Sunday, May 21, 2017

ஒத்தோடிகள்: சிக்கல் ஒன்று

ஒத்தோடிக்கும்பலினதும் அவைபோட்ட விதைகளினதும் இவற்றுக்கு ஈடான மே 18 இற்குத் தமிழகத்திலிருந்து வன்மத்தினையும் காழ்ப்பினையும் கக்கிய கும்பலினதும் தொடர்ச்சியான தமிழ்த்தேசியம் தொடர்பான செயற்பாடுகள் (புலிகள்மீதான தாக்குதல் உட்பட) ஆதாரங்களுடன்கூடியவையாகப் பெருமளவிலே இருப்பதில்லை; அழுத்தமாக வடிவமைக்கப்பட்ட உளநிலைத்தாக்குதலாகவேயிருக்கின்றன.

இலங்கை முஸ்லீம்கள் நிலை தொடர்பாக, இலங்கையிலே சாதிவெறி தொடர்பாக, இலங்கையிலே மதவெறி தொடர்பாக, இலங்கையிலே பிரதேசவாதம் தொடர்பாக, இலங்கையிலே மலையகத்தமிழரின் நிலை தொடர்பாக, இலங்கையிலே பெண்கள்மீதான வன்முறை தொடர்பாக நிகழும் எதையும் தமிழ்த்தேசியத்தின் தேய்கூற்றின் விளைவுகளாகவும் புலிகளின் வலதுசாரியகூற்றாகவுமே வெறும் வார்த்தைகளாலே திரும்பத்திரும்பக் குழுக்களாக வந்து உச்சரித்து, தரவுத்திரிபும் வரலாற்றுக்கோணலும் செய்வதே இவர்களின் முழுச்செயற்றிட்டமாகவிருக்கின்றது. குறைந்தபட்சம் தமிழ்த்தேசியத்தினுள்ளேயே முற்போக்கு, பிற்போக்கு, நடுப்போக்கு, நற்போக்கு, வயிற்றுப்போக்கு என்று பல போக்குகள் இருக்கக்கூடும் என்ற ஆதாரக்கருத்துநிலையையே மறுக்கும் வன்முறையாளர் இவர்கள்.

சீமான், சச்சிதானந்தம், காசி ஆனந்தன், சம்பந்தர், நெடுமாறன் செய்யும் அத்தனைக்கும் தமிழ்த்தேசியத்தையும் (அழிந்துபோன புலிகளையுமே) பொறுப்பேற்கக் கேட்கும் இவர்கள், புலியெதிர்ப்பு & தமிழ்த்தேசியமறுப்பு இவற்றின்பாற்பட்ட பொதுவொற்றுமைக்கு அப்பாலே தம்மிடையே இருக்கும் பல வகையான கருத்துநிலைகளை என்னவென்று சொல்வார்கள்? அவர்கள் அத்தனைபேரினையும் ஒரே வகை ஒத்தோடிச்சதை & விதைக்கும்பல்களாகப் போட்டுவிட்டால் ஒத்துக்கொள்வார்களா?

முஸ்லீம்கள்மீது புலிகளின் வன்முறைகள் என்று பேசுகின்றவர்கள் தொடர்ச்சியாக, கிழக்கிலே முஸ்லீம்கள் மீது (காத்தான்குடி & வாழைச்சேனை) பகுதிகளிலே முஸ்லீம்கள்மீது வன்முறை நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் புலிகளிலிருந்து பிரிந்துபோன கருணா|பிள்ளையான் குழுவினருக்கு ஆலோசகர்களாக இன்றைக்கும் இருப்பதைப் பற்றிப் பேசுவதோ விமர்சிப்பதோ இல்லை; முஸ்லீம்களைக் காத்தான்குடியிலே கொன்ற காலகட்டத்திலே புலிகளின் கிழக்கு இராணுவத்தின் "கேணல்" ஆன கருணாவினைப் பிறகு கொழும்புக்குத் தப்பிப்போக வைத்த முஸ்லீம் அரசியல்வாதியின் சகவாசம் பற்றிப் பேசுவதில்லை. இந்திய இராணுவம் போனபின்னால், கிழக்கிலே ஶ்ரீலங்கா அரசு- புலிகள் பிரச்சனை தொடங்கியதற்கு புலிகளின் முஸ்லீம் தையற்காரர் தாக்கப்பட்டதும் ஒரு "வெளிப்படையான" கூறு என்பதைப் பேசுவதில்லை; முதலிலே முஸ்லீம்கள்மீது கிழக்கிலே தாக்குதல் புளொட்டினாலேதான் அக்கரைப்பற்றிலே நிகழ்ந்தது என்பதைப் பேசுவதில்லை; தாம் முஸ்லீம்களைத் தாக்குவதே தம் பணியென அலையும் பொதுபலசேனாவின் விஷக்கொடுக்கோடு படத்திலே தலித்துகள் பேரிலே கூட நின்று சிரித்துக்கொண்டிருப்பதை விமர்சிக்க மறுக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும்மேலாக, முஸ்லீம் ஊர்காவற்படை ஶ்ரீலங்கா விஷேட அதிரடிப்படையோடு சேர்ந்து தமிழ்க்கிராமங்களிலே செய்த தாக்குதல்களைப் பேசுவதில்லை; வீரமுனைக்கொலைகளைப் பற்றிப் பேசுவதில்லை.

இயக்ககாலங்களுக்குமுன்னாலேயிருந்தே கிழக்கிலே புட்டும் சீனியும் தேங்காய்ப்பூவுமிருக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்வதில்லை. தமிழ்-முஸ்லீம் என்று மாறிமாறியிருக்கும் கிழக்கிலே தொடர்ச்சியான இன உரசல்களிருந்ததைப் பேசியதில்லை; ஹிஸ்புல்லா சைவக்கோவில்நிலத்தை முஸ்லீம்மையவாடி ஆக்கியதைப் பகிரங்கமாக முஸ்லீம்வாக்குவங்கி நிரப்பும் நோக்குடன் வெற்றிச்சாதனையாகப் பேசும் ஒளிப்பதிவாக்கி விட்டதை விமர்சித்துப் பேசுவதில்லை. அதிகம் வேண்டாம், காத்தான்குடிக்கொலைகளுக்கு அனைத்துத்தமிழர் முதுகுகளிலும் பிரம்படிக்கும் ஷர்மிளா ஸையத் போன்றவர்களைக்கூடப் பேசவிடாது ஒடுக்கும் - ஞானசார, சச்சிதானந்தம் & கூல் போன்றோரின் பௌத்த, இந்து & கிறீஸ்தவ மதவடிப்படைத்தனத்துக்கு ஈடான- மத அடிப்படைவாதத்தைப் பற்றி, தமக்கெதிராக வரக்கூடிய பாதகங்களை எண்ணி விமர்சிக்கமுனைவதில்லை.

அண்மைக்காலத்திலே, தமிழரசியல்வாதிகள் ஓட்டுவீடு-சக்கரவண்டி என்று தமக்குள்ளே பிணக்குப் பட்டுக்கொண்டிருக்கையிலே முஸ்லீம் அமைச்சர்களாலே கிழக்கிலே அரசுப்பதவிகள், காணிப்பகிர்வுகள் இவற்றிலே நிகழும் இன விகிதாசாரத்துக்கு ஒவ்வாத கொடுப்பனவுகள், மட்டக்கிளப்பின் எருமைத்தீவின் காணிகளைத் தமிழர்களிடமிருந்து வாங்கி காத்தான்குடியோடு இணைத்து, காத்தான்குடியினை மாநகரசபையாக்கும் திட்டம் என்பன ஈழத்தென்கிழக்கிலே தமிழர்களிடையே இந்துத்துவாவினையும் ஏன் பொதுபலசேனா ஞானசாரவினையும் உள்ளே கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றன. இது நெருப்புக்கு அஞ்சிக் கிணற்றிலே குதித்த கதை. 😞

மறுபக்கம், ரிஷாட் போன்றோரின் ஆதிக்கம் முஸ்லீம்களிடையே இருந்துகூட வெறுப்பினைச் சம்பாதித்திருக்கின்றது. எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரின், அவர்களின் உறவினர்களின் காணிகளை ரிஷாட் சொந்த ஊரிலேயே தூக்கிக் கட்டிடங்கள் கட்டிக்கொண்டார். இத்தனைக்கும் இம்முஸ்லீம்கள் மன்னாரிலே தங்கள் சொந்த நிலங்களிலிருந்து புலிகளாலே யாழ்ப்பாண முஸ்லீம்கள்போல வெளியேறச்சொல்லப்பட்டவர்கள். ஶ்ரீலங்கா அரசுடன் இணைந்து அக்காலகட்டத்திலே (90களிலே) மன்னாரிலே ஜிகாத் என்று செயற்பட்ட துணைக்குழுவிலேயிருந்த சில முஸ்லீம் இளைஞர்களின் பேரிலே - எலியைக் கொல்ல வீட்டுக்கூரையை எரித்த கதையாக- வெளியேற்றப்பட்டுப் புத்தளம் போய்ச் சேர்ந்து அங்கும் மற்றைய முஸ்லீம்களுடன் பட்ட அரசியலிலே ஈடுபடாத முஸ்லீம்கள் இவர்கள். ( ரிஷாட்டின் காணி அபகரிப்பிலே சக முஸ்லீம்கள் என்ற அடையாளம் இங்கேகூட அவரைத் தடுக்கவில்லை). சென்ற ஆண்டு கிழக்கிலே நிலாவெளி உப்பளத்தினைத் தன் கைக்குள்ளே கொண்டுவர ஒரு தமிழ் விதானையை வைத்துக்கொண்டு ரிஷாட் படுத்தின கூத்துகளைப் பற்றிப் உப்பளச்சொந்தக்காரர் ஒருவர் சொல்ல அறிந்தேன். (முன்னர் அறிமுகமாகாத இத்தமிழ் உப்பளக்காரரை நான் சந்திக்க நேர்ந்தபோது, வீட்டு விறாந்தையிலே என்னுடன் பேசிக்கொண்டிருந்த என் பாடசாலைக்கால நண்பன் முஸ்லீமாகவிருந்தது இந்த உப்பளக்காரரின் கடும் விமர்சனத்துக்குரியதாகப் போயிற்று ("இவங்களையெல்லாம் வீட்டுக்குள்ளே சினேகிதரெண்டு விடுறியள்; அவங்கள் எங்கடை காணியளை எடுக்கிறாங்கள்"). ரிஷாட் மேலேயிருந்த அவருடைய நியாயமான ஆத்திரத்துக்கு சம்பந்தமேயில்லாத என் சினேகிதனைப் பிடிப்பது மாதிரியான அநியாயம் தோய்ந்த ஒரு மறச்சிந்தையை என்னவென்பது! அவருக்கு எப்படி "விளங்கும் வகையிலே வலுவாய் விளக்கம்" சொல்லி அடக்கவேண்டியதாயிற்று என்பது உபகதை.) ஒத்தோடிக்கும்பல், இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லீம்கள்- புத்தளமுஸ்லீம்களிடையேயான பிணக்கின்பின்னாலே புத்தள முஸ்லீம் தலைவர் பட்டாணி ரஷாக் யாராலே வாழைச்சேனை மலசலகூடத்துள்ளே மர்ஹூம் ஆக்கப்பட்டார் என்றதைப் பேசுவதில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் ஒத்தோடிக்கும்பலுக்கும் அதன் தொங்கு தசை & விதைக்கும்பல்களுக்கு விமர்சனங்கள் ஒருபோதும் இருப்பதில்லை.

அதிகம் வேண்டாம். இங்கிலாந்திலிருந்து கொண்டு தமிழரசியல் தொடக்கம் அனைத்து அரசியலிலும் இலக்கிய அரசியல் செய்யும் மூன்றாம் மனிதர் ஒருவர் மர்ஹூம் அஷ்ரப்பை மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றார்.

இவையெல்லாம் ஒத்தோடிகளின் விமர்சனத்துக்கு ஆளாகமலிருப்பது வியப்பல்ல. புலிகளையும் தமிழ்த்தேசியத்தையும் தாக்குவதற்கு இவற்றினைப் பேசுவது சங்கடத்தை இக்கும்பலுக்குத் தரும். அதனாலே பேசுவதில்லை. புலிகளும் வலதுசாரித்தமிழ்த்தேசியமும் முஸ்லீம்கள்மீதான ஒடுக்குமுறையைப் பிரதேச ரிதியிலும் கருத்துவகையிலும் செய்த காலகட்டமுண்டு. ஆனால், அதற்கு ஈடாக முஸ்லீம் அமைப்புகள், தற்போது முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்கள் மீது செய்யும் வன்முறைகளை மறைத்துவிட்டுல் கறுப்பு|வெளுப்பு நியாயம் பேச முடியாது - குறிப்பாக, முஸ்லீம்கள் மீது வன்முறையைச் செய்ததாகச் சொல்லப்படும் கிழக்கின் பிரிந்துபோன சில புலிகளுக்குத் தற்சமயம் ஆலோசகர்களாக இருக்கின்ற தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களும் அவர்களின் தோழர்களும்.

இப்படியான கேள்விகளெழும்போதெல்லாம் அவற்றினை வாசிக்காதது|கேட்காதது போலவே பம்முவதும் பதுங்குவதும் "ஒற்றைப்படை"த்தமிழ்த்தேசியத்தின் இழிகூறுகளைப் பற்றி விசிலடித்துக்கொண்டிருப்பதாகக் கவனத்துடன் பாவனை பண்ணுதலும் கோழைத்தனமான, ஆனால், ஒத்தோடிகளிடம் (துரோகிகள் என்ற சொல் பொருத்தமானதில்லை; எந்நிலையும் பயன்படுத்தக்கூடாதது. ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான அரசியல்நிலைகளை மாற்றும் உரிமை உண்டு; நமக்குப் பிடித்தபோது தியாகிகளாகவும் பிடிக்காதபோது துரோகிகளாகவும் நாம் வகுத்தால், நம்மைவிடக் கருத்துச்சுதந்திரத்தை மறுப்பவர்களிருக்கமுடியாது. அடுத்தாள் கருத்துச்சுதந்திரத்தை மறுத்துவிட்டு, மறைத்துவிட்டு, நாம் நம் கருத்துச்சுதந்திரத்தினையும் சுயநிர்ணய உரிமைகளையும் பேசமுடியாது; அருகதையுமற்றோம்) இதைவிட வேறெதையும் எதிர்பாக்கவுமில்லை.

பிரதேசவாதம், சாதியம், பாலொடுக்குமுறை, மத அடிப்படைவாதம் பற்றி இன்னும் தொடவில்லை......

(1)

அரசியலானது நீருலகு

சுன்னாகம் நீரரசியல் சுன்னாகம் நீர்த்தரத்திலும்விட அதீத மாசடைந்தது.

முடிவுகளை வைத்துக்கொண்டு அதற்கேற்ப அறிவியலை ஆற்றுப்படுத்தென்பதும் சக நிபுணர் ஆய்தற்பார்வைக்குட்படுத்தாத தன்முன்னேற்றக்கட்டுரைகளை ஆய்வாதாரங்களாக பார்வை எண்ணிக்கையாகக் கொண்டு மீள்சுழற்சி செய்வதும் அறிவியல் சார்ந்த கேள்விகளை அழித்துவிடுவதும் சுன்னாகம் நீரைச் சுத்தரிகரித்துவிடப்போவதில்லை; நீரை மேலும் கெடுதலடையவே வைக்கும்.


ஆற்றிலிட்ட மாசைக் குளத்திலே தேடுவது தவறில்லை; ஆனால், அதனை அறிவியலின்வழி வழுப்படாத் தரவும் அதன்பாற்பட்ட அலசலின்படியும் செய்யவேண்டும். அதைவிட்டுவிட்டு, தாம் தம் அரசியல், எடுகோள் இவற்றுடன் ஒவ்வாததாலே மறுப்பதும், தன்னார்வத்தோடு தாம் சார்ந்த நிலமென்பதாலே புலம்பெயர்ந்தும் உதவ வந்தோருக்கு அரசியற்சாயம் பூசுவதும் தகுந்த தரவின் அடிப்படையிலான அறிவியல்முடிவுகளை மறுப்பதும் யாருக்குக் கெடுதலாகும்?


அறிவியல் முடிவுகளை மறுக்கையிலே அதற்காக காரணங்களை அறிவியலின் பாற்பட்டு முற்போடவும் தொடர்ச்சியான அறிவியல் & தரவு சார்ந்த விவாதங்களுக்குத் தயாராகவிருக்கவும் வேண்டும். அதைவிட்டுவிட்டு, தமது "மறைந்திருக்கும் காரணங்கள்" என்பதான பொதுப்படையான மறுத்தலுக்கும் குற்றச்சாட்டுக்கும் தரவுகளின் அடிப்படைகளிலே கேட்கப்படும் பின்னூட்டக்கேள்விகளுக்கு பதில் சொல்ல நேர்மைத்திறனின்றி அழித்துவிடுவது நீரின் தாழ்தரத்தாலே இன்னும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மேலும் கெடுதலைக் கொடுக்கமட்டுமே உதவும்.


குறைந்தளவு, ஆய்வின் பாற்பட்ட முடிவுகளை மறுப்பதற்கு ஆய்வுகளைச் செய்தவர்கள் நிபுணர்களில்லை, ஆய்வின் வழிமுறைத்தவறு, உபகரணவழு, செய்கைப்பிறழ்வு காரணங்களென்றால், அவற்றுக்கு மாற்றான இத்தகாக்காரணங்கள் அற்ற ஆய்வுகளைத் தாமேனும் செய்யவேண்டும். அதனை வசதியாகத் தவிர்த்துக்கொண்டு, தம் கருத்துநிலை எடுகோட்களையும் உள்ளூர் அரசியலையும் ஆய்வுக்கு மாற்றாகப் பெயர்த்துக் கொண்டும் மாற்றுக்கருத்துகளைத் தவிர்த்துக்கொண்டும் உலாவுவது நீரையோ நம்மையோ சுத்தம் செய்ய உதவாது.


https://www.facebook.com/vicky.vigneswaran/posts/10154569844766658?

வசவுகளே கருத்து

ஸர்மிளா ஸையத் மீது மத அடிப்படைவாதிகள் திரும்ப எழுத்துவன்முறையைத் தொடங்கியிருக்கின்றார்கள். (1)

ஸர்மிளா பிபிசி- தமிழ்ச்சேவைக்குப் பாலியற்றொழில் குறித்துக் கொடுத்த செவ்வி மிகவும் தீர்க்கமானதாக இருந்தபோது, இணையத்திலே அவருக்கு இதுமாதிரியான எழுத்துவன்முறைத்தாக்குதல் முதலிலே விழுந்தது.

ஸர்மிளா 200% சிறப்பாக வலைச்செவ்விக்கான கேள்விக்கொத்தினைத் தயாரிக்கக்கூடிய ஷோபா சக்தி என்ற அற்புதமான நடிகரின் வலைப்பக்கத்திலே 2014 இலே கொடுத்திருந்த செவ்வியிலே கிழக்கிலே "தமிழர்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தியது அரச படைகளுடன் சேர்ந்திருந்த சில முஸ்லிம் நபர்களே! பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருந்த புலிகளைப் போன்று பெரும்பான்மை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய அமைப்பெதுவும் தமிழர்களின் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கவில்லை. அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய முஸ்லிம் நபர்களின் தாக்குதல் அரசின் தாக்குதலே என்ற புரிதலே இஸ்லாமிய முற்போக்காளர்களிடமிருந்து வலுவான கண்டனக் குரல்கள் எழாததற்கான காரணம் என்று நினைக்கிறேன்." என்ற வௌவாற்பதில் அவரும் இரட்டை அளவுகோல்களை வைத்திருக்கக்கூடியவர் என்று எண்ணவைத்தது. இதுபோலவேதான், இருபத்தைந்தாண்டு நண்பராகவிருந்த ஒருத்தரும் பேஸ்புக்கிலே பக்கத்து மாநிலத்திலிருந்து சொல்லிக்கொண்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டினேன். தற்போது பேஸ்புக்கிலே என்னைத் தடை பண்ணி வைத்திருக்கின்றார் அந்த வஹாபிகொம்யூனிஸ்ட்😁 ஆனால், அஃது இவர்களைப் போன்றவர்களின் மற்றைய சமூக கருத்துகளோடு உடன்பாடு கொள்வதிலே ஏதும் தயக்கத்தைத் தருவதில்லை.

இப்போது மீண்டும் ஸர்மிளா ஸெய்யத் மீது வசவுகளை மேற்கொண்டு மத அடிப்படைவாதிகள் தாக்குகின்றனர். இதனைக் கண்டித்துவிட்டுப்போவது இலகு (அதையும் செய்யாமலிருக்கும் சிலரின் இலக்கியச்சந்தி, முன்னணி, அமைப்பு அரசியல்களுக்கு வலுவான காரணங்களிருக்கலாம்). ஆனால், அதற்குமேலே அவர் வாழும்நாட்டின் சட்டமொன்றும் செய்யாதா? இவ்வகையிலே சின்மயி தும்மவே தூக்கிப்போட்ட சென்னையின் ஜார்ஜுவைச் சொல்லவேண்டும். மஹானுபாவன்!

(1) https://www.facebook.com/photo.php?fbid=539756329713725&set=a.183927345296627.1073741829.100010380886839&type=3

அரசியல் அலட்டல் - மேலுமொன்று

புரட்சித்தமிழர்கள் வெறித்தமிழ்த்தேசியத்தைக் கடந்து பல்தேசியம், தலைதேசியம், காதுதேசியம் என்று பெருந்தேசியம், கண்டம், அகிலம், அண்டம், பிண்டம் என்று விரிந்து தழுவினதாகக் காட்டிக்கொண்டாலும், உணர்ச்சி கொப்புளிக்கின்றவர்கள் என்பதை அவர்கள் எழுதுவதிலே எங்காவது தடக்கிவிழுந்து அசல் தமிழர்களாய் நிரூபித்துவிடுகின்றனர்.

அண்மையில் பாலசூரியன், “புலிகள் ஆயிரக்கணக்கான மற்றைய போராளிகளைக் கொன்று தள்ளினார்கள்” என்ற பொருளிலே ஓரிடத்திலே எழுதி ஓடம் விட்டிருந்தார். கற்றவர் அவருக்கு, குறைந்த பட்சம் பூச்சியம் என்பதாலேமட்டும் ஒன்றுக்குப் பின்னாலே சும்மா சேர்த்துக்கொண்டேபோகக்கூடாதென்று தெரிந்திருக்கமாட்டாதோ? தெரிந்திருக்கும். ஆனால், அடிப்படையிலே அளவெட்டித்தமிழன் என்ற உணர்ச்சி பொங்குதல் தடக்கிவிட்டதோ தெரியவில்லை. எதுக்கும் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்க கொன்ற போராளிகளில்லாத தமிழர்களின் கணக்குகளிலே எத்தனை பூச்சியங்களை எங்கள் சூரியராசா வெட்டுகிறார் என்பதை வைத்தே சொல்லமுடியும்.

இதுபோலத்தான் நேசன் கொஞ்ச வருசத்துக்கு முன்னாலை, “மட்டக்களப்பை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனான S.R. சிவராமைப் பற்றி நன்கு அறிந்திருந்த பேராதனைப் பல்கலைக்கழக பல்வைத்தியத்துறை மாணவனான செல்வனால் எழுப்பப்பட்டிருந்த கேள்வி S.R.சிவராம் காதுகளுக்கு சென்றிருந்தது.” என்று எழுதியிருந்தார்.

தொண்ணூறிலே நான் அறிந்த நேசன் அதிகம் பேசாத நிதானமான தீர்க்கமான பெருமதிப்பினை ஏற்படுத்திய மனிதர். வயதோடுகூடி நவாலித்தமிழன் என்ற உணர்ச்சி பொங்குதலிலே கொட்டிவிட்டாரோ தெரியவில்லை. மாமனிதர் தராக்கி ஆகமுன்னால், புளொட் சிவராம் என்றிருந்தவர் பற்றி நேசன் சொல்வதின் நியாயத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாகச் சொல்லப் பேஸ்புக்கிலே பலரிருக்கலாம். ஆனால், அதைச் சொல்வதற்காக, செல்வன் என்ற கிருபா(கரன்) பேராதனைக்கு வந்தார் என்று நேசன் உணர்ச்சி வசப்பட்டிருக்கத்தேவையில்லை.

கிருபா எங்களுக்கு நான்கைந்து ஆண்டுகள் முன்னாலே படித்தவர். எங்களோடு படித்தவர்களுக்கு அவரை தென்னாபிரிக்காவுக்குப் பின்னாளிலே போய்ச் சேர்ந்த பயஸ் மாஸ்ரர் “கெடுத்தவர்களான” ஜான் மாஸ்ரர், ஜெயச்சந்திரன் (பார்த்தன்) போன்றவர்களின் நண்பராகக் கண்டதாலே அவரின் அமைப்புச் சார்ந்து இன்னார்தாமெனத் தெரியும். நோபேட் (கோவிந்தன்) அப்போது திருகோணமலைக் கல்வித்திணைக்களத்திலே வேலைசெய்துகொண்டிருந்தாரென எண்ணுகிறேன். திருகோணமலையிலே சந்தோஷம் மாஸ்ரர் சேர்த்த சிலரைத் தவிர (எப்போதோ தேசியக்கொடியை எரித்துவிட்டுப்போன சார்ள்ஸ் அன்ரனி (சீலன்), தர்மராஜா (புலந்தி அம்மான்) போன்றவரை விட்டால்) புலிக்கென்று எம்மோடு படித்து, எமக்குத் தெரிந்து போனவர்களில்லை( பின்னாளிலே டெலோவின் முக்கியத்தரான அந்நாளின் கூட்டணி ஈழத்துநாதன் வளர்த்த மருமகன் அன்ரனிதாஸ் (சொர்ணம்), வரதீஸ்வரன் (பதுமன்), இசைப்பிரியா பக்கத்திலே நிர்வாணமாக நிறுத்திவைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வசந்தன் போன்று எங்கள் சக வகுப்புகளிலே படித்தவர்களும் ஓராண்டு முன்னாலே படித்த அருணா (கோணேஸ்) போன்றவரும் 83 இன் பின்னாலேதான் போனார்கள்). திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் புளொட்டுக்கும் ஈரோஸுக்குமே ஆரம்பத்திலே அள்ளிக்கொடுத்தன. அத்தனை பேரினையும் நாசம் செய்யக் காரணமான புளொட் தலைமை பற்றி விமர்சனமேயில்லாமல், செத்தபுலியின் வாலை மட்டுமே பிடித்துத் தொங்கும் “எனக்கு ஒரு கண்போனாலும் சரி; சுற்றியிருக்கும் எல்லோருக்கும் இரண்டு கண்களும் போகவேண்டும்” ஆட்களின் ஒற்றைப்பக்க அரசியல் -"இருப்பது சாதிய, பிரதேசப்பிரச்சனைமட்டுமே; இனப்பிரச்சனையென்பது பொய்மை; தமிழ்த்தேசியமென்பது சைவவெள்ளாளயாழ்ப்பாணத்தின் தரப்படுத்துதலுக்கு எதிரான எழுச்சி மட்டுமே; செத்தது ஆக ராஜினியும் சிவரமணியுமட்டுமேயான இரு பரிசுத்த ஆவிகள்மட்டுமே; அமெரிக்க மீட்பர் கூல் ஆயரை நம்புங்கள்; நாளை தேவன் கருணை கிட்டும்" சரமான நைஞ்சுபோன சீனாவெடி- ‘நேர்மை’தாம் நடுவிலே நிற்கும் என்னைப் போன்ற குடியேற்றங்களாலே தொடர்ச்சியாக நிலத்தை இழந்துகொண்டிருக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த நடுச்சந்தி விசரருக்கு எரிச்சலையூட்டுகிறது.

கிருபா பேராதனைக்குப் பல்மருத்துவத்துக்கு எடுபட்டிருந்தாலும் அங்கே வரவேயில்லை. கடைசியாக அவரைக் கண்டது, எண்பத்திரண்டிலோ எண்பத்திமூன்றிலோ திருகோணமலை முத்துக்குமாரசாமி கோவிலின் கும்பாபிஷேகத்திலே. அவர் பக்கத்துத்தெருவென்றபடியாலும் அவரின் அம்மாவும் ஒரு ரீச்சர் என்பதாலும் நன்றாகத் தெரியும் (சென்ற மாதம் இறந்த அவரின் அக்கா, தம்பி உட்பட). ஆனால், சீனியர் என்றளவிலேயும் கேள்விப்பட்ட அவரின் “கொம்யூனிச”ப்போக்கு என்பதாலும் எட்டி நின்று மரியாதையாகக் கேட்டால் கேட்டதுக்குப் பதிலாய் ஓரிரு வார்த்தை கதைப்பதுதான் வழக்கம். கொம்யூனிசக்காரர் கிருபாவைக் கோயிலிலே கண்டது பெரிய ஆச்சரியம். அவரின் ‘குரூப் ஆக்கள்’ கோயிலிலை சாமியாடுறவங்கள், தீமிதிக்கிறவங்கள் எல்லோரையும் கேள்வி கேட்டு, உதெல்லாம் செய்யச் சாமி தேவையில்லை; சாதாரணமாக எவரும் செய்யலாம்” என்று ‘கோவூர்’ காட்டுகின்றவை என்று நண்பர்கள் சொன்னதை வைத்து அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு கிருபாவைக் கோவிலிலே கண்டது வியப்புத்தான்.

“உங்களுக்குக் கடவுள்நம்பிக்கையில்லை எண்டு நினைச்சன்!” என்றேன்; கையிலே ஒரு புத்தகம் சுற்றி வைத்திருந்தார்; தூக்கிக்காட்டினார்; தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற ஞாபகம். எனக்குக் கோவைஞானி, சிவத்தம்பி போன்றவர்களின் ‘சாமி-சடங்கு-பொதுவுடமை-ஸ்ட்ரக்சுரலிசம்’ பற்றி அரை மணிநேரம் உரையே ஆற்றினார். அப்பவும் விளங்கேல்லை; இப்பவாச்சும் விளங்கிச்சுது எண்டு சொன்னால், பம்மாத்தாகத்தான் இருக்கும். அப்ப பெரும்கட்டமைப்பும் விளங்கேல்லை எனக்கு; இப்ப பெரும்கட்டுடைப்பும் விளங்கேல்லை.

ஆளைவிடு சாமி என்று திரும்பிக் கோவிலுள்ளே மூலஸ்தானஸ்வாமியைப் பார்த்தால், ஆசாமியை மறுக்கும் குறுக்கு நந்திக்குப் பக்கமாய் மறைக்கும் கொடிமரம் தனிமரமாகிப் போகக்கூடாதெண்டு தோழராய் யூனிவசிற்றி கொன்வக்கேசனுக்கும் விடாது கோட்டின்கீழே கட்டும் வேட்டியைக் கட்டிக்கொண்டு நின்றார் கோவில் மனேச்சர் சிறிதரன் மகன் சீனக்கொம்யூனிஸ்ற் பார்ட்டியின் சிந்தனாவாதி சிவசேகரம்.

அதுதான் கிருபாவைக் கடைசியாய்க் கண்டது. அவர் தான் எடுபட்ட பல்மருத்துவம் கற்கப் பேராதனைக்கு வரவேயில்லை.

மக்கள் பாதையையும் மலராமற்போச்சு! தீர்த்தக்கரையையும் வற்றியே போச்சு!
தீப்பொறியும் உயிர்ப்பு அணைஞ்சே போச்சு!

புலிவாலைமட்டும் வீரம் விளைந்த மண்ணைப் பிடிகாட்டப் பிடிச்சுச் சுத்திக்கொண்டேயிருக்கிறியள்!

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!


"...Now what’s going to happen to us without barbarians?
Those people were a kind of solution...."

                                                                    - C. P. Cavafy

அரசியல் அலட்டல்

சும்மா இருக்கிறவங்களை பேஸ்புக் புலியாயாச்சும் பம்மாத்துக்கேனும் பிராண்டிக்காட்ட ஆக்காமல் விடாமலிருக்கமாட்டாங்கள் போலையிருக்கே! வரவர, இவங் கடை எழுத்துகளாலை பிரபாகரனும் புலியளும் செய்ததெல்லாமே சரியெண்டு விமர்சனமின்றி நம்பச்செய்தாலும் செய்துபோடுவாங்களோ எண்டு பயமாய்க் கிடக்கு.

சிறீ சபாரத்தினம், ராஜன் கூல் போன்ற போன, வாழும் சிறுதெய்வவழிபாடும் சிவரமணி, ராஜனி திரணகம போன்ற கண்ணகி குளிர்ச்சிகளும் பிரபாகர தெய்யோவின் எல்லைச்சாமி வழிபாட்டுக்கு எந்தளவு குறைந்ததென்று சொல்ல வருகின்றார்களோ தெரியவில்லை.

இந்துயா நடமாடும் நடராஜன் கால் முயலகனாய் இறக்கிவிட்ட சிவசேனா சச்சிதானந்தமும் இரட்சண்யசேனை ராஜன் கூலும் பொதுபலசேனவும் ஒரே கூழே! இதைக் கண்டுகொள்ளவும் தேர்ந்த அரசியல் கண்ணை மறைக்கிறது. நூஃமானை வெளியேற்றிய புலிகளைச் சரியாக இனம் கண்டு கண்டிக்கும் சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் நூஃமானின் புது முஸ்லீம் தேசிய அரசியலைச் சுட்டிக்காட்டுவதோ ஹிஸ்புல்லா, ரிஷாட் பதூர்தீன் ஓட்டமாவடி, மன்னார் தமிழ்க்குடியிருப்புகளை அமுக்கிக்கொள்வதை எதிர்ப்பதோ இனவாதத்தமிழ்த்தேசியமாகிறது; அதையும் மிஞ்சினால், பிரதேசவாதமாகிறது. இதையெல்லாம் முள்ளிவாய்க்காலிலே கொன்றதுக்கு வாசுதேவவுக்கு நன்றி சொன்ன யோக்கியரும் மஹிந்தவின் ஆலோசகர் பிள்ளையானுக்குப் மதியுரை பேராசிரியர்களாகவிருந்த அவரைவிடப் பரிசுத்தயோக்கியமான தம்பதியினரும் பேசுகின்றார்களாம். (இதுவரக்கும் பிள்ளையான் - கருணா பிணக்கிலே கொல்லப்பட்ட குமாரசாமி மாஸ்ரரின் மகன் நந்தகோபன் (ரகு) இன் கொலைக்கு யார் காரணம் என்று ஒரு கணக்கைத் தர இவர்களாலே முடியவில்லை). வாசுதேவவின் சகலை என்று வடக்கின் கொழும்பு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு அடிக்கின்றவர்களுக்கு நேரே வாசுதேவவின் காலிலே விழுந்து நன்றி சொல்ல மறப்பதில்லை.

அரசியலுக்கு அப்பால் வானதேவருக்கு இணையானவராக ஶ்ரீசபாரத்தினத்தினத்தைக் கொள்ளட்டாம் என்று இயக்கப்பழைய போட்டோகளையே எப்போதும் உப்போடு கொச்சிக்காய், வெங்காயம்போட்டுக் கிண்டிப்போடும் ப்ரின் நாத்தாரின் ஒரு போஸ்ற். நல்லது நளினி, அம்பிகா, ராதாவையே தேவதைகளாகக் கொண்டிருந்த வயதினர் நாம். இல்லையென்றா சொல்லப்போகிறோம்? ஆனால், புலிகள் டெலோவைத் தட்டமுன்னால், டெலோவின் தாசை மச்சான் கள்ளியங்காட்டுப்பொபிக்காகத் தட்டப் பச்சைவிளக்குக்காட்டியதும் தட்டினதுக்குக் கேள்வியைக் கந்தமடத்திலே கேட்ட சனத்திலே சுடச் சுட்டிக் காட்டினதும் எவ்வகையிலே அமரருள் உய்க்கும்? திருகோணமலையிலே இந்திய இராணுவத்தோடு கூடி காய்கறி விற்ற ஜயவீரா தம்பதியைப் போட்டுத்தள்ளியதுமான டெலோவிலேயிருந்து சிங்களமக்களைப் போட்டுத்தள்ளிய புலிகள் என்று வரும்போது, சுயவிமர்சனமும் வரவேண்டாமா?
ஓர் உபவேந்தர் பதவிக்குப் புலியெதிர்ப்பு முதல் டக்ளஸ் ஆதரவு, டக்ளஸ் எதிர்ப்பு-வரதர் ஆதரவு ("எண்பதிலே கொல்லப்பட்ட மூன்று முக்கியமானவர்கள், அமிர்தலிங்கம் ("அஹிம்சாவாதியின் பிள்ளைகள் அமைப்புக்காண காண்டீபன்,பகீரதன் ஆயுதம் வாங்கவில்லையா?") , ||பத்மநாபா||, ராஜீவ்"
- ஹூல் சாகேப், கலம்பு டெலிக்ராப்) அத்தனையும் தேவைப்படுகிறது ஒரு கூலுக்கு. அவருடைய யாழ் பல்கலைக்கழகத்திலே யார் என்ன சாதி பற்றிய கட்டுரைகள்கூட அவருடைய முப்பாட்டானின் முதற்பேரன் மாவிட்டபுரம் கந்தசாமிகோவில் மணியகாரர் என்ற கட்டியத்தோடுதான் எப்போதும் தொடங்குவது அவரின் சாதிமான் சாமானைக் காட்டாமல் வேறெதைக் காட்ட? அவர் காவியம்படைக்கும் சுகு கும்பல், இந்திய இராணுவம் வந்திருந்தபோது என்ன செய்தார்கள் என்பது பற்றி எங்கேனும் நேர்மையாகப் பேசியதுண்டா?
இன்னொரு மொழிபெயர்-மொழிநல்லிணக்க இலக்கியத்தோழர் கடைசியாகப் பேஸ்புக்கி லே கண்டபோது, சிறிசேனா மாத்தையாவுக்கு நல்லாட்சி, நல்லிலணக்கம் இவை செய்ய நூறு நாள் தந்தீர்களென்றால் என்று நல்லிலக்கணம் பயிற்றுவித்து மும்முரமாக அந்நியநாட்டிலே அசல் குடி-மகனாகவர்களிடங்கூடக் கேட்டுப் போனபின்னால், ஆயிரத்திருநூறுநாள் முடிந்து நேற்றைக்குத்தான் திரும்ப வந்திருக்கின்றார், சிவரமணி கொலை செய்யப்பட்டார் என்ற தலைப்பைப் பகிர. ஆனால், அவரும் அவரின் ஶ்ரீலங்கா தேசியத்தோழர்களும் பேஸ்புக்கிலே போராடிக் கொண்டுவந்த நூறுநாள் நல்லாட்சியிலே நன்னெய் என்ன விலை தேங்காய்நெய் என்ன விலை என்பது பற்றிக்கூடப் பேச அவருக்கும் நேரமில்லை.

சிவரமணி உளவழுத்தத்திலே தற்கொலை செய்துகொண்டதற்குப் புலிகள் கொலை செய்தார்கள் என்று நீட்டினால், டெலோ கம்பன் தூக்குப்போட்டுக்கொண்டதுக்கு ஆரப் பிடிப்பது?

கற்ற மேற்றட்டான படியால் சிவரமணி, ராஜனி என்று ஆளரவம் காட்டி ஆண்டாண்டுக்கு அடையாளம் தெரியாதவர்களும் ஆயுதம் தரியாதவர்களுமானவர்கள் கொத்தாய்க் கொல்லப்பட்டது பேசப்படாமலிருக்க, கவனம் சிதறடிக்கத் திவசம் கொண்டாடும் கூட்டத்துக்கு கோணேஸ்வரி, கிருஷாந்தி ஒன்றும் ஞாபகத்துக்கு வராதது எதேச்சையா? இஷ்டப்பட்ட இச்சையா? ராஜனியைத் தட்டினது புலிகள் என்ற குற்றத்தைச் சொல்லும் அத்தனை இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் விளக்குக்கம்பம் தொட்டு வெலிக்கந்தைக்காட்டினுள்ளே பலவந்தப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதுவரையிலுமான அத்தனை பெண்கள் பற்றியும் அவற்றை நிகழ்த்தியவர்கள் பற்றியும் பேசாமல் பிரதேசவாதமும் சென்னையிலே ஸ்ரீலங்கா தேசியகீதமும் பாடினால் இதைப் பிழைப்புவாதமென்றும் ஒத்தோட்டமென்றும் சொல்லாமல் என்ன சொல்வது? ராஜனி திரணகமவின் உயிர் போலில்லாது இப்பெண்களின் உயிரென்ன ஆமி மூச்சு அடித்த காத்துக்கு உதிர்ந்துவிழுந்த மயிரின்றி வேறென்ன? பிறகுமேன் பாசாங்கு?

தாம் சார்ந்திருக்கும்போது தெரியாததெல்லாம் சாரம் அவிழ்ந்தபின்னாலேதான் பத்தி எழுத்துக்கும் ஹரஹரன் முன்கதாவுக்குமாகச் சிலருக்குத் தெரிகிறது; வேறு சிலருக்கு அடுத்தவன் நகவிடுக்குகளுக்குள்ளே இருக்கும் துளியழுக்குத் தெரிந்தாலும் சொந்தக்கையின் கறையே தெரிவதில்லை.

விடுதலை பேரிலே அடுத்தார் கைகளிலே தவறேதும் தம்மிலின்றித் தலையை விட்ட எல்லோருமே தம் தலையை எடுத்தோரைக் குற்றம் சாட்டச் சிலம்பு தூக்கும் நீதி கொண்டோர். மீதிப்பேர் காட்டுவது வெறும் பம்மாத்து; அடுத்த புத்தக வெளியீட்டுக்கோ நாடகவிழாவுக்கோ திமுக லைக்குக்கோ திரைப்படநடிப்புக்கோ உற்றதுணையாக்கும் ஒற்றை வழிமட்டுமேதான்!

தகவல்களைச் சேகரித்துத் தரவாக்காமல், தரவுகளை உற்பத்தி செய்கின்றவர்கள் எப்பக்கமிருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றார்கள்.
எந்த இயக்கத்துக்கும் போகாமல் இழப்பின்றிப் பேச என்ன அருகதையிருக்கின்றதென்று கேட்டால், எந்த இயக்கத்துக்கும் போய் இழக்கவைக்காததாலே பேச அருகதையிருக்கென்று இப்போதே சொல்லிவிடுகிறேன்.
இதற்கும்போய், "நல்லிணக்க(ண)மாய் நாடு சுத்தமாகத்தான் கழிந்து போய்க்கொண்டு இருக்கிறது; வெளிநாட்டிலேயிருக்கின்றவன்தான் மாசு நல்லெண்ணக்கிணத்திலே கலக்கிறான்" என்று தமிழிலே நீள எழுதி, ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பாசத்தோழர்களையோ தோழிகளையோ கொண்டு மொழிபெயர்த்துப்போட்டுவிடாதே, அன்பே! அதற்கும், வெளிநாட்டிலிருந்துதான் உன் ஆசும் மாசு மறுவுமற்ற அழகிகளை நேசிக்கும் பெருந்தோழர்கள் லைக்கைப் போட்டு வைப்பார்கள் என்னருமை ராட்ஷசியே!

தலைப்பிலி ஒன்று

கோதுடைகுடம்பி கூட்டுப்புழுவாகி,
மயிர்கொட்டிப் பழம்புழுக்கூடாகி,
பூச்சி பறக்கக் காற்றடை
நொய்கோதாகிப்
போனது,
என் துருவ அரசியல்.


அறம் பிறழ்ந்தாருக்கே - கடை
அரசியல் பிழைக்கும்.
 

கொடுத்து வைத்தது
விட்டு விடுதலையான
பட்டுப்பூச்சி!

என்னை வன்முறையாளானாக்காதீர் :-)

நான் வன்முறையாளன் அல்லன். ஆனால், வன்முறையை என்னுள்ளே தூண்டுகின்றவர்களிலிருந்து எத்தனை நாட்களுக்குத்தான்..... நாட்களையென்ன, வாரங்களையே விடுங்கள்... திங்கள்தாம் ஓடிக்கொண்டிருக்கமுடியும்? 😜😜😜

பாவனை பேசுதலைப் பிறப்புரிமையாகக் கருதுகி்ன்றவர்களும் மரபலகாகப் பொருத்திக்கொள்கிறவர்களும் வாசிப்பின் விலாசமாகப் போட்டுக்கொள்கின்றவர்களும் அச்சத்தையும் அருவெருப்பையும் ஒரே நேரத்திலே உள்ளுந்துகிறார்கள்.
அலங்கார அணிகளும் பெயர்களைத் தூவுதுதலும் பட்டியல் போடுதலும் மட்டும் ஆளுமைகளைக் கட்டியெழுப்புவதாகவும் புரட்சிகளைப் புரிகிறதாகவும் தத்துவங்களைக் கேசம் தறித்து அணுப்பிளப்பதாகவும் பாவனை பூசலார் உளக்கோவிலாக எழுப்பப்படுகிறது.
அலங்கார அ|ஆணி: குடிப்பதானால், மூச்சுமுட்டக் குடித்து குப்புற விழுந்துவிட்டுத்தான் போங்களேன்! படுங்களேன்! என்ன மயிருக்கு, "குடித்துக்கொண்டாடுவோம் அன்பே!" பகிரங்க அறிவிப்பு? நீவிர் தானாய்த் தாங்காத பெருங்குடியும் இடம் காலம் பார்த்து கட்டடங்கிக் கொழுந்து ஆவி விடும் புரட்சித்தீயும் உழைப்பவன் பொருள் பில் கட்டாவிட்டால், கொண்டாட்டமாய் முடியுமா? 🎼🍻🍻🍾

பெயர் தூவல்: பார்ரா, லகான், காண்ட், கீஸ்லாவஸ்கி, தாத்தோவேஸ்கி, விஸ்கி.... புதுசாக யூரிப்பிலே பொறுக்கிக்கொண்ட ஒரு ஸிஸெக்.... நேராகக் கருத்தைச் சொல்லாமல், மாண்டவன், மாணப்பெரிதானவள் மேலேயேறிக் குதிரையோடி அந்தப் பம்மாத்தை வைத்து உங்கள் கருத்துக்கும் நிலைப்பாட்டுக்கும் நியாயம் கோரும் உங்களையெல்லாம் ஒரு கிழமைக்கேனும் கூகுலும் இணையமுமில்லாத மூலையிலே குந்த வைத்து " இப்ப எழுதடா|டீ|டூ|டே|டௌ பேரிஸப் புரட்சிப்பேரீச்சம்பழமே! போராட்டத்தீனி நொறுக்குநாயே, உன் வசப்பட்ட இஸத்திலே ஒன்றைப்பற்றிப் பத்து வரி முற்றுப்புள்ளிகளோடு!..... குறைந்த பட்சம், உதிர்த்த பெயர்களிலே மூன்றையாவது நாமிருவர் ஏகாந்தித்திருக்கும் இத்தனிமையிலே உச்சரித்துக் காட்டேன் என் அன்பே! கொண்டாட்டக்காட்டெருமையே!" என்று பொல்லாத காருண்ய PETA சீமான், சீமாட்டிகள் வந்திறங்கும்வரை பிருஷ்டத்தினை அசல் முதலைத்தோல்நார்வார்கொண்டு பிளக்கவேண்டும். எல்லாப்பெயரையும் உதிர்த்துவிட்டும் கடைசியிலே சொந்தப்புத்தகத்துக்கு முன்னுரை எழுதின, பேஸ்புக்குறிப்புக்குக் கருத்துரை சொன்ன எழுத்தாள, தத்துவ நாடகக்குஞ்சுகளைத்தான் கடைசியிலே விருதுகளுக்காகச் சுனைக்காமல் துடைப்பானும் தடவாமல் வருடிக்கொண்டிருக்கப்போகின்றீர்கள். 😋 நாட்டில் எரிகிறதை வைத்து அரசியலும் பேஸ்புக்கில் பிடிப்பவரை வைத்து விமர்சனமும் கூகுலிலே கிடைப்பதை வைத்துத் தத்துவமும் செய்கின்றவன் i owe என்று போவான் சமூகத்துக்கு.

பட்டியல் போடு போடு போடு: நாசமறுக்க! வாசிப்பதைவிட அதிகமாக எழுதித் தள்ளுகின்ற உருப்படிகளும் உருப்போடும் படிகளும் உருப்படா டீக்களும் டாக்களும் நரகத்துமுள்ளுகள். தேவாங்குகளே! தேவனும் உங்களைமன்னிக்கார்! உங்கள் பாவங்களை நீங்களே உங்கள் செல்லுபத்திரங்களாய்ச் சுமந்தாலும் கடவீர்! இன்னோரன்ன இஸங்களின் இணைய எதேச்சைத் தான் தோன்று காவலாளிக்காவாலிகளையும்விட மோசமான கூட்டத்தினர் நீர்தாம். நெட்ப்ளிக்ஸும் அமேசனும் புத்தகக்கண்காட்சியும் இருப்பதென்பதற்காகவே பட்டியற்பதிவுகளையோ படச்சுருக்கங்களையோ தொகுத்துப் போடுவதற்காகவே முடிவுரையினை முடிச்சுப்போட்டு அதிலிருந்து முகப்புரைக்குத் தாவி ஏறித் தவணை முறையிலே எண் பிரித்து எழுதிப்போட்டுக்கொண்டிருக்கின்றவர்களை நரகத்து எண்ணெய்க்கொப்பறை, கழுமரம், ஒவ்வொன்றாய் -ப்ரேஸிலியன் வக்ஸாயில்லாமல் -உடம்பு உரோமம் பிடுங்கல், அலகு குத்தல், மெழுகுருக்கி ஊற்றல் என்று மாற்றி மாற்றித் தவணை முறையிலே "மாச்சோவின்பம்" தரல் வேண்டும் (டி சாட்டினைக் கொண்டாடுகின்றவர்கள் இப்பகுதிசேர் தொகுதி அனுபவங்களைக் கொண்டாடாமலா இருக்கப்போகின்றீர்கள், என்ன? 😎) .

முழுநேரமாக, புரவலர் தயவிலே இலக்கியக்காரராகவும் பேஸ்புக் தயவிலே புரட்சியாளராகவும் போட்டோக்கள் தயவிலே போராட்டக்காரராகவும் ஒத்தோடுகிறவர் தயவிலே தத்துவக்காரராகவும் ஆய்கின்றவர்களை, ஆகின்றவர்களை அசலாய்ப் பசித்த புலியுங்கூட அருவெருப்பிலே உண்ணாது.

முடிவுக்காகக் கதையை எழுதுகின்றவர்களும் தத்துவத்துக்காகப் புரட்சியைப் பேசுகின்றவர்களும் விமர்சிப்பதற்காகவே கலையிலக்கியத்தை நுகர்கின்றவர்களும் போட்டோவுக்காகவே போத்தல்களோடு போஸ்கொடுப்பவர்களும் தன் வாய் பீடிக்காகவே குஞ்சுநெருப்பைப் பற்றவைக்கின்றவனின் நேர்மையுமற்ற பாவனை பேசுகின்றவர்கள். சுயத்தையே மைதுனத்திற் சுனைக்க வைத்துக்கொண்டிருக்கின்றவர்கள், சுற்றியிருப்பதைப் பற்றிக் கடந்து தாம் மேலேறிப் போகின்றவர்களாக மட்டுமே அசலிலே தம் கஞ்சிப்பானை வனைப்பவராவர். 🦂

தயைகூர்ந்து
தேர்ந்தும் தேராமலும் நுகருமின்!
நுகர்வதைச் சிந்தியுமின்!
சிந்திப்பதைச் சிந்துமின்!
சிந்துவதை செய்மின்!
நச்சுக்கிருமிகளாய்
நீர்த்த பொய்மைப்
பாவனை பேசாதிருமின்! 😇

நான் வன்முறையாளன் அல்லன். ஆனால், வன்முறையை என்னுள்ளே தூண்டுகின்றவர்களிலிருந்து எத்தனை நாட்களுக்குத்தான்..... நாட்களையென்ன, வாரங்களையே விடுங்கள்... திங்கள்தாம் ஓடிக்கொண்டிருக்கமுடியும்? 😜😜😜

திரும்பத் திரும்பப் பேசற நீ!😜