Saturday, August 30, 2008

தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்

தமிழ்நதியின் இன்றைய இடுகையைப் பார்த்தேன். கிங்கும் அதே படங்களோடு இடுகையிட்டிருந்தார். தமிழ்நெற்றிலே காணக்கிடைக்கும் படங்கள் இன்று காலை முதல் உள்ளே பிழிந்து கொண்டிருக்கிறன. 'பிழிந்து கொண்டிருக்கின்றன" என்று சொல்வது அதீதப்படுத்திய, செயற்கையான சொற்றொடராகவே எப்போதும் எனக்குப் படும் - சென்னைச்சன்சீரியல்கள் உட்கொள்ளாத பேர்வழியாக நானிருக்கும்போதுங்கூட; ஆனால், இப்படியான அவப்படங்கள் மட்டுமே அப்படியான 'பிழிகிறன" என்பது வெறுமையான அதீதப்படுத்தப்பட்ட சொல் அல்ல என்பதை உணர்த்தி நிற்கின்றன.

இங்கே துயரமான சூழ்நிலை என்னவென்றால், இப்படியான படங்களை வெளியிட்டு, இந்நிலைக்கு வர முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளே காரணம் என்று ஐக்கிய இலங்கை ஆலாபனை, அமார்க்சிச நிரவல், மனிதாபிமான நிறுவல் முயற்சித்து முடிக்கும் புலம்பெயர்ந்த தலித்-பெண்ணிய-மனிதவுரிமை-முற்போக்கு-வயிற்றுப்போக்கு ஆசாமிகளும் அவர்களின் இணையத்தளங்களிலேகூட வெளிப்படையாக மாற்றுக்கருத்தினைத் தெரிவிக்கமுடியாத தன்மையும் இவ்வகைத்தளங்களையும் இந்த ஆசாமிகளையும் ஈழத்தமிழர்களின் புரட்சிகரமாற்றுச்சக்திகளின் பற்றவைத்த வெடிகுண்டுத்திரிகள் என்று இந்தியக்குரங்காட்டி வித்தைக்காரர்கள் முன்வைப்பதுமே.

அண்மையிலே தேசம் இணையத்தளத்திலே வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றுக்கு மாற்றான கருத்துகளைச் சொந்தப்பெயரிலில்லாமல் பின்னூட்டமாகத் தெரிவித்திருந்தேன். ஓரிரண்டு வரவேயில்லை. அதுகூடப் பரவாயில்லை. ஆனால், ஒரு பின்னூட்டம் கருத்து மாறாட்டம் தரும் வகையிலே வெட்டப்பட்டிருந்தது. இத்தனைக்கும் இப்பின்னூட்டம், அரசியல் குறித்ததேயல்ல. இன்னொரு பின்னூட்டம் அப்படியே நீக்கப்பட்டு, ஆனால், எனது பின்னூட்டப்பெயரிலேயே என் கருத்துக்கு முற்றிலும் மாறாக ஒரு வரியிலே சொல்லப்பட்ட கட்டுரைக்கு ஆதரவானதுபோல ஒரு வரிக்கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. இதுதான் இவர்களின் மாற்றுக்கருத்தினையும் கேட்கும் சுதந்திரம். இதனைக் கேள்வி கேட்பது சிக்கலான காரியமல்ல. ஆனாலும், என்ன பயன்? இவர்களுக்கு, செல்வி, சிவரமணி தொடக்கம் செல்லடித்துச் சாகும் சிறு குழந்தைகள்வரை வெறுமனே விடுதலைப்புலிகளைத் திருவிழாக்காலத்திலே வறுத்துக்கொட்டி விற்பனைக்கும் விளம்பரத்துக்கும் விட உதவும் வெந்தணல் குந்திய தாய்ச்சிச்சட்டிமட்டுமே. விடுதலைப்புலிகளுக்குக் காசு சேர்ப்பது பற்றி பக்கம் பக்கமாக "புல்லன் ஆய்வு" செய்து ஒட்டிக்கொள்ளும் இப்படியான இணையத்தளங்களின் முழுநேரச்செய்திபரப்பாய்வாளத்தொண்டர்களும் இலங்கை+இந்திய அடிக்கடி_திக்விஜயர்களும் எட்டுத்திக்கும் கொட்டிமுழக்கும் வானொலி அண்ணா, மாமா, ஐயாக்களும் அகில இலங்கை அந்நியோன்ய சனநாயகப்பேரவை அமைப்பாளர்களும் எங்கிருந்து தாம் சங்கநிதி, பதுமநிதி பெற்றுக்கொள்கின்றனரென்று ஒருபோதுமே சொல்வதில்லை. தமக்குத்தாமே தலித்தியப்புயல், பெண்ணியக்கயல், பின்நவீனவயல், அமார்க்ஸியமயில், மனிதநேய ஒயில் என்றெல்லாம் பட்டம் சூடிக்கொள்ளும் புரட்டுகரச்சகதிகளிடம் நாமும் கேட்கமுடியாதல்லவா? நம்மைப்போலக் கேள்வி கேட்பனவெல்லாம், கேள்வி கேட்ட கணத்திலிருந்து ஆறுநாள் யாழ்ப்பாணிப்பாசிசத்திலே ஆழ ஊறவைத்துச் செய்யப்பட்ட வன்னிப்புளிப்பயற்றம்பணியாரங்களல்லவா?

நண்பர் ஒருவர் அண்மையிலே சொன்னது; "இப்படியான வைக்கோல் மாட்டுச்சத்திகள் ஈழத்தமிழரின் பிரதிநிதிகள் என்று ஆகாதிருப்பதற்கேனும், விடுதலைப்புலிகள் இருந்தாகவேண்டும் என்பதுதான் யதார்த்தமாய்ப் போச்சு நிலை." அவ்வகையிலே எனக்கு அக்கருத்திலே துமியேனும் மாற்றுக்கருத்தில்லை. (கூடவே, அவர் இன்னொன்றையும் சொன்னார்; "இவங்களின்ரை தளங்களிலை பின்னூட்டமிடுறதும் மிச்சம் கவனம். ஐபி, ஆராருக்கு எதெதுக்குப் போகுதெண்டு ஒருத்தருக்கும் தெரியாது" அடப்பாவிகளே, ஆயிரம் முரண் அவர் பற்றியிருந்தாலுங்கூட, "கவிஞர்" சேரன் முறையான கலாநிதிப்பட்டமேதான் பெற்று (துணைப்)பேராசிரியராகத்தான் 'நாலாண்டு காலேஜ்' என்ற வகைக்கும் மேற்பட்ட கலாநிதிப்பட்டமும் வழங்கும் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்திலே தொழில் செய்கின்றார் என்று சொல்வதிலுமா கருத்தைச் செதுக்கிப் போட்டு, சொல்லுகிறவன் இணையமுகவரி இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் கொடுக்கும் மாற்றுக்கருத்து அபாயத்துள்ளே சொல்லுகிறவனைக் கொண்டு போய் பாசிசவரித்தோலும் காலிடைவளைவாலும் சேர நிறுத்தப்போகிறது!! உப்பிடியே இணையத்தளமெல்லாம் இலங்கை+இந்திய அரசுகளின் பிள்ளையார்பிடிக்களம் எண்டு நினைச்சால், "எங்கடை கருத்து எதிர்க்கிறவனெல்லாம் பாசிசப்புலி" எண்ட உவங்களுக்கும் உவங்கட கருத்தோட முரண்படுகிறவைக்கும் என்ன வித்தியாசமிருக்கப்போகுது?? :-()


நிற்க; இப்படியான படங்களினை வெளியிட்டு வேதனையை இணையத்திலே புலம்புவதுமட்டும் எதையும் சாதித்துவிடப்போவதில்லை. தம்பதிவிலே குசேலனுக்கும் தசாவதாரத்துக்குமிடையிலே இரண்டு வரி ஒப்பாரி வைக்கும் பெரும்பான்மையான இந்தியத்தமிழர்கள் எதையுமே ஈழத்தமிழருக்காகக் கிழித்துவிடப்போவதில்லை. தமிழகத்திலே ஒரு குருவிக்குஞ்சின் ஈனக்குரலிலேகூட ஈழத்தமிழர்நிலை குறித்து ஒலி எழுப்பாத இவர்களா ஏதேனும் நீங்கள் எழுதுவதை, போடும் படத்தினை வாசித்து, பார்த்துவிட்டு உணர்ச்சி வந்து இணையத்துக்கு அப்பாலே நடைமுறைக்குச் செயல்வினையாக ஏதேனும் கிழித்துக்கொட்டிவிடப்போகின்றார்கள்? நேரடியான எதிர்ப்புச்சக்திகளான இந்து ராம், சோ ராமசாமி போன்றவர்களை விட்டுவிடலாம். தமது தலைவன் கருநாநிதியின் வெளிப்படையான அண்மைக்கால ஈழத்தமிழர்எதிர்நிலையைக்கூட இல்லையென்று நியாயப்படுத்தவே குத்தி முறிந்து கரணம் போடும் தொண்டரடிப்பொடிகள்தான் தமிழகத்திலே ஈழத்தமிழர்களின் நண்பர்களென்றால், எதற்கு யாரிடம் இதையெல்லாம் சொல்லிப் புலம்புகின்றீர்கள்? இணையத்திலே வடிகட்டியெடுத்து, எண்ணி விடக்கூடிய தமிழக நண்பர்களே ஈழத்தமிழர்களின்மீது, போகிற போக்கிலே இரண்டுவரி ஒப்பாரிப்பின்னூட்டமிடுவதற்கு அப்பாலும், மிகக் கரிசனையோடு -நடிகர்களை வரவேற்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கும் பெருமடங்கு மேலாக- சிறப்புடன் செவ்வனே செயற்படுகின்றார்கள். அப்படியான மெய்யான கரிசனை கொண்டவர்களிலே பெரும்பான்மையோர் இப்போது தமிழகத்திலே வாழவில்லை என்பது எமது அவநிலை. மிகுதியாக, தமிழகத்திலே வாழ்ந்த தமிழ்நதி போன்றவர்கள் அவர்களது தமிழக நண்பர்களிலே ஒருவரையேனும், ஈழத்தமிழருக்காக இணையத்து இருசொட்டு ஈரப்பின்னூட்டத்துக்கு அப்பாலும் இரங்கி, தமிழக மண்ணிலே இறங்கிக் குரல் எழுப்பினாரென்று காட்டிவிட்டு, இதுபோன்ற அடுத்த இடுகையைப் பதிவு செய்ய வேண்டும். அல்லாவிடின், இணையத்தின் வெற்று -"கடமுடா"- ஓசைகளையே உயிர்த்துடிப்பு என்றெண்ணி, உண்மையாகவே ஈழத்தமிழர்களின் குரலுக்குப் பலம் சேர்க்கும் சுருதிப்பெட்டிகளாக எண்ணிக்கொண்டு பதிவிடுவது, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது மட்டுமே.

தமிழகத்திலே தமக்கான எதிரிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவோ எதிர்ப்போ கொண்டவர்கள் என்ற எண்பதாம் ஆண்டுகளின் எண்ணச்சிந்தையின்படி, ஈழத்தமிழர்கள் பற்றி இணையத்திலே எதிர்ப்பு/ஆதரவுப்பின்னூட்டமிடும் இந்தியா வாழும் இந்தியத்தமிழப்பதிவர்களிடையே ஈழத்திலே குழந்தை குண்டு விழுந்து சாவதைப் பற்றியோ, உயிரஞ்சி ஓடிக் காடுறைவது பற்றியோ பேசி எவ்விதமான பயனுமில்லை - எமது நேரத்தினை அவமே செலவழிப்பது தவிர. இணையத்தின் இருவரி காலம் மாற்றாத அச்சொட்டு ஆறுதல் வார்த்தைகளுக்கு அப்பால், தாம் காலூன்றியிருக்கும் மண்ணிலே எதையும் செய்ய முடியாத/முயலாத இவர்களிடம் என்னத்தினை எதிர்பார்த்து இப்படியான இடுகைகளைப் பதிவு செய்கின்றீர்கள்? ஈழத்தமிழர் என்று வரும்போது, குரல் எழுப்புவதிலே, சோ ராமசாமி, இந்து ராம், வாஸந்தி, மாலன் தீவிர பாரம்பரிய வாஸகர்களுக்கும் கருநாநிதி, அ. மார்க்ஸ் அடிப்பொடிகளுக்கும் நடைமுறைச்செயற்பாட்டிலே பெரிய வித்தியாசமில்லை; குறைந்த பட்சம் முன்னையவர்கள் நேரடியாகவேனும், எதிர்ப்பினைக் காட்டுகின்றார்கள் அல்லது குதறப் பதுங்கிச் சமயம் பார்த்திருப்பார்கள்; அவர்களை எமக்கு அடையாளம் கண்டுகொள்ள இலகுவாகவிருக்கின்றது. மற்றையவர்களை, பம்மாத்தா, பத்தரை மாற்றா என்று நாம் இனம் காண முன்னால், ஊரிலே பாதிச்சனம் மேலே போய்ச் சேர்ந்துவிடும் என்றே படுகிறது. அண்மைய நெடுமாறன்~கருநாநிதி விவகாரத்திலே, ஈழத்தமிழர்கள் ஆதரவுத் திமுகத்தொண்டுப்பதிவாளர்கள் போட்டிருக்கும் இடுகையும் பின்னூட்டங்களும் வலைக்குரலுக்கு அப்பால், நடைமுறையிலே இவர்கள் எவ்விடத்திலே எங்கே நிற்பார்கள் என்று நான் அண்மைக்காலத்திலே உணர்ந்து கொண்டதைத் தெளிவாக்கியிருக்கின்றது. அவர்களின் நிலை எனக்குப் புரிகின்றது. சோ+ராம்+மாலன்+வாஸந்தி குழாம் வாஸகவிமர்ஷகர்களின் ஈழநோக்கு கொடுவிடத்தன்மையோடு பார்க்கும்போது, இந்நண்பர்களின் சாரைப்பாம்புச்சரசரப்போட்டம் அத்துணை கெடுதலானதல்லத்தான். ஆனால், நெடுமாறன் பிரச்சனைக்கு அப்பாலே, கருநாநிதியின் ஈழத்தமிழர்கள் குறித்த இன்றைய செயற்பாடுகள் எதையுமே இவர்கள் பேசுவதில்லை - அவர்களுக்கு அது குறித்த அக்கறை உண்டென்று கொண்டாலுங்கூட.

தமிழ்நதிக்கும் போல்வார்க்கும்: வேண்டுமானால், ஈழம் குறித்து இனியும் கவிதை எழுதுங்கள்; தோழர்கள் கையைத் தட்டுவார்கள். ஆனால், நீங்கள் கொஞ்சம் நிதானித்து, உங்கள் கவிதையை நீங்களே இரண்டு நாட்களின் பின்னாலே வாசித்துப் பாருங்கள்; எண்பதுகளிலே வைத்த ஓலத்திலிருந்து, இன்றைக்கான எமது ஒப்பாரி (கவிதை என்று வாசிக்கவும்) எத்துணை மாறுபட்டிருக்கின்றதென்பதை; எண்ணிக்கைக்கு உதவும்; ஆனால், என்னத்தினைச் சாதிக்க உதவும்?

முடிந்தால், ஈழத்தமிழர்களின் அவலத்துக்காக பதிவுகளின் பின்னூட்டங்களிலே கண்ணீரை, செந்நீரை, தம் கணி(ச்)சொல்நீர்த்துத் தள்ளும் இந்தியா வாழும் தமிழ்க்குசேலர்கள் தாம் நடைமுறையிலே தம்நாட்டில் ஈழத்தமிழரின் அவலப்பொட்டணியை எக்கிருஷ்ணனுக்கு எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்தார்களென்பதைத் தெரிந்து கொண்ட பின்னால், இப்படியான "விபரம்" சொல்லும் பதிவுகளைப் போட்டுத் தள்ளலாம். வலைப்பதிவிலே "Stop the killings of journalists" என்று ஒட்டிக்கொள்வதிலும்விட, தமிழகப்பத்திரிகைத்துறையிலேயிருக்கும் பதிவாளர்கள், தம் தொழிலைச் செய்ததற்காக, இன்னமும் விசாரணையின்றி ஸ்ரீலங்காவின் சிறையிலே கிடக்கும் திஸநாயகம், ஜதீஸ்கரன், வளர்மதி போன்றவர்கள் பற்றி, தமிழக/இந்தியப்பத்திரிகையாளர்களும் தமது எதிர்ப்புக்கருத்தினை தத்தமது ஊடகங்களிலே வெளியிட முயற்சி செய்திருக்கலாமே; மாட்டார்கள். ஏன்?

மர்மயோகியின் கதையென்ன? ட்ரெய்லர் வந்துவிட்டதா? ஐயோ! அக்குழந்தையின் முகம் மனதைப் பிழிகிறது. செல்வகணபதி இருக்கிறாரே.... ரித்திஷா? சாம் அண்டர்சனா? நல்லூர்க்கோவிலின் நாலாம் தெருவிலா!!

பிகு:
1. இவ்விடுகைக்கு, "ஓமோம்", "ஆமாம்" போட்டு, அதே பாத்தியிலே தண்ணீர் பாய்ச்சவிரும்புகின்றவர்கள், சக்தியையும் நேரத்தினையும் சேமித்துக்கொள்ளுங்கள். நமக்குள்ளே பழங்கதைகள் பேசி என்ன பயன்? 'நானும் நீங்களும் குந்தியிருந்து கட்டியணைத்து கந்தகநாசியர்க்கும் அந்தகக்குருடருக்கும் நிந்தகச்செவியருக்கும் வலைக்கூத்துக் காட்டுவதுபோல ஒப்பாரி வைப்பதினால் எப்பயனுமில்லை' என்பதுதான் இவ்விடுகையின் நீதி.

2. மேலே எழுதியதை வைத்துக்கொண்டு இந்தியத்தமிழர்களிடம் ஈழம் குறித்துக் குரல் எழுப்ப இரந்து கேட்கிறேன் என்று எண்ணிக்கொள்ளும் ஜர்னலிஸ்ட்ஜீக்களுக்கு, "அகதியாக இப்படியான ஈழத்தமிழர்கள் பற்றிய காழ்ப்புப்பதிவர்களும் பொழுதுபோக்குப்பதிவர்களும் குறிப்பிடத்தக்களவு வாழும் இந்தியா ஓடுவதிலும் அடிபட்டுத் தெருநாய்களாக என்னைச் சேர்ந்தவர்கள் இலங்கையிலே சாவதே மேல்" என்பதை அடிக்கடி உறுதியாகக் கூறும் என் பழைய ஜாங்கிரி இடுகைகளை டவுசர்களைப் பிய்த்துக்கொள்ளாமலும் தேசியக்கொடிச்சக்கரத்துக்குக் கீழே அகப்பட்டுக்கொள்ளாமலுமிருந்து வாசிக்கக்கேட்டுக்கொள்கிறேன்.

3. "நீயென்ன செய்து கிழித்தாய்?" என்று பதிலாகக் கேட்பவர்களுக்கு, "ஒன்றுமில்லை; ஆனால், நான்தான் போலி என்று ஊருக்கே தெரியுமே" என்றோ, "சக்தி, நேரம் சேர்ந்துக் கிழித்தும் பயனில்லாத எதையும் கிழிக்கப்புகாததே ஒரு பெருங்கிழிப்பு" என்றோ சொல்லிக் கொள்கிறேன்.


படமூலம்: தமிழ்நெற்.கொம் தளம், இந்திய அரசுத்தளம், ஓல்ற்றநெற் தளம்

16 comments:

  1. விளங்கிக்கொள்ள கஷ்டமான பதிவு இது...!!!!

    ReplyDelete
  2. இணையத்தில் ஒப்பாரி வைப்பதற்கு பதில் கொஞ்சம் செயற்படலாம். வேறொன்றும் இல்லை.
    ஒருநாளின் ஒரு டொலர் அங்கே ஒரு ஒரு நேரச் சாப்பாட்டிற்கு உதவும். பாலூட்ட உதவும். கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கு மேல் புலம்பெயர்ந்திருக்கிறோமா..?

    அழுதாலும் தன் பிள்ளையை அவளே பெறவேண்டும்.

    என் துயரை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எப்பிடி எதிர்பார்க்க முடியும்? இன உணர்வும்.. ஒரே ரத்தமும்.. மசிரும்..

    ReplyDelete
  3. ரவி,
    இதைத் தெளிவாக விளக்க ஒரு வழியிருக்கின்றது. நண்பர் கருப்பு விளக்கினாலே, நீங்கள் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. அதுகூட, இப்போது மிகவும் சுலபமாகியிருக்கின்றது. முன்னரெல்லாம், ஆயா, ஆத்தா என்று அவர் சொல்லிப் புரியவைக்கும்போதுதான் உங்களுக்குத் தெளிவாக விடயங்கள் புரியும். இப்போது, திருமணம் வேறு செய்திருக்கின்றீர்கள். சொல்வது மாதிரியாகச் சொன்னால், புரிந்துகொள்ளும் வேகம் இருமடங்குகளாகவும் நேரம் பாதியாகவும் ஆகியிருக்குமென்று நிச்சயமாகத் தெரியும். ஆனால், என்ன செய்வது? நான் அவரில்லையே :-(

    ReplyDelete
  4. I try to understand.The Eelam politics is not something like
    Obama vs McCain.It is more confusing than the politics
    in India.Fragmentation,opportunism,
    the knack to make enemies out of friends - these are dime a dozen among those involved in Eelam
    politics. Add relegion and caste to this to get a kaledospic view.
    You get a confusing picture.Best thing is dont mistake a kalesdoscope for a telescope
    or microscope or binocular.
    But you should forgive poets
    and intellectuals for mistaking
    one instrument for another.
    They are so desparate for a vision
    that they dont care what instrument
    they are using to see something and
    express themselves.
    If all this makes sense to you,
    you are fit to be an expert in
    Eelam affairs.If not opt for a 101
    Course on Ethincity and Identity Politics in SriLanka.
    dont guess who am I :).
    I am neither a friendly ghost,
    nor a frightening tiger :)

    ReplyDelete
  5. //நிற்க; இப்படியான படங்களினை வெளியிட்டு வேதனையை இணையத்திலே புலம்புவதுமட்டும் எதையும் சாதித்துவிடப்போவதில்லை. தம்பதிவிலே குசேலனுக்கும் தசாவதாரத்துக்குமிடையிலே இரண்டு வரி ஒப்பாரி வைக்கும் பெரும்பான்மையான இந்தியத்தமிழர்கள் எதையுமே ஈழத்தமிழருக்காகக் கிழித்துவிடப்போவதில்லை. தமிழகத்திலே ஒரு குருவிக்குஞ்சின் ஈனக்குரலிலேகூட ஈழத்தமிழர்நிலை குறித்து ஒலி எழுப்பாத இவர்களா ஏதேனும் நீங்கள் எழுதுவதை, போடும் படத்தினை வாசித்து, பார்த்துவிட்டு உணர்ச்சி வந்து இணையத்துக்கு அப்பாலே நடைமுறைக்குச் செயல்வினையாக ஏதேனும் கிழித்துக்கொட்டிவிடப்போகின்றார்கள்?//

    ஆமா நீங்க என்ன செஞ்சு ..டுங்கிடீங்க??
    அப்படியே ஏசி ரூம்ல குந்திகிட்டு அமெரிக்க சொகுசு வாழ்க்கையில் இணையத்தில் அம்மா கொல்றாங்களே அய்யோ கொல்றாங்களேன்னு கூப்பாடு

    ஏன்லே தைரியம் இருந்தா நிஜமா அக்கறை இருந்தா போய்யா இலங்கைக்கு??அங்க போயி சண்டை போடு.. உன் ஆளுங்கள காப்பாத்து. முடியலையா குறைந்த பட்சம் அவங்களுக்கு சாப்பாட்டுக்காவது வழி செய்..

    முடியலையா பொத்திகிட்டு போடா டுபுக்கு

    ஈழ தமிழருக்காக நீ என்னயா செஞ்சு கிழுத்தே.. முதல்ல நீ செஞ்சு காட்டும் அப்புறம் பேசு..
    வந்துட்டானுங்க.. போய்யா

    ReplyDelete
  6. அய்யா எல்லாம் திரட்டி ஆடவந்த தெய்வமே,
    ஒழுங்கா கடைசி லைன் வரைக்கும் வாசிச்சிருக்காமுல்லே என்னத்த எழுதிருக்கான்னு. காமெண்டு பண்ண மட்டும் கையி துருத்திடுதே.

    ReplyDelete
  7. //அய்யா எல்லாம் திரட்டி ஆடவந்த தெய்வமே,
    ஒழுங்கா கடைசி லைன் வரைக்கும் வாசிச்சிருக்காமுல்லே என்னத்த எழுதிருக்கான்னு. காமெண்டு பண்ண மட்டும் கையி துருத்திடுதே.//

    :-))))))

    ReplyDelete
  8. தாமதத்திற்கு மன்னிக்கவும் நான் அப்பொழுதே காரணம் சொல்லி இருந்தேன் அண்ணன் படங்களை தரவிறக்கி பல நாட்களாக வைத்திருந்தேன் என்று, நேற்று அந்த குழந்தைகளின் படத்தை என் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பிய பொழுதுதான் இந்தப்படங்களை பதிவாக்கினேன்.

    ReplyDelete
  9. தாமதத்திற்கு மன்னிக்கவும் நான் அப்பொழுதே காரணம் சொல்லி இருந்தேன் அண்ணன் படங்களை நான் பல நாட்களாக தரவிறக்கி பல நாட்களாக வைத்திருந்தேன் என்று நேற்று அந்த குழந்தைகளின் படத்தை என் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பிய பொழுதுதான் இந்தப்படங்களை பதிவாக்கினேன்.

    போதும் இந்த அரசியலும் அவனவன்ர தேசிய உணர்வும் இன உணர்வுகளும்
    ***திருந்தினா இலங்கையன் திருந்தோணும் இல்லாட்டி

    என்ன

    குசேலன் சினி சிட்டில ஓடும்

    ஐடியா கப்பு கொழும்புல, தம்புள்ளல நடக்கும்...

    யாழப்பாணத்துல தின்ன வழியில்லாட்டிலும்திருவிழா நடக்கும்

    மட்டக்களப்புல அழுகிய சடலம்

    நெடுந்தீவுல துப்பாக்கி சூடு...

    கொழும்பில குண்டு வெடிப்பு

    வன்னில கக்கூசுக்கு குந்த முடியாத கஷ்டம்...

    உணவுத்தட்டுப்பாடு ...

    எந்த வியாதிக்கும் மருந்தில்லை...

    சிறார்கள் மரணம் பேரினவாதத்தின் கொடூரம்...

    இதுகளைக்கதைக்கப்போனால் என்ர கதைகள் பிழைச்சுப்போடும் சும்மாவே நான் கொஞ்சம் அதிகமா உணர்ச்சி வசப்படுகிறனான்...

    ReplyDelete
  10. எனக்குள் இருந்த இருக்கிற வலிகளை இறக்கி வைப்பதற்கு வழியில்லாமல் தான் பதிவாக்கினேன், மற்றபடி அதில் எந்த விதமான அரசியலும் இல்லை இலங்கை இப்படி ஆயிற்றே என்கிற ஆதங்கத்தையும் விரக்தியையும் தவிர...

    ReplyDelete
  11. கிங்
    என்ன தாமதம்? விளங்கவில்லை.

    /சும்மாவே நான் கொஞ்சம் அதிகமா உணர்ச்சி வசப்படுகிறனான்.../

    நான் மட்டும் விதிவிலக்கல்ல என்றதாலே "எனக்குள் இருந்த இருக்கிற வலிகளை இறக்கி வைப்பதற்கு வழியில்லாமல் தான் பதிவாக்கினேன்" என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

    நான் சொன்னதிலே ஏதேனும் உங்களுக்குச் சொன்னதுமாதிரியாக இருந்தால், மன்னிக்கவேண்டும். சொல்லப்போனால், இது தமிழ்நதி & நீங்கள் உட்பட இலங்கை குறித்துப் பதிவிட்ட எவருக்குமென்று சொன்னதில்லை; உங்களின் இடுகைகள் சிலவற்றைச் சொல்வதற்கான ஒரு தருணத்தைத் தந்தன; அவ்வளவே. தமிழ்நதி, நீங்கள் பதிவிட்ட உணர்வினை முழுக்கவே புரிந்துகொள்கிறேன்; ஆனால், இவற்றால், எம் உளத்திருப்தியன்றி வேறேதும் கிட்டப்போவதில்லை என்று தோன்றியது. குற்றவுணர்வினை அப்பதிவிலே கரைத்துவிட்டோமென்றால், நடைமுறைக்கு எதையும் செய்ய எமக்கு உணர்வு வரப்போவதில்லை என்பது நான் ஒருகாலகட்டத்திலே கண்ட அனுபவம். கொழுவி சொன்னது, உருப்படியான யோசனை.

    ReplyDelete
  12. இரமணி,

    உங்களுணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. வேறு எதையும் சொல்லத் தோன்றவில்லை.

    நீங்கள் சுட்டியிருக்கும் நமது நண்பரின் பதிவைப் படித்தவுடனே எனக்குத் தோன்றிய எதிர்வினையாக இப்பின்னூட்டத்தை எழுதினேன். இன்று வரை வெளிவரவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை. அதனால் இங்கு போட்டு வைக்கிறேன்.

    //எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாம் ஓர் இரவில் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் உணர வாய்ப்பில்லை! //

    கலைஞர் ஒன்னும் பெரிதாகக் கிழிக்க வேண்டாம். அவரிடம் யாரும் ஒன்னும் எதிர்பார்க்கவில்லை. அவர் தன் மனதுக்குள் ஈழமக்கள் விடுதலையை ஆதரிக்கிறார் என்றே நான் இன்னும் கருதுகிறேன். அப்படிப்பட்ட அவரது மனசாட்சிப்படி இந்த ஆட்சியில் என்ன செய்திருக்கிறார்னு ஒன்று சொல்ல முடியுமா? பழைய புலிக்கதைகள், ஜெயலலிதா மற்றும் ஆட்சிக்கலைப்பு கதைகள் பற்றி மட்டுமே இன்னும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள், கேட்டுப் புளித்துப் போய் விட்டது.

    அவர் புலியையும் ஆதரிக்க வேண்டாம், பூனையையும் ஆதரிக்க வேண்டாம். ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் (குழந்தைகள் உள்பட) சிங்கள அரசின் பொருளாதாரத் தடையாலும், குண்டுவீச்சாலும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாகியிருப்பதை மனதில் கொண்டு இது வரை கலைஞர் என்ன புடுங்கினார் என்று ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னால் எல்லோரும் வாயை மூடிக் கொண்டிருப்பார்கள். அவர் புலியை எதிர்த்துக்கூட அறிக்கை விடட்டும், எத்தனையோ நாய், நரிகளெல்லாம் புலியெதிர்ப்பு ஊளையிட்டுக் கொண்டிருப்பதைப் போல யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. நான் கேட்பதெல்லாம் அப்பாவித் தமிழ் மக்களெல்லாம் அங்கு பட்டினியால் சாகிறார்கள். குழந்தைகள் பால் கூட இல்லாமல் தவிக்கிறார்கள். கலைஞர் என்னத்தைக் கிழித்தார் என்று சொன்னால் நல்லது.

    அவர் இந்திய அரசாங்கத்திலிருந்து எதையும் பிச்சை கேட்டுக் கூட அனுப்ப வேண்டாம். தமிழகத்தில் மக்களிடமிருந்து உணவு மட்டும், மருந்துப் பொருட்கள் திரட்டப் பட்டு புழுத்து நாறிக் கொண்டு கிடக்கின்றன. செஞ்சிலுவைச் சங்கத்தினர் தாங்களே அவற்றை ஈழத்து மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் சம்மதித்தனர். செஞ்சிலுவைச் சங்கத்தினர் போர் நடக்கும் இடங்களிலெல்லாம சுதந்திரமாக இம்மாதிரியானத் தொண்டுகளைச் செய்ய போரிடும் நாடுகளால் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவிலுள்ள மனிதத்தன்மையற்ற பார்ப்பனிய மத்திய அரசு அவற்றை இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கின்றது. கலைஞர் இந்த விசயத்தில் ஒரு புல்லையாவது புடுங்கினாரா என்று கேட்டுச் சொல்லுங்கள். அப்புறம் என்ன பெருமைக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் கலைஞர் ஈழமக்களை ஆதரிக்கிறார் என்று. இதைத்தான் இருபது ஆண்டுகளாக சோ இராமசாமி கூட சொல்லிக் கொண்டிருக்கிறான், “புலிகளைத்தான் எதிர்க்கிறேன், ஈழமக்களை ஆதரிக்கிறேனென்று”. இரண்டு பேருக்கும் என்ன வேறுபாடு என்று சொல்கிறீர்கள்? தமிழ்ச்செல்வனுக்குக் கவிதை எழுதினார் என்று சொல்லாதீர்கள். அவருடைய கவிதை துக்கத்திலிருக்கும் பொழுது கேட்க நல்லாயிருந்தது, ஆனால் நாக்கு வழிக்கக் கூட உதவாது.

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
  13. ///இதைத் தெளிவாக விளக்க ஒரு வழியிருக்கின்றது. நண்பர் கருப்பு விளக்கினாலே, நீங்கள் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. அதுகூட, இப்போது மிகவும் சுலபமாகியிருக்கின்றது. முன்னரெல்லாம், ஆயா, ஆத்தா என்று அவர் சொல்லிப் புரியவைக்கும்போதுதான் உங்களுக்குத் தெளிவாக விடயங்கள் புரியும். இப்போது, திருமணம் வேறு செய்திருக்கின்றீர்கள். சொல்வது மாதிரியாகச் சொன்னால், புரிந்துகொள்ளும் வேகம் இருமடங்குகளாகவும் நேரம் பாதியாகவும் ஆகியிருக்குமென்று நிச்சயமாகத் தெரியும். ஆனால், என்ன செய்வது? நான் அவரில்லையே :-(///

    இதுல ஒரு கொடுமை என்னன்னா, இந்த பின்னூட்டத்தையும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை பெயரிலி அவர்களே...

    என்னுடைய பதிவுல ஒரு பின்னூட்டம் வந்தது, அதை தொடர்ந்துதான் இங்கே மீண்டும் வந்து பார்த்தேன்...

    என்னுடைய திருமணத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

    பேசாமல் நீங்களும் அதே மாதிரி (ஆயா / ஆத்தா என்று) சொல்லிவிடுங்களேன், புரிகிறதா என்று பார்ப்போம்...

    ஹும்...!!!

    நீங்க நல்லவரா ? கெட்டவரா ?

    ReplyDelete
  14. /பேசாமல் நீங்களும் அதே மாதிரி (ஆயா / ஆத்தா என்று) சொல்லிவிடுங்களேன், புரிகிறதா என்று பார்ப்போம்.../

    அது சரியான வழி என்று செய்யக்கூடிய முடிவு இருந்திருந்தால், 2007 மார்ச்சிலேயே செய்திருப்பேனே?

    /ஹும்...!!!

    நீங்க நல்லவரா ? கெட்டவரா ?/

    நல்லவனுக்கு நல்லவன். வல்லவனுக்கு வல்லவன்.

    ஹும்...!!!

    நீங்க கெட்டவர்தானே?

    ReplyDelete
  15. ///நல்லவனுக்கு நல்லவன். வல்லவனுக்கு வல்லவன்.

    ஹும்...!!!

    நீங்க கெட்டவர்தானே?///

    அண்ணா இப்படி முன்முடிவோடு எழுதினால் நான் என்ன செய்வது ?

    எதை வைத்து அப்படி கூறுகிறீர் ? தனிமடலிலாவது சொல்லவும்...விளங்குகிறதா பார்ப்போம்...

    நாங்க எல்லாம் நல்லவர்களாக வாய்ப்பே இல்லையா ? :))))))

    ReplyDelete
  16. சுடலைமாடன்,
    நீங்கள் சொல்வதுதான் என் கருத்தும். நீங்கள் சொன்னதைவிடத் தெளிவாகச் சொல்லமுடியாது.

    ReplyDelete