Wednesday, November 23, 2011

Tuesday, November 22, 2011

ஆறு புலி ஆட்டம்

பண்டைத்தமிழர்களின் காதைகளை இலக்கியமூடு பார்ப்போமானால், அவர்கள் எத்துணை விளையாட்டுகளிலே ஈடுபாடுகொண்டிருந்தார்களென்பது தெளிவாகும். காலத்தோடு தமிழர் எவராட்சிக்குட்பட்டிருந்தாலுங்கூட, இந்தவிளையாட்டுகளுக்குக் குறைவிருக்கவில்லையென்றே சொல்லலாம் – விளையாட்டுகள் வேறாகிப் போனாலுங்கூட. ஆடு புலி ஆட்டம் என்பது தமிழர்களால் தமிழகக்கிராமப்புறங்களிலே விளையாடப்படும் பாரம்பரியவிளையாட்டாகச் சொல்லப்படுகின்றது. இதன் ஆரம்பகாலம் எதுவென்று தெரியவில்லை. ஆனால், விளையாடத்தொடங்கினால், சளைக்காமல், சுவைகுன்றாமல் விளையாடிக்கொண்டேபோகலாமென்று தமிழக நண்பரொருவர் கூறினார்.

இதன் வழியிலே ஈடான ஒரு விளையாட்டு ஈழத்தமிழருக்கில்லையே என்ற ஆதங்கம் எனக்கு நெடுங்காலமிருந்து வந்தது; ஆனால், உலகெங்கும் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் புகுநாட்டுநல்லாட்டவிதிகளையெல்லாம் உள்வாங்கித் தம் பண்டைய ஆட்டப்பண்போடு சேர்த்துருவாக்கிய ஆறுபுலியாட்டம் என்ற விளையாட்டு இக்கவலையைப் போக்கிவிட்டது.

‘ஆறு புலி ஆட்டம்’ மிகவும் எளிமையான விளையாட்டு; ஆடுபுலியாட்டம்போல, இருவரேதான் விளையாடவேண்டுமென்பதில்லை; இவ்விளையாட்டின் சிறப்பே ஒரே நேரத்திலே எத்தனை பேர்களும் விளையாடமென்பதாகும். இதனாலேயே இணையவிளையாட்டுகளிலே தமிழர்களாலே அதிகம் விளையாடப்படுவதாகக் காணப்படுகிறது.. விதிகளென்று எதுவுமேயில்லை என்பதோ விதிகளை எந்நேரத்திலும் மாற்றலாமென்பதுவோ இவ்விளையாட்டின் ஈர்ப்புக்கொரு காரணமென்றாலும் மிகையாகாது.

ஆனால், விளையாட்டு என்று விளக்கவேண்டி வந்ததாலே, ஓரிரு விதிகளைப் பார்க்கலாம். ஈழத்தமிழரின் பண்பாட்டிலிருந்து புலி என்ற விலங்கு வன்னெதிரியின் விலங்குத்தன்மையின் அடையாளமாகச் சேர்க்கப்படுகின்றது; மிகுதிப்படிக்கு, மேற்கிலே சொல்லப்படும் ‘Six Degrees of Separation” என்ற நம்பிக்கை – “உலகிலுள்ள எந்த ஓர் ஆளையும் இன்னோர் ஆளுடன் இடையே இவருக்குத் தெரிந்த அவருக்குத் தெரிந்த உவருக்குத் தெரிந்த….. என்ற வகையிலே ஆறாட்களிடையேயான தொடர்பூடாக இணைத்துவிடலாம்”- அடிப்படையிலே இவ்வாட்டம் ஆடப்படுகின்றது. ஆனால், இங்கே ஆட்களுக்குப் பதிலாக, நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்படுகின்றன.

ஆக, நீங்கள் இருவர் விளையாடிக்கொண்டிருக்கின்றீர்களென்று வைத்துக்கொள்ளுங்கள்; “ஸ்பெயினிலே பழமைவாதக்கட்சியினர் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர்”; இதுதான் விளையாட்டின் குறியான முடிவு. இப்போது நீங்களும் உங்கள் போட்டியாளரும் செய்யவேண்டியதெல்லாம், “பட்டாம்பூச்சி செட்டையடிப்பதும் பூகம்பம் உருவாகுவதும்”போன்ற தொடர்விளைவான –அதிகபட்சம் ஆறு தொடர்புகளூடாக- இதற்கு விடுதலைப்புலிகளின் அராஜகம் காரணமாகியிருக்கின்றதென்று காட்டுவதே; நீங்கள் ஐந்து தொடர்புகளூடாகக் காட்டுகின்றபோது, உங்கள் போட்டியாளர் மூன்று தொடர்புகளூடாக விடுதலைப்புலிகளின் அராஜகமே ஸ்பெயினிலே பழமைவாதக்கட்சியினர் ஆட்சிக்கு வரக் காரணமென்று காட்டிவிட்டால் (“விடுதலைப்புலிகள் வலதுசாரிகள்-->விடுதலைப்புலிகளை அழித்த ஸ்ரீலங்காவினை ஸ்பெயினின் இடதுசாரி ஆட்சியாளர் ஐநா மனிதவுரிமைமன்றிலே ஆதரித்தார்-->அதனாலே அவர் தோன்றார்”), உங்கள் போட்டியாளர் வென்றவராகின்றார்; இடையிலே புகும் மூன்றாவது ஆட்டக்காரர், சுருக்கமாக, (“விடுதலைப்புலியினர் வலதுசாரியினர்=ஸ்பெயின் பழமைவாதக்கட்சியினர் வலதுசாரியினர்-->ஸ்பெயின் பழமைவாதக்கட்சியினர் வென்றனர்”) என்று நேரடித்தொடர்பாகவே காட்டிவிட்டால், அவரே ஆறுபுலியாட்ட வெற்றியாளர்.

இதைவிளையாடப் பெரும் பட்டறிவெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை; நீங்கள் தமிழிலே வந்த ஆடுபுலி ஆட்டம் திரைப்படத்தினையும் ஆங்கிலத்திலே வந்த “Six degrees of separation” திரைப்படத்தினையும் பார்த்திருந்தாலே போதுமானது. Six degrees of separation விளையாட்டினை அறிந்திருந்தீர்களெனில், அஃது உங்களை வெற்றியின் திக்கிலே மிகவும் வேகமாகக் குறுக்குவழியிலே கொண்டு செல்லும் தந்திரங்களைக் கற்றுத்தரும். ஆறு புலி ஆட்டத்தினைத் தேர்ந்தவராக விளையாடவெல்லாம் நீங்கள் பெரிய மாற்றுக்கருத்து இலக்கியவாதியாகவோ தத்துவவாதியாகவோவெல்லாம் மானுடநேயராகவோவெல்லாம் இருக்கவேண்டிய அவசியமில்லை; உங்களுக்கு வேண்டியதெல்லாம், விளையாடும் எதிராளி உங்களைக் கொல்ல வரும் புலி என்ற கற்பிதமும் உங்கள் ஐந்தாம் வகுப்புத்தமிழ்க்கட்டுரையிலே “புற்கள்” என்பது பற்றி எழுதியபோது, ‘புலிகள்’ என்பதைப் பற்றி எழுதியபின்னால், கடைசிவரியாக, “இப்படியான புலிகள் பசித்தபோது புற்களைப் புசித்தும் பசியாறவில்லை” என்று எழுதிய வல்லமையுமே.

இப்போது, இவ்விளையாட்டு, ஈழத்தமிழர், புலம்பெயர்தமிழர் இவர்களிலிருந்து தமிழகத்தமிழர், இந்தியர், ஸ்ரீலங்கர் எல்லோருக்குமே பிடித்த விளையாட்டாகப் பரவிக்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கத்து; பரபரப்பான பத்திரிகைகள், தாளிகைகள், தொலைக்காட்சியூடகங்களெல்லாம் விற்பனையை அதிகரிப்பதற்காக இவ்விளையாட்டினை உள்வாங்கிக்கொண்டுவருவதும் கண்கூடு; உதாரணத்துக்கு, இங்கே தினமலர் விளையாடியிருப்பதைக் காணலாம்; “புலிகள்-சீக்கிய பயங்கரவாதிகள் மூலம் சதிதிட்டம் லஷ்கர் இ ‌தொய்பா ஒப்பந்தம்-போலீஸ் உஷார்

சுவராசியமான விளையாட்டாகத் தோன்றவில்லையா? நீங்களும் பொழுதுபோகாவிட்டாலென்ன, பொழுதுபோதாவிட்டாற்கூட, இணையத்திலோ, புத்தகவெளியீடுவிமர்சக்கூட்டங்களிலோ இவ்விளையாட்டினை உங்கள் நண்பர்களுடனோ எதிரிகளுடனோ விளையாடலாமே! இதன்மூலம், நீங்கள் இலக்கியவாதியாகவோ, மானுடத்தின் நேசனாகவோகூட ஆக வாய்ப்பிருக்கின்றதென்பது கூடுதலான வரவு.

Sunday, November 13, 2011

திருடித் தீந்தை சேர்த்தவை

உடன்பிறப்பிடம் திருடித் தீந்தை சேர்த்த இலங்கைக்காட்சிகள் ;-)

Thursday, November 10, 2011

இழத்தல்

Warning: This is purely a self-serving narcissist post
நிலைத்த அணுக்களிடையேயான பிணைப்பிலும்விட, மூலக்கூறுகளிடையேயான நிலையற்ற ஐதரசன் பிணைப்பே நீருக்கான தனித்தன்மையைத் தருகின்றது; வாழ்க்கையிலும் அடிப்படையாக வாழச் சில கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் கொள்கின்ற போதிலும் சின்னத்தனமான சந்தோஷங்களே அன்றன்றைக்கு நாளை நகர்த்த உதவுகின்றது; இனிதானதாக உணந்துகொண்ட காலகட்டத்தின் எச்சங்களைப் பிடித்துக்கொண்டிருந்தல் சின்னச்சந்தோஷங்களின் ஒரு வகை; இன்னொரு வகை அடுத்தவருக்குக் குரூரமானது; அறிந்த ஒருவருக்கு இடர்வரும்போது, நாம் வருந்துகிறோம்; அதேநேரத்திலே அவ்விடர் நமக்கில்லையே என்ற ஒப்பீட்டளவின் திருப்தி தருவதும் ஒரு சின்னச்சந்தோஷம்.

கடந்த வாரத்திலே இப்படியான சின்னச்சந்தோஷங்கள் இரண்டினை இழக்க - ஒன்றைத் தற்காலிகமாக, அடுத்ததை ஓரளவுக்கு நிரந்திரமாக- வேண்டியதாயிற்று. வாசிக்கின்றவர்கள் சிரிக்கக்கூடும்; ஆனால், என்னைப்போல, எழுபதுகளின் இறுதியிலே பத்தாம் வகுப்பினைமுடித்துக்கொண்டு, எண்பதுகளின் ஆரம்பத்திலே பல்கலைக்கழகங்களுக்குப் போனவர்களுக்குத்தான் தெரியும் தலைமயிரின் அருமை. (இதை பதினொராண்டுகட்குமுன்னாலே சிகைசிரைப்பிலே குறித்திருந்தேன்). ஐதீக சாம்ஸன்போல, எம் பலமே கொத்துமுடியினிலே தக்கித்திருப்பதாக... தொடர்ந்து கடந்த இருபத்தெட்டாண்டுகளாக என் வாழ்க்கை பல்கலைக்கழகங்களிலேயே தங்கிவிட்டது; நண்பர்கள் சொல்வதுபோல, நான் இன்னும் முதிர்ச்சியடையாமல், காலத்திலே எண்ணங்களும் சிந்தனையும் உறைந்திருப்பவனாகவே இருக்கின்றேனோ தெரியவில்லை. ஆனால், "குருவி தலையிலே வைக்கப்பட்ட பனங்காய்முடியை"க் கொண்டிருப்பது, அற்ப மகிழ்ச்சியாகவே தொடர்கின்றது. அற்ப மகிழ்ச்சியை நினைவூட்டும்விதமாக, பல்கலைக்கழகத்துறைத்தலைவர், மாணவர்களிடம் பகிடிக்கு, "டொக்டர் கந்தையாவுக்குத் தலைமயிர்வெட்டும் நிதி திரட்டுகிறேன்; ஒரு டொலர் போடுங்கள்" என்று கேட்பதிலிருந்து, பக்கத்துவீட்டு தென்னாபிரிக்க நண்பர், 'எங்கள் புல்லுவெட்டி பயன்படுத்தாமலேதான் வீட்டுக்குள்ளே கிடக்கின்றது; கொண்டு வந்து உங்களிடம் தரவோ?" என்று மனைவியிடம் கேட்பது ஊடாக, வெட்டியபின்னால், நடைபாதையிலே கடக்கும் -கண்ட ஆனால், என்னிடம் கற்காத- மாணவர்கள், சக பேராசிரியர்கள், "ஹா! கடைசியிலே முடி சிரைத்திருக்கிறீர்கள்; கடவுளுக்குத் தோத்திரம் " என்று நக்கலடிக்கும் வரைக்கும் நிகழ்வுகள் தொடரும். போனவாரம், மூன்று மாதங்களுக்குப் பின்னாலே குறைக்கவேண்டியதாயிற்ரு; இன்னும் இரண்டு மாதங்களுக்கு நெடுங்கால நண்பனை(!) இழந்த பிரிவுத்துயர் வாட்டப்போகிறது. மீண்டு(ம்) தொடங்கு(ம்) மிடுக்கு!!

அடுத்தது, என் கண்பார்வையிலே எனக்கு என்றைக்குமே ஒரு நம்பிக்கை. போனகிழமைவரை அதிலெதும் பங்கமில்லை. கண்ணாடி என்பது, அழகுக்காக அணியும் ஒரு சங்கதி என்பதாகமட்டுமே எண்ணம்; அவ்வப்போது, படங்களுக்கு பக்கத்திலே நிற்பவன்/ள் கண்ணாடியை வாங்கிப் போட்டுக்கொண்டு நிற்பதுமட்டுமே அதிகம். மிகுதிப்படி, சின்னத்தலையிடி, காய்ச்சலுக்கு -தானே மாறட்டுமென்று- மருந்துக்குளிகைகளை இயன்றளவு தவிர்ப்பதுபோல, வலுச்சேர்க்காத சாதாரணக்குளிர்க்கண்ணாடிகளையும் இயன்றளவு தவிர்த்து கொள்வேன்; நடுவெயிற்பாலைவனப்புழுதியிலே, வண்டியோடுகையிலே தெறிக்கும் வெயிலிலே தவிர மிகுதிப்படி, அவசியமற்றதென்பதென் வாதம். சில கிழமைகட்குமுன்னால், மகனுக்குக் கண்பார்வைக்காகக் கண்ணாடி எடுத்தாகவேண்டிய அவசியம் வந்தது; மனைவி ஏற்கனவே ஆண்டுக்கணக்கிலே கண்ணாடி அணிபவள்; மகனைப் பார்த்து, உங்கள் அம்மா பரம்பரையின் மரபணு உன்னைக் கெடுத்தது என்று ஒரு கிழமை நக்கலடித்துக்கொண்டிருந்தேன். "கண்ணுக்கான காப்புறுதிதான் இருக்கிறதே, இந்த தொலைக்காட்சி மருந்து விளம்பரங்களின்பின்னாலே, பயன்படுத்துவதாலே வரும் வினைகள் இவையென்றோ, படவிழியவுறைகளின் வெளியே எடுத்த ஆண்டு, ஓடும் நிமிடங்கள் போன்ற விபரங்கள் தெளிவின்றிக்கிடப்பதாலே, ஆண்டு முடியமுன்னால், காட்டித் தொலைக்கலாமே!" என்று வீட்டிலே வாக்கெடுப்பிலே தீர்வானபடியாலே காட்டித்தொலைத்தேன். நேற்றையிலிருந்து, இப்படியாக, வயிற்றுப்போக்கு வரலாம்; 1937 ஆம் ஆண்டு என்றெழுதப்படும் குட்டியெழுத்துகளைக் கண்டுபிடிக்கமட்டும் கண்மேலே கவசம் மாட்டவேண்டியதாகிறது. இப்போது, கண்ணாடியைத் தவிர்ப்பதற்காகவே, 'வயிற்றுப்போக்கு வருமா', '1937 ஆ? 1987 ஆ?' என்ற மிக அவசியமான புள்ளிவிபரங்களைத் தவிர்ப்பதாகவிருக்கின்றேன். ஆனாலும், அடுத்தவர் கண்ணோடு ஒப்பிட்டு, என் கண் இன்னும் 20/20 என இயங்குகின்றதென்று பெற்ற குரூரசந்தோஷக்குமிழ் வெடித்துச்சிதறிப்போனதுபோனதுதான். சென்றதினி மீளாது!

காலம் ஓடும் பின்னங்காலை இடறக் கௌவிப் பிடிக்கத் தொடர்கின்றது.....

Tuesday, November 08, 2011

உதிர்கால இருக்கை

உதிர்கால இருக்கை வில்பர்ஃபோஸ், ஒஹாயோ

Sunday, November 06, 2011

உதிரும் இலை - 2011


உதிரும் இலை -2011 வில்பர்ஃபோர்ஸ், ஒஹாயோ

Saturday, November 05, 2011

இஃது இன்னொருவித முதலைக்கண்ணீரன்றி வேறில்லை!

சிபிஐ(எம்) ஆட்களெல்லாம் எப்போதோ நிகழ்ந்த யாழ் நூலக எரிப்பினைப் பற்றி இப்போது கவலைப்பட்டு எழுதுவதுபோல பொய்மைத்தன்மையின் உச்சத்தை சில நிகழ்வுகள்மட்டுமே பிடிக்கமுடியும்.

ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் செய்கைகளுக்கு, வன்கொடுமைக்கு, "மார்க்ஸிய' ஜேவிபி இயக்கத்தின் சகோதரத்துவத்துக்கு நியாயம் கட்டி நிருத்தியம் பழகியவர்கள் சிபிஎம் ஆட்கள்; இன்னமும் இக்கட்சியின் கதைஞர்கள், கவிஞர்கள், தாளிகைக்காரர்கள், இன்னோரன்ன ஓர ஓரங்க கலைகவின்நாட்டியதாரகைகள் வால்வெள்ளிகள் சுயதம்பட்டச்சீமாட்டிகள் சீமான்கள் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளின் வலதுசாரித்தோலை உப்பிட உரிப்பதற்கே இலங்கைநிகழ்வுகளையும் நிகழ்ந்தவையையும் தேடிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையிலே வேறெவரேனும் எதுகாரணங்கொண்டும் மலையையும் மடுவையும் சமானப்படுத்துவதுபோல, யாழ் நூல்நிலைய எரிப்பினையும் அண்ணாநூற்றாண்டுநூலகத்தேவை மாற்றுதலையும் கருத்து மேவி ஒரு தட்டிலேற்றி விளையாடப்போவதையுங்கூட, பார்க்காததுபோலப் பார்த்துக்கொண்டிருக்க எனக்கேதும் பெருவருத்தமில்லை; ஆனால், இக்கள்ளமௌன சிபிஎம் ஆசாமிகள், அசுரர்கள், அணங்குகள், ஆடகசௌந்தரிகள் உதிர்க்கும் ஒவ்வொரு முதலைக்கண்ணீர்த்துளியும் மெழுகுருக்கிச் சுடச்சொட்டும் தீக்கங்காகவே தெரிகின்றது.

என்னைக் கேட்டால், வளைந்து நெளிந்து நெகிழ்ந்தோடும் அரசியலுக்கு அப்பாலும், காங்கிரஸ், பாரதியஜனதா, திமுக, அதிமுக, தேதாதூதீதைமுக எதையும் அதனதன் கூத்துகளோடுங்கூட இலங்கைத்தமிழர் அணுவதிலே சிக்கலில்லை; ஆனால், இப்பொல்லாத சிபிஎம் பொய்யர்களிடமிருந்து எட்டிநிற்றல்வேண்டும்.

"அமைப்பின் கோப்பினைச் சிதைக்கோம் என்ற பெயரிலே தலைமையைக் கேள்வி கேட்காத இயக்கம்; மேலிடத்தின் உத்தரவை அப்படியே செயற்படுத்தும் அடிமட்டம்; மாறும் அரசியல்சூழலையும் கருத்துகளையும் உள்ளெடுத்து விவாதித்துத் தத்துவார்ந்த அளவிலே வளராமல், முப்பதாண்டுகளுக்கு முன்னாலான 'அவர்கள்.எதிர்.நாங்கள்' பிடிமந்திரத்தையே உருப்போட்டுப்போட்டு உருவேற்றும் தன்மை. சுயசிந்தனையை மறுத்து மண்ணுக்குள்ளே தலையை நுழைக்கும் தீக்கோழித்தன்மை; இயக்கநோக்கின் பேரிலே வெகுவாக அறிந்த தவறுகளையுங்கூட நியாயப்படுத்தும் எதிர்க்கருத்துகளை எம்மட்டத்திலும் மறுத்துமூடும் அடாவடித்தனம்."

- விடுதலைப்புலிகளிலே இத்துணைக்குற்றங்களையும் முன்வைக்கின்ற முற்போக்குத்தோழர்கள், மாற்றுக்கருத்துமகான்கள், இவற்றையே சிபிஎம்மிலே வைக்காமல், அதன் கலை இலக்கிய கட்சி கருத்துகளை நியாயப்படுத்த நாவற்கிளை நாட்டுவது நகைச்சுவை.

ஸ்ரீலங்காவின் சமசமாஜக்கட்சியிலும்விட ஸ்ரீலங்கா அரசின் சிறந்த எடுபிடிகளானவர்கள் இவர்கள்;கட்சிக்கோப்பென்ற போர்வைக்குள்ளே மேலிடத்தின் அத்துணை ஸ்ரீலங்கா அரசின் கொடுமைகளின் வெள்ளையடிப்புக்கும் தீந்தை ஏந்தி நிற்கும் அடியாட்கள் சிபிஎம் தொண்டர்த்தோழர்கள்; இவர்களின் ஒற்றைவரிக்கண்ணீர்த்துளிக்குக் காத்திருப்பதிலும்விட, ஸ்ரீலங்கா அரசின் காலடியிலே விழுவது எனக்கு உளச்சுத்தியுடனான தார்மீகநியாயமாகத் தோன்றுகின்றது.