Wednesday, May 02, 2007

கரைவு - 8



1. பிரேம்-ரமேஷின் கட்டுரையை "அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள்" டிசே எடுத்துப் போட்டிருக்கிறார். இரண்டு தடவைகள் வாசிக்க, ஓரளவு புரிந்தது (என நினைக்கிறேன்). கருத்தளவிலே ஆண்மை-பெண்மை இரண்டு கருத்தாக்கங்களும்/களையும் அழிவது/அழிப்பது நன்றாகத்தான் இருக்கின்றது - ரயாகரனின் உலக அரசியல் & பொருளாதாரம் குறித்த கட்டுரைகள்மூலம் உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைத் தருவதுபோல. ஆனால், நடைமுறையிலே கருத்தாக்கிகளின் பிரச்சனைகளுக்கான கருத்தளவிலான தீர்வுகளும் தீர்ப்புகளும் நடைமுறைக்கு எப்படியாகப் பயனுள்ளதாகப் போகின்றன என்பது காலத்துக்குமான சிக்கல். தூயகணிதத்தினைப் பிரயோககணிதத்துக்குப் பயன்படுத்துவதுபோன்ற தொடர்பளவிலே இலகுவான நிலை சமூகப்பிரச்சனைகளுக்கில்லை. பிரேம்-ரமேஷின் கருத்தாக்கத்துக்கும் இந்த அவநிலைதானிருக்கின்றது. ஆண்மை-பெண்மை என்ற இரட்டைக்கருத்துகளும் அழியவேண்டுமென்பதிலே மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதெப்படி? பிக்குணி எரியும் திரியை எண்ணெய்க்குள்ளே அழுத்தி அணைப்பதினால் கிடைக்கும் "உள்ளார்ந்த முழுமை" எவ்வகையிலே இக்கருத்தழிப்புக்கான நடைமுறை? கருத்தளவிலே ஆண்-பெண் என்றில்லாது எல்லோருக்குள்ளும் உட்கார்ந்திருக்கும் சொற்களைக் கட்டுடைத்தலும் அழித்தலும் புதுக்கலும் உருவாக்குதலும் முன்னோக்கிய சிறுநடைக்கு உதவலாம். ஆனால், அடிப்படையிலேயே (எதிர்ப்)பால் அளவிலான சந்தேகத்தினை "பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல" என்று எடுகோளாக முன்வைக்க வற்புறுத்தும் இக்கட்டுரை எப்படியாக இந்த கருத்தமைப்பின் அழிப்பினைப் பால்வேறுபாடின்றிச் செய்ய உதவப்போகின்றது?


2. டிசேயின் பிரேம்-ரமேஷின் இடுகைக்கு வந்திருக்கும் கறுப்பியின் பின்னூட்டம், "என்ன செய்வது இது ஆண் அதிகார உலகம். எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகின்றது. சின்ன விடையங்களுக்குக் கூட போராட வேண்டிய நிலையில்தான் இன்றும் என்றும் பெண்கள் இருக்கப் போகின்றார்கள்." பின்னூட்டம் இடமுன்னால், டிசே போட்ட இடுகையை வாசித்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஆண்மை-பெண்மை கருத்தமைப்பினை முழுதாய் அழித்தல் என்பது குறித்ததான இடுகை இது - இதிலே வந்து 'ஆண் அதிகாரம் & கெடுதல்' பற்றி ஒரு முத்திரை; முடிந்தது காரியம். எந்த நோய்க்கும் ஒரே மருந்து போலவும் ஐன்ஸ்டைன் கண்டுபிடிக்க முக்கின முழுமைக்குமான விதியைப் போலவும் தத்துவவாதியின் கல் போலவும் "அனைத்துக்கெடுதலுக்கும் ஆணதிகாரம்" என்பதான ஒரு தட்டையான கோஷம். அதற்கப்பால், இத்தனை நாள் ஆண் அதிகார உலகினைக் கெல்லவும் கிழிக்கவும் எத்தனையோ செய்கிறாரே, எதுவுமேதான் இதுவரை நாள் பயன்தரவில்லையா, அல்லது அவர் அப்படியான அதிகார உலகமாகவிருப்பது அவரைப் பெண்ணிலைவாதியாக முன்னெடுக்க வசதி செய்துகொடுப்பதுமட்டுமே போதுமென்றிருக்கிறாரா? எப்போதுமே இப்படித்தான் இருக்கப்போகிறதையிட்டு கவலைப்படுகின்றாரா அல்லது அப்படியே அது இருப்பதுதான் அவரைப் பெண்ணிலைக்காகப் பேசவைக்க வசதியென்றிருக்கின்றாரா? அவர் சொல்லப்போவதில்லையென்றே நினைக்கிறேன்; இன்னும், இருபது ஆண்டுகள் கழித்து வந்து பதிவுகளை இதே தலைப்பின்கீழேயிட்டாலும் அவர் வந்து போடப்போகும் முதலாவது பின்னூட்டம், "இது ஆண் அதிகார உலகம். எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகின்றது. சின்ன விடையங்களுக்குக் கூட போராட வேண்டிய நிலையில்தான் இன்றும் என்றும் பெண்கள் இருக்கப் போகின்றார்கள்." இதற்கு அப்பால், அவர் சிந்தனை நகரப்போவதில்லை, முன்னால் இருப்பவன் ஆணென்றால், "நீ ஆணாதிக்கவாதி; உன் மனைவிக்காகப் பரிதாபப்படுகிறேன்." என்ற வரிகள் தொடர்ந்தாலல்லால். பக்கத்துவீட்டிலே பத்தாண்டுகளிருந்து அவனும் அவளும் வாழ்ந்ததைப் பார்த்ததுபோல ஒரு கருத்து. பெண் தான் என்பதை முன்னிலைப்படுத்தி ஒருவர் சொன்னால், ஓர் ஆண் பரிதாபப்படும் நிலையிலிருக்கும் மனைவியைக் கொண்ட ஓர் ஆணாதிக்கவாதியாக மட்டுமேயிருக்கமுடியும்.

இவரின் இச்செய்கை என்னை அம்பை என்ற சி.எஸ். லக்ஷ்மியின் ஒரு செய்கையை ஞாபகப்படுத்துகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால், நா. கண்ணன் நடத்தும் ஈ-சுவடியிலே நடந்தது. தமிழிலே முதலிலே எழுதிய முஸ்லீம் பெண் எழுத்தாளர், சித்தி ஜுனைதா பேகம் குறித்த விபரங்கள் குறிப்புகளை நாகூர் ரூமி மூலம் நா. கண்ணன் தன்னுடைய முதுசம் திட்டத்துக்குப் பெற்றுக் கொண்டதை ஈ-சுவடி யாஹூ குழுவிலே அறிவிக்கின்றார். அம்பையிடமிருந்து ஓர் அஞ்சல்; அக்குறிப்புகள் தன்னுடைய SPARROW குழுவுக்கே நியாயப்படி சேரவேண்டுமென்கிறார். அதற்காக அவர் சொல்லும் காரணம்,"சித்தி ஜுனைதா பேகம் ஒரு பெண்." அவர் தமிழ் எழுத்தாளர் என்று தமிழிலக்கியக்களஞ்சியத்திலே தேடிக்கண்டுபிடித்தவர் சேர்க்கமுடியாது; அவர் பெண் என்பதுதான் முன்னிலையாகவேண்டும். இந்த "வந்தால் என் வழி; இல்லாவிட்டால், Disclosure Demi Moore Declaration" வகை வாதம் தனியாள் ஒளிவட்டத்துக்கு ஆட்சேர்க்க உதவலாம். அதற்குமேலே பொதுவாக, -பெண்களுக்கோ ஆண்களுக்கோ- சமூகத்துக்கோ என்ன பயனைத் தரப்போகிறது?


3. பாலபாரதியின் பழைய பதிவிடுகை ஒன்று, "இது அன்னையர் தேசமா..." இஃது இன்னொரு வகையான வேலியிலே போகும் ஓணானைத் தன் மடியிலே போடும் பதிவு. பின்னூட்டங்கள் வருவது தொடர்பான அவருடைய கருத்துகளோடு ஒத்துக்கொள்ளமுடிகின்றது. ஆனால், "எனது "ஆதலினால்..." இடுகையில் ஏமாறாதவன் என்பவர் பெண்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்ற ரீதியில் கருத்து சொல்லி விட்டுப்போனார். ஆனால்.. ஆண்களின் உலகம் தான் சூழ்ச்சிகள் நிறைந்ததாக இருக்கிறது என்பதை வேதனையோடு இங்கு பதிவு செய்ய கடமை பட்டிருக்கிறேன்" என்பது ஒன்று அவர் தமிழ்மணத்தினைச் சரியாகக் கவனிப்பதில்லையா அல்லது கவனித்தும் கவனிக்காததுபோல இருக்கின்றாரா என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. ஏமாறாதவன் என்பவர் 'இயிங்க்' என்றால், இவர் 'இயாங்' என்ற விதத்திலே பதில் எழுதியிருக்கின்றார். "ஏனெனில் ஆண்களின் சிந்தனை போலில்லாமல்.. பெண்களின் சிந்தனை பல புதிய கோணங்களை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது" என்றவர் சொல்கிறதிலே இன்னும் அறியாத இச்சூழ்ச்சிகள் பற்றிய கோணங்களும் இவருக்கு இருக்கின்றதோ தெரியவில்லை. இக்கோணங்களும் உத்திகளும் சொல்லப்பட்டிருந்தால், தமிழ்மணத்தினைக் கொஞ்சம் கவனித்திருந்தால், இந்த ஆண்சூழ்ச்சி - பெண்சூழ்ச்சி நிகழ்த்தப்படும் நுண்ணிய தளங்களும் நூலூடிப்பாவும் நுண்வழிமுறைகளும் இவருக்குப் பிடிபட்டிருக்கும்.

மேலும், ஏற்றுக்கொள்ளமுடியாத சொற்களோடு அநாமதேய பின்னூட்டங்களும் பெண்பதிவர்களுக்கு மட்டுமல்ல, ஆண்பதிவர்களுக்குமேதான் வருகின்றது. பெண் என்பதைத் தவிர, சாதி, மதம், மொழி எல்லாவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதலோடுதான் எல்லாத்திசைகளிருந்தும் வருகின்றன. "பள்ளனோடு உங்கம்மா படுத்தாளா?" என்றும் வருகின்றது; "பார்ப்பானோடு உங்கக்கா படுத்தாளா?" என்றும் வருகிறது; 'தீரா'விட'ன்' என்றும் வருகின்றது; 'ஆரியன்' என்றும் திட்டி வருகின்றது. அவற்றையெல்லாம், 'அம்மா' & 'அக்கா' என்று பார்ப்பான் வீட்டுப்பெண்களையோ பள்ளன்வீட்டுப்பெண்களையோ திட்டுகின்றபோதிலுங்கூட, நாம் பெண்களெனக் கவனிப்பதில்லை. திட்டும் திசை நமதா எதிரியினதா என்றுமட்டும் பார்த்துவிட்டு, ஒதுங்கிக்கொள்கிறோம். ஆனால், அறிந்த பெண்பதிவர்களிலே தாக்கும்போதுமட்டும் எல்லாப்பதிவர்களும் அக்கறை கொள்கிறோம். நம் நண்பர்களைத் தாக்கும்போது, எதிர்வினை செய்வது வழக்கமே. அவசியமானதும் கட்டாயமானதுமானதுமே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், எந்தவொரு பதிவரும் ஆண்-பெண் என்பதாக மட்டுமே அடையாளப்படுவதில்லை. வலைப்பதிவிலே சாதி, இனம், நாடு, மொழி, மதம் சேரவுமேதான் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இவை எல்லாக்கூறுகளையும் முன்னிறுத்தியே தாக்குதல்கள் நிகழ்கின்றன. ஆண் பதிவர்கள் பெயர்களிலே எழுதிய அத்தனை வக்கரிப்புகளையுமேதான் பெண்களின் பெயர்களிலும் எல்லாப்பக்கத்து கோடாலிப்பாம்புகளும் போட்டுத்தள்ளுகின்றன. பிரபு ராஜதுரையின் "சுஜாதா, சுப்பிரமணியசுவாமி, சூத்திரர்... " இடுகையிலே சுட்டியதன்படி நாம் கொஞ்சம் இப்படியான நிலைமையைப் பார்த்தால், இழிவு படுத்துதல் என்பது எல்லாவகைகளிலுமேதான் நடந்திருக்கின்றன. ஆனால், பெண்களின் பெயர்களிலே வரும்போதுமட்டும் பெண்களை இழிவு செய்துவிட்டார்கள் என்ற பாவனை வருகின்றது. இஃது எதனால்? [நான் சொல்லவருவதை முழுவதும் தவறாகவே புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கின்றது. என்றாலும், முயற்சிக்கின்றேன்] ஆனால், இது பெண் என்பதாலே தாக்கப்பட்டுவிட்டார் என்பதாகவும் பெண்களைப் பாதுகாப்பது ஆண்களின் கடமை என்பது போன்ற (ஒரு தனியுடைமைச்சொத்தினை, வீடு, வங்கிநிலுவை, வாகனம் இவற்றைக்) காக்கும் போக்கோடுதான் இருப்பதாக எனக்குப் படுகின்றது. "பெண்களும் குழந்தைகளும் முன்னே" என்று தாழும் டைட்டானிக்கிலேயிருந்து படகுகளிலே குதித்துத் தப்பிக்கமுன்னால், அறிவிப்பு விட்டதுபோலவல்லோ இருக்கின்றது? இதுதான் பெண்களைச் சரிநிகராகக் கருதுவதா?


4. நிவேதாவின் கட்டுரை, "காலனித்துவ இலங்கை அரசியல் சமூகத்தில் தமிழ்ப் பெண்களும் பெண்களின் அரசியலும்" இலே ஒரு பகுதி;

"இது மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமெனினும, சுருக்கமாகக் கூறுவதாயின்..., சமீபத்தில் நண்பரொருவருடனான உரையாடலின்போது, 'ஆண்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும்போது சாடுகிறீர்களே.. சிறிமாவோ, சந்திரிக்கா, ஜெயலலிதா, ஏன் இந்திரா காந்தியென பெண்கள் பலரதும் ஆட்சியைப் பார்த்தவர்கள் நாம் .. இவர்கள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் நிலைமை முன்னேற்றமடைந்திருந்ததா..?' எனக் கேட்டார்.


பெண்களின் அரசியலென்ற கருத்தாக்கம் இவ்விடத்தே தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தக் குறிப்பிட்ட பெண் தலைவர்களனைவரும் ஆண்களின் பிரதிநிதிகளாய், ஆண் மேலாதிக்க சமூகம் உருவாக்கி வைத்திருந்த சமூக, அரசியல் சூழ்நிலைகளுக்குள் நின்றுகொண்டு ஆட்சி புரிந்தார்களேயொழிய எவரும் பெண்ணென்ற தமது சுய அடையாளத்தினை வலியுறுத்த முயன்றனரெனக் கூறமுடியாது. ஒருவகையில் தமது அத்தகைய அடையாளங் குறித்து வெட்கி ஆண் தலைவர்களை அப்படியே பிரதியெடுக்க முனைந்ததன் விளைவுதான் இதெனலாம். "


சோவியத்து உடைப்பின்பின்னால், நஷனல் ஜியோக்ரபிக் பத்திரிகையாளரொருவர் ஜோர்ஜியாவிலே செவ்வி கண்டுகொண்டிருக்கின்றார். ஜோர்ஜியர் பலர் ரஷிய, மற்றும் சோவியத்தின் பொதுவுடமைக்கட்சிக்கெதிராகக் கருத்துக் கூறுகின்றார்கள். ஆனால், எவருமே ஸ்டாலினைக் குறைத்துச் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகையாளர் இதனை மிகவும் அழகாகச் சொல்கிறார், "ஜோர்ஜிய மக்களின் கருத்தானது, 'ஸ்டாலின் ஒரு பயங்கரனாகவிருக்கலாம்; ஆனால், எங்களது பயங்கரன்" என்பதாகவே தோன்றுகின்றது." நிவேதாவின் சிறிமாவோ, சந்திரிகா, ஜெயலலிதா போன்றோரது நடத்தைகளுக்கான உள்ளார்ந்தநிலைவிளக்கமும் இதனை ஒப்பவேயிருக்கின்றது. இந்த வாதத்தின்படி பார்த்தால், சமூகத்தின் எந்த நிலையிலேயும் எந்தப்பெண்ணின் செயற்பாட்டினையும் ஆண்சமுதாயத்தின் அமைப்பின் விளைவென்றே சுட்டிவிட்டுத் தப்பித்துக்கொள்ளலாம். இந்த "சமுதாயம் அவளை வாழவிடவில்லை" வசனத்தை Aileen Wuornos இற்குமட்டுமல்ல, சந்திரிகா, ஜெயலலிதாவுக்கும் சொல்லலாம். இது ஒன்றில் சிறுபிள்ளைவாதம் அல்லது மிகவும் சாதுரியமான தப்பிப்புவாதம்.

சந்திரிகாவின் காலத்திலேதான் (சிறிமா அம்மையார் அந்நேரப்பகுதியிலே தலைமையமைச்சராகவும் இருந்தார்) கிருஷாந்தி, கோணேஸ்வரி, சாரதாம்பாள், ஹேமலதா இவர்கள் வன்புணரப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். சந்திரிகா நிச்சயமாக தானறிந்து இவற்றினைச் செய்யவில்லை. ஆனால், இப்படியான செயற்பாடுகளுக்குப் பின்னான வேளையிலே, அவரது படையினரைத் தண்டிப்பிலிருந்து தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளை அறிந்தும் நடந்துகொண்டாரென்பதுதான் நடைமுறை. ஸ்ரீமாவின் காலத்திலேதான் மன்னம்பேரி வன்புணர்தலும் சேகுவேரா - 72 வன்னடக்குமுறையும் இந்திராகாந்தி ஆட்சியின் உதவியோடு நிகழ்ந்தன; இந்திராகாந்திதான் முன்னெப்போதுமில்லாதவாறு, இந்தியாவிலே மிஸா அரசியலடக்குமுறையைக் கொணர்ந்தார்; ஜெயலலிதா காலத்துக்கு முன்னால், வீட்டுக்கு முச்சில்லுவண்டி விட்டு காலையுடைக்கும் 'பண்பாடு' தமிழக அரசியலிலேயிருந்ததாகத் தெரியவில்லை. இவை எதுவுமே இங்கே "ஆண்மேலாதிக்க சமூகம், சூழல்" என்ற வாதத்தினைக் கொண்டு இப்பெண்ணாட்சியாளர்களை ஆண்சமூகச்சூழ்நிலைக்கைதியாக்கித் தப்பிக்கச் செய்யும் முடக்குவாதமொழிய வேறெதுவுமாகவிருக்கமுடியாது. இதன் மோசமான விளைவு என்னவென்றால், இப்படியான ஆண்கள் உருவாக்கிய சமூக, அரசியல் சூழ்நிலையைச் சுட்டிக்கொண்டு தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறையைக்கூட பெண் ஆட்சியாளர்கள் அதிகாரத்தின் பேரிலே அனுமதித்துக்கொண்டுபோவதாகவிருக்கும். இந்நிலையிலே சொல்லப்போனால், ஆண் ஆட்சியாளர்களைவிடப் பெண்ணாட்சியாளர்களுக்குப் பெண்ணியலை முன்னெடுக்கும் ஒரு பகுதியினர் வன்முறைக்கு வாய்ப்பும் தப்பிக்கும் வழியும் ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள் என்றே சொல்லலாம். ஒரு Countess Erzsébet Báthory இன் செயற்பாடுகளை Count Vlad Drăculea மீது போடுவதுபோலத்தான் ஆகும். அதிகாரத்துக்கு, பால், சாதி, மொழி, இனம், மதம் என்று ஐம்பொறிகளில்லை. அதிகாரம் தன் வசமானது; தன்னை நிறுத்திக்கொள்ள அத்தனை உத்திகளையும் பயன்படுத்தும். சந்திரிகா பெண் என்பதும் இவ்வகையிலே ஓருத்திதான். இப்படியான உத்திகளை அறிந்தும் அவர் பெண்ணென்பதாலே அவரை நியாயப்படுத்துகின்றவர்கள், இவ்வதிகாரத்தின் கீற்றுகளைத் தாமும் கவர்ந்துகொள்கின்றவர்களேயாவார்.

பெண்களைப் புனிதப்பாலிலே நீராட்டி வைத்துக்கொண்டு, ஆண்களைப் பீயுழலும் பன்றிகளாக நிறுத்தி வைத்துக்கொண்டுதான் பேரம் பேசுதலும் வாதம் பேசுதலும் நிகழ்கின்றதாகத் தோன்றுகின்றது. பெண்களின் செயற்பாடுகள் குறித்த விமர்சனத்தினை எழுப்ப எவருக்கும் விருப்பமிருப்பதில்லை; ஆண்களானால், முத்திரை குத்தப்படுவோமோ என்ற தயக்கமிருக்கின்றது. இதே விமர்சனத்தயக்கங்கள், ஈழவிடுதலைப்போர் குறித்தும் இந்தியத்தேசியம் குறித்தும் பலருக்கும் இருக்கின்றன. தர்க்கத்துட்பட விமர்சனத்தினை முன்வைக்காத எந்தக்கொள்கையுமே நடைமுறையிலே வெற்றி பெற்றதாகவோ நிலைத்து முன்னோக்கி நகர்ந்ததாகவோ வரலாற்றுநிகழ்வுகள் காட்டவில்லை. ஒருவரைப் பற்றிய கருத்தினைத் தெரிவிக்கும்போது, அவரின் பொது அடையாளங்களுக்கான குணங்கள் (பால், மொழி, இனம், மதம், சாதி), தனியடையாளங்களுக்கான குணங்கள் (ஒவ்வொரு குழுவுள்ளும் தனித்தன்மை) இவற்றினைச் சேர்த்துப் பார்க்க ஏன் எம்மால் முடிவதில்லை?

இப்படியான ஆணாதிக்கசமூகத்தின் சூழ்நிலைக்கைதித்தனமும் பிரேம்-ரமேஷ் கூறும் ஆண்மை-பெண்மை இரட்டைமொழி அழியும் நிலையும் எப்போது ஏற்படுகின்றதென ஒரு முடிவான நிலைக்கு எவருமே ஒருபோதும் வரப்போவதில்லை. இந்நிலையிலே, அவரவர் அவரவர் வசதிக்கும் தேவைக்குமேற்ப, தூக்குதலும் தூற்றுதலும் செய்துகொண்டிருக்கப்போவதுதான் நடக்கும்.பாலுக்கு எதிர்ப்பால் குறைந்தளவேனும் புரிதலும் நம்பிக்கையும் கொள்ளாதவரையிலே எல்லாம் சூழ்ச்சியாகவும் பெண்ணாட்சியிலே வன்முறை நிகழும்போது, ஆணாதிக்கசமுதாயத்திலே பழியைப் போடுவதும் எந்த இலக்கைக் கொண்டு ஒரு சமுதாயத்தை நடக்கவைக்குமென்று என்னால், சொல்லமுடியவில்லை.


கடைசியாக, விக்கிரமாதித்தனை வேதாளம் கேட்டதுபோல, தலைசுக்குநூறாகிப் போக ஒரு கேள்வி.

'யாரோ ஓர் ஔவை "தையல் சொல் கேளேல்" என்று சொல்லிவிட்டுப்போய்விட்டாள்.'

இவ்வரியை எப்படியாக விடுவித்துக் கருத்தைக் கொள்வது?

1. ஔவை சொன்னால் சரியாகத்தான் இருக்கும்; பெண்கள் சொல்வதைக் கேட்காதே.
2. ஔவையே ஒரு பெண்; அவரே பெண்கள் சொல்வதைக் கேட்காதே என்று சொன்னால், அது கேளென்று அர்த்தப்படும். ஔவை பெண்களுக்குப் பூடகமாகத் தன் செய்தியை உணர்த்தியிருக்கின்றாள்
3. ஔவை என்பது முதிர்ந்த பருவம்; தையல் என்பது அல்ல; ஆகவே, தையல்_பருவத்திலேயிருக்கும் பெண் சொல்வதைக் கேளாதே.
4. ஔவை வாழ்ந்த காலம் ஆணாதிக்கம் பெண்களின் கழுத்தை இறுக்கிய காலம்; ஔவை அப்படியாகத்தான் சொல்ல வாய்ப்புண்டு.
5. ஔவை சொன்னாளா? தெரியாது. யாராவது ஓர் ஆண் இடையிலே எழுதிச் செருகியதாகவும் இருக்கலாம்.
6. இக்கேள்வியைக் கேட்டதால், நீ ஆணாதிக்கவாதி - உன் மனைவியைக் காலைச்சாப்பாட்டுக்கு முன்னால் இரண்டு தரமும் மாலைச்சாப்பாடுக்குப்பின்னால், நான்கு தரமும் கன்னத்தைப் பொத்தி அறைகின்றவன்


[இவ்விடுகையைக்கூட, ஓர் ஆணாதிக்கத்திசைதிருப்பலாகவோ கலைந்துளறும் கருத்துகளாகவோ எவரும் எடுத்துக்கொண்டு போகலாம். அதைப் பற்றி "நீ ஆண் - நான் பெண்" என்ற "ஆயுதமற்ற நீ - கேடயத்துடன் நான்" என்பதற்கு மேலே ஒழுங்கான வாதமென்று எதுவுமில்லையென்றால், எனக்கும் சொல்ல எதுவுமில்லை.
ஆனால்,
இங்கே தூக்கிப்பிடித்த எத்தனை பேர் இங்கே தூக்கியடிக்கிறார்கள் என்று ஒரு கணக்கை மட்டும் வைத்துக்கொள்வேன் :-)]

[நன்றி: அடியாள் (I mean, அடியான், What I mean is, அடியார்) இரவுக்கழுகுக்கு, என் வலைப்போதிக்கும் பூரணநிலவுக்குமாய்] :-)

கரைவு~

21 comments:

இளங்கோ-டிசே said...

பெயரிலி, நான் எடுத்துப்போட்ட கட்டுரையினூடு நல்லதொரு எதிரிவினைப்பதிவு உங்களிடம் வந்திருக்கிறது. இப்படித் தொடர்ந்து provoke செய்தால் நீங்கள் நிறைய எழுதுவீர்கள் என்று நம்புகின்றேன் :-).
.....
எழுதப்பட்ட இப்பதிவு குறித்து சில கருத்துகள் உண்டு. சிலவற்றையாவது விரைவில் எழுத முயல்கிறேன். நன்றி

இளங்கோ-டிசே said...

பெயரிலி உங்களதும், பிரேம்-ரமேஷினதும் கட்டுரைகளையும் இணைத்து சில கருத்துகளை கூற விழைகின்றேன்.

1. ரமேஷ்-பிரேமின் கட்டுரை சில கருதுகோளை முன்வைத்து உரையாட விரும்புகின்றதே தவிர அவற்றை முடிந்த முடிவாய் எடுக்கவேண்டியதில்லை. அதுபோல் அவர்கள் எடுத்துக்கொண்ட பெரியாரின் இந்த வார்த்தைகளைக்கொண்டே
/பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல/
ரமேஷ்-பிரேமின் மேற்குறிப்பிட்ட கட்டுரையைக்கூட -ஆண்கள் கூறியது என்று நாம் அனைவருமே இலகுவாய் நிராகரிக்கலாம் கூட. ஆனால் இநதச்சொற்களை எப்படி விளங்கிக்கொண்டேன் என்றால், வாசிப்பு/இலக்கியம் என்ற் உலகிற்குள் வந்தபோது கனடாவில் மட்டும் இலக்கியத்தில் நித்தியகாதலர்கள் இருக்கின்றார்கள் என்ற புரிதல் ஆரம்பத்தில் இருந்தது. பின்னாட்களில் ஜரோப்பா இன்னபிற இடங்களிலும் நித்தியகாதலர்கள் இருக்கின்றார்கள் என்ற விரிவான தளத்துக்கு அறிதல் நீண்டது. ஆனால் இந்த அனைத்துலக நித்தியகாதலர்கள்தான் தொடர்ந்து ஓயாமல் பெண்களின் விடுதலைக்காய் குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்க்ளாய் இருக்கின்றார்கள். எனவேதான் பெண்களுக்கு இத்தகை வெளிவேசம் போடும், கோஷம் எழுப்பும் 'பெண்ணிய ஆண்'களால் எந்தப்பலனும் ஏற்படவேமாட்டாது என்ற புரிதல் வநதது. ஆகவே தான், 'பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல' இந்தக்கருத்தோடு அதிகம் என்ற பெரியாரின் கருத்துகளோடு என்னால் உடன்படமுடிந்தது. (இந்த நேரத்தில் ஒன்றையும் சொல்லவேண்டும், சில நித்தியகாதலர்களை அடையாளங்காட்டிய பெண்கள்/பெண்ணியவாதிகள் பல நித்தியகாதலர்கள் மீது காட்டும் அதீமெளனம் இன்னும் அலுப்பூட்டியது/அலுப்பூட்டக்கூடியது).

2. சந்திரிக்கா, ஜெயலலிதா, சிறிமா, இந்திரா காந்தி ஏன் மாற்றுவழிகளில் சிந்திக்கவில்லை என்று கேட்பதில் நியாயமுண்டு (நிவேதாவிற்கான் கேள்விக்கு அவர் தனது சார்பில் பதிலளிக்கக்கூடும் என்றாலும்) எனது அறிதலின்படி, இதை நாங்கள் தலித் தலைவர்களை நோக்கியும் கேட்கலாம். இந்தியாவின் வடமாகாணங்களில் உள்ள அரசியல் அதிகாரமுள்ள தலித் தலைவர்களால் தலித்துக்களுக்கு முழுமீட்சியும் கிடைத்துவிட்டதா? இல்லைத்தானே. அதாவது அதிகாரத்தை மேலிருந்து கீழ் நோக்கி நகர்வதைவிட, கீழிருந்து மேல் நோக்கி நகர்த்துவதே தலித்துக்களுக்கோ பெண்களுக்கோ ஆன விடுதலையைத் தரக்கூடிய ஒருபெரும் விடயமாய் இருக்கும். மேற்கூறிய பெண்மணிகள் அதிகாரத்தின் மேல்நிலைப்படிகளிலிருந்து வந்தவர்கள், அவர்களால் அப்படி ஆண்வழிப்பட்டுத்தானே சிந்திக்கமுடியும். அல்லது அவர்கள் எதுவும் பெண்களிற்குச் செய்ய விரும்பினாலும் அவர்களைச் சூழவிருப்பவர்கள் பெரும்பான்மைக்கும் அதிகமானோர் ஆண்களே. அதிலிருந்து மீள்பட்டு தாம் விரும்பும் அதிகாரங்களை பெண்களால் உருவாக்கிக்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல. அதிகாரம் கீழிருந்து மேல் நோக்கி நகரும்போது விழிப்புணர்வு பெற்ற ஆண்களும் பெண்களும் நிறைய உருவாகுவார்கள். அப்படி பெரும்பானமையாய் உருவாகும் சமூகம் எளிதாக தாம் விரும்பும் அதிகாரங்களை மேல் நோக்கி நகர்ந்து கைப்பற்றிக்கொள்ளும்.

(3)பிரேம் -ரமேஷின் இந்தக்கருத்து என் அனுபவங்களின் உணார்ந்துகொண்டது...
/‘‘பெண்களின் அடிமைத் தன்மை பெண்கள் மாத்திரம் பாதிப்பதில்லை, அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை, ஆண்மையம் மறுத்த விடுதலைக் கருத்தியல் உடைய ‘சாதாரண ஆண்நிலை’ மறுத்த ஒரு புரிதலும் புலனும் உடையவராலேயே இதனைக் கூறமுடியும். /
கடைசிவரிகள் என்னளவில் பொருந்தாது என்றாலும் நான் இதை உணர்ந்திருக்கின்றேன். கார் ஓட்டத்தெரியாத, லைஸன்ஸ் எடுக்காத காலத்தில் ஒரு பெண், என்ன உமக்கு காரோட்டத்தெரியாதா என்று கேட்டபோது, ஒரு சக ஆண் கேடப்துபோல அந்தப்பெண்ணும் கேட்டதை சாதாரணமாய் எடுத்துக்கொண்டேன். எனினும் இதற்காய் பலரால், ஒரு பெண் இப்படிக் கேட்டுவிட்டாரே உனக்கு வெட்கமாயில்லையா என்று தொடர்ந்து கேலி செய்யப்பட்டிருக்கின்றேன். நான் அதை ஒரு ஆண் கேட்கின்றபோது சிரித்துக்கொண்டு பதில் கூறியமாதிரியே ஒரு பெண்ணினது கேள்வியையும் எடுத்துக்கொண்டேன். அதுபோல், காரில்லாத/காரோட்டத்தெரியாதகாலங்களில் பெண் காரோட அருகிலிருந்து போனதும் கேலி செய்யபட்டது. இது என்னளவில் பெரிய தொந்தரவாய் இருந்தது. இந்த பெண் அடிமைத்தன மனப்பான்மை என்னை இவ்வாறு பல சம்பவங்களில் பாதித்திருக்கின்றது. எனவே பெண்களின் விடுதலை என்பது எனக்கான சிந்தனைகளின் விடுதலையாகவும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.

4. /பெண்களைப் புனிதப்பாலிலே நீராட்டி வைத்துக்கொண்டு, ஆண்களைப் பீயுழலும் பன்றிகளாக நிறுத்தி வைத்துக்கொண்டுதான் பேரம் பேசுதலும் வாதம் பேசுதலும் நிகழ்கின்றதாகத் தோன்றுகின்றது. பெண்களின் செயற்பாடுகள் குறித்த விமர்சனத்தினை எழுப்ப எவருக்கும் விருப்பமிருப்பதில்லை; ஆண்களானால், முத்திரை குத்தப்படுவோமோ என்ற தயக்கமிருக்கின்றது. இதே விமர்சனத்தயக்கங்கள், ஈழவிடுதலைப்போர் குறித்தும் இந்தியத்தேசியம் குறித்தும் பலரும் இருக்கின்றது. தர்க்கத்துட்பட விமர்சனத்தினை முன்வைக்காத எந்தக்கொள்கையுமே நடைமுறையிலே வெற்றி பெற்றதாகவோ நிலைத்து முன்னோக்கி நகர்ந்ததாகவோ வரலாற்றுநிகழ்வுகள் காட்டவில்லை. /

இந்த உங்களின் கருத்துகளோடு முழுமையாக என்னால் ஒத்துப்போக முடிகின்றது. சில மாதங்களுக்கு முன் கூட ஒரு நண்பரோடு உரையாடும்போது, பெண்கள் சில விடயங்களில் தந்திரமாய் காய் நகர்த்தக்கூடியவர்கள் என்ற விவாதம் வநதது. நிச்சயமாய் இதற்கான உதாரணங்களை நான் கண்ட/சந்தித்த பல சம்பவங்களிலிருந்து -ஆண்களைவிட பெண்கள் தந்திரமானவர்கள் என்று கூட-தெளிவாக என்னால் விவாதிக்கமுடியும். ஆனால் ஒரு சமநிலையற்ற சூழநிலையிலிருந்து கொண்டு இவற்றைப் பெரிதுபடுத்தி விவாதிப்பதைத் தவிர்க்கவே விரும்புகின்றேன். ஆணைப்போன்ற அனைத்து விடுதலையும் பெண்களிற்கு கிடைக்கும்போது அப்போது அவர்களுடன் நிகராய் நின்று விவாதிக்கமுடியும்/விரும்புகிறேன். தொடர்ந்து பல்வேறு வழிகளால் ஆண்களால் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும்பெண்களை நேரிலும்/ நேரிலல்லாதும் கேள்விப்பட்டுக்கொண்டு இவ்வாறான தனிமனித அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு உரையாடுவதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.
நீங்கள் பின்னூட்டத்தில் எழுதியபோல், பெண்களில் மட்டும் ஏன் உமக்கு கூடப்பரிவு என்று பல தோழிகளும் (அப்பாடா தோழி, கோழி ஒருமாதிரி இங்கே வந்துவிட்டார்கள் :-))) கேட்டிருக்கின்றார்கள் அதை எனக்கான விமர்சனமாய் எடுத்துக்கொள்கின்றேன். எனக்குத் தெரிந்த பல பெண்கள் பலவிதங்களில் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து அப்படியொரு பரிவான நிலைப்பாடு எனக்குள் வந்திருக்கலாம். ஆனால் அதை விவாதத்திற்கான ஒரு நிபந்தனையாக முன்வைக்கமுடியாது என்பதையும் புரிந்துகொள்கின்றேன்.

இறுதியாக, உங்களுக்கு நினைவிருக்குமா தெரியவில்லை...பதிவுகள் விவாதக்களத்தில் ஒரு பெண் கவிஞரின் கருத்துகளுக்கு நீங்களும் நானும் எதிர்வினை செய்தபோது, நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவரால், நாமிருவரும் ஆணாதிக்கவாதிகளாய் அடையாளப்படுதப்பட்டிருந்தோம். ஆனால் அந்தப்பெண் கவிஞரில் தெறித்த ஆண்வழிப்பட்ட சிந்தனைகளைப் பின்னாட்களில் பெண்களே விவாததிற்கு எடுத்துச் விரிவாக உரையாடல்களைச் செய்திருந்தார்கள். இங்கே ஆணாதிக்கவாதி என்பது அவ்வாறான சிந்தனைகளுடன்/தந்திரங்களுடன் இருக்கும் பெண்களுக்கும் பொருந்தும். அதேயேதான் ரமேஷ்-பிரேமும் பெரியாரின் வார்த்தைகளை முன்வைக்கின்றார்கள்.

பெண்கள் விடுதலை பெறுவதற்கு ஆண்களைவிட பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள், (பெரியார் 1928) என்பது மேம்போக்ககான வெறுப்பு வாசகமல்ல.

பி.கு: கோர்வையாய் இல்லாது, வகுப்புக்குப்போய்வந்த நித்திரைக்கலக்கத்துடன் இதை எழுதுகின்றேன். சொல்ல விரும்பிய சில கருத்துக்களாவது சொல்லில் வந்திருக்கும் என்று நம்புகின்றேன். நன்றி.

- யெஸ்.பாலபாரதி said...

//ஆணாதிக்கவாதி என்பது அவ்வாறான சிந்தனைகளுடன்/தந்திரங்களுடன் இருக்கும் பெண்களுக்கும் பொருந்தும். அதேயேதான் ரமேஷ்-பிரேமும் பெரியாரின் வார்த்தைகளை முன்வைக்கின்றார்கள்.//

ரிபிட்டே!

-/பெயரிலி. said...

டிசே, பாலபாரதி,

நித்தியகாதலர்களைப் பற்றிச் செவிவழிச்சேதியுண்டு. அக்கோணத்திலே அது விளக்கப்படும்போது நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளலாம். இதை அறியாமலில்லை. ஆனால், நான் இக்கேள்வியை இங்கே எழுப்பியதற்குக் காரணம், நீங்களும் நானும் "பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல" என்பதை எங்கே எப்படியாகப் புரிந்துகொள்கிறோம் என்பதற்கும் பிறக்கப்போகும் குழந்தையின் முதலாவது ஒளிவருடலிலேயே ஆண்குழந்தை என்று அறிந்தவுடனேயே புறோ ஆணாதிக்கம் சீல் குத்த நிற்கின்றவர்கள் எப்படியாகப் பயன்படுத்துவார்கள் என்பதற்குமுள்ள வித்தியாசத்தைத்தான். இப்படியாக முத்திரை குத்துகின்றவர்கள் பெண்களுக்கான பெண்ணியம் என்பதிலும்விட, தங்களுக்கான பெண்ணியம் என்பதிலே மிகவும் கவனமாக இருப்பவர்கள். பெண்-ஆண் குறித்த சிக்கல்களிடையே இரு பகுதியினருக்குமிடையே ஒரு புரிதல் வரமுடியாதவளவுக்கு - ஆண்கள் குறித்த முற்றான அவநம்பிக்கையைப் பெண்களிடத்தும் ஆண்கள்-பெண்கள் குறித்துப் பேசினால் முத்திரைகுத்தப்படுவோமென்ற தயக்கத்தை ஆண்களிடத்தும் - பெண்களின் தரகர்களாகத் தம்மைத்தாமே நியமித்துக்கொண்டிருப்பவர்கள். இவர்களை விமர்சனமின்றி, அப்படியே புனிதப்போராளிகளாகவும் திருவுருக்களாகவும் நிறுத்தி வைக்கிற உளப்பாங்கும் சூழலும் மாறாதவரைக்கும் பெரியார் சொன்னதை நீங்களும் நானும் நித்தியகாதலர்கள் குறித்ததென்றும் இத்திருவுருக்களை முன்மாதிரியாக வைத்திருக்கும் பெண்கள் உங்களையும் உள்ளடக்கியே பார்க்கும் நிலை தொடரும்; அப்படியாகத் தொடரும் நிலையிலே எங்கே குறைந்தது, ஆண்-பெண் குறித்த விவாதங்களை ஆரோக்கியமாகச் செய்யலாமென்ற புரிந்துணர்வும் சூழலுமேனும் சாத்தியப்படுமென நினைக்கின்றீர்கள்? இவர்கள் குறித்த விமர்சனங்களைப் பெண்கள் முன்வைக்கத் தயங்குவதேன்? (நானும், பாதுகாப்பாக, இந்த ஆட்டத்தை பெண்கள் பெண்கள் என்பதற்காகமட்டுமே பாதிக்கப்பட்டார்கள் எனும்போது, குரல் எழுப்பிவிட்டு, மீதியான நேரத்திலே "எடுத்ததெல்லாம் புறோ ஆணாதிக்கம்" என்று பூனை குறுக்காலே போவதுக்கும் பெண்ணியசீல்குத்தாட்டத்திலே கிளிபிடிக்காமல் ஆடிக்கொள்ளலாம்; ஆனால், அது போகிற பாதைக்குப் பலன் சேர்க்காது. குறைந்தது, தமிழ்மணத்திலிருந்து மூன்று பெண்கள் விலகியதற்கு the fcuking rogue இரவுக்கழுகு கொடுத்த "பெண்ணிய அநியாயம் நிகழ்ந்தது" மிகவும் தனிப்பட்ட வகையிலே இவ்விலகலிலே எதுவுமே சம்பந்தப்படாத என் மீதான முற்றிலுமே நியாயமற்ற தாக்குதல். When the whole act was staged people were there, and people know what the fcuk went on, and how it was put forward upside down by this fcuker to sell among certain quarters in thamizblogdom. Why the hell I - very selectively, I - deserve to be accused of all these fcuking tags in the names of feminism and male chuvanism, after spending considerable portion of my fcuking daily time doing something to the very blog community within my reach rather than weaving personal networks in the name of whatever_you_tell_me!! None of the people who know what happened wants to talk about these issues only because they either do not want to get into the bad books of some people or wary about the male-chuvanist pig seal that could be waiting for them in blog hell and woman cells. For the people, who propagated this nonsense things work(ed) charmingly. After all, this rogue wanted to make it as a Brahmin related issue (not even evil brahminic issue, but evil sound evoking Brahmin issue), and dragged few women as his sources, only because they are Brahmins, and it work far better among few. And, it is of course, not male-chuvanism, as after all these women are Brahmins. (as for the matter, I ain't a friend to two of them anyway). we are not going to look them as women as they are Brahmins. All - including the net progressive feminists and would be Buffies, the male chuvanist pig slayers - are happy with this set up, as for them too, Brahmin women = Brahminism. after all, as I pointed it out here, I should have slept with some Brahmin bloggers' mothers (search the correct blogs for the full references). as simple as it is. Period. Anyway, never mind. Harm has already been done, but at least it helped and helps me to look the man-woman issues in different and much more balanced as well as cottect perspective than I did some time back. இது தமிழ்மணத்திலே பதிவு வைத்திருக்கும் பெண்கள் மத்தியிலேயும் பெண்ணியக்காவலர்கள் மத்தியிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தினை மட்டும் குறியாக வைத்து புறோ ஆணாதிக்கச்சகதியைப் பயன்படுத்திக்கொண்டது. (தற்போது தன் பதிவுகளை முற்றாக அழித்துக்கொண்ட) இரவுக்கழுகு (அவற்றை நான் சேமித்து வைத்து, அவர் அழித்த இரவுக்கழுகு பதிவு முகவரியிலேயே ஏற்றியிருக்கின்றேன்), திராவிடக்கழுகு என்றளவிலே இச்சூழ்ச்சியை ஆண்சூழ்ச்சி என்று பாலபாரதி கொள்கிறாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால், பெண்ணியம், புறோ ஆணாதிக்கம் எனும் சொல்லாடல்கள் செயற்பாடுகளாக என்ன நிகழ்ந்தாலும், இலகுவாகத் தமக்குப் பிடிக்காதவர்கள் மீது தம் செயற்பாடுகளை அப்படியே அமுக்கிவிட்டு முத்திரை குத்திவிட்டு அனுதாபத்தைச் சம்பாதித்துப்போகச் சாத்தியப்படுகையிலே, இதுவும் ஆணாதிக்கச்சிந்தனையின் வழிப்பட்ட பெண்களின் தன்மையே என்று சொல்வது எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. ஒரு பூனையைப் பூனை என்று ஒத்துக்கொள்வதிலே என்ன குழப்பமிருக்கின்றது? அதற்கேன் நாயைப் போலவே நாலு கால்களும் ஒரு வாலும் இரண்டு கண்களும் ஒரு வாயும் கொண்ட வீட்டுவிலங்கு என்ற சுற்றிவளைக்கும் வாதம் தேவைப்படுகின்றது? ஓரளவுக்கு இஃது உங்களைக் குறித்து இப்படியான பெண்ணியத்தரகை வாழ்நாட்களுக்குக் குத்தகை எடுத்துக்கொண்டு இடையே ஒளிபுகாத்திரையைத் தொங்கவிட்டுக்கொண்டவர்களினை முற்றாக நம்பும் சுயமளிந்த பெண், ஆண்களினிடையே உங்களைப் பற்றிய ஒரு "புறோ ஆணாதிக்க" பிம்பம் தோன்றிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையின்பாற்பட்டதெனக் கொள்ளலாமா? அப்படியென்றால், சேரனுக்கும்... அதாவது நித்தியகாதலர்களுக்கும் உங்களுக்கும் எவ்விதமான வித்தியாசமிருக்கப்போகின்றது?)
பெண்ணியமோ, எந்த முற்செல்லவேண்டிய போராட்டத்தின் பாற்பட்ட செயற்பாடுகளுக்கான கருத்தாக்கவீயமோ தான்தோன்றித்தரகர்கள் கைவசப்படும்போது, செல்திசையும் செய்வீரியமுமிழக்கின்றது; அதன்பிறகு, தரகர்களின் தன்னலக்குடுவைக்கு மது நிரப்பிக்கொடுக்கும் இலக்கினைமட்டும் செவ்வனே அடையமட்டுமே உதவும். இந்நிலையிலே திறந்த விமர்சனம்மட்டுமே ஓரளவுக்கேனும் உதவக்கூடும். இந்தவிமர்சனப்பூனைக்குக் குறைந்தது ஒரு சுண்டெலியேனும் மணிகட்டவேண்டிய அவசியமுண்டு

ஆண்கள் சூழ்ந்த சந்திரிகா போன்றவர்களின் மாடவாழ்க்கை குறித்த உங்கள் வாதத்தைப் பார்ப்போம்; அநுரா பண்டாரநாயக்கா என்ற ஆண் முன்னிலைப்படாமல், சந்திரிகா குமாரணதுங்கா என்ற பெண் முன்னிலைப்பட்டதன் காரணம், ஓரளவுக்கு கணவனை அவமாக இழந்தவர் என்பதானாலுங்கூட, அதற்குமேலே அதிகாரத்தை அதற்குரிய வீச்சோடு வைத்திருக்க அவரது ஆள்திறன் பொருத்தமானதென்பதே காரணம். கொஞ்சம் யோசித்துப்பார்ப்போம்; அந்த அதிகாரம் கையிலே வைத்திருக்கும் பெண்ணுக்கு இருக்கும் வல்லமையா அல்லது வடகிழக்கிலே அடுத்த கணம் குறித்த பயத்தோடிருக்கும் ஓர் தமிழ்ச்சிறுவனுக்கிருக்கும் வல்லமையை சமூகத்திலே தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? உலக வரலாறு குறித்தும் மனித சமூகக்கட்டுமானமாற்றம் குறித்தும் ஐயாயிரம், ஐம்பதினாயிரம் ஆண்டுகாலம் பின்னோக்கிப் போய், கங்கை முதல் வால்கா வரை ஆதாரம் காட்டி இன்றைய நிலையைக் கட்டுடைப்பது நல்லதுதான்; ஆனால், நீங்கள் சொல்லும் கீழ்ப்படியிலிருந்து உடைத்து மீளச்சமைத்து மேலெழும் சமூகத்தை எப்படியாகக் கட்டப்போகின்றீர்கள்? அதுவரைக்கும் ஒரு பெண் தான் பேசும் மொழியின் அடையாளத்தினை முன்வைத்து வன்புணரப்பட்டதை அதிகாரத்தின் உச்சத்திலேயிருக்கும் இன்னொரு பெண் தவிர்க்கமுடியாததற்கு தந்தைவழிச்சமூகமென்ற காரணத்தினையே திரும்பத் திரும்ப முன்னாலே சாட்சிமரமாக வைத்துத் தொட்டுக் கொண்டு தப்பப்போகிறோமா? அப்படியானால், எனக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. தனியாள் தன் செயற்பாடுகள் எல்லாவற்றுக்கும் எப்போதுமே சமூகத்தினையே காரணம் காட்டிக்கொண்டிருக்காலாமென்று எண்ணினால், நேற்றிரவு சேர்பியாவிலே ஒரு கிழவிக்கு முன்னாலே செம்பூனை கடந்ததற்கும் கிழவி பயந்ததற்கும் நானும் காரணம்.

ஆண், பெண் தந்திரங்கள் எல்லாமே ஆணாதிக்கத்தின் பாற்பட்டவையா? இந்த வாதம் நல்லாயிருக்கிறதே. இரண்டு வயது மகன் ஏற்கனவே பயங்கரமான ஆணாதிக்கவாதியாகிருக்கின்றான், என் நண்பரின் மூன்று வயது மகள் ஆணாதிக்கவாதியாகவிருப்பதுபோல. நேற்று இரண்டு ஆணாதிக்கவாதிகளும் பார்பி பொம்மையின் காலையுடைத்துவிட்டு, நான் உடைத்ததாக என் பரிதாபத்துக்குரிய மனைவியிடம் ஆணாதிக்கத்தந்திரத்துடன் சொல்லினார்கள். பரிதாபத்துக்குரியமனைவி, என் ஆணாதிக்கத்தினைச் சாடினாளே ஓர் ஆணாதிக்கச்சாடல். அடடா! நல்லாயிருக்கிறதே. ஹையா! இனி பதிவுகளிலே வரும் பெண்களின் எல்லாக்கவிதை, கதை, கட்டுரைகளையும் ஆணாதிக்கத்தந்திர உத்திகள் என்று ஒரே அடியாக அடித்துவிடலாம். நீங்கள் இப்படியாக "ஆணாதிக்கவாதி என்பது அவ்வாறான சிந்தனைகளுடன்/தந்திரங்களுடன் இருக்கும் பெண்களுக்கும் பொருந்தும்" என்று சொன்னது ஆணாதிக்கத்தந்திரமில்லையே. எதுக்கும் ஆட்டத்திலே இறங்க முன்னால், முதலிலே அதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன். பிறகு இருக்கும் வம்புக்கு இனியுமேன் புதுக்கம்பு? :-)

-/பெயரிலி. said...

கறுப்பியின் ஆயிரம் பதிவுகளிலே பிடிக்கமுடியாது ஒளிந்தோ நழுவியோ கொள்ளும் நியாயமான கருத்துகளை நிருபா, நிவேதாவின் ஓரிரு பதிவுகளிலே என்னைப் போன்ற மீயாணாதிக்கவாதிகள்கூட பெண்கள் குறித்து ஒத்துக்கொள்கிறோம் என்பது ஒரு பக்கமிருக்கட்டும். ஆனாலும்,நல்ல ஆணாதிக்க தந்திரத்துடனான தரகுப்பதிவு

எல்லாமே கற்கும் பட்டறிவே

கறுப்பி said...

பெயரிலி

டீசேயின் பதிவைப் படித்துத்தான் சுருக்கமாக ஒருவரியில் பின்னூட்டம் போட்டேன். காரம் இல்லாமல் சும்மா நீட்டி எழுதி என்ன லாபம்:)- வேலைத் தளத்தில் இருந்து கொண்டு அது முடியாத காரியம்.
பெண் அரசியல்வாதிகள் ஆண்களின் ஒரு மறுபதிப்பே. சந்திரிக்கா கிரிசாந்தி, கோணேஸ்வரி சம்பவங்கள் போது என்ன செய்தார் என்று கேட்பது கோழைத்தனம்.
சமகால மக்களின் வாழ்க்கை நிலையில் இருந்துதான் நான் பின்னூட்டமிட்டேன். கடந்த வருட முடிவில் தொடர்ந்து மூன்று பெண்கள் ரொறொண்டோவில் அவர்களது கணவரால் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். இறந்த பெண்களைப் பற்றித் தாறுமாறாக எமது சமுதாயம் (பெண்கள் உட்பட) கதைத்துக்கொண்டு திரிகின்றது. இரு பெண்களின் மரண வீட்டிற்கு நான் சென்றிருந்தேன் அவர்களை எனக்குத் தெரியாத போதும் ஏனோ போக வேண்டும் போல் இருந்து. பின்நவீனத்துவம், முற்போக்கு பிற்போக்கு மாற்றுக்கருத்து சும்மா புலுடல்கள் எல்லாம் கேட்டுக் கேட்டு அலுத்துவி;ட்டது. சுயமாகச் சிந்தித்துத் தம்மைக் காத்துக்கொள்வதைத் தவிர பெண்களுக்கு வேறு விடிவு இல்லை.

கறுப்பி said...

பின்குறிப்பு பெயரிலி


இன்னும் இருபது வருடத்தில் - இருபது வருடம் என்பது தங்களுக்குப் பெரிதாக இருக்கலாம். இப்போதுதான் எனக்கு மகன் பிறந்தான் போல் இருக்கிறது ஆனால் அவனுக்கு இப்ப இருபது வயது. சமுதாயத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது? எனக்கு இருபது வயது கூடிவிட்டது, அவன் இப்போது பல்கலைக்கழகம் போகின்றான் அதை விடுத்து பெரிய மாற்றம் இல்லை.

-/பெயரிலி. said...

கறுப்பி,
1. இருபது ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த இருபது வயது ஆண்(-ஆதிக்கவாதி)களும் இப்போதிருக்கும் இருபது வயது ஆண்(-ஆதிக்கவாதி)களும் ஒரே வகையிலேதான் ஒரே வீச்சுடனேதான் செயற்படுகின்றார்களா?
இரு பாலார்களிலும் இருபது வயதினரிடையே எத்தனை வீதத்தினர் ஆணாதிக்கம்-பெண்ணடிமை (இப்பதங்களே தற்போது பயன்படுத்தப்படும் அளவிலும் விதங்களிலும் அவற்றுக்கான ஆரம்பகால வீரியம் கெட்டு, ஒரு செத்துப்போய் நாட்பட்ட எலிவீச்சமடிக்கின்றதாகத் தோன்றுகின்றது) குறித்த ஓர் அடிப்படைப்புரிதலையேனும் கொண்டவராக இருபதாண்டுகள் முன்னரிருந்தார்கள்? இப்போதிருக்கின்றார்கள்?
2. இருபதாண்டுகளுக்கு முன்னாலிருந்த சுமதியின் எண்ணங்களுக்கும் கருத்துநிலைக்கும் இப்போதிருக்கும் கறுப்பியின் எண்ணங்களுக்கும் கருத்துநிலைக்கும் ஏதேனும் மாறுபாடிருக்கின்றதா? இவற்றுக்கு, தனியே வயதின் முதிர்ச்சியும் பட்டறிவும் மட்டுமே காரணமா? அப்படியான சிந்தனை நிலை, செய்கைநிலை மாற்றமிருப்பின், அவரைச் சுற்றியிருக்கும் சமூகத்தில் ஆண்-பெண் நிலைகளிலே எவ்விதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்?

ஆண்மேலாதிக்க உளப்பாங்கு முற்றாக ஒழிந்துவிட்டதென்று நான் குறிப்பிடவில்லை. பெண்கள் மீதான உள, உடல்வன்முறைகளும் அற்றுப்போய்விட்டனவென்றும் நான் எங்கும் சொல்லவில்லை. போக வேண்டியளவு தூரம் போயிருக்கின்றோமென்றும் சொல்ல வரவில்லை. ஆனால், சரியான திசையிலே மாறுதல் இருபதாண்டு காலத்திலே குறைந்தது ஓரளவுக்கேனும் இவ்வகையிலே (ஈழத்)தமிழ்ச்சமூகநிலையிலே நிகழ்ந்திருக்கின்றன என்றே சொல்ல வருகிறேன். "ஆணாதிக்கமனநிலை எப்போதுமே மாறப்போவதில்லை" என்று சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. அப்படியாக நடைமுறையுமில்லை. அப்படியிருப்பின், எதற்காக பெண்ணியம் என்ற பெயரோடு பல செயற்பாடுகளைப் பெண்கள் முன்னெடுக்கவேண்டும்.

என் பதிவினையும் டிசேயின் பதிவிலான பதில்களையும் தவறாகப் புரிந்துகொள்ளாமலிருக்க, சுருக்கி வரிகளாகச் சொல்லிவிடுகிறேன்.
1. ஆண்மேலாதிக்க உளப்பாங்கு ஒழிந்துவிட்டதென்று சொல்லவில்லை; ஒளிந்துவிட்டதென்று ஓரளவுக்குச் சொல்லலாம்; குறைந்திருக்கின்றது என்று சொல்லலாம்
2. "பெண்ணியம் பேசும் ஆண்களை நம்பாதே" என்ற அறைகூவலை (அது 1938 ஆம் ஆண்டுக்குரியதென்றாலுங்கூட) முன்னிலைப்படுத்திவிட்டு, 'ஆண்மை-பெண்மை இவற்றை அழிப்போம்' என்று முடிவுக்கு வரும் நிலையிலே, எந்த ஆணையும் அறைகூவலிலே சொல்லப்பட்டிருக்கும் ஆணாகவும் சுட்டலாமென்ற நிலையிலே, ஆண்மை-பெண்மை சொல்லாடலை அழிப்பதை நடைமுறைப்படுத்த இருபாலாருக்குமிடையே ஓரளவுக்கேனும் ஒரு கணிசமானவர்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படவேண்டுமென்ற அவசியமான எண்ணம் மடிந்துபோகிறது.
3. சூழ்ச்சி, தந்திரம் என்பது ஆண், பெண் இருவருக்குமேதானிருக்கின்றன. தேங்காயை வாழைப்பழத்தைப் பறிக்கும் குரங்கிலே ஆண், பெண் பேதமிருக்கின்றதா? (கூர்ப்பை நம்புவோம்; இந்தக்குரங்குக்குணம் கூர்க்கவில்லை என்பதையுங்கூட ;-)) இதிலே, ஆண்களின் சூழ்ச்சியினாலானது இவ்வுலகம் என்று புனைவதிலும் பெண்களின் சூழ்ச்சியினாலானது இவ்வுலகம் என்பதும் பதிவுகளிலே பாராட்டுப்பின்னூட்டங்களுக்கு உதவலாம். ஆனால், வாழ்க்கை என்பது ஆண், பெண், அவையிரண்டுக்கும் அப்பாலான தன்மையர் எனப் பால்பேதமில்லாமல் எல்லோருக்குமேதான் அவ்வப்போது சுழிக்கச்செய்கிறது. இதிலே,எல்லாப்பழிகளினையும் ஆணாதிக்கத்தின் விளைவு என்று போட்டுவிடுவது, 'சைக்கோ'க்கள் எல்லாம் 'சைல்ட்குட் அபியூஸி'ன் விளைவே என்று ஒரே கட்டாக எல்லாப்பனங்கிழங்கையும் பானைக்குள்ளே போட்டு அவிப்பதுபோலத்தானிருக்கிறது.
4. சமூகநிலைக்கு அப்பாலும், தனியாளாக ஆணுக்கோ பெண்ணுக்கோ தனக்குக் கிடைத்திருக்கும் கதிரையின் அதிகாரத்தின்படி முடிவு செய்யவும் செயற்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அப்படியான நிலையிலே, அதிலே தன்னால், முடிந்ததைக்கூடச் செய்யாமல், பால்சாரழுத்தத்திலே பழியைப் போடுவது நியாயமானதில்லை.

கறுப்பி said...

பெயரிலி

நான் பிரேம் ரமேஷைப் பற்றியோ அல்லது டீசே, பெயரிலி பற்றியோ இல்லாவிட்டால் சுமதி பற்றியோ கதைக்கவில்லை. வயது கூடி விடுவதால் விளக்கம் வந்துவிடுமென்பதுமில்லை. சுமதிக்கு கணவன் என்ற முறையில் ஏற்படும் அடக்கு முறைகளையும், பெண்ணியம் பேசும் ஆண்கள் செய்யும் அக்கிரமங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து முடிக்கத் தெரியும். இது வயது முதிர்ந்ததால் ஏற்பட்டதல்ல, என்னை நானே திடப்படுத்திக்கொண்டதால் ஏற்பட்ட மாற்றம் என்றே நம்புகின்றேன். இந்தத் துணிவை நான் குடும்பம் கணவன் சமூகம் கடவுள் என்று ஆதரவுகளை நம்பி வாழும் ஒரு பெண்ணிடம் எதிர்பார்;க்க மாட்டேன். அவள் பாதிக்கப்படும் போது அந்தப் பெண் மேல் கோவம் கொள்ள முடியாது. இங்கே யார் மேல் கோவம் கொள்வது??

நீங்கள் கூறுவதை நான் ஒத்துக்கொள்ளுகின்றேன். நான் கூறியது போல் ஆண்கள் இப்போதும் எப்போதும் மாறப்போவதில்லை என்பதை இப்படியாகப் பார்ப்போம் அதாவது எளியதை வலியது எப்போதும் அடக்கும் என்பதற்கிணங்க. (சில தவிர்ப்புக்கள் இருக்கு)

பெண்ணியவாதியாக இருப்பது பெருமைப்பட வேண்டிய விடையம் அல்ல, வெறுமனே இருந்து விட்டுப் போக நினைத்தால் சரி, இருந்தும் கண் முன்னால் பல அநியாயங்களைக் காணும் போது பெண்ணியம் பேசுகின்றாய் பெண்களுக்கான என்ன செய்தாய் என்ற கேள்வியைப் பிறர் எழுப்பும் போதும் வெட்கமாக இருக்கிறது.

பத்மா அர்விந்த் said...

பதிவின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டுதான் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். வன்முறை செலுத்தும் போது ஆண் என்றோ பெண் என்றோ பாகுபாடு இல்லை. அது தனிப்பட்ட ஒருவரை சார்ந்தது. நிறைய ஆண்களை பாதிக்கப்பட்ட நிலையில் நான் சந்தித்திருக்கிறேன். இப்போது என்றில்லை முன்பே கூட. ஆனால் நான் எழுதுவதும் பேசுவதும் அடிப்படை உரிமைகள்கூட இல்லாத பெண்கள், விற்கப்படும் பெண்கள் உள்ளடக்கியது. டிசே சொல்வதுபோல நிறைய இடங்களில் பெண்கள் கூட பெண்களுக்கு கடிவாளம் போடுவதுண்டு. இவை அனைத்தையுமே பொதுநிலைப்படுத்த முடியாது. அலிமோனியை அப்யோகம் செய்யும் பெண்கள் பார்த்து எல்லா பெண்களுமே அப்படி என்றோ, அதேபோல குழந்தைகளுக்கான உதவியை தராத ஆணை பார்த்து எல்லா ஆண்களுமே அப்படி என்றோ சொல்ல முடியாது.
நீங்கள் கூறியுள்ள கருத்து 3 உடன் உடன்படுகிறேன். நிறைய எழுதலாம். தனிப்பதிவாய் போட்டால் போயிற்று.
வருத்தம் என்ன என்றால் நாம் ஆண் என்றும் பெணணெனும் பேசுவதுதான். மனிதர்களாக நாம் பார்க்க தெரிந்து கொள்வதில்லை. ஒரு பதிவர் என்பதைவிட ஒரு பெண்பதிவர் அல்லது ஆண் பதிவர் என்றூ அடையாளம் கட்டி வருவதுதான் (புள்ளியியலுகாக அல்லாமல் பொதுவாகவே)வேதனை.

-/பெயரிலி. said...

கறுப்பி,
/அவள் பாதிக்கப்படும் போது அந்தப் பெண் மேல் கோவம் கொள்ள முடியாது. இங்கே யார் மேல் கோவம் கொள்வது??/
இதற்குப் எல்லோருக்கும் பொதுவான பதிலென்று எதுவும் கிடையாதென்றே எனக்குப் படுகிறது. அந்தந்த சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்துக்கும் நிலைமைக்குமேற்பவே யாரேனும் பதிலைச் சொல்லமுடியுமெனத் தோன்றுகின்றது.

பத்மா,
/ஒரு பதிவர் என்பதைவிட ஒரு பெண்பதிவர் அல்லது ஆண் பதிவர் என்றூ அடையாளம் கட்டி வருவதுதான் (புள்ளியியலுகாக அல்லாமல் பொதுவாகவே)வேதனை./
பொதுவாகப் பதிவர் எனும்போது, நிச்சயமாக ஆண்-பெண் என்று பிரிப்பது அநாவசியமானதுதான். ஆனால், பெண்/ஆண் என்பதை (அல்லது பால், மதம், சாதி....) வைத்து, ஒரு பதிவோ, பதிவரோ பேசும்போது, பெண்பதிவர்/ஆண்பதிவர் என்பது விவாதப்புள்ளி கருதித் தவிர்க்கமுடியாததாகின்றது.

Anonymous said...

கறுப்பி

//இந்தத் துணிவை நான் குடும்பம் கணவன் சமூகம் கடவுள் என்று ஆதரவுகளை நம்பி வாழும் ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்க மாட்டேன். அவள் பாதிக்கப்படும் போது அந்தப் பெண் மேல் கோவம் கொள்ள முடியாது. இங்கே யார் மேல் கோவம் கொள்வது??
//

எதற்காக பிறரை நம்பி வாழும் தன்மையைப் பெண் பெறுகிறாள் எனச் சிந்தித்தால், இந்தக் கோபத்திற்கான விடை கிடைக்கும் என்று முற்றிலும் நான் நம்புகிறேன். ஒரு பெண், தானாகத் தனித்துப் பிறப்பதில்லை, ஆணாதிக்க உலகமாயினும் கூட அவளின் மிக நெருக்கமான உறவான தாயும் ஒரு பெண்ணே. ஒரு பெண் இந்த உலகினை மிகச் சுலபமாக சிறு வயதில் இருந்தே இவர்களின் (தாய், தந்தை, உடன் பிறந்தோன்/ள் மூலம் பார்க்க முயலலாம். ஆனால், எனக்குத் தெரிந்து அந்தத் துணிவு (தன்னை, தன் மேல் சுமத்தப்பட்ட சமுக நிற்பந்தத்தை, தனது ஆற்றலை.... இப்படி இன்ன பிற) அவ்வளவு சாதாரணமாகப் பிறரைச் சார்ந்து வாழும் ( பொருளாதாரச் சார்பை மட்டும் நான் இங்கு சொல்லவில்லை) பெண்களிடம் காண முடியாது. இந்தக் குணம் ஆணாதிக்க மனப்பான்மையை பெண்கள் தன்னளவில் சற்றும் பிசகாமல் நம்பியதால் வந்ததாகக் கொண்டாலும், இதற்கு ஒரு படி மேல் சென்றே நான் எப்பொழுதும் இனங்காண முயல்வேன். அப்படி இனங்கண்டோமேயானால், இந்தக் கோபம் எங்கு செல்லவேண்டும்/ அல்லது தேவையா/ யார் காரணம் என்பது புலனாகும் அல்லவா?


சாரா

கொண்டோடி said...

பெயரிலி,
விளங்கியதைக் கொண்டு நிறைய விடயங்களோடு ஒத்துப் போகலாம் போலுள்ளது ( விளங்காதது எழுத்துநடையன்று).

ஆண்மை, பெண்மை என்பவற்றை அழித்தல் போன்ற உயர்மட்ட விவாதச் சொற்கள் விளங்கவில்லையாதலால் அவைபற்றி எதுவும் சொல்லவரவில்லை. (இந்தக் கோட்பாடுகளை அலசிக் கலந்துரையாடி ஒலிப்பதிவுகளேதும் வராவென நம்புவோமாக!)

பெண் ஆட்சியாளர், அடக்குமுறையாளர் தொடர்பாகக் கதைக்க நேரும்போது, பலர் அவர்களுக்குப்பின்னாலும் ஆணாதிக்கமே இருப்பதாகச் சொல்லி முற்றுப்புள்ளி வைப்பதை இங்குத் தொட்டிருக்கிறீர்கள்.
இதுபோலவே 'சீதனம்' தொடர்பான விவாதங்களிலும் கையாளப்படுகிறது. சீதனம் பெறுவதில் பெண்களும் மூர்க்கமாகவே நிற்கிறார்கள் என்பதைப் பற்றிக் கதைத்தால், "சேச்சே! அது அவளது கணவனினதும் மகனினதும் வற்புறுத்தலின் பேரிலேயே" என்று சொல்லி முடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். எல்லாத் தாய்மாருமே அப்படியா என்பது எனக்கு விளங்கவில்லை.
முக்கியமான கட்டத்தில், 'அதெப்படி சீதனத்தால் பாதிக்கப்பட்டவள் இன்னொருத்திக்கு அதே கொடுமையைச் செய்வாள்?' என்றுவேறு கேட்டு வைப்பார்கள்.
நல்ல கேள்விதான். எனக்கும் அது விளங்கவில்லை. பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் பாதிக்கப்பட்டவன்/ள் அடுத்தமுறை அதையே - சிலவேளை அதைவிடவும் அதிகமாக - மற்றவர்களுக்குச் செய்வது எப்படி என்பது விளங்காதது போலவேதான் இதுவும். ஆனாலும் சீதனம் கேட்டு நச்சரிக்கும் தாய்க்குப் பின்னாலிருந்து வற்புறுத்துவது கணவனும் மகனும் தானெனச் சொல்லிவிடுவது யதார்த்தத்தை மீறித் தப்பிக்கும் நோக்கமே. இச்சிக்கலில் யார் யாருக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு கொடுக்கட்டு விவாதிக்கப்பட வேண்டும்.

இதுபோலவே, 'வெளிச்ச வீடுகள் தேவைப்படுவோர் படிக்கவேண்டிய குறிப்புக்கள்' என்ற சிறுகதை தொடர்பான விவாதத்திலும் நடந்தது. அவர்களே சொன்னதன்படி "சிறுவரின் குதங்களைக் குறிகளால் கிழித்தவர்களும், யோனி தயார்ப்படுத்தப்பட முன்பே சிறுமிகளைச் சிதைத்தவர்களும்" அதைச்செய்த இராணுவத்தினர் இல்லையாம். அவர்கள்மேல் பரிதாபம்தான் வருகிறதாம். முழுப்பழியும் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய பீடாதிபதிகளையும் அரசியல்வாதிகளையும்தான் சாருமாம்.
என்னைக்கேட்டால் இதுதொடர்பில் இருதரப்புமே (செய்தவர்களும் அனுப்பியவர்களும்) பாத்திரவான்கள். எவரெவருக்கு எவ்வளவு பங்கிருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு கொடுத்துவிட வேண்டும் (வியாபாரத்தில் லாப - நட்டப் பங்கைப் போல).

தனக்கு விளங்காச் சிங்களம் பிடரிக்குச் சேதம் எண்டமாதிரித்தான் இந்த விசயங்களில கொண்டோடியின்ர நிலையும்.

தமிழ்நதி said...

விவாதங்கள் தெளிவுகளைத் தரலாம். ஆனால் முடிவுகளைத் தரவியலாது. பொதுவாக ஆட்களுக்கு அவர்தம் கருத்துசார்ந்து இன்னின்னார் முத்திரை குத்தப்படுவதே தவறென நினைக்கிறேன். அதிகாரம் என்பது சூழ்நிலையைப் பொறுத்து இருபாலாரும் கையிலெடுத்துக்கொள்வதுதான். அதில் நாடு,மொழி,இனம்,பால் என்ற வரையறை கிடையாது. ஆனால், பெண் என்பவள் ஆரம்பத்திலிருந்து இரண்டாம் பிரஜையாகவே பார்க்கப்படுகிறாள், நடத்தப்படுகிறாள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்காது. பெண் நிலை என்பது மாறியிருக்கிறதுதான் ஆனால் எந்தளவிற்கு என்பது கேள்விக்குரியதே.

-/பெயரிலி. said...

கொண்டோடி,
சீதனம் என்பது, "அம்மாக்களால், சகோதரிகளுக்கு, சகோதரர்களால்" என்பதாகவே திரும்பத்திரும்பப் பேசப்பட்டுவருகின்றது. "பெட்டை பெடியனிலும் வலுகூடப் படிச்சிருக்கிறாள்; அதால, அவனுக்கு அதைச் சரிக்கட்டக் கொஞ்சம் கூடச் சீதனம் குடுக்கோணும்" என்றதிலிருந்து "பெடியன் சீதனம் வாங்கமாட்டன் எண்டுறார். உப்பிடி மறைக்கிறதில்லை ஏதாச்சும் பிழையிருக்கோ தெரியேல்லை" என்பதுவரை அம்மா, அப்பா, ஆண் & பெண் உறவினர்கள் பேச, நடந்த நடக்காத கலியாணங்களைப் பார்த்திருக்கிறேன்; பார்க்கிறேன். அநேகர் தமக்கென்று வரும்போது, ஒரு நடைமுறைத்தளமும் பிறர்க்கென்று வரும்போது ஒரு கருத்துத்தளமும் வைத்துக்கொண்டே வாழ்கின்றார்கள்; இஃது எமக்கும் வெவ்வேறு விடயங்களிலே பொருந்தும். அதற்குமேலே இதை விவாதிக்கும் வல்லமை எனக்கில்லை :-(

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்நதி,

/விவாதங்கள் தெளிவுகளைத் தரலாம். ஆனால் முடிவுகளைத் தரவியலாது./

முழுக்க ஒத்துக்கொள்கிறேன்(.... தெளிவான விவாதங்கள் எனும்போது மட்டும்; நான் பேசினால், தெளிவில்லை என்று அமுக்கிவிட்டு மணிரத்தினத்தின் படமகளிரை இருட்டுக்குள்ளேயே படம்பிடிப்பது சரியா தவறா என்பதே தெளிவான விவாதமென்று நகர்ந்துவிடுவார்கள் :-))


/பொதுவாக ஆட்களுக்கு அவர்தம் கருத்துசார்ந்து இன்னின்னார் முத்திரை குத்தப்படுவதே தவறென நினைக்கிறேன்./

ஆட்களுக்கு அவரவர்தம் கருத்தைச் சார முத்திரை குத்துவது தவறா என்று தெரியவில்லை. (இல்லை என்பது என் கருத்து; அதற்காக பாஸிஸம், புரட்சிஸம், பின்_நவீனத்துவம்ஸம் என்றெல்லாம் சட்டைப்பைக்குள்ளே அகப்படும் இலச்சனை எல்லாம் எடுத்து மெழுகுருக்கி ஒட்டுவதை ஒத்துக்கொள்ளமுடியவில்லை). ஆள் வேண்டப்பட்டவரா இல்லையா என்பதை வைத்து கயிற்றைப் பாம்பென்றும் பாம்பைக் கயிறென்றும் விதந்தோத்துவதிலும் மிதித்துத்தள்ளுவதிலும்விட, ஆளின் கருத்தைவைத்து அவருக்கு (தேவைப்படின்) முத்திரை குத்துவதிலே தவறில்லை என்பதே என் கருத்து.

ஆனால், *தனிப்பட்ட பட்டறிவின்படி* நிச்சயமாக அதைவிட மிகத்தவறு (குற்றம்?), ஆட்களுக்கு அவரவர் கொள்ளாத கருத்தைக்கூட அவர்களினதாகப் பறக்கிற கழுகும் நடக்கிற நாயும் மிதக்கிற மீனும் 'அடிக்கிற காத்திலே ஆறு அடிக்கிறதுமாதிரி துடுப்பைப் பந்திலே விசுக்கிவிட்டு' தாம் தம்மைச் சார்ந்தவர்களுக்காகப் பரப்பவிரும்பும் கருத்தைச் சார்ந்து முத்திரை குத்திவிட்டுப்போவது. (குறிப்பாக, பெரியாரும் பெண்விடுதலையும் என்று மாங்குமாங்கென்று பதிவெழுதிவிட்டு, அடுத்த கணத்திலே, "உங்கக்கா பார்ப்பானோடு படுத்தாளா?" என்று விடாது அஞ்சலனுப்பும் வகையறாக்கள் இரவுக்கழுகுகளாக பெண்ணியத்தை முன்வைப்பதும் திண்ணியமேதான் என்பதை மிகுதி பெண்ணியர்கள் + பெரியாரிகள் + பின்_நவீனத்துவர்கள் புரிந்துகொண்டும் ஊக்குவிக்கும்வரை, இவர்களையும் போலிப்பெரியாரிகள், போலிப்பூக்கோக்கள், போலிப்பெண்ணியர்கள் என்று முத்திரை குத்துவதிலே எனக்கும் உவப்பும் ஒத்துழைப்பு வழங்குதலும் முற்றாகவுண்டு). I am matured enough to distinguish (and extinguish) the would_be matinee idols, who crave the fanfare of the teenage girls from the real revolutionaries. :-)


/அதிகாரம் என்பது சூழ்நிலையைப் பொறுத்து இருபாலாரும் கையிலெடுத்துக்கொள்வதுதான். அதில் நாடு,மொழி,இனம்,பால் என்ற வரையறை கிடையாது. /

நன்றி. நன்றி. நன்றி. இதைத்தான் சொல்ல இப்பதிவிலும் இதற்கு முன்னான ஒரு பதிவிலும் இத்துணை முயன்றேன்.


/ஆனால், பெண் என்பவள் ஆரம்பத்திலிருந்து இரண்டாம் பிரஜையாகவே பார்க்கப்படுகிறாள், நடத்தப்படுகிறாள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்காது. பெண் நிலை என்பது மாறியிருக்கிறதுதான் ஆனால் எந்தளவிற்கு என்பது கேள்விக்குரியதே./

ஆரம்பம் என்பது எதுவென்பது எனக்குத் தெரியவில்லை (தாய்வழிச்சமூகக்கருத்துமானக்காரர்கள் களத்திலே குதித்துக் கருத்துச் சொன்னாலொழிய எனக்குச் சொல்ல எதுவுமில்லை). ஆனால், என்னளவிலே ஒரு காலகட்டத்திலிருந்து இரண்டாம்நிலையிலேயே வைக்கப்படுகின்றாளென்பதை மறுக்கவில்லை. கறுப்பிக்கான பதிலிலும் இதையே சொல்லியிருக்கின்றேன்.

தவிர, மெடியாவும் சரி சாப்போவும் சரி கட்டுரை எழுதுகின்றவர்கள் அவர்களூடாகச் சொல்லவிரும்பும் கருத்துகளுக்கான வெறும் கடத்திகளே; வேறேதுமில்லை. நடைமுறை வாழ்க்கையிலே பேரூந்திலே பெண்ணிருக்கையிலேயிருந்து எழுவதுமட்டுமே (எழுதுவதற்கப்பால்) ஆண்களின் பெண்ணியம் என்றும் தனது தனிப்பட்ட அராஜகத்தை ஆண்களின் அதிகாரம் என்று திரிக்கமுயல்வதுமே பெண்களின் பெண்ணியம் என்றும் காண்கின்றபோது, இப்படியான மெடியா, சாப்போ கட்டுரைகளும் கட்டுமானமுடைப்புகளும் கட்டுரைக்காரருக்கான பிம்பத்தைச் சமைக்க உதவும் கருவி என்பதற்கப்பால் ஒதுங்கிப் போகமட்டுமே வைக்கின்றன. அதற்குமேலே, "எஸ். ராமகிருஷ்ணனுடன் மாலதி மைத்ரியை மட்டும் இப்படி சொல்லியிருந்தால், நடந்திருப்பதே வேறு" என்று சவா(ட)லுக்கு உதவலாம். அவ்வளவுதான். இப்படியாகப் பெண்ணியம், காகிதத்திலும் கணணியிலும் பேசும் ஆண்கள், பெண்களின் திரைக்கப்பாலான தன்னை முன்னிலைப்படுத்தும் திட்டவட்டமான அரசியல், ஒதுங்கிப்போய், பூ, புழு, பூச்சி படம் பிடிக்கிறதும் சமையற்சேர்க்கைக்குறிப்பெழுதுவதும் குழந்தைவளர்ப்புக்கான நுணுக்கக்குறிப்புவாசிப்பதும் ஆர்வத்தைக்கூட்டுகின்றன. வெட்டி(ப்) பேசுகின்றவர்கள், ஒத்தி ஒட்டுகிறவர்கள் நிலவையும் உலகையும் விண்டு வென்றுவரும் பெண்ணியவாதிகள், வாலிகளாக லெஸ்போவின் சாப்போவும் பாரிசின் சிமொண்டிபூலரும் ஆசீர்வதிப்பாராக.

அற்புதன் said...

//நீங்கள் சொல்லும் கீழ்ப்படியிலிருந்து உடைத்து மீளச்சமைத்து மேலெழும் சமூகத்தை எப்படியாகக் கட்டப்போகின்றீர்கள்?//

பெயரிலியின் பல கருதுக்களோடு எனக்கு விளங்கிய வரையில் உடன் பாடு உண்டு.மேலே டிசேயிடம் கேட்ட கேள்வியை நான் பல தடவை பல விடயங்கள் சம்பந்தமாக பலரிடம் தொடர்ந்து கேட்டிருக்கிறேன்.ஆனால் இதுவரை இவர்களிடம் இருந்து வரும் பதில்கள், நாம் தனி ஆட்கள் எம்மிடம் தீர்வு இல்லை, அல்லது எனக்குத் தெளிவு இல்லை அல்லது எங்களுக்கு தீர்வைச் சொல்வதற்கான அவசியம் இல்லை என்பதே.அது பெண்ணியம் ஆக இருக்கட்டும் போராக இருக்கட்டும் தேசியம் ஆக இருக்கட்டும்.விமர்சனம் எதனைப் பற்றியும் எவர் பற்றியும் எவரும் முன் வைக்கலாம்.இவற்றிற்கு அப்பால் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைக் காண்பதே சீரழிக்கப்பட்டவர்களுக்கும், படுபவர்களுக்கும் விடிவைத் தேடித் தரும்.உந்த விமர்சகர்களால் அப்படியான தீர்வை முன் வைத்து என்றுமே பேச முடியாது, ஏனெனில் அவர்கள் தங்களை அறிவுஜீவுகளாக/பெண்ணியவாதிகளாக/மக்களின் காவலர்களாக காட்டிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் ஒரே தற்காப்பு அது தான்.எந்தக் கணத்தில் இவர்கள் தீர்வு பற்றிப் பேசத் தொடங்கிறார்களோ அந்தக் கணத்தில் அந்தத் தீர்வு பற்றிய விமர்சனம் இன்னொருவரால் முன் வைக்கப்படும்.தமது ஒளி வட்டத்தைப் பாதுகாக்க நினைக்கும் இந்த விமர்சகர்கள் அதனாலையே தீர்வு பற்றிப் பேசுவதில்ல.ஏனெனில் அவர்களுக்குப் பிரச்சினைகளே முக்கியம், பிரச்சினை இருந்தால் தான் இவர்கள் அறிவுஜீவுகளாக தமது காலத்தைக் கடத்தலாம், விமர்சனம் எழுதலாம், தீர்வுகள் முக்கியம் அல்ல.

-/பெயரிலி. said...

அற்புதன்,

தற்பாதுகாப்புக்காக ஒரு குறிப்பு: நான் சொல்ல வந்தது, தற்செயலாக டிசே எடுத்துப்போட்ட கட்டுரையின் பின்னான பிரேம்-ரமேஷ், மற்றும் அவர்களைப் போன்ற கருத்தளவிலே பெண்கள் சம்பந்தமான விவாதங்களைச் செய்பவர்களை நோக்கிய பொதுவான கேள்விகளொழிய, டிசேயினைத் தனியே பிரித்துச் சுட்டிக் கேட்கப்பட்டதல்ல - டிசேயின் வசனத்தினை உட்படுத்தியதானாலுங்கூட. அதைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

இப்படியான "கேள்விகள் மட்டுமே எங்களிடமிருக்கின்றன; பதில்களைத் தாருங்கள்" ("பதில்களைத் தேடுகிறோம்" என்றுகூட பல சந்தர்ப்பங்களிலே வருவதில்லை) வகையான நிலை பின்_நவீனத்துவத்தின் ஒரு கட்டாயமான கூறு என்பதான மாயை ஊழிசூழ்தமிழுலகிலே அதிகளவிலே 'ஓரிரண்டு இரண்டு' வாய்ப்பாடாகியிருக்கின்றது. இது பலருக்கு மற்றவர்களையும் தங்களையுமே திருப்திப்படுத்திக்கொள்ளும் வசதியைச் செய்து தந்திருக்கின்றது. தருகின்றது. "கேள்விகள் மட்டுமே எங்களிடமிருக்கின்றன; பதில்களைத் தாருங்கள்" தேவைப்பட்ட காலத்தினையும் நோக்கினையும் வசதியாக மறந்துகொள்கிறனர் அல்லது மறைத்துக்கொள்கிறனர். பெண்களுடனான அணுகுமுறைகளும் சிலரிடம் இதேபோலத்தான் இருக்கின்றன. முற்போக்கு அறிவுஜீவித்தனம், பின்_நவீனத்துவம் இவற்றின்பின் நின்றுகொண்டு சிலரால் பெண்கள் தொடர்பான தமது செயற்பாடுகளையும் நியாயப்படுத்திவிடமுடிகின்றது; இவற்றையே இவர்களின் கருத்தாக்கங்களைப் பற்றிப் பேசாத இன்னொருவர் செய்திருந்தால், புலி தொடக்கம் பொல்பொட்வரைக்கும் இவர்களின் ஆதாரங்களாக முன்வைக்கப்படும்; தூ என்று முகத்திலே துப்பிவிட்டும்போவார்கள். வானத்தைத் தவிர எல்லாத்திசைகளிலும் எல்லாக் கேள்விகளுக்கும் துப்புவார்கள். சொந்தமாகத் துப்ப எச்சில் இல்லாவிட்டால், இரவல் வாங்கியும் துப்பத் தயங்கமாட்டார்கள். துப்புவதுதான் முக்கியம்; எதுக்கு எப்போது என்பதல்ல. துப்புவதற்கு மாற்றென்னவென்று கேட்டால், கேட்டால், கேட்டால்..... அட, நீங்களே கேட்டுப்பாருங்கள். (முகத்துக்கு ஒரு முகமூடியோ, அல்லது குறைந்தது கழுவுவதற்க்குக் கொஞ்சம் தண்ணீரும் சவர்க்காரமும் எடுத்துவைத்துக்கொண்டு).

அட அதைத்தான் விடுங்கள்; "பெண்கள் குறித்து குறிப்பிட்ட பெண்களின் கருத்தாக்கங்கள்தான் சரியானவை; மற்ற பெண்களின் பெண்கள் குறித்த கருத்தாக்கங்கள் முழுக்க முழுக்கப் பிற்போக்கானவையும் ஆண்களின் கருத்துகள் பெண்களினாலே முன்வைக்கப்பட்டவையுமாம்" என்ற பெண்ணிலைக்கருத்தினை ஒரு முறை வாசிக்க நேர்ந்தது. இரு புறங்களிலிருந்தும் விவாதம் வந்து நடந்தபின்னால், இப்படியான முடிபுகள் வைக்கப்படுவதே முற்போக்கு என்றும் சுதந்திரமான கருத்தாக்கங்களுக்கு இடமளிப்பவர்களுக்குமான கருத்துநிலை என்று எனது நம்பிக்கை. ஆனால், அப்படியாக எதுவுமே நிகழாமல் சரி-பிழை முடிவு கொள்ளும் 'முற்போக்கு' திகைக்கவும் முற்போக்கு என்பதும் தானே தனிப்பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே (பெண்)போக்கென்றும் இருக்குமென்றால், கொண்ட கருத்துநிலைக்கப்பால், இரு புறங்களும் நடைமுறையிலே என்ன வித்தியாசம்?

Chandravathanaa said...

பெயரிலி,
உங்கள் பதிவையும் படித்தேன். சில நாட்களுக்கு முன்னர் டிசேயின் பதிவையும் படித்தேன்.
வழக்கம் போல உங்கள் பதிவை இன்னுமொரு தரம் படித்தால்தான் முழுக்கருத்தையும் நீங்கள் எழுதிய கோணத்திலேயே ஓரளவுக்காவது நோக்க முடியும். அப்படி நோக்கினாலும் எனது கருத்தைத் தருவேன் என்று சொல்வதற்கில்லை.

இத்தனை தூரம் ஒவ்வொரு பிரச்சனைகளும் அலசப் படுவதே பெண்களின் வாழ்வில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கூறுகிறது. ஆனால் எந்தளவுக்கு இன்னும் மாற்றங்கள் வரும் என்பது கேள்விக்குறியே. நீங்கள் பேசுங்கள். நான் தள்ளி நின்றே கருத்துக்களை உள் வாங்குகிறேன்.

டிசேயின் பதிவை வாசித்த போது என்னுள் எழுந்த சில கேள்விகளில், சில உங்களிடமும் எழுந்திருப்பதைக் கண்டேன்.

அற்புதன் said...

பெயரிலி நான் டிசே கூறியதை மேற் கோள் காட்டினேன் தவிர அவரை மட்டுமல்ல நான் கேட்டது,அது ஒரு பொதுவான கேள்வி. நீங்கள் சொல்வதைப் போல் 'கேள்விகள் தான் எங்களிடம் உண்டு பதில்கள் இல்லை' என்பது எங்கிருந்து வருகிறது என்பதையும் அறிவேன்.
தமிழ் இலக்கிய உலகை பீடித்திருக்கும் வசதியான ஒரு நோய் பின் நவீனத்துவம் என்பதே எனது கருத்து.தமிழில் அதன் பிதா மகன் அ மாக்ஸ் என்பதையும் அறிவேன்.தாம் கூறும் கருத்துக்கும் செயற்பட்டிற்க்கும் சம்பந்தம் ஏற்படத் தேவையில்லை என்பதற்கு பிரதியை மட்டுமே நோக்குங்கள் எண்டு ஒரு வசதியான கோட்பாடு.இதன் படி ஒருவர் எந்தளவுக்கும் நடைமுறைச் சாத்தியம் அற்றவற்றை எழுதலாம் அதே நேரம் அதற்கு நேர்மாறாக தனது நடை முறைகளை அமைத்துக் கொள்ளலாம்.ஒருவர் எந்தளவுக்கும் சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேசலாம், செயற்படுபவர்கள் பற்றியும் அவர்கள் செயற்பாடுகள் பற்றியும் எந்தளவுக்கும் விமர்சிக்கலாம்,பின்னர் இதில் எதுவுமே தமக்கு சம்பந்தம் இல்லை எனக்கு ஒரே stress ஆக இருக்கு எண்டு கொலிடே போகலாம்.கொலிடெ போவதில் பிழை இல்லை,ஆனால் எழுதப்படும் 'பிரதியில்' உழன்று கொண்டிருப்பவர்களுக்கும்,தீர்வை நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருப் பவர்களுக்கும் ,இவ்வாறு விடுபட்டுப் போக முடிகிறதா?(இது ஒரு பொதுவான உதாரணம் எவரையும் குறிப்பிட்டு அல்ல) நான் சொல்ல வருவது இன்னும் விளங்கப்படுத்த வேணும் இல்லா விட்டால் பிழையான புரிதல் தான் ஏற்படும்.பேசுங்கள் ஆனால் உண்மையாகப் பேசுங்கள், தீர்வை நோக்கிப் பேசுங்கள், நடைமுறையில் எப்படி இவற்றைத் தீர்க்கலாம் என்பதாகப் பேசுங்கள்.கட்டுடைப்பது மட்டும் சமூகக் கடமை இல்லை, கட்டியமைப்பதுவும் மிக முக்கியமான சமூகக் கடமை.கட்டியமைக்காமல் கட்டுடைப்பது சமூகத்தை சீர்குலைக்கும்.

புலத்தில் தமிழ் இலக்கியச் சந்திப்புகளில் பெண்ணிய வாதிகளின் கூத்துக்களைப் பார்த்தாலே தெரியும் இந்த போலித் தனம்.காத்திரமான சமூக நோக்கம் உள்ள எழுத்துக்கள் எப்போதும் உண்மை பேச வேண்டும் என்பதே எனது கருத்து.இதற்கும் ஒரு கோட்பாடு இருக்கு பல உண்மைகள் இருக்கலாம் எண்டு.

மொத்ததில உதுகளை வாசிக்காம நடக்கிறதைப் பார்ப்பதே மேல் என்று தெரியுது.முன்னரும் முற்போக்கு,பிற்போக்கு,நற் போக்கு எண்டு பெரிய கோட்பாடுகள் எல்லாம் இருந்திச்சு.ஆனா மக்களும்,போரும்,அரசியலும் இவைகளைப் பற்றிக் கவலைப் படாம இன்னொரு திசையில் பயணித்தது, இப்போதும் அப்படித் தான் .

-/பெயரிலி. said...

அற்புதன்,
தன்னளவிலே பின் - நவீனத்துவப்போக்கு என்பது மேற்கிலே உலகப்போரின் பின்னேயும் குடியேற்றங்களின் விடுதலைப்போர்களின் போதும் தவிர்க்கமுடியாததாகவே பல துறைகளிலும் எழுந்தது. சில (இடை)வெளிகளை நிரப்ப பின் - நவீனத்துவக் கருத்துத்தொகுதியின் ஏதோவொரு பார்வை மிகவும் பயன்பட்டதும் உண்மை. ஈழத்தமிழரிடையே. போராட்டத்தின் சிதைவின்பின்னான, புலிகள் தவிர்ந்த புலம்பெயர்ந்த மிகுதி இயக்கத்தினரிடையேயும் கருத்தாந்திகளிடமும் இதன் பயன்பாடும் அதே வகையிலே தவிர்க்கமுடியாததாகவே ஆரம்பத்திலே இருந்தது. தமிழகத்திலும் மரபுசார்மார்க்ஸியக்கட்சிகளின் போக்கிலேயிருந்து விடுவிடுத்துக்கொண்டு தலித்தியம், பெரியாரியம் போன்றவற்றினைக் கண்டு கொண்ட (பழைய) மார்க்ஸியர்களிலேதான் இது தொடங்கியதாக எனது புரிதல். தமிழகத்திலே அ. மார்க்ஸ்தானா முதலிலே இதனைக் குறித்துப் பேசினார் என்பது எனக்குத் தெரியாது. இது குறித்த வரலாற்றின் வாசிப்பு எனக்கு மிகவும் குறைவு. அதனால், சரியாகத் தெரியாத விடயத்திலே கருத்துச் சொல்லவிரும்பவில்லை. ஆனால், இப்போது, பாம்பின் பல்லைப் பிடுங்கிவிட்டு, பாம்புப்பெயரை வைத்து எல்லோரும் மகுடிப்பித்தலாட்டுவது பெரிதானதாகிப்போயிருக்கின்றது.

Anonymous said...

இரவுக்கழுகு தமிழ்வெளியிலே சேந்துக்க கேட்டிருக்கு. கருத்துசுதந்திரமா இந்த தி. ராஸ்கோல்கழுகையும் பெரியார்கள் தாசர்கள் சேத்துக்குவாங்களா?