Friday, April 01, 2005

புலம் - 11

இஸ்ரேல் குறிப்புகளின் மீது அவசரக்குறிப்பு

ரோஸாவசந்தின் பலஸ்தீனியர் குறித்த பதிவிலே தங்கமணி சொல்லவந்ததை மிகவும் பதியக்கூடியவிதத்திலே சொல்லவேண்டுமென்று "ஹிட்லர் ஜெயிக்கவில்லையே என்று இப்போது நான் வருத்தப்படுகிறேன்" என்று சொல்லியிருக்கின்றார் என்று படுகிறது. ஆனால், வேடிக்கைக்குக்கூட இப்படியாகச் சொல்லியிருக்கவேண்டாம் என்பது என் கருத்து. ஹிட்லரின் செய்கை எந்த விதத்திலுமே நியாயப்படுத்த முடியாதது - ஹிட்லருக்குத் தோன்றிய காரணங்கள் எவையாகவும் இருக்கட்டும். நோம் ஸோம்ஸ்கி, ஸுஸன் ஸொடன்பேர்க், அமி குட்மென் போன்று பலஸ்தீனியர்களுக்காகக் குரல் கொடுக்கின்ற யூதர்கள் இருக்கின்றார்கள். ஓரிரு ஆண்டுக்கு முன்னாலே ஸலூன் வலைஞ்சிகையிலே எவ்வாறு நியூ யோர்க்கின் அதி பழமைவாத யூதர்கள் இஸ்ரேல் என்பதாக ஒரு யூத நாடமைந்திருப்பது குறித்து மத ரீதியான எதிர்ப்பினைக் கொண்டிருப்பதைச் சுட்டியிருந்தார்கள்.

மிகுதிப்படி, பலஸ்தீனியர்களின் துயரத்தினையும் நியாயத்தினையும் டோண்டு போன்றவர்களின் சிந்தனை வழி இயங்குகின்றவர்கள் என்றேனும் ஏற்றுக்கொள்வார்களென நான் நம்பவில்லை. சோவினை விமர்சனமின்றித் தாங்குகின்ற ஒருவரிடம் வேறு எதனைத் தங்கமணியும் ரோஸாவசந்தும் எதிர்பார்க்கின்றார்கள்? ஐதீகங்களையும் வரலாற்றினையும் தன் விருப்புவெறுப்புகளையும் கலந்து தும்புமுட்டாய்ப்பதிவுகள் செய்துகொண்டிருக்கின்றார். ஆனால், இவரின் பதிவுகள், இதே நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தும் வெளியே சொல்லச் சங்கடப்பட்டிருக்கும் பலருக்கு, ஒரு வெளிக்காட்டாக இருக்கின்றது என்பதை அவருக்குச் சொருகப்பட்ட நட்சத்திரங்களிலே காணலாம். :-) ஏதோ ஒரு வகையிலே, சமூகத்திலே தனக்கு உரித்தானதை, கிடைக்கவேண்டியதினைப் பிடுங்கிக்கொண்டு கலைக்கப்பட்டு, ஒடுக்குதலை உணராத ஒருவருக்கு, அதுபோன்ற நிலைமைகளை உணர்த்துதல் கடினம். பாரம்பரிய பூமியிருந்து அடித்து ஓட்டப்பட்டு, அகதி முகாமிலே அந்தரிக்கவிடப்பட்டவன் பற்றிய கதையை அடித்து ஒடுக்குவது ஆண்மையும் வீரமுமென்று நியாயப்படுத்துகின்ற "We kicked the shit out of them" சித்தப்போக்கினைக் கொண்டவர்களுக்கு உணரச்செய்யமுடியாது.

இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்ட, யூதர்களிலும் எந்தவிதத்திலே அவர்கள் வந்த இடம் குறித்த பாகுபாடு நிலவுகின்றது என்பதை இஸ்ரவேலின் நடைமுறைவரலாற்றினைக் காண்கின்றவர்கள் உணரலாம். ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து சென்றவர்கள் ரஷ்யா,எதியோப்பியாவிலே இருந்து வந்தவர்களையும் கூடவே காலாகாலமாக அரபுலகிலே வாழ்ந்திருக்கின்ற யூதர்களையும் இரண்டாம் மூன்றாமிடங்களிலே வைத்து நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் ஆதாரங்களுடன் வலையிலே (குறிப்பாக, பிபிஸி இணையத்தளத்திலே தேடினீர்களென்றால், காண்பீர்கள்). வாசித்திருக்கலாம். (இதற்குள்ளே கிழக்கு இந்தியாவிலேயிருந்து இப்போது, இன்னொரு தொலைந்த இஸ்ரவேலிகுழுமத்தைனைக் கண்டெடுத்து அழைத்துப்போக இருக்கின்றார்கள் ;-)) எத்தனை முன்னைய சோவியத்திலிருந்து வந்த இரஷிய யூதர்கள் மீண்டும் ரஷ்யா சென்றிருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் இஸ்ரேலிலே எவ்வகையான தொழில்களிலே ஈடுபடுத்தப்பட்டிருந்தார்களென்பதையும் பிபிஸியின் அண்மைய நிகழ்ச்சி ஒன்று தந்தது. இஸ்ரவேல் அமைச்சர்களிலே எத்தனை பேர், ஐரோப்பிய-அமெரிக்க யூத வழி வராதவர்களென்று பார்த்தால், அதிகமில்லை. இளம்பெண்களைப் பாலியற்றேவைகளுக்கான பண்டநிலையிலே பயன்படுத்தும் நாடுகளிலே இஸ்ரேல் இன்றைய காலகட்டத்திலே முக்கியமானதொன்று. அமெரிக்காவிலேயிருந்து அண்மையிலே சென்ற யூதக்குடியேறிகள், காலகாலமாக அகதி முகாம்களிலே வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு "இஃது எங்கள் ஆண்டவன் காட்டிய நாடு; நீங்கள் ஜோர்டானிலோ அல்லது வேறெங்கோ அரபு நாட்டிலோ போய்க் குடியேறுங்கள்" என்று சொன்ன அவலத்தை பிபிஎஸ்-பிபிஸியின் frontline நிகழ்ச்சியிலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே பார்க்க நேர்ந்தது. இன்னொரு நிகழ்ச்சியிலே, இஸ்ரேலிருந்து, 1967 இலே அல்ல, ஆனால், 1948 இலே விரட்டப்பட்டு, இன்னமும் அகதி முகாமிலே வாழும் ஒரு பாலஸ்தீனியக்கிழவி தனது அந்தக்காலவீட்டின் திறப்புக்கோர்வையினைச் செவ்வி காண்கின்றவருக்கு எடுத்துக்காட்டும் காட்சியை டில்லியிலே இருந்து கொண்டு சென்னையிலே தான் வாழ்ந்த - எந்த நேரமும் தான் வாழ வழியுள்ள- தன் வீடு குறித்து கனவினைத் தொடர்ந்து கண்ட டோண்டு பார்த்தால், புரிந்து கொள்ளமுடியுமென்று நம்புகிறேன். அப்படியாக தன் சொந்த வீட்டைப் பறிகொடுத்த ஒரு பாலஸ்தீனியர் பற்றி வாசித்தோ ஏதோ விதமான சமாந்திர அனுபவத்திலோ உணர வசதியில்லாதவர்களுக்கு, Costa-Gavras இன் Hanna K. இனைப் பார்க்க நான் பரிந்துரைக்கின்றேன்.

அரபு நாடுகளுக்கு எதிரான இஸ்ரேலின் வெற்றி, தனியே இஸ்ரேலினாலே மட்டும் பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல என்பதை வரலாற்றின் நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்க்கும் சின்னப்பிள்ளைக்குக்கூடப் புரிந்துகொள்ளமுடியும்; அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான குரலாக இருக்கின்றவர்கள், அரசியல், பொருளாதார, ஊடகபலம் வாய்ந்தவர்கள்; இங்கே பட்டியல் போட்டு அண்டாது. இஸ்ரேல் ட்ரான்ஸ்-ஜோர்டானிலே அமைவதிலே அமெரிக்காவிலேயிருந்த செல்வாக்கு மிக்க யூதர்களுக்கு எந்தளவு பங்கிருந்தது என்பதையும் ட்ரூமனுக்கு அமெரிக்க அரசிற்கான பண நெருக்கடியிலே எப்படியாக முடிவெடுத்தார் என்பதையும் அதிலே பிரிட்டனின் பங்கு குறித்தும் End of Empire புத்தகம் ஓரளவுக்கு நடுநிலையாகச் சொல்லியிருக்கின்றது. இது குறித்து வெளிப்படையாகவே அமெரிக்க யூத அழுத்தத்தினைச் சுட்டி, ஹொலிவுட் படம் ஒன்று (The Chosen) 1980 களிலே வந்து பார்த்திருக்கின்றேன். இன்னும் உதாரணங்களுக்குச் சம்பவங்கள் இரண்டு; அமெரிக்காவின் அரசுள்ளேயே மேல்நிலையிலே இஸ்ரேலின் உளவுகாரர் இருப்பதாக சென்ற ஆண்டு ஒரு செய்தி வந்தது. அப்படியே அடங்கிவிட்டது; ஈரானின் அணுவாயுத உற்பத்தி, (ஈராக்கினதும் கூடவே) இஸ்ரேலுக்குக் குந்தகமாகிவிடும் என்பது வெளிப்படையாகவே, ஊடகங்களிலே அமெரிக்காவின் அரசுசார் அதிகாரிகள் சொல்லி வருவது; ஆனால், எவருமே இஸ்ரேலின் ஏற்கனவே இருக்கின்றதென்று சொல்லப்படும் அணு ஆயுதங்களையோ இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த செய்தியை வெளியிட்டாரென்று சொல்லப்பட்டு கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கும் மொடேசாய் வனுனு பற்றியோ அமெரிக்க ஊடகங்களிலே பேசுவதில்லை.

பலஸ்தீனியர்களின் செயற்பாடுகளை முன்வைத்து அவர்களைப் பயங்கரவாதிகளென்று சொல்லிவிடுவது 'பயங்கரவாதப்புலி வருகுது! வருகுது" நாடுகளிலே மிகச்சுலபமான விடயம்; அரச பயங்கரவாதம், அரசு, சட்டம் என்பதன் போர்வைகளின்கீழே நியாயப்படுத்தப்பட்டுப்போகின்றது. இஸ்ரேலின் செய்கை குறித்தும் இதுவே "புலி வருகுது வருகுது!!" பயத்தின்கீழே நெறி பற்றி பேசுகின்றவர்களின் செய்கை இருக்கின்றது. இஸ்ரேலின் பலஸ்தீனியர் மீதான அரசபயங்கரவாதம் குறித்து எந்த விமர்சனமோ, குரியனின் சாதாரண மக்களுடனான விடுதிகளைக் குண்டுவைத்துத் தகர்த்தது குறித்து எந்த விமர்சனமோ, ஆஜெர்ண்டீனாவுக்குள்ளே புகுந்து அதன் பிரஜையை - அவன் நாட்ஸி குற்றவாளியாகத்தான் இருக்கட்டும்- மொஸாட் கடத்திவருவது குறித்து எந்த விமர்சனமோ இல்லாதவர்கள் இப்படியானவர்கள். இணையத்திலே சில ஆண்டுகளுக்கு முன்னாலே கண்டிருந்தேன். ஹிந்துத்துவா குழுவொன்று யாரோடு கூட்டுச்சேர்ந்து முஸ்லீம்களை ஒழிக்கவேண்டுமென்று சொல்கின்றார்களென்று பார்த்தீர்களானால், அதிவலதுசாரி யூதர்களின் ஹஹேன்குழுவுடனாம். ;-)

இஸ்ரேலின் ஆதரவாளர்களாக இருப்பது ஒன்று; ஆனால், நிகழ்வுகளைத் திரிப்பதும் சொந்த விருப்புவெறுப்புகலந்த புனைவினை வரலாறென்று பதிவதும் நியாயமானதல்ல; பலஸ்தீனியர்களிலே எத்துணை குறைகளோ இருக்கலாம்; ஆனால், தமது பூமியைத் தமது என்று போராடுவது அவற்றிலே ஒன்றல்ல. குறைந்தபட்சம், யசீர் அரபாத்தின் அடிப்படை நோக்குக்கும் ஒஸாமா பின் லேடினின் அடிப்படைவாத நோக்குக்குமிடையே வித்தியாசம் பிரியாமல், இஸ்ரேலுக்காக ஆதரவு தெரிவிக்கின்றவர்களை எண்ணி வெறுமனே புரியாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு பரிதாபப்பட்டுவிட்டுமட்டுமே போய்விடமுடியாது; இவர்கள், தாம் சாடும் பயங்கரவாதிகளிலும்விட அபாயமானவர்கள்.

இணைப்புகளைத் தேடப் பொழுது இல்லாதபடியினாலே, இங்கு கொடுக்கவில்லை; சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது, கொடுக்கின்றேன்.

2005, ஏப்ரில் 01 16:11 கிநிநே.


33 comments:

  1. அடப்பாவி, பெரிய ஆளைய்யா நீர்! அவசர குறிப்பு என்று சொல்லிவிட்டு இத்தனை விரிவாய் எழுத முடியுமா? நானும் அவசர குறிப்புதான் எழுதப்போனேன். மட்டையடிகள்தான் வருகின்றன.

    தங்கமணியின் பின்னூட்டம் குறித்து உங்கள் கருத்துதான் எனக்கும். ஆனால் அது சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வந்துள்ளதாக நினைக்கிறேன். சில சமயங்களில் ஜியோனிஸ புளுகுகளை, அவர்கள் போடும் ஆட்டங்களை பார்க்கும்போது இப்படி ஒரு கோபம் எனக்கும் வருவதுண்டு. அப்படி ஒன்றின் வெளிப்பாடாகத்தான் தங்கமணி எழுதியதை பார்கிறேன். (வேறு சில நல்ல நண்பர்களுக்கும் இப்படி ஒரு கோபம் வந்து, இதே வாக்கியத்தை உதிர்த்து கேட்டிருக்கிறேன்.)

    நல்ல பதிவு. தொடர்ந்து டோண்டு சாதனை படைத்து வருகிறார். சோ பற்றி எழுதினார். தங்கமணியின் சோ குறித்த நல்ல பதிவு வந்தது. பெரியார் குறித்து எழுதினார். சுந்தரமூர்த்தி பெரியார் பேச்சுகளை நேரடியாய் எடுத்து போட்டு பயனுள்ள வேலைகள் நடக்கிறது. இப்போது உங்களின் நல்ல பதிவு. அதற்காக இதை 'நாரதர் கலகமாக' பார்க்கும் மயக்கம் எனக்கு வராது. அதுவும் டோண்டு ஒவ்வொருமுறையும் வெளிப்பட்டு போகும்போது!

    ReplyDelete
  2. டோண்டு ராகவரின் வயசுக்கும், அனுபவத்துக்கும் மதிப்பு கொடுத்து பார்க்க வேஎண்டுமென்றால், அவர் சொல்லும் கருத்துகளை
    புறந்தள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால், அவருக்கு எந்த விதமான சலுகைகளும் கொடுக்காமல், அதிரடியாக பதில் கொடுக்க வேண்டும். நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு ஸ்டார் சொருக்கும் ஓராயிரம் நாகங்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றன.

    ரோசா சொல்லும்போது
    ஹிட்லருக்கும் ஆதரவு. அவனால் கொல்லப்பட்ட யூத சமூகத்துக்கும் ஆதரவு என்றார். உன்னிப்பாக பார்த்தால், எங்கெங்கு அதிகாரம் நிரம்பிக் கிடக்கிறதோ, அங்கெல்லாம் பார்ப்பனியம் அடி வருடிக் கொண்டிருக்கும். ஜெயிக்கிற கட்சியாக தேர்ந்து லாவகமாக அடி வருடும் பாதந்தாங்கிகள் பெரும்பான்மை பெற்ற சமூகம் அது. ஹிட்லர் உச்சத்தில் இருந்தால் அவனுக்கு ஜால்ரா. யூதர்கள் ஜெயித்தால் அவர்களுக்கு ஜால்ரா. காங்கிரசு பெரும்பான்மை பெற்றால் அவர்களுக்கு. அவர்களை எதிர்த்து வரும் பி.ஜே.பி க்கும். நாளையே தமிழீழம் அமைந்தால், அந்த அரசாங்கத்திலும் இந்த அடிவருடிகள் உண்டு. நிலையான கொள்கை என்ற ஒன்றில்லாமல், காற்றடிக்கும் திசைக்கு தாவும் நவீன அரசியல்வாதியின் பச்சோந்தித்தன பார்ப்பனியத்துக்கு, பன்னெடுங்கால ஆரியப்பின்புலம் உண்டு. இது பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, நிறுவன/அமைப்பு ரீதியாக பலன்/பலம் பெறும் வீரமணி போன்ற பார்ப்பனியம் பேணுபவர்களும் இந்த வழிமுறையையே பின்பற்றுகிறார்கள். பார்ப்பனியத்தை எதிர்க்கிறவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களே அந்தக் குள்ளநரித்தனத்திற்கும், நயவஞ்சகத்துக்கும் பலியான கொடுமை அது.

    - மல்லிகை கணேசு

    ReplyDelete
  3. பெயரிலி,
    எத்தனை செறிவான பதிவு! இதுபோன்ற பதிவுகளை எழுதவைக்கும் ராகவனுக்கும் சேர்த்து நன்றி சொல்லவேண்டும்.

    இந்துத்துவவாதிகள் விதந்து பாராட்டும் இன்னொரு விஷயம் (ராகவனும் தன் முதல் பதிவிலே எழுதியிருக்கிறார்) வழக்கில் இல்லாத ஹீப்ரூ மொழியை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டுவந்தது. என்னுடைய ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள் சிலர் சமஸ்கிருதத்தை புதுப்பித்து இந்தியாவின் தேசிய மொழியாக்கி அனைவரையும் கற்கச் செய்யவேண்டும் என்று சளைக்காமல் சொல்லி இஸ்ரேலை உதாரணம் காட்டுவார்கள்.

    வனூனுவை விடுதலை செய்யப்பட்ட அன்று NPRன் Dick Gordon இன் Talk of the Nation ஷோவில் செவ்வி கண்டு ஒலிபரப்பினார்கள். California வை விட்டு நீங்கி இப்போது தெற்கு பிரதேசமொன்றில் வசிப்பதின் இன்னொரு இழப்பு Pacifica Radio வில் Amy Goodman இன் 'Democracy Now' ஐ வேலைக்குப் போகும் வழியில் கேட்கமுடியாதது.

    ReplyDelete
  4. ரமணீ, நான் அப்படி எழுதியதன் காரணம், ஹிட்லர் ஜெயித்திருந்தால் இதே பார்ப்பனியம் இன்றைக்கு அது ஆங்கில பிரித்தாளும் சூழ்ச்சி என்று குற்றம் சொல்கிற இந்தோ-ஐரோப்பிய தொடுப்புகளைத் துடைத்துப்போட்டுக்கொண்டு தமிழர்களோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று போய்ச்சேர்ந்திருக்கும்.

    ஆனால் அப்புறம் உலகத்தை மீட்க சோவியத்யூனியன் கொடுத்தவிலையெல்லாம் போதியிருக்காது.
    மற்றபடி யூத அழிவைப் பார்ப்பதும், இன்றைய இஸ்ரேலைப் பார்ப்பதுவும் மிக இயல்பாய் பார்க்கும் எவருக்கும் புரியக்கூடியதே.

    ReplyDelete
  5. அப்புறம் விட்டுப்போனது,

    அருமையான பதிவு. அதற்கு என் நன்றிகள்.

    //வேறு எதனைத் தங்கமணியும் ரோஸாவசந்தும் எதிர்பார்க்கின்றார்கள்?//

    ஐயோ, நான் டோண்டுவிடமிருந்து எதிர்பார்ப்பது இன்னும் இன்னும் அவர் நிறைய பேச வேண்டும் என்பதைத்தான் ரமணி. ஏனெனில் அந்த மாதிரி நட்சத்திரம் சொருகும் டோண்டு மாதிரி சிந்திப்பவர்கள் எப்படி தங்கள் வெறுப்பையெல்லாம் கொட்டுவது என்று அறியாமல் துயறுருகிறர்கள். அவர்களது அதி உச்சமான புத்திசாலி (நியாயங்கள்) விவாதம் கூட எவ்வளவு நேர்மையாகவும் (?), கூர்மையாகவும் (?) இருக்கமுடியும் என்று தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்துகொள்ளுதல் அவர்கள் உட்பட அனைவருக்கும் நல்லதுதானே!

    ReplyDelete
  6. தேவையான நேரத்தில் வந்த நல்ல பதிவு பெயரிலி: டோண்டுவின் "வாதங்களில்" பொறுமையிழக்கச்செய்வது, ஏதோ அடிதடி வீடியோ கேம் விளையாட்டு விளையாண்டமாதிரி, நீங்கள் சொல்வதுபோல "We kicked the shit out of them" ரீதியிலான பார்வையும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதும்!! Even ignorant brains can be taught, inert brains can never be taught anything என்பதுதான் பொதுவான உண்மை. "நீதான் அது, நீங்கள்தான் அது" என்பார்கள் உடனே!! எது உண்மையென்று பார்ப்பவர்களுக்குத் தெரியாதா என்ன?

    ReplyDelete
  7. //இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்ட, யூதர்களிலும் எந்தவிதத்திலே அவர்கள் வந்த இடம் குறித்த பாகுபாடு நிலவுகின்றது என்பதை இஸ்ரவேலின் நடைமுறைவரலாற்றினைக் காண்கின்றவர்கள் உணரலாம். //


    கேரளாவில் இருந்த யூதர்கள் கூட இஸ்ரேலால் யூதர்களாக அங்கீகரிக்கப்படவில்லையோ அல்லது மிகுந்த விசாரணைக்குப் பின், காலம் தாழ்த்தி அங்கீகரிக்கப்பட்டார்களோ, சரியாக நினைவில் இல்லை. இதுவும் கூட நான் ரோசாவின் பதிவில் எழுதிய ஒப்புமையை நியாயப்படுத்துகிறது.

    ReplyDelete
  8. ரமணி - மிக அற்புதமான பதிவுக்கு நன்றி. நான்கூட டோண்டுவின் பதிவில் எழுதிவிட்டு யூதர்களின் பிரச்சார அபத்தங்களை என் பதிவில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்காட்டி எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். வேறு வேலைகளில் கவனம் திரும்பிவிட்டது. ஆனால், என்னால் இவ்வளவு துல்லியமாகச் சொல்லியிருக்க முடியாது. நன்றிகள்.

    என்னைப் பொருத்தவரையில் அவரால் தூண்டியெழுப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவது அநாவசியம். இந்தியாவின் நம்பர் 1 Spin Doctor சோவை 100% நம்பியிருக்கும் அவரிடம் நீங்கள் சொன்னதைப் போல வேறெதை எதிர்பார்க்கமுடியும். உலகின் பிற நாடுகளிலும் இப்படித் திறமையான ஸ்பின் டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாம் நேர்மையாக, 'சரடு சுற்றுபவன் நான்' என்று அறிவித்துக் கொள்கிறார்கள். நம்முடைய அறியாமை முதல்தர புல்லுருவியை உன்னத பத்திரிக்கையாளராக வழிபடுவது. இவர்களிடம் கேட்டால் சோ கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் இடையில் ரஜினிகாந்தையும் அண்டிப்பிழைப்பதைக் கூட புத்திசாலித்தனம் என்று சொல்வார்கள்.

    டோண்டுவின் வெற்றியே வஸந்தைத் திட்டவைத்ததும் தங்கமணியைக் ஹிட்லர் பரவாயில்லை என்று சொல்லவைத்ததும். மேற்கொண்டு வெற்றிகள் தராமல் இருக்க அவரது இஸ்ரேல் பதிவுகளைப் புறக்கணிப்பது அவசியம் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  9. //டோண்டுவின் வெற்றியே வஸந்தைத் திட்டவைத்ததும் தங்கமணியைக் ஹிட்லர் பரவாயில்லை என்று சொல்லவைத்ததும். மேற்கொண்டு வெற்றிகள் தராமல் இருக்க அவரது இஸ்ரேல் பதிவுகளைப் புறக்கணிப்பது அவசியம் என்று நம்புகிறேன்..//

    ஒப்புகொள்கிறேன்! சுட்டியதற்கு நன்றி!

    // இஸ்ரேலிருந்து, 1967 இலே அல்ல, ஆனால், 1948 இலே விரட்டப்பட்டு, இன்னமும் அகதி முகாமிலே வாழும் ஒரு பாலஸ்தீனியக்கிழவி தனது அந்தக்காலவீட்டின் திறப்புக்கோர்வையினைச் செவ்வி காண்கின்றவருக்கு எடுத்துக்காட்டும் காட்சியை டில்லியிலே இருந்து கொண்டு சென்னையிலே தான் வாழ்ந்த - எந்த நேரமும் தான் வாழ வழியுள்ள- தன் வீடு குறித்து கனவினைத் தொடர்ந்து கண்ட டோண்டு பார்த்தால், புரிந்து கொள்ளமுடியுமென்று நம்புகிறேன்.//

    புரிந்துகொள்ள முடியுமென்று நம்பவில்லை. அதுதான் நான் 'திட்டுவதன்' காரணம்!

    ReplyDelete
  10. பெயரிலி அய்யா, ஒரு வேண்டுகோள். முடிந்தால் உங்கள் எழுத்துருவை கொஞ்சம் பெரிதாக்குவீர்களா அல்லது மாற்றுவீர்களா? இந்த வயதான காலத்தில் ;) கண்களுக்கு மிகுந்த சிரமமாக இருப்பதால், உங்களது பல பதிவுகளை படிக்காமலேயே விட்டு விட்டேன். இந்தப் பதிவுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு, என் உலவியின் எழுத்துருவை அதிகரித்து, படித்துப் பார்த்ததில் உங்கள் அருமையான கருத்துக்களை அறிய முடிந்தது. மிகவும் நன்றி.

    இந்த சர்ச்சை குறித்த உண்மையான நிலையை அறிய விரும்புவோர் இந்தத் தளத்தை நாடலாம். இது இருதரப்பிலுமுள்ள அமைதி விரும்பிகளால் நடத்தப் படும், எனவே அரசியல் குறுக்கீடுகளும் பிரச்சாரங்களும் இல்லாத நடுநிலையான ஒரு தளமாகும். நன்றி.

    ReplyDelete
  11. பதிவுக்கு நன்றி ரமணி

    ReplyDelete
  12. அருமையான பதிவு.

    டோண்டு ராகவனின் பதிவு ஆழமில்லாத வெறும் புகழ்ச்சி பிரச்சாரமாகத்தான் தெரிந்தது. உங்களின் பதிவிலே எதார்த்தமும் அழுத்தமும் நன்றாக உள்ளது. இஸ்ரேலைப் பற்றிய ஒரு முழு வரலாறும் தெரிவது எல்லோருக்கும் நல்லதே. முடிந்தால் நான் எழுதிக் கொண்டிருக்கும் அமேரிக்க அரசியலும் முஸ்லீம்களும் முடிந்த பிறகு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

    இஸ்ரேலியர்கள் ஒருகாலத்தில் ஒடுக்கப் பட்டவர்களாக இருந்தார்கள் என்பதற்க்காக தற்போது ஆட்சி இருக்கிறதென்று இன்னொரு கூட்டத்தை அழிப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் நாளை பாலஸ்தீனர்களின் கை ஓங்கும்போது அவர்களும் இதே விதியை கையாளத் தொடங்கலாம். பிறகு முடிவுதான் எப்போது?

    அக்பர் பாட்சா

    ReplyDelete
  13. "ஹிட்லருக்கும் ஆதரவு. அவனால் கொல்லப்பட்ட யூத சமூகத்துக்கும் ஆதரவு என்றார். உன்னிப்பாக பார்த்தால், எங்கெங்கு அதிகாரம் நிரம்பிக் கிடக்கிறதோ, அங்கெல்லாம் பார்ப்பனியம் அடி வருடிக் கொண்டிருக்கும். ஜெயிக்கிற கட்சியாக தேர்ந்து லாவகமாக அடி வருடும் பாதந்தாங்கிகள் பெரும்பான்மை பெற்ற சமூகம் அது. ஹிட்லர் உச்சத்தில் இருந்தால் அவனுக்கு ஜால்ரா. யூதர்கள் ஜெயித்தால் அவர்களுக்கு ஜால்ரா."
    யாரைக் கூறுகிறீர்கள் ரோஸா அவர்களே? ஹிட்லர் ஒழிந்தான் என்று சந்தோஷப்பட்டுக் கொண்ட நான் கூறவில்லை. ஹிட்லரை ஆதரித்தது சுபாஷ் போஸ் கூடத்தான். மற்ற சாதியினரும்தான். ஆங்கிலேயருக்கு விரோதியான அவனை எதிரியின் எதிரி நண்பன் என்ற முறையில் பல சாதியினர் ஆதரித்திருக்கிறார்கள். ம்யூஸ் இதை எடுத்துக் காட்டியதற்கு நீங்கள் எனக் கூறினீர்கள்?
    "உண்மைதான்! ஆனால் நான் சொல்ல விரும்பியது வேறு!"
    வேறு என்னக் கூற விரும்பினீர்கள் ரோஸா அவர்களே? இங்குதான் கூறுங்களேன். ஆளும் கட்சிக்கு ஆதரவு தருவது வேறு கூட்டம். 1967 வரை கண்ணீர்துளிகள் என்றுப் பழித்து விட்டுப் பிறகு தன் ஆதரவை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் ஸ்பெஷலிஸ்டுகள் எதிரில் பார்ப்பனர்கள் ஜுஜுபிதான்.
    நீங்கள் இடசாரி சிந்தனை உடையவர் என்று நினைக்கிறேன். சோவியத் யூனியன் அக்காலத்தில் இஸ்ரேல் உருவாக முக்கியக் காரணம். அமெரிக்காவிடம் கூட ஒரு ஓட்டுதான். அதன் சீடன் பிரிட்டன் கூட நடுநிலைமை வகித்தது. ஆனால் சோவியத் யூனியன் இட்ட ஆணயில் அதன் சீட தேசங்கள் இஸ்ரேலுக்கு வாக்களித்து அதை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தனர். அதற்கெல்லாம் பின்னூட்டமிடாது எழுதியவரைத் தாக்குவது என்ன நியாயம்?
    இங்காவது அவற்றுக்கெல்லாம் பதில் கொடுங்கள், உங்கள் வசம் இருந்தால். நான் எழுதிய நிகழ்வுகளில் ஏதேனும் தவறு இருந்தால் அதைப் பற்றி எழுதுங்கள். இந்தியா அரபு தேசங்களிடம் பெற்ற அவமானங்களைப் பட்டியலிட்டுள்ளேன். அவற்றைப் பற்றிக் கூறுங்கள். பந்தை எதிர் கொள்ளுங்கள். பந்தாடுபவனைத் தாக்காதீர்கள்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. Dear Peyarili,
    Thanks for your valuable post.

    ReplyDelete
  15. //யாரைக் கூறுகிறீர்கள் ரோஸா அவர்களே//

    நான் உங்களிடம் எதையுமே சொல்லவில்லை டோண்டு அவர்களே! ஆமாம், உங்கள் தர்க்க திறமை, எதிராளியின் தர்கத்தை எதிர்கொள்ளும் நேர்மை, உண்மையை ஆதரபூர்வமாக உரைக்கும் பாங்கு, சரித்திரம் தொடங்கி என் பின்னூட்டம் வரை சொன்னதை சரியாய் புரிந்துகொள்ளும் புத்தி கூர்மை இன்னும் உங்களின் பல பல சிறப்பம்சங்களை எல்லாம் பார்த்து பயமாய் இருக்கிறது. நீங்கள் விஸ்வருபம் எடுக்க நேர்ந்தால் என்னாகும் என்று நினைக்கையிலேயே நடுங்குகிறது. எனக்கு பின் வாங்குவதை தவிர வேறு வழியில்லை. போதுமா!

    பெயரிலி. ஒரு சின்ன சந்தேகம். அதற்கே வந்தேன்.

    //நோம் ஸோம்ஸ்கி, ஸுஸன் ஸொடன்பேர்க், ...//

    ஸூCஅன் சொண்டக்கை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    நோம் சாம்ஸ்க்கி யூதரா? இது எனக்கு புதிய தகவலாய் இருக்கிறது. ஏனெனில் இணையத்தில் சாம்ஸ்கியை ஒரு anti semitic பேர்வழி என்று குற்றம் சாட்டும் (obviously some zionist propaganda articles) சில கட்டுரைகளை இணையத்தில் படித்துள்ளேன். என்னதான் புளுகு பிரச்சாரமாய் இருந்தாலும் ஒரு யூதரையே இப்படி சொல்லுவார்களா என்று சந்தேகம் அதனால் கேட்கிறேன். நன்றாய் தெரியுமா?

    ReplyDelete
  16. நல்லதொரு அலசல்.நன்றி பெயரிலி.தூங்கப்போன தூங்கி தட்டி நிமிர்த்திக்கொண்டு எழும்பியிருக்குது போலை

    ReplyDelete
  17. ரமணி பதிவுக்கு நன்றி. வசந்த், ஆம் சோம்ஸ்கி பிறப்பால் யூதரே. சோம்ஸ்கியின் அம்மாவும், அப்பாவும் ஹீப்ரூ அறிஞர்கள். ஆரம்பகாலத்தில் அவருக்கும் ஜியானிசத்தின் பால் ஈர்ப்பு இருந்திருக்கிறது.(என்று விக்கிப்பீடியா சொல்கிறது).
    சுந்தரமூர்த்தி: ஹீப்ருவை மீண்டும் வழக்கத்தில் வந்ததைப் பற்றி சிலசமயம் பார்க்கும்பொழ்து நினைத்துக்கொள்வேன், "நல்ல வேளை. ஹீப்ரூ இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தில் வராமல் செமித்திய மொழிக்குடும்பத்தில் வந்தது. இல்லையென்றால் இந்த சமஸ்கிருத ஒப்பீட்டாளர்கள் எப்படிக் குதிப்பார்கள்" என்று :-)

    ReplyDelete
  18. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    ரோஸா வசந்த்: நீங்கள் சொன்னது சரிதான். ஸூஸன் ஸொண்டாக்கினைத்தான் சொல்ல வந்தேன். நோம் ஸோம்ஸ்கி யூதர்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், C-Span செவ்வியொன்றிலே தன்னுடைய தந்தை எப்படியான பழமைவாத, ஆனால், ஸியோனியத்துக்கு எதிரான யூதர் என்பதைப் பற்றி விபரமாகச் சொல்லியிருந்தார். அவரையும் இஸ்ரேலுக்கு, அதன் பலஸ்தீனியர் தொடர்பான கொள்கை குறித்துப் போகமாட்டேன் என்றிருக்கும், விமர்சிக்கும் யூதர்களையும் மற்றவர்கள் self-hating Jews என்று விமர்சிப்பது நிகழவே செய்கின்றது. நோம் ஸோம்ஸ்கி ஒரு முறை மிக விபரமாக வெஸ்ட்பாங், காஸா யூதக்குடியேற்றங்களினிடையே துண்டாடப்பட்ட பலஸ்தீனியவாழிடங்களையும் அவற்றினை விலக்கிக்கொள்ளுவதைக் கருத்தளவிலே ஒப்புக்கொண்ட ஒஸ்லோ ஒப்பந்தத்தையும் நிறவாத தென்னாபிரிக்காவின் batustans உடன் ஒப்பிட்டு வாங்கிக்கட்டிக்கொண்டார்.

    தங்கமணி: ஹிட்லர் குறித்து நீங்கள் ஏன் அப்படியான கருத்தினைச் சொன்னீர்கள் என்பதை நிச்சயமாக அறிவேன். அதைக் குறிப்பிட்டிருந்தேன். ஈராண்டுகளுக்கு முன்னால், எதியோப்பியாவினைப் பிறப்பிடமாகக் கொண்டு 80 களின் பஞ்சத்தின்போது தனி விமானத்திலே இஸ்ரேலுக்கு ஏற்றி வரப்பட்ட யூதர்களின் வழியிலே வந்த ஒருவர், எப்படியாக கறுப்பு யூதர்களின் நிலை இருக்கின்றது என்பது குறித்து பிபிஸியிலே சொல்லியிருந்தார்.

    சுந்தரமூர்த்தி: அமி குட்மனின் நிகழ்ச்சியினை (சுவடி உட்பட), ஒலிக்கோப்பாக pacifica.org இலும் ஒளியக்கோப்பாக, democracy now இலும் பெறலாம்.

    மாண்ட்ரீஸர், வெங்கட்: டோண்டு அவர்கள் தூண்ட எழுதினாரோ அல்லது இயல்பாகவே தூண்டப்ப்பட்டு எழுதினாரோ தெரியவில்லை; ஆனால், தங்கமணியின் ஹிட்லர் குறித்த கருத்துக்கு எழுதப்போய் நீண்டு விட்டது பதில்.

    டோண்டு: ஐயா, உங்கள் நிலைப்பாடு என்பது ஒரு விடயம்; ஆனால், நீங்கள் விபரிப்பது, "அடிப்பவன் பலவான்; வெல்பவன் வாழ்வான்" என்கிற தன்மையுள்ள நெறியின்பாற்பட்டதாலும் ஆக இஸ்ரேலினையும் யூதர்களையும் அப்பழுக்கற்றவர்களாகவும் பாதிக்கப்பட்டவர்களாகவுமே விபரிக்கும் தன்மையிலான பதிவென்பதாலே, இப்படியாகத்தான் எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது. நீங்கள் இஸ்ரேல் தோன்றிய வரலாற்றினை மிகவும் ஒரு தலைப்பட்சமாக எழுதியிருக்கின்றீர்கள். திடீரென 1948 இலே ஒரே நாளிலே தோன்றியதல்ல இஸ்ரேல்; 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகளிலே "புறப்பட்ட தேசத்துக்குத் திரும்புங்கள்" என்ற விளம்பரங்களோடு ஊக்கிவிடப்பட்டு, திட்டமிட்ட குடியேற்றங்களாகத் தொடங்கியது. திரும்புவதற்கான நிதி எவ்வாறு பெறப்பட்டது சேகரிக்கப்பட்டதென்பதெல்லாம் வரலாற்றினை விபரமாக வாசிக்கும்போது தெரியும். 2003 இலே, இஸ்ரேல் உருவாகும் காலத்தினை மையமாக வைத்து அன்றைய பலஸ்தீனத்திலே ஒரு புதினம் ஒன்றும் எழுதப்பட்டது. நீங்கள் குண்டு வெடிப்பதினை இஸ்ரேல் செய்யவில்லை என்று சொல்கின்றீர்கள்; இஸ்ரேல் வரலாற்றினைப் பார்த்தீர்களானால், எங்கே முதலிலே ஆயுதம் தொடங்கியதூ என்று அறிவீர்கள்.

    ReplyDelete
  19. சுந்தரமூர்த்தி & மெய்யப்பன்: ஹிப்ருவினைக்கூட மீண்டும் தூசுதட்டித் தோண்டி எடுத்ததாகத்தான் ஓர் அபிப்பிராயம் இருக்கின்றது. பொதுவாகவே, இயிட்டிஸ் மொழியினைத்தான் கிழக்கு ஐரோப்பாவிலே கூட்டமாக வாழ்ந்த மக்கள் பேசுமொழியாகப் பயன்படுத்தினாலும், இஸ்ரேலின் உருவாக்கத்தோடு ஹிப்ருவிற்கும் மீள் உயிர்ப்படுத்துதல் செய்யப்பட்டிருக்கிறது. மாஸாஸூஸெட்ஸ்பல்கலைக்கழகம்-அம்ஹரெஸ்ட்டில் உள்ள ஒரு பேராசிரியர், அழிந்துபோகும் யூத நூல்களைச் சேகரித்து வைக்க ஒரு நிலையம் (சரஸ்வதி மஹால் - தமிழ்நூல்கள் என்பதுபோலக் கொள்ளலாமென்றாலுங்கூட, இதன் விரிவும் பொருட்பலமும் பெரிது] அமைத்திருக்கின்றார். இதிலே யூத நூல்களைத் தான் சேகரிக்கும் போது, பெற்ற அனுபவங்களைப் பற்றி சில மாதங்களுக்கு முன்னால், NPR வானொலியிலே ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியிலே பேசினார். அதிலே, இந்த ஹிப்ரூ-யிட்டிஸ், மதமொழி-மக்கள்மொழி குறித்த நிலையைப் புரிந்துகொள்ளக்கூடியதாக் இருந்தது. பொதுவிலே, 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே, இஸ்ரேல் சக்தியாக உருவாகும்வரைக்கும் யூதர்கள் யிட்டிஸினைத்தான் பயன்படுத்தியிருக்கின்றார்கள்; பால்விக் ஸிங்கரின் கதைகளைப் பாருங்கள்; இது புரியும். இஸ்ரேல் என்கிற தேசத்துக்கான அடையாளமாக, பழையதினைப் பொருத்திக்கொண்டு இஸ்ரேலிய யூதர்களுக்கு ஓர் அடையாளத்தையும் பலஸ்தீனத்திலே பழைய தொடர்பினை ஏற்படுத்திக் காட்டவும் இந்த மொழித்தேடலும் மீள்பயன்பாடும் அவசியமாகியிருக்கின்றது.

    ReplyDelete
  20. இன்னும் கொஞ்சம் பொருத்திருந்து பாருங்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - ஏ ஸியானிஸ்ட்டாக்கும் என்றெல்லாம் ஆதாரங்கள் வரப்போகின்றன. அதற்கு ரோசா பாஷையில் சொன்னால் எங்கே முட்டிக்கொள்வது என்று இப்பொழுதே சுவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  21. பெயரிலி,
    நிறைய உண்மைகளுடன் எழுதப்பட்ட நல்லதொரு பதிவு. நன்றி.
    நண்பர்கள் எழுதும் பின்னூட்டங்களின் மூலமும் எத்தனையோ விசயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. இதையெல்லாம் ஒரு புத்தகத்தில் வாசித்தறிவது என்றால் எவ்வளவு காலம் எடுக்கும். அந்த வகையில் அனைவருக்கும் நன்றி. நேரங்கிடைக்கும்போது நண்பர்கள் எல்லோரும் நீங்கள் (இந்த விசயத்தை மட்டுமல்லாது) அறிந்தவைகளை எழுதுங்களப்பா. ஓடிவந்து வாசிக்க என்னைப்போன்ற கத்துக்குட்டிகள் ஆர்வத்துடன் என்றைக்கும் இருக்கின்றோம். சரியா?

    ReplyDelete
  22. அருள்: ஐயன்ஸ்டைன் முதலாவது இஸ்ரேலிய ஐனாதிபதியாக இருக்கக்கேட்டுக்கொள்ளப்பட்டும் மறுத்துவிட்டதாக வாசித்திருக்கின்றேன். இந்தத்தகவலின் மெய்-பொய் தெரியாது. ஆனால், வரலாற்றினைத் திரிபு செய்வதிலே எதுவுமே சாத்தியந்தான்.

    உங்கள் கேலிச்சித்திரம் நன்றாக இருந்தது ;-)

    சிறகின் குரலே ;-), எழுத்துருவின் அளவினை வார்ப்பிலே மாற்றியும் பதிவின் தோற்றத்திலே மாற்றமேதும் ஏற்படவில்லை :-( பிரகாஷ் மிகப்பெரிது என்றார்; நீங்கள் மிகச்சிறிது என்கிறீர்கள். சராசரியாக, சரியான அளவிலே இருக்கும்போல இருக்கின்றதே ;-) உங்கள் மத்தியகிழக்குச்சுட்டிக்கு நன்றி.

    அக்பார் பாட்ஷா: எனது ஸாம்பியநண்பர் ஒருவர் ஒரு முறை கொஞ்சம் நகைச்சுவையாகவும் கொஞ்சம் தீவிரமாகவும் "இஸ்ரேலியர்கள் ஒருகாலத்தில் ஒடுக்கப் பட்டவர்களாக இருந்தார்கள் என்பதற்காக தற்போது ஆட்சி இருக்கிறதென்று இன்னொரு கூட்டத்தை அழிப்பது" என்பதற்கு ஒரு விளக்கம் தந்தார்; "Child victoms are growing into Adult victomizers."

    ReplyDelete
  23. //அமி குட்மனின் நிகழ்ச்சியினை (சுவடி உட்பட), ஒலிக்கோப்பாக pacifica.org இலும் ஒளியக்கோப்பாக, democracy now இலும் பெறலாம்.//

    ரமணீ,
    இந்த இயந்திர வாழ்க்கையில் இயந்திர வாகனத்தில் பயணம் செய்யும்போது மட்டுமே ரேடியோ கேட்க அவகாசம் கிடைக்கும். அந்த வகையில் இப்போது BBC, NPR உடன் திருப்தியடைய வேண்டியது தான். ஏதாவது முக்கியமான உலக நிகழ்வுகளின் போது நீங்கள் குறிப்பிட்ட தளங்களுக்கு சென்று மேலோட்டமாகப் பார்ப்பதுண்டு. ஈராக் ஆக்ரமிப்பின் முதல் சில நாட்களில், இராணுவத்துடன் பதிக்கப்படாத (non-embedded) செய்தியாளர்கள் மூலம் செய்திகளைப் பெற்று ஒலிபரப்பியது எனக்கு தெரிந்தவரையில் 'Democracy Now' இல் மட்டும்தான்.

    குட்மனின் நிகழ்ச்சியில் ஒரே நெருடல் இலங்கை இனப்பிரச்சினையைப் பற்றி ஒரு முறைகூட (நான் கேட்ட காலத்தில்) விரிவான செய்திகளோ, விவாதங்களோ இல்லாதது தான்.

    ReplyDelete
  24. பெயரிலி, மெய்யப்பன் பதிலுக்கு நன்றி!

    //arul கருத்து: இன்னும் கொஞ்சம் பொருத்திருந்து பாருங்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - ஏ ஸியானிஸ்ட்டாக்கும் என்றெல்லாம் ஆதாரங்கள் வரப்போகின்றன. //

    ஐன்ஸ்டைனை ஸியோனிஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தக் கூடும். ஆனால் யூதராய் பிறந்த நோம் சாம்ஸ்கியை ஆண்டி ஸெமிடிக் (self hating அல்ல) என்றால் முட்டிகொள்ள மட்டும் முடியுமா? இரண்டு வருடம் முன்னால் படித்த கட்டுரை.மேலோட்டமாய் தேடினேன், கிடைக்கவில்லை. சாம்ஸ்க்கி அமேரிக்காவில் ஒரு முகத்தையும், பிரான்ஸில் எப்படி யூத வெறுப்பாளர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று போகும். கட்டுரையே சாம்ஸ்கியின் கட்டுரையின் சொல்லாடல்கள், சில 'தகவல்'களை வைத்து அவரை ஆண்டி ஸெமிடிக் என்று 'நிறுவும் விதமாய்' அமைந்திருக்கும். கட்டுரை எழுத புகுந்தால் எதுவெல்லாம் சாத்தியம் என்று நினைக்க மலைப்பாய் இருக்கிறது.

    ReplyDelete
  25. சுந்தரமூர்த்தி: நீங்கள் சொல்வது மெய்யே. இலங்கை குறித்து அமி குட்மெனின் நிகழ்ச்சியிலே மட்டுமல்ல, பொதுவாகவே அமெரிக்காவின் அதிதீவிர இடதுசாரிகளின் / வலதுசாரிகளின் நிகழ்ச்சிகளிலே பேசப்படுவது இல்லை. அவர்களின் உணர்தியிலே அதன் செய்திகள் முக்கியம் வாய்ந்தவை அல்ல; அமெரிக்காவுக்கு நேரடியாக இலங்கையிலே ஏதும் ஈடுபாடு இல்லாதது காரணமெனலாம். இது குறித்து, Znet முதற்கொண்டு Laura Flanders' Your Call Radio வரை எழுதியிருக்கின்றேன். பதிலேதுமில்லை :-) ஆனால், அமி குட்மென், அண்மையிலே ஊழியலையின் பின்னாலே, இலங்கையின் ஐநா தூதுவரை சிங்கள-தமிழ் பேசும் பகுதிகளிடையே நிதி, நிவாரணம் குறித்து ஒரு பிடி பிடித்தார்.

    இந்நிகழ்ச்சிகளைக் கேட்கக் கிடைக்கும் நேரம் குறித்து நீங்கள் சொல்வதை உணர்கிறேன். கணினியோடு குந்திக்கொள்கிற நேரத்திலே கிடைப்பதை வைத்து, சுவடியிலே போய் பிடித்தவற்றைப் பிடித்துக்கொள்வதுதான் இப்போதைக்கானது.

    ரோஸாவசந்த்: நீங்கள் சொல்லும் ஸோம்ஸ்கியின் பிரெஞ்சிய-அமெரிக்க முகங்கள் குறித்த செய்தி, அவர் அல்வ்ஸ்விட்ஸ் கொலைகள் நடக்கவில்லை என்று சொன்ன ஒருவருக்காக நோம் ஸ்சோம்ஸ்கி வாதாடினார் என்பது குறித்து எழுந்த நிகழ்வு குறித்ததா? அதிலே, ஸோம்ஸ்கி சொன்னது, "அந்தப்பேர்வழி சொன்னதை நான் ஏற்கவில்லை; ஆனால், அதைச் சொல்ல அவருக்கு இருக்கும் சுதந்திரத்துக்காகப் பேசுகிறேன்" என்ற வோல்ட்டயரின் கூற்றை ஒத்தது என்று வாசித்தேன். ஆனால், ஸோம்ஸ்கியின் கூட்டங்கள் சிலவற்றின் நேரடி ஒலிப்பதிவுகளையும் ஒளிப்பதிவுகளையும் கேட்கும்/பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருத்திருக்கின்றன. அவற்றிலே பார்வையாளர்கள் சிலர், அவரைத் தாறுமாறாக இஸ்ரேலுக்கும் யூதருக்கும் எதிரானவர் என்பது தொடக்கம் அவர் சரியான பாட்டாளிவர்க்கப்போராளி இல்லை என்பது வரையாக திட்டுவதைக் கேட்கக்கூடியதாக இருந்தது. வேண்டுமானால், அடர்தகடுகளைக் கிண்டிப்பார்க்கிறேன். mp3 ஆக அவரின் சில சொற்பொழிவுகளைப் பதிந்து வைத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  26. நல்ல பதிவிற்கு நன்றி பெயரிலி. power and terror என்ற பெயரில் வெளிவந்த நோம் சாம்ஸிகியின் நேர்முகத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்த அரசாங்க ரீதியான தீவிரவாதத்தைப் பட்டியல் இட்டிருப்பார். அதன் தோரனை 9/11 எல்லாம் ஜுஜுஜிபி இந்த அரசாங்கங்களின் வன்முறை முன்னால் என்ற ரீதியில் இருக்கும். லெபனாலில் செய்த அட்டூழியங்களை இவர் விவரிக்கும் போது பகீரென்று இருக்கும். வல்லானுக்கான உலகம் என்று கேட்கும் போதெல்லாம் எவ்வளவு சீக்கிரம் இந்த நீயுகிலியர் அணுகுண்டுத் தொழில் நுட்பம் மூலை முட்டெல்லாம் பரவ வேண்டும் என மனது விழையும். ஒவ்வொருத்தனிடமும் இந்த உலகை பஸ்மமாக்கிடும் சக்தி இருந்தால் வல்லான் இல்லான் என எவனும் வாய் திறக்க முடியாததல்லவா?

    ReplyDelete
  27. பெயரிலி, நீங்கள் சொல்வது அல்ல. நேரடியாக தர்க்க பூர்வமாக சாம்ஸ்கியை anti semitic என்று 'நிறுவ' முயலும் கட்டுரை.கூகிளில் சாம்ஸ்கி anti semitic என்று தேடி பார்தேன். முதல் பக்கத்திலேயே இது போன்ற கட்டுரைகள் வருகின்றன. ஆனால் நான் குறிப்பிட்ட கட்டுரை கிடைக்கவில்லை. அது இன்னும் ஆழமாய் 'நிறுவ' முயல்வது. அமேரிக்காவில் யூதர் ஒருவர் மேயரானது குறித்த சாம்ஸ்கியின் அறிக்கையை முன்வைத்து தொடங்கும். கிடைத்தால் சொல்கிறேன். (நான் படித்து இரண்டு அல்ல, மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.)

    ReplyDelete
  28. “Voice on Wings” சொன்னது போல உங்கள் பக்கத்தைப் படிக்கக் கொஞ்சம் கடினமாக உள்ளது. அதனாலேயே இவ்வளவு அருமையாக எழுதியுள்ள உங்கள் பதிவைப் படிக்காமல் ஒத்தி வைத்திருந்தேன்.

    தங்கமணி எழுதியதைப் படித்தபொழுது எனக்கு பழைய நினைவுகள் வந்தன. நான் அமெரிக்காவில் வாழ்ந்த பதின்மூன்று வருட வாழ்க்கையில் ஏழு வருடங்களுக்கும் மேலாக இரண்டு யூதர்களிடம் வேலை பார்க்க வேண்டிய சூழல். என் வாழ்க்கையிலேயே அவர்கள் போல கீழே பணி செய்பவர்களின் உழைப்பை ஈவிரக்கம் இல்லாமல் சுரண்டும் மனிதர்களை, பொய்யைத் தவிர வேறெதும் பேசாதவர்களைப் பார்த்ததில்லை.

    அதில் முதலாமவர் தான் செய்வதை ஒளிவு மறைவின்றி செய்பவர், எந்தப் பாகுபாடின்றி எல்லாரிடமும் (யூதர்கள் உள்பட) அப்படியே நடந்து கொள்வார், அதனால் நகைச்சுவையாக அவரை சோஸலிஸ்ட் என்போம். இரண்டாமவரோ ஐரோப்பியருக்கும், மற்ற யூதர்களுக்கும் ஒரு வகை, மற்றவர்களுக்கு வேறு வகை என நடத்துவார். இவர் மருத்துவத்துறை என்பதால் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் நிறைய பொய்யாக எழுதி மானியம் வாங்குவதில் பலே கில்லாடி.

    முதலாமவர் எல்லோரையும் மிக மோசமாக நடத்தியதால் நாங்கள் அனைவரும் (17 பேர்) வெவ்வேறு நாட்டையும், மொழியையும் சேர்ந்தவர் என்றாலும் மிக ஒற்றுமையாக கூடி புலம்புவதும், வைவதும், அவரில்லாத நாட்களில் கொண்டாடுவதுமுண்டு. ஆனால் அவருடைய யூத இனத்தைப் பற்றி யாரும் வெளிப்படையாக இணைத்துப் பேசியது கிடையாது. Schindler's List வெளிவந்த அன்று நாங்கள் அனைவரும் படம் பார்த்து விட்டு உணவகம் சென்று உணவருந்தினோம். அப்பொழுது ஒரு அமெரிக்க நண்பர் நகைச்சுவையாகச் சொன்னது, "இப்பொழுது நான் புரிந்து கொண்டேன், நம்முடைய துயரங்களுக்கெல்லாம் காரணம் யாரென்று (Schindler)". அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் பொத்துக்கொண்டது போல அனைவரும் யூதர்களை திட்ட ஆரம்பித்து விட்டனர்.

    1983 ஈழப்படுகொலைக்குப் பின் எங்கள் ஊர்ப்பக்கம் வந்த தமிழ் அகதிகளின் அவல நிலையைப் பார்த்த பின் இன்று வரை எந்த இனத்தின் மீதான ஒட்டு மொத்த வன்முறையையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதன்பின் தான் எனக்கு சமூகப் பிரச்சினைகளின் மேல் உண்மையான அக்கறை வந்து, மார்க்ஸியத்தை அறிந்து கொள்ளும் நாட்டமே வந்தது. ஆனால் அன்று ஒரு இனப் படுகொலையைப் பற்றிய முழுநீளப் படத்தைப் பார்த்த பின்னும் நான் என் நண்பர்கள் கூறியதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதை இன்றளவும் நினைத்து அவமானப் படுகிறேன்.

    நான் மாத்திரமல்லாமல் எத்தனையோ நண்பர்கள் அவர்களுடைய யூத மேலாளர் பற்றிப் பேசக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் இப்படிப்பட்ட தனி நபர் அனுபவங்களைப் பொதுமைப் படுத்துதல் மிகக் கேடுகெட்ட செயல் என்பதை நான் Noam Chomskyயின் எழுத்துக்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். அவரைப் போன்ற நல்ல மனிதர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள். அவர்கள்தான் அவர்கள் இனத்தையே காக்கும் அரண்கள்!

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  29. சங்கரபாண்டி: நீங்கள் சொல்வது போன்ற தொழில் அனுபவமும் அதைத் தொடர்ந்த பாதிக்கப்பட்டோரின் கூற்றுகளைக் கேட்கும் அனுபவமும் எனக்கும் கிடைத்தது. அந்த அனுபவங்களை, அந்த இனத்தின் பண்பின் விளைவுகளாகப் பொதுமைப்படுத்திவிடுமளவுக்கு நிலை வந்தபோது, இஸ்ரேலின் நிலைப்பாட்டினை எதிர்க்கும் யூதர்களே நினைவுக்கு வந்தார்கள். சில வேளைகளிலே, இந்தச் சுயநலம் என்பது காலகாலமாகப் பாதிக்கப்பட்டதின் விளைவான தன்னை முன்கூட்டியே பாதுகாத்துக்கொள்ளும் எச்சரிக்கை உணர்வின் வழிப்பட்டதோ என்றுங்கூட தோன்றியதுமுண்டு.

    மூர்த்தி: நன்றி.

    ReplyDelete
  30. hey you are back. thanks for the post. good one

    ReplyDelete
  31. வட அமெரிக்காவிலே இருப்பவர்கள் இன்றிரவு வாய்ப்பின், PBS-BBC இன் Frontline நிகழ்ச்சியினை PBS அலைவரிசையிலே காணவும்.
    Islael's Next War?
    இந்த விவரணம் வெளிவரும் அதே கிழமையிலே நிகழ்ந்தது, Vandals desecrate Rabin's grave

    ReplyDelete
  32. Israeli Journalist Amira Hass Reflects on Reporting Under Occupation

    Amira Hass, the only Israeli journalist living in the Occupied Territories, joins us in our firehouse studio to discuss the current withdrawal from Gaza and expansion of settlements in the West Bank, the "apartheid system" in Israel and life in the "prison" of the Occupied Territories.

    ReplyDelete