவிலும் சொல்லிக்கொள்ளாமல் நம்பிக்கை அடிப்படையில் நடைமுறையில் வைத்திருக்கும் ஒப்பந்தம். வைரவர் வந்து போகிறார் என்பது மேல்மட்டத்தின் ஐதீகம். கீழ்மட்டத்துக்குப் பயம்; இடைமட்டத்துக்கு ஐயம். ஆனால், வீட்டளவிலும் ஜனநாயகம் என்பது துரதிர்ஷ்டவசமாக, மூன்றில் இரண்டு பங்கு வாக்கு விகிதத்தில் மட்டுமே ஏற்கப்பட்டு உறுதியாகப்படுகின்றது என்பது வெட்கத்துக்குரிய விடயம்.

அழைத்து வரப்படும் நாய் அதெற்கென ஒதுக்கப்பட்ட கோப்பைக்குட் போடப்பட்டது எதுவானாலும் அத்தனையையும் அப்படியே காலி பண்ணிவிட்டே போயாகவேண்டும். இலைதழை சாப்பிட அது விரும்பாவிட்டால், விலங்கியலில் விஞ்ஞானமாணிப்பட்டம் பெற்ற வீடுத்தலைமட்டத்தின் அபிப்பிராயத்தின்படி, மாமிசபட்சணியின் இயற்கை என்றோ அல்லது குறைந்தபட்சம் நாயினது, எங்கோ சாப்பிட்ட நேற்றைய மீன்தலையின் சமிபாடடையாக்குணமென்றோ கருதப்படமாட்டாது. அந்த நாய்ப்போக்கு, நாயின் திமிர்த்தனத்துக்கும் அலட்சியப்போக்குக்குமே எடுத்துக்காட்டு ஆகுமாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு தெருநாய் அதற்கான தட்டில், அதெற்கென்று போடப்பட்ட இலைதழைச்சோற்றை பிரதோஷ, வைகுந்தஏகாதேசி விரதகாரன் மாதிரி முழுவதுமாகக் கட்டாயமாகச் சாப்பிட்டே ஆகவேண்டும். கொஞ்சம் விரிவுபடுத்திச் சொல்லப்போனால், தெருநாய் சாப்பிடாவிட்டால், அதை அன்றைக்கு ஏதாவதொரு சைவமுட்டையினாலான பதார்த்தத்தைக் காட்டி (நாய்களுக்கு முட்டையிலே சைவமுட்டை, அசைவமுட்டை என்ற பேதம் இல்லை என்பது என் தாழ்மையான அனுபவரீதியான கருத்து என்பதையும் இந்தநேரத்தில் நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்த உரைநடையையும் உரைவீச்சையும் வாசித்து முடித்த பின், நான் இங்கே நீதியெதையும் சொல்லவில்லை என்று குறை கண்ட உணர்வோடு ஏமாற்றமடைந்துவிடக்கூடாது என்பதில் நான் கவலை கொண்டிருக்கின்றேன்), வீட்டுக்கு அழைத்து வந்த எனது, ஏதோவிதமான மறைமுகமான தூண்டுதலின் தூண்டற்பேறாக விலங்கியல் விஞ்ஞானமாணிக்கும் அவரின் தலையாட்டிப் பிரதி சனாதிபதிக்கும் தோன்றாத ஞாயிறுகள் எனக்குமுன்னே தோன்றிக் கழிந்ததில்லை.

கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்களை அடையாளம் காண்பது, வசப்படுத்துவது என்பன கீழ்மட்டக்கலகக்காரகளின் களச்செயற்பாடுகளில் மாற்றங்களை, தடுமாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான ஒரு யுத்ததந்திரம். மேலும், கலகக்காரர்களுக்குப் பொதுவாக ஆரம்பங்களிற் தலைவர்கள் இருப்பதில்லை. அப்படி எவர்களும் உலாவியும் காணப்படுவதில்லை. ஆக, இன்னாராகத்தான் இருக்கமுடியும் என்று சந்தேகப்பட்டு யாரோ ஓரிரு பேரை அரசு கண்டுபிடித்து அறிவிப்பதே கலகக்காரர்களுக்கு ஓர் ஒழுங்கான தலைமைப்பீடத்தையும் கலகத்துக்கு ஒரு செயல்நோக்கத்தையும் கலகக்குழுவிற்கு ஓர் இயக்கவடிவமைப்பினையும் ஏற்படுத்தி, தன்னைக் குற்றங்களிலிருந்து விடுதலை பண்ணும் என்பது எல்லா அரசுகளூக்கும் தெரியும். அதன்பின், செயற்திட்டம், இயக்கவளர்ச்சி என்பன, அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தலைமைப்பீடத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மாறுபடலாம். இந்தளவில் எனது விளையாட்டுக் கண்ணாடிக்குண்டுகளுக்கும் துடுப்புமட்டைக்கும் தண்ணீர்த்தொட்டித் தங்கமீன்களுக்குமான தேவைகட்கு மீளக் குறைந்த வட்டியுடன்கூடத் திருப்பிச் செலுத்தத்தேவையில்லா நிதியுதவி கிடைப்பதற்கு நான் தெரு நாய்களுக்கு நன்றியுடையவன்.

மேல்மட்டம் சாப்பிடமறுக்கும் கீழ்மட்டங்களினைச் சரிப்பண்ண வைக்கும் தந்திரத்தை நான் நாய்களுக்கும் வாய்ப்புப் பார்க்க அனுமதியுண்டு. இருப்பதைச் சாப்பிடமறுக்கும் கொடூரத்தனம் மிக்கவர்களுக்கு, ஆசை காட்டிப் புசிக்கப்பண்ண, கொடுப்பதற்குள் அவர்களுக்குப் பிடித்தவற்றைக் கலந்து கொடுக்கமுடியும். சைவமுட்டைக் கேக் கலந்த இலைதழைச்சோற்றைக் கலப்பது காணாத நாய்கூட, மயக்கமருந்து கலந்த மதுவைத் தேடித் தேர்ந்தெடுத்துப் பருகிவிட்டு, "தப்புப்பண்ணிவிட்டேன் கதாநாயகி" என்று வீட்டு + வீதி மூலைகட்கு மூலை எருமை மாதிரி முட்டிக்கொண்டு பாட்டுப்பாடும் திரைப்படநாயகன் மாதிரி, தேடித்தின்னும். ஆனால், எல்லா உற்சவங்களும் நடந்து முடிந்தப்பிறகு, கலந்த குற்றத்திற்கு, கந்தன் சூரனைக் காத்திருந்து கொல்லப் பார்த்திருந்து ஆரவாரித்த பக்தர்கள்போல, கிணற்றடியில் முதல்வாளித்தண்ணீர் யாராவது அள்ளி என்னில் ஊற்றியபின், பின் நானே குளித்துவிட்டபின்னரே, வீட்டுக்குள்போக எனக்கு அருகதையுண்டு.

ஆனால், நாய்களுக்கு இத்தத்துவத்தை வாய்ப்புப்பார்ப்பது என்னும்போது, இடத்துக்கும் உயிரினத்துக்குமான திருத்தங்களினை வீட்டுக்கீழ்மட்டங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சூத்திரத்திற் பண்ணவேண்டும். மேல்மட்டம் கலப்பதைத் தாங்கள் காணாததுபோலப் பாவனை பண்ணுவதை மேல்மட்டம் காணாதது போலப் பாவனை பண்ணவேண்டும் என்பது, கீழ்மட்டத்தின் எதிர்பார்ப்பும் அதனூடாக எப்போதும் ஒப்பந்தம் கிழியலாம் என்ற எச்சரிக்கையும். நாய்களோ, தங்களுக்காகவே இடைமட்டங்கள் (சைவ)முட்டையைக் கலக்கின்றன என்பதைத் தாங்கள் கண்டுகொண்டிருப்பதை, இடைமட்டங்களும் கண்டு கொள்ளவேண்டும் என்பதை ஒப்பந்த முதல்நிபந்தனையாக முற்போடும்.

#######################

வேட்டை நாய்கள் பற்கள் போன்றே,
கொடும் கூரானவை,
அவைதம் மூளைக் கலங்கள், நரம்புகள்;
முளைகள் எல்லாம் முன்னே முட்கள் பிசிறி,
சண்டைச்சேவல் கொண்டைகளாய் சிலும்பி...

அவற்றின் சித்தத்தில்,
மனிதர், கோழி
சதைகளும் எலும்புகளுமே
கொழித்துக்
குலுங்கிப்
பிதுங்கும்
சமையற்குறிப்புப்புத்தக
வண்ண வரைபடங்களாக.

நொண்டி நாய்களோ,
உடல் போலவே மனதாலும் நொந்துபோனவை.
நாளைப் பொழுது உணவு கிடைக்கும் வரை
நக்கிக்கொண்டிருக்கும் தம் நாட்பட்ட உடற்புண்கள்.
கல்லடி பட்டாலும் காலுதை பட்டாலும்
மெல்லத் தம்முள் வருந்திக் கொண்டு
தெரு மூலைக்குட் பதுங்கும்;
நாட்பட்ட சோறோ,
இல்லை,
ஈரப்பதம் செத்த ரொட்டியோ
மட்டும் நிலைத்து நிற்கும்
அவை சித்தத்தே.

இவற்றின் இடைப்பட்ட,
துவிச்சக்கரப் பயணி நான்.
எனது பயணத்தில்,
வேட்டைநாய்களின் காட்டினிலே,
நான் ஒரு நொண்டி நாய்.
முட ஞமலிகள் தெருக்களினிலே,
நான் ஒரு கூரான கடி விலங்கு.

()()()()()()()()()()

ஞாயிற்றுக்கிழமை தெருநாய் அழைப்பிலும்கூட எனக்கு, எதேச்சைத்தேடல் நிகழ்த்தும்படியோ, 'கண்ணில் முதற்படும் மிருகம் இன்று முதற் புசிக்கும்' என்ற அந்நாளைய கூப்பன்கடைவரிசை மனிதத்தேற்றத்தைப் பயன்படுத்தும்படியோ கட்டளையிருக்கும். இதற்கு, ஒரே ஞமலி தொடர்ந்து இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள் உண்டால், விளையாட்டுப்பந்தய விக்கட் வீழ்ச்சிபோல, சரித்திர சாதனையாகி விடும் என்பதல்ல காரணம் என்பதை நான் மிக நன்கு அறிந்திருந்ததால், கடைகளிற் பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்தும் விற்பனைத்தத்துவத்தை எங்கள் வீட்டிற்கும் வைரவர் பயன்படுத்திவிடுவாரோ என்று மேல்மட்ட அங்கத்தவர்கள் அஞ்சுவதாக நான் சந்தேகப்பட்டேன். ஒரே பொருளை ஒன்றுக்கு மேலே வாங்கினால், பொருளுக்கான விலை கழிவோடு, குறைக்கப்பட்டுவிடலாம். அதனால், வாரத்துக்கு வாரம் வேறு வேறு நாயாகப் பார்த்துப்பிடிக்கவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டது மேல்மட்டம்.

ஒரு சமயம், வைரவர் அப்படியான வழிமுறையைக் கையாளாமல், 'பத்து எடுத்தால், பதினொன்றாவது இனாம்' என்று தரும் விலையைக் குறைக்காமல், ஆனால், பொருளைக் கூட்டும் யுத்தியைப் பயன்படுத்தவும் சந்தர்ப்பம் ஐம்பதற்கு ஐம்பது இருக்கின்றது என்று என் நிகழ்தகவியல் அறிவைப் பயன்படுத்தி ஒரு கருதுகோளை, ஒரு மேல்மட்டமும் இடைமட்டமும் இல்லாத முட்டுக்காய்ப்பருவமட்டம், வேறு ஒரு கடிதம் கொடுக்கும் போக்குவரத்துப் பண்ணும் காரணத்துக்காக, கொஞ்சம் என் மட்டத்திற்கு இறங்கி வந்த, அல்லது என்னைத் தன் மட்டத்திற்கு ஏற்றிக் கொண்ட நேரத்தில் முன்வைத்தேன். என் எடுகோளை, நிபந்தனை என்பதுபோல, எடுத்தமாத்திரத்தில் எகிறுகோள் பண்ணி, உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக நிராகரித்த முட்டுக்காய்மட்டம் தன் தேவையை இன்னும் கீழ்மட்டத்திற்கு இறங்கிப் போய்ப் பூர்த்தி செய்து கொண்டுவிட்டது. அன்று என் அதிகப்பிரசங்கித்தனத்தால், வாராவாராம் உபரியாக நிரந்திர வருமானம் தந்து கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளரை எனக்கு அடுத்த போட்டிச் சில்லறை வியாபாரிக்குக் காவு கொடுத்ததாக உணர்ந்து கொண்டதால், பிறகு வந்த காலங்களில் வாழ்க்கைக்கான கொள்கைகளையும் வயிற்றுக்கான வியாபாரங்களையும் வேறுவேறாகப் பிரித்து நடத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். பல நாய்கள் பிடிப்பதில் எனக்கென்ன கஷ்டம் இருக்கக்கூடும் என்று தெருநாய்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாத சாரமான பிறவிகள் அல்லது பஞ்சுமெத்தைப்பைநாய்கள் வளர்க்கும் மேற்தட்டு ஜீவன்கள் கேட்கக்கூடும்.

இப்படிப்பட்ட பிறவிகளுக்கு, இதற்கான விளக்கத்தை, "நாய்களோடு சகவாசம் பண்ணுவது என்பது, மனிதனோடு சகவாசம் பண்ணுவது போன்ற அளவுக்குக் கஷ்டம் அற்றதுதான் என்றாலும்கூட மா கொய்யா மரங்களோடு சௌகரியமான சகவாசம் பண்ணிக்கொண்டிருக்கும் இடைத்தட்டுக்களுக்கு ஒப்பீட்டளவில் மிகமிகக் கஷ்டமானதாகும்" என்று விஞ்ஞானரீதியாகச் சார்பியற்தத்துவ ஒப்பீட்டளவிற் சொல்லுவதிற் தொடங்கலாம். ஆறாவது அறிவு இல்லை என்பது மட்டுமே நாய்களை நல்லதாக மாற்றி நியாயபூர்வமாகச் சிந்திக்கவைத்துவிடாது. மரங்கள் இப்போது ஏறி ஒரு கிளையை உடைத்துவிட்டோ அல்லது பேனாக்கத்தியினால், "எடி இவளெ, உயிர் போகும் வரைக்கும் உல்ளத்தின் உல்லே நீதான்" என்று விள்ளலாய் அட்சரப்பிறழ்வோடு எழுதிக்கிழித்தாலும் அடுத்த நிமிடநேரத்தில் மறந்துபோய், உணர்ச்சி மரத்துப்போய், இன்னொரு முறை கனியிருக்கக் காயிரண்டு கவர்ந்திருக்க ஆட்சேபணை பண்ணுவதில்லை. நாய்களோ ஆடி மாதத்தில் வீதியிற் புணர்கையிற் குறி வைத்துக் கல்லெறிந்தால், ஐப்பசி மழைக்கு முதல், காலில் ஒரு கல்லுக்கு ஒரு பல் என்ற விகிதத்திற் குறி வைக்க அனுமதி கொடுத்தாலொழிய, அதன்பிறகு ஆளுக்காள் சுமுகமான நட்பு தொடரமுடியாது என்ற மாதிரிக்கு எண்ணம் வைத்துக்கொண்டு ஒரு வகையான சுயமரியாதையை எதிர்பார்க்கும் ஜந்து. "கௌரவம் என்பது கேட்டுப் பெற்றுக் கொள்வதல்ல; சுயமே தன் நடத்தையினால் மற்றவர்களுள் ஏற்படுத்திக் கொள்ளும் விடயம் என்பது ஏன் ஒரு பெட்டைநாயைத் தேடி, அதற்காக தெருச்சண்டைகளுக்கும் முன்னிற்கும் சில காலி நாய்களுக்குப் புரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. இந்த நிலையில் 'எதேச்சைத்தேடல்களும்', 'முதல்வந்தது முன் வாரம் வந்திராவிடில், அதுவே இன்று இலைகுழை புசிக்கும்' என்ற நியதியோடும் நீதியோடும் எனக்கு முரண்பாடு நாய்கள் சம்பந்தப்பட்ட அளவில் உண்டு. விதிகளும் நெறிகளும் மனிதர்களின் தினவாழ்க்கைச் சௌகரியத்துக்காகவேயொழிய, வைரவரினது திருப்திக்கோ, அவரின் வாகனங்களின் திமிருக்கோ வளைந்ததாக அமைக்கப்படக்கூடாது என்று எனக்கிருந்த ஆழமான ஆட்சேபணையை, மேல்மட்டம் தன் 'வல்லரசுக்களுக்கான அதிகார மறுப்புவாக்கு'களைப் பயன்படுத்தித் தடைசெய்தது. இலாபகரமான "ஞாயிறுகளில் நாய் தேடும்" தொழிலைத் தாம் என்னிடமிருந்து கைப்பற்றிப் பெற்றுக் கொள்ள, கீழ்மட்டம், என் நாய்த்தர்க்கம் புரியாதபோதும், மேல்மட்டவாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டதாக பொதுச்சபையிற் கையைத் தூக்கியது. 'தக்கன பிழைக்கும்' என்பதாக அனுபவரீதியில் அறிந்திருந்த மற்றவீடுகளின் சக இடைமட்டங்களும் 'நடைமுறை வாழ்க்கையில் உண்மையைப் பேசினால் உருப்படவாய்ப்பில்லை' என்பதை உதாரணங்கள் மூலம் எனக்கு எடுத்துச் சொல்லினார்கள்.

#######################

என் சிந்தனைத்தளத்தில்,
கடி நாயோடு போராட முடியாது
கடிவாளம் போட்டிருக்கும்
அறிவு.

அவற்றால் பட்ட துயர்,
தூசு தட்டிக் கழியும்,
எட்டி இரண்டு முட நாய் உதைப்பில்,
என் உணர்வுத்திருப்திக்கு.

கடி நாய்களை உதைக்கும் காலத்தைக்
காத்திருக்கும் பொழுதுகளில்,
என் இயலாமையினால்,
முட நாய்களை உதைக்காமலும்
இருக்க்கமுடியவில்லை.
நாய்கள் என்று மட்டுமே,
வெறிநாய்க்காட்டுக்கும்
சொறிநாய்வீதிக்குமிடையே
என் உணர்வுக்குப் பாதை
தெரிகின்றது.

()()()()()()()()()()

ஆனாலும், எனக்கு ரொமியிலும் விட கொசுவை மிக மிக அதிகமாகப் பிடிக்கும். நாய்களுக்குப் பெயருண்டோ என்றோ, அதுவும் தெருநாய்களுக்கும்கூடப் பெயருண்டோ என்றோ, அதிலும்கூட, கொசு என்று தெருநாய்களுக்கோ அல்லது எந்த கொம்பன்நாய்க்கென்றாலும் கூடவோ பெயரிருக்கும் என்றோ கேட்டுவிடத்துடிக்கும் ஒரு (நாய்ச்)சமூகவியல் ஆய்வாளர் நீங்கள் என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். பொறுமை அவசியம். ஒவ்வொன்றாய்ச் சொல்ல வருகின்றேன். எங்களூர்த்தெருநாய்களுக்கு எண்சோதிடம் பார்த்து 'ப' வரிசையில் நான்கெழுத்துப் பெயராய் வைத்துத்தான் ஆகவேண்டும் என்று எவரும் பிடிவாதம் பிடிப்பதில்லை; இடுகுறிப்பெயர்களும் இடுவதில்லை. அதனாற்றான், அந்தப் பெயரிலி விலங்குகள் தங்களுக்கு ஒரு பெயரைப் பெற்றுக் கொள்ளத் தம்முள் ஏதாவது ஒரு குணத்தை அதீதமாக வளர்த்துக் கொள்கின்றனவோ என்றும் எனக்குச் சந்தேகம். அதற்குப் பிறகும் அவற்றின் பெயர்கள், நேரம்சாராக் கணிய- "இன்றைக்கு வாலையாட்டினால், சடையன்; நாளைக்கு காலைப்பிடித்தால், சனியன்." இதுதான் எங்களூர்த்தெருநாய்களுக்கான மேல்மட்டசபையினால் அங்கீகரிக்கப்பட்ட பெயரீட்டுமுறை. தெருநாய்களுக்கும் பெயருண்டா என்று கேட்காமல் விட்டவர்கள் நீங்கள் என்றாலும், ரொமியிலும்விடக் கொசுவை தரிப்பவன் என்றதற்காக, நான் மொழிப்பற்று மிக்கவன் என்பதாக எண்ணிக்கொண்டு அடுத்த அனுமானத்திற் தோற்றுவிடக்கூடாது.

ரொமியிலும் கொசு மிகவும் இளைச்சலாக, ஏதோ இனம்புரியாத ஏக்கம் நிறைந்ததாக என் கண்ணிற்பட்டதுதான் காரணம் என்பதும் அல்ல. அறிந்தவர்கள் சொன்னபடி, அது ஒரு மேற்சாதிவீட்டு நாயினதும் கீழ்ச்சாதித் தெருநாயினதும் திருட்டுத்தொடர்பிற் பிறந்தததால், வீதியிலேயே கைவிடப்பட்டுத் தன் சுயமுயற்சியினாலேயே பிறந்ததுமுதல் வளர்ந்தது என்றும் கைவிட்ட தந்தையின் மிகைப்பணிவடக்கமும் நன்றித்தனமும் அறிவுத்திறனும் நிறை நன்நாய் என்றும் அதன் சரித்திரம் ஒரு தமிழ்த்திரைப்படக் கதாநாயகனின் வாழ்க்கைக்குறிப்புப் போல விரிந்து நகர்ந்துபோகும்.

அதன் மேற்குடிப்பிறந்த தந்தையாக, ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுநாய்களை எங்கள்தெரு முடிதிருத்தும் நிலையத்து இலவசப்பத்திரிகை படிக்கும் முழுமொட்டைத்தலையர்கள், வான்குண்டு சிகையற்ற சிரங்களில் விழுந்துபோகும் கால(ன்)ம்வரை குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்கள். வீட்டுநாய்கள், தம் சாதியின் ஒரு புறம்போக்குப்பேர்வழியின் செயலால் மற்ற அப்பாவிகள்மீது பொதுப்படையாகக் குற்றம் சாட்டக்கூடாது என்பதையே, அடிக்கடி கட்டறுத்து இவர்களுக்கு கடித்து குறியீட்டுபூர்வமாகச் சொல்லிவைக்க முயர்சித்ததாக எனக்குப் பட்டது ஏனோ மற்றவர்களுக்குப் படவேயில்லை.

கொசு, தன் தாயினைத் தேடிக் கண்டுபிடிக்க, ஏதாவது ஒரு பரம்பரையலகூடாகக் கடத்தப்பட்ட தனித்துவ ஊளையிடல், அல்லது சங்கேதக்குரைப்பு என்று தாய்நாய் அதற்குப் பிறந்த நேரத்திற் சொல்லிக் கொடுத்திருந்ததா, மேலும், தந்தையைக் கண்டுபிடிக்க சிகைசிரைநிலையத்துச் சிகையற்றோர் ஏதாவது மரபணுப்பரிசோதனை பண்ண எண்ணியிருந்தார்களா என்பதெல்லாம் இங்கே அநாவசியம் என்று விட்டுவிட்டுப்பார்த்தால், கொசு ஒருநாளும் என்னைத் துரத்தியது இல்லை என்பதே அதன்மீது என் (அதீத)அன்புக்கான காரணம். ஞாயிற்றுக்கிழமை சைவமுட்டை கலந்த இலைதழைக்காக அது என்னைத் துரத்தவில்லையா, அல்லது அது துரத்தாததாலேயே நான் அதை ஞாயிறு அடுப்பு நெருப்பு நடுப்பகல்களிற் தேடித் திரிந்திருந்தேனா என்று அறிய விரும்புகிறவர்கள், எனக்கு முதலில், "கொடியசைந்ததும் காற்று வந்ததா,காற்று வந்ததும் கொடியசைந்ததா" என்ற பாடலுக்கான முழு விளக்கத்தையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நாய்களுக்கும் அவற்றின் வாலைப் பிடிப்பது வைரவருக்கு வாலைப் பிடிப்பது என்று நினைத்துக்கொள்ளும் வீட்டுமேல்மட்டங்களுக்கும் இடைமட்டத் தரகூடாக ஓர் எழுதா ஒப்பந்தம் உருவாக முடியுமானால், ஓர் முன்னேறத்துடிக்கும் இடைமட்டத்துக்கும் ஒரு புரிந்துணர்வுள்ள நாயிற்கும் இடையே ஏன், "உனக்குச் சைவமுட்டை, எனக்கு கண்ணாடிக்குண்டு" என்று ஒரு 'வாழ்க்கையே ஒரு பண்டமாற்று வியாபாரம்'தான் தத்துவ நடைமுறைப்படுத்தல் நிகழக்கூடாது? இதற்கு மேலாலும் ஒப்பந்தப்பங்குதாரர்கள் என்ற எல்லைக்கு அப்பாலும்கூடக் கொசு எனக்கு எந்த நேரத்திலும் மரியாதை தந்திருக்கிறது. என் கண்முன்னால், எந்தப் பெட்டை நாயையும் விரட்டியதில்லை; வீதிமரங்களுக்கு, விளக்குக்கம்பங்களுக்கு உரவிலக்கு என்பது தன் கொள்கையில் உள்ளடக்கம் என்று காட்டியிருக்கின்றது.

மேலும் கல்லடி பட்டு முனகியோ முடங்கியோ நொண்டிக் கிடக்கும் நேரத்திலும்கூட எழுந்து வாலாட்டி மரியாதை செய்ய முயற்சித்திருப்பதையும் கண்டிருக்கின்றேன். தன் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் ஜீவன்களுக்கு மோதிப்பைக் கொடுத்து முகமலர்ச்சியைக் காணுவதை மரியாதை என்று எண்ணும் ஓர் இடைத்தரத்துக்கும்கூட இந்தக் கனம்பண்ணும் செயல்கள் தன் தகுதிக்கு மீறியவை எனப்பட்டது. இதனால், அங்கீகாரத் தலையாட்டலுக்கு மேலாக, அ·து என்னைக் கவனிக்காத காரணத்தினால், காதல்விடு நிகழ்வுகளையும், கழிப்புக்கடன்கள் உந்து விளைவுகளையும் பண்ணிக் கொண்டிருந்தாலும்கூட காணாததுபோல நகர்ந்துவிடும் யுக்தியை, எப்போதும் முகத்துக்கு முன்னே பணிவான, என் சில்மிஷங்களைத் தற்செயலாகக் காண நேர்ந்தும் காணாததுபோகும் போகும் தமிழாசிரியர்களிடம் இருந்து கற்றிருந்தேன்.

காலப்போக்கில் எனக்கும் அதற்குமிடையான இந்த ஒப்பந்தம் அதற்கு மேலும் இந்த வெற்றியிலான வியாபாரத்தில் விரிந்து போயிருக்கிறது. என்னைத் தெருநாய்கள் துரத்தும்போது, எனக்காக அவற்றுடன் அதன் தொழிலாகப் பட்டால், அதற்கு அதே நிகழ்வு நடக்கையில் நான் அதற்காகப் படை திரட்டி என் கணக்கினைச் சமப்படுத்த முயல்வதுண்டு. நாய்ப்போருக்குப் பயந்த சில கோழை இடைத்தரங்கள், "கொசுதான் மற்ற நாய்களிடம், 'நீ கடிக்கின்ற மாதிரி பாவனை பண்ணு; நான் காக்கின்ற மாதிரி பாவனை பண்ணுகிறேன்; பதிலுக்கு, ஒரு நாளைக்கு அந்த மரம், அல்லது இந்தப் பெண்நாய் உனக்கு' என்கின்ற மாதிரி ஓர் ஏற்பாடு" என்ற தப்பபிப்பிராயத்தைத் திணிக்க முயன்றார்கள். நான் காதலித்துக்கொண்டிருக்கும் பெண்கள் வேறு யாரையாவது காதலிக்கக்கூடும் என்று நம்ப நான் அன்றைக்கும் தயாரில்லை என்பதை அவர்களுக்கு அந்தந்த நேரங்களிலும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். மேற்தரமோ கீழ்த்தரமோ வாழ்க்கையில் நம்பிக்கைதான் முக்கியம்; இல்லையா, என்ன?

ரொமியைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியவை இரு வசனங்கள் மட்டுமே. ஒன்று, திரைப்படக்கெட்டவனான 'வில்லனி'ன் (குறிப்பாக, பௌதீக விதிகள் அனைத்தையும் மறுதலித்த கதாநாயகன் அந்தரத்திலிருந்து குதித்துக்குதித்து குத்துகையில், சந்தைகளிற் உடைவதெற்கென்றே காத்திருக்கும் மண்குடங்கள், மரக்கறிவண்டிகள் என்பற்றில் விழுந்து நொருக்கும் கெட்டவனின்) சகல குணவியல்புகளும் அதனுள் அடக்கம்; அதற்கு என்னைப் பிடிக்காததால், கொசுவைப் பிடிக்கவில்லை அல்லது கொசுவைப் பிடிக்காததால், என்னைப் பிடிக்கவில்லை என்பது மற்ற வாக்கியம். அதனது பற்கடி எனக்கும், எனது கல்லடி அதற்கும், வகை தொட்டு வலி வரைக்கும் முதலாம் வாய்ப்பாடு மாதிரி. என் ஞாபகசக்தி இன்றைக்கும் சரியாகத் தொழிற்படுகின்றது என நம்பிக் கொண்டால், 'கடிப்பவை, நாய்களோ, நரர்களோ முதற்கடியிலேயே வாழ்க்கைக்கும் அவர்களை வெறுக்கும் இயல்பினை என்னுள் அனுபவத்தூடாகத் திணித்த பெருமையை ரொமி எவரோடும் பங்குபோடவிடாமல் நெடுங்காலம் தன் பற்களிற் கவ்விக் காவி வைத்திருந்தது' என்பதாய் நினைக்கின்றேன், ரொமியோடு ஏதாவது கண்முறைப்புத் தொடக்கம் காலுதைப்பு வரையுமாகத் தொடர்புபடாமல், தெருநாய்களின் எல்லையை நான் கடந்து வந்த நாட்கள் முற்றாக இல்லை - முறைப்பும் உதைப்பும் அன்றன்றைய எம்மிருவர் மனநிலைக்கு ஏற்ப வேறுபட்டிருக்கும் என்பதைத் தவிர. போகும் ஏதாவது நாய் கடித்தோ, வாகனம் உடல் ஏறியோ, இல்லை நகரசபை நாய்வண்டி உள்ளே ஏற்றியோ என் கண் முன்னாலேயே அ·து அற்றுப்போயிருக்க வேண்டும் என்பதே என் பரீட்சைப்புள்ளிகளுக்கான கடவுளுடனான பேரம் பேசலினைக்கூடச் சமயாசமயங்களில் இரண்டாம் நிலைக்குத் தள்ளிவைத்த லயப்பிராத்தனைகளாக இருந்திருக்கின்றன. அ·து என்னை வேதனைப்படுத்தி வம்புக்கிழுப்பதற்காகவே சும்மா பந்து வி¨ளையாடப் போய்க்கொண்டிருக்கும் என் முன்னே அதிகம் கொசுவை வம்புக்கிழுத்துக் கடித்து வைப்பதாகப்பட்டது. சைவமுட்டை+இலைகுழைக் கூட்டுக்கு முன்னாலான கொசுவுக்கான - மேற்தட்டை வேறு வேறு நாய் என்று நம்பவைக்கும் முயற்சியின் பேரிலான- என் கை+வாய் ஒப்பனைத்திறனுக்கும் மிஞ்சி, பலமுறை "ஏன் ரொமியூடாக வைரவரின் புண்ணியம் கிடைக்கக்கூடாது?" என்று மேற்தட்டு அக்கலாய்த்திருக்கின்றது. னாலும் அப்படியான அங்கலாய்ப்புக்கள் அல்லது ஆளும்வர்க்கத்தின் விருப்புத்தேர்வு வாக்குகள் பிரயோகிக்கப்படலாம் என்றான சமயங்களில், என் ஏதாவது ஒரு காலில் (அல்லது இரண்டு கால்களிலுமே, நிலைமையின் தீவிரத்துக்கேற்ப தொடை, கைகள், கழுத்து, மூக்கு என்றும் பரவக்கூடும் என்பதையும் அறியத் தருவது என் கடமை) உள்ள காற்பந்துக்காயங்கள், மரமேறு உரசல்கள் எல்லாவற்றுக்கும் ரொமி திட்டு வாங்கவைக்கும் விதத்தில் வாக்குமூலம் அளிப்பது என் கடமை என்பதாய் மனச்சாட்சி குத்திச் சொல்ல உணர்ந்து செயற்பட்டிருக்கின்றேன்.

#######################

ஆனால்,
உதைத்து விட்டு,
வீட்டுக்குப் போய்,
மூலைச்சுவரில்
சக்கரவண்டி சாத்துகையில்,
மௌனத்தில், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,
அந்தச் சில அப்பாவி நாய்களிடம்,
என் மதத்தின் மூர்க்கத்தின் மூலம்,
கடிவாளம் அற்ற காட்டு நாய்களின்
அப்பாவியிற் பல் பதிக்கும் அற்ப செயல்கள்
என்பதை எனக்குளேயே எடுத்துச் சொல்லி......

புரையோடிப்போன புண்களில்
புழு கொழுத்து அவதிப்படும்
அப்பாவி நாய்கள் அறியப்போவதில்லைத்தான்,
என் செயலின் அற்பத்தனத்தின் ஆதிமூலம்.

()()()()()()()()()()

உங்களைக் கனம் பண்ணுகின்றவர்கள் என்று நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொள்பவர்கள், உங்களைக் கண்டும் காணாமல் இருப்பது மனதுக்குச் சங்கடமானபோதும், அதைச் சமதட்டுகளுக்குக் காட்டிக் கொள்வது உங்களுக்கு அவமரியாதையாகும் என்பதை என் வீட்டு மேற்தட்டுக்களும் எல்லாவீட்டு மேற்தட்டுக்களும் சொற்படுத்தாது, - ஆனால்- செயற்படுத்தி ஏற்கனவே காட்டியிருப்பதால், கொசுவின் 'கண்டும் காணாத இருப்பி'ன் போக்கை நானும் கண்டும் காணாததுபோல திட்டமிட்டு அலட்சியப்படுத்தி, கூட வந்த இடைத்தட்டுக்களுக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும், முதல் ஞாயிறுகூட, அரை மணிநேரம் அலைந்து, தொடர்ந்து மூன்றாவது வாரமும் (ஆனால், இடையில் ஒரு வாரம் கிட்டே வந்து மேற்தட்டுகள் அடையாளம் காணத் துடிக்காத மாதிரிக்குச் சாக்கடைத்தீர்த்தம் அதற்குத் தெளித்து) வைரவசாந்திக்கு, என் வீட்டு முன் சந்நிதிக்குக் கொண்டுபோயிருந்தேன். வேறு உயர்வான முழுமாமிச வைரவவிருந்துக்காரனுக்கு வாடிக்கையாளன் ஆகிவிட்டதோ என்ற என் வாழ்வுக்கவலையும் வயிற்றெரிச்சல் வசப்பட்ட சினமும் அலட்சியப்படுத்தப்பட்ட அவமான உணர்ச்சியும் சேர நகர்ந்தவன், வீட்டுக்கு, சந்திமுனையில் ஒரு பொய்முகம் எடுத்துப் போட்டுக் கொண்டுபோய், அன்றைக்கு விளையாட்டுமைதானத்தில், இரண்டு ஓட்டங்கள் அடித்த நிலையில், போட்டவன் கைக்கே பந்தை அடித்து வெளியே போனவன் படவேண்டிய அளவுக்கு அதீதத்திலும் அதீதமாகவே மீறி ஆனந்தமயநிலையைச் சொரிந்து (¦)காட்டினேன்.

சொல்லப்போனால், இந்தச் சம்பவத்தில், எல்லாவற்றிலும்விட, மிக வெறுப்பாக இருந்த விடயம், ரொமியும் கொசுவும் அருகருகே குந்தியிருந்து, "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?" என்ற மௌனத்திலே ஒன்றை ஒன்று பார்த்திருந்து என்னை முறைப்பதாக இருந்ததே. ரொமி, காத்திரமான ஆத்திரப்பார்வைக்குள், கேலிப்புன்னகை பொதி கட்டி வேறு அனுப்பக் கற்றிருந்ததாய் வேறும் தெரியவந்தது. என்ன மனித-நாய் இடைப்பட்ட அந்நியோன்ய நட்பென்றாலும், தன் இனம் என்று வரும்போது, மனிதர் மனிதருடனேயே; நாய்கள் நாய்களுடனேயே என்று சொல்லும் சலித்துப்போன உவமை, 'இனம் இனத்தோடுதான்' உண்மையாகிப் போய் பள்ளித் தமிழ்ப்பாடத்திட்டங்களிலும் வாழ்க்கைக்குப் பயன்படும் அர்த்தமுள்ள விடயங்கள் இருப்பது காலநேரம் தெரியாமல் ஞாபகத்துக்கு வேறு வந்து தொலைத்தது. முகம் தெரியாத எதிரிகள் தொகை பத்தின் நேரடுக்குகளின் எண்ணிக்கையில் வலுத்தொடராக அதிகரிப்பதிலும்விட, நண்பர்கள் ஒற்றைப்படையாய்க்கூட எதிர்முகாம் போவது வேதனைக்குரியது.

மனமொத்த காதலும் அதைக் காட்டும் அன்புச்செயல்களில் மாற்றமில்லாவிடின், சலிப்புத் தரும் என்று வகுப்புப்புத்தகங்களுள் மறைத்துப் படித்த மஞ்சள் இலக்கியம் சொன்னதாய் ஒரு சின்ன ஞாபகம். அடுத்த ஞாயிறு, ஒரு சமாதானத்தூது போய் வந்து நட்பைப் பழுதுபார்ப்பது என்பதும் தூசு தட்டுவதென்பதும் அர்த்தமுள்ள செயலாகப்பட்டது. ஆனால், போனபோது, கண்ட மாத்திரத்தில், இரண்டும் ஒத்த இணைகளாய்க் குரைத்துத் துரத்த (அதிலும், கொசு, மிகவும் குதறும் கொலைத்தனம் உமிழ்நீர்ப்பையிருந்து ஒழுகி அதன் பற்களினைக் கோரப்படுத்த...), மற்றைய இடைத்தட்டுக்களில் நகைப்பினையும் பொருட்படுத்தாது, வீட்டுச்சமையலறை வரை நில்லாதோடிய ஓட்டத்துக்கு உயிர் தந்தது, அவமானாமல்ல; உயிரச்சமுமல்ல; நம்பிக்கைத்துரோகத்தின் அடியென்றே என் கருத்தாகி இருந்தது. மேற்தட்டு, முதல்முதலில் என் குரலுக்குப் பயந்து பயந்து பேசியது, அன்றைக்கே முதற்றடவை என்று எண்ணுகின்றேன்.

#######################

ஆனாலும்,
வெறி மிஞ்சிப்போனால்,
ஒரு நாள்,
கடி விலங்குகள்
என் கைத்துப்பாக்கிக்குண்டுகட்கு,
தம் நெற்றிப்பொட்டில்
திலகம் வைத்துச் செத்துச் சாய்கையிலே,
முட நாய்கள் அறியும்,
என் மூர்க்கம்,
முற்றிலும் பிறழ்ந்ததல்லவென்று.


()()()()()()()()()()

அதற்கடுத்த ஞாயிறு வரமுன்பு, செவ்வாயோ புதனோ, ஒருநாள் கொசுவுக்கு வெறி என்று ஊருக்குச் பேச்சு. இரண்டு மூன்று பேரைக் கடித்ததாய்ச் சொன்னார்கள். முடிதிருத்துநிலைய மொட்டைத்தலையர்கள் தொடக்கம் வீட்டு மேற்தட்டுவரைக்கும் எல்லோரும் தங்களுக்கு சாதுக்கொசு இப்படி வெறிக்கொசுவாகும் என்பது முன்னமே எந்தவளவுக்கு ஊகிக்கக்கூடிதாக இருந்தது என்று -தரவு சேகரிக்கப்பட்ட நேரத்தொடர் நிகழ்வுகளுக்கு, அவசியம் செத்த காலந்தாழ்த்திய எதிர்வுகூறல்- சொல்லி, தங்களின் முதுகுகளைத் தாங்களே தட்டமுயற்சித்து, மற்றைய சொந்த முதுகுதட்டிகள் வாரிவிட்டதாற் தோற்றும் ஒத்துக் கொள்ளாமல், திரும்பவும் தன் முயற்சியிற் தளரா விக்கிரமாதித்தன்களாவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அப்பாவிகள் மட்டுமே மேலும் தலையிற் குட்டப்படுவதாகப்பட்டது. நல்லவை என்பதற்கு, இயல்பில் நீதி பிறழ்ந்த உலகில், நெறியென்று சொல்லப்பட்டதோடு வாழப்போராடித் தோற்றுப்போகின்றவை என்பதே வரைவிலக்கணமாக -எப்போதாவது ஓர் ஒழுங்கான என் மொழி அகராதி யாராலும் தொகுக்கப்பட்டால், கோப்பாளர்கள் சொல்லிவைக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கையை- என் விஞ்ஞானப்புத்தகத்தின் இல்லாத கடைசிப்பக்கத்திற்கு முன்பக்கத்திற் 2HB எழுதுகோலால் எழுதிவைத்த ஞாபகம். தாய்நாயோ, தந்தைநாயோ, எதுவாயினும் இப்போது கவலைப்படக்கூடுமோ என்ற ஓர் அநாவசியச் சந்தேகம் வேறு எழுந்தது. கடந்தகாலங்களில் உப்புச்சப்பில்லை என்று நினைத்த அதனுடனான தொடர்பு ஒவ்வொன்றிற்கும், குறைந்தபட்சம் ஏதோவோர் அர்த்தம் உணர்வு அளவில் எழுந்ததாய்ப்பட்டது. கூடவே, ஏன் இந்த வெறி, ஏற்கனவே தன் நாள்நாய்ச்செயலளவில் நடைமுறைப்படுத்தும் ரொமிக்குப் பிடித்திருக்கக்கூடாது என்று தீயவற்றின் பிரதிநிதி என நான் கருதியதன்மீது, ஒரு கையாலாகாத ஆத்திரம், விடை தேவைப்படா வினாவாகவும் அநீதியாக எழுந்தது.

மற்றையநாள், வீரனைச் சுட்டு நகரசபைநாய் வண்டியுட் போடுக் கொண்டுபோனதைப் பார்க்க மற்றவர்களுடன் நான் போகாததற்குக் காரணம், நான் அழுவதை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடுமோ என்று வெட்கப்படுவதாக கீழ்த்தட்டு எண்ணிக்கொண்டது; காப்பாளன் இல்லாததால், இனி ரொமியைக் கண்டால், முற்றாகவே அஞ்சிக் கட்டைக்காற்சட்டையில் மூத்திரம் பெய்துவிடுவேன் என்று அனைத்துமறிந்ததாக அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கும் மேற்தட்டு, நானறியாமற் தமக்குட் சொல்லிக் கொண்டோமெனத் தம்முட் திருப்திப்பட்டுக்கொண்டு, ஒரு எச்சில்நாய்க்கான பார்வைப்பரிதாபம் எனக்காய், ஆளுக்கொன்று (சமையலறைக்குள் ஒன்று, சாய்வுநாற்காலிக்குள் மற்றொன்று) எறிந்துபோனது. எனக்கென்றால், கண்ணுக்கு முன் இறக்காத ஒன்று எங்கேயோ இன்னமும் தற்காலிகமாகப் பிரிந்திருப்பதாக எண்ணி -அறிவுபூர்வ முட்டாற்றனத்துடனெனினும்- உணர்வுபூர்வமாக வேதனை குறைந்திருக்கலாம் என்பதே என் செயலுக்கான என் காரணமாகத் தெரிந்தது.

#######################

நாய்கட்கும் நீதி கேட்கும் நியாயம் உண்டு என்பதுபோல்
என் நியாயம் புரியும் பக்குவமும் நெஞ்சிருக்கும் என்ற நம்பிக்கை.
அவற்றிற்குத் தெரியும்,
கடி நாய்க்கும் முடநாய்க்கும் உள்ளே பல்பேதமிருந்தாலும்,
இல்லை, வெளித்தூங்கு நீள்மூஞ்சியில்
ஏதும் பாடபேதமென்று.

முட நாய்கள்,
என் மூர்க்கத்தைப் புரிந்து கொள்ளமட்டுமே
என் இன்றைய காலைப் பிராத்தனை,
கடிநாய்கள் என் காலைப் பதம் பார்க்கத்தொடங்கிய
காலம் தொட்ட காலைகள் எல்லாம் போல.

()()()()()()()()()()

ஆனாலும், அடுத்து வந்த நாட்களில் அந்தவீதியை எக்காரணம் கொண்டும் நான் உபயோகப்படுத்த மறுத்திருந்தேன். பிறகு வரும் ஞாயிறுகளில், வைரவவிருந்துக்கு நாய் தேடப்போக என்னை எவரும் அழைக்கவில்லை; எனக்கும் என்னை அழைத்துவிடுவார்களோ என்பதே பெரிய பயமாக இருந்தது.

இரண்டு மாதங்களின்பின் எதேச்சையாக இன்னொரு வீதியில், என் துவிச்சக்கரவண்டியின் முன்னே குறுக்கே ரொமி ஓடக்கண்டேன். ஆனால், அ·து என்னைத் துரத்தமுயலவில்லை. எனக்கும் அதற்கு எட்டி உதைக்கவேண்டும் என்றுபடவில்லை. (இருவரும்) திரும்பிப் பார்க்க, இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன, எதிர்பாராத சந்திப்பெனிலும், இளைத்திருந்த அதன் விழிகளில் எதையோ தொலைத்திருந்த வெறுமை; என் கண்களும் அதன் சிந்தைக்கு அப்படித்தான் பட்டது போலும்; தான் ஓடுவதாற்றான் ஓடுவதுபோலத் தோன்றும்படி, மெதுவாக வாலை ஆட்டிய உணர்வு. வண்டி மணியை எனக்கு முன்னே போகாத கிழவியொருத்திக்குப் பாதையோரத்தை ஞாபகப்படுத்த நானும் அடித்துவைத்தேன், என் பங்கு சரியாக இருக்கவேண்டும் என்ற நேர்மையான உணர்விலும் கவனத்திலும்.

அடுத்த ஞாயிறுக்கு டசின் கண்ணாடிக்குண்டுகளுக்கோ, தங்கமீன் இணைக்கோ பேரம்பேசாமல், எவரும் வேண்டுகோள் விடுக்காமலே, "நானே வைரவவிருந்துக்கு நாய் தேடிப்பிடித்து வருகின்றேன்" என்று புறப்பட, புதிதாக தொழில் பெற்ற கீழ்மட்டம் தன் பஞ்சுமிட்டாய் வயிற்றிலடித்ததாய், 'வீட்டுவழமையை' முன்னிறுத்தி ஆட்சேபித்து, ஆர்ப்பாட்டம் பண்ணியது; மேல்மட்டம், என் புத்திசுவாதீனத்திற் சந்தேகப்பட்டதாய்த் தெரிந்தது. அரைமணிநேரம் கழித்து, ரொமியுடன் வந்து, தனக்கான கூலியைக் கீழ்மட்டத்துக்குக் கையுறையாகக் கொடுக்கும்படி மேல்மட்டத்திடம் தாழ்மையாக விண்ணப்பித்துவிட்டு, சாதுவாக சைவமுட்டை கலக்காமலே, இலைகுழைச்சோறு சாப்பிடும் ரொமியை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் புத்திசுவாதீனத்தின் சமநிலையைக் கீழ்மட்டமும் சந்தேகித்தது மிகவும் தெளிவாக முகங்களிற் தெரிந்தது; உதவி மேல்மட்டம், அதியுயர்மேல்மட்டத்திடம், "இடைமட்டத்துக்கு வைரவபூசை ஒன்று பண்ணி, நூல் மந்திரித்துக்கட்டவேண்டும்" என்று மிகக்கவலையாகச் சிபார்சு பண்ணி அங்கலாய்த்து, மேற்கொண்ட செயலுக்கு அடுக்குப்பண்ணிக் கொண்டிருந்தது.

இடைமட்டம், தான் கூர்ப்புத்தாவரத்தின், இதுவரையில்லாத ஒரு மேற்மட்டப் புதுக்கிளையினைத் துளிர்ப்புப்பண்ணிப் பூப்பெய்தியதாக உணர்ந்து கொண்டது.


'99, பெப்ருவரி, 13, சனி 22:52 மநிநே

No comments: