Saturday, January 28, 2017

உணராதான் சோர்ந்தழிவெய்திடுவான்

தை 25 19:05 கிநிநே



நேற்றிரவுவரை ஈழத்திலே காணாமற்போனவர்களுக்காக உண்ணாவிரதம் வட ஈழத்திலே இருக்கின்றாரென்றது பற்றிய செய்தி நானறிய சமூகவலைத்தளங்களிலே வரவில்லை. அதன் பிறகுதான் வரத்தொடங்கியது.


இன்று சல்லிக்கட்டுக்கு ஆதவளித்தவர் இதற்கேன் ஆதரவளிக்கவில்லை என்பது முதல் தமிழ்நாட்டுச்சல்லிக்கட்டுக்கு நாம் ஆதரவளித்தோமே அவர்கள் இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தரவில்லையே பார்க்கவில்லையா என்பது போன்ற சில கருத்துகள் ஏற்கனவே பேஸ்புக்கிலே சிலராலே வெளிப்படுகின்றன,


இதன் உள்ளரசியல் புரிந்து கொள்ளமுடியாததல்ல.ஆண்டாண்டுக்குக் காட்சியாத்திரைபோய் குடுமிக்கும் கர்ணலுக்கும் வெகுமானத்தோடு கால்கழுவிக்கொண்டே இப்படியான கேள்வியைக் கேட்கின்றவர்கள் ஒரு பக்கமென்றால், சல்லிக்கட்டு மாணவர்களை உசுப்பிவிடுகின்றார்கள் என்று சொல்லிவிட்டுச் சாகும்வரை உண்ணாவிரதத்தை உசுப்பிக்கொண்டிருப்பவர்கள் மறுபக்கம். தமிழ்நாட்டுக்காக அங்கிராது உணர்ச்சிவசப்பட்ட தமிழ்த்தேசியத்தைச் சல்லிக்கட்டிலே வறுத்தெடுத்தவர்கள் ஈழத்தி... அதாவது ஶ்ரீலங்காவிலிருந்தும் உண்ணாவிரதம் பற்றி எக்கருத்தையும் தெரிவிக்கவில்லை; ஆனால், ஆசான்போல, எல்லாம் நடந்துமுடிந்தபின்னாலே, ஆறுதலாக காண்டாவனத்திலே புதிதாக வரிகள் புனைந்து ஆய்வுக்கட்டுரை வரைவார்களென நம்பலாம்.


இங்கே சல்லிக்கட்டுக்கும் காணாமற்போனோருக்கும் போட்டியை வைப்பதிலும் முரணை ஏற்படுத்துவதிலும் மிகவும் மும்முரமாக நிற்கின்றார்கள். இரண்டு புறங்களும் ஒத்த நிலைமைதாம் உண்டு. கடைசியிலே உண்ணாவிரதத்தைக் குழப்புவதிலும் இதே முடிவினையில்லாவிட்டாலுங்கூட, சத்தமின்றிக் கழுத்தைப் பிடித்து நெருக்கும் அழுத்தத்தைக் கொடுத்தலே நடக்கப்போகின்றது. தமிழ்நாட்டின் சல்லிகட்டிலும்விட, ஈழத்தின் காணாமற்போனோரின் பிரச்சனை நிலையின் தீவிரத்தன்மையையும் உள்ளத்துக்கு அண்மித்தவகையிலும் எந்த ஈழத்தவருக்கும் மிகவும் நெருக்கமானது. ஆனால், சல்லிக்கட்டினையும் இதனையும் போட்டிக்கு விடுகின்றவர்களின் அரசியல் மிகவும் தெளிவானது; இயன்றவரை பரந்துபட்ட தமிழ் சார்ந்த நெருக்கமாதலையும் ஒன்றுபடுதலையும் தடுத்தாட்கொல்தல்.


இரு நாட்களின் முன்னாலே சல்லிக்கட்டுப்போராட்டம் முடிக்கப்பட்ட விதமும் அதனை முடிக்க, தமிழக|இந்திய ஆட்சிக்கூட்டாளிகளும் அவர்களின் எண்ணெய்விடப்பட்ட சட்ட, ஒழுங்கு எந்திரங்களும் காட்டிய காரணங்களிலே மிகவும் வெளிப்படையானது, தமிழ்த்தேசியம். மெரினாக்கடற்கரையிலோ கடலிலோ மாணவர்களைத் தமிழக அரசு எந்திரம் அடித்து நொருக்கும்போது, தாங்கிய பதாகைகளிலே விழித்திருந்து கனவுகாணச் சொன்ன அப்துல் கலாம் முகம் தொங்கியபோதுங்கூட, பிரபாகரனின் படங்களையே பேரிந்திய -குறிப்பாக வடநாட்டு ஆங்கில -ஊடகங்கள் முன்னமே தெளிவாகத் தேர்ந்தெடுத்துப் பரப்பிக் காட்டின; ஆதரவு கொடுத்துப் பின்னால், ஒதுங்கிக்கொண்ட பிர|றபலங்களும் சுற்றிவளைத்துத் தமிழ்த்தேசியம் பேசும் சில அமைப்புகளையும் சேர்த்தே தாக்கின(ர்). இரண்டு நாட்களுக்கு முன்னாலான இந்த அலை தணிய முன்னாலே, பெருவிளைவினைக் காணவிடாத புகை மறையமுன்னாலே, காணமற்போன ஈழத்தமிழருக்கான சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்துக்கு ஆதரவு தராத தமிழக -ஈழத்தின்பால் கரிசனையுள்ள-மக்களை உரசிப்பார்ப்பது, உள்ளரசியல் இல்லாது வேறென்ன? இத்தனைக்கும் புலம்பெயர் ஈழத்தமிழருக்கே நேற்றிரவுதான் செய்தியை வாசித்து, இப்படியாக உண்ணாவிரதம் தொடங்கியிருப்பது தெரிகின்றது. தொடங்கியவர் யார், ஆதரவு தருகின்றவர் யார், முன்வைத்த கோரிக்கைகள் என்ன என்பனகூட இன்னும் முழுமையாக என் போன்ற புலம்பெயர்ந்த & சமுகவலைத்தளங்களிலே குந்தியிருக்கும் ஈழத்தமிழருக்கே தெரியவில்லை. இந்நிலையிலே, சிதறுண்டு இன்னும் சுதாகரித்துக்கொள்ளாத தமிழக இளைஞர்களைப் பார்த்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகப் போராடவில்லை என்று கேட்பது திட்டமிட்ட கள்ளத்தனமே!


அதிலும் இப்படியாகக் குற்றம் சாட்டும் சிலர், அண்மைக்காலத்திலே ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்துக் குளிர்காய்கின்றவர்கள் என்று அதே தமிழகத்தின் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களையும் உசுப்பிவிட்டுக்கொண்டிருக்கின்றவர்கள் என்று சக புலம்பெயர் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களையும் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தவர்களே! இன்னும் சிலர் நடப்புகளிலும் தேர்ந்தெடுத்து, சிலவற்றை ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் என்பதாகவும் மற்றையவற்றைப் பாசிசத்தை முன்னெடுக்கும் உணர்ச்சிமயப்பட்ட வெறித்தனமென்றும் என்பதாகவும் தம்நிலை சார்ந்து அடையாளப்படுத்தி, அட்டவணைவேறு வகுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.


இரு துயர்களிடையே நீரடித்துப் பிளக்கும் துல்லிய கணிப்போடு போட்டி வைத்துப் பார்த்து மக்களிடம் "ஒன்றைத் தேர்ந்தெடு, மற்றதை மறுதலி" என்று உணர்ச்சிசார்பயமுறுத்தல் செய்வது, "ஓர்ந்திடு சாத்திரப் போர்தனில், உணர்ந்தவன் வென்றிட, உணராதான்
சோர்ந்தழி வெய்திடுவான்" என்று சகுனி தருமனை அழைத்த சூதாட்டமின்றி வேறேன்ன?


ஒட்டவும் சதையில்லாது மிஞ்சின எலும்புக்குத்தான் எத்தனை கழுதைப்புலிகளும் அரிவாள்களும்!

No comments: