Wednesday, November 26, 2008

வரலாறு படைக்கும் பாரா

None of the lines in this post is torn off from any History Making Para
குமுதம் ரிப்போட்டரிலே வரத்தொடங்கியிருக்கும் பா.ராகவனின் 'யுத்தம் சரணம்' பற்றி ஜூலியனின் பதிவிலே வாசித்தேன். தமிழ்சசியும் 'ஆலமரம்' திருவும் அத்தியாயத்தின் தரவுகளையும் எழுதும்நடையையும் அலசிப் பதிவிட்டிருந்தனர். சசியின் பதிவு பற்றி ஓர்குட் குழுமத்திலே பேசப்பட்டதை, பாராவுக்கு, சுரேஷ் என்பவர் அனுப்பியதற்கு எதிர்வினையாகப் பாரா தன் பதிவிலே விளக்கம் தந்திருந்தார். ஜூலியனின் பதிவிலேயிட்ட என் பின்னூட்டத்துக்குப் பதிலாக பா. ராகவன் ஓர் அஞ்சல் அனுப்பியிருந்தார். அதையே ஜூலியனின் பதிவிலே பின்னூட்டமாகவுமிட்டிருந்தார். அவருடைய விளக்கத்துக்கும் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட நேரத்துக்கும் நன்றி. அதற்குப் பதிலான சுருக்கமான விளக்கமே இவ்விடுகை.

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்னால், பா. ராகவன் இத்தொடர் கட்டுரை எழுதப்போவதாக இலங்கைப்பிரச்சனை பற்றி இணையத்திலே பேசும் சிலரிடம் மேலதிக நூல்களைப் பரிந்துரைக்கக் கேட்டிருந்தார். ஆட்கணக்கும் எனக்குத் தெரியாது. அதன் பின்னாலே, கிடைத்த நூற்கணக்கும் எனக்குத் தெரியாது. ஆனால், அவர் நூல் விபரம் கேட்டதை வைத்துப் பார்க்கையிலே, பா.ரா. ஆதாரமில்லாமலே நூலினை எழுத முற்பட்டார் என்று நான் கருதவில்லை. ஒவ்வொரு வரிக்கும் அவர் ஆதாரத்தினைத் தந்தால், அக்கட்டுரை வரக்கூடிய இடம் குமுதம் ரிப்போட்டராக இருக்கமுடியாது என்றும் உணர்வேன். சாத்தியமில்லாத அதை அவரிடம் நான் கேட்கவில்லை. நான் ஜுலியனின் பதிவின் பின்னூட்டத்திலே சொன்னதெல்லாம், பாரா எழுதும் தொடரிலேயிருக்கும் வரலாற்றுத்தரவுகளை மறுத்து எழுதுகின்றவர்கள், தமது தரவுக்கான ஆதாரங்களைச் சரியாக முன்வைக்கவேண்டும் என்பதே. ஒரு பரபரப்புப்பத்திரிகையில் பாரா எழுதும் விறுவிறுப்புத்தொடரின் வாசகரிடமிருந்து திரைக்கதையை உடைத்துப் பிரித்து, தரவைக் காட்டுவதற்கு, நாம் ஆதாரம் வைக்கவேண்டும். அச்சிலே வரும் பாராவிடம் ஆதாரம் வாசகர்கள் கேட்கமாட்டார்கள். ஆனால், பாரா தவறு என்று சொல்கின்றவர்களிடம் நிச்சயம் கேட்பார்கள்.


ஆனால், ஜூலியனின் பதிவிலேயான பின்னூட்டத்துக்கு அப்பால், பாராவின் பதிவிலே அவரது பின்விளக்கம் மேலும் கொஞ்சம் விரித்துப் பதியச் சொல்கிறது.

பாராவின் தொடரிலிருக்கும் தரவுகளின்மீதான மாற்றுத்தரவுகள் தனியே ஒரு பதிவு தொடங்கப்பட்டு, அவரின் தொடரின் ஒவ்வோர் அத்தியாயம் வெளிவரும்போதும் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால், அவற்றினை -அவை சரியாக மறுதலிக்கப்படும்போதுங்கூட- பாரா விரும்பினாலுங்கூட, குமுதம் ரிப்போட்டர் வெளியிடுமென்று நான் நம்பவில்லை. குமுதம் ரிப்போட்டர் மட்டுமல்ல, வேறெந்த மொழியிலான சஞ்சிகையானாலுங்கூட விரும்பாது. தனிப்பட்ட தரவுகள் பற்றி இங்கேதும் நான் சொல்ல வரவில்லை.

'செருவில்' என்பதல்ல, 'சேருவில' என்பதிலிருந்து தொடங்கி, தவறு கண்டுபிடிப்பது குற்றம் கண்டுபிடிப்பதே முக்கியமானவிடத்திலேமட்டுமே. இங்கே பாரா இத்தொடரை எழுதாவிட்டால், இன்னொரு யாராவாது எழுதிவிட்டுப்போவார்கள். அப்படி எழுதுகிறவர் எப்படியிருப்பார் என்பது எமக்குத் தெரியாது. பாரா இக்கட்டுரையை ஈழத்தமிழருக்காக எழுதவேண்டாம் (இலங்கைத்தமிழர் கதை என்று ரிப்போட்டரிலே முன்னட்டை விளம்பரம் போட்டதே ஒரு பக்கச்சார்புதான்; ஆனால், அதற்காக, முதல் அத்தியாயம் மறு பக்கச்சார்பாக எழுதிச் சமநிலைப்படுத்தியிருக்கவேண்டாம் ); தரவுகளை உணர்வும் உப்புமிளகாயுமூட்டாமல் கொஞ்சம் நிதானமாகவே வைப்பதே போதுமானது.

வரலாற்றுத்தொடர்கட்டுரை அமைவதன் அடிப்படையிலே பாராவின் கருத்துகள்மேலே சில கருத்துகள் சொல்ல விரும்புகிறேன்.

1. "எழுதுகிற ஒவ்வொரு வரிக்கும் சாத்தியமுள்ள அனைத்துத் தரப்புகளிலிருந்தும் ஆதாரங்கள் தேடி, ஒப்பிட்டுச் சரிபார்த்துத்தான் எழுதுகிறேன்" எனும் பாரா ஆதாரங்கள் தேடுவதென்பதை ஒத்துக்கொள்கிறேன். குறிப்பாக, ஈழப்பிரச்சனை பற்றி இக்காலகட்டத்திலே எழுதுவது, அமெரிக்கா பற்றி டாலர்தேசம், காஷ்மீர் பற்றிய வரலாறு, பாலஸ்தீனம் பற்றி 'நிலமெல்லாம் இரத்தம்', இஸ்லாமிய இயக்கங்கள் பற்றி எழுதுவதுபோல அல்ல என்பதனைப் பாரா நிச்சயம் உணர்ந்திருப்பார் என்று தெரியும். இது தமிழிலே வாசிக்கும் பலருக்கு உணர்வோடு சம்பந்தப்பட்ட விடயம். இத்தனை நாட்கள் கவனத்திலே எடுத்துக்கொண்டிராத ஈழம் பற்றிப் பாரா இன்றைக்கு எழுதவேண்டி வந்ததற்கு, அதன் சாகுபடியே முக்கியமென்று நம்புகின்றவர்களிலே நானும் ஒருவன். மணிரத்தினம் 'கன்னத்தில் முத்தமிட்டால்' எடுத்ததும் அதே விற்பனையை மையம் கொண்ட, அவருக்குப் பிரச்சனையற்ற ஒரு காலகட்டத்திலேயே என்பதையும் இற்றைவரை நம்புகிறேன். கன்னத்தில் முத்தமிட்டால் வந்தபின்னரே ஈழம் பற்றித் தமிழ்நாட்டார் பலர் (புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அடுத்தவாரிசுகள் சிலருமாம்) அறிந்துகொண்டார்கள் என்பதிலேயும் நம்பிக்கையுண்டு. அதனாலேயே, இவை தரும் கருத்துகள் மிகவும் தரவு அடிப்படையிலே நியாயமானதாகவிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

பாரா "ஈழத்தில் நடப்பது பற்றி வெறுமனே கவலைகொண்டு வருந்திக்கிடக்கும் கோடிக்கணக்கான சாதாரணர்களுள் நானும் ஒருவன். அவ்வளவே" என்று சொல்வதனை நான் நம்பவில்லை. பாரா மன்னிக்கவேண்டும். (அவர் இணையமூலம் எனக்கு நண்பரே. அவர் குறித்து எனக்கு அரசியல், புனைகளம் சாராத எழுத்து இவற்றுக்கு அப்பால், உழைப்பு, தனிப்படப் பழகும் விதம் குறித்து மதிப்பு உண்டு. அவரின் புத்தப்புழு போன்ற யாஹுகுழுக்களிலே நான் போட்ட சண்டைகளுக்கு வேறு யாராவதென்றால், கழுத்தைப் பிடித்துத் தள்ளியிருப்பார்கள். அவர் தள்ளவில்லை. அதன் பிறகும் தொடர்ந்து தொடர்பிலிருக்கிறோம். அதனாலே, எனக்குத் தனிப்பட்ட அவரிலே மதிப்பு உண்டு.)

ஆனால், இதுவரை நாள், இணையத்திலே ஈழத்தமிழர் குறித்து ஆயிரம் பதிவுகளும் பின்னூட்டங்களும் பேசப்பட்டபோது, பாரா என்ற மனிதர் எவ்விதமான குரலையும் எழுப்பி நான் கேட்கவில்லை. அக்கறையும் ஈடுபாடுமுள்ள மனிதன் ஆதரவோ எதிரோ தன் குரலைப் பதிந்திருப்பான் என்றே நம்புகிறேன். அதற்காக, 'இந்து' இராம், 'துக்ளக்' சோ போன்றோருடனோ டோண்டு நரசிம்மன் போன்றோருடனோ அவரை நான் வைத்துப் பார்க்கவில்லை. மூவர் வழிமுறைகளும் வேறுவேறு என்று சொல்லவருகிறேன். நாளை தமிழர்களுக்குச் சாதகமான நிலைமை / நாடு ஆக அரசியலானால், இராம் & சோ அச்சாதகத்துக்கு மாறான கெடுதலை உருவாக்கும்வகையிலே எழுதிக்கொண்டும் இயங்கிக்கொண்டுமிருப்பார்கள்; 'டோண்டு' ஈழத்தமிழர்கள் இரண்டு பேருக்கு அவர் சமீபத்திலே 1987 இலே மொழிமாற்றிக் கொடுத்த மணவிலக்குப்பத்திரத்தாலேயே இத்தனையும் சாத்தியமானதென்று பதிவும் பின்னூட்டங்களும் போட்டுக்கொண்டிருப்பார்; பாரா, "ஈழத்தமிழர் வெற்றி பெற்றது எப்படி?" என்றொரு தொடர், பிரபாகரன், செல்லக்கிளி குண்டு 1983 இலே கண்ணிவெடி வைத்த காதையிலே முதல் அத்தியாயம் எழுதுவார்.

பாரா, ஆதாரங்கள் தேடி எழுதுகிறார் என்பதிலே எனக்கும் நம்பிக்கையுண்டு. அவர், ஜூலியன் பதிவிலே எனக்குப் பதிலாகத் தந்திருந்த ராஜபக்க்ஷவின் பேச்சுக்கான டெயிலிமிரர் ஆதாரத்தினை மறுக்கமுடியாது. ஆனால், ஆதாரம் எப்படியாகப் பயன்படுகின்றதென்பதையும் பார்க்கவேண்டும்.

" Since the Geneva talks concluded on February 23, the LTTE has carried out nearly 20 bomb blasts, killing 47 military personnel, 28 civilians and injuring 139 people, he said. " என்ற ராஜபக்ஷவின் செய்தியை, "அந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புலிகள் தரப்பில் இருபது குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள், நாற்பத்தேழு ராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள், நூற்று முப்பத்தொன்பது பேருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது" என்று சொல்கிறார். அதற்கு முன்னைய பந்தியிலே இருக்கிற innocent farmers இலுள்ள innocent இங்கே மக்களின் முன்னாலே நுழைந்து அப்பாவி மக்களாகின்றது. military personnel இராணுவ அதிகாரிகள் ஆகின்றனர். இப்படியான சின்னச் சின்னப் பெருப்பிப்புகளை அவர் கட்டுரை எழுதுவது பற்றிச் சொல்லும், "எனவே மொழி சார்ந்த விமரிசனங்களுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை" என்பது காரணமாக இப்பந்தியிலே விட்டுவிடுகிறேன்.

ஆனால், அவர் இங்கே முதல் அத்தியாயத்தினை அமைத்திருக்கும் வகையிலே அதே உரையிலே ராஜபக்க்ஷவே சொல்லும் அரசுத்தளபதி பொன்சேகா தாக்கப்படுவதற்கு முன்னான, திருகோணமலையின் பாராளுமன்ற உறுப்பினராக ததேமு சார்பாக நியமிக்கப்படவிருந்த விக்கினேஸ்வரனின் கொலை பற்றி எதுவுமே சொல்லவில்லை. இந்த விக்கினேஸ்வரன் அதற்கு முன்னால், கிறிஸ்மஸ் அன்று கொல்லப்பட்ட ததேமு பாஉ ஜோஸப் பரராஜசிங்கத்தின் இடத்துக்கு நியமிக்கப்படவிருந்தவர். இவர்களைக் கொன்றவர்கள் யாரென்பது இலங்கை அரசியலைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குப் பெரிய மர்மமில்லை. ஜோசப் கொல்லப்பட்டது, மட்டக்கிளப்பின் அரசுநிலைக்கு எதிர்ப்புள்ள தமிழ் அரசியலை முடக்க; விக்கினேஸ்வரன் கொல்லப்பட்டது புத்தர்சிலை சந்தை மையப்பகுதியிலே சத்தமின்றியெழும் திருகோணமலையிலே தமிழரசியலை முடக்க. ஆதாரங்களைக் குறிப்பிட்டு எழுதுகின்றவர், ஆதாரங்களை ஆய்ந்து கால, கருத்து வரிசையினையும் சுட்டி எழுதினாரா என்பதுதான் பிரச்சனை.

அப்படியான கொலை நிகழ்வுகளையும் இன்னோரன்ன அரசின் தொடர்ந்த நேரடி, மறைமுகமான அத்துமீறல்களையும் குறிப்பிடாதபோதிலே, அத்தியாயம் முழுக்கவுமே, போர்நிறுத்தமீறலையே செய்யாத பொன்சேகாவுக்குக் கர்ப்பிணிப்பெண்ணாக வந்து குண்டு வைத்துக்கொல்ல முயற்சித்ததாலேயே, ஒன்றாகவே யோசிக்கக்கூடியவளவு அந்நியோனியமான ராஜபக்ஷவும் பொன்சேகாவும் வேறு வழியில்லாமல், போரை மீண்டும் தொடக்கினர் என்ற கருத்து மட்டுமே முதற்கோணலாக ஈழ அரசியலுக்குப் புகும் வாசிப்போருக்குப் படும்.

2. "எனவே மொழி சார்ந்த விமரிசனங்களுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை" என்றும் "பிரச்னை மிகவும் தீவிரமானது என்பதனால், அந்தத் தீவிரம் சற்றும் குறையாத ஒரு மொழிநடையை இணையத்தில் உள்ள பல வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை எனக்கு வரும் சில மின்னஞ்சல்கள் மூலமும் சில வலைப்பதிவுக் குறிப்புகள் மூலமும் அறிகிறேன். எதையும் காட்சிப்படுத்தாமல் நேரடியாக நடந்ததைச் சொல்லும் அத்தகைய உத்தி, பத்திரிகைத் தொடருக்குப் பொருந்தாது. மக்களை விடாமல் வாசிக்கவைப்பது என்பது ஆகப்பெரிய சவால். எனக்கு அவர்கள் வாசித்தே தீரவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. எளிதில் வாசிக்கக்கூடிய வகையில் வெளிப்படுத்த முடியுமானால் எத்தனை கனமான விஷயத்தையும் பத்திரிகைத் தொடராக எழுத இயலும். டாலர் தேசம் தொடங்கி இதைப் பலமுறை எனக்கு நானே நிரூபித்துக்கொண்டிருக்கிறேன்." சொல்வது பாராவுக்கு இலகு; இது அவரின் தன்னடக்கமென்று அவருக்கு, பதிவர்கள் அறிந்த பெயர்களிலே பின்னூட்டியவர்கள் சொன்னால், நான் ஏற்றுக்கொள்ளமுடியாது. இக்கருத்துத்தான், பா.ராகவனின் கருத்துகளிலே எனக்கு எரிச்சலை மூட்டுவது. வாசகப்பூனைக்குட்டியம்மணிகள் விரும்புவது போல, "இறுக்கமில்லாத தோழமையான 'நடை'" என்பது அமைப்பது கடினமான காரியமில்லைத்தான்.

ஆனால், பரபரப்புக்கான உத்திகளும் விருவிறுப்புக்கான நடையும் பேசும் விடயத்தின் ஆழத்தையும் கனத்தையும் நீர்த்துப்போகச்செய்து, மெட்னி படம் பார்க்கிறதுபோலையும் மாலைமதி வாசிக்கிறதுபோலையும் ஆக்கக்கூடாது பாருங்கோ.

பொன்சேகா என்ன நினைச்சார், பிள்ளைத்தாச்சிப்பொம்பிளையா நடிச்சவள் என்ன நினைச்சாள், ராஜபக்க்ஷ என்ன நினைச்சார் எண்டெல்லாம் நீங்களே யோசிச்சு எழுதிறதெல்லாம் சுப்பராத்தான் வாசிக்கிறவனுக்கு இருக்கு. ஆனா, உது உண்மையோ எண்டு பாரா நினைச்சுப் பாத்தாரோ? வாசிக்கிறவன் நடந்தையெல்லாம் உந்த விண்ணான விறுவிறுப்பான நடையிலை சீரியஸா எண்ணுவானெண்டு நினைக்கிறாரோ?

நிச்சயமாக, பாராவிடமிருந்து குமுதம் ரிப்போட்டருக்காக, "The Rise of Fall of Third Reich", "Ten Days That Shook the World", "A People's History of the United States: 1492-Present" தரத்திலான நூல்களை எவருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், எழுதும் மொழிநடையினாலே வாசிக்கும் வாசகருக்கு, நிகழ்வுகளிலே பொய்யான உணர்வுநிலையையும் மயக்கத்தையும் உண்டாக்கும் வகையிலே அவர் எழுதுவது முறையல்ல.

மேலும், டாலர் தேசம் தொடங்கி எழுதுகையிலும் கனமான விடயத்தை இலகுவாகக் கொண்டு செல்லமுடியுமென்று தனக்குத்தானே நிரூபித்துக்கொண்டதாக பாரா பெருமிதமடைகின்றார். ஆனால், இலகுவாகக் கொண்டு சென்ற விடயம், வேண்டிய கனத்தை வாசிக்கின்றவர்கள் மனதிலே பிடித்ததா என்பதுதான் பாரா அறிந்து பெருமிதம் கொள்ளவேண்டிய விடயமென்று எண்ணுகிறேன். 2003 இலே புத்தப்புழு குழுவிலே இவரிட்ட டாலர் தேசம் முதல் அத்தியாயத்திற்கும் நானும் BB உம் இதே உப்பவிட்ட பரபரப்புநடை பற்றிக் குறை சொன்னதை நினைவிருக்கக்கூடும். வரலாற்றுப்புதினம் அல்ல, வரலாற்று நூல்.

வீரப்பன் பற்றி கிழக்கு வெளியிட்ட சொக்கனின் பரபரப்பான ஒரு பக்கச்சார்பான நூலை வாசித்த அதே நேரத்திலேயே பாலமுருகனின் சோளகர்தொட்டி என்ற மறுபக்கச்சார்பு தெளித்த ஆனால், நிதானமான புதினத்தினையும் வாசித்தேன். பதியப்பட்ட புதினம், எழுதப்பட்ட வரலாற்றிலும்விடப் பிடித்துக்கொண்டது. இதற்கு எதிர்மாற்றான உணர்வு நிலை, Ishmael Beah இன் 'A Long Way Gone: Memoirs of a Boy Soldier' என்ற நினைவுக்குறிப்பேட்டினையும் Uzodinma Iweala இன் "Beasts of No Nation" என்ற புதினத்தினையும் வாசிக்கும்போது ஏற்பட்டது. எழுதப்பட்ட புதினத்திலும்விட, பதியப்பட்ட வரலாறு நிதானமும் மெய்யும் கலந்திருப்பதாகப்பட்டது.

அதனாலே எழுதும் விதத்திலே நிஜம் கோணாமலும் கோடாமலும் எழுதலாம். பாரா இலகுவாக்குகிறேன் பேர்வழி என்று மதியவேளைத்தொலைக்காட்சித்தொடராக வரலாற்றிற்கு எதேச்சைக் குழிவாடி/குவிவாடி போடாதிருந்திருக்கலாம்.

பாரா அவரது நண்பர் பத்ரியைக் கவனித்திருக்கலாம்; கிழக்கின் நூல்கள் வரலாறு குறித்து எத்துணை உணர்ச்சிக்குதம்பல் விறுவிறுப்பினை முன்வைத்து விற்பனைப்(பர)பரப்பினை முன்னிறுத்தியிருந்தபோதுங்கூட, பத்ரியின் பதிவுகள் இயன்றவரை நிதானமான அலசல்களாகவே எனக்குத் தோன்றுகிறன - முரண்படுமிடங்களிருப்பினுங்கூட. அவை வாசிக்கமுடியாததாகவிருக்கிறனவா? விறுவிறுப்பில்லை என்று விட்டுவிடுகின்றார்களா?

3. "களம் பெரிது என்பதனால் முன்னும் பின்னுமாக நகர வசதியாக Halfway opening உத்தியைக் கையாண்டிருக்கிறேன். " என்கிறார் பாரா. உத்தி என்பதெல்லாம் நல்ல விடயமேதான். "ஆதௌன கீர்த்தனாரம்பத்திலே", "ஒரே ஒரு நாட்டிலே ஒரே ஒரு ராஜபக்ஷ" என்றெல்லாம் எழுதவேண்டாம். ஆனால், எந்த வெட்டுப்புள்ளியிலே தொடங்கி, எந்த மாதிரியான அமைப்பிலே வரலாற்றினை எழுதுகின்றீர்கள் என்பது முக்கியமில்லையா? வாஞ்சிநாதன் ஆஷைக் கொன்றதிலே தொடங்கும் கதை, தமிழகத்தின் இந்தியா குறித்த சுதந்திரப்போரின் வரலாற்றிலும், இராஜீவ் காந்தி வெடித்துச் சிதறியதிலே விரிக்கும் கடை, ஈழம் குறித்த இந்தியாவின் தொடர்புகளிலான வரலாற்றிலும் என்ன தாக்கத்தினையும் கருத்தினையும் ஏற்படுத்துமென்று பாராவுக்குத் தெரியாதிருந்தால், அண்மையிலே வெடித்த சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரிச்சண்டையிலே அடித்தவர்கள் - வாங்கினவர்கள் பற்றிய விழியத்தினைப் பார்த்துவிட்டுப் பதிவெழுதிய தமிழ்ப்பதிவர்களைப் பார்த்து அறிந்து கொள்ளட்டும். இதே பதிவர்கள்தான், குமுதத்திலோ, விகடனிலோ விதைத்த துணுக்கு முளைத்தாலோ, போட்ட கவிதை பூத்தாலோ, பதிவுபோட்டு ஆளையாள் முதுகைத் தட்டிச் சொறிந்து கொள்கின்றவர்கள். இவர்கள்தான் "யுத்தம் சரணம்" வாசிக்கப்போகின்றவர்கள்; அதன்மூலம் இலங்கை வரலாற்றினைப் புரிந்து கொள்ளப்போகின்றவர்கள்.

எவருமே தமிழர்களுக்குச் சார்பாக எழுதுங்கள் என்று கேட்கவில்லை. எடுத்ததெற்கெல்லாம் பார்ப்பான் பத்திரிகை, பார்ப்பான் என்று எழுதும் திராவிடவேங்கைகள் விடுதலையிலோ, முரசொலியிலோ இதுவரை நாள் ஈழம் பற்றி ஒரு தொடர் எழுதவில்லை என்பதையும் அறிந்திருக்கிறோம். அதனாலே, இவ்விடயங்களையெல்லாம் பார்ப்பான் - பார்க்கான் என்று வரும் கருத்துகளை நான் கருத்திலெடுக்கவில்லை. (பாராவுக்கான பின்னூட்டிகளிலே சிலருக்குப் பாராவின் கருத்திலே உடன்பாடு இருப்பதற்கும் துரதிர்ஷ்டவசமாக இதே குழுசார்ந்த உளநிலையே காரணமென்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.)

தனிப்பட்ட அளவிலே, தமிழகத்தின் அரசியல்வாதிகள், நடிகர்கள், எழுத்தாளர்கள் எல்லோருமே மூன்றும் கலந்தவர்களே என்ற உணர்வுமட்டுமே எனக்குள்ளதால், இத்தொடரை இப்போது வரும்வகையிலேயே தொடர்ந்தால், அதன் நகை/டைக்காகவேனும் தொடர்ந்து வாசிப்பேன். எஃது எவ்விதமானாலுங்கூட, பாராவின் திறமையையோ, தொழில்வல்லமையையோ எவ்விதத்திலும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவை குறித்து எனக்கு அவரிலே அவருக்குப் பின்னூட்டமிடும் அனைத்து அறிந்த அறியாத வாசகர்களைப் போலவே மதிப்புண்டு. இங்கே சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் அவ்வகையிலே தவறாக எண்ணப்படக்கூடா. இத்தொடர் தமிழகவாசகர்களிலே பலருக்கு புதிய விடயங்களை (சமயங்களிலே ஈழத்தவருக்குங்கூடவே) தெரியத்தந்து தெளிவாக்கும் என்பதிலே எனக்கேதும் மறுப்பில்லை. ஆனால், எழுதும் பொருளுக்கு நேர்மையும் கனமும் பொருந்தி வரவேண்டுமென்று விரும்புகிறேன்.


இவ்வளவு வாயால் வெட்டுகிறவன் இலங்கை வரலாறு ஏன் எழுதவில்லையென்றால்,

1. யாருக்கு எழுதி என்ன பயன்? உண்மைத்தமிழனுக்குச் சுவாமிநாதராகக் கொழுவி குந்தி என்ன பயன் கண்டார்? "Wheels on the bus go round & Round.. all through the town/time;"

2. எழுதுவது எனக்குச் சாப்பாடு போடும் தொழிலல்ல;

3. உற்றமும் சுற்றமும் இவ்விடமற்று வாழ்பவன்;

4. என் தோழமையற்ற இறுக்கமான கோழி கிண்டின நடை;

5. வரலாறு என்பது நிறைய ஆய்ந்து நிதானமாக எழுதவேண்டியது; நாளாந்தம் எழுதும் பதிவுகளைக் கட்டிப்போட்டுத் தொடராக்குவதல்ல;

6. எழுத எத்துணையோ அறிந்த, உணர்ந்த, போரிட்ட ஈழத்தமிழர்கள் பலர் பேசாமலிருக்கையிலே, வாசித்ததை மட்டும் வைத்துக்கொண்டு பேசமுடியாது;

வெட்டி ஒட்டிப் பேசாமல், சாதிச்சங்கம், மொழிக்குழுமம், மதயானை வைத்து மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் ஒட்டுதல் சொல்லாமல், ஏதேனும் உருப்படியாகப் புதுக்கருத்து எவருக்கேனுமிருந்தால், பின்னூட்டுங்கள். இல்லாவிட்டால், விடுங்கள். ஏற்கனவே, உண்மைத்தமிழன் நீள, தோழமையற்ற இறுக்கமான நடையிலே களைத்துப்போயிருப்பீர்கள். பின்னூட்டம் வேறு போடத்தான் வேண்டுமா? :-) எழுதினதைத் திருப்பி வாசிக்க எனக்கே பஞ்சியாகவிருக்கிறது. இணைப்புகளை நாளைக்குப் போட்டுக்கொள்ளலாம். தட்டச்சிலே தப்பச்சிருந்தால், தமிழ்ப்பெருந்தகைகள் மன்னிக்கவும்.

Tuesday, November 18, 2008

என் சூப்பின மாங்காய்த்தலையின் இன்றைய எரிச்சல்களும் இயலாமைகளும்

பதின்மவயதுச்சுயதிருப்திக்கு ஈடானதாக நாகார்ஜுனனின் இடுகையொன்றும் ராஜநாயஹத்தின் சில இடுகைகளும் எனக்கு; ஓரத்திலே மகிழ்ச்சியைத் தரும் குற்றவுணர்வு அல்லது ஓரத்திலே குற்றவுணர்வைத் தரும் மகிழ்ச்சி - முழுகியபின்னால், காதை, காதுப்பறையிலே இடிக்கும்படி 'பின்'னாலே குடைந்து நீரெடுப்பதுபோல், பல்லிடுக்கை இரத்தம் வரக் குத்தி தேங்காய்ப்பூத்துண்டை, இறைச்சிச்சிதம்பை எடுப்பதுபோல்.

நாகார்ஜுனனின் குறிப்பிட்ட இடுகையும் பின்னூட்டங்களும், இதுவரை காணாத -நடைமுறை அரசியல், உணர்வுநிலையுந்தல் தவிர்த்த - தத்துவவழியான பார்வையிலே இன்றைய ஈழநிலை தொடர்பான தமிழக அரசியலை (கவனிக்க - ஈழ அரசியலை அல்ல) ஆய்கின்றன. பூக்கோ தொடக்கம் பல நவீன தத்துவ லம்பாடிகளின் ஆதிக்குரல்கள் தொடர்பான கருத்துகள் அநாசயமாக ஆயப்படுகின்றன; நிறைய அறிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கின்றது. இவ்விவாதத்திலே அல்லது பதிவுரையாடலிலே பங்குபற்றுகின்றவர்களைக் கவனிப்பின், அவர்கள் வெறுமனே பேச்சிலும் எழுத்திலும்மட்டும் நின்றுவிட்டிருந்த ("நின்றுவிடும்" என்று சொன்னேனா? ;-)) ஆட்களில்லை. காயாத பதிவுலகத்திலே தேய்ந்தாலும் பழைய பட்டுக்கோட்டை பாணிப்பாட்டுத்தத்துவத்தட்டைப் போடும் ரயாகரன், சிறீரங்கன் இவர்களிலிருந்து இவ்வுரையாடல் வித்தியாசமான பார்வையைத்/பார்வைகளைத் தருவது பொறுமையுடன் வாசிக்கும்போது பிடித்துக்கொள்கிறது.

ஆனால், இம்மகிழ்ச்சியின் ஓரத்திலேயுண்டாகும் குற்றவுணர்வு என்னவென்றால், இன்றைக்கு ஈழத்திலிருக்கும் நிகழ்நிலையைக் குறித்து, அதன் அரசியலிலே நிகழ்க்கூடிய தன்மையைக் குறித்தோ நாகார்ஜுனனும் தமிழவனும் ராஜன்குறையும் வளர்மதியும் ஜமாலனும் தமிழகத்திலே பரபரப்பான திராவிட+பார்ப்பன சண்டை/சாதி ஊடகங்களுக்கப்பால் எடுத்து ஓர் அறிவுநிலைசார்கருத்துப்பரம்பலைச் செய்யமுடியாதிருப்பதைக்/செய்யாதிருப்பதைக் கண்டும் கேட்கமுடியவில்லையே என்பதுதான்; எவ்வுரிமையோடு கேட்பது என்பதை எனக்கே ஒரு சாட்டாகச் சொல்லி ஒத்தடமும் களிம்பும் போட்டுக்கொள்ளலாம். இவர்கள் இதைவிடவும் மேலாகச் செய்யமுடியுமென்று - புலிகள்/மாற்றுயியக்கங்கள் சரியா தவறா என்று தம் கருத்தினை முன்வைப்பதுட்பட- தோன்றுகிறது. இவர்களிலிருந்து மிகவும் இளையர்களான அந்நியனுக்கும் ஹரிக்கும் வாய்க்காத தமிழரசியலின் விளைவான தம்முயிரிருத்தல் பற்றிய அச்சமின்மை இவர்களுக்கு வாய்த்திருக்கின்றது. இந்து பற்றி சிறப்பாக நாகர்ஜுனன் ஒரு பந்தியிலும் தமிழவன் ஒரு பத்தியிலும் கட்டுடைத்திருந்தார்கள். இவை எதற்காக எம். எஸ். எஸ். பாண்டியன் எழுவதுபோல ஆங்கிலத்திலே பரந்துபடவும் வாசிக்க வரமுடியாது? ஈழநடைமுறையின் நிலையினை, "ஈழநிலைப்பாடு=பயங்கரவாதம்" என்ற மாயாபஜார்பேஜாரிலிருந்து ஒரு சிலரேனும் விலகி விளங்கிக்கொள்ள உதவுமல்லவா? நிச்சயமாக, இவர்கள் தமிழிலே எழுதும் இக்குறிப்பிட்ட இடுகை, சிறப்பானதாக இன்னும் தொடர்ந்து வளரின் விற்பனை நோக்கிலே எடுத்து, "பொஸ்தகம்" போட வணிகநோக்குள்ள பதிப்பாளர்கள் முன்வரலாம். படித்த மத்திய தட்டு இளைஞர்களிடையே, "கட்டுடைப்பு, பூக்கோ" போன்ற திறவுச்சொற்கோவையெல்லாம் சுயதிருப்திக்காக விற்பனையாகுமென்பதை நூல்பிடித்தறிந்த பதிப்பகங்களுள்ளன. ஆனால், தத்துவங்களைத் தத்துவங்களாகக் காண்பதற்கப்பால், ஏதேனும் நடைமுறைப்பயனாக விளையாதா?

சத்தியக்கடதாசிகள், சி. புஸ்பராஜாவின் நூலிலிருந்து (மட்டும்) தெளிவான ஈழவரலாற்றை ராஜன்குறை தேடுவது என்னைப்போன்றவர்களுக்கு உவப்பில்லாதபோதுடினாலுங்கூட, ராஜன்குறைக்கு இவை பற்றி நடைமுறை சார தத்துவத்தினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று அடுக்குமாடித்தத்துவக்கட்டடம் கட்டுவதற்கப்பாலுங்கூட, ஏதேனும் நடைமுறை சார எழுதமுடியாதா? ஜெயமோகன் - மார்க்ஸ் எழுத்துயுத்தத்திலே துணைக்காலாட்படை, போர்விமர்சகர் போன்ற பாதுகாப்பான நிலைப்பாடுகளிலே களம்கட்டியிருந்து புலன்விசாரணை செய்வதிலேயிருக்கும் சமூகப்போராட்டத்திருப்தியும் தனியாளிருப்பின் பாதுகாப்பும் ஈழம் பற்றி விமர்சிக்கும்போது இவர்களுக்கு வருவதில்லை என்பதாலேயா? இந்துவினதும் பொதுவாகவே இந்திய ஆங்கில ஊடங்களினதும் ஈழம் தொடர்பான, "ஈராக்கியப்போரின் ஆரம்பநிலையிலான அமெரிக்க ஊடங்களின் நிலைப்பாடு" வகைச்செயற்பாடுகளை எதற்காக ஆங்கிலவழி உரைக்க-உணரக்கூடிய சக இந்தியர்கள் & அகிலத்தவர்கள் இடையே உடைத்துக் காட்டமுடியவில்லை? இதை அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாகச் சொல்லவில்லை; தத்துவம் சார் சமூகவரசியலாளர்களிலே ஏற்படும் ஒரு வகையான ஏமாற்றத்தின் விளைவாகவே கூறுகிறேன். வரள்வெளி விழாத+விடாத தொடர்ச்சியான தத்துவவளர்ச்சி என்பது தேவைதான்; ஆனால், தத்துவவளர்ச்சி மட்டுமே சமூகத்தைத் தாக்குப்பிடித்து நிறுத்துமா? நிறுத்துமென்றால், ஜெயமோகனின் அக்கார அடிசில்லுப்புராணங்களே இந்தூயசமூகத்திற்கு இக்காலகட்டத்தே வண்டியோட்டப் போதுமானவை.

******
என்றாலுங்கூட, தனிப்பட்ட விருப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் ஓரத்திலே குற்றவுணர்வைத் தரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இவர்கள், ஓரத்திலே மகிழ்ச்சியைத் தரும் குற்றவுணர்வினை விளைவாக்கும் கீழே வருகின்றவரிலும்விடப் பரவாயில்லை என்பது உண்மையே

*****

துணுக்குத்தோரணங்களிலே, அதுவும் குறிப்பாக, இலக்கியத்துணுக்குத்தோரணங்களிலே எனக்கு ஆர்வமுண்டு; காரணம், இழவுக்காவியம் படைக்கமுடியாவிடினும், இந்த 'ராஜாஜிக்கு ஒரு தும்பிக்கை' & 'லோஸாவுக்கு சிறு தொந்திப்பை' வகையான 'டிட்பிற்ஸ்' சேர்த்துவைத்தால், உதிர்க்குமிடங்களைப் பொறுத்து என்னையும் இழக்கியவாலியாக்கிவிடும். அவ்வகையிலே மகிழ்ச்சி ஓரங்கட்ட குற்றவுணர்வோடு(ம்) ராஜநாயஹத்தின் பதிவுகளை விடாது வாசித்துப் இலக்கியச்சோளப்பொரி சேர்ப்பவன் நான்.

ராஜநாயஹம், ஹிட்லரின் யூதர் குறித்த நிலைப்பாட்டினையும் திராவிட இயக்கங்களின் "பார்ப்பான் ≥ பாம்பு" என்ற நிலைப்பாட்டினையும் பாசிசச்சரியாசனம் வைத்ததிலே எனக்கும் மிகவும் உடன்பாடே. ("இழவு எடுத்தெல்லாம் இங்கே பார் பார்ப்பான்" என்ற பகுத்தறிவற்ற தமிழ் ஓவியா பதிவு, சிந்திக்க சில உண்மைகள் பதிவு என்பன இத்தகையன. இவற்றுக்கெதிரான பார்ப்பனியப்பாசிசப்பதிவுகளையும் இலகுவிலே பட்டியலிடலாம். ஆனால், இங்கே நோக்கம் அதுவல்ல. இன்றைய காலகட்டத்திலே, உலகம் பார்ப்பனியம்.எதிர்.திராவிடம் என்ற எளிதான இருநிலைச்சுழியுள்ளே ஒடுங்கி அடங்கவில்லை என்பதிலே திடமான நம்பிக்கையுள்ளவன் நான்.)

அண்மைக்காலம்வரை ஜெயமோகனை அடிக்க காலச்சுவடு உசுப்பேத்திவிடும் அடியாள் என்ற அபிப்பிராய அறியாமை மட்டுமே இவரைப் பற்றி எனக்கு இருந்ததென்பதற்கு, இவரை முதலிலே அறிய நேர்ந்த இவரது இலக்கியபத்தி+பக்தி எழுத்துகளும் காரணம். அப்படியான தப்பபிப்பிராயம்மட்டும் இப்போது மாறவில்லை; இவரை எதிர்_ஜெயமோகன் கருத்துப்பிம்பவடையாளமாக வைத்திருந்தது(ம்) மாறி, மாற்று_ஜெயமோகன்(_would be) கருத்துப்பிம்பவடையாளமாக மாற்றிக்கொண்டுவிட்டேன்; இலக்கியமென்பது உருகிப்பருகி ஆனந்திக்கமட்டுமே என்ற அமுதகலசமதுவந்திகளாக இரண்டுபேரும் தோன்றுகின்றார்கள். பக்கத்துவீட்டிலே பத்துப்பேரை வெட்டிப்போட்டாலுங்கூட, 'மௌனியின் யாளி சுழித்ததா? கோணங்கியின் பாழி குளித்ததா?' என்று மட்டும் குறிப்பே(ண்)டு வைப்பவர்களே அசல் இலக்கியக்காரர்கள். (முக்கால்வாசி இலக்கியக்காரர்கள், 'இந்தச்சாதிவெறியர்களை வெட்டிப்போடணும் சார்' என்று ஒரு ப்ரேக் லைன் பதிவிட்டுவிட்டு, வழக்கமான புரோக்ராம் ஷெட்யூலிலே, ஆப்கானிய நாவல், அல்பேனியத்திரைப்படம் என்று நகர்ந்துவிடுகிறவர்கள் என்பதாக உய்த்தறிவு)

இதெல்லாம் ராஜநாயஹத்தின் சொந்த அபிப்பிராயங்களென்பதாலேயும் சுயவிருப்புகளென்பதாலேயும் எனக்கேதும் அவரின் பிடில் வாசிப்பிலே கருத்துமறுக்க இடமில்லை.

ஆனால், அவரின், "பாரதி துவங்கி குபரா , பிச்சமூர்த்தி , மௌனி , க நா சு , சிட்டி , சி சு செல்லப்பா , லா ச ரா , தி .ஜானகிராமன் , கரிச்சான்குஞ்சு ,சுந்தர ராமசாமி , நகுலன் ,அசோகமித்திரன் , இந்திரா பார்த்த சாரதி, ஆதவன் போன்ற பிராமணர்கள் தான் எனக்கு புனிதர்கள்" என்ற புனிதப்பட்டியல் வியப்பூட்டுகின்றது.

மேலே சொல்லியிருக்கும் பட்டியலிலே இருக்கும் மனிதர்களிலே எத்தனை பேர் குறைந்தளவு ஒரு சந்தர்ப்பத்திலேனுங்கூட, தாம் பிராமணர்கள் என்பதைப் பூணூல் உருட்டிக்காட்டாமலிருந்தார்கள் என்பதைக் கொஞ்சம் சொல்வாரா?

நாளாந்த துயர, வேதனையான & ஆத்திரமூட்டும் நெறியற்ற நிலைகள் பற்றிய செய்திகளிடையே இவரது தாமரையிலைத்தண்ணீர்போன்ற இலக்கியத்துணுக்குச்சரங்கள் செய்தித்தேங்காய்ச்சொட்டுகள் சேகரிக்கும் அற்பசந்தோஷத்துக்கப்பால் எனக்கு ஈடுபாடு தருவதில்லை. நிகழ்வாழ்க்கையிலே அடுத்தவீட்டுக்காரன் சொட்டும் ஒரு துளி இரத்தத்தினைப் பற்றி ஒரு சொல் உதிர்க்கமுடியாதவர்களெல்லாம் கற்பனை ரத்த உறவுகளினைப் பற்றிப் பேசும்போது, இருந்து முழுதாகக் கேட்கவோ ஓடிக்கொண்டு ஓரிரு வார்த்தைகளைப் போட்டுக்கொள்ளவோ தாளுவதில்லை. ஆனால், இப்பட்டியலிடுகை அவரது சொந்தப்புனிதர்வரிசையானாலுங்கூட, மறையாக ஈர்த்து எரிச்சலூட்டுகிறது.

மேலே கூறிய பட்டியலிலே உள்ளவர்களிலே எத்தனை பேர் பூணூலை - குறைந்தது ஒரு சந்தர்ப்பத்திலாவது - பெருமையுடனோ, பிழைப்புக்காகவோ பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார்கள் / தொங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவரே அறிவாரெனத் திடமாக நம்புகிறேன்; ஏன் அவரைப்போல வாசிப்புவிலாசமற்ற எனைப் போன்ற கரிஞ்சகுஞ்சான்கள்கூட அறிவார்கள். அதனால், பட்டியலிடும்போது, ஓரளவுக்கேனும் இடுகையை வாசிக்கின்றவர்களின் அறிதற்றிறனைக் குறைத்து மதிப்பிடாமல், அவர் இடமுடியாதா? வேண்டுமானால், பதிலுக்கு நான் பட்டியலிடப்பட்ட புனிதர் சிலரின் பார்ப்பனியம்பிடித்துத்தொங்குபுதினங்களைப் பறித்துப் பதிவாகப் போட்டு புண்ணியம் தேய்த்துக் கொல்லலாம்.

ஆனால், இதைச் செய்தால், ஜெயமோகன்களுக்கும் மாற்று_ஜெயமோகன்களுக்கும் மாற்று_மாற்று_ஜெகன்மோடிகளாக நானோ என்னைப் போன்றவர்களோ போய் முடிவதாகவே நிலை ஆகும். அப்படியாகச் செய்கையிலே, முன்னைய பந்திகளிலே நாகார்ஜுன், தமிழவன், வளர்மதி, ஜமாலன், ராஜன்குறை போன்றவர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி கேட்கும் தகமையிழந்துபோவோம். பதிலாக புனிதர்க்கறை+குறை பட்டியல் போட்டாலுங்கூட, பிரமிள் போடாத 'வள்' கவிதைகளையும் தொ.மு.சி.ரகுநாதன் எழுதாத பஞ்சபுனிதர் ('பஞ்சப்புனிதர்' என்று சொல்லிவிட்டானோ என்று அடிக்கவரக்கூடாது) பற்றிய கட்டுரைகளையும் "யூதர்களின் நிலைக்காளானோம்" என்ற புனிதர்களின் சுய_எச்சிற்றெறித்தல்களையும் விடவா எடுத்துச் சொல்லிவிடப்போகிறோம்?

இஃது எவ்வகையிலும் மற்றைய சாதிவழி வந்த எழுத்தாளர்களுக்குச் சாதிப்பற்று இருக்கவில்லை என்று சொல்வதாகக் கொள்ளக்கூடாது. கிளப்புகள் வைத்துக்கொண்டு இலக்கியம் கிளப்பாவிடினுங்கூட, புதுமைப்பித்தனுக்கும் இருந்திருப்பதாகத்தான் தெரிகிறது.

*****

என்னவோ, சகபதிவர் ஒருவர் என்ன எதற்கென்றின்றிப் பிடிக்கப்பட்டு விசாரணையின்றி வைக்கப்பட்டிருக்கின்றார். பின்னூட்டம் அவரது இடுகைகளுக்கு மொக்கையையாகவும் சக்கையாகவும் போட்டு மகிழ்ந்திருக்கின்றோம். இப்போது எத்தனை பேர் அவரைப் பற்றிப் பேசினார்கள்? முகம் தெரியாது இறப்பவர்களுக்காக, காணாமலே போகின்றவர்களுக்காகக் கவலைப்படுகிறோம்; ஆனால், கூடப் பதிவராக இருந்து பழகிய ஒருவரைக் குறித்த அக்கறை எமக்கில்லை. சாம் ஆண்டர்சனும் நாண்டுவின் நாற்பது நாறிய கேள்விபதிலும் மோண்டுகிடக்கிறோம். ஆக, ரிசான், டிசே, ரோஸ் மேரி தவிர எவருமே கண்டுகொள்ளவில்லை. கைது செய்கையிலே வீடியோ பிடித்து இணையத்திலே போட்டிருந்தால், புரட்சி பொங்கி மழையிலே பொலீஸ் கையைக் காட்டிய இடத்திலே நின்று மூன்று நிமிடங்கள் பேசியிருப்போமோ என்னவோ? :( பெரும்பாலும் அரசியலே கலக்காமல் பதிவு போடும் வாமலோஷன், அரசியலே கலந்து பதிவு போடும் முஸ்லீம் மலேசிய ராஜா பெற்றாவாக, சவூதி அரேபிய புவாத் அல்பர்ஹானாக இருந்திருந்தால் மட்டும், நமக்கு தமிழர்நாடுகளிலே ஏதும் ஆபத்தில்லை என்று கண்டனப்பதிவு போட்டிருக்கலாமோ? :(

அவர் கைது செய்யப்பட்டது குறித்துக்கூட ஒரு சொட்டும் குறிக்காது, தொடர்ந்தும் "சூடான இடுகையா, சுவையான அவலா முக்கியம்?" என்பது பற்றியும் நடிகை ஒருவரின் அரைநிர்வாணப்போஸ் என்ற இடுகைக்குப் பின்னூட்டம் இடுவதிலும் முங்கி முயங்கிப் போய், விரைஸ்கலிதமாகும் பதிவுலகிலே புனிதகங்கர்களை இனங்காட்டிப் பேசுகின்றவர்களைப் பேசுகையிலே நானும் ஒரு மொக்கையிலே சக்கைபோடும் இலக்கற்ற இலக்கியச்சுயமைதுனலிங்கனாகி இலக்கியப்பதிவர்ஜோதியிலே ஐக்கியமாகி, பின், தொடர் தத்துவவிசாரத்தீவிரத்திலே சாரச்சீத்தையை இடைவெளி பிரிந்து கசியாமல் இறுக்கிக் கசக்கி நொருங்கென்று நெம்புநுனி கதற நுள்ளி நசுக்குகிறேன்.


பதின்மவயதுச்சுயதிருப்திக்கு ஈடானதாக நாகார்ஜுனனின் இடுகையொன்றும் ராஜநாயஹத்தின் சில இடுகைகளும் எனக்கு; ஓரத்திலே மகிழ்ச்சியைத் தரும் குற்றவுணர்வு அல்லது ஓரத்திலே குற்றவுணர்வைத் தரும் மகிழ்ச்சி -முழுகியபின்னால், காதை, காதுப்பறையிலே இடிக்கும்படி 'பின்'னாலே குடைந்து நீரெடுப்பதுபோல், பல்லிடுக்கை இரத்தம் வரக் குத்தி தேங்காய்ப்பூத்துண்டை, இறைச்சிச்சிதம்பை எடுப்பதுபோல்.


இறுதியான இவ்வரியிலே வெறுவெட்கம்மட்டுமே விஞ்சி விரவி வழிகிறது.

நீதி 1: காலையிலே எழுந்து உருப்படியாக வேலை செய்கிறேனென்று முன்னிரவிலேயே நித்திரைக்குப் போகக்கூடாது.

நீதி 2: காலையிலே எழுந்த பின்னால், தமிழ்மணம் வேலை செய்கிறதா என்று சோதித்துப் பார்க்கக்கூடாது.