Tuesday, December 04, 2007

என் எல்லைக்குள்ளிருந்து...."என்ன எண்ணிக்கொண்டு சொன்னீர்கள்?"


His Holiness the Abbot
is shitting
in the withered fields
- Yosa Buson (1716 - 1783), translated byRobert Hass



கடந்த ஒரு கிழமைக்குள்ளே இலங்கை தொடர்பாக வாசித்தவற்றிலே, சிலரின் சில கருத்துகள் தமது கருத்துகளை நியாயப்படுத்த, வாசிக்கின்றவரின் பகுத்தறிவினைப் பகிடி செய்ததாகத் தோன்றின.

தொடர்ந்து உற்சாகமாகச் சண்டைபோட்டுக்கொண்டிருக்க உளநிலை இல்லாததாலே, இப்பதிவிலே நக்கலையும் குத்தலையும் தவிர்த்துவிடலாம். குறிப்பான சில விடயங்களை மட்டும் பேச எடுத்துக் கொண்டு, கருத்தாளர்களின் மற்றக்கருத்துகளை, பதிவுநீட்சி, நேரப்பற்றாக்குறை, முக்கியமின்மை, ஒத்துப்போதல் காரணங்களாக விட்டுவிடலாம்.

*****
தவிகூட்டணியின் தனித்தவில் ஆனந்தசங்கரி,
"வன்னியிலே கொல்லப்பட்ட பாடசாலை மாணவிகளை ஸ்ரீலங்கா அரசு கொன்றிருக்க நியாயமேயில்லை; இது ஸ்ரீலங்கா அரசின்மீது பழியைப் போட விடுதலைப்புலிகளே கிளப்பிவிட்ட பொய்ப்பிரசாரமேதான்"
என்று பகிரங்கக்கடிதம் விட்டது இதிலே ஒன்று. அவரின் கருத்து என்னவென்றால், ஸ்ரீலங்கா இராணுவம் அவ்வளவு தூரம் ஊடுருவிப் போய்ச் செய்திருக்க முடியாதாம். ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஊடுருவித்தாக்கும் அணி இதே வன்னிக்குள்ளே ஒட்டிசுட்டான்வரை சென்று விடுதலைப்புலிகளின் கேர்ணல். சங்கரை 2001 இலே கொன்றதும் அப்படியாகச் செயற்படும் தேவைகளுக்கான திட்டமிட கொழும்புவட்டாரத்திலே அமர்த்தியிருந்த மறைவிடம் பற்றியும் ஸ்ரீலங்கா செய்திகளிலே வெளிவந்தன. அந்நேரம் ஸ்ரீலங்கா அதிபராகவும் முப்படையின் ஆணையிடுநாயகியாகவுமிருந்த சந்திரிகா குமாரணதுங்கவே தனக்குத் தெரியாமல் இப்படியான மறைவிடமிருந்ததையிட்டு ஆத்திரம் கொண்டதும் செய்திகளிலே வந்திருந்தது. அண்மையிலே கொல்லப்பட்ட மன்னார் கத்தோலிக்கத்துறவியின் கொலைக்கும் இத்தகைய ஊடுருவித்தாக்குதலே காரணமாக வைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஆனந்தசங்கரி பொய்யான செய்தி என்று மறுதலிக்கலாம்; ஆனல், தங்களுடைய மாவீரர் வாரத்திலே வன்னியின் இதயப்பகுதியிலே பாடசாலைமாணவிகளைக் கொல்லும் தேவை -எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்றுதான் கொண்டாலுங்கூட - எதற்கு விடுதலைப்புலிகளுக்கு இருக்கமுடியும்? இதனை ஆனந்தசங்கரி யோசித்துப் பார்த்திருக்கவேண்டாமா? எத்துணை அவருக்கு விடுதலைப்புலிகளுடன் வெறுப்பிருந்தாலுங்கூட, ஸ்ரீலங்கா அரசை நியாயப்படுத்த தமிழ்மக்களிலே ஸ்ரீலங்கா அரசு இரக்கம் நிறைந்திருக்கின்றது என்பதாக நிறுவ இப்படியாகவா ஓட்டைப்பாத்திரத்திலே தண்ணீர் வார்ப்பது?

*******
அடுத்ததாக, பிரான்சிலே வாழும் எம். ஆர். ஸ்டாலின் என்ற ஞானம் என்ற சின்னமாஸ்ரர், தேசம் இணையத்தளத்திலே கொடுத்த செவ்வி. ஈழத்தின் கிழக்குமாகாணத்தின் நலனைப் பேணுகின்றவராக, வடக்கின் ஆக்கிரமிப்பினை எதிர்ப்பவராகவும் கருணா அம்மானின் தீவிர நியாயப்படுத்துனராகவும் தனது செவ்வியிலே பேசியிருக்கின்றார். பிரான்சிலே வந்திறங்கிய கருணா அம்மானை ஸ்ராலின்தான் ஸ்ரீலங்கா தூதராலய அதிகாரியோடு வரவேற்றார் என்று டிபிஎஸ் ஜெயராஜ் எழுதியதிலிருந்து அண்மைய பாரிசின் தலித் மகாநாட்டின் அமைப்பாளரிலே ஒருவரான அவர்மீது அங்கேயே கிழக்கின் கழுதாவளையிலே இருக்கும் சாதியத்துவத்தினைப் பற்றி கிழக்கின் யோகன் கண்ணமுத்து (அசோக்) பேசி முரண்பட்டதுவரை இணையத்திலே தேட அகப்படுகின்றன. இணையத்திலே வாசித்த இவற்றிலே எவை உண்மை, எவை பொய் எனக்குத் தெரியாது; எவரும் எதையும் வரலாறு என்று எழுதிவிட்டுப்போகலாம் - இங்கே திருகோணமலை பற்றி எம். ஆர். ஸ்டாலின் சொல்லியிருப்பதுபோலவே. அதனால் உறுதிப்படுத்தப்படாத இக்கருத்துகளையும் இங்கே பேச்சுக்கான விடயங்கள் அவையல்ல என்பதாலும் அவற்றினையெல்லாம் இப்பதிவிலே விட்டுவிடுவோம். ஆனால், தான் கிழக்கின்காவலர் என்பதை நிரூபிக்கும் முயற்சியிலே, "அவரது" திருகோணமலையினைப் பற்றி ஓர் அட்டகாசமான தகவலைத் தருகின்றார். அதைப் பார்ப்போம்

"ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது"


இதை, புரிந்துகொண்டே சொன்ன புளுகுமூட்டை என்பதா புரியாமலே அவிழ்த்துவிட்ட கோழிக்குஞ்சு என்பதா என்று எனக்குத் தெரியவில்லை. மூவினங்களும் சேர்ந்துவாழும் அந்த அற்புதமான அவரது திருகோணமலை எங்கேயிருந்தது என்று எனக்குத் தெரியாது; ஆனால், நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்த திருகோணமலையிலே செல்வநாயகத்தின் சாம்பல் கொண்டுவரப்பட்டபோது எனக்கு நடப்பது ஓரளவுக்குப் புரியும் வயதுதான். அதற்கு முன்னரும் என்ன என்ன திருகோணமலையிலே இனத்தினை முன்வைத்து நடந்தன என்பதைக்கூட இணையத்திலே தேடிப் பார்க்கின்றவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். கிழக்கிலே சேருவில, கல்லோயா குடியேற்றத்திட்டங்கள் குறித்தும் திட்டமிட்டவகையிலே இனவிகிதாசாரம் அன்றிலிருந்து இன்றுவரைக்குங்கூட மாற்றப்படும் நிலையினைப் பற்றிய ஆதாரத்துடனான கட்டுரைகள் இணையத்திலே நிறையவுண்டு. இவை எல்லாம் நிகழ்ந்திராவிட்டால், தமிழ்த்தேசியம் எதற்காக எழுந்திருக்கப்போகின்றதென்று, மிதக்கும்வெளி சுகுணா திவாகருக்குத் தெரிந்திராவிட்டாலுங்கூட, எம். ஆர். ஸ்டாலினுக்குத் தெரிந்திராமலிருக்க வாய்ப்பில்லை. வாகரை, மூதூர், சம்பூர் என்று தமிழ்மக்கள் துரத்தப்பட்டபின்னால், இன்றைக்கும் அப்படியான குடியேற்றம் கிழக்கிலே இவ்வாண்டிலே, இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும்போது நடந்துகொண்டிருக்கின்றது. ஸ்ராலின் என்பவருக்கு இது தெரிந்திருக்காதா? இப்படியான குடியேற்றமேதான் எங்கள் திருகோணமலையிலேயும் செல்வநாயகம் அஸ்தி வருவதற்குமுன்னாலே நிகழ்ந்துகொண்டிருந்தது. திருகோணமலையின் இந்துக்கல்லூரிவிடுதிக்கான காணியிலேதான் அந்நேரத்திலேயே கோகர்ண விகாரைக்கு வருகின்றவர்கள் தங்குவதற்கான சங்கபோதி பௌத்தயாத்திரீகர்மடம் அமைக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தின் பன்குளம் மொரவெவ என்றும் குமரன்கடவை கோமரன்கடவல என்றும் மாற்றப்பட்டதும் மகாவலித்திட்டத்துடனான குடியேற்றங்கள் அல்லைக்கந்தளாயிலே நிகழ்ந்ததும் செல்வநாயகத்தின் அஸ்தி வந்து அனுராதபுரச்சந்தி என்றழைக்கப்படும் கலைமகள் வித்தியாலயம் அல்லது கஞ்சிமடம் பள்ளிக்கூடம் என்ற இடத்திற்குக் கிட்டே கொண்டு வந்தவர்கள் சிறிமாபுர/மகிந்தபுர என்றழைக்கப்படும் குடியேற்றத்திட்டப்பகுதியிலே காரணமேதுமின்றிச் சிங்களக்காடையர்களாலே தாக்கப்படுவதற்குமுன்னாலேதான். ஸ்டாலினுக்குத் திருகோணமலையின் நிகழ்வுகள் பற்றித் தெரியாதென்றால், பேசாமலிருந்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, அவரது கிழக்கின் காவலர்பிரதேசத்துக்குள்ளே திருகோணமலையையும் சேர்க்கும் அநாவசியமான தேவையில்லை. யாழ்ப்பாணத்தின் மேலாதிக்கத்தாலேயே கிழக்குக்கு இந்நிலை என்று வரையும் ஸ்டாலினின் வாதத்தின்படி பார்த்தால், கல்லோயாத்திட்டத்தினைக் கொண்டு இனவிகிதாசாரத்தினை மாற்ற பாரம்பரியப்பிரதேசங்களிலிருந்து தமிழ், முஸ்லீம்களை விரட்டியதும் தமிழ் என்ற மொழி ரீதியிலான இரண்டாம்பட்சக்குடிமகனாகச் செய்ததும் யாழ்ப்பாணமேலாதிக்கமா? வடக்குமேலாதிக்கத்தின்படிதான் கிழக்கு அமுக்கப்பட்டதென்றால், மட்டக்கிளப்பிலிருந்து வந்து திருகோணமலையைத் தனதென்று உரிமை கொள்ள ஸ்டாலினின் மேலாதிக்கம் எவ்வகைப்பட்டது? கிழக்கிலே யாழ்மேலாதிக்கத்தினைச் சுட்டிக்காட்டுகின்றவர்களும் அதற்குமுன்னாலே யாழ்ப்பாணத்திலேயிருந்து போய்க் குடியேறியவர்கள்தான் என்பதைக் கிண்டி யாராவது பதிவு போடுவார்களாக.

*******
புரிதலின்றி எழுதப்பட்டதோ என்று தோன்றுவகையிலே சில வரிகளைச் சொல்லும் மூன்றாவது ஆள், மிதக்கும் வெளி சுகுணா திவாகர்; ஈழம் தொடர்பான அவருடைய கருத்து & நிலைப்பாடு(ம் அ. மார்க்ஸின் நிலைப்பாடும்) பிரான்ஸின் ஷோபா சக்தியினதும் அவரது நண்பர்களினதும் வழியான புரிதலே என்பது அவதானித்த வரையிலே என் புரிதல்; நான் தவறாகவுமிருக்கலாம். முன்னர் அவருடைய இடுகையொன்றிலே, ஒரு கவிதையின் பின்னாலே, ஈழம் தொடர்பான சில பின்னூட்டங்கள் நானும் அவரும் குழலியும் எழுதிக்கொண்டது ஞாபகமுண்டு. அவரின் அண்மைய தமிழகத்திலே ஈழத்தின் ஆதரவாளர்கள் குறித்த பதிவிலே சில கருத்துகளோடு முற்றாக உடன்படுகிறேன் (தமிழகத்தின் சில திராவிட அரசியல்வாதிகளின் இரட்டைநிலை); சிலவற்றிலே பேசுவதற்கு எனக்கு விபரம் பத்தாதென்பதும் ஈடுபாடில்லையென்பதும் உண்மை (நெடுமாறனின் சாதி + பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருது); சில சந்தர்ப்பங்களிலே சாதி சம்பந்தமாகப் பேச அவருக்குப் பிடிப்பதில்லையென்பதையும் கண்டிருக்கின்றேன் (வளர்மதி அவரின் சாதி பற்றிச் சுட்டியபோது). அதனால், இங்கே அவரின் இடுகையிலிருந்து இரண்டு கருத்துகளின் அபத்தநிலை பற்றிக் கேட்க விரும்புகிறேன்


"தமிழ்த்தேசியம்....ஆனால் (ஏன், ஈழத்திலும் கூட) சாதியக் கறைபடிந்த இந்துத்துவச் சார்போடேயே உள்ளது."


இதற்கு ஆதாரம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பாரிஸின் தலித் மகாநாட்டிலே எம். ஆர் ஸ்டாலினின் பேச்சு மும்பாய் புதியமாதவி சங்கரனுக்குத் தந்த மெய்ஞானம் போலவோ, சத்தியக்கடதாசி என்று நண்பரின் வலைப்பதிவியோ காட்டினாலும் சரிதான். தமிழகத்தின் வர்ணாச்சிரமத்தின் பிரமிட்டுவாழ்நிலைத்தட்டினை அப்படியே ஈழத்துக்கும் நகர்த்தி அதனூடாகப் பார்க்கும் பலரிடமிருந்து வாசிப்பு நிறைந்தவராகத் தோன்றிய சுகுணா திவாகர் கொஞ்சம் விலகி நிலைமைக்கு அண்மித்த கண்ணோட்டத்தோடு பார்த்திருப்பார் என்று எதிர்பார்த்தது தவறோ தெரியவில்லை. தமிழ்த்தேசியம் ஈழத்திலே இந்துக்களை (??, வேளாள சைவர்களை??) மட்டுமேதான் பற்றிப்பிடித்திருக்கின்றதா? ரொக்கிராஜுகளுக்கும் அந்தோனிசாமிகளுக்கும் ஸ்ரனிஸ்லாசுகளுக்கும் சார்ள்ஸ் அன்ரனிகளுக்கும் தமிழ்ச்செல்வன்களுக்கும் சாதியக்கறை படிந்த இந்துத்துவச்சார்போடுதான் அடித்திருக்கிறதா? மேலே ஸ்டாலினின் கருத்தின்பின்னாலே குறிப்பிட்ட மாதிரி, குடியேற்றத்திட்டங்களும் சிங்களமொழிச்சட்டமும் யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க நோக்கு என்று சத்தியக்கடதாசி பட்டியல் போட்டுக் கட்டுரையிட்ட பல்கலைக்கழகக்கல்வியும் சாதி இந்துக்களைமட்டுமேதான் தாக்கியதா? ஸ்ரீலங்கா இராணுவமும் அப்படியாகத்தான் சாதியம் கேட்டுத் தாக்கியதா? தமிழ்த்தேசியம் இலங்கையிலும் சாதியக்கரை படிந்த இந்துத்துவச்சார்போடேயே உள்ளதாக, தமிழச்சிக்கு எடுத்துச் சொல்லும் சுகுணா எங்களுக்கும் அதற்கான "இராணுவம் துரத்தியபோது, கோவிலுக்குள்ளே சாதி குறைந்தவர்களை இன்ன இடத்திலே இவர்கள் விடவில்லை; ஆகவே, தமிழ்த்தேசியம் சாதிக்கறை படிந்த இந்துத்துவச்சார்போடேயே உள்ளது" என்றது மாதிரியான ஆதாரங்களைத் தந்தால், நாங்களும் தெளிவு பெறலாமே? "தமிழ்த்தேசியம் = இந்துத்தமிழர்", "சிங்களத்தேசியம்=சிங்கள பௌத்தர்" என்பதுபோன்ற மஹிந்த சிந்தனய / சிவசேனா சிந்தனை / HINDRAF Philosophy எப்போது சுகுணாவுக்கும் வந்ததென்று அறிந்தால், நமக்கும் புரிதல் கிடைக்குமென்று நம்பலாம். [தமிழ்த்தேசியவாதிகளிலே சாதியக்கறை படைத்தவர்கள் இருப்பது மறுப்பதற்கில்லை; இல்லாதவர்களும் எத்தனை வீதமென்று இலங்கையிலுஞ்சரி இந்தியாவிலுஞ்சரி எண்ணிப்பார்க்கவேண்டாமா? மற்றப்பக்கம், தமிழ்த்தேசியவாதிகள் அல்லாதவரிடமுமேதான் அதே சாதியக்கறை கிடக்கிறது - இலங்கையிலும் இந்தியாவிலும். ]


அவருடைய அடுத்த கருத்து:

"தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை."


விடுதலைப்புலிகள் என்றால், ஈழத்தமிழர்களை வெறுக்கும் தமிழ்நாட்டின் தேசியவாதிகளும் அல்லாத இரட்டைப்படகு பெரியாரிய-தலித்போராளிகளான உங்களைப் போன்றவர்களுங்கூட, திட்டித்தள்ளுகின்றீர்கள். சென்னையிலே தகுந்த ஆவண & அனுமதி அடையாளங்களையும் கையிலே காசையையும் வைத்துக்கொண்டும் வீடெடுக்க, தமிழ்நதி ஈழத்தமிழர் என்ற முகவரியோடு பட்ட க(வி)தையைக் கேட்டு, "வெட்கப்படுகின்றேன்; வேதனைப்படுகின்றேன்" என்று இத்தனை கவிதைகள் வந்த பின்னால், புலம்பெயர் தமிழர்கள் தமிழகத்திலே வசிக்கும் அகதித்தமிழர்கள் பற்றிக் கவலைப்பட்டாலுங்கூட, என்ன செய்ய முடியுமென்கிறார், சுகுணா திவாகர்? ஆழியூரானோ வரவனையானோ போய்ப் பார்த்து எழுதிய கட்டுரைகள், இரவிக்குமார் கட்டுரை வாசித்துத்தான் இப்படியான அகதிகள் நிலையே தமிழகத்திலேயிருக்கும் மக்களுக்கே அப்போது இப்போது தெரிகின்றது? இந்நிலையிலே, புலம்பெயர்தமிழர்கள் என்ன செய்யமுடியுமென்று எண்ணுகின்றார்? அகதி முகாமிலே இருப்பவர்களுக்கான கெடுபிடிகளின்பின்னால், உதவ விரும்புகின்றவர்கள்தான் உதவமுடியுமா? உதவி பெற விரும்புகின்ற அகதிதான் பெற்றுவிடவோ பெற்றுவிட்டால் "வால் அடையாளம்" சேராமல் இருக்கமுடியுமா? அகதிகளோடு தொடர்புள்ள தன்னார்வ இயக்கமாகக் காட்டிக் கொள்வதை நடத்து செல்வநாயத்தின் மகன் சந்திரஹாசன், சுப்பிரமணியசுவாமியினதும் இந்திய அரசினதும் சட்டைப்பை பொமரேனியன் என்றுதான் ரீடிப்பிலே சில ஆண்டுகளுக்கு முன்னாலே வாசித்த கட்டுரையிலிருந்து உணர்ந்துகொள்ளமுடிகின்றது. எவ்விதத்திலே, ஈழத்தமிழர்கள் உதவ வந்தாலுங்கூட, உதவமுடியும்?

சாதாரணமான இயக்கம் சாராத ஈழத்தமிழர்களுக்கே உதவமுடியாமல் நிலமை இப்படியிருக்க, "தமிழக ஈழ அகதித்தமிழர்கள் குறித்து, விடுதலைப்புலிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என்று எழுதும் சுகுணா திவாகரின் அவசரத்தினை எண்ணித்தான் கவலைப்பட முடிகின்றது. இதுவரைக்கும், விடுதலைப்புலிகள் தமிழக அகதிகள் குறித்துக் கவலைப்படுவது குறித்து வாசனும் ஜெஜெயும் மட்டுமேதான் அதிகம் கவலைப்பட முடியுமென்று எண்ணியிருந்தேன்.

நிற்க; இந்த அகதிகளைப் பற்றி சுகுணா திவாகரின் புலம்பெயர்ந்த நண்பர்கள் எத்துணை கவலைப்படுகின்றார்கள்? தமிழகம் வரும்போதெல்லாம், அகதிகளைக் காணச் சென்று என்ன செய்கிறார்கள்? அவற்றினைப் பற்றியும் அறிய ஆவல். இவர்களை மையமாக வைத்து நந்தாவும் இராமேஸ்வரமும் எடுக்கும் படத்துறையினர்தான் கவலைப்படுகின்றார்களா? புன்னகைமன்னனிலே பாலச்சந்தரும் கமல்ஹாசனும் கெட்டவர்களாகக் காட்டிவிட்டுப்போனார்கள். இப்போது, இராமேஸ்வரம் வந்தும் இந்தப்படத்துறையினர் உதவி செய்கிறார்களா?

தனிப்பட்ட நிலையிலே, என்னைப் பொறுத்தமட்டிலே, குறைந்தபட்சம் இந்த அகதிகளேனும் உயிருக்கு அதிகம் அஞ்சாமல், அன்றைய நாளுக்கு நிம்மதியாக இருக்கின்றார்கள்; சொந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து உயிருக்கும் உணவுக்கும் அஞ்சுகின்றவர்களுக்கு முதன்மையிடம் உதவுவதிலே கொடுப்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யக்கூடிய ஒரு தேவையாகவிருக்கும்.

*******

நான்காவது கருத்து, புதியமாதவி சங்கரன் பாரிஸின் தலித் மகாநாட்டிலே கலந்து கொண்டபின்னால், கண்ணை வெளிச்சம் திறந்தது (கூசியது??) என்பதுபோல, கீற்றிலே ஒரு கருத்தரங்கு(ப்பயணக்)கட்டுரை வரைந்திருக்கின்றார். தமிழச்சி, அ. மார்க்ஸின் முன்னுரையோடு வந்த ஈழத்துத்தலித் சிறுகதைகளைப் படித்ததோடு ஈழத்திலே தலித்திய நிலை இதுதான் என்பதுபோல முகவுரை எடுத்து எழுதியதற்கு ஒப்பான கட்டுரை புதியமாதவியனது. ஒரு விமானப்பயணக்கட்டுரைகள் எல்லாம் இப்படியாகத்தான் ஒரு புறப்பார்வையினைத் தரும் ஒரு கருத்தரங்கோடு வருமோ என்று தோன்றுகிறது - புலி ஆதரவுக்கூட்டங்களும் இப்படித்தான்; புலியெதிர்ப்புக்கூட்டங்களும் இப்படித்தான். (இயக்குநர் சீமான் அண்மையிலே கனடாவிலே ஈழத்தமிழர்கள் மத்தியிலே பேசும்போது, "ஈழத்திலே தமிழ்மக்கள் படும் துயரங்கள் உங்களுக்குத் தெரியாது; தெரிந்தவன் நான் சொல்கிறேன் கேளுங்கள்" என்ற விதத்திலே (சரியான வரிகள் ஞாபகமில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்) பேசினார் என்பதை ஒரு நண்பர் சொன்னார்; அதுவல்ல அங்கே முக்கியம், கேட்டுக்கொண்டிருந்த ஈழத்திலேயிருந்து புலம்பெயர்ந்தவர்களும் அவ்வரிகளுக்கு ஓங்கிக் கைதட்டினார்களாம்.)

புதியமாதவியை பாரதிதாசனின் தமிழ்த்தேசியத்தோடு உலகத்தமிழ்-யாஹூ குழுமத்திலே ஐந்தாறு ஆண்டுகளின் முன்னாலே பார்த்திருக்கிறேன்; பதிவுகள்.கொம்மிற்காக மும்பாயிலே ஈழத்தமிழ்த்தேசிய ஆதரவுக்கவிஞர் அறிவுமதியை, அவரின் கருத்தோடோடிச் செவ்வி கண்டு போட்டிருப்பதையும் பார்த்திருக்கின்றேன். இப்போது, மேலே சொன்ன, கருணாவின் காசுகளைப் பாரிசிலே முதலீடு செய்திருக்கின்றார் என்று கருணைதாசன் என்ற ஒருவர் அறிக்கைவிட, அதை மறுத்து, ஆனால், கருணாவின் கிழக்குத்தலைமையை வரவேற்கும் தோழர் எம். ஆர். ஸ்ராலின் ஈழத்திலே சாதியமே இன்றைய பிரச்சனையென்று கரகோஷத்திடையே சுட்டிக்காட்டியதை, ஈழத்தமிழ்த்தேசிய ஆதரவாள தமிழக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாளவளவன் அறிந்து கொள்ளவேண்டுமென்று புதியமாதவி கண் திறந்து சொல்கிறார்

"டொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்த பல்கலைì கழகம் பின்னர் எம்.ஏ- முதுகலை பட்டம் கொடுக்க முடிவெடுத்த கேலிக்கூத்து, புதிதாக கட்டப்பட்ட நூல் நிலையத்தை செல்லன் கந்தையா திறந்து வைக்கக்கூடாது என்று சொன்ன ஆதிக்கச் சாதி மனோபாவம், ஆரம்பக்கல்வியைத் தமிழர்களுக்கு மறுத்த தமிழர்களை அடையாளம் காட்டிய தோழர் ஸ்டாலின் அவர்களின் கட்டுரை அதிர்வலைகளை உருவாக்கியது. இதைப்பற்றி எல்லாம் சகோதரர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை? என்ற கேள்வி விசவரூபமெடுத்தது"


டொமினிக் ஜீவா, செல்லன் கந்தையா இவர்களுக்கான அவமதிப்புகள் செய்யப்பட்ட காலகட்டத்திலே, யாழ்ப்பாணத்தினைத் தமது வாக்கு எண்ணிக்கையாலே ஜனநாயகப்பிடிக்குள்ளே வைத்திருந்த அஹிம்சைப்பாதைக்குத் திரும்பிய இயக்கங்கள் தமிழ்த்தேசியத்தைவிட்டுவிட்டு, ஒன்றுபட்ட ஸ்ரீலங்காவுக்காகப் படை நடத்தியதாகத்தான் வரலாறு. இதைத் தலித் மகாநாடு புதியமாதவிக்குத் தெரிவித்ததா தெரியவில்லை. (ஆனால், அவருடைய செவ்வியிலே தமிழ்த்தேசியம்-தலித்தியம் முரண் பற்றிக் குழம்பியேயிருப்பதாகச் சொல்கிறார்)



அதாவது, தமிழத்தேசியமேதான் ஈழச்சாதியத்துக்கான அடிப்படைக்காரணம்... அல்லது சுகுணா திவாகர் சொன்னது மாதிரியாக, தமிழ்த்தேசியமே சாதிய அடிப்படையிலான இந்துத்துவாத்தனமேதான்.... சாதிய அடிப்படையிலான இந்துத்துவாத்தனமென்றால், கிழக்கிலே கழுதாவளையிலேயில்லாத, வடக்கின் மேலாதிக்கத்திலே வந்ததாக எம். ஆர். ஸ்ராலின் சொல்லும் தமிழ்த்தேசியமேதான்.... அந்தத்தமிழ்த்தேசியம் வருவதற்குமுன்னால், அல்லது அது அழிந்துபோனால், சாதியமே அறியாத முன்னைய சமாஜவாதி, பருத்தித்துறையின் பெரும்பிறப்பும் கிளிநொச்சியின் குடியிருப்புமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி சொல்லும் அல்லது எம். ஆர். ஸ்ராலின் செல்வநாயகம் அஸ்தி வருவதற்குமுன்னால் கண்ட சமரசம் உலாவும் ஸ்ரீலங்காவின் சாதி, மத, மொழி பேதமற்ற சமுதாயம் நிலவும்......

........நிலவிலே பேசியவர்களையெல்லாம் சமதர்ம நியாயவான்களென்று மறந்துவிட்டு
......நம்புவோம்.

XI
"Slave, come to my service!" "Yes, my master. Yes?"
"If all this is so, then what is good?"
"To have your neck broken and my neck broken,
to be thrown into a river - that's what is good!
Who is so tall as to reach the heavens?
Who so broad as to embrace plains and mountains?"
"If that's so, I should kill you, slave: I'd rather you go before me."
"And does my master believe that he can survive for three days without me?"
- Joseph Brodsky, 1987, "Slave, Come to My Service"

17 comments:

  1. பெயரிலி.அவசியமானதொரு பதிவு/பகிர்வு

    ஆனந்தசங்கரியும் ஞானமும் வாங்கிய காசுக்குக் குலைக்கிறார்கள் என்றால் சுகுணா திவாகரினதும் புதியமாதவியினதும் கூற்றுக்கள் கூடிய கூட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு என்றே கொள்ள முடிகிறது.இலங்கையில் தோட்டத்தொழிலாளார்களாக வேலை செய்யும் இந்திய வம்சாவளியினர் யாழ் மேலாதிக்கத்தால் கொடுமை செய்யப்பட்டது பற்றியும் தமிழ்த்தேசியம் அவர்களது உரிமைகளை பறிக்க துணை நின்றது என்றும் மாலன் முன்பொருமுறை பிதற்றியிருந்தார் இன்று தமிழன் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டு பூசாவிலும் களுத்துறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களைப் பற்றி மாலனும் ஏதும் கேட்கப்போவதில்லை பாஸ்டன் பாலாஜியும் முதலைக் கண்ணீர் வடிக்கப்போவதில்லை.

    யாழிலிருந்து போய்க் குடியேறிய அனேகம் பேர்தான் கிழக்கில் யாழ் மேலாதிக்கம் பற்றி ஒப்பாரி வைப்பதாக டி.பி.எஸ் ஜெயராஜ் இன் கட்டுரையில் படித்த ஞாபகம்.தேடியெடுத்து இணைப்புக் கொடுக்கிறேன்

    ReplyDelete
  2. Puthia Madhavi is the most confused/confusing person around
    in the web. See her most recent
    articles in Thinnai.For her what she thinks that minute is the truth.Unfortunately she writes a lot with little understanding which appeal to the periyar-dravida-progressive left gangs
    as she writes with right cliches.


    Suguna Diwakar cannot think of his
    own, nor is capable of taking pains to read and find out. He
    echoes what Shiba Shakthi and
    Marx write. His understanding
    of Tamilnadu politics and culture
    is too poor. He thinks in terms
    of black and white categories
    and cliches. He thinks nationalism
    is bad even without understanding
    what it is, because A.Marx writes so.A.Marx himself does not understand complex issues and tries to reduce them to few categories and gives an analysis
    laced with essentialism.
    When these three cannot even
    understand what is happening
    in India and Tamilnadu, they
    write articles judging events
    and people they know the least
    about. The tragedy is what they
    write is taken seriously.

    ReplyDelete
  3. sorry

    it is not by DBS.Jeyaraj.wrote by
    Shanthi Sachithanandam

    here is the link
    http://transcurrents.com/tamiliana/archives/419

    ReplyDelete
  4. ம்... சில பூனைகள் வெளியே வந்தன...இன்னும் வேறு சில பூனைகள் விரைவில் வெளிவருமென நினைக்கின்றேன். எத்தனை காலந்தான் உள்ளுக்குள்ளேயே பிறாண்டிக்கொண்டிருக்கமுடியும்?

    ReplyDelete
  5. /இலங்கையில் தோட்டத்தொழிலாளார்களாக வேலை செய்யும் இந்திய வம்சாவளியினர் யாழ் மேலாதிக்கத்தால் கொடுமை செய்யப்பட்டது பற்றியும் தமிழ்த்தேசியம் அவர்களது உரிமைகளை பறிக்க துணை நின்றது என்றும் மாலன் முன்பொருமுறை பிதற்றியிருந்தார் இன்று தமிழன் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டு பூசாவிலும் களுத்துறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களைப் பற்றி மாலனும் ஏதும் கேட்கப்போவதில்லை/

    ஆனால், இந்து ஆசிரியர் தலையங்கத்திலே, மிகவும் அக்கறையாக இன்று "Bravo Murali" என்பதன் கீழே, "The articulate Kumar Sangakkara has spoken of the importance of the Tamil [of recent Indian origin]’s conciliatory presence for a strife-torn nation" என்று அணுக்கமாகவும் நுணுக்கமாகவும் அக்கறை தெரிவித்திருக்கிறதே. இன்னும் இந்தியச்செய்தித்தாபனங்களும் முரளிதரன் மீது அக்கறையாக இந்தியத்தமிழர்வழி வந்தவர் என்பதைச் சுட்டிச் செய்தி வெளியிட்டிருக்கின்றனவே. அட, சற்றுமுன்கூட அப்படியான செய்தி வாசித்தேனே. எப்படியாக இந்துவோ இந்தியச்செய்தித்தாபனங்களோ இந்தியவழிவந்தவர்களின் இலங்கையரின் நலனிலே அக்கறை காட்டவில்லை என்று சொல்கிறீர்கள்?

    "Murali, a Tamil of Indian origin, is widely seen as a symbol of Sinhalese-Tamil unity despite the separatist war waged by Tamil Tiger guerrillas" என்று சொல்லும் AFP செய்தியிலேயே கோரமாகத் துருத்திக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் யதார்த்தம், ""Murali is perhaps the only Tamil who is trusted by the (majority) Sinhalese and the firecrackers lit indicates how high he is held by them," said Namal Perera, a private sector employee"]

    (ஒன்றைக் கவனிக்கவேண்டும்; முரளிதரன்களிலே இந்திய நலன்களை அடையாளம் கண்டுகொள்ளுதலும் கருணாக்களைத் இந்தியதேசத்துக்கு எதிரானவர்களாக நிறுத்துவதுமாகச் செய்தியும் பார்வையும் தருவது இந்தியாவின் ஆங்கிலப்பத்திரிகைகளுக்குப் புதிதல்லவே)

    [மாயா அருட்பிரகாசம், முத்தையா முரளிதரன் ஆகியோரின் "தமிழ்" அடையாளங்கள் பயன்படுத்தப்படும் வகை பற்றித் தனியே பதியப்படவேண்டும்.

    இத்தனைக்கும் முரளி 1997 இலே கலிபோர்னியாவுக்கு வந்தபோது, தனக்குத் தமிழிலே பேசமுடியாது என்று அவரினைச் சந்தித்த தமிழகத்தமிழர்களுக்குச் சொல்லியிருந்தார் என்று தமிழ்.நெற்றிலே அந்நேரத்திலே அவரைச் சந்தித்த ஒருவர் எழுதியிருந்தார். ]

    ReplyDelete
  6. பெயரிலி அவசியமான கட்டுரை.

    என்ன டிசே முன்னம் ஒருக்கா நீரும் தேசியம் என்பது கற்பிதம் குறுகிய பார்வை என்றெல்லாம் எழுதி என்னுடன் ஒரு பின்னூட்டத்தில பிறாண்ட்டுப் பட்டது நாபகத்தில இருக்கு.

    இப்ப அப்படி பின்னின நவீனத்துவமா சிந்திக்கிறது இல்லையோ?

    சுகுணா திவாகர் தமிழச்சி போன்றவர்கள் சுயமாக சிந்திப்பவர்கள் கிடையாது சுயமான தேடலோ வாசிப்போ அற்றவ்ர்கள் என்பதே எனது கருத்து.யார் அவர்களிடம் நட்பாக இருக்கிறார்களோ அவர்களைச் சூழ இருக்கிறார்களோ அவர்கள் சொல்வதெல்லம் உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நம்புபவர்கள்.

    சோபா சக்தி ,அ மாக்ஸ் போன்றவர்கள் இவர்களிடம் ஏற்படுத்தி உள்ள ஒரு விம்பமும் இதற்குக் காரணம்.சோபாசக்தியின் தோழர் இராகவனிடமும் சோபசக்தியிடம் தேசியமும் தலித்தியமும் பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு எதுவித எதிர்வினையும் கிடையாது.

    இந்த யோக்கியதையில் பாரிஸ் தலித்து முன்னணி அமைப்பாளர் ஞானத்தின் நகச்சுவையான தேசம் நெட்டில் வந்த பேட்டி இவர்களை மேலும் அம்பலப்படுத்தி உள்ளது.

    இதில் நகச்சுவை தேசியம் குறுகிய பார்வை என்று பாட்டுப் பாடி விட்டு கிழக்கியின் சுய நிர்ணயம் என்று சிறிலங்கா அரசின் சிங்கள உரிமையவின் 'தமிழர்களுக்கு இங்கு என்ன பிரச்சினை' என்னும் பேரினவாதக் கருதியலைக் கொண்டு வருவது தான் நகைச்சுவையிலும் நகைச்சுவை.

    பூனைக் குட்டிகள் ஒன்றை ஒன்று பிராண்டிக் கொண்டு தாமகவே வெளி வருகின்றன.

    புத்தனின் சரணங்கள்.;-)

    ReplyDelete
  7. சுகுணா திவாகரை நொந்து கொள்ள வேண்டாம். தமிழ்நாட்ல 'இடதுசாரி இன்டலட்சுவல்'னு அறியப்படனும்னா ஈழப்பிரச்னையைப் பற்றிப் பேசும் போதெல்லாம் (ஈழத்தமிழர் போராட்டத்த நிசமாவே ஆதரிச்சாக் கூட) தன்ன புலி ஆதரவாளன் என்று பார்ப்பனியவாதிகள் முத்திரை குத்திடக் கூடாதுன்னு சொல்லிவக்கிற ஒரு டிஸ்க்லைமெர்தான் இந்த புலி(ளி)யடித்தல் - எங்க ஊர் சிகரட் டப்பால எழுதிருக்கற (உங்க அமெரிக்காவில் எப்படியோ) "சிகரட் உடல்நலனுக்குத் தீங்கானது" ங்கிற statutory Warning! இதனால POTA-CBIன்னு பக்கத்துல வராமப் பாத்துக்கலாமே!

    ஆனா என்ன, இந்த இடதுசாரி-POTA-பயம் நோயால சுகுணா அவுத்து விடுற ஒருவரிக்கதைகள்தான் நகைச்சுவை. புலிகளப் பிடிக்காதவன்னு காமிக்கனும்னா முதல்ல புலி ஆதரவாளர்கள, அவங்க கண்டுக்கிறாங்களோ இல்லயோ, சும்மா தாககி வைக்கனும். நெடுமாறன் வேளாளர் சாதிங்கிறதுனாலதான் பிரபாகரனை ஆதரிக்கிறார்னு அபத்தமாக் கூடப் பேசலாம். நெடுமாறனோடச் சாதிப்பற்றுக்கு(புத்திக்கு) ஆதாரம் இருந்தாச் சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்னு இவர் எழுதுன மூனு நாலு இடத்துல கேட்டுப் பாத்தாங்க. சும்மா காத்துவாக்கில அடிச்சு விடவேன்டியதான. வளர்மதி இவரப்பத்தி சாதிப்புத்தின்னு சொன்னா மட்டும் கண்ணீர் விட்டு ஊர்ல நியாயம் கேட்பார், டோண்டு மாதிரி தனக்குப் பரிஞ்சு நியாயம் கேட்காதவங்கள்லாம் டோண்டுவவிட மோசம்பார்.

    அடுத்து பொள்ளாச்சி மகாலிஙத்துக்கு விருது கொடுத்ததனால நெடுமாறன் இந்துத்துவ பாசிசவாதியாயிட்டார்னார். பொள்ளாசி மகாலிங்கத்து விருது கொடுத்தா பணம் கொடுப்பாருன்னு நெடுமாறன் விருது கொடுத்திருப்பார். ஒரு கொள்கையுமில்லாத அல்லது எந்தக் கொள்கையும் உருப்படியா புரிந்துகொள்ளமுடியாத பெரும்பணக்காரரான பொள்ளாச்சி மகாலிஙம் தனக்குப் புரவலர்னு பேர் வரனுங்கிரதுக்காக யாருக்கு வேனாலும் பணம் கொடுப்பாருங்கிறது தமிழ் நாட்டுல எல்லாருக்கும் தெரியும். சுகுணா மாதிரி நாற்காலி உபதேசிகள் கூட ஏதாவது உருப்படியா கிழிக்கனும்னா முதல் தேவை பணம் வேணும். போய் பொள்ளச்சி மகாலிங்கத்தப் பாத்து "கம்யூனிசமும் இந்து மதமும்"னோ அல்லது "கம்யூனிசமும் தமிழ் தேசியமும்"னோ கட்டுரை எழுதி மகாலிங்கம் பேரையும் போட்டு அச்சடிக்கப் போறோம்னா சரின்னு உங்க புகழுக்குத் தகுந்தாப்ல கொஞ்சம் பணம் கொடுப்பாரு. அவர் நடத்துறப் பத்ரிக்கைல இந்த மாதிரி எல்லாவிதமான அரலூசுத்தனாம கட்டுரைகளும் வந்திருக்கு. இந்த மாதிரி கொள்கையில்லாப் பணக்காரங்ககிட்டயெல்லாம் கையேந்திதான் நெடுமாறன் இயக்கத்த நடத்த வேண்டியிருக்குன்னு வேண்ணா அவரத் திட்டி வைக்கலாம்.

    சுகுணாவோட குரு அ. மார்க்ஸையும் இங்கு சொல்லனும். பல நல்ல சிந்தனைகள்லாம் தமிழ்ல தந்திருக்காரு/தந்துகொண்டிருக்கிராருன்னாலும் இரவிக்குமாரோடச் சண்ட போட்டதுலருந்து மார்க்ஸ் வரையறைப்படி ரவிக்குமாரோட தொடர்புள்ளதெல்லாம் (திருமா, தமிழ் தேசியம், புலிகள், காலச்சுவடு) தீவிரமா எதிர்க்கப்பட வேன்டியது. ரவிக்குமாரும், ரவிக்குமாரச் சேந்தவங்களெல்லாம் யாரையாவது எதிர்த்தாலும்/விமர்சித்தாலும், அவர்கள தலகீழ நின்னாவது ஆதரிக்கனும். இதே பாலிசியத்தான் இரவிக்குமாரும் மார்க்ஸப் பொருத்தவரையிலும் பின்பற்றுராருங்கிறதுதான் இங்க ஜோக்கு. இப்படியான ஒரு காரணத்துக்கும் அ. மார்க்ஸ் புலியெதிர்ப்பாளனா காமிக்க வேன்டியதிருக்கு. அதாவது இரவிக்குமார் இணைந்திருக்கும் கட்சி புலிக்கு ஆதரவாயிருக்கறதால. இதுக்கு துணையா சரியான நேரத்துல கிடச்சாரு ஈழத்திலருந்து வந்த இன்னொரு மேதாவி ஷோபா சக்தி. இவங்களுங்கெல்லாம் ஈழத்துல என்னதான் நடமுறைக்கேத்த தீர்வுன்னு கேட்டா சொல்லத் தெரியாது.

    ஆனா இந்த சுகுணா மாதிரி அ.மார்க்ஸோட அடையாளப் படுத்தப்பட தவங்கிடக்கும் ஆளுகளுக்கும் மார்க்ஸ் என்ன சொன்னாலும் வேதவாக்குதான். ஞானியோடக் கூட்டத்துல போய் அ.மார்க்ஸ் ஒருத்தருதான் உருப்படியாப் பேசனாருங்கிறாரு இந்த சுகுணா. நானும் அந்த ஆடியோவப் பல தடவக் கேட்டுப்பாத்தாச்சு, மத்தவங உளருன உளரலத்தான் மார்க்ஸும் உளறி வச்சிருக்காரு. இதுல சுகுணா என்ன வித்தியாசத்தப் பாத்தாருன்னு தெரியல. அவர் பெரியாருக்குப் பரிஞ்சு காலச்சுவட்ட திட்டனது கூட அங்க இருந்த இரவிக்குமாரத் திட்டரதுக்கான சந்தர்ப்பமே.

    அதனால சுகுணா சொல்றதெல்லாம் பெருசா எடுதுக்காதீங்க. வளர்மதியுடன் ஏற்பட்ட பிரச்னைய அவர் எதிர்கொண்ட விதத்தைப் பாத்தபின்னால் அவருடைய முதிர்ச்சி அவ்வாளவுதான்னுப் போய்க்கிட்டே இருக்க வேண்டியதான்.

    ReplyDelete
  8. பெயரிலி,
    பதிவுக்கு மிக்க நன்றி.

    /* மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது" */

    'முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைச்ச காளான்' மாதிரி, இலங்கையின் வரலாறு பற்றிய போதிய புலமை இல்லாதவர்கள் எல்லாம் கருத்துச் சொல்வது இப்போது வாடிக்கையாகி விட்டது.

    திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகள் முழுக்க முழுக்க தமிழ் பேசும் மக்கள் [தமிழர் + முஸ்லிம்கள்] வசித்து வந்த பகுதிகள்.
    இது தமிழர்களின் பாரம்பரிய பூமி.

    இந்த வரலாற்று உண்மையை பல வரலாற்று ஆதாரங்களுடன் 1984ல் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள ஒக்ஸ்வோர்ட் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டறையில் திரு.நீலன் திருச்செல்வம் அவர்கள் எடுத்துரைத்திருந்தார்.


    பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன், நீலன் திருச்செல்வம் மற்றும் சிங்கள கல்விமான்கள் கிழக்கு மாகாணம் பற்றித் தெரிவித்திருந்த கருத்துக்களைத் தனிப்பதிவாக [நேரம் அனுமதித்தால்] போட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  9. /என்ன டிசே முன்னம் ஒருக்கா நீரும் தேசியம் என்பது கற்பிதம் குறுகிய பார்வை என்றெல்லாம் எழுதி என்னுடன் ஒரு பின்னூட்டத்தில பிறாண்ட்டுப் பட்டது நாபகத்தில இருக்கு./

    அண்ணை அற்புதன், எங்கை போனாலும் விடமாட்டீர்கள் போல :-).
    ...
    அந்த அரைகுறையாய் எழுதிய பின் - நவீனத்துவக்கட்டுரையில்தான் நாங்கள் முரண்டுபிடித்ததாய் நினைவு. தேசியம் என்பதில் எனக்கு இப்பவும் உடன்பாடில்லை. அந்தப்பதிவில் பின்னூட்டத்தில் கூறியதுமாதிரி, ஆரம்பத்தில் ஸ்ராலினும், கிடலரும், முசோலினியும் பேசியதும் தேசியம்தான் ('ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறென்ன' என்ற சாதாரண வாக்கியத்தை, ஒடுக்குகின்ற சிங்களத்தேசியத்திற்கெதிராகச் சொல்வதற்கும், ஒடுக்குகின்ற எதிர்த்தேசியம் இல்லாதபோது சும்மா சொல்கின்றபோதும் வரும் 'வித்தியாசங்கள்' நம் எல்லோருக்கும் புரியுமென நினைக்கின்றேன்). தமிழ் இலக்கிய/அரசியல்களை ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்த இரண்டாயிரம் ஆண்டுகளில் எனக்கு கோவை ஞானி, தலித்தியம், பெண்ணியம், சூழலியம் என்பவற்றை உள்ளடக்கி முன்வைத்த தமிழ்த்தேசியத்திலும் நம்பிக்கை இருந்தது என்பதை மறுப்பதற்குமில்லை. இன்னொரு தேசிய இனம், எனது தேசியத்தை முன்வைத்து என்னை ஒடுக்கும்போதே தேசியத்துக்குத் தேவை ஏற்படுகின்றதே என்ற காரணத்தை ஏற்றுக்கொள்கின்றேனே தவிர மற்றும்படி (எனக்கான) தேசியத்திற்கான அவசியமில்லையெனவே இப்பவும் நம்புகின்றேன். என்னைத் தமிழன் என்ற தேசிய இனத்தை முன்வைத்து சிங்களத்தேசியம் ஒடுக்கும்போது எனக்குத் தேசியம் வேண்டியிருக்கின்றது என்றே கூறியிருக்கின்றேன் (அதனால்தான் அ.மார்க்ஸின் 'தேசியம் ஒரு கற்பிதம்' என்ற கூற்றோடு எல்லாப்பொழுதுகளிலும் உடன்படமுடியாதிருக்க்கின்றதெனவும் குறிப்பிட்டிருந்தேன்). சிங்களப்பேரினவாதம் முன்வைத்த தேசியத்திற்கெதிராகவே தமிழ்/புலி தேசியம் உருவானது என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால் அதே தமிழ்/புலி தேசியமே ஒரு இனத்தை (முஸ்லிம்களை) முற்றாக அவர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து அகற்றியிருக்கின்றதே, ஏன் என்று யோசிக்கும்போது தேசியத்தின் பலவீனங்களும் புரியும். நன்றி.

    (சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டேனென நம்புகின்றேன். பெயரிலியின் பதிவு திசை திருப்பப்படுவதைத் தவிர்க்கும்பொருட்டு இத்தோடு இப்பதிலிருந்து ஒதுங்கிக்கொள்கின்றேன். நன்றி)

    ReplyDelete
  10. //அதனால்தான் அ.மார்க்ஸின் 'தேசியம் ஒரு கற்பிதம்' என்ற கூற்றோடு எல்லாப்பொழுதுகளிலும் உடன்பட முடியாதிருக்க்கின்றதெனவும் குறிப்பிட்டிருந்தேன்//

    ஓம் ஓம் பல 'உண்மைகள்' இருக்கலாம் அல்லவா? ;-)

    ReplyDelete
  11. பெயரிலி,
    இது உங்கள் பதிவுக்கான பின்னூட்டமல்ல. DJ யின் பின்னூட்டம் குறித்த என் கருத்துக்கள். மன்னித்தருள்க.
    பதிவைத் திசை திருப்பும் நோக்கமல்ல.
    ------------------------------

    DJ,

    /*ஆனால் அதே தமிழ்/புலி தேசியமே ஒரு இனத்தை (முஸ்லிம்களை) முற்றாக அவர்களின் பூர்வீக நிலங்களிலிருந்து அகற்றியிருக்கின்றதே, ஏன் என்று யோசிக்கும்போது தேசியத்தின் பலவீனங்களும் புரியும் */

    மேலே நீங்கள் சொல்லியுள்ள கருத்து சில தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும் என எண்ணுவதால் உங்கள் கருத்துப் பற்றிய என் மாற்றுக் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

    மேலே நீங்கள் சொல்லியுள்ள கருத்து சிங்கள அரசுகள் சிங்கள இனவாத வெறிபிடித்துத் தமிழினத்தை அழிக்க முற்படுவது போல புலிகளும் இனவாத/தேசியவாத வெறிபிடித்தே முஸ்லிம் மக்களை வெளியேற்றினார்கள் என்பது போல எனக்குப் புரிகிறது. எனது புரிதல் தவறாயின் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.

    என் புரிதல் சரியாயின், நீங்கள் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னால் இருந்த காரணங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அறியவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

    எந்த ஒரு இனத்தையும் ஒடுக்குவது அல்லது அழித்து ஒழிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

    ஆனால் யாழில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வு இனவெறி நடவடிக்கையல்ல என்பதையும் அதற்குப் பின்னால் உள்ள காரணங்களையும் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    யாழ்ப்பாணத்தில் தமிழினம் அழிவின் விளிம்பில் இருந்து தமது இருப்புக்காகப் போராடிக் கொண்டிருந்த போது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சிங்கள அரசின் உளவாளிகளாகச் செயற்பட்டு காட்டிக் கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிங்கள அரசின் பிரித்தாளும் தந்திரத்திற்குப் பலியாகி, சிங்கள உளவுப் படைகளில் பணிபுரிந்தும், சிங்களப் படைகளுக்கு உளவுத் தகவல்கள் கொடுப்பவர்களாகவும் செயற்பட்டார்கள்.

    எமது இனம் அழிவின் விளிம்பில் இருந்து போராடிக் கொண்டிருக்கும் போது எமது பகுதியில் எம்முடன் வாழ்ந்து கொண்டே உளவுத் தகவல்களைக் கொடுத்து காட்டிக் கொடுப்புச் செயல்களில் ஈடுபட்டதால் தம்மைப் பாதுகாக்கச் செய்த செயலே முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதற்கான முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன்.

    இன்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இலங்கையின் உளவுப்படைக்காக இலங்கையிலும் தமிழகத்திலும் செயற்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

    எடுத்துக்காட்டாக, யுத்த நிறுத்த காலத்தில் கொல்லப்பட்ட சிங்கள உளவுப் படையைச் சேர்ந்த சில உயரதிகாரிகள் மற்றவர்களின் பெயர்களை நீங்கள் பார்த்தீர்களானால் பலர் முஸ்லிம்கள் என்பதை அறிந்து கொள்ளுவீர்கள்.

    இன்றும் தமிழகத்தில் உள்ள இலங்கைக்கான தூதவராலயத்தில் பல முஸ்லிம்கள் உளவு நடவடிக்கைகளுக்காகவே செயற்படுகின்றனர். இவர்களில் சிலர் பாகிஸ்தானுக்காகவும் செயற்படக்கூடும் என நான் ஐயமுறுகிறேன்.

    DJ, அத்துடன் உங்களுக்கு மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்ற அனுபவம் உண்டா என எனக்குத் தெரியாது.

    அங்கு சென்றால் உங்களுக்கு உண்மை புரியும். அதாவது அப் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் சிங்களவர்களினால் அனுபவித்த கொடுமைகளை விட முஸ்லிம்களால் அனுபவித்த சோதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

    சிங்கள அரசின் பிரித்தாளும் தந்திரத்திற்குப் பலியாகி பல முஸ்லிம் இளைஞர்கள் சிங்கள அரச படைகளால் பயிற்றுவிக்கப்பட்டு ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு "ஊர்காவல் படை" எனும் பெயரில் பகிரங்கமாகத் திரியவிடப்பட்டார்கள்.

    இந்த முஸ்லிம் "ஊர்காவல் படைகள்" செய்தது என்ன?

    2005ல் அம்பாறைக்குச் சென்ற போது நேரில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

    சில தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டு, அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு, அவர்களின் வயல்கள் சூறையாடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்தது சிங்களப் படைகள் அல்ல. முஸ்லிம் "ஊர்காவல் படைகள்".

    DJ, கடந்த வாரம் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. படித்தீர்களா?

    அச் செய்தியின்படி, சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளாயான் குழுவில், புதிதாக பயிற்றுவிக்கபட்ட பல முஸ்லிம் இளைஞர்கள் இணைந்திருப்பதாக அச் செய்தி சொல்கிறது.

    இந்த முஸ்லிம் இளைஞர்கள் தமிழர்களின் பூர்வீக பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யாருக்கு எதிராகத் தாக்குதல்களை நடாத்தப் போகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

    கிழக்கில் உள்ள அப்பாவித் தமிழ்மக்களைக் கொன்றும், கடத்தியும், கொள்ளையடிக்கவும் போகிறார்கள்.

    இப்படிச் சிங்கள அரச படைகளுடன் சேர்ந்தியங்கி எமது மக்களைக் கொல்பவர்களைக் கொன்றாலும், புலிகள் இனவாதத்தால் தான் அவர்களையும் கொன்றர்கள் என்றா சொல்வீர்கள், DJ?

    DJ, நான் இவற்றைச் சொல்வதால் புலிகளுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்றோ அல்லது முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்துகிறேனோ என எண்ணாதீர்கள். புலிகளின் சில நடவடிக்கைகளில் எனக்கும் மாற்றுக் கருத்து உண்டு.

    சிங்கள அரச படைகளுடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றியிருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் வெளியேற்றியது கண்டிக்கத்தக்கதுதான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

    ஆனால் முஸ்லிம் மக்கள் யாழில் இருந்து வெளியேற்ற்றப்பட்டதற்கு காரணம், நீங்கள் சொல்லியுள்ளது போல தமிழ் தேசிய வெறியோ இனவெறியோ இல்லை. மாறாக எமது போராட்டத்திற்கு எதிராக எமது எதிரியுடன் சேர்ந்து செயற்பட்டதே காரணம்.

    இக் காரணங்களை ஆராயாமல், வேறு சிலரும் இப்படிச் சொல்லியும் எழுதியும் திரிவதால் நான் அறிந்தவற்றைச் சொல்லுவோம் எனும் நோக்கில் இதை எழுதுகிறேன்.
    பெயரிலியின் பதிவின் நோக்கத்தைத் திசை திருப்பவல்ல.

    ReplyDelete
  12. டிசே இங்கே சொன்ன கருத்துகளுடன் பொதுவாக எனக்கு உடன்பாடே.

    மேலும், தேசியம் என்பதும் சாதிகள்போல ஒருவர் மீது மேலாதிக்கத்தனத்தோடு அடையாளப்படுத்திக்கொள்ளும்வகையிலே திணிக்கப்படுவதேயென்று தோன்றுகிறது. அதற்கான எதிர்ப்பான போராட்டம் வெல்லும்வரைக்கும் அந்த அடையாளப்படுத்தலையே ஆயுதமாகக் கொண்டு போராடும் தேவையிருக்கும். ஆனால், தேசியம் என்பதை மேலாதிக்கத்தோடு முன்வைக்கும்போது, அங்கேதான் ரயாகரனுக்குப் பிடித்த பதமான பாசிசம் (;-)) தோன்றுகிறது.

    இனக்குழுவாக ஒடுக்கப்படும் நிலையிருப்பவர்களின் பார்வையிலே தேசியம் என்பதை ஒரேயடியாக வெறும் கற்பிதம் என்று அடித்து மறைத்து எழுத முயல்கின்றவர்கள், சாதிக்குழுவாக அடையாளம் காணப்பட்டு ஒடுக்கப்படுகின்றவர்களின்
    பார்வையிலே சாதியம் என்பதையும் கற்பிதம் என்றுதான் எழுதமுடியும். அதே நேரத்தில், ஒடுக்கும் குழுவின்பார்வையிலேதான் இது கற்பிதமாகத் தோன்றாதவரையிலே பாசிசமாகிறது. யூதர்களின் இன அடையாளத்தினைப் பேணலுக்கும் நாட்சிகளின் ஆரிய அடையாளப்பேணலுக்குமான வித்தியாசம் இதுவே; ஒடுக்கப்பட்ட சாதியராக அவ்வடையாளத்தைக் கொண்டு ஒன்றுபட போரிட முனைகிறவர்களுக்கும் சாதிமான்களாகத் தம்மை அடையாளம் கண்டு கொள்கின்றவர்களுக்கும் இடையேயான வித்தியாசமும் இதுவே.

    ஒடுக்கப்படுகின்றவரின் தேசியம் கற்பிதமென்றால், ஒடுக்கப்படும் சாதியமும் அ. மார்க்ஸுக்கும் பாரிசியதலித்திய'போராளி'களுக்கும் கற்பிதமாகத்தான் தோன்றவேண்டும் (அவர்களுக்குப் புலிகளுடனான பிரச்சனைக்கு இஃது ஓர் எதிர்ப்போராட்டக்களமாக மறைமுகமாகப் பயன்பட வாய்ப்பாகப் பயன்படுத்தவேண்டிய தேவையில்லாதிருந்தால் :-))

    இதுபோலவே, சிங்களத்தேசியமுன்னெடுப்பினாலே, தமிழ்த்தேசியம் அடையாளப்படுத்தப்பட்டுப் போராடும்போது புலிகள் போராளிகளாகின்றனர் என்று கொள்ளலாம்; ஆனால், முஸ்லீம்களை முஸ்லீம்கள் என்றே - காரணம் எதுவாகவிருந்தபோதுங்கூட, ஜிகாத் என்று உருவாக்கப்பட்ட அரசின் ஊர்காவற்படை என்ற காரணங்கள் சொல்லப்பட்டாலுங்கூட- ஒட்டுமொத்தமாக வடபகுதியிலிருந்து விரட்டியபோது, அங்கே தமிழ்த்தேசியம் தமிழ்ப்பாசிசமாகவே கோரப்பற்களை இளி/ழித்துக்கொண்டு/ன்று நின்றது. கிழக்கிலே முஸ்லீம்கள் மீதான புலிகளின் (இப்போது, புட்டும் தேங்காய்ப்பூவும் இனிப்பு ஒழுக ஒழுகப்பேசும் மற்றுத்தமிழியக்கங்களினதுமேதான்) வன்முறையும் தமிழ்மக்கள் மீதான அரசுசார்முஸ்லீம் ஆயுதக்குழுக்களின் வன்முறையும் ஆயுதவடிவத்தின் அடிப்படையிலே போராட்டம் புதிதொழிய, இந்த உரசல்கள் நெடுங்காலப்பட்டவையென்றே காலத்திலே திரும்பிப் பார்க்கும்போது சொல்லலாம். கிழக்கின் புலிகளின் (+ மற்றைய தமிழியக்கங்களின்) முஸ்லீம்கள் மீதான ஆயுதவன்முறைகளுக்கும் முஸ்லீம்களின் எதிர்வினைகளுக்கும் புலிகள் + தமிழியக்கங்கள், அரசுசார்ந்த முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் என்பதற்கும்மேலாக, அவற்றிலேயிருந்த கிழக்கின் வேர்விட்டிருந்த அக்கம்பக்க ஊர்கள் சார்ந்த தனிப்பட்ட காழ்ப்புகளே காரணங்கள் என்று சொல்வேன். மூதூரிலும் கட்டைபறிச்சானுக்கும் இடையிலே ஒரு கிழமை இந்திய இராணுவகாலத்திலே எதேச்சையாக அகப்பட்டிருந்த நேரத்திலே, இதனை நேரடியாகக் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நேரடியாக தமிழியக்கங்களின் தலைமைகள் இவற்றுக்கு எதிரான உறுதியான ஒழுங்குப்பிரச்சனைகளிலான நடவடிக்கைகள் எடுக்காததே அவ்வியக்கங்களைப் தேசிய இனப்பாசிசப்பாசி படர்த்திப் படுத்துகின்றது. வடக்கிலே தலைமைத்துவம் கொண்டிருந்த இயக்கங்களுக்கு, கிழக்கிலே இப்படியான நடவடிக்கைகளைக் கண்டித்தபின்னால், ஆளணி கொண்டு நிலவும் வலிமை இருந்திருக்கமுடியாதென்பது காரணமாகவிருக்கலாம். கருணாவின் பிளவு பத்தாண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்திருக்கவும் கிழக்குப்புத்திரர்கள் என்ற கோஷம் எழுந்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால், தமிழியக்கங்கள் அப்போதே முஸ்லீம்களுக்கு எதிரான குரலை வெளிப்படையாகக் கண்டிக்காதவிடத்து, அவர்களும் தேசியப்பாசிசத்துக்குத் துணை போனவரேயானார்கள். இன்றைக்குப் பெரிய முரண்நகை என்னவென்றால், அதே முஸ்லீம்-தமிழ் முரணை முன்வைத்து இயங்கிய கருணா & பிள்ளையான் போன்றவர்களும் மற்றைய இயக்கங்களின் உதிரிகளுமே கிழக்கிலே தமிழ்-முஸ்லீம் ஒற்றுமை பற்றிப் பேசி வன்னிப்புலிகளே கிழக்கு முஸ்லீம்களின் அந்நியப்படுதலுக்குக் காரணமென்று நிற்பதுதான். வடபகுதி முஸ்லீம்களின் தமிழருடனான அந்நியப்படுதலுக்கு வடக்கின் புலித்தலைமைத்துவம் பொறுப்பேற்கவேண்டுமென்பதிலே எவ்விதமான மறுப்புமில்லை; ஆனால், கிழக்கிலே ஸ்ராலின் போன்றோர் கருணாவினை நியாயப்படுத்திக்கொண்டு, மூவினங்களும் ஒற்றுமையாகவிருந்த கதை பேசும்போது, வாயைப் பிளந்துகொண்டு சோத்தோடு பூசணிக்காயை முழுங்கிக்கொண்டிருக்குமளவுக்கு செயலின்மைதான் எம்மிலே மிஞ்சுகிறது.

    ReplyDelete
  13. Why TMMK is supporting malaysian
    government than the Tamils there?
    Why are they even denying the fact that there is a genuine problem there?Why are they trying to project this as a problem created
    by Hindutva elements?. The interface between nationalism and
    religion is more complex.TMMK puts muslim/islam first and the tamil
    identity at the last. Is that the
    case with Muslim Tamils in the East
    Srilanka. Do they identify themselves more as Muslims than
    as Tamils.

    The world is full of strange and
    not-strange-bed fellows. You see
    them only when they come out of the beds/blankets or when they
    divorce or when you see the
    outcome (babies) live, sound
    and kicking you :).

    ReplyDelete
  14. ஆனால், கிழக்கிலே ஸ்ராலின் போன்றோர் கருணாவினை நியாயப்படுத்திக்கொண்டு, மூவினங்களும் ஒற்றுமையாகவிருந்த கதை பேசும்போது, வாயைப் பிளந்துகொண்டு சோத்தோடு பூசணிக்காயை முழுங்கிக்கொண்டிருக்குமளவுக்கு செயலின்மைதான் எம்மிலே மிஞ்சுகிறது.


    They are just (re)writing the
    history so that the boundaries can be (re)drawn on that basis.

    ReplyDelete
  15. //யூதர்களின் இன அடையாளத்தினைப் பேணலுக்கும் நாட்சிகளின் ஆரிய அடையாளப்பேணலுக்குமான வித்தியாசம் இதுவே; ஒடுக்கப்பட்ட சாதியராக அவ்வடையாளத்தைக் கொண்டு ஒன்றுபட போரிட முனைகிறவர்களுக்கும் சாதிமான்களாகத் தம்மை அடையாளம் கண்டு கொள்கின்றவர்களுக்கும் இடையேயான வித்தியாசமும் இதுவே//

    ஓம்.. :)

    ReplyDelete
  16. FYKI
    http://www.countercurrents.org/hensman121207.htm

    ReplyDelete
  17. Anonymous,
    thanks for The Island article. yesterday I saw it in tamilweek.
    Can we get a tamil translation too? ;-)

    ReplyDelete