Tuesday, November 18, 2008

என் சூப்பின மாங்காய்த்தலையின் இன்றைய எரிச்சல்களும் இயலாமைகளும்

பதின்மவயதுச்சுயதிருப்திக்கு ஈடானதாக நாகார்ஜுனனின் இடுகையொன்றும் ராஜநாயஹத்தின் சில இடுகைகளும் எனக்கு; ஓரத்திலே மகிழ்ச்சியைத் தரும் குற்றவுணர்வு அல்லது ஓரத்திலே குற்றவுணர்வைத் தரும் மகிழ்ச்சி - முழுகியபின்னால், காதை, காதுப்பறையிலே இடிக்கும்படி 'பின்'னாலே குடைந்து நீரெடுப்பதுபோல், பல்லிடுக்கை இரத்தம் வரக் குத்தி தேங்காய்ப்பூத்துண்டை, இறைச்சிச்சிதம்பை எடுப்பதுபோல்.

நாகார்ஜுனனின் குறிப்பிட்ட இடுகையும் பின்னூட்டங்களும், இதுவரை காணாத -நடைமுறை அரசியல், உணர்வுநிலையுந்தல் தவிர்த்த - தத்துவவழியான பார்வையிலே இன்றைய ஈழநிலை தொடர்பான தமிழக அரசியலை (கவனிக்க - ஈழ அரசியலை அல்ல) ஆய்கின்றன. பூக்கோ தொடக்கம் பல நவீன தத்துவ லம்பாடிகளின் ஆதிக்குரல்கள் தொடர்பான கருத்துகள் அநாசயமாக ஆயப்படுகின்றன; நிறைய அறிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கின்றது. இவ்விவாதத்திலே அல்லது பதிவுரையாடலிலே பங்குபற்றுகின்றவர்களைக் கவனிப்பின், அவர்கள் வெறுமனே பேச்சிலும் எழுத்திலும்மட்டும் நின்றுவிட்டிருந்த ("நின்றுவிடும்" என்று சொன்னேனா? ;-)) ஆட்களில்லை. காயாத பதிவுலகத்திலே தேய்ந்தாலும் பழைய பட்டுக்கோட்டை பாணிப்பாட்டுத்தத்துவத்தட்டைப் போடும் ரயாகரன், சிறீரங்கன் இவர்களிலிருந்து இவ்வுரையாடல் வித்தியாசமான பார்வையைத்/பார்வைகளைத் தருவது பொறுமையுடன் வாசிக்கும்போது பிடித்துக்கொள்கிறது.

ஆனால், இம்மகிழ்ச்சியின் ஓரத்திலேயுண்டாகும் குற்றவுணர்வு என்னவென்றால், இன்றைக்கு ஈழத்திலிருக்கும் நிகழ்நிலையைக் குறித்து, அதன் அரசியலிலே நிகழ்க்கூடிய தன்மையைக் குறித்தோ நாகார்ஜுனனும் தமிழவனும் ராஜன்குறையும் வளர்மதியும் ஜமாலனும் தமிழகத்திலே பரபரப்பான திராவிட+பார்ப்பன சண்டை/சாதி ஊடகங்களுக்கப்பால் எடுத்து ஓர் அறிவுநிலைசார்கருத்துப்பரம்பலைச் செய்யமுடியாதிருப்பதைக்/செய்யாதிருப்பதைக் கண்டும் கேட்கமுடியவில்லையே என்பதுதான்; எவ்வுரிமையோடு கேட்பது என்பதை எனக்கே ஒரு சாட்டாகச் சொல்லி ஒத்தடமும் களிம்பும் போட்டுக்கொள்ளலாம். இவர்கள் இதைவிடவும் மேலாகச் செய்யமுடியுமென்று - புலிகள்/மாற்றுயியக்கங்கள் சரியா தவறா என்று தம் கருத்தினை முன்வைப்பதுட்பட- தோன்றுகிறது. இவர்களிலிருந்து மிகவும் இளையர்களான அந்நியனுக்கும் ஹரிக்கும் வாய்க்காத தமிழரசியலின் விளைவான தம்முயிரிருத்தல் பற்றிய அச்சமின்மை இவர்களுக்கு வாய்த்திருக்கின்றது. இந்து பற்றி சிறப்பாக நாகர்ஜுனன் ஒரு பந்தியிலும் தமிழவன் ஒரு பத்தியிலும் கட்டுடைத்திருந்தார்கள். இவை எதற்காக எம். எஸ். எஸ். பாண்டியன் எழுவதுபோல ஆங்கிலத்திலே பரந்துபடவும் வாசிக்க வரமுடியாது? ஈழநடைமுறையின் நிலையினை, "ஈழநிலைப்பாடு=பயங்கரவாதம்" என்ற மாயாபஜார்பேஜாரிலிருந்து ஒரு சிலரேனும் விலகி விளங்கிக்கொள்ள உதவுமல்லவா? நிச்சயமாக, இவர்கள் தமிழிலே எழுதும் இக்குறிப்பிட்ட இடுகை, சிறப்பானதாக இன்னும் தொடர்ந்து வளரின் விற்பனை நோக்கிலே எடுத்து, "பொஸ்தகம்" போட வணிகநோக்குள்ள பதிப்பாளர்கள் முன்வரலாம். படித்த மத்திய தட்டு இளைஞர்களிடையே, "கட்டுடைப்பு, பூக்கோ" போன்ற திறவுச்சொற்கோவையெல்லாம் சுயதிருப்திக்காக விற்பனையாகுமென்பதை நூல்பிடித்தறிந்த பதிப்பகங்களுள்ளன. ஆனால், தத்துவங்களைத் தத்துவங்களாகக் காண்பதற்கப்பால், ஏதேனும் நடைமுறைப்பயனாக விளையாதா?

சத்தியக்கடதாசிகள், சி. புஸ்பராஜாவின் நூலிலிருந்து (மட்டும்) தெளிவான ஈழவரலாற்றை ராஜன்குறை தேடுவது என்னைப்போன்றவர்களுக்கு உவப்பில்லாதபோதுடினாலுங்கூட, ராஜன்குறைக்கு இவை பற்றி நடைமுறை சார தத்துவத்தினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று அடுக்குமாடித்தத்துவக்கட்டடம் கட்டுவதற்கப்பாலுங்கூட, ஏதேனும் நடைமுறை சார எழுதமுடியாதா? ஜெயமோகன் - மார்க்ஸ் எழுத்துயுத்தத்திலே துணைக்காலாட்படை, போர்விமர்சகர் போன்ற பாதுகாப்பான நிலைப்பாடுகளிலே களம்கட்டியிருந்து புலன்விசாரணை செய்வதிலேயிருக்கும் சமூகப்போராட்டத்திருப்தியும் தனியாளிருப்பின் பாதுகாப்பும் ஈழம் பற்றி விமர்சிக்கும்போது இவர்களுக்கு வருவதில்லை என்பதாலேயா? இந்துவினதும் பொதுவாகவே இந்திய ஆங்கில ஊடங்களினதும் ஈழம் தொடர்பான, "ஈராக்கியப்போரின் ஆரம்பநிலையிலான அமெரிக்க ஊடங்களின் நிலைப்பாடு" வகைச்செயற்பாடுகளை எதற்காக ஆங்கிலவழி உரைக்க-உணரக்கூடிய சக இந்தியர்கள் & அகிலத்தவர்கள் இடையே உடைத்துக் காட்டமுடியவில்லை? இதை அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாகச் சொல்லவில்லை; தத்துவம் சார் சமூகவரசியலாளர்களிலே ஏற்படும் ஒரு வகையான ஏமாற்றத்தின் விளைவாகவே கூறுகிறேன். வரள்வெளி விழாத+விடாத தொடர்ச்சியான தத்துவவளர்ச்சி என்பது தேவைதான்; ஆனால், தத்துவவளர்ச்சி மட்டுமே சமூகத்தைத் தாக்குப்பிடித்து நிறுத்துமா? நிறுத்துமென்றால், ஜெயமோகனின் அக்கார அடிசில்லுப்புராணங்களே இந்தூயசமூகத்திற்கு இக்காலகட்டத்தே வண்டியோட்டப் போதுமானவை.

******
என்றாலுங்கூட, தனிப்பட்ட விருப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் ஓரத்திலே குற்றவுணர்வைத் தரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இவர்கள், ஓரத்திலே மகிழ்ச்சியைத் தரும் குற்றவுணர்வினை விளைவாக்கும் கீழே வருகின்றவரிலும்விடப் பரவாயில்லை என்பது உண்மையே

*****

துணுக்குத்தோரணங்களிலே, அதுவும் குறிப்பாக, இலக்கியத்துணுக்குத்தோரணங்களிலே எனக்கு ஆர்வமுண்டு; காரணம், இழவுக்காவியம் படைக்கமுடியாவிடினும், இந்த 'ராஜாஜிக்கு ஒரு தும்பிக்கை' & 'லோஸாவுக்கு சிறு தொந்திப்பை' வகையான 'டிட்பிற்ஸ்' சேர்த்துவைத்தால், உதிர்க்குமிடங்களைப் பொறுத்து என்னையும் இழக்கியவாலியாக்கிவிடும். அவ்வகையிலே மகிழ்ச்சி ஓரங்கட்ட குற்றவுணர்வோடு(ம்) ராஜநாயஹத்தின் பதிவுகளை விடாது வாசித்துப் இலக்கியச்சோளப்பொரி சேர்ப்பவன் நான்.

ராஜநாயஹம், ஹிட்லரின் யூதர் குறித்த நிலைப்பாட்டினையும் திராவிட இயக்கங்களின் "பார்ப்பான் ≥ பாம்பு" என்ற நிலைப்பாட்டினையும் பாசிசச்சரியாசனம் வைத்ததிலே எனக்கும் மிகவும் உடன்பாடே. ("இழவு எடுத்தெல்லாம் இங்கே பார் பார்ப்பான்" என்ற பகுத்தறிவற்ற தமிழ் ஓவியா பதிவு, சிந்திக்க சில உண்மைகள் பதிவு என்பன இத்தகையன. இவற்றுக்கெதிரான பார்ப்பனியப்பாசிசப்பதிவுகளையும் இலகுவிலே பட்டியலிடலாம். ஆனால், இங்கே நோக்கம் அதுவல்ல. இன்றைய காலகட்டத்திலே, உலகம் பார்ப்பனியம்.எதிர்.திராவிடம் என்ற எளிதான இருநிலைச்சுழியுள்ளே ஒடுங்கி அடங்கவில்லை என்பதிலே திடமான நம்பிக்கையுள்ளவன் நான்.)

அண்மைக்காலம்வரை ஜெயமோகனை அடிக்க காலச்சுவடு உசுப்பேத்திவிடும் அடியாள் என்ற அபிப்பிராய அறியாமை மட்டுமே இவரைப் பற்றி எனக்கு இருந்ததென்பதற்கு, இவரை முதலிலே அறிய நேர்ந்த இவரது இலக்கியபத்தி+பக்தி எழுத்துகளும் காரணம். அப்படியான தப்பபிப்பிராயம்மட்டும் இப்போது மாறவில்லை; இவரை எதிர்_ஜெயமோகன் கருத்துப்பிம்பவடையாளமாக வைத்திருந்தது(ம்) மாறி, மாற்று_ஜெயமோகன்(_would be) கருத்துப்பிம்பவடையாளமாக மாற்றிக்கொண்டுவிட்டேன்; இலக்கியமென்பது உருகிப்பருகி ஆனந்திக்கமட்டுமே என்ற அமுதகலசமதுவந்திகளாக இரண்டுபேரும் தோன்றுகின்றார்கள். பக்கத்துவீட்டிலே பத்துப்பேரை வெட்டிப்போட்டாலுங்கூட, 'மௌனியின் யாளி சுழித்ததா? கோணங்கியின் பாழி குளித்ததா?' என்று மட்டும் குறிப்பே(ண்)டு வைப்பவர்களே அசல் இலக்கியக்காரர்கள். (முக்கால்வாசி இலக்கியக்காரர்கள், 'இந்தச்சாதிவெறியர்களை வெட்டிப்போடணும் சார்' என்று ஒரு ப்ரேக் லைன் பதிவிட்டுவிட்டு, வழக்கமான புரோக்ராம் ஷெட்யூலிலே, ஆப்கானிய நாவல், அல்பேனியத்திரைப்படம் என்று நகர்ந்துவிடுகிறவர்கள் என்பதாக உய்த்தறிவு)

இதெல்லாம் ராஜநாயஹத்தின் சொந்த அபிப்பிராயங்களென்பதாலேயும் சுயவிருப்புகளென்பதாலேயும் எனக்கேதும் அவரின் பிடில் வாசிப்பிலே கருத்துமறுக்க இடமில்லை.

ஆனால், அவரின், "பாரதி துவங்கி குபரா , பிச்சமூர்த்தி , மௌனி , க நா சு , சிட்டி , சி சு செல்லப்பா , லா ச ரா , தி .ஜானகிராமன் , கரிச்சான்குஞ்சு ,சுந்தர ராமசாமி , நகுலன் ,அசோகமித்திரன் , இந்திரா பார்த்த சாரதி, ஆதவன் போன்ற பிராமணர்கள் தான் எனக்கு புனிதர்கள்" என்ற புனிதப்பட்டியல் வியப்பூட்டுகின்றது.

மேலே சொல்லியிருக்கும் பட்டியலிலே இருக்கும் மனிதர்களிலே எத்தனை பேர் குறைந்தளவு ஒரு சந்தர்ப்பத்திலேனுங்கூட, தாம் பிராமணர்கள் என்பதைப் பூணூல் உருட்டிக்காட்டாமலிருந்தார்கள் என்பதைக் கொஞ்சம் சொல்வாரா?

நாளாந்த துயர, வேதனையான & ஆத்திரமூட்டும் நெறியற்ற நிலைகள் பற்றிய செய்திகளிடையே இவரது தாமரையிலைத்தண்ணீர்போன்ற இலக்கியத்துணுக்குச்சரங்கள் செய்தித்தேங்காய்ச்சொட்டுகள் சேகரிக்கும் அற்பசந்தோஷத்துக்கப்பால் எனக்கு ஈடுபாடு தருவதில்லை. நிகழ்வாழ்க்கையிலே அடுத்தவீட்டுக்காரன் சொட்டும் ஒரு துளி இரத்தத்தினைப் பற்றி ஒரு சொல் உதிர்க்கமுடியாதவர்களெல்லாம் கற்பனை ரத்த உறவுகளினைப் பற்றிப் பேசும்போது, இருந்து முழுதாகக் கேட்கவோ ஓடிக்கொண்டு ஓரிரு வார்த்தைகளைப் போட்டுக்கொள்ளவோ தாளுவதில்லை. ஆனால், இப்பட்டியலிடுகை அவரது சொந்தப்புனிதர்வரிசையானாலுங்கூட, மறையாக ஈர்த்து எரிச்சலூட்டுகிறது.

மேலே கூறிய பட்டியலிலே உள்ளவர்களிலே எத்தனை பேர் பூணூலை - குறைந்தது ஒரு சந்தர்ப்பத்திலாவது - பெருமையுடனோ, பிழைப்புக்காகவோ பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார்கள் / தொங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவரே அறிவாரெனத் திடமாக நம்புகிறேன்; ஏன் அவரைப்போல வாசிப்புவிலாசமற்ற எனைப் போன்ற கரிஞ்சகுஞ்சான்கள்கூட அறிவார்கள். அதனால், பட்டியலிடும்போது, ஓரளவுக்கேனும் இடுகையை வாசிக்கின்றவர்களின் அறிதற்றிறனைக் குறைத்து மதிப்பிடாமல், அவர் இடமுடியாதா? வேண்டுமானால், பதிலுக்கு நான் பட்டியலிடப்பட்ட புனிதர் சிலரின் பார்ப்பனியம்பிடித்துத்தொங்குபுதினங்களைப் பறித்துப் பதிவாகப் போட்டு புண்ணியம் தேய்த்துக் கொல்லலாம்.

ஆனால், இதைச் செய்தால், ஜெயமோகன்களுக்கும் மாற்று_ஜெயமோகன்களுக்கும் மாற்று_மாற்று_ஜெகன்மோடிகளாக நானோ என்னைப் போன்றவர்களோ போய் முடிவதாகவே நிலை ஆகும். அப்படியாகச் செய்கையிலே, முன்னைய பந்திகளிலே நாகார்ஜுன், தமிழவன், வளர்மதி, ஜமாலன், ராஜன்குறை போன்றவர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி கேட்கும் தகமையிழந்துபோவோம். பதிலாக புனிதர்க்கறை+குறை பட்டியல் போட்டாலுங்கூட, பிரமிள் போடாத 'வள்' கவிதைகளையும் தொ.மு.சி.ரகுநாதன் எழுதாத பஞ்சபுனிதர் ('பஞ்சப்புனிதர்' என்று சொல்லிவிட்டானோ என்று அடிக்கவரக்கூடாது) பற்றிய கட்டுரைகளையும் "யூதர்களின் நிலைக்காளானோம்" என்ற புனிதர்களின் சுய_எச்சிற்றெறித்தல்களையும் விடவா எடுத்துச் சொல்லிவிடப்போகிறோம்?

இஃது எவ்வகையிலும் மற்றைய சாதிவழி வந்த எழுத்தாளர்களுக்குச் சாதிப்பற்று இருக்கவில்லை என்று சொல்வதாகக் கொள்ளக்கூடாது. கிளப்புகள் வைத்துக்கொண்டு இலக்கியம் கிளப்பாவிடினுங்கூட, புதுமைப்பித்தனுக்கும் இருந்திருப்பதாகத்தான் தெரிகிறது.

*****

என்னவோ, சகபதிவர் ஒருவர் என்ன எதற்கென்றின்றிப் பிடிக்கப்பட்டு விசாரணையின்றி வைக்கப்பட்டிருக்கின்றார். பின்னூட்டம் அவரது இடுகைகளுக்கு மொக்கையையாகவும் சக்கையாகவும் போட்டு மகிழ்ந்திருக்கின்றோம். இப்போது எத்தனை பேர் அவரைப் பற்றிப் பேசினார்கள்? முகம் தெரியாது இறப்பவர்களுக்காக, காணாமலே போகின்றவர்களுக்காகக் கவலைப்படுகிறோம்; ஆனால், கூடப் பதிவராக இருந்து பழகிய ஒருவரைக் குறித்த அக்கறை எமக்கில்லை. சாம் ஆண்டர்சனும் நாண்டுவின் நாற்பது நாறிய கேள்விபதிலும் மோண்டுகிடக்கிறோம். ஆக, ரிசான், டிசே, ரோஸ் மேரி தவிர எவருமே கண்டுகொள்ளவில்லை. கைது செய்கையிலே வீடியோ பிடித்து இணையத்திலே போட்டிருந்தால், புரட்சி பொங்கி மழையிலே பொலீஸ் கையைக் காட்டிய இடத்திலே நின்று மூன்று நிமிடங்கள் பேசியிருப்போமோ என்னவோ? :( பெரும்பாலும் அரசியலே கலக்காமல் பதிவு போடும் வாமலோஷன், அரசியலே கலந்து பதிவு போடும் முஸ்லீம் மலேசிய ராஜா பெற்றாவாக, சவூதி அரேபிய புவாத் அல்பர்ஹானாக இருந்திருந்தால் மட்டும், நமக்கு தமிழர்நாடுகளிலே ஏதும் ஆபத்தில்லை என்று கண்டனப்பதிவு போட்டிருக்கலாமோ? :(

அவர் கைது செய்யப்பட்டது குறித்துக்கூட ஒரு சொட்டும் குறிக்காது, தொடர்ந்தும் "சூடான இடுகையா, சுவையான அவலா முக்கியம்?" என்பது பற்றியும் நடிகை ஒருவரின் அரைநிர்வாணப்போஸ் என்ற இடுகைக்குப் பின்னூட்டம் இடுவதிலும் முங்கி முயங்கிப் போய், விரைஸ்கலிதமாகும் பதிவுலகிலே புனிதகங்கர்களை இனங்காட்டிப் பேசுகின்றவர்களைப் பேசுகையிலே நானும் ஒரு மொக்கையிலே சக்கைபோடும் இலக்கற்ற இலக்கியச்சுயமைதுனலிங்கனாகி இலக்கியப்பதிவர்ஜோதியிலே ஐக்கியமாகி, பின், தொடர் தத்துவவிசாரத்தீவிரத்திலே சாரச்சீத்தையை இடைவெளி பிரிந்து கசியாமல் இறுக்கிக் கசக்கி நொருங்கென்று நெம்புநுனி கதற நுள்ளி நசுக்குகிறேன்.


பதின்மவயதுச்சுயதிருப்திக்கு ஈடானதாக நாகார்ஜுனனின் இடுகையொன்றும் ராஜநாயஹத்தின் சில இடுகைகளும் எனக்கு; ஓரத்திலே மகிழ்ச்சியைத் தரும் குற்றவுணர்வு அல்லது ஓரத்திலே குற்றவுணர்வைத் தரும் மகிழ்ச்சி -முழுகியபின்னால், காதை, காதுப்பறையிலே இடிக்கும்படி 'பின்'னாலே குடைந்து நீரெடுப்பதுபோல், பல்லிடுக்கை இரத்தம் வரக் குத்தி தேங்காய்ப்பூத்துண்டை, இறைச்சிச்சிதம்பை எடுப்பதுபோல்.


இறுதியான இவ்வரியிலே வெறுவெட்கம்மட்டுமே விஞ்சி விரவி வழிகிறது.

நீதி 1: காலையிலே எழுந்து உருப்படியாக வேலை செய்கிறேனென்று முன்னிரவிலேயே நித்திரைக்குப் போகக்கூடாது.

நீதி 2: காலையிலே எழுந்த பின்னால், தமிழ்மணம் வேலை செய்கிறதா என்று சோதித்துப் பார்க்கக்கூடாது.

3 comments:

Anonymous said...

வாசித்தீர்களா?
http://nagarjunan.blogspot.com/2008/11/blog-post_16.html

கொழுவி said...

லோசனின் கைது குறித்த செய்தியை அன்று காலையே போட்டுவிட்டு - பிறகு ஒருவர் இந்த செய்தியை பெரிது படுத்துவதை குடும்பத்தினர் விரும்பவில்லையென்று போட்ட பின்னூட்டம் கண்டு எடுத்துவிட்டேன். ஆனால் அது இப்போதும் recentpost இல் இருக்கிறது. போகாதாம்.:(

இதுகுறித்து செந்தழல்ரவிக்கும் ரிசானுக்கும் எழுதியிருந்தேன்.

இதில ஒரு வெளித்தெரியாத சிக்கல் இருக்கிறது. கைது செய்யப்பட்ட அன்று அதிகாலையே இது குறித்த செய்தியை இட்டுவிட்டு பிறகு அதை கொண்டு செல்லாது இருந்து விட்டேன்.

இலங்கை அரசை அதன் இராணுவ நிர்வாகத்தை ஜனநாயகம் பொருந்தியது என்று நம்பிக்கொண்டு

அரசை கண்டிக்கிறோம். கைதை கண்டிக்கிறோம் என்ற நமது கோசங்கள் லோசனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். நமது இலங்கை அரசு ஒரு மாதிரியான ஒற்றை ரூட்டு அரசு என்பதால்தான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இந்த செய்தியை வைத்திருக்க வேண்டியுள்ளது. //

ஆனால் கொஞ்சம் அதீதமாக பயந்து விட்டேன் போலத்தான் தெரிகிறது. இல்லையா ?

Anonymous said...

/ஆனால் கொஞ்சம் அதீதமாக பயந்து விட்டேன் போலத்தான் தெரிகிறது. இல்லையா ?/

:-)
அச்சம் என்பது மடமையடா